“அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும், - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும், இம் மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.” -- திரிகடுகம்.
அருந்ததி போலும் கற்பை உடைய பெண்ணைத் திருமணம் செய்து வாழ்வதும்; குற்றமற்ற பழைமையான குடியில் தோன்றி மாட்சிமை அடைந்தவரோடு கொள்ளும் நட்பும்; சொற்களில் குற்றங்களை நீக்கவல்ல நல்ல நூல்களில் கேள்விஞானம் உடையவரோடு செய்துகொள்ளும் நட்பும் ஆகிய இந்த மூன்றும், (ஒருவனுக்கு) திரிகடுகம் போன்று இன்பம் செய்யும் மருந்துகள் ஆகும்.
திரிகடுகம் - சுக்குத் திப்பிலி மிளகு என்று பிங்கல நிகண்டு கூறும். சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றினால் ஆகிய கடுகம் ஒருவனுக்கு உடல் நோயை மாற்றி இன்பம் புரிவது போல, இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் அமைந்து கருத்துக்கள் மூன்றும் ஒருவனுக்கு மனநோய் ஆகிய அறியாமை முதலியவற்றை அகற்றி இன்பம் செய்வன ஆகும்.
No comments:
Post a Comment