திருவேற்காடு - 0692. கார்ச்சார் குழலார்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கார்ச்சார் குழலார் (திருவேற்காடு)

முருகா!
அடியேன் மீது கடைக்கண் நோக்கம் வைத்து,
அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்துத் திருவருள் புரிந்து, உபதேசமும் புரிந்து அருளவேண்டும்.


தாத்தாதன தானன தானன
     தாத்தாதன தானன தானன
          தாத்தாதன தானன தானன ...... தனதான

 
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
     லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
          வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே

காழ்க்காதல தாமன மேமிக
     வார்க்காமுக னாயுறு சாதக
          மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே

பார்ப்பாயலை யோவடி யாரொடு
     சேர்ப்பாயலை யோவுன தாரருள்
          கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா

பார்ப்பாவல ரோதுசொ லால்முது
     நீர்ப்பாரினில் மீறிய கீரரை
          யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே

வார்ப்பேரரு ளேபொழி காரண
     நேர்ப்பாவச காரண மாமத
          ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப

வாக்காசிவ மாமத மேமிக
     வூக்காதிப யோகம தேயுறு
          மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே

வேற்காடவல் வேடர்கள் மாமக
     ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
          வேற்காடுறை வேதபு ரீசுரர் ...... தருசேயே

வேட்டார்மக வான்மக ளானவ
     ளேட்டார்திரு மாமண வாபொனி
          னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கார்ச்சார் குழலார், விழியார் அயி-
     லார், பால்மொழியார், டை நூல்,எழு
          வார்ச்சார் இளநீர் முலை மாதர்கள் ...... மயலாலே,

காழ்க் காதல் அதா மனமே மிக
     வார்க் காமுகனாய் உறு சாதக
          மாப் பாதகனாம் அடியேனை, நின் ...... அருளாலே

பார்ப்பாய் அலையோ? அடியாரொடு
     சேர்ப்பாய் அலையோ? உனது ஆர்அருள்
          கூர்ப்பாய் அலையோ? உமையாள் தரு ......குமரஈசா!

பார்ப் பாவலர் ஓது சொலால், முது
     நீர்ப் பாரினில் மீறிய கீரரை
          ஆர்ப்பாய் உனதாம் அருளால் ஒர்சொல் ...அருள்வாயே

வார்ப் பேர் அருளே பொழி காரண!
     நேர்ப்  பாவச காரணமாம் மத
          ஏற்பாடிகளே அழிவே உற, ...... அறைகோப
  
வாக்கா! சிவ மாமதமே மிக
     ஊக்கு அதிப! யோகம் அதே உறு
          மாத்தா! சிவ பால! குகா! அடி ...... யர்கள்வாழ்வே!

வேல்காட வல் வேடர்கள் மாமக-
     ளார்க்கு ஆர்வ! நனல் மா மகிணா! திரு
          வேற்காடு உறை வேதபுரீசுரர் ...... தருசேயே!

வேட்டுஆர் மகவான் மகள் ஆனவள்
     ஏட்டு ஆர் திரு மாமணவா! பொனின்
          நாட்டார்பெரு வாழ்வு எனவே வரு ...... பெருமாளே.


பதவுரை

         வார்ப் பேர் அருளே பொழி காரண --- பேர் அருளையே பொழிகின்ற மூலப் பொருளே!

         நேர்ப் பாவ ச காரணமா(ம்) --- நேரிட்டு வந்த பாவத்துக்குக் துணைக் காரணமான

     மத ஏற்பாடிகள் அழிவே உற --- சமண சமயத்தை ஏற்படுத்தியவர்கள் அழிந்து போகுமாறு,

     அறை கோப வாக்கா --- சினந்து கூறிய திருவாக்கை உடையவரே!

      சிவ மாமதமே மிக ஊக்கு அதிப --- சிறந்த சிவ மதமே பெருகும்படி ஊக்கத்தைப் புரிந்த தலைவரே!

         யோகம் அதே உறும் மாத்தா --- யோக நிலையை அடியார்க்கு அருளும் பெருமைக்கு உரியவரே!

     சிவபால --- சிவக் குமாரரே!

     குகா --- அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவரே!

     அடியர்கள் வாழ்வே --- அடியார்களுக்குப் பெருவாழ்வு ஆனவரே!

      வேல் காட வல் வேடர்கள் மாமகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா --- வேல் ஏந்திக் காட்டில் வாழும் வேடர்களின் மகளாகிய வள்ளிநாயகியின்பால் அன்பு பூண்டு திருமணம் புரிந்தவரே!

      திருவேற்காடு உறை வேதபுரீசுரர் தரு சேயே --- திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் வேதபுரீசுரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுடைய குழந்தையே!

      வேட்டு ஆர் மகவான் மகள் ஆனவள் ஏடுஆர் திருமா மணவா --- வேள்வியால் நிரம்பிய மகபதியாகிய இந்திரன்  மகளாக வளர்ந்த தேவயானையின் மேன்மை தங்கிய மணவாளரே!

      பொ(ன்)னின் நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே --- பொன்னுலகத்தினரான தேவர்களுடைய பெருவாழ்வாக வந்து அவதரித்த பெருமையில் மிக்கவரே!

      கார்ச் சார் குழலார் --- மேகத்தை ஒத்த கருநிறம் பொருந்திய கூந்தலை உடையவர்களும்,

     விழி ஆர் அயிலார் --- கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்களும்,

     பால் மொழியார் --- பாலை ஒத்த சொல்லை உடையவர்களும்,  

     இடை நூல் --- நூல் போன்ற இடையை உடையவர்களும்,

      எழு வார்சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே ---கச்சினை அணிந்த இள நீரைப் போன்ற முலைகளை உடையவர்களும் ஆகிய விலைமாதர்கள் மீது கொண்ட காம உணர்வாலே,

      காழ்க் காதல் அது ஆம் மனமே மிக --- மனத்தில் கொண்ட உறுதியான காதல் மிகுந்து இருக்க,

      வார்க் காமுகனாய் உறு சாதக --- மிக்க காமம் கொண்டவனாக இருக்கின்ற பிறவிக் குணத்தை உடையவனும்,

      மா பாதகனாம் அடியேனை --- பெரும் பாவச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியவனாகிய என்னை,

    உமையாள் தரு குமர ஈசா --- உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே!

     நின் அருளாலே பார்ப்பாய் அலையோ --- தேவரீர் திருவருளாலே பார்த்து அருள்வீர் அல்லவா?

         அடியாரொடு சேர்ப்பாய் அலையோ --- அடியார் திருக்கூட்டத்திலே சேர்ப்பீர் அல்லவா?

         உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ --- தேவரீருடைய திருவருளை நிரம்பத் தருவீர் அல்லவா?

         பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் --- பூமியில் உள்ள புலவர்கள் யாவரும் ஓதும் சொல்பாடல்களால்

         முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை ஆர்ப்பாய் --- பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்கிய நக்கீரதேவருக்கு உளம் மகிழ்ந்து அருளியவரே!

         உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே --- தேவரீர் திருவருள் புரிந்து, ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை அடியேனுக்கு அருள் புரிவீராக.


பொழிப்புரை

         பேர் அருளையே பொழிகின்ற மூலப் பொருளே!

         நேரிட்டு வந்த, பாவத்துக்குக் துணைக் காரணமான சமண சமயத்தை ஏற்படுத்தியவர்கள் அழிந்து போகுமாறு, சினந்து கூறிய திருவாக்கை உடையவரே!

     சிறந்த சிவ மதமே பெருகும்படி ஊக்கத்தைப் புரிந்த தலைவரே!

       யோக நிலையை அடியார்க்கு அருளும் பெருமைக்கு உரியவரே!

     சிவக் குமாரரே!

     அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவரே!

     அடியார்களுக்குப் பெருவாழ்வு ஆனவரே!

     வேல் ஏந்திக் காட்டில் வாழும் வேடர்களின் மகளாகிய வள்ளிநாயகியின்பால் அன்பு பூண்டு திருமணம் புரிந்தவரே!

      திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் வேதபுரீசுரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுடைய குழந்தையே!

      வேள்வியால் நிரம்பிய மகபதியாகிய இந்திரன்  மகளாக வளர்ந்த தேவயானையின் மேன்மை தங்கிய மணவாளரே!

      பொன்னுலகத்தினரான தேவர்களுடைய பெருவாழ்வாக வந்து அவதரித்த பெருமையில் மிக்கவரே!

     மேகத்தை ஒத்த கருநிறம் பொருந்திய கூந்தலை உடையவர்களும், கூரிய வேலை ஒத்த கண்களை உடையவர்களும்,  பாலை ஒத்த சொல்லை உடையவர்களும்,  
நூலை ஒத்த இடையை உடையவர்களும், கச்சினை அணிந்த இள நீரைப் போன்ற முலைகளை உடையவர்களும் ஆகிய விலைமாதர்கள் மீது கொண்ட காம உணர்வாலே, மனத்தில் கொண்ட உறுதியான காதல் மிகுந்து இருக்க, மிக்க காமம் கொண்டவனாக இருக்கின்ற பிறவிக் குணத்தை உடையவனும், பெரும் பாவச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியவனாகிய என்னை, உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே! தேவரீர் திருவருளாலே பார்த்து அருள்வீர் அல்லவா?  அடியார் திருக்கூட்டத்திலே சேர்ப்பீர் அல்லவா?  தேவரீருடைய திருவருளை நிரம்பத் தருவீர் அல்லவா? பூமியில் உள்ள புலவர்கள் யாவரும் ஓதும் சொல்பாடல்களால் பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்கிய நக்கீரதேவருக்கு உளம் மகிழ்ந்து அருளியவரே! தேவரீர் திருவருள் புரிந்து, ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை அடியேனுக்கு அருள் புரிவீராக.


விரிவுரை

இத் திருப்புகழ் மிகவும் அருமையானது ஆகும். முருகப் பெருமானுடைய அருட்குணங்களைக் கூறிப் போற்றி, அப் பெருமான் தன் மீது திருவருள் நோக்கம் வைக்கவேண்டும் என்றும், அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருளவேண்டும் என்றும், திருவருள் புரிந்து குருநாதராக எழுந்தருளி உபதேசத்தைப் புரிந்து அருளவேண்டும் என்றும் அருணை வள்ளலார் குறையிரந்து நிற்கின்றார். மனிதர்களிடம் சென்று குறையிரந்தால் வேண்டுவதைப் பெறுவது மிகவும் அரிது. அகிலாண்ட நாயகியாகிய எமது தாய் வள்ளிநாயகியின் மணவாளப் பெருமாளாகிய வள்ளல் முருகப் பெருமானிடம் குறையிரந்து நின்றால் நாம் வேண்டுவதை அறிந்து, நமக்கு வேண்டியதைத் தவறாமல் அருள் புரிவான். நாம் வேண்டுவது பலவாறாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கலாம். நம்முடைய வேண்டுதல்களைத் தவறாமல் தனது திருச்செவியில் ஏற்று, நமது பக்குவத்தை அறிந்து, நமக்கு வேண்டுவதை நிச்சயமாக அருள்வான் என்பதில் சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம்.

"அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே" என்றும், "வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே" என்றும், "நினைத்தவை முடித்து அருள் கிருபைக் கடவுள்" என்றும் "ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர் ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே" என்றும் அருணகிரிநாதப் பெருமான் போற்றிப் புகழ்ந்துள்ள அருள் வாசகங்களை மனத்தில் உறுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.

புற அழகு மிகுந்து இருந்தாலும், உள்ளத்தில் அழகு இல்லாதவர்களாகிய அவர்கள் அழகில் மயங்கி, மனம் தடுமாறி அழியாமல் ஆண்டுகொள்ள வேண்டும் என்று முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகு அல்ல, - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

என்கிறது நாலடியார்.

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகமாட்டா.  உள்ளத்தால் நல்லவர்களாய் வாழும், நடுநிலை தவறாத வழியில் செலுத்தும் கல்வி அழகே ஒருவருக்குச் சிறந்த அழகு ஆகும்.
  
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல, எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.         

என்கிறது ஏலாதி என்னும் நூல்.

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்கள் தசை கொழுவிய கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா.இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

புற அழகு ஒரு நாள் மாறும் தன்மை உடையது. உயிருக்கு அப்போதைக்கு நன்மை தருவது போல் தோன்றி, பின்னர் துன்பத்தையே தருவது. அக அழகு என்றும் மாறாது. உயிருக்கு என்றும் நலம் தருவது.

புற அழகில் ஆசை கொண்டு அறிவு மயங்கும். அந்த மயக்கத்தைக் கெடுத்து அருள் புரிய ஆறுமுகப் பரம் பொருளை வழிபடுதல் வேண்டும்.

உடம்பின் தன்மையை மணிமேகலை என்னும் காப்பியம் காட்டுவதைப் பின்வருமாறு காண்க.

"தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி,
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்;

பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ,
நரைமையில் திரைதோல் தகையின்தறு ஆயது;

விறல்வில் புருவம் இவையுங் காணாய்   ,        
இறவின் உணங்கல் போன்றுவேறு ஆயின;

கழுநீர்க் கண்காண், வழுநீர் சுமந்தன;
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ;

நிரைமுத்து அனைய நகையும் காணாய்,
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறு ஆயின;

இலவ இதழ்ச் செவ்வாய் காணாயோ நீ,
புலவுப் புண்போல் புலால் புறத்து இடுவது;

வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண்,
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன;

இறும்பூது சான்ற முலையும் காணாய்,            
வெறும் பை போல வீழ்ந்து வேறு ஆயின;

தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய்;

நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையுங் காணாய்   ;        

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்;

ஆவக் கணைக்கால் காணாயோ நீ,
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ;

தளிர் அடி வண்ணம் காணோயோ, நீ,                  
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்;

பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய்"

குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய்,

வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி இருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ,

வெற்றி பொருந்திய வில் படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறுபட்டன காண்பாய்,

கழு நீர் மலர் அனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண்.

குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவன காண்,

வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும், சுரை விதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

முருக்கமலர் போன்ற சிவந்த வாய், புலால் நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீ நாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா,

வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள், உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்று இருப்பன பாராய்,

வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடு இல்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

இளைய மூங்கில் போன்ற தோள்களும், தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய்,

நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய்,

வாழைத் தண்டு போன்ற துடைகள் இரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றி இருத்தலைக் காண்பாய்,

அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ,

தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின் வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ,

மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து கொள்வாய்.

மேலும், இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளை நிலமாக உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது. முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.

வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,
புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,
மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை  ,   
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து     
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்....

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

தோல் போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது, மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.                

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால், அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல்,  அம்மேற் போர்வையாகிய ஆடையை, அழுக்கு மறைக்கும் திரையாகவும், மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை, ஒரு பையின் திருப்பமாகவும், நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கைப்பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம்.  வைத்துள்ள பொருள்களால் கையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மைற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும். அதுபோல, இந்த உடம்பிலே, பல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க...

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,
ஆணவ மலத்து உதித்து அளைந்து, அதின் ஊடு
நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;
படிறும், பாவமும், பழிப்பு உறு நினைப்பும்,
தவறும், அழுக்காறும், இவறு பொய்ச்சாப்பும்,
கவடும், பொய்யும், சுவடும், பெரும் சினம்,
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும், பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,
கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;
செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;
மல உடல் குடத்தை, பல உடல் புட்டிலை;
தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;
கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;
சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;
கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;
புலராக் கவலை விளை மரப் பொதும்பை;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;
மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;
கடுவெளி உருட்டிய சகடக் காலை;
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு
காமக் காற்று எடுத்து அலைப்ப,
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்....

எனவே, இந்த உடம்பின் மேல் வைக்குப் பற்றினை விட்டு, அதிலே உள்ளிட்டு இருக்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் சரக்குகளைத் தூக்கி எறிந்து விட்டு, இறைவன் குடியிருக்கும் கோயிலாக உள்ளத்தை மாற்ற வேண்டும்.

அப்பர் பெருமான் அருளியுள்ள, சரக்கு அறைத் திருவிருத்தத் திருப்பதிகத்தை ஓதி உணர்ந்து, இறைவன் திருவருளைப் பெற முயலுதல் வேண்டும். சரக்கு இறைத் திருவிருத்தப் பாடல் ஒன்று இதோ.....

விண்டார் புரம்மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம், மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்
தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனிநெஞ்சமே.    --- அப்பர்.

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள் எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் திரிந்தும்,
தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை
இசையும் கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும் வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்,
நீட்டவும் முடங்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அம் கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை
பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும்
முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்
தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்;
தோலும் இறைச்சியும் துதைந்து சீ பாயும்
காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கட வழி, தொளை பெறு வாயில்,
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால் காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடை கழி வாயில்,

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணைஅடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.

கார்ச் சார் குழலார் ---

பெண்களின் கூந்தல் மேகத்தைப் போன்று கருத்து இருக்கும்.

விழி ஆர் அயிலார் ---

கண்கள் வேலைப் போன்று கூர்மை பொருந்தி இருக்கும்.
  
பால் மொழியார் ---

அவர்கள் சொல் பாலைப் போன்று இனிமை தரும்.

பால்மொழி படித்துக் காட்டி, ஆடையை நெகிழ்த்துக் காட்டி,
     பாயலில் இருத்திக் காட்டி, ...... அநுராகம்
பாகுஇதழ் கொடுத்துக் காட்டி, நூல்களை விரித்துக் காட்டி,
     பார்வைகள் புரட்டிக் காட்டி, ...... உறவாகி

மேல்நகம் அழுத்திக் காட்டி, தோதக விதத்தைக் காட்டி,
     மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால்
மேவிடு மயக்கைத் தீர்த்து, சீர்பத நினைப்பைக் கூட்டு
     மேன்மையை எனக்குக் காட்டி ...... அருள்வாயே.    --- திருப்புகழ்.

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சித் தண்டைக்
கால் என்கிலை, மனமே எங்ஙனே முக்தி காண்பதுவே?   --- கந்தர் அலங்காரம்.

இடை நூல் ---

இடைநூல் பொல மெலிந்து இருக்கும்.

எழு வார்சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே ---

அழகிய இளமுலைகள் கச்சினைப் பொருந்தி இருக்கும்.

"கருங்குழல், செவ்வாய், வெண்ணகை, கார்மயில்
ஒருங்கிய சாயல், நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்" ---  திருவாசகம்.

காழ்க் காதல் அது ஆம் மனமே மிக, வார்க் காமுகனாய் உறு சாதக, மா பாதகனாம் அடியேனை ---

சாதகம் - பிறவி, பிறவிக் குணம்.

காழ்ப்பு - உறைப்பு, மனவயிரம், அளவு கடந்து மிகுதல்.

உடலின்பத்தைப் பெரிதும் விரும்பும் ஆடவர் உள்ளமானது விலைமாதர் மீது காழ்ப்பு ஏறிய காதலைக் கொண்டு இருக்கும். காம இச்சையே அவர் உள்ளத்தில் மிகுந்து இருக்கும்.

உள்ளத்தில் கொண்ட காம உணர்வானது பெரும்பாவச் செயல்களுக்கு விளைவாக இருக்கும்.

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்,
காமம் கதுவப்பட்டார்.               --- குமரகுருபர அடிகள்.

காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலைபுரியப் பயப்படார், பொய் சொல்லக் கூசார், தம் பெருமையையும் பாதுகாவார், களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இந்தக் காமம், பழியொடு பாவமாம் என்றும் நினையார், அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.

அணங்கு நோய் எவர்க்கும் செய்யும்
     அனங்கனால் அலைப்பு உண்டு, ஆவி
உணங்கினார் உள்ளம், செல்லும்
     இடன் அறிந்து ஓடிச் செல்லா;
குணம் குலம் ஒழுக்கம் குன்றல்
     கொலை பழி பாவம் பாரா,
இணங்கு இன் உயிர்க்கும் ஆங்கே
     இறுதி வந்து உறுவது எண்ணா.

எத்தன்மையோர்க்கும் காமநோயைச் செய்கின்ற மன்மதனாலே அலைக்கப்பட்டு, உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள், செல்லும் செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேரா; அவர்கள் குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலையும் பழி பாவங்களும் உண்டாவதையும் பார்க்கமாட்டார். உடம்போடு பொருந்தியுள்ள
தமது இனிய உயிர்க்கும் அழிவு வருதலையும் எண்ணமாட்டார்.
  
கள் உண்டல் காமம் என்ப
     கருத்து அறை போக்குச் செய்வ,
எள் உண்ட காமம் போல
         எண்ணினில் காணில் கேட்கில்
தள் உண்ட விடத்தின் நஞ்சம்
         தலைக் கொண்டால் என்ன ஆங்கே
உள் உண்ட உணர்வு போக்கா,
         உண்டபோது அழிக்கும் கள் ஊண்.

கள் உண்ணுதலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள் உண்ணுதலானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணிலும் காணிலும் கேட்கிலும் கிடைக்காத இடத்திலும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அறிவினைப் போக்காது, உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

"உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல், காமத்திற்கு உண்டு"

என்னும் திருக்குறள் கருத்து இங்கு ஒப்பு நோக்குதற்கு உரியது.
         
காமமே கொலை கட்கு எல்லாம் காரணம்; கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம் காரணம்; கூற்றம் அஞ்சும்
காமமே கள் உண்டற்கும் காரணம்; ஆதலாலே
காமமே நரக பூமி காணியாக் கொடுப்பது என்றான்.     
    
காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது. கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணம் ஆகும். கூற்றவனும் அஞ்சுதற்கு உரிய காமமே
கள்ளினை நுகர்வதற்கும் காரணம் ஆகும். ஆதலினாலே, காமம் ஒன்றே  நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான் என வரும் திருவிளையாடல் புராணப் பாடல்களின் கருத்து எண்ணத் தக்கது.

 தூமகேது எனும் பெயருடைய வால் நட்சத்திரம் தோன்றினால் உலகிற்குக் கேடு சூழும் என்பது ஒரு நம்பிக்கையாகும். மங்கையர் மீது வரும் தீராத காமமான பெண்ணாசை அத்தகைய தூமகேது போன்றது. அதை விலக்கினால் அரசர்க்குக் கேடு இல்லை எனும் பொருளில்,

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடுங் கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே

என வசிட்டர் இராம்பிரானுக்கு அறிவுரை கூறியதாகக் கம்பநாட்டாழ்வார் பாடுகிறார். மேலும்,

வாலி வதத்தின் பின்னர் முடிசூட்டிக் கொண்ட சுக்கிரீவனுக்கு இராமபிரான் கூறும் அறிவுரையாக அமைந்த பின்வரும் பாடலையும் சிந்தித்தல் நலம்.

''மங்கையர் பொருட்டால் எய்தும்
     மாந்தர்க்கு மரணம்'' என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி
     செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே,
    அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே;
     இதற்கு வேறு உவமை உண்டோ?

     மகளிர் காரணமாக, ஆடவர்க்கு மரணம் ஏற்படும் என்று கூறும் உண்மையை ஐயமின்றி அறிந்து கொள்வாயாக; இந்த உண்மையைத் தெளிதற்கு வாலியின் செய்கையே போதுமானது.  மேலும், அந்த மகளிர் காரணமாகவே துன்பமும் பழியும் நேர்வதை எங்களிடத்துக் காண்கின்றாய் அல்லவா?  இதற்கு வேறு எடுத்துக்காட்டு உள்ளதோ?

பிறர் மனைவியை விரும்புவதால் மரணம் ஏற்படும் என்பதை வாலி, சுக்கிரீவன் மனைவியை விரும்பி அதனால் இறக்க நேரிட்டால் அறியலாம். எங்களில் என்றது மனைவி சொல்லைக் கேட்டு உயிர் துறந்த தயரதனையும் உளப்படுத்திக் கூறியதாகும்.  தயரதன் கைகேயிக்கு வரம் அளித்துத் துன்புற்றுப் பழிக்கு அஞ்சி இறந்தான். சீதையின் சொல்லைக் கேட்டுப் பொன்மானைத் துரத்திச் சென்றதால் மனைவியைப் பிரிந்து வருந்திப் பிறர் கூறும் பழிக்கு ஆளானான் இராமன்.  ''சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன்'' என்றும், ''எம்பி வாய்மையான் தூயன உறுதிகள் சொன்ன கொல் கொளேன் போயினென்; பெண் உரை மாறாது போகலால் ஆயது.  இப்பழியுடை மரணம்'' என்றும்,  'பெண்மேல் வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்'' என இராமனே பின்னர் வருந்திக் கூறினான் என்பதையும் அறிக.

வசிட்டர் கூறிய அறிவுரையில் மாந்தர் என்பது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே ஆடவரைக் குறித்தது,
         
நின் அருளாலே பார்ப்பாய் அலையோ? அடியாரொடு சேர்ப்பாய் அலையோ? உனது ஆர் அருள் கூர்ப்பாய் அலையோ? ---

பெரியோரிடத்தில் தனக்கு வேண்டியதைக் குறையிரந்து நிற்போர், தாம் வேண்டியது கிடைக்கும் என்னும் நம்பிக்கேயோடு வேண்டுவதைப் போல அடிகாளார் முருகப் பெருமானிடம், தன் மீது கருணை நோக்கம் வைத்து அருளவேண்டும் எனவும், அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருளவேண்டும் எனவும், திருவருளைப் புரியவேண்டும் எனவும் குறையிரந்து நிற்கின்றார். இதனை எண்ணும்தோறும் உள்ளம் உருகும்.

இறைவன் தன்னைப் பார்த்து அருளுவதால் எண்ணற்ற நலங்கள் வாய்க்கும்.

இதனை, அபிராமிபட்டர் பாடலால் தெளியலாம்.

தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

மலர்களைச் சூடிய கூந்தலை உடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையானது, எல்லாவிதமான செல்வங்களையும் அளிக்கும், எல்லாவிதமான கல்வியையும் அளிக்கும், என்றும் சோர்ந்து போகாத மனத்தையும் அளிக்கும்,  தெய்வீகமான உருவத்தையும் அளிக்கும்,  உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசாத நண்பர்களை அளிக்கும், இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் அளிக்கும், எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லாப் பெருமைகளையும் அளிக்கும்.

திருக்கிளர்வெண் பிறைக்கொழுந்தும் செஞ்சடையும்
      மறிமானும் திண்தோள் எட்டும்
உருக்கிளர் வெம்புலி அதளும் கரந்து, மா-
      னிடவடிவின் உலகில் போந்து,
மருட்கு இடனாம் எனைப்பிணித்த வல்வினையின்
      தொடர் அனைத்தும் மாய நூறி,
அருட்கடைக்கண் அளித்து ஆண்ட சுவாமிதே-
      வன் திருத்தாள் அகத்துள் வைப்பாம்.

என்னும் திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதிப் பாடலால், குருநாதரின் கடைக்கண் பார்வையால், மருளுக்கு இடமான வல்வினைகள் அனைத்தும் மாய்ந்து போயின என்பதை அறியலாம்.

காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே, வளர்வெண் திங்கள்
மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப் பிறவியும் தீரும் என்றார்.   --- பெரியபுராணம்.

அடுத்து, அடியார் திருக்கூட்டத்தில் தன்னைச் சேர்த்து வைத்து அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார். இதனை அடிகளார் பல இடங்களிலும் பாடி உள்ளார்.

"புகழ் ஓதும் பண்பு உடைய சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்" என்று திருச்செந்தூர்த் திருப்புகழிலும்,

"உரையையும், அறிவையும், உயிரையும் உணர்வையும் உன்பாத கஞ்ச மலர் மீதே உறவொடு புனைதர நினைத் தொழும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ" என்று திருச்செங்கோட்டுத் திருப்புகழிலும்,

"சீறல் அசடன், வினை காரன், முறைமை இலி,
     தீமை புரி கபடி, ......        பவநோயே
தேடு பரிசி, கன நீதி நெறிமுறைமை
     சீர்மை சிறிதும் இலி, ......   எவரோடும்
கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள
     கோளன், றிவிலி,  ......     உன்அடிபேணாக்
கூளன், னினும் எனை நீ உன் அடியரொடு
     கூடும் வகைமை அருள் ...... புரிவாயே"

என்று பழநித் திருப்புகழிலும்,

வாதம், பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
     சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
     மாசு அம் கண், பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,
மாறும் கக்கலொடே, சில நோய், பிணி-
     யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
     வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,
சூழ் துன் சித்ர கபாயை, மு ஆசைகொடு
     ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
     சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்
தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
     ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
     தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய்.

என்று பின்னும் பழநித் திருப்புகழிலும் அடிகளார் வேண்டியுள்ளதில் இருந்து அடியார் திருக்கூட்டத்தின் சிறப்பு விளங்கும்.

எத்தனை குணக்கேடனாக இருப்பினும் முருகா! எளியேனை இகழ்ந்து ஒதுக்கிவிடாமல், தாய் சேய் மீது கருணை வைப்பதுபோல், கோடி அவகுணங்களையும் அகற்ற வல்லதாகிய அடியவர் குழுவில் சேர்த்துவிடு என்று அடிகளார் வேண்டுகின்றார்.

குருட்டு மாட்டை மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

முத்தி வீட்டுக்குத் தகுதி அற்றவர் ஆயினும், அடியார் திருக்கூட்டம் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளிய வழி.

திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
     மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள்
     திறத்து இடை நைவேனை
ஒப்பு இலாதன உவமனில் இறந்தன
     ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
     நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை
     என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன்
     நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

முன்னை என்னுடை வல்வினை போயிட
     முக்கண் அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்
     எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றது ஓர் புரிசடை முடிதனில்
     இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர்
     காரணம் இது கேளீர்
ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும்
      உபாயம் அது அறியாமே
செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு
     ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே.

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்
     பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று
     குடி கெடுகின்றேனை
இரவு நின்று எர் ஆடிய எம் இறை
     எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என்
     ஏழைமை அதனாலே,
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு
     நல்வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு
     ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பொத்தை ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
     ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
     சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
     பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை
     குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து,
     நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
     எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
     எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
     அப்பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன்அது நுகர்த்திடும்
     பித்தர்சொல் தெளியாமே
அந்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்    
     சிறுகுடில் இது, இத்தைப்
பொருள் எனக் களித்து அருநரகத்து இடை
     விழப் புகுகின்றேனை,
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
     சினப் பதத்தொடு செந் தீ
அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
     அதிசயம் கண்டாமே. 

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்”          ---  தாயுமானார்.

"    ....   ....   நின் அன்பர் கூட்டம் எய்த
நினைவின் படிக்கு நீ முன் நின்று காப்பதே
நின் அருள் பாரம்"                       --- தாயுமானார்.

"தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு
சேரவும் கருணை கூர்வையோ?
தெரிவதற்கு அரிய பிரமமே! அமல
சிற்சுகோதய விலாசமே!"                 --- தாயுமானார்.

"மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும்,
வந்து நின் அன்பர் தம் பணியாம்
அறம் அது கிடைக்கின்"              --- தாயுமானார்.

"தொண்டரொடு கூட்டு கண்டாய்"     --- அபிராமி பட்டர்.

ஊன்பொதி அழுக்கு உடம்பிற்கும் உயிர்க்கும் இங்கு
உதவு தின்பண்டங்களில்
ஒதுக்காதவை கொளல், ஒதுக்கியவை தள்ளல், இறை
ஒருவனைச் சிந்தனை புரிதல்,
மால் மருள் மயக்கு எலாம் எற்றுதல், நறும் பத்தி
மாறாது நிலை கொள்ளுதல்,
மற்றும் உள இயல்பு அனைத்தும் புறம் போகவிடல்,
மனதில் தன் இயல்பு கண்டு,
தான் கவலை மிக்கு உறுதல், தன் பிழை பொறுக்கும் ஒரு 
தகைமை என்பது தேடுதல்,
தலைவனார் வல்லமைக்கு ஒல்லாத முறை கண்டு
சந்ததம் இரங்கல் என்னும்,
தேன்மலர்க் கழல் அன்பர் செய்கை ஒன்பதையும்இச்
சிறியனேன் மருவல் என்றோ,
திருநீடு பதிஆய கயிலாச மலைமேவு
சிவஞான குரு சாமியே.   

என்று பாம்பன் சுவாமிகள் அருளிய ஆற்றால், அடியாருக்குள்ள நற்செயல்கள் பொருந்த வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தில் பொருந்தி இருப்பது பொருத்தம் ஆகும்.

அடியார் வாழ் சபையின் ஏற்றி, ன் ஞானபோதமும் அருளி ஆட்கொள்ளும் ஆறே தான் அது தமியனேற்கு முன்னே நீ மேவுவது ஒரு நாளே” என்று "நிருதரார்க்கொரு" எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் அருணை அடிகள் வேண்டியமை காண்க.

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

என்று கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.

மிக உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.

இப்படி அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் “ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

வேண்டுவார் வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார். நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதப் பெருமானே கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.

இடுதலைச் சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால் கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாத்தித்த வேலோன். பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே.
  
பார்ப் பாவலர் ஓது சொ(ல்)லால் முது நீர்ப் பாரினில் மீறிய கீரரை ஆர்ப்பாய் ---

இந்த அடி நக்கீரருடைய வரலாற்றைத் தெரிவிக்கின்றது.

கீரம் - சொல், நக்கீரர் - நல்ல இனிய சொற்களை உடையவர்.

இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. கல்கி - குதிரை. குதிரை முகம் உடையது. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனம் திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

நக்கீரர் ஒரு சமயம் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக் கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாய்.  நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அஞ்சாதீர்கள். முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .

'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையும் காத்து அருளியது.

அருவரை திறந்து, வன் சங்க்ராம கல்கிமுகி
 அபயம் இட அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி”     --- பூதவேதாள வகுப்பு

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்கு உருகி, வரைக் குகையை
இடித்து வழி காணும்                                          ---  வேல்வகுப்பு.

ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
     உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர் வர,
    ஓடிப் பிடித்து அவரையும்   
கார்ஆய குன்றத்து அடைத்து, உரிய நியதிக்
    கடன் துறை முடிக்க அகல,
கருதி "முருகாறு" அவர் உரைத்தருள, நீலக்
    கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றந் திறந்து, இவுளி முகியைப்
    பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
    பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி
    சிறுதேர் உருட்டி அருளே
செயசெய என அமரர் தொழ, அசுரர் மிடி சிதறு முனி
    சிறுதேர் உருட்டி அருளே.                --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.

வளவாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து,
     மலர்வாய் இலக்கணங்கள் ...... இயல்பு ஓதி,
அடிமோனை சொற்கு இணங்க, "உலகாம் உவப்ப" என்று,உன்
     அருளால் அளிக்கு கந்த! ...... பெரியோனே!

வார்ப் பேர் அருளே பொழி காரண, உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே ---

                                                                        வெந்நிரய
சொர்க்க ஆதி போகம் எலாம் துய்ப்பித்து, பக்குவத்தால்
நல்காரணம் சிறிது நண்ணுதலும்,  -  தர்க்கம் இடும்

தொல்நூல் பரசமயம் தோறும், அதுஅதுவே
நல்நூல் எனத் தெரிந்து, நாட்டுவித்து,  -  முன்நூல்

விரதம் முதலாய பல மெய்த்தவத்தின் உண்மை,
சரியை கிரியா யோகம் சார்வித்து,  -  அருள்பெருகு

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து,
ஆலோகம் தன்னை அகற்றுவித்து,  -  நால்வகையாம்

சத்தி நிபாதம் தருதற்கு, இருவினையும்
ஒத்து வரும் காலம் உளஆகி,  -  பெத்த

மலபரிபாகம் வரும் அளவில், பல்நாள்
அலமருதல் கண்ணுற்று, அருளி,  -- உலவாது

அறிவுக்கு அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்த நிலை நீங்கி,  -  பிறியாக்

கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு,        திருநோக்கால்

ஊழ்வினையைப் போக்கி, உடல் ஆறுபத்து எட்டு, நிலம்
ஏழும், அத்துவாக்கள்  இருமூன்றும்  -  பாழ்ஆக,

ஆணவமான படலம் கிழித்து,  அறிவில்
காணஅரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டி, -  பூணும்

அடிஞானத்தால் பொருளும் ஆன்மாவும் காட்டி,
கடிஆர் புவனம் முற்றும் காட்டி,  -  முடியாது

தேக்கு பரமானந்த தெள்அமுதம் ஆகி, எங்கும்
நீக்கம் அற நின்ற நிலை காட்டி,  -  போக்கும்

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்து, உலவா இன்பம் -  மருவுவித்து,

கன்ம மலத்தார்க்கு மலர்க்கண் மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானும்உடல் மால்விடைமேல் - மின்இடத்துப்

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்
வாய்த்த அனைய தெய்வ வடிவுஆகி,  -  மூத்த

கரும மலக்கட்டு அறுத்து, கண்அருள் செய்து, உள்நின்று
ஒரு மலத்தார்க்கு இன்பம் உதவி,            பெருகி எழு

மூன்று அவத்தையும் கழற்றி, முத்தர் உடனே இருத்தி
ஆன்ற பரமுத்தி அடைவித்து  -  தோன்றவரும்

யான் எனது என்று அற்ற இடமே திருவடியா,
மோன பர ஆனந்தம் முடி ஆக,  -  ஞானம்

திருஉருவா, இச்சை செயல் அறிவு கண்ணா,
அருள் அதுவே செங்கை அலரா,  -  இருநிலமே

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே! எவ் உயிர்க்கும்
பின்னம் அற நின்ற பெருமானே!

என்று கந்தர் கலிவெண்பாவில் குருமகுருபர அடிகள் அருளிச் செய்தார். அப்படியே முருகப் பெருமானே குருநாதனாகத் திருமேனி கொண்டு, நிலம் தன் மேல் வந்து அருளி, நீள் கழல்கள் காட்டி, நாயில் கடையாய்க் கிடந்த உயிர்க்கு, தாயில் சிறந்த தயவினைக் காட்டி உபதேச அருள் புரிவான்.

"என் வினை ஒத்தபின், கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே" என்றார் மணிவாசகப் பெருமானும்.

நமது அறிவைக் கொண்டு குருவைத் தேடுதல் கூடாது. நமக்கு அருள் புரிய முருகனே குருவாய் வருவான். குரு வரும் நிகழ்ச்சி அவன் அருளாலே தானாகவே நடைபெறும். அது நடைபெறுவதற்கு நகம்முப் பக்குவம் வரவேண்டும். பக்குவம் வரவில்லையே என்று ஏங்குவது ஆன்ம வளர்ச்சிக்கு வழியாக அமையும். நாம் பக்குவம் அடைவதை எதிர்பார்த்து இறைவன் காத்துக் கொண்டு இருக்கின்றான். குழந்தைக்குப் பக்குவம் வந்த போது தானே, எழுத்தை அறிவிக்க முடியும். பெண் பருவம் அடைந்த பிறகுதானே திருமணம் செய்விக்கு முடியும்.

மணிவாசகப் பெருமானுக்கு குருவாக இறைவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளப் போவது தெரியாது. தெரிந்து இருந்தால் அவர் குதிரை வாங்கப் போயிருக்கமாட்டார். குருவை வரவேற்க ஏறுபாடுகளைச் செய்யப் போயிருப்பார். 

அருள் வந்தால் குரு வருவார். மாணவனுக்குத் தகுதிப்பாடு வந்தால், குருவருள் தானே வரும்.

அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட முடியாது என்றார் அப்பர் பெருமான்.

குருநாதனாக வந்தது, வருவது முருகப் பெருமானே என்று கந்தர் அநுபூதியில் காட்டினார் அடிகளார்.

முருகன், தனிவேல் முனி, நம் குரு, என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

அவன் அருளைக் கொண்டு காண முடியாதவர்கள் அவனை முருகப் பெருமான் என்றோ,  ஒப்பற்ற வேலைத் திருக்கரத்தில் ஏந்தியவன் என்றோ, முனிவன் என்றோ (முனைந்து இறைவனைத் தியானிப்பவர் முனி), அறிந்து கொள்ள இயலாது. அருள் கொண்டு காணப் பெறுவார்களாயின், முருகப் பெருமான் உருவப் பொருளும் அல்ல, அருவப் பொருளும் அல்ல, உள்ளது என்று சொல்லப்படுவதும் அல்ல, இல்லாதது என்று சொல்லப்படும் பொருளும் அல்ல,இருளும் அல்ல, ஒளியும் அல்ல என்னும்படி நிலைத்து இருப்பதைக் காண்பார்கள்.

இந்த அநுபூதிப் பாடலை இப்படி ஓதினால் உண்மை விளங்கும்.

உரு அன்று, அரு அன்று, உளது அன்று,  இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்ற அதுவே,
முருகன், தனி வேல், முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?

நேர்ப் பாவ ச காரணமா(ம்) மத ஏற்பாடிகள் அழிவே உற, அறை கோப வாக்கா! சிவ மாமதமே மிக ஊக்கு அதிப

பாவச்செயல்களைப் புரிவதற்கே காரணமாக அமைந்த சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அழிந்து, அன்பு நெறியாகிய சிவநெறி நிலைபெறுமாறு, திருவருள் நிறைந்த தேவாரத் திருப்பதிகங்களைப் பாடி அருள் புரிந்தவர் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமானை இது குறிக்கின்றது.
    
யோகம் அதே உறும் மாத்தா ---

மாத்து - பெருமை.

யோக நிலையை அடியார்க்கு அருளும் பெருமைக்கு உரியவர் முருகப் பெருமான். யோகாசாரியர் அவர். "யோகத்து ஆறு உபதேசத் தேசிக! ஊமைத் தேவர்கள் தம்பிரானே" என்று அடிகளார் திருச்செந்தூர்த் திருப்புகழில் வைத்துப் போற்றி உள்ளார்.

இறைவன் உயிர்களுக்கு மாத்தாக உள்ளவன் என்பதை....

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே, உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?   ---  அபிராமி அந்தாதி.

வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன்உன்
செழுமலர்ப் பாதம் காண, தெண்திரை நஞ்சம் உண்ட
குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்தாய் உள்ள
அழகனே! ஆலவாயில் அப்பனே! அருள் செயாயே.   ---  அப்பர்.

நாத்தான் தன் திறமே திறம்பாது
         நண்ணி, அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன் தனக்கு, என்றும்
         அளவிறந்த பல் தேவர்கள் போற்றும்
சோத்தானைச் சுடர் மூன்றிலும் ஒன்றித்
         துருவி மால் பிரமன் அறியாத
மாத்தானை. மாத்து எனக்கு வைத்தானை,
         வலிவலம் தனில் வந்து கண்டேனே.      ---  சுந்தரர்.

என்னும் அருட்பாடல்களால் தெளியலாம்.

குகா ---

குழந்தையை எடுத்து உறவாடும்போது, அது உடம்பு எல்லாம் தவழும். அதனைத் தலைமேலும், மார்பின் மேலும், தோள் மேலும் வைத்து மகிழ்வோம். குழந்தைக்கு வயது ஆக ஆக, உடம்பின் உறவு நீங்கி, கண்ணுக்கு விருந்தாய் இருக்கும். குழந்தைப் பருவத்தில் அன்பு இருக்கும். ஆனால் குழந்தை மேல் மதிப்பு வராது. காளைப் பருவத்தில், திறமைகள் அதிகப்படுவதால், அன்போடு மதிப்பும் மிகும். இறுதியில் குணச்சிறப்பினால் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு மதிப்பும், அதனால் பத்தியும் வளரும். உள்ளத்துக்கு வருவது எதவாக இருந்தாலும் மாறாமல் அங்கேயே தங்கிவிடும். அவ்வாறு, ஆன்ம முதிர்ச்சி வரவர உள்ளத்தில் தங்கி இருக்கும் பரம்பொருளை குகன் என்றார். இதயமாகிய குகையில் தங்குபவன் "குகன்" ஆனான். அநாகத ஆதாரத்தில் விளங்குவது குகப் பொருள் ஆகும். 

வேல் காட வல் வேடர்கள் மாமகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா ---

வேல் ஏந்திக் காட்டில் வாழும் வேடர்களின் மகளாகிய வள்ளிநாயகியின்பால் அன்பு பூண்டு திருமணம் புரிந்தவர் முருகப் பெருமான்.

வேட்டு ஆர் மகவான் மகள் ஆனவள் ஏடுஆர் திருமா மணவா ---

ஏடு - மேன்மை.

வேள்வியால் நிரம்பிய மகபதியாகிய இந்திரன் மகளாக வளர்ந்த தேவயானையின் மேன்மை தங்கிய மணவாளர் ருபுகப் பெருமான்.

திருவேற்காடு உறை வேதபுரீசுரர் தரு சேயே ---

திருவேற்காடு என்னும் திருத்தலத்தில் வேதபுரீசுரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுடைய திருமகனாக அவதரித்தவர்.

கருத்துரை

முருகா! அடியேன் மீது கடைக்கண் நோக்கம் வைத்து, அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்துத் திருவருள் புரிந்து, உபதேசமும் புரிந்து அருளவேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...