விரிஞ்சிபுரம் - 0682. பரவி உனது




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரவி உனதுபொன் (விரிஞ்சிபுரம்)

முருகா!
அரிய மானிடப் பிறப்பை எடுத்து,
அரிதின் முயன்று பொருள் தேடி,
விலைமாதர்க்கு அளித்து வீணாகாமல்,
பசித்தவர்க்கு அன்னம் பகிர்ந்து,
தேவரீரின் திருவருளுக்குப் பாத்திரம் ஆக அருள்.


தனன தனதனத் தனன தனதனத்
     தனன தனதனத் தனன தனதனத்
     தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா


பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
     தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
     பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே

படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
     தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
     பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே

சருவி யினியநட் புறவு சொலிமுதற்
     பழகு மவரெனப் பதறி யருகினிற்
     சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்

தமது ம்ருகமதக் களப புளகிதச்
     சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
     தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ

கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
     கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
     கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா
  
கமல அயனுமச் சுதனும் வருணனக்
     கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்
     கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே

இரையு முததியிற் கடுவை மிடறமைத்
     துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
     திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே

இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
     தவனி தனிலெழிற் கரும முனிவருக்
     கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பரவி உனது பொன் கரமும், முகமும், முத்து
     அணியும் உரமும், மெய்ப் ப்ரபையும், மருமலர்ப்
     பதமும், விரவு குக்குடமும், மயிலும், ள்....பரிவாலே

படிய மனதில் வைத்து, றுதி சிவம் மிகுத்து,
     எவரும் மகிழ்வுற, தரும நெறியின், மெய்ப்
     பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி ......படையாதே,

சருவி இனிய நட்பு உறவு சொலி, முதல்
     பழகும் அவர் எனப் பதறி, அருகினில்
     சரச விதம் அளித்து, உரிய பொருள் பறித் ......திடு மானார்

தமது, ம்ருகமதக் களப புளகிதச்
     சயிலம் நிகர் தனத்து இணையின் மகிழ்வுறத்
     தழுவி, அவசம் உற்று, ருகி மருள் எனத் ...... திரிவேனோ?

கரிய நிறம் உடைக் கொடிய அசுரரை,
     கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட,
     கழுகு பசிகெட, கடுகி அயில் விடுத் ...... திடு தீரா!
  
கமல அயனும், அச்சுதனும், வருணன், க்-
     கினியும், நமனும், அக் கரியில் உறையும் மெய்க்
     கணனும், அமரர் அத்தனையும் நிலைபெறப் ......புரிவோனே!

இரையும் உததியில் கடுவை, மிடறு அமைத்து,
     உழுவை அதள் உடுத்து, ரவு பணி தரித்து,
     இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்......தமவேளே!

இசையும் அருமறைப் பொருள்கள் தினம் உரைத்து,
     அவனி தனில் எழில் கரும முனிவருக்கு,
     இனிய கரபுரப் பதியில் அறுமுகப் ...... பெருமாளே.


பதவுரை


      கரிய நிறம் உடை கோடிய அசுரரை கெருவ(ம்) மதம் ஒழித்து --- கரிய நிறம் உள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து,

     உடல்கள் துணி பட --- அவர்களின் உடல்கள் கூறுபடவும்,

     கழுகு பசிகெட --- அந்தக் கூறுபட்ட உடல்களைத் தின்று கழுகுகள் பசி நீங்கவும்,

     கடுகி அயில் விடுத்திடு தீரா ---  விரைந்து வேலாயுதத்தை விடுத்தருளிய தீரம் மிக்கவரே!

      கமல அயனும் --- தாமரையில் வாழும் பிரமதேவனும்,

     அச்சுதனும் --- திருமாலும்,

     வருணன் --- வருணனும்,

     அக்கினியும் --- நெருப்புக் கடவுளும்,

     நமனும் --- இயமனும்,

     அக் கரியில் உறையும் மெய்க் க(ண்)ணனும் --- அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடம்பு எல்லாம் கண் ஆன இந்திரனும்,

     அமரர் அத்தனையும் நிலைபெறப் புரிவோனே ---  தேவர்கள் யாவரும் தத்தம் பதவிகளில் நிலைத்திருக்க அருள் புரிந்தவரே!

      இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து --- ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்து,

      உழுவை அதள் உடுத்து --- புலியின் தோலை அரையிலே தரித்து,

     அரவு பணி தரித்து ---  பாம்பு ஆபரணத்தை உடலிலே தரித்து,

     இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே --- உயிர்கள் விளக்கம் பெற்று உய்ய ஆனந்தத் திருநடனம் புரிந்தருளும் சிவபெருமான் அருளிய உத்தமனாகிய குமரவேளே!

         இசையும் அருமறைப் பொருள்கள் தினம் உரைத்து --- பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து, உயிர்கள் விளக்கம் உரைப்பதன் மூலம்

         அவனி தனில் எழில் கரும முனிவருக்கு இனிய --- இந்தப் பூவுலகில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய

         கரபுரப் பதியில் அறுமுகப் பெருமாளே --- கரபுரம் என்னும் விரிஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஆறுமுகப் பெருமானே!

       உனது பொன் கரமும், முகமும், முத்து அணியும் உரமும், மெய்ப் ப்ரபையும், மருமலர்ப்பதமும், விரவு குக்குடமும், மயிலும் பரவி --- தேவரீருடைய அழகிய திருக்கைகளையும், திருமுகமண்டலத்தையும், முத்து மாலைகளை அணிந்த திருமார்பையும், ஒளி வீசும் திருமேனியையும், தேவரீரின் கொடியில் பொருந்தியுள்ள சேவலையும், மயிலையும் போற்றி,

       உள் பரிவாலே படிய மனதில் வைத்து --- உள்ளத்தில் அன்பு பொருந்த,

     உறுதி சிவம் மிகுத்து --- திடமான சிவபத்தி மிகுந்து,

      எவரும் மகிழ்வு உற ---  எல்லா உயிர்களும் மகிழும்படியா,

     தரும நெறியின் --- அறநெறியில் நின்று,

     மெய்ப் பசியில் வரும் அவர்க்கு --- பசியினால் உடல் வாடி வருபவருக்கு,

     அசனம் ஒரு பிடிப் படையாதே --- ஒரு பிடி அளவாவது உணவை இடாமல்,

      சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி --- கொஞ்சு மொழி பேசி நட்பு பூண்டு,

     முதல் பழகும் அவர் எனப் பதறி --- முதலிலேயே பழகியவர்கள் போல மாயம் பல செய்து,

         அருகினில் சரசவிதம் அளித்து --- எனது அருகு இருந்து காம விளையாடல்களைப் புரிந்து,

     உரிய பொருள் பறித்திடும் மானார் தமது --- அதற்கு விலையாகப் பொருளைப் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதருடைய

      ம்ருகமதக் களப புளகிதச் சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழ் உறத் தழுவி --- கஸ்தூரியோடு சந்தனம் சேர்ந்த கலவை பூசப்பட்டு, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி,  

      அவசம் உற்று உருகி --- என் வசத்தை இழந்து, மனமானது அவர் வசம் உருக,

     மருள் எனத் திரிவேனோ --- அந்த மோக மயக்கத்துடனேயே அடியேன் திரிவேனோ?


பொழிப்புரை

     கரிய நிறம் உள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து, அவர்களின் உடல்கள் கூறுபடவும், அந்தக் கூறுபட்ட உடல்களைத் தின்று கழுகுகள் பசி நீங்கவும், விரைந்து வேலாயுதத்தை விடுத்தருளிய தீரம் மிக்கவரே!

         தாமரையில் வாழும் பிரமதேவனும், திருமாலும், வருணனும், நெருப்புக் கடவுளும், இயமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடம்பு எல்லாம் கண் ஆன இந்திரனும், தேவர்கள் யாவரும் தத்தம் பதவிகளில் நிலைத்திருக்க அருள் புரிந்தவரே!

         ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்து, புலியின் தோலை அரையிலே தரித்து, பாம்பு ஆபரணத்தை உடலிலே தரித்து, உயிர்கள் விளக்கம் பெற்று உய்ய ஆனந்தத் திருநடனம் புரிந்தருளும் சிவபெருமான் அருளிய உத்தமனாகிய குமரவேளே!

        பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து, உயிர்கள் விளக்கம் உரைப்பதன் மூலம் இந்தப் பூவுலகில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த திருத்தலமாகிய கரபுரம் என்னும் விரிஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஆறுமுகப் பெருமானே!

         தேவரீருடைய அழகிய திருக்கைகளையும், திருமுகமண்டலத்தையும், முத்து மாலைகளை அணிந்த திருமார்பையும், ஒளி வீசும் திருமேனியையும், தேவரீரின் கொடியில் பொருந்தியுள்ள சேவலையும், மயிலையும் போற்றி, உள்ளத்தில் அன்பு பொருந்த, திடமான சிவபத்தி மிகுந்து, எல்லா உயிர்களும் மகிழும்படியா, அறநெறியில் நின்று, பசியினால் உடல் வாடி வருபவருக்கு, ஒரு பிடி அளவாவது உணவை இடாமல், கொஞ்சு மொழி பேசி நட்பு பூண்டு, முதலிலேயே பழகியவர் போல மாயம் பல செய்து, எனது அருகு இருந்து காம விளையாடல்களைப் புரிந்து, அதற்கு விலையாகப் பொருளைப் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதருடைய, கஸ்தூரியோடு சந்தனம் சேர்ந்த கலவை பூசப்பட்டு, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி,  என் வசத்தை இழந்து, மனமானது அவர் வசம் உருக, அந்த மோக மயக்கத்துடனேயே அடியேன் திரிவேனோ?

விரிவுரை

இது மிக அற்புதமான திருப்புகழ்ப் பாடல்.

மிகவும் அரிதான மானிடப் பிறவியை நமக்கு அளித்து, நல்ல கருவி கரணங்களைப் பொருந்த வைத்து, அனுபோகத்திற்கு உலகப் பொருள்களையும் படைத்து அளித்து, உயிர்களை எல்லாம் காத்து வருகின்ற பரம்பொருளை சதாகாலமும் மனதில் வைத்து, வழிபட்டு வாழவேண்டும். பிறந்து போது யாரும் எதையும் கொண்டு வந்ததில்லை. இறக்கும்போதும் யாரும் எதையும் தம்முடன் கொண்டு செல்வது இல்லை. இடையில் வந்த வாழ்வும், செல்வமும் எல்லாம், முற்பிறவிகளில் செய்து வந்து, இறையருளால் நமக்கு ஊட்டப்பட்ட நல்வினைகளின் பயனாகவே வந்தது என்று உணர வேண்டும்.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பிறருக்குக் கொடுத்து, தானும் வாழவேண்டும், "செல்வத்துப் பயனே ஈதல். துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகளையும், "வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" என்னும் திருவள்ளவ நாயனாரின் அருள் வாக்கினையும் உணர்ந்து வாழாமல், எப்படி எப்படியோ வாழ்ந்து, உள்ள பொருளை எல்லாம் இழந்து ஏழையானவர்கள் உண்டு.

ஒன்றும் இல்லாத குடும்பத்தில் பிறந்து ஒரு நூறு கோடி படைத்தவர்களும் உண்டு. படைத்த செல்வத்தை, இல்லாதவருக்குப் படைக்காமல் வைத்து இழந்தவர்களும் உண்டு.

ஈதல், இசைபட வாழ்தல் அது உல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று உணர்ந்து, பிறருக்குக் கொடுத்து, தானும் துய்த்து வாழ்ந்தவர்களும் உண்டு. எல்லாமும் அவரவர் வினைப்பயனே. வினைப்பயனை வெல்வதற்கு உபாயம் ஒன்று உண்டு. அதுதான் "உலைவு இன்றித் தாழாது உஞற்றுதல்".

சிவஞானபோதத்தில் பயனியல் என்று இறுதிப் பகுதி வரும். பயன் என்பது ஒரு செயலின் விளைவு. செயல் முற்றிய போது நிகழ்வது. திருவள்ளுவ நாயனாரும், இல்லற இயலை முதலில் வைத்தார். துறவற இயலைப் பின்னர் வைத்தார். இல்லறத்தை நல்லறமாகப் பயின்ற ஒருவனால் தான் துறுவறத்தை எளிதாக மேற்கொள்ள இயலும் என்பதைக் காட்டினார். இல்லற இயலின் அதிகார வைப்பினை நோக்கினால் ஒரு உண்மை விளங்கும். முதல் அதிகாரமாக "இல்வாழ்க்கை"யை அமைத்தார் நாயனார். படிப்படியாக ஒவ்வொரு அதிகாரத்தையும் அமைத்து, இல்லறத்தில் நின்ற ஒருவன் தீவினை புரிதல் கூடாது என்பதை வலியுறுத்த, "தீவினையச்சம்" என்னும் 21-வது அதிகாரத்தை வைத்தார். தீவினைக்கு அஞ்சுமவன், ஒப்புரவாளனாக வாழவேண்டும் என்பதைக் காட்ட, அடுத்த அதிகாரமாக "ஒப்புரவு அறிதல்" என்பதை வைத்தார். ஒப்புரவை அறிந்தவன், தன்னிடத்து உள்ள பொருளை இல்லாதார்க்கு ஈந்து மகிழ்வான் என்பதைக் காட்ட, அடுத்த அதிகாரமாக "ஈகை"யை வைத்தார். ஈகையின் பயனாக ஒருவன் மறுமைக்கு வேண்டிய புண்ணியத்தை ஈட்டுவதோடு அழியாப் புகழையும் எய்துவான். அதுவே, உயிருக்கு ஊதியமாக வரும் என்பதைக் காட்ட "புகழ்" என்னும் அதிகாரத்தை வைத்தார். பின்னர் துறுவற இயலை வைத்தார்.

பதினாறு வயது என்று வாழ்நாள் வகுக்கப்பட்டது மார்க்கண்டேயருக்கு. அதை நான் மாற்றுவேன் என்று அவர் சொல்லவில்லை. இறையருளால் மாற்றுவேன் என்று தமது தாய்தந்தையரிடம் சொன்னார். இறைவழிபாட்டில் தோய்ந்தார். வாழ்நாள் முடிந்ததென்று உயிரைக் கவர இயமன் வந்தபோதும், அஞ்சாமல், இறையருளில் தோய்ந்து இருந்தார். வந்த காலனை உதைத்து விரட்டியவர் சிவபெருமான். ஊழை உப்பக்கம் கண்டவர்தான் மார்க்கண்டேயர். காண வைத்தவர் சிவபெருமான்.

எனவே, அரிதாகிய மானுடப் பிறவியை எடுத்த ஒவ்வொருவரும் இறையருளைப் பெறமுயல வேண்டும். இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்னாது வழங்குதல் வேண்டும். கரவு கூடாது. முடிந்த வரையில் தமது வருவாய்க்குத் தக்க அறத்தை, வாய்க்கும் தோறும் செய்து வரல் வேண்டும்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.       --- திருமூலர்.

அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்,
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.  --- திருமூலர்.

பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றுவிட்ட பண்பாளராம் தவத்தோர் உண்ணும் உணவே அறப் பாங்கு ஆகும் என்று தமிழ்மறை மொழியும். திருவடி உணர்வைத் திருவருளால் பெற்றுச் சிவவழிபாடு திருவைந்தெழுத்தால் செய்யக் கற்பனவே கற்றனவாம். அவற்றால் விளைவனவே போதம். போதம் என்றாலும் சிவஞானம் என்றாலும் ஒன்றே. உணர்வில் கலந்து அகத்து வெளிப்படும் அப் போதம் புறத்துச் சிவமணமாகக் கமழும். அங்ஙனம் கமழும் அருள் திருமேனியுடையார் சிவஞானத் தேன் நிறைந்த கூவலினையும் குளத்தினையும் ஒப்பர். பிறப்பற்றுச் சிறப்புற்று வாழும் பேரின்பத் தேட்டம் உடையார் அம்மெய்யடியாரைச் சார்ந்து உய்தல் வேண்டும். அங்ஙனம் அறியாவிட்டால் அவர் பிறவிப்பயன் அறியாப் பெரும் பேதையர் ஆவர். நீர் வேட்கை மிக்கார் அண்மையில் கூவல் குளங்கள் இருந்தும் அதன்பால் சென்று நீர் பருகி வேட்கை தணிந்து இன்புறாது, பயனறியாது வாளா இருந்து துன்புறுவாரன்றே? அத் துன்புறுவாரே இவர்கட்கு ஒப்பு ஆவர்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்,
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்,
விழித்து இருந்து என்செய்வீர்? வெம்மை பரந்து
இழிக்க அன்று என்செய்வீர்? ஏழை நெஞ்சீரே.  --- திருமூலர்.

அன்பும் அறிவுமில்லாத ஏழை நெஞ்சினை உடையவர்களே! திருவருளால் ஆணவ அழுக்கினை அகற்றி, திருவடி உணர்வை உமது உணர்வில் நிறைத்துக் கொள்ளவில்லை. சிறப்பாகத் தழுவப்பட்ட நன்னாட்களில் செய்யத் தகும் சிவ புண்ணியங்களையும் செம்மையுறச் செய்யவில்லை. அப் புண்ணியம் செய்யாமையால் உலகியலில் விழித்திருந்தும் அருளியலில் ஏமாந்தவர் ஆகின்றீர். அதனால் நீர் என் செய்வீர். நீரும் உமது பாவக் கொடுவினை மிகுந்து துன்புறுவீர். அக்காலத்து அத் துன்பத்திருந்து என் செய்வீர்?

இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.     --- அப்பர்.

வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.     --- கந்தர் அலங்காரம்.

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு, பிடிசோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.        --- கந்தர் அலங்காரம்.

கெடுவாய் மனனே! கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறை தாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே,
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.                         --- கந்தர் அனுபூதி.

பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு - அடுத்துச்
சிறுபயம் என்னார், சிதவலிப்பு ஈவார்,
பெறு பயன் பின் சாலப் பெரிது.                                 --- சிறுபஞ்சமூலம்.

சிறை கிடந்தார் ,செத்தார்க்கு நோற்பார், பலநாள்
உறைக்கிடந்தார், ஒன்று இடையிட்டு உண்பார் --- பிறைக்கிடந்து
முற்று அனைத்தும் உண்ணாதவர்க்கு ஈந்தார், மன்னவராய்க்
கற்று அனைத்தும் வாழ்வார் கலந்து.                           --- சிறுபஞ்சமூலம்.


அமைவு உற்று அடையப் பசி உற்றவருக்கு
     அமுதைப் பகிர்தற்கு ...... இசையாதே,
அடையப் பொருள் கைக்கு இளமைக்கு என வைத்து,
     அருள் தப்பி மதத்து ...... அயராதே,

தமர் சுற்றி அழ, பறை கொட்டி இட,
     சமன் நெட்டு உயிரைக் ...... கொடுபோகும்
சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
     தளர்வு உற்று ஒழியக் ...... கடவேனோ?                  ---  திருப்புகழ்.

 பசியால் வருந்துகின்றவர்க்கு அமைதியுடன் அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனம் இன்றி, வர வர இளமையை அடைவது போலவும், அந்த இளமைப் பருவத்துக்கு ஆகும் என்றும் எல்லாப் பொருளையும் சேகரித்து வைத்து, அருள் நெறியினின்று தவறிப் போய், அகங்காரத்தால் தளர்ச்சி அடையாமல் சுற்றத்தார் சுற்றி அழவும், பறை வாத்தியங்கள் முழங்கவும், இயமன் உயிரைப் பற்றி நெடுந்தூரம் கொண்டு போகின்ற இந்த உடலை நிலையானது என்று எண்ணி, இவ்வுடம்புக்காகவே பாடுபட்டுத் தளர்ந்து அழிந்து போவேனோ?

பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள்; பசி நோயுடன் சில மணிநேரம் போராட முடியாது.

பசி வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.                    ---ஔவையார்.

பசி அடைந்தவுடன் நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து சோர்ந்து விடுகின்றன. ஆகவே பசித்தோர்க்கு உணவு தருவதே மேலான அறமாகும்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  --- மணிமேகலை

ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர் செல்வம் எல்லாம்
அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும் நட்பும்
நன்று என்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்று என்று இரு, மனமே! உனக்கு உபதேசம் இதே.     --- பட்டினத்தடிகள்.

பசித்தவர்க்கு அன்னம் அமைதியாகக் கொடுக்க வேண்டும். அன்புடன் தரவேண்டும்.  இன்னுரை கூறி, அகமும் முகமும் மலர்ந்து தரவேண்டும்.

பசித்தவனுக்கு அன்னம் தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும்; உள்ளம் குளிரும்.  உணர்வு குளிரும்; உயிரும் குளிரும். உயிருக்குயிரான சிவம் குளிரும்.


சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி, முதல் பழகும் அவர் எனப் பதறி, அருகினில் சரசவிதம் அளித்து, உரிய பொருள் பறித்திடும் மானார் தமது...... மருள் எனத் திரிவேனோ ---

இப்படி எல்லாம் பயனுற வாழாமல்,  தான் அல்லாத உடம்பை "நான்" என்றும், தன்னோடு இயைபு அல்லாத பொருள்களைத் "எனது" என்றும் கொண்டு, அஞ்ஞான இருளில் மூழ்கி, நல்வினை, தீவினை அறியாது, இறைவனையும் அறியாது, "காமஉள் பகைவனும், கோபவெம் கொடியனும், கனலோப முழுமூடனும், கடுமோக வீணனும், கொடுமதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரியும், ஏமம்அறு மாச்சரிய விழலனும், கொலை என்று இயம்பு பாதகனும் ஆம், இவ் எழுவரும், இவர்க்கு உற்ற உறவு ஆன பேர்களும்" பற்றி நிற், "நாம் பிரமம், நமை  அன்றி ஆம்பிரமம் வேறு இல்லை, நன்மை தீமைகளும் இல்லை, நவில்கின்ற வாகி, அந்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் போம் பிரம நீதி கேட்டு, பிரமை ஆகவே போதித்தும், சாதித்தும், புன்மை நெறி கைவிடாமல், சாம் பிரமம்" ஆகி நின்று, "பார்கொண்ட நடையில் வன் பசி கொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும், இறைவன் திருவடிக்கு அன்பும், நிறை ஆயுளும், பதியும், நல்நிதியும், உணர்வும், சீர்கொண்ட நிறையும், உள்பொறையும், மெய்ப்புகழும், நோய்த் தீமை ஒரு சற்றும் அணுகாத் திறமும், மெய்த் திடமும், நல்இடமும்" பெறுகின்ற நிலையை ஒழித்து, "கானல்இடை நீரும், ஒரு கட்டையில் கள்வனும், காண்உறு கயிற்றில் அரவும்,
கடிதரு கிளிஞ்சில் இடை வெள்ளியும், பொன்னைக் கதித்த பித்தளையின் இடையும், மானலில் கண்டு உளம் மயங்கல்போல், கற்பனையை மாயையில் கண்டு, வீணே மனை என்றும், மகவு என்றும், உறவு என்றும், நிதி என்றும், வாழ்வு என்றும், மானம் என்றும், ஊனலின் உடம்பு என்றும், உளம் என்றும், உள் என்றும், வெளி என்றும்,வான் உலகு என்றும், அளவு அறு விகாரம் உற நின்று",  "கற்று ஒளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெரும் கன்ம உடலில், பருவம் நேர் கண்டு அழியும் இளமைதான் பகல் வேடமோ? புரைக் கடல்நீர் கொலோ? கபடமோ? உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ? வான் இட்ட ஒரு வில்லோ? நீர்க்குமிழியோ? உலைஅனல் பெறக் காற்று உள் ஊதும் துருத்தியோ? இதனை ஒன்றும் அறியாமல், பற்று உறுதியாக் கொண்டு, வனிதையர் கண் வலையினில் பட்டு, மதி கெட்டு, உழன்று, பாவமே பயில்கின்றது அல்லாது, இறைவன் திருவடிப் பற்று அணுவும் உற்று அறியாது",  "உப்பு உற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்று, அசும்பு ஒழுகும் உடலை, உயர்கின்ற வான் இடை எறிந்த கல் என்றும், மலை உற்று இழியும் அருவி என்றும், வெப்பு உற்ற காற்றிடை விளக்கு என்றும், மேகம்உ று மின் என்றும், வீசு காற்றின் மேல் பட்ட பஞ்சு என்றும், மஞ்சு என்றும், வினை தந்த வெறும் மாயவேடம் என்றும், கப்பு உற்ற பறவைக் குடம்பை என்றும், பொய்த்த கனவு என்றும், நீரில் எழுதும் கைஎழுத்து என்றும், உள் கண்டுகொண்டு, அதில் ஆசை கைவிடாமல்" நின்று,  "பரம்ஏது? வினைசெயும் பயன்ஏது? பதிஏது?  பசுஏது?  பாசம்ஏது?  பத்திஏது? அடைகின்ற முத்திஏது? அருள்ஏது? பாவ புண்ணியங்கள் ஏது? வரம்ஏது? தவம்ஏது? விரதம்ஏது? ஒன்றும்இலை, மனம் விரும்பு உணவு உண்டு, நல் வத்திரம் அணிந்து, மடமாதர் தமை நாடி, நறுமலர் சூடி, விளையாடி,மேல் கரம் மேவ விட்டு, முலை தொட்டு வாழ்ந்து, அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன் எனும்" கயவனாக வாழாமல், திருவருள் புரிய வேண்டும் என்ற நமக்காக அருணை முனிவர் புருகப் பெருமானிடம் வேண்டிப் பாடி அருளினார்.

கருத்துரை

முருகா! அரிய மானிடப் பிறப்பை எடுத்து, அரிதின் முயன்று பொருள் தேடி, விலைமாதர்க்கு அறித்து வீணாகாமல், பசித்தவர்க்கு அன்னம் பகிர்ந்து, தேவரீரின் திருவருளுக்குப் பாத்திரம் ஆக அருள்.









No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...