திருக் கடுவாய்க்கரைப்புத்தூர்




திருக் கடுவாய்க்கரைப்புத்தூர்
(ஆண்டார் கோயில்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
    
     மக்கள் வழக்கில் ஆண்டார் கோயில் என்று உள்ளது.
  
      கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

     கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து கோயில் வழியாகச் செல்கிறது.

     தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டார்கோயில் வழியாகச் செல்கின்றன். ஆண்டால்கோயில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.


இறைவர்                   : சொர்ணபுரீசுவரர்.

இறைவியார்               : சொர்ணாம்பிகை, சிவாம்பிகை.

தல மரம்                   : வன்னி.

தீர்த்தம்                    : திரிசூல கங்கை.

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - ஒருத்தனை மூவுலகொடு.
         குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள திருத்தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.

         ஆலயத்தின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே கோயிலின் தீர்த்தமாகிய திரிசூலகங்கை வலப்புறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கொடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து அநேக தூண்களுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

         இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மேல் ஊரும் நோய்க் கரை உள் செய்யாத நோன்மையார் சூழ்ந்த, கடுவாய்க்கரையுள் மேவுகின்ற வண்மையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 215
நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய், பழையாறை
பல்ஊர்வெண் தலைக் கரந்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல்ஊர்வண் தமிழ்பாடி, வலஞ்சுழியைத் தொழுதுஏத்தி,
அல்ஊர்வெண் பிறைஅணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.

         பொழிப்புரை : திருநல்லூர் இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.


பெ. பு. பாடல் எண் : 216
நாலூர்,தென் திருச்சேறை, குடவாயில், நறையூர்,சேர்
பால்ஊரும் இன்மொழியாள் பாகனார் கழல்பரவி,
மேல்ஊர்தி விடைக்கொடியார் மேவும்இடம் பலபாடி,
சேல்ஊர்தண் பணைசூழ்ந்த தென்திருவாஞ் சியம்அணைந்தார்.

         பொழிப்புரை : திருநாலூரும், அழகான திருச்சேறையும் திருக்குடவாயிலும், திருநறையூரும் என்ற இத்திருப்பதிகளில் எல்லாம் வீற்றிருக்கின்ற பால்போன்ற இனிய சொற்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றிச் சென்று, விடையை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் பல இடங்களையும் பாடிச் சென்று, சேல் மீன்கள் உலாவும் தண்ணிய வயல்கள் சூழ்ந்த அழகான திருவாஞ்சியத்தை அடைந்தார்.

         குறிப்புரை : முதற்கண் குறிக்கப்பட்டிருக்கும் நான்கு திருப்பதிகளுள் திருச்சேறைக்கு மட்டுமே பதிகம் கிடைத்துள்ளது. `பெருந்திரு` (தி.4 ப.73)- திருநேரிசை. `பூரியாவரும்` (தி.5 ப.77) - திருக்குறுந்தொகை

         `விடைக்கொடியார் மேவுமிடம் பலபாடி` என்பதால், கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பதியை இங்குக் கொள்ளலாம். பதிகம்: `ஒருத்தனை` - திருக்குறுந்தொகை.

         திருநாலூர் மயானம், பேணுபெருந்துறை முதலிய பதிகளும் ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை). இதுபொழுது பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருவாஞ்சியத்தை அணைந்தார் என்பதால், கிடைத்துள்ள பதிகம் பின்னர்ப் போற்றிப் பாடியதாம்.


5. 062    திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்   திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னை,அடி யேன்மனத் துள்அமர்
கருத்த னை,கடு வாய்ப்புனல் ஆடிய
திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண்டு உய்ந்தெனே.

         பொழிப்புரை : ஒப்பற்றவனும் , மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும் , அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும் , தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று , கண்டு , உய்ந்தேன் .


பாடல் எண் : 2
யாவ ரும்அறி தற்குஅரி யான்தனை,
மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை,
நாவில் நல்லுரை ஆகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்ச் சென்றுகண்டு உய்ந்தெனே.

         பொழிப்புரை : எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும் , மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும் , நாவில் நல்ல உரையாகி அருளும் நாதனும் , தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன் .


பாடல் எண் : 3
அன்ப னை, அடி யார்இடர் நீக்கியை,
செம்பொ னை, திக ழுந்திருக் கச்சியே
கம்ப னை, கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நான்உய்யப் பெற்றெனே.

         பொழிப்புரை : அன்பே வடிவானவனும் , அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும் , செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சி யேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன் .


பாடல் எண் : 4
மாத னத்தை,மா தேவனை, மாறுஇலாக்
கோத னத்தில்ஐந்து ஆடியை, வெண்குழைக்
காத னை, கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நான்உய்யப் பெற்றெனே.

         பொழிப்புரை : பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும் , மகாதேவனும், மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திரு முழுக்குக் கொள்பவனும் , சங்கவெண்குழை அணிந்த காது உடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன் .


பாடல் எண் : 5
குண்டு பட்டகுற் றம்தவிர்த்து என்னைஆட்
கொண்டு, நல்திறம் காட்டிய கூத்தனை,
கண்ட னை, கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண்டு அருவினை அற்றெனே.

         பொழிப்புரை : மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும் , திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன் .


பாடல் எண் : 6
பந்த பாசம் அறுத்துஎனை ஆட்கொண்ட
மைந்த னை, மண வாளனை, மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டுஇனிது ஆயிற்றே.

         பொழிப்புரை : பாசமாகிய கட்டினை அறுத்து , என்னை ஆட்கொண்ட பெருவீரனும் , மணவாளக்கோலம் உடையானும் , பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று .


பாடல் எண் : 7
உம்ப ரானை, உருத்திர மூர்த்தியை,
அம்ப ரானை, அமலனை, ஆதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண்டு இன்பம் அதுஆயிற்றே.

         பொழிப்புரை : தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும் , உருத்திரமூர்த்தியும் , அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும் , மலம் அற்றவனும் , ஆதியானவனும் , சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று .


பாடல் எண் : 8
மாசுஆர் பாச மயக்குஅறு வித்து,என் உள்
நேசம் ஆகிய நித்த மணாளனை,
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னே, என இன்பம் அதுஆயிற்றே.

         பொழிப்புரை : குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும் , பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று .


பாடல் எண் : 9
இடுவார் இட்ட கவளம் கவர்ந்துஇரு
கடுவாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே,
கடுவாய்த் தென்கரைப் புத்தூர் அடிகட்குஆட்
படவே பெற்றுநான் பாக்கியம் செய்தெனே.

         பொழிப்புரை : பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத் தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல் , கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன் .


பாடல் எண் : 10
அரக்கன் ஆற்றல் அழித்து, அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தெனே.

         பொழிப்புரை : இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய , அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...