106. குங்குமம் சுமந்த கழுதை

 “பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ

     டுகள்சுமந்து பிதற்று வோனும்,

போரில்நடந் தறியாது பதினெட்டா

     யுதம்சுமந்த புல்லி யோனும்

ஆரணிதண் டலைநாதர் அகமகிழாப்

     பொருள்சுமந்த அறிவி லோனும்

காரியமொன் றறியாக்குங் குமம் சுமந்த

     கழுதைக்கொப் பாவர் தாமே.”


இதன் பொருள் ---


ஆர் அணி தண்டலைநாதர் அகம் மகிழாப் பொருள் சுமந்த அறிவு இலோனும் – ஆத்திமாலையைத் தரித்தவரும், திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருவுள்ளம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர் உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் – நூல்களின் சிறந்த பொருளை அறியாமல், அவற்றைத் தலைச் சுமையாகச் சுமந்து, பிதற்றிக் கொண்டு திரிகின்றவனும், போரில் நடந்து அறியாது பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன் அலுவல் ஒன்றையும் உணராமல் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம் ஆவர்.


      திருத் தண்டலை இறைவர் திருவுள்ளம்  மகிழாப் பொருள்கள் சிவசின்னம் அல்லாதவை. ‘குங்குமம் சுமந்த கழுதை' என்பது பழமொழி.


“கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால்

கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்

பழுது நான் உழன் றுஉள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன், எந்தாய்!

அழுது நீஇருந்து என்செய்தி மனனே!

அங்க ணாஅர னேஎன மாட்டா

இழுதை யேனுக்கு ஒர் உய்வகை அருளாய்

இடைம ருது உறை எந்தைபி ரானே!”


என்பது சுந்தரர் தேவாரம்.


இதன் பொருள் ---


என் அப்பனே!  திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற சிவபரம்பொருளே! கழுதையானது  குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர். அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேன் ஆயினேன்; `மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், ` அங்கணனே, அரனே` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியினை வழங்கியருளாய் .


வாலாயமாகக் கழுதை சுமந்து செல்வது அழுக்கு மூட்டையைத்தான். அதனால் அதற்குத் தாழ்வு ஏதும் இல்லை. உயர்ந்த குங்கும மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வேறுபாடும் தெரியாது. அதனால் அதற்கு உயர்வு ஏதும் உண்டாகாது. அதுபோலத்தான், நம்மில் பலரும் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இறைபணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற பணியின் பொருள் என்ன என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். இறைவனைக் குறித்துப் பாடப்படுகின்ற பாடல்களின் பொருளை உணராது ஓதுகின்றவர்கள், “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்னும் மணிவாசகத்தை ஓதிக் கொண்டுதான் இருப்பார்கள். இறைவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லுபவர்களிலும் பலரும் பொருள் தெரியாமல்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். கேட்டால், பொருள் தெரியாமல் சொன்னாலும் இறைவன் அருள் புரிவான் என்று சமாதானம் கூறுவார்கள். "கக்கத்தில் வையாதே, கருத்தில் வை" என்பது முதுமொழி..


"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு"                     -- நாலடியார்.


கண்ணில் காணும் புத்தகங்களை எல்லாம் வாங்குவர். புத்தகத்தை யாராவது தந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வந்து விடுவர். ஆனால் அவற்றைப் படித்துப் பயன் கொள்ளமாட்டார். வீடு நிறைய புத்தகங்களைத் தொகுத்து வைத்து இருப்பவர்கள் எல்லோரும் படித்துப் பயன் கொண்டுவர் என்று சொல்ல முடியாது. புத்தகங்களைப் பொருள் உணர்ந்து படித்துத் தானும் பயன் பெற்று, பிறரும் பயனுற எடுத்துச் சொல்பவர்கள் மிகச் சிலரே. 

புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும் என்பது கருத்து.


No comments:

46. பொருட்பற்று துன்பம் தரும்

“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே, பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால் இழத்தலும் துன்பமே ஆம்.”...