கும்பகோணம் --- 0875. செனித்திடும் சலம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செனித்திடும் சலம் (கும்பகோணம்)

முருகா!
சிவயோகத்தைக் காட்டி,
சிவஞானத்தைத் தந்து அருள்வாய்.


தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன ...... தனதான


செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
     விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
     செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே

தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
     இரைத்தி டுங்குல மேசில கால்படர்
     சினத்தி டும்பவ நோயென வேயிதை ......யனைவோருங்

கனைத்தி டுங்கலி காலமி தோவென
     வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
     கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ......முடல்பேணிக்

கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
     இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
     கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
     தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி

சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
     வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
     சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே

தினைப்பு னந்தனி லேமய லாலொரு
     மயிற்ப தந்தனி லேசர ணானென
     திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே

சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
     தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
     திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்
 

செனித்திடும் சலம், சாழலும், ஊழலும்
     விளைத்திடும் குடல் பீறியும், மீறிய
     செருக்கொடும் சதை பீளையும் ஈளையும், ...... உடல்ஊடே

தெளித்திடும் பல சாதியும் வாதியும்,
     இரைத்திடும் குலமே, சில கால்படர்
     சினத்திடும் பவ நோய் எனவே, இதை ......அனைவோரும்

கனைத்திடும் கலி காலம் இதோ?
     வெடுத்திடும் சுடுகாடு புகா என
     கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் ......உடல்பேணிக்

கடுக்கனும் சில பூடணம் ஆடைகள்
     இருக்கிடும் கலையே, பல ஆசைகள்
     கழித்திடும், சிவயோகமும் ஞானமும் ...... அருள்வாயே

தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
     தகுத்து துந்துமி தாரை விராணமொடு ......அடல்பேரி,

சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை
     வளைத்து, வெஞ்சின வேல்விடு சேவக!
     சமத்து உணர்ந்திடு மாதவர் பால்அருள் ...... புரிவோனே!

தினைப் புனந்தனிலே மயலால் ஒரு
     மயில் பதந்தனிலே சரண் நான்என
     திருப்புயம் தரு மோகன மானினை ...... அணைவோனே!

சிவக் கொழுஞ்சுடரே பரன் ஆகிய
     தவத்தில் வந்துஅருள் பால! க்ருபாகர!
     திருக் குடந்தையில் வாழ் முருகா! சுரர் ...... பெருமாளே.


பதவுரை

     தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி --- தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி  என்னும் தாள ஒத்துடன்,

      தாரை ---

     விராணமொடு ---

     அடல் பேரி --- தாரை என்னும் ஊதுகுழல், வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன்

      சமர்த்தம் ஒன்றிய --- சமருக்கு ஓடி வந்,

     தானவர் சேனையை வளைத்து --- அசுரர்களுடைய சேனைகளை வளைத்து,

     வெம் சின வேல் விடு சேவக --- கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவரே!

      சமத்து உணர்ந்திடு மாதவர் பால் அருள் புரிவோனே --- உமது அருள் வல்லமையை உணர்ந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவரே!

      தினைப்புனம் தனிலே --- தினைப் புனத்தில்

     மயலால் --- காதல் கொண்டு,

     ஒரு மயில் பதம் தனிலே சரண் நான் என --- ஒப்பற்ற மயில் போன்ற வள்ளி நாயகியின் திருப் பாதத்தில் நான் அடைக்கலம் என்று கூற,

      திருப்புயம் தரு மோகன மானினை அணைவோனே --- தனது அழகிய தோள்களைத் தழுவத் தந்து மயங்கச் செய்த வள்ளிநாயகியை அணைபவரே!

      சிவக் கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால  --- சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரம்பொருளாக வெளிப்பட்டு, வந்து அருள் புரிந்த குழந்தைவேலரே!

      க்ருபாகர --- கருணைக்கு இருப்பிடமானவரே!

      திருக்குடந்தையில் வாழ் முருகா --- கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வாழும் முருகா!

     சுரர் பெருமாளே --- தேவர்களின் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      செனித்திடும் சலம் --- நிலையாமையை உடைய பிறப்பு என்பது,

     சாழலும் ஊழலும் --- கூத்து விளையாட்டு போன்றது. அருவருப்பு மிக்கது.

      விளைத்திடும் குடல் --- அதனால் உண்டாகின்ற உடல்,

     உடல் ஊடே  பீறியும் மீறிய செருக்கொடும் --- அந்த உடலால் உண்டாகின்ற அளவுக்கு மீறிய நான் என்னும் மயக்கம்,  

     சதை பீளையும் ஈளையும் --- அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை,

      தெளித்திடும் பல சாதியும் வாதியும் --- சொல்லப்படுகின்ற பல சாதிகள், அவை பற்றி எழுகின்ற வாதங்கள்,

      இரைத்திடும் குலமே --- கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர்

     சில கால் படர் சினத்திடும் பவ நோய் --- சில சமயங்களில் சினத்தை உண்டாக்குகின்ற பிறப்பு என்னும் நோய்.

     எனவே --- என்றே கருத்தில் கொண்டு,

      அனைவோரும் இதை கனைத்திடும் கலிகாலம் இதோ என --- எல்லோரும் வாழ்வை ஆரவாரமே மிகுந்த கலிகாலத்தின் விளைவு இது என்று கூற,

     (எப்படியாவது வாழ்ந்து, ஓய்ந்து, முடிந்து, இறந்துபட்ட போது)

      எடுத்திடும் --- பிணத்தை எடுங்கள்,

     சுடுகாடு புகா என --- சுடுகாட்டுக்குச் செல்லுங்கள் என்று கூற, (அதன்படியே பாடையிலே சுமந்து சென்று)

     கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் --- பாடையிலிருந்து கவிழ்க்கப்பட்ட உடம்பானது வெந்து சாம்பலாகிவிடும்.

     உடல் பேணி --- இந்த உடம்பை விரும்பிப் பலவகையிலும் பாதுகாத்து, அதனை அலங்கரிப்பதற்காக,

      கடுக்கனும் --- காதிலே கடுக்கன்,

     சில பூடணம் --- உடம்பிலே சில அணிகலன்கள்

     ஆடைகள் --- நல்ல ஆடைகள்,

     இருக்கிடும் கலையே --- வேத மந்திரங்களைக் கற்றல்,

     பல ஆசைகள் --- இன்ன பிற ஆசைகள்,  இவைகளை எல்லாம்,

      கழித்திடும் சிவயோகமும் --- ஒழிக்கக் கூடியதான சிவயோகத்தையும்

     ஞானமும் அருள்வாயே --- அந்த யோகத்தின் பயனான சிவஞானத்தையும் எனக்கு அருள்வாயாக.

பொழிப்புரை


     தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி  என்னும் தாள ஒத்துடன், தாரை என்னும் ஊதுகுழல், வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன், சமருக்கு ஓடி வந், அசுரர்களுடைய சேனைகளை வளைத்து, கொடிய உக்கிரமான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவரே!

         உமது அருள் வல்லமையை உணர்ந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவரே!

         தினைப் புனத்தில் காதல் கொண்டு, ஒப்பற்ற மயில் போன்ற வள்ளி நாயகியின் திருப் பாதத்தில் நான் அடைக்கலம் என்று கூற, தனது அழகிய தோள்களைத் தழுவத் தந்து மயங்கச் செய்த வள்ளிநாயகியை அணைபவரே!

     சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரம்பொருளாக வெளிப்பட்டு, வந்து அருள் புரிந்த குழந்தைவேலரே!

      கருணைக்கு இருப்பிடமானவரே!

         கும்பகோணம் என்னும் திருத்தலத்தில் வாழும் முருகா!

     தேவர்களின் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         நிலையாமையை உடைய பிறப்பு என்பது, கூத்து விளையாட்டு போன்றது. அருவருப்பு மிக்கது. அதனால் உண்டாகின்ற உடல், அந்த உடலால் உண்டாகின்ற அளவுக்கு மீறிய நான் என்னும் மயக்கம், அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை, சொல்லப்படுகின்ற பல சாதிகள், அவை பற்றி எழுகின்ற வாதங்கள், கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர், சில சமயங்களில் சினத்தை உண்டாக்குகின்ற பிறப்பு என்னும் நோய். என்றே கருத்தில் கொண்டு, எல்லோரும் வாழ்வை ஆரவாரமே மிகுந்த கலிகாலத்தின் விளைவு இது என்று கூற, (எப்படியாவது வாழ்ந்து, ஓய்ந்து, முடிந்து, இறந்துபட்ட போது) பிணத்தை எடுங்கள், சுடுகாட்டுக்குச் செல்லுங்கள் என்று கூற, அதன்படியே பாடையிலே சுமந்து சென்று, பாடையிலிருந்து கவிழ்க்கப்பட்ட உடம்பானது வெந்து சாம்பலாகிவிடும். இந்த உடம்பை விரும்பிப் பலவகையிலும் பாதுகாத்து, அதனை அலங்கரிப்பதற்காக, காதிலே கடுக்கன், சில அணிகலன்கள் நல்ல ஆடைகள், வேத மந்திரங்களைக் கற்றல், இன்ன பிற ஆசைகள்,  இவைகளை எல்லாம், ஒழிக்கக் கூடியதான சிவயோகத்தையும், அந்த யோகத்தின் பயனான சிவஞானத்தையும் எனக்கு அருள்வாயாக.


விரிவுரை

செனித்திடும் சலம் ---

செனித்தல் --- பிறத்தல்.

சலம் --- நடுக்கம், சுழற்சி, கோபம், பொய்ம்மை, வஞ்சகம், பட்சபாதம், தீச் செயல், போட்டி, பிடிவாதம். பிறப்பு இத்தனையும் மிகுந்தது.

இந்த உலகவாழ்வு நிலைபேறு இல்லாதது. அழியும் தன்மை உடையது.

"நதி தனை அன்ன பொய் வாழ்வு" என்றார் கந்தரலங்காரத்தில்.

இந்த சலம் தீரவேண்டும் என்றால், இறைவனை சலமும் பூவும் கொண்டு வழிபட வேண்டும். "சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன்" என்றார் அப்பர் பெருமான்.

புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு, நீர் உண்டு,
அண்ணல் அதுகண்டு அருள் புரியா நிற்கும். --- திருமந்திரம்.

சாழல் ---

சாழல் --- விளையாட்டு.

விளைய ஆடுவது விளையாட்டு.

அருள் விளைய ஆடுவது அருள் விளையாட்டு, 

மருள் விளைய ஆடுவது மருள் விளையாட்டு. 

ஆடல் என்றால் துன்பம் என்றும் பொருள் உண்டு. 
நம்முடைய ஆடல் எல்லாம் துன்பத்தையே தரும்.

பொன்மலையோ சிறிது எனப் பேராசை பொங்கி,
     புவிநடையில் பற்பலகால் போந்து, போந்து,
நென்மலையோ நிதிமலையோ என்று தேடி,
     நிலைகுலைந்தது அன்றி, உனை நினைந்து நேடி,
மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
     வழுத்தியதே இல்லை, இந்த வஞ்ச நெஞ்சம்
கன்மலையோ இரும்போ செம்மரமோ பாறைக்
      கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ. 
                                         --- திருவருட்பா.

ஊழலும் ---

ஊழல் --- அருவருப்பு, ஆகாதது, நரகம், தாறுமாறு, கெட்டது, குழப்படி, பணமோசடி செய்தல்,முறைகேடு, கையூட்டு.

இத்தனையும் நிறைந்தது இந்த வாழ்வு.

குடல் பீறியும், மீறிய செருக்கொடும் சதை பீளையும் ஈளையும், உடல்ஊடே ---

 
ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்
                 ஆகின்ற ஆக்கை, நீர்மேல்
      அமர்கின்ற குமிழி என நிற்கின்றது, ன்ன நான்
                 அறியாத காலம்எல்லாம்
புந்திமகிழ் உற உண்டு உடுத்தது,ன்பம் ஆவதே
                 போந்தநெறி என்றுஇருந்தேன்,
      பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த,இவை
                 போனவழி தெரியவில்லைந
எந்தநிலை பேசினும் இணங்கவிலைந அல்லால்
                 இறப்பொடு பிறப்பை உள்ளே
      எண்ணினால், நெஞ்சது பகீர்எனு, துயில்உறாது,
                 இருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகானது அங்கம், இவை என்கொலோ?
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே.

நீர்க்குமிழியை ஒத்த உடம்பு. யாவரும் அருவருக்கத்தக்க துச்சில் என்னும் ஒதுக்கிடத்தை ஒத்தது. நல்வினை தீவினை என்னும் பறவைகள் தங்குகின்ற கூடு இது. இதனை மலையினும் வலிமை உடையதாக எண்ணி மகிழ்கின்றோம். அப்படி வலிமை உடையதாக எண்ணுகின்ற இந்த உடம்பில், கண் என்னும் ஒரு பொறியின் வழியாக பீளையும், அதனுடன் இயைந்த நீரும் வெளிப்படும். காது என்னும் கருவியின் வழியாக குறும்பி என்னும் அழுக்கு வெளிப்படும். மூக்கு என்னும் பொறியின் வழியாக சளியும் நீரும் வெளிப்படும். வாய் என்னும் கருவியின் வழியாக உமிழ் நீரும், கோழையும் வெளிப்படும். பாயுரு என்னும் கருவியின் வழியாக அபானவாயுவும் மலமும் வெளிப்படும். உபத்தம் என்னும் கருவியின் வழியாக சிறுநீரும் சீயும் வெளிப்படும்.  இவ்வாறு உள்ளம் புறமும் நாறுகின்ற இந்த உடம்பானது உயிர் நீங்கிய காலத்து, சுடப்பட்டு எலும்பும் சாம்பலுமே மிஞ்சும். 

புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்

பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;

சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்...        --- பட்டினத்தார்.

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்பு
         ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
         சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
         பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
         அதிசயங் கண்டாமே.                     ---  திருவாசகம்.


தெளித்திடும் பல சாதியும் வாதியும், இரைத்திடும் குலமே ---

பிறந்த பின்னர் சாதி, குலம், கோத்திரம் என்றெல்லாம் வகுத்துக் கொண்டு, வாதமும் ஆரவாரமும் நிறைந்திடுகின்றது. இதனால் உயிர்க்கு யாதொரு நன்மையும் இல்லை. வெறும் பகட்டும் ஆரவாரமுமே. பிறப்பு ஒக்கும் எல்லா உயிருக்கும் என்ற அருள்மொழியை மறந்து, அல்லல் படுகின்றோம்.
இது அறிவின்மையைக் குறிக்கும்.

சாதிகுலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து, ஆட்கொண்டு
பேதைகுணம், பிறர்உருவம் யான்எனதுஎன் உரைமாய்த்து,
கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே.
                                             --- திருவாசகம்.

சாதியிலே, மதங்களிலே, சமயநெறி களிலே,
     சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே,
ஆதியிலே அபிமானித்து, அலைகின்ற உலகீர்!
     அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே;
நீதியிலே, சன்மார்க்க நிலைதனிலே, நிறுத்த
     நிருத்தம்இடும் தனித்தலைவர் ஒருத்தர்,அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
     மேவுகின்ற தருணம்இது, கூவுகின்றேன் உமையே.
                                             --- திருவருட்பா.

சாதி பேதங்கள் வந்ததன் உண்மையை அறியாமல் வீணான வாதத்தால் அறிவிழத்தல் கூடாது.

சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே. --- பட்டினத்தார்.

கனைத்திடும் கலி காலம் இதுவோ ----

நடக்கக் கூடதவை எல்லாம் நடப்பதுதான் கலி காலத்தின் தன்மை. எல்லாவற்றிலும் வெற்று ஆரவாரமே மிகுந்து இருக்கும்.

தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்,உயர்
    தந்தையைச் சீறுகாலம்,
சற்குருவை நிந்தைசெய் காலம்,மெய்க் கடவுளைச்
    சற்றும் எண்ணாத காலம்,

பேய்தெய்வம் என்று உபசரித்திடுக் காலம்,
    புரட்டருக்கு ஏற்ற காலம்,
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்,நல்
    பெரியர்சொல் கேளாத காலம்,

தேய்வுடன் பெரியவன் சிறுமை உறு காலம்,மிகு
    சிறியவன் பெருகு காலம்,
செருவில் விட்டு ஓடினார் வரிசைபெறு காலம், வசை
    செப்புவோர்க்கு உதவு காலம்,

வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
    வாய்த்த கலி காலம், ஐயா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
    மலைமேவு குமரேசனே.              --- குமரேச சதகம்.

துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவார்,
     சொல்லும் நல் கவியை மெச்சார்,
துர்ச்சனற்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார், வரும்
     தூயரைத் தள்ளி விடுவார்,

இட்டம்உள தெய்வம் தனைக் கருதிடார், கருப்பு
     என்னிலோ போய்ப் பணிகுவார்,
ஈன்றதாய் தந்தையைச் சற்றும் மதியார், வேதை
     என்னிலோ காலில் வீழ்வார்,

நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரில்
     நன்றாகவே பேசிடார்,
நாளும் ஒப்பாரியாய் வந்த புத்து உறவுக்கு
     நன்மை பலவே செய்குவார்,

அட்டதிசை சூழ்புவியில் ஒங்கு கலி மகிமைகாண்,
     அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.           ---அறப்பளீசுர சதகம்.


எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை
     இணைஇலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியை சபையதனில்
இணைஇலாக் கரணன் என்றும்,

அழகுஅற்ற வெகுகோர ரூபத்தை உடையோனை
     அதி வடிவ மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
     ஆண்மை மிகு விசயன் என்றும்,

முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சனை
     மொழி அரிச் சந்த்ரன் என்றும்,
மூதுலகில் இவ்வண்ணம் சொல்லியே கவுராசர்
     முறைஇன்றி ஏற்பது என்னோ?

அழல்என உதித்துவரு விடம் உண்ட கண்டனே!
     அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.           --- அறப்பளீசுர சதகம்.


அருணகிரிநாதப் பெருமானும் கலிகாலத்தின் தன்மையை அற்புதமாகப் பாடி வைத்துள்ள திருப்புகழ்ப் பாடல் இதோ....

கோழை ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர், அற்பர்,
     கோது சேர் இழி குலத்தர், ...... குலமேன்மை
கூறியே நடு இருப்பர், சோறு இடார், தரும புத்ர
     கோவும் நான்என இசைப்பர் ...... மிடிஊடே

ஆழுவார், நிதிஉடைக் குபேரன் நாம் என இசைப்பர்,
     ஆசுசேர் கலியுகத்தின் ...... நெறி ஈதே.
ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு
     ளாகையா லவைய டக்க ...... வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
     ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
     ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
     வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
     வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.

பயந்த சுபாவம் உடையவராய் இருப்பினும், ஆணவம் மிகுந்த வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர்.கீழ் மக்கள். முற்றம் உள்ள இழிந்த குலத்தினர். ஆனாலும் தமது குலத்தின் பெருமையை சபை நடுவில் பேசுவார்கள். பசித்தவருக்கு மனமுவந்து அன்னம் இடாத பேர்வழிகள், தரும புத்திரன் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். வறுமை நிலையில் ஆழ்ந்து கிடந்தாலும், குபேரன் என்று தம்மையே புகழ்ந்து கொள்வார்கள்.
குற்றம் நிறைந்த கலியுகத்தின் நெறி இப்படித்தான் இருக்கிறது.


சமத்து உணர்ந்திடு மாதவர்பால் அருள் புரிவோனே ---

சமத்து --- வல்லமை, திறமை.

இருள், மருள், தெருள், அருள் என்னும் அறிவு நிலைகளில் இருள் என்பது அறியாமை மிகுந்த நிலை. மருள் என்பது அறிவு போன்று அறிவு அல்லாதவற்றைச் சிந்தித்துக் குழம்பும் நிலை. தெருள் என்பது சிந்தித்துத் தெளிகின்ற நிலை. இந்த நிலைக்கு மேல் வருவது அருள் நிலையாகும். அருள் நிலையில் விளங்குகின்ற அருந்தவர்க்கு அருள் புரிபவன் முருகப் பெருமான்.

தினைப்புனம் தனிலே மயலால், ஒரு மயில் பதம் தனிலே சரண் நான் என, திருப்புயம் தரு மோகன மானினை அணைவோனே ---

"பணி யா என வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரன்" முருகப் பெருமான்.

முருகப் பெருமான் வள்ளி நாயகியைத்
திருமணம் புரிந்த வரலாறு

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில் விளங்கும்  "திருவல்லம்" என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய "வள்ளிமலை" உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண்மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒருசார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு "வள்ளி" என்று பேரிட்டனர். உலகமாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,
சிற்றில் இழைத்தும், சிறுசோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழில் புரியும் மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை, வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, "தணியா அதிமோக தயா"வுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? நின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

"நாந்தகம் அனைய உண்கண்
     நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழை மகளிர்க்கு எல்லாம்
     இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப்
     போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
     அயன் படைத்திலன்கொல் என்றான்".    

"வார் இரும் கூந்தல் நல்லாய்,
     மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன்
     பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும்
     உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச்
     செல்வழி உரைத்தி என்றான்".

"மொழிஒன்று புகலாய் ஆயின்,
     முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின்
     விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின்,
     மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும்,
     பராமுகம் தவிர்தி என்றான்".   
    
"உலைப்படு மெழுகது என்ன
     உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல
     வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள்
     கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ
     அறுமுகன் ஆடல் எல்லாம்".

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார்.

என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா! நீங்கள் உலகம் புரக்கும் உயர்குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

"மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்".  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

"தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்".                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ, என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற்பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி,"நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

"தாய்துயில் அறிந்து, தங்கள்
     தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந்
     நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப்
     பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி
     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்".

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய சுற்றத்தாரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, "எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான்.

பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்தது, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.


சிவக் கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால  ---

சூரபதுமன் ஆதியர் புரியும் கொடுமைகளுக்கு அஞ்சி, திருமால், பிரமன், இந்திரன் முதலியோர், திருக்கயிலைக்குப் போந்து சிவபெருமானிடம், "நாங்கள் படும் துன்பத்திற்கு ஒரு மாற்றினை அருள் புரிய வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை" என்று குறையிரந்து நின்றனர். தனிப்பெருங்கருணையன் ஆன சிவபெருமான், அவர்களது குறை தீரவும், சூரபதுமனாதியோர் அழியவும், தன்னையே நிகர்க்க, ஒரு புல்வனைத் தந்து, சூரபதுமனாதியோர் மீது போர் தொடுத்து வெல்வாயாக என்று அருளினர்.

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி,
வேதமும் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீ தரல்வேண்டும், நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"  ---  கந்தபுராணம்.

க்ருபாகர ---

கிருபை --- கருணை, அருள்,

ஆகரம் --- இருப்பிடம்.

கருணைக்கு இருப்பிடமாக விளங்குபவர் முருகப் பெருமான்.

திருக்குடந்தையில் வாழ் முருகா ---

லக்கியத்தில் "குடமூக்கு" என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள "கும்பகோணம்" என்ற பெயரே உள்ளது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர் --- கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் --- மங்களாம்பிகை.
தல மரம் --- வன்னி.

திருஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு --- கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் --- நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் --- சோமேசர் கோயில்.
   
மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால், தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து, அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம் வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

கருத்துரை

முருகா! சிவயோகத்தைக் காட்டி, சிவஞானத்தைத் தந்து அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...