நிர்வசனப் பிரசங்க குருநாதா

 

 

 

நிர்வசன ப்ரசங்க குருநாதா

----

     சொல்லால் பிரசங்கம் செய்வது ஒன்று. அது எல்லோரும் செய்யக் கூடியது. எல்லோரும் கேட்கக் கூடியது. பக்குவ ஆன்மாக்களுக்கு இறைவன் குருநாதனாக மானிடச் சட்டை தாங்கி வந்து புரிவது "நிர்வசனப் பிரசங்கம்" ஆகும்.

     "வாசகம் பிறவாத ஓர் ஞான  சுக உதயம் புகல் வாசா தேசிக!" என்றும் "நிர்வசன ப்ரசங்க குருநாதா" என்றும் அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.

     "மறைபுகழ் இறை முன்னரே, மறைமுதல் பகர் உருவே" என்று பகை கடிதல் பதிகத்தில் பாம்பன் சுவாமிகள் அருளினார். வேதங்கள் எல்லாம் புகழ்கின்ற சிவபரம்பொருளுக்கே, வேதத்தின் முதற்பொருளை முருகப் பெருமான் உபதேசித்து அருளினார். சுவாமிக்கு நாதனாக இருந்ததால், முருகனை, "சுவாமிநாதன்" என்கின்றோம்.

    நினைவாலும் சொல்லாலும் உணர ஒண்ணாத பிரணவத்தின் பெருமையை, சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, சொல்ல அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தி, சொரூப அனுபூதி காட்டி அருளியவர் சிவபெருமான். அதுவே சொல்லாமல் சொன்ன நிலை. நிர்வசனப் பிரசங்கம்.

"கல்லாலின் புடை அமர்ந்து, நான்மறை, ஆறு    

     அங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த

     பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை

     இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

     நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்".            --- திருவிளையாடல் புராணம்.

 

     திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுக வள்ளல் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

     பின்னர் ஒருகால் கந்தமாதனகிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல்மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் புதல்வ! இங்கு வருகஎன்று எடுத்து அணைத்து, உச்சி மோந்து, முதுகு தைவந்து, குமரா! உனது பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய உன்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் குமரநாயகனை நோக்கி, அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமை காரணமாகவோ, உரிமைக் குறித்தோ நட்புப் பூண்டவர் இடத்தில் பிழைகள் தோன்றுதல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்யார். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையாலும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால், பிரமதேவனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்என்று எம்பிரானார் இனிது கூறினர்.

     எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர். (தகுதி இல்லாதவருக்குத் தலைமைப் பொறுப்பை வழங்குதல் இவ்வாறுதான் முடியும். பொருள் அறியாது ஓதுவதை வி, பொருள் அறிந்து ஓதுவது நன்மை தரும்.)

     சிவபெருமான் மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் சொல்லவல்லேன்என்றனர்.

     சிவபெருமான் கேட்டு செல்வக் குமரா! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் திருத்தணிகை மலையை அடைகின்றோம்என்று கணங்களுடன் புறப்பட்டு திருத்தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

     குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கக்கூடியது என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்தி தரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகை மலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

     கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு மாணவ பாவகமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.     

               என்று தணிகைப் புராணம் கூறும்.

 

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

ஞான வார்த்தை அருளிய பெருமாளே --- திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப் பொருள்தான் --- கந்தர்அநுபூதி

 

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

 

     பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால், சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

     தேவதேவன் அத்தகைய பெருமான். மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.   

 

என்று தணிகைப் புராணம் கூறும்.

 

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,

     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,

     எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,

     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!

     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

     அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.

 

சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.      --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

  

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு  செய்தே.

                                                                        --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.                                                                                                   --- சிவஞான சித்தியார்.

 

****ஜயா தகப்பன் சாமி என முருகன் நிலைகொண்டது சுவாமி மலை தலம் என்கிறார்களே தணிகையில் தான் உபதேசமா ஜயா!***

 

இன்றைய பதிவு பற்றி, இவ்வாறு ஒரு அன்பர் கேட்டிருந்தார்.

 

இதற்கு விளக்கம் வருமாறு.....

 

இந்த நிகழ்வு மட்டுமல்ல. பல நிகழ்வுகளும் இந்தப் பூமியில் நிகழ்ந்ததாகச் சில தலங்கள் குறிக்கப்படுகின்றன.

 

சிவபெருமான் முப்புர தகனம் செய்தது விண்ணுலகில். ஆனால், திருவதிகையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.

 

காம தகனம் நிகழ்ந்தது, திருக்கயிலாயத்தில் சிவபெருமான் திருமுன்னிலையில். திருக்கயிலாயம் என்பது, இப்போது நம்மவர் சொல்லுகின்ற கயிலாயம் அல்ல. அது பூகயிலாயம். உண்மையான கயிலாயம் உணர்வுக்கு மட்டுமே எட்டக் கூடியது. ஆனால், காம தகனம், திருக்குறுக்கை வீரட்டம் என்னும் திருத்தலத்தில் நிகழ்ந்ததாக எண்ணப்படுகின்றது. 

 

இது போலவே, சிவபெருமான் புரிந்த மற்ற வீரச் செயல்களும்.

 

சிவபெருமானைத் தம் நலத்தின் பொருட்டாயினும், பிறர் நலத்தின் பொருட்டாயினும் வழிபடக் கருதும் நல்லோர், அப் பெருமானது அருள் வரலாறுகளுள், தாம் கருதிய பயனுக்கு ஏற்புடைய வரலாற்றை நினைந்து, அவனை அச் செயல்களைச் செய்தவனாகவும், அப் பெயரை உடையவனாகவும் கருதி, இலிங்கம் நிறுவி வழிபடுவர். அதனால், அவ் வரலாறுகள் நிகழ்ந்த இடம் அவையே ஆக எண்ணப்படும். இதுவே தலபுராணங்களின் உண்மை.

 

பிரமதேவனை, முருகப் பெருமான் சிறையிட்ட நிகழ்வு திருக்கயிலாயத்தில். பிரமனைச் சிறையிட்டு, படைப்புத் தொழிலையும் முருகனே நிகழ்த்தியதாகவும், மாலயனாதி தேவர்கள் வேண்ட, சிவபெருமான் ஆணைப்படி, முருகன் பிரமனை சிறை விடுத்ததாகவும், சிவபெருமான், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமோ என்று முருகனைப் பார்த்துக் கேட்க, உரிய முறையில் குருவுபதேசமாக, அதனை முருகன் சிவபெருமானுக்கு உரைத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

 

இவை எல்லாம் நடந்தது இந்தப் பூலோகத்தில் அல்ல.

 

திருவேரகம் என்னும் சுவாமிமலையில், சுவாமிநாதனாக முருகன் எழுந்தருளி உள்ளான் என்பர் ஒரு சிலர். இல்லை இல்லை. பிரண உபதேசம் இங்குதான் என்பர் ஒரு சிலர். திருத்தணிகை மலைக்கு ஏற்றம் கற்பிக்க வந்து, திருத்தணிகையில் நிகழ்ந்தது என்பதும் உண்டு.

 

புராணங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டுத் தான் பேசும். அவற்றின் கருத்தை அப்படியே கொள்ளுதல் கூடாது. உட்பொருளை மட்டுமே கொள்ளுதல் வேண்டும்.

 

மணிவாசகப் பெருமான் வரலாற்றைக் கூறவந்த ஆறு நூல்களும், ஒன்றுக்கு ஒன்று மாறுப்பட்டுதான் பேசுகின்றன.

 

திருமால் சிவபெருமானை வழிபட்டதாக, சில தலங்கள் சொல்லப்படுகின்றன. எந்த தலத்தில் வழிபட்டார் என்றும் யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எல்லாம் பாவனை தான். அவரவர், அவரவர் விரும்பும் தலத்திற்கு ஏற்றம் கற்பிப்பது இயல்பு. இதனை உணர்ந்து நாம்தான் தெளிவு பெறவேண்டும்.

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...