ஆடு தழை தின்றாற் போல்.....

 

 

ஆடு தழை தின்றாற் போல்......

----

     ஆடு தழைகளை மேய்ந்து தின்னும். மேய்வது சீராக இராது என்பதால் தான் மேய்ப்பதற்கு ஒருவன் தேவைப்படுகின்றான். ஒரு செடியில் உள்ள தழைகளை முழுமையாகத் தின்னாமல், கொஞ்சம் தின்று விட்டு, அடுத்த செடிக்குத் தாவும். கீழே எட்டும் நிலையில் உள்ள தழையைத் தின்னாமல், கால்களை நீட்டி, உயரத்தில் உள்ள தழைகளை எட்டித் தின்னும். இங்கே கொஞ்சம் தின்னும், இங்கே கொஞ்சம் தின்னும். தேவையற்ற இடத்திற்கும் செல்ல முற்படும். தழை ஆட்டின் வளர்ச்சிக்குத் தேவையானது என்பதால் அது உள்ள இடத்தை நாடி, அதன் விருப்பம் போல் செல்லும்.

 

     கல்வி, கேள்வி என்பது மனிதனுக்கு அறிவு வளர்ச்சிக்குத் தேவையானது. இளமையிலேயே கல்வி கற்கச் செல்லும்போது, அதில் நாட்டம் இல்லாமல் வகுப்பறையில் இருப்பதும், வகுப்பிற்குச் செல்லாமல், விருப்பம் போல் சுற்றித் திரிவதும் உண்டு. அது ஆன்மாவின் இயல்பு. எதில் நாட்டம் உள்ளதோ, அதையே விரும்பும். எது தேவையோ அதை விரும்பாது. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது போல், இந்தப் பழக்கம் பலருக்கும் இறுதி வரையில் இருக்கும்.

 

     People want hear only what they want. They don't want to hear what is needed for them. It's not uncommon for these characteristics to outweigh reason itself. This is why, they say we only hear what we want to hear. This is due to selective attention and its functioning. It consists of only focusing on determined aspects, leaving the other ones aside, especially when it comes to opinions and beliefs.

 

     காதால் கேட்பது வேறு. உள்வாங்குவது வேறு. உள்வாங்காமல் கற்பதால், கேட்பதால், கற்றதும் கேட்டதும் பயனில்லாமல் போய்விடுகின்றது.

     Listening is when you allow other people's words to go into your ears. Hearing is when you allow their words to go into your heart. You can listen without hearing, but you can't hear without listening.

 

    இந்த இழிநிலைக்கு மிக இரங்கி, தாயுமான அடிகளார், "கன்று மனத்துடன் ஆடு தழைதின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே" என்றும்,  "இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" பாடி வருந்தினார். நம்மில் சிலரும் பாடுகின்றோம். ஆனால், பொருள் உணர்ந்து வருந்தி, திருந்துவது இல்லை.

 

     ஒன்றில் விருப்பம் வந்து விட்டால், திரும்பத் திரும்ப அதையே கேட்கின்றோம், கற்கின்றோம். சிலநாளில், வேறு ஒன்றில் விருப்பம் வந்து விட்டாலும் அப்படியே. இன்று திருவாசகம், நாளை தேவாரம், மறுநாள், திருப்புகழ், மறுநாள் இராமாயணம், பாரதம், இன்ன பிற. இப்படி இங்கும் இங்குமாக, இவர் நன்றாகச் சொல்லுகின்றார். இவர் சொல்வது நன்றாக இல்லை. இவர் நன்றாகப் பாடுகின்றார். அவர் அப்படி இல்லை. கந்தர் சஷ்டி வந்துவிட்டால் திருச்செந்தூர். தைப்பூசம் வந்துவிட்டால், பழநி, ஆடிக் கிருத்திகை வந்துவிட்டால் திருத்தணிகை. எத்தனை சூரசம்மாரம் கழிந்தது? எத்தனை பூசம் கழிந்தது? எத்தனை கிருத்திகை கழிந்தது? எத்தனை சிவராத்திரி வந்தது? எத்தனை நவராத்திரி வந்தது?  என்ன விளங்கியது?

 

     கங்கையில் நீராடினால் புண்ணியம் என்றனர். ஓடினோம் கங்கைக்கு. "கங்கையில் புனிதமாய காவிரி" என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடினார் என்றும், "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி ஒடும் மாகாவிரி" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடினார் என்றும் படித்தும் கேட்டும், "கங்கா நதியே அதிகம், அதன் கன்மம் தொலைக்கும் காவிரியே மங்கா அதிகம்" என்று சோழமண்டல சதகம் கூறியது எனக் கேட்டும், "ஐயோ நமக்கு அருகில் உள்ள காவிரியை மறந்தோமே" என்று மனம் வருந்தி, காவிரியில் நீராட ஓடினோம். இன்னும் பலப்பல தீர்த்தங்களை நாடினோம். சில தீர்த்தங்கள் இன்று வற்றியே போய்விட்டன. "ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது போல், தீர்த்த வடிவிலே, எல்லா தீர்த்தங்களிலும் எங்கும் உள்ளான் என்றும், "உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள், மெல்லக் குடைந்து நீராடார் வினைகெட" என்று திருமூல நாயனார் அருளியதையும் பலகாலும் கற்றும், கேட்டும் உள்ளோம். ஆடு தழை தின்றாற் போலத் தானே ஆனது. இற்றை நாள் வரை நாம் கற்றதும், கேட்டதும் அவலமாகத் தானே போனது.

 

     ஆடு தழை தின்றது போன்ற நிலையை விளக்கி, மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் ஒரு பாடலை அருளி உள்ளார்.

 

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்று, இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்து ஏதும் இல்லாது, ன் பற்று அற, நான் பற்றிநின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.

 

இதன் பொருள் ---

 

     கோத்தும்பீ --- அரச வண்டே! அவர் தேவர் --- அவரே கடவுள், அத் தேவர் தேவர் --- அவரே அந்தத் தேவர்களுக்கு எல்லாம் தேவர், என்று --- என்று, இங்ஙன் --- இவ்வாறு, பொய்த் தேவு பேசி --- கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து, புலம்புகின்ற --- பிதற்றுகின்ற, பூதலத்தே --- பூலோகத்தில், பத்து ஏதும் இல்லாது --- உலகப் பற்று சிறிதும் இன்றி, என் பற்று அற --- என்னுடைய பற்றுகள் அறும்படி, நான் பற்றி நின்ற --- நான் பற்றிக் கொண்டிருக்கிற, மெய்த் தேவர் தேவர்க்கே --- உண்மையாகிய தேவர் பிரானிடத்தே, சென்று ஊதாய் --- போய் ஊதுவாயாக.

 

         சிவபிரான் ஒருவனைத் தவிர ஏனையோரைப் பரம்பொருள் என்றல், உபசாரம். உண்மை அல்ல என்பதால், ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார். உலகப் பற்றை விடுதற்கு இறைவனது பற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், ‘பத்து ஏதும் இல்லாது என் பற்று  , நான் பற்றி நின்ற மெய்த் தேவர்’ என்றார், ‘பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற திருவள்ளுவநாயனார் அருள் வாக்கையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.

 

     "நவில் தொறும் நூல் நயம்" என்றார் திருவள்ளுவ நாயனார். நூல் நயம் விளங்கவில்லை என்றால், ஆடு தழை தின்றது போல் ஆனது என்பது பொருள். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்றார் மணிவாகப் பெருமான். சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லுபவர் அருட்செல்வத்தை உடையவர். அவர் "சிவபுரத்தின் உள்ளார்" என்றார். சிவபுரம் என்றது, நாம் அனுபவிக்கும் பேரின்பத்தை. இந்த உடலோடு கூடி இருக்கும் காலத்திலேயே அழியாத இன்பத்தை அனுபவிக்க முடியும்.

 

     ஆடு தழை தின்றது போல், அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல், ஏதாவது ஒரு நூலை முழுமையாகக் கற்றுத் தெளிய வேண்டும். நல்லாசிரியர் ஒருவரை நாடவேண்டும். இன்று ஒரு குரு. நாளை ஒரு குரு என்று ஆடு தழை தின்றது போல், வன்று விட்டு வன்று பற்றுதல் கூடாது. பரம்பொருள் எது என்று தெளிந்து, அதனிடத்திலேயே பற்றினை வைத்து, மற்ற பற்றுக்களை உதறித் தள்ளவேண்டும். ஒன்றை விட்டால் தான் ஒன்றைப் பெறமுடியும். அறியாமை அகன்றால் அறிவு தலைப்படும். ஒளி கண்டால் இருள் ஓடும். முதலை வைத்துத் தான் இலாபத்தைப் பெறமுடியும். "முதல் இல்லார்க்கு ஊதியம் இல்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆடுதழை தின்றது போல், கடவுள் வழிபாடும் அமைதல் கூடாது.

 

     ஐந்து வயதுக் குழந்தைக்குத் திருக்குறளைச் சொல்லித் தரமுடியாது. அதை வாங்கிக் கொள்வதற்கேற்ற அறிவுத் திறன், அதாவது பக்குவம், அக் குழந்தைக்கு அப்பொழுது இல்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கின்ற அளவுக்குத் தான் அதன் அறிவு நிலை உள்ளது. அதன் அறிவு நிலை படிப்படியாக வளர்ந்த பிற்பாடுதான் நுண்ணிய நூல்களைக் கற்க முடிகின்றது. மாணர்கள் ஒரே திருக்குறளைத் தான் கீழ் வகுப்பிலும் பயில்கின்றனர். இளங்கலை வகுப்பிலும் பயில்கின்றனர். முதுகலை வகுப்பிலும் பயில்கின்றனர். மேல் மேல் வகுப்புகளில் செல்லச் செல்ல, திருக்குறளின் பொருள் மேல் மேல் விளக்கம் அடைகிறது. அதனை நுணுகி உணர முடிகிறது. மாணாக்கரின் அறிவுநிலை படிப்படியாக நுணுகிச் செல்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அறிவு நுணுக்கமே பக்குவம் எனப்படுவது.

 

     உலகியல் கல்விக்கே தகுதி வேண்டுமானால், மெய்ப்பொருளை உணர்தலாகிய ஞானத்தைப் பெறுவதற்குப் பக்குவம் வேண்டும் என்பது விளங்கும். உயிரின் அறிவை அறியாமையுள் படுத்தி மயங்கச் செய்வது ஆணவமலம். ஆணவமலம் வன்மையாய் உள்ள வரையில் அது உயிரறிவை நுணுகிச் செல்லவிடாது, பருப்பொருளாகிய உலகத்தையே நோக்கும்படி செய்யும். அந்த ஆணவ மலம் தேய்ந்து தேய்ந்து வரும்போதுதான் உயிரறிவு படிப்படியே அறியாமையிலிருந்து விடுபடும். அதிலிருந்து விடுபட விடுபட, உயிரறிவு நுணுகி நுணுகிச் செல்லும்.  நுண் பொருளாகிய இறைவனை உணரும் செவ்வியை எய்தும். அந்நிலையில் உலகத்தை நோக்காது இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும்.

 

     "ஓதுவது ஓழியேல்" என்பது முதல் நூலாகிய ஆத்திசூடி. அதன் விளக்கமாக, "ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்" என்றது கொன்றைவேந்தன்.

 

     ஓதுவதைப் பொருள் உணர்ந்து ஓதவேண்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோல் காலம் முழுதும் இருத்தல் பயன் தராது. வயது ஏற ஏ, அறிவு விளக்கம் பெறவேண்டும். அறிவு விளக்கம் பெற்றால் அறியாமை நீங்கும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...