இனநலம் எல்லாப் புகழும் தரும்

 

 

இனநலம் எல்லாப் புகழும் தரும்

-----

 

     பனைமரத்தில் இருந்து, அது தருகின்ற நீரை இறக்குகின்றார்கள். அதில் சிறிது சுண்ணாம்பு கலந்தால், பருகுவதற்கு இனிய சுவையினை உடையதாய், உடலுக்கு நலம் தருவதாய் உள்ள "பதநீர்" ஆகின்றது. நலம் விரும்புவோர் யாவரும் அதனைப் பருகலாம்.

 

     சுண்ணாம்பு தோயாத நீரானது, புளித்துப் போய், கள் ஆக மாறுகின்றது. அதனைக் குடித்தால் அறிவு மயக்கம் கொள்ளுகின்றது. உடல் நலத்தை நாளடைவில் குலைக்கின்றது. கள்ளைப் பருகுபவனுக்கு மட்டுமல்லாமல், அவனது குடிக்கும் கேடு தருகின்றது. அவனைச் சார்ந்தோர்க்கும் துன்பத்தை விளைக்கின்றது.

 

     பதநீர் எல்லோராலும் விரும்பப்படுகின்றது. கள் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது.

 

     பதநீர், பின்பு பனைவெல்லமாகவும், பனங்கற்கண்டாகவும் மாறி எல்லோர்க்கும் நலம் தந்து உதவுகின்றது. கள்ளானது இழிந்து கழிந்து பின்னர் ஒரு தொடர்பும் இன்றி அடியாடு அழி ந்து போகின்றது.

 

     அதுபோலவே, ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களானாலும், சத்துவ குணம் உடைய உத்தமரைச் சார்ந்து இருக்கின்ற பிள்ளை, நல்லவனாகின்றான். நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்து, இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றெடுக்க, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? (என் நோற்றான் கொல்?) என்று எல்லோரும் புகழும்படியாக (தனது பருவுடலை நீத்த பின்னும்) நல்லோர் மனதில் எக்காலத்தும் வாழுகின்றான்.

 

     நல்லோரைச் சாராதவன், அப்பொழுதில் இருந்தே பொல்லாதவனாக மாறி, தானும் பயனுற வாழாமல் போகின்றான், தன்னைச் சார்ந்தோரையும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றான். சந்ததியும் சீராக இல்லாமல் போகின்றது. "தக்கார் தகவு இலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிதல் வேண்டும்.

 

     "தருமதீபிகை" என்னும் நூலில், இக் கருத்தைத் தாங்கி வரும் பாடல் ஒன்றைக் காண்போம்...

 

"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தார் ஏனும்,

பெரியார் நட்பு உற்றார் பெரியார் --- பெரியார்நட்பு

இல்லரேல் புல்லரே, இன்பனைநீர் சுண்ணம் உறின்

நல்லது, இன்றேல் பொல்லதாம் நாடு".

 

     பனைமரம் தாய்க்கு ஒப்பு. அதன் நீர் பிள்ளைக்கு ஒப்பு. வெண்ணிறச் சுண்ணம், தூய உள்ளம் படைத்த சான்றோர்க்கு ஒப்பு. பதநீர் நல்ல பிள்ளைக்கு ஒப்பு. கள் இழிந்த பிள்ளைக்கு ஒப்பு.

 

"கள்ளும், பொய்யும், காமமும், கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை"

 

என்று மணிமேகலை கூறும்.

 

கள், திருநீக்கப்பட்டார் தொடர்புகள் மூன்றில் ஒன்று என்று திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

 

நல்லோர் சேர்க்கை நலத்தை விளைக்கும். தீயோர் சேர்க்கை தீமையை விளைக்கும்.

 

"தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுகவல்லானை,

செற்றார் செயக் கிடந்தது இல்"

 

என்பது திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

யோகமுனி ராகவனை உற்று,அரக்கர் போர்களைந்தே

யாகம் முடித்தான், இரங்கேசா! --- ஆகையால்

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்.

 

இதன் பொருள் ---     

 

         இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! யோகமுனி --- இராஜயோக சாதக மாமுவனிவராகிய விசுவாமித்திரர், ராகவனை உற்று --- இராம பிரானைத் துணையாகப் பெற்று, அரக்கர் போர் களைந்து --- மாரீசன் சுவாகு என்னும் அசுரர் சண்டையை நீக்கி, யாகம் முடித்தான் --- தாம் தொடங்கின யாகத்தை நிறைவேற்றிக் கொண்டார்,  (ஆகையால், இது) தக்கார் இனத்தனாய் --- மேலாரோடு சேர்ந்து கொண்டவன் ஆகி, தான் ஒழுக வல்லானை --- (ஒருவன்) தான் தக்கபடி நடந்துகொள்ள வல்லவனானால் (அவனை), செற்றார் --- பகைவர், செயக் கிடந்தது இல் --- செய்யக் கூடியதாகிய தீங்கு ஒன்றும் இல்லை (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- பெரியாரைச் சேர்ந்தாரைப் பகைவர் அஞ்சுவார்கள்.

 

         விளக்கவுரை --- விசுவாமித்திரர் இராமபிரானைத் துணையாகக் கொண்டுபோய்த் தமக்கு முதற்பகையாகிய தாடகையைக் கொல்வித்து, பிறகு யாகபங்கம் செய்த தாடகையின் மக்களாகிய மாரீசன், சுவாகு என்பவரில் முன்னவனை வெருட்டித் துரத்திக் கடலில் இடுவித்து, பின்னவனை ஓரே அம்பால் இயமபுரம் சேர்ப்பித்தார். பிறகு அவர் தமது யாகத்தை இடையூறு இன்றி முடித்து,  "உதவி வரைத்து அன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்றபடி,  இராமபிரான் தமக்குச் செய்த உதவிக்கு மாறுதவியாக, அவர்க்குத் தெய்வ வாளிகள் வழங்கி, அவரை அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குப் போய், சிவ வில்லை வளைப்பித்துச் சீதையைத் திருமணம் செய்வித்தார்.   

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...                     

 

சிறியர் ஆயினார் சார்பினை விழையன்மின்,

     திறல்கெழு பெரியோராம்,

அறிஞர் ஆயினார் சார்பினை விழைமினோ,

     அலர் இதழ் விரிகொன்றை,

வெறி நறுந்தொடை எம்பிரான் சார்பினை

     விழைதலால், உரகங்கள்

மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின

     வாழ்ந்தனையோ என்ன.   --- காஞ்சிப் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     சிறியராவார் சார்பினை விரும்பாது இருங்கள் வலிமை பொருந்திய பெரியோர் ஆகும் அறிஞர் தொடர்பினை விரும்பி இருங்கள். இதழ் அலர்ந்து விரிகின்ற கொன்றையின் நறுமணங்கமழும் மாலையை அணிந்த எமது சிவபெருமான் சார்பினை விரும்பி இருந்த பாம்புகள், குற்றமற்ற வலிமை நிரம்பிய கருடனை நன்றாக உள்ளாயா?' என்ன வினாவின.

 

 

ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்

ஏன் பிள்ளாய்! கருடா! நீசுகமோ? என்று

      உரைத்தவிதம் என்னல் ஆமே!

 

என்பது "தண்டலையார் சதகம்".

 

இதன் பொருள் ---

 

     பிள்ளாய் ஆம் எனக் கொடுக்கும் பெரியோரை அடுத்தவர்கள் --- இளைஞனே! முடியும் என்று அளிக்கும் சான்றோரைச் சார்ந்தவர்கள், பிள்ளாய்! அவனிக்கெல்லாம் நாம் அதிகம் என்பர் --- இளைஞனே, உலகிலே நாமே சிறப்புடையேம் என்று  நடந்து கொள்வர்!, நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார் --- பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர், பிள்ளாய் வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் --- பிள்ளாய்! வானமே எனும் எங்கும் நிறைந்த மேனியை உடைய தண்டலையாரின் அணிகலனாக வளர்க்கப் பெற்ற பாம்பு, ஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோ? என்று உரைத்தவிதம் என்னலாமே --- ‘என்ன பிள்ளாய்! கருடனே? நீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

 

           கருடனைக் கண்டால் பாம்பு நடுங்குவது இயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால், கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தால் சுகம்' என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும்.

 

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...