பிச்சை எடுப்போர் யார்? எடுக்கப் போவோர் யார்?

 

இன்று பிசை எடுப்பவர் யார்?

நாளை பிச்சை எடுக்கப் போகின்றவர் யார்?

------

 

     "விவேக சிந்தாமணி" என்னும் பழம்பெரும் நூலில் இருந்து ஒரு பாடல் வழியாக மேற்குறித்த வினாக்களுக்கு விடைகாணப் போகின்றோம்.

 

     இந்த நூலை இயற்றியவர் யார் என்பது விளங்கவில்லை. இந் நூலில் நீதி புகட்டும் பாடல்கள் உள்ளன. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்நூலில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்வது, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வழக்கமாய் இருந்தது. எழுத்தறிவு இல்லாதவர்கள் கூடப் பிறர் சொல்லக் கேட்டு மனப்பாடமாகச் செய்து கொண்டவர்களை நான் அறிவேன். நாளடைவில் நல்ல நூல்கள் வெளிவருவதும் அருகிவிட்டது. மனப்பாடம் செய்யும் பழக்கமும் குறைந்து போனது.

 

     சிறு வயதில் எனது ஊர்ப் பெரியவர்கள் சிலர் சொல்லக் கேட்டது முதல், இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனால், பலருக்கும் அவர்கள் சொல்லுகின்ற பாடல் எந்த நூலில் உள்ளது என்று தெரியாது. சிறிய கிராமம். ஏழ்மை நிலை. நூலைத் தேடுபவர்களும் மிகச் சிலரே. எனவே, வாய்ப்புக் கிட்டவில்லை. 1967-ல் நான் சென்னைக்குப் பிழைப்புக்காக வந்தபோது, தெரு ஓரங்களில் உள்ள பழைய நூல்களில் தேடுவேன். இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், 19139 - ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த "விவேக சிந்தாமணி" என்னும் நூலும் "பட்டினத்தார் பாடல்" நூலும் கிடைத்தது. இரண்டையும் விலை பேசியபோது, கடைக்காரர் என்னைப் பார்த்து, "இந்த சின்ன வயதில் இந்தப் புத்தகங்கள் உனக்கா அல்லது வேறு யாருக்காகவா?" என்று கேட்டார். "எனக்குத்தான்" என்றேன். "விற்காமல் கிடந்த இந்தப் புத்தகங்கள் இரண்டும் உன்னால் விலை போகின்றது. பட்டினத்தார் பாடல் புத்தகத்திற்கு மட்டும் விலை கொடு. விவேக சிந்தாமணிக்கு விலை இல்லை" என்று, அன்போடு எனது முதுகைத் தட்டிக் கொடுத்தார். அவ்வப்போது நூல்களைப் படித்து வருவேன்.

 

     நிற், சென்னை, சைதாப்பேட்டையில், காரணீசுவரர் தேரடிக்கு அருகில் "கௌரி நிவாஸ்" என்று ஒரு உணவகம். அது இன்றும் உள்ளது. அந்த உணவகத்தில், 1970-க்கு முன்னர் ஒரு நாள், சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே, இந்த நூலை நான் படிப்பதை, அதன் நிறுவனர் திரு. பழநி முதலியார் பார்த்தார். "என்னப்பா, இந்த வயதில் இதைப் படிக்கிறாய்" என்றார். "எனக்குப் பிடித்தது" என்றேன். மேலாளரை அழைத்து, "இந்தப் பையன் இனி வந்தால், காசு வாங்காமல், அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பா" என்றார். அன்று காசு வாங்கவில்லை. அரைப்பட்டினி, கால்பட்டினி கிடந்த எனக்கு அது நல்லதுதான். இருந்தாலும், எனது மனம் இசையவில்லை. அவருக்கு நன்றி சொல்லி வந்த, மறுநாள் முதல் அங்கு செல்வது இல்லை. என்றாவது வழியில் பார்த்தால், நலம் விசாரிப்பார். வாழ்த்துவார். பழம்பெரும் நூல்களுக்கு அவ்வளவு மரியாதை அப்போது. இன்றைய நிலை வேறு. நல்ல நூல்களுக்கு அன்று இருந்து மதிப்பும் மரியாதையுமே சிறப்பு.

 

     அற்புதமான "விவேக சிந்தாமணி" என்னும் நூலில் மேற்குறித்த வினாவிற்கு விடை பகரும் பாடலைப் பார்ப்போம்...

 

"மண்ணார் சட்டி கரத்து ஏந்தி,

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை

     அறிந்தோம், அறிந்தோம், அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு

     உதவா மாந்தர் இவர்தாமே!"

 

இதன் பொருள் ---

 

     களிமண்ணால் செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக்  கையில் எடுத்துக் கொண்டு, கோபம் பொருந்திய தெரு நாய்கள், தங்களின் கோர வடிவத்தைக் கண்டு, குரைத்துக் கொண்டு வந்து கடிபத்தற்குப் பாய்கின்ற கால்களை உடையவர்களாய், வீதிகள் தோறும் சென்று, தலையினை உயர்த்திப் பார்த்து, பசியினால் வாடி, யாராவது தமக்குத் தருவார்களா என்று ஏக்கமுற்று, இரந்து நிற்போரை இன்னார் என யாம் அடையாளம் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம். ம்ம, அம்மா!, இவர் யார் என்றால், முற்பிறவியில் இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர், பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தமக்கு ஊட்ட, உண்டுகொண்டு இருந்த காலத்தில், முன் சொன்னது போல பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கும், (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் தான் இவர்.

 

     எவ்வளவு அருமையான பாடல். மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருக்கவேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு ஆகும். உயிர் அறிவு உள்ளவன் என்றால், பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்கமாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாதபோது, ஒருவன் செல்வத்தில் மிதந்து கொண்டு இருப்பதோடு, நூல்களைக் கற்று இருந்தாலும் பயனில்லை.  

 

     "அறிவினால் ஆவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போற்றாக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார். பசி என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. பிறர் பசியால் துன்புறுவதைக் கண்டும், அவர் துடிப்பதைக் கேட்டும், உதவ வேண்டும் என்ற எண்ணம் வராவிட்டால், அவன் படைத்த செல்வத்தால் என்ன பயன்? அவன் கற்ற நூல்களின் அறிவால் என்ன பயன்? "நீடிய பசியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உள்ளம் பதைத்தேன்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     பசியினால் துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதே, இந்த உடம்பைக் கொண்டு, உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவி அவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

 

அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.        --- திருக்குறள்.

 

     செல்வத்தை நிரம்பப் படைத்தவன், அதனைச் சேமித்து வைக்கும் இடமே பசித்தவர் வயிறுதான்.

 

     யாராய் இருந்தாலும், தாம் உண்ணுகின்ற வெந்த சோற்றில் ஒரு கைப்பிடியாவது பசித்தவர்க்குக் கொடுத்து உதவவேண்டும் "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     எனவே, இன்று பிச்சை எடுப்பவர் யார் என்றால், முற்பிறவியில் பசித்தவர்க்கு, தாம் உண்ணுகின்ற அன்னத்தில் ஒரு பிடியாவது கொடுத்து உதவாதவர்தான். எனில், இன்று பசித்தோர்க்கு அன்னமிடாதவர் மறுபிறவியில், பிச்சை எடுக்கவேண்டி வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

     மாடமாளிகை, பொன் பொருள் எல்லாவற்றிலும் மிதந்து கொண்டு இருப்பர். ஒன்றும் இல்லாத வறுமையில் உள்ளவர், அதுவும் தவத்தைப் புரிபவர் ஒருவர், பசிக்கு உணவு என்று தமது வாயிலில் வந்து நின்று, "ஐயா, சிறிது அன்னம் படையும்" என்று கேட்டவுடன், மிகவும் தாராளமாக "மேல் வீட்டில் போய்க் கேள், கீழ் வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர். அவ் இரவலன் பசி பொறுக்கமாட்டாமல், "ஐயா! எல்லா இடங்களிலும் கேட்டேன், ஒன்றும் கிடைக்கவில்லை. பசி மிகவும் வாட்டுகிறது. ஏதாவது கொடுங்கள்" என்று கூறி சிறிது படி ஏறி, வீட்டிற்குள் நுழைய முயலுமுன், அவனது எதிரில் முடுகிப் போய், நாய்போல் சீறி விழுந்து விரட்டி அடிப்பர். ஆனால், வீணாக வாழ்நாளைக் கழித்து விணாகப் போகின்றவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்வர். இவர்கள் படைத்துள்ள செல்வம் எல்லாம் ஒருநாளில் வற்றிப் போய்விடும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,

     மேலை வீடுகேள், கீழை வீடுகேள்,

     திடுதிடு என நுழைவதன்முன், எதிர்முடுகி, அவர்களொடு

சீறி, ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,

     விரகினொடு வருபொருள்கள் சுவறிஇட,மொழியும்ஒரு

     வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா, ......                                                                      விதிதனை நினையாதே"                                          --- திருப்புகழ்.

 

     பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போது, அப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு, திகைத்து, உடல் மெலிந்து, மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே இவர் ஆவர் என்றும் பாடுகின்றார், அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில்.

 

"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்

பாடிக் கசிந்து, உள்ளபோதே கொடாதவர், பாதகத்தால்

தேடிப்புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து

வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே".

 

     "செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவர்" என்று இந்தக் கயவர்களை அடையாளம் காட்டுகின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

     , எதிர்காலத்தில் பிச்சை எடுக்கப் போகின்றவர்க்கு உள்ள அடையாளம் காட்டப்பட்டது.

 

     இனி, இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானவர் யார் என்று பட்டினத்தடிகள் காட்டுவதைப் பார்ப்போம்.

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றாவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே"

 

இதன் பொருள் ---

 

     கங்கை நதியுடன் தும்பை மலரையும் தரித்து, ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானைத் துதிக்காதவர்க்கு இந்த உலகத்தில் அடையாளம் உண்டு. (அது என்னவென்றால்), இந்தப் பூமியில் சோற்று வாசனை ஒழிந்து, சுகம் ஒழிந்து, அரையில் உடுத்துக் கொள்ள ஆடையும் இல்லாமல், யாசித்தாலும் பிச்சை கிடைக்காமல் ஏக்கத்தோடு இருப்பார்கள்.

 

     "மண்ணினில் பிறந்தார் பெறும்பயன், மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில். இந்த அமுத வாசகம்தான், திருக்கோயில்களில் இன்று நற்பகலில் அன்னம் பாலிப்புச் செய்யும் நற்செயலுக்கு ஊக்கமாக அமைந்தது. ஆக, இந்தப் பிறவி எடுத்ததன் பயனே, பசியால் வாடுவோர்க்கு சோறு படைத்து வாழ்வதற்கே.

 

     பசித்தோர்க்கு சோறு இட்டோர்க்கு, சோறு வாய்க்கும். சோறு என்னும் சொல்லுக்கு அன்னம், திருவடிப் பேறு என்று பொருள் உண்டு. "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.

 

     இதைப் பட்டினத்தடிகள் நெஞ்சறிவுறுத்தலாக, நமக்கு அறிவுறுத்தம் பாடலைக் காண்க..

                                        

"அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்

சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,

பொன்னும், மனையும், எழில்பூவையரும், வாழ்வும் இவை

இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே".

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! நீ உண்ணுகின்ற அன்னத்தை, ஆதரவு அற்று, வயிற்றுப் பசி தீர்க்க சோற்றுக்காக அலைபவர்க்கு, பகிர்ந்து அளித்து உதவி, பின் உண்ணுகின்றதற்காக இந்தப் பிறவியை எடுத்தும், (அவ்வாறு ஓர் அற்புதமான பிறவியைத் தந்த) சிவபரமெபொருளின் திருவருளைப் போற்றாமல், பொன்னையும், மண்ணையும், அழகு வாய்ந்த பெண்ணையும், இவற்றால் உண்டாகும் போகத்தையுமே இன்னும் கூடச் சதம் என்று நினைத்து இருக்கின்றாயே.

 

"முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம்,

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது, பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை செய்யாமல்,

கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே".

 

இதன் பொருள் ---

 

     பாழான நெஞ்சமே! பூர்வ சென்மங்களில் செய்து வைத்த புண்ணியத்தின் பலனாக, உனக்கு இப் பிறவியில் அனுபவிக்க நேர்ந்தது உனக்கு வாய்த்த ஐசுவரியாமானது என்று நினையாது, தரித்திரர்க்கும் கொடுக்காமல், சிவபூசையும் செய்யாமல், கற்ற பெரியோர்க்கும் கொடுத்து உதவாமல், செல்வச் செருக்கால் அறிவற்று வாழ்கின்றாயே.

 

"நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயம் என்றே எண்ணி,

பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்,

போர்க்குள் எமதூதன் பிடித்து இழுக்கும் அப்போது

ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே".

 

இதன் பொருள் ---

 

     ஏ மனமே! நீரில் உண்டாகிய குமிழியை ஒத்த வாழ்வை உண்மை எனக் கருதி, ஒரு பாக்கு அளவாகிய அன்னமும் பசித்தவர்க்குக் கொடாமல், தொண்டையில் கபம் கொட்டிக் கொண்டு துன்புறுத்தும் காலத்தில், இயமதூதர்கள் உயிரைக் கட்டிக் கொண்டு போகும்போது, யார் உதவ வருவார்? என்று தெரிந்து கொண்டாய் இல்லையே.

 

"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்

தருபிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்

இரு, பிடிசோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்

ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே".

 

என்றார் அருணை அடிகள் கந்தர் அலங்காரத்தில்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...