பெறுதற்கு அரிய பேறு பெறுதல் எளிது

 

 

பெறுதற்கு அரிய பேற்றை எளிதாகப் பெறலாம்

----

 

     பெறுவதற்கு அரிய பேறு இறைவன் திருவடி நிலை. அதை எளிமையாகப் பெறுவதற்கு வழி உண்டு. அதைச் சிந்திப்போம்.

 

     இறை அடியார்கள் வேற்றுமை பாராட்டாதவர்கள். விருப்பு வெறுப்பு என்னும் இருமையும் கடந்தவர்கள். வேடத்தால் அடியவனாக ஒருவன் அவர்களிடத்தில் சென்றாலுமே, அந்த வேடத்தைக் கண்ட உடனே மெய்யுருகி நிற்பார்கள். அடியவர் திருக்கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

 

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,

கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,

வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன

கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு

ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது

எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,

கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்

கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்

பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்

நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,

பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்

பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்

மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்

எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று

அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்

இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்

ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்

மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று

அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்

பரமானந்தக் கூத்த! கருணையொடு

நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்

உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,

புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொளீஇ,

எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்

செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட

நல் தவத் தொண்டர் கூட்டம்

பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".

 

இதன் பொருள் ---

 

     தவத்தைப் புரிவதற்கு உரிய வேடத்தை எனது உடம்பில் மட்டும் புனைந்துகொண்டு, பொய்யான ஒழுக்கத்தை எனது உள்ளத்தில் வைத்து, வடதிசையில் உள்ள பொன்மயமான மேருமலை வாய் பிளந்ததைப் போன்ற ஒளி விளங்குகின்ற பொன்னம்பலத்தில் பெருமான் புரிகின்ற ஆனந்தத் திருநடனத்தைக் கும்பிட்டதன் பயனா, நான் ஈடேற்றத்தைப் பெற்றேன். ஆனால் ஒரு பெரிய தவமும் செய்ய அடியேன் முயலவில்லை. அப்படி முயலாத நிலையிலேயே, பெறுதற்கு அரிய பேற்றினை எளிதாக எப்படிப் பெற்றாய் என்று கேட்டால், உள்ளத்தில் உண்மையோடு கூடாத இழிந்த ஒழுக்கத்தை நான் பூண்டு இருந்தும், நான் பூண்டிருந்த அடியார் வேடத்திற்குப் பொருந்த, உனது அடியாரோடு நாளும் கூடி இருந்ததன் காரணமாக, எனது பொய் வேடத்தையே மெய் வேடமாகக்  கருதி, என்னைக் காணும்போது எல்லாம், உனது நிலை என்னிடத்தில் இருப்பதாக அவர்கள் உள்ளத்தில் எண்ணி எண்ணி, அந்தப் பாவனையில் பலநாளும் என்னைப் பார்த்தனர். ஆதலால், அவர்களுடைய பாவகமானது முற்றுப் பெற்று, அந்தப் பாவனையின் பயனை நான் பெற்றேன், (நான் உண்மை அடியவனாகவே மாறிவிட்டேன்) ஆதலால், அவர்கள் எவ்விடத்தில் நீ இருப்பதாக எண்ணினார்களோ, அந்த இடத்தில் நீ இருப்பாய் என்று சொல்லுதற்கு, வேறாக ஐயம் இல்லை. அதன் பயனாக,  சூரிய சந்திரர் ஆகிய இரு பெரும் சுடர்களும், புருடன் என்னும் ஆன்மாவும், ஐந்து வகையாகின்ற பூதங்களும் கூடிய, எட்டு வகையான உறுப்புக்களுடன் (அட்ட மூர்த்தமாக) அருள் திருமேனியைத் தாங்கி, எப்போதும் ஒயாமல், அருள் காரணமாக, திருச்சிற்றம்பலத்தில் ஐந்தொழில் கூத்து இயற்றும் பேரானந்தக் கூத்தனே! உனது அருள் துணையுடன், நிலையில்லாத பொய்ப் பொருள்களையும், நிலையான உண்மைப் பொருளையும், அழியாத நிலையில் எனது உள்ளத்தில் கொண்டு, எனது இயல்பான புல்லறிவை அகற்றி, நல்லறிவு விளங்கப் பெற்று, என் போன்றவர்களையும் நன்னெறியில் நிறுத்தி, செம்மை மனத்தைப் பெற்றவர்களாகப் பண்ணுவதற்காக திருவேடத்தைக் தாங்கி நிற்கின்ற, நல்ல தவத்தைப் புரிகின்ற திருத்தொண்டர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருக்கும் பேற்றினைப் பெற்றவர்க்கு, பெறத் தகாதன என்பவை யாதும் இல்லை. (அடியவர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருந்தால் அனைத்து நலங்களையும் பெறலாம்)

 

            நான் ஒரு சிவனடியாரைப் போல, எனது உடம்பில் வேடத்தைப் போட்டுக்கொண்டேன். ஆனால், எனது உள்ளத்தில் நிறைந்து இருந்தது என்னவோ பொய்யும், புரட்டும், வஞ்கமுமே. ஒளி பொருந்திய பொன்னம்பலவாணா!, நீ நிகழ்த்தும் அனவரத ஆனந்தத் திருநடனத்தைத் தரிசிக்கப் பெற்றேன். இந்தப் பெறுதற்கு அரிய பெருமையை அடைவதற்கு நான் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருந்தும், இந்தப் பெரும்பேறு கிடைக்கப் பெற்றது எப்படி என்றால், நான் அடியவன் போல வேடமிட்ட காரணத்தால், உனது மெய்யடியார்களோடு கூடி இருந்தேன். அவர்களும் என்னை ஒரு மெய்யடியானாகவே கண்டனர். "அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்று அப்பர் பெருமான் அருளியதற்கு ஒப்பவும், "மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்னும் சிவஞானபோத சூத்திரப்படியும், என்னிடத்தில் உன்னைப் பாவக நிலையில் நாளும் பார்த்தார்கள். அந்தப் பாவனையே உண்மையாகி விட்டது போலும்.

 

     இந்தக் கருத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகின்றது. திருடன் ஒருவன் காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அடியார் வேடத்தைப் போட்டுக் கொண்டான். அந்த வேடத்தைக் கண்டு எல்லாரும் அவனை வணங்கத் தொடங்கினார்கள். "வெறும் பொய் வேடத்திற்கே இத்தனை மரியாதை என்றால், உண்மையான அடியவனாக நான் ஆகிவிட்டால் என்ன?" என்று நினைத்தான். அன்றுமுதல், வேடத்திற்குப் பொருந்த உண்மை அடியாவனாகவே மாறிவிட்டான்.

     "பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமி பட்டரும், "யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் என்னிலும் கைவிடுதல் நீதியோ? தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று தாயுமான அடிகளாரும் வேண்டியது அறிக.

 

     இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

 

     குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

 

     முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தியை அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

 

 

"நீதியாவன யாவையும் நினைக்கிலேன்

     நினைப்பவ ரொடும் கூடேன்

ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை

     என் அடியான் என்று

பாதி மாதொடும் கூடிய பரம்பரன்

     நிரந்தரம் ஆய் நின்ற

ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய

     அதிசயம் கண்டாமே". 

 

 

"திரைவார் கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு

     திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,

தின நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ

     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

 

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என

     அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்

வழிபாடு உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்

     மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே".

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்.

 

இதன் பொருள் ---

 

         நாள்தோறும், எழுந்தவுடன் மனதார உம்மைத் துதித்து, அதன் பின்னரும் (எத் தொழிலைச் செய்தாலும்) சிவக் குமாரரே! மும்மூர்த்திகளின் தலைவரே! பெரியமலையின் மகளாகிய உமாதேவியார் பெற்றருளிய மணியே! அடியார்களின் இதயமாகிய குகையில் விளங்குபவரே! என்று உம்மை வாயாரப் போற்றாத அடியவனாகிய நானும், உமக்கு அடியவர்கள் ஆகி, உம்மை வழிபடுபவர்களோடு கூடி, அருள் பெறுகின்ற சிறப்புப் பொருந்திய நாள் ஒன்றும் உண்டாகுமோ? அடியேனுக்குச் சொல்லி அருள் புரிவீராக.

 

"நல்லவரோடு கூடி இருப்போம். நலம் பல பெறுவோம்".


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...