அவிநாசி --- 0952. பந்தப்பொன் பார

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

பந்தப்பொன் பார (அவிநாசி)

 

முருகா! 

தேவரீரது திருவடிகளை எக்காலத்திலும் மறவேன்.

 

தந்தத்தத் தானன தானன

     தந்தத்தத் தானன தானன

          தந்தத்தத் தானன தானன ...... தனதான

 

பந்தப்பொற் பாரப யோதர

     முந்திச்சிற் றாடகை மேகலை

          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே

 

பண்டெச்சிற் சேரியில் வீதியில்

     கண்டிச்சிச் சாரொடு மேவியெ

          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்

 

கொந்துச்சிப் பூவணி கோதையர்

     சந்தச்செந் தாமரை வாயினர்

          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்

 

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு

     மண்டிச்செச் சேயென வானவர்

          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே

 

அந்தத்தொக் காதியு மாதியும்

     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்

          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி

 

அங்கத்தைப் பாவைசெய் தாமென

     சங்கத்துற் றார்தமி ழோதவு

          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்

 

சந்தச்செக் காளநி சாசரர்

     வெந்துக்கத் தூளிப டாமெழ

          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

 

தங்கச்செக் கோலசை சேவக

     கொங்கிற்றொக் காரவி நாசியில்

          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.


 

பதம் பிரித்தல்

 

பந்தப்பொன் பார பயோதரம்

     உந்திச் சிற்று ஆடுஅகை மேகலை

          பண்புஉற்று,தாளொடு மேவிய ...... துகிலோடே,

 

பண்டுஎச்சில் சேரியில்,வீதியில்

     கண்டுஇச்சிச் சாரொடு மேவியெ

          பங்குக் கைக் காசுகொள் வேசியர், ...... பனிநீர்தோய்

 

கொந்துஉச்சிப் பூஅணி கோதையர்,

     சந்தச் செந்தாமரை வாயினர்,

          கும்பிட்டுப் பாணியர்வீணியர், ...... அநுராகம்

 

கொண்டுஉற்றுப் பாயலின் மூழ்கினும்,

     மண்டிச் செச்சே என வானவர்

          கொஞ்சு உற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே!

 

அந்தத் தொக்கு ஆதியும் ஆதியும்

     வந்திக்கத் தானவர் வாழ்வுஉறும்

          அண்டத்துப் பால்உற மாமணி ...... ஒளிவீசி

 

அங்கத்தைப் பாவைசெய் தாம்என,

     சங்கத்து உற்றார் தமிழ் ஓத,

          உவந்துகிட்டார் கழு ஏறிட ...... ஒருகோடிச்

 

சந்தச் செக்காள நிசாசரர்

    வெந்துஉக்க,தூளி படாம்எழ,

          சண்டைக்கு எய்த்தார் அமராபதி ...... குடியேறத்

 

தங்கச் செக்கோல்அசை சேவக!

     கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்

          தண்டைச் சிக்கார அயில் வேல் விடு ...... பெருமாளே!

 

பதவுரை

 

            அந்தத் தொக்கு ஆதியும் ஆதியும் வந்திக்கத் தான்--- அந்த உடலைப் படைக்கும் தலைவனான பிரமதேவனும்திருமாலும் துதிக்கும்படியாகத் தான்,

 

           அவர் வாழ்வு உறும் அண்டத்துப் பால் உற--- அவரவர் வாழ்கின்ற இடங்களாகிய அண்டங்களில் வாழவும்

 

           மாமணி ஒளி வீசி --- அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும்,

 

            அங்கத்தைப் பாவை செய்தாம் என--- எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று 

 

           சங்கத்து உற்றார் தமிழ் ஓத--- சங்கம் வளர்த்த முத்தமிழால் ஆன தேவாரப்பாடலை திருசானசம்பந்தப் பெருமானாக வந்து ஓதவும், 

 

           உவந்துக் கிட்டார் கழு ஏறிட--- உள்ள மகிழ்வோடு அவநெறியை மறந்து சிவநெறியைத் தழுவாத சமணர்கள் கழுமரத்தில் ஏறிடவும்,

 

            ஒரு கோடிச் சந்தச் செக் காள நிசாசரர் வெந்து உக்கத் தூளி படாம் எழ--- இரத்தம் வடிவதால் சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும்,விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய ஒரு கோடிக்கணக்கானஅசுரர்களை வெந்து சிதறும்படியும் போர்க்களத்தில் தூசிப் படலம் கிளம்பி எழவும்,  

 

            சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற--- போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அமராவதியில் குடியேறவும்,

 

           தங்கச் செக்கோல் அசை சேவக--- தங்க மயமான செங்கோல் அசசையப் போர் புரிந்த வீரம் மிகுந்தவரே!,

 

            கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்--- கொங்கு நாட்டில் விளங்கும் அவிநாசி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற

 

           தண்டைச் சிக்கார அயில் வேல் விடு பெருமாளே--- தண்டையை அணிந்த திருப்பாதங்களுடன்அழகியகூரிய வேலாயுதத்தைச் விடுத்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

            பந்தம் பொன் பார பயோதரம்--- அழகுடன் திரண்டு விளங்கும் கனத்த மார்பகங்களோடு 

 

           உந்திச் சிற்று ஆடு அகை மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே--- உந்தியின் மேல் கட்டப்பட்டுள்ள எழுச்சியோடு கூடிய எழுவகை அணிகளோடு கூடிய மென்மையான ஆடையானது பாதம்வரை தொங்கும்படியாக

 

            பண்டு எச்சில் சேரியில் வீதியில்--- பழமையாய் இருக்கும் பரத்தையர் வாழும் சேரியில் உள்ள தெருவில்

 

           கண்டு இச்சிச்சாரொடு மேவியெ--- தம்மைப் பார்த்து விரும்புவர்களுடன் கூடி,

 

            பங்குக் கைக்காசு கொள் வேசியர்--- தமது பங்குக்கு உரிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர்,

 

            பனிநீர் தோய் கொந்துச்சிப் பூ அணி கோதையர்--- பன்னீர் தோய்ந்துள்ள,உச்சியில் கொத்தாகப் பூக்களை அணிந்த கூந்தலை உடைய பெண்கள்,

 

            சந்தச் செந்தாமரை வாயினர்--- அழகிய செந்தாமரை போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள்,

 

           கும்பிட்டுப் பாணியர் வீணியர்--- வணக்கத்தைக் காட்டும் கைகளை உடையவர்கள்வீண் காலம் போக்குபவர்கள்,(இவர்கள் மீது)

 

            அநுராகம் கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும்--- காமப்பற்றுக் கொண்டு, படுக்கையில் முழுகி இருந்தாலும்,

 

           மண்டிச் செச்சே என வானவர் கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை மறவேனே--- தேவர்கள் எல்லாம் சயசய என்று வாழ்த்தி, துதி செய்து, வணங்கும் தேவரீரது திருவடித் தாமரைகளை அடியேன் மறக்க மாட்டேன்.

 

பொழிப்புரை

 

     உயிர்களுக்கு உடலைப் படைக்கும் தலைவனான பிரமதேவனும்திருமாலும் துதிக்கும்படியாகவும்,அவரவர் வாழ்கின்ற இடங்களாகிய அண்டங்களில் வாழவும்,அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும்,எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்கம் வளர்த்த முத்தமிழால் ஆன தேவாரப்பாடலை திருசானசம்பந்தப் பெருமானாக வந்து ஓதவும்,  உள்ள மகிழ்வோடு அவநெறியை மறந்து சிவநெறியைத் தழுவாத சமணர்கள் கழுமரத்தில் ஏறிடவும்,இரத்தம் வடிவதால் சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும்விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய ஒரு கோடிக்கணக்கானஅசுரர்களை வெந்து சிதறும்படியும் போர்க்களத்தில் தூசிப் படலம் கிளம்பி எழவும்,  போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அமராவதியில் குடியேறவும்,தங்க மயமான செங்கோலாகிய வேலாயுதம் அசசையப் போர் புரிந்த வீரம் மிகுந்தவரே!,

 

            கொங்கு நாட்டில் விளங்கும் அவிநாசி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்றதண்டையை அணிந்த திருப்பாதங்களுடன்அழகியகூரிய வேலாயுதத்தைச் விடுத்தருளிய பெருமையில் மிக்கவரே!

 

            அழகுடன் திரண்டு விளங்கும் கனத்த மார்பகங்களோடு உந்தியின் மேல் கட்டப்பட்டுள்ள எழுச்சியோடு கூடிய எழுவகை அணிகளோடு கூடிய மென்மையான ஆடையானது பாதம்வரை தொங்கும்படியாக, பழமையாய் இருக்கும் பரத்தையர் வாழும் சேரியில் உள்ள தெருவில்தம்மைப் பார்த்து விரும்புவர்களுடன் கூடி,தமது பங்குக்கு உரிய பொருளைக் கைக்காசாகப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர்,பன்னீர் தோய்ந்துள்ள உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த கூந்தலை உடைய பெண்கள்,அழகிய செந்தாமரை போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள்,

காட்டும் கைகளை உடையவர்கள்வீண் காலம் போக்குபவர்கள்,இவர்கள் மீது, காமப்பற்றுக் கொண்டு, படுக்கையில் முழுகினாலும்,தேவர்கள் எல்லாம் ஜே ஜே என்று வாழ்த்தி, துதி செய்து, வணங்கும்  தேவரீரது திருவடித் தாமரைகளை அடியேன் மறக்க மாட்டேன்.

 

விரிவுரை

 

பந்தம் பொன் பார பயோதரம்--- 

 

பொன் --- அழகு.

 

பார --- பருத்த,

 

பயோதரம் --- பயம் + உதரம். பால் நிறைந்துள்ள முடம். மார்பகங்களைக் குறித்தது. 

 

உந்திச் சிற்று ஆடு அகை மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே--- 

 

அகைதல் --- மலர்தல்எழுதல்.

 

தாளொடு மேவிய துகில் --- பாதம் வரை தொங்குகின்ற சேலை.

 

"இடை உற்ற வரிசேலை காலில்விழ விட்டுநடை இட்டுமயிலின் கலாபச்சாதி ஆம் என வெருட்டிநடம் இட்டுவலைஆன பேர் தமை இரக்க வகை இட்டுகொடிசாக நோய் பிணிகொடுத்து இடர் படுத்துவர்கள்" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளது காண்க.

 

பண்டு எச்சில் சேரியில் வீதியில்--- 

 

எச்சில் சேரி --- பரத்தையர்கள் வாழும் இடம்.

     

அநுராகம் கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும் மண்டிச் செச்சே என வானவர் கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை மறவேனே--- 

 

மண்டி --- நெருங்கி இருந்து,

 

செச்சே என --- சயசய எ,

 

இவ்வாறு பல இடங்களில் அடிகளார் பாடி அருளி உள்ளார். அடியேன் மாதர் மயலால் வாடினாலும்அம்மாதருடைய பேரையே உருப் போட்டாலும்அவர் இட்ட பணிகளைப் புரிந்து திரிந்தாலும்அவருடன் விளையாட்டு வசனங்களை உரையாடினாலும்படுக்கையில் அம்மாதர்கள் தரும் காம இன்பக் கடலில் முழுகினாலும்இறைவனுடைய திருவடிகளை மறவேன் என்கின்றார்.

 

முருகப் பெருமான் அபதேசித்து ஆட்கொண்டு அருளிய பின்அடிகளார் மாதர் மயலில் மயங்கினார் என்று கருதக் கூடாது. எல்லோரும் மயங்குவர். அப்படி அடியேன் மயங்கினாலும் உன் உபதேசத்தையும்திருவடியையும் மறவேன் என்று தனக்கு உள்ள உறுதிப்பாட்டை உரைக்கின்றார்.

 

கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை 

மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முது கூளித் திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண் டெனக் கொட்டி ஆட வெம் சூர்க் கொன்ற ராவுத்தனே.

                                                                                                --- கந்தர் அலங்காரம்.

 

அந்தத் தொக்கு ஆதியும் ஆதியும்--- 

 

தொக்கு --- தோல். இங்கு உடலைக் குறித்தது. 

 

தொக்கு ஆதி என்பதுபடைப்புத் தொழிலை உடைய பிரமதேவரைக் குறிக்கும்.

 

ஆதி என்பது திருமாலைக் குறிக்கும். 

 

அங்கத்தைப் பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத--- 

 

அங்கம் --- எலும்பு.

 

எலும்பைப் பாவை ஆக்கிய அற்புத நிகழ்வை இங்கு அடிகளார் ஓதுகின்றார். திருஞானசம்பந்தர்திருமயிலையில்எலும்பைப் பெண்ணாகிய அற்புதத்தைப் புரிந்தார். சங்கத் தமிழால் அற்புதமான திருப்பதிக்கத்தை ஓதிஎலும்பைப் பெண்ணாக்கினார்.

 

எலும்பைப் பெண்ணாக்கிய வரலாறு

 

திருமயிலாப்பூரிலே சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு வணிகர்சிவன் அடியார். அளகாபுரிக்கு அதிபன் ஆகிய குபேரனுக்கு மேலான செல்வத்தில் சிறந்தவர்.  அவர் திருஞானசம்பந்தப் பெருமானுடைய பெருமைகளைக் கேள்வியுற்றுஅவர்பால் பேரன்பு உடையவராய் வாழ்ந்திருந்தார். அவருக்கு மகப்பேறு இல்லாமல் இருந்தது. அவர் புரிந்த தவம் அடியார்க்கு அமுது படைத்தலும்அவர்க்கு வேண்டியன செய்தலுமே. அதன் பயனாக அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.  

 

ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான்

ஞான போனகம் நுகர்ந்ததும்,நானிலம் உய்ய

ஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்

ஊனம் இல் புகழ் அடியர்பால் கேட்டு உவந்து உளராய்

            

செல்வம் மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ்

எல்லை இல்லதோர் காதலின் இடையறா உணர்வால்

அல்லும் நண்பகலும் புரிந்து அவர் அருள் திறமே

சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.

 

நிகழும் ஆங்கு அவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த்

திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்

புகழு மேன்மையில் உலகினில் பொலிந்து உளார்எனினும்

மகவு இலாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு;

            

அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரன் அடியார்க்கு

உரிய வர்ச்சனை உலப்பு இல செய்த அந் நலத்தால்

கரியவாம் குழன் மனைவியார் வயிறு எனும் கமலத்து

உரிய பூமகள் என ஒரு பெண்கொடி உதித்தாள்.

                                    

எனவரும் பெரியபுராணப் பாடல்களால் சிவநேசரின் பெருமை தெரியவரும்.

 

பிறந்து குழந்தைக்குபூம்பாவை என்னும் திருநாமம் சூட்டினார். பெண் குழந்தை பிறை என வளர்ந்து வந்தது. "என் மகளுக்குக் கணவனாக வாய்க்கிறவனுக்கே எனது அருநிதி உரியது" என்று சொல்லி வந்தார். அந் நாளில் அவரிடம் சிலர் வந்து திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டில் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறினர். சிவநேசர் அவர்களுக்குப் பொன்னையும் மணியையும் வாரி வாரி வழங்கினார். மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், "என் மகள்என் நிதிஎனக்கு உள்ள மற்ற எல்லாவற்றையும்என்னையும் பிள்ளையாருக்கே கொடுத்தேன்" என்று சுற்றத்தாருக்கு எல்லாம் கேட்குமாறு அறிவிக்கை செய்து இன்பக் கடலில் திளைத்தார்.  

 

ஒருநாள்பூம்பாவையார் நந்தவனத்துள் சென்றார். பூக்கொய்யும் வேளையில்மல்லிகைப் பந்தரிலே மறைந்து இருந்த பாம்பு தீண்டியது. சாய்ந்த அம்மையாரைச் சேடியர்கள் கன்னிமாடத்துக்குக் கொண்டு சென்றார்கள். மணிமந்திரமருந்து முறைகள் செய்யப்பட்டன. பயனில்லை. பூம்பாவையாரிடம் உயிர் நீங்கும் குறிகள் தோன்றின. துயரக் கடலில் அழுந்திய சிவநேசர் ஒருவாறு தெளிவு பெற்று, "இந்த விடத்தை மாற்றுவோருக்கு நிதி குவியல் குவியலாக வழங்கப்படும்" என்று பறை அறைவித்தார். அரச மருத்துவர்களும்மந்திரவாதிகளும் தங்களால் இயன்றவரை மூன்று நாள்கள் முயன்றும் பயன் இல்லை. அது கண்ட சிவநேசர், "பூம்பாவை திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உரியவள். நான் ஏன் வருந்தல் வேண்டும். இவள் உடலை எரித்துஎலும்பையும் சாம்பலையும் பெருமான் வரும்வரை சேமித்து வைத்தல் வேண்டும்" என எண்ணிஅவ்வாறே செய்துசாம்பலையும் எலும்பையும் குடத்தில் இட்டுஅக்குடத்தை அலங்கரித்து வைத்து இருந்தார்.

 

அவ் வேளையில்திருஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்றார். திருமயிலாப்பூரிலே இருந்து திருவொற்றியூர் வரை நடைப் பந்தல் அமைத்துதிருஞானசம்பந்தப் பெருமானை திருமயிலாப்பூருக்கு வரவேற்றார். அப்பொழுது அடியவர்கள்சிவநேசருக்கு உற்றதைதிருஞானசம்பந்தப் பெருமானுக்கு அறிவித்தார்கள்.

 

திருஞானசம்பந்தப் பெருமான்தம்முடன் இருந்த சிவநேசரை நோக்கி, "என்புக் குடத்தைக் கொண்டு வாரும்" என்றார். சிவநேசர் என்புக் குடத்தைக் கொண்டு வந்து கோபுரத்திற்கு எதிரே திருமுன்னர் வைத்தார். அவ் ஊரில் உள்ளாரும்பிற ஊராரும்சமணர்களும்மற்றவரும் அங்கே வந்து சூழ்ந்தார்கள். திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளைச் சிந்தித்து, "மட்டிட்ட" என்னும் திருப்பதிகத்தை எடுத்து, "போதியோ பூம்பாவாய்" என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார். "உரிஞ்சாய வாழ்க்கை" என்னும் திருப்பாட்டைப் பெருமான் பாடியதும்,  குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயது உடையவராய்வெளித் தோன்றினார். திருக்கடைக் காப்புச் சாத்தப் பெற்றதும்அடியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து அஞ்செழுத்தை ஓதித் துதித்தார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பூம்பாவையார் திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி நின்றார். பெருமான் சிவநேசரைப் பார்த்து, "உமது அருமை மகளை அழைத்து வீட்டிற்குச் செல்க" என்றார். சிவநேசர் திருஞானசம்பந்தப் பெருமானைத் தொழுது, "இவளைத் திருமணம் செய்து அருளல் வேண்டும்" என்றார். திருஞானசம்பந்தப் பெருமானோ, "நீர் பெற்ற பெண்விடத்தால் மாண்டாள். பின்னர் சிவன் அருளால் நாம் தோற்றுவித்தோம். உமது உரை தகாது" என்று மறுத்தார். சிவநேசரும் அவர்தம் உறவினரும் மயங்கி நின்றனர். பெருமான் திருக்கோயில் சென்று வழிபட்டார். சிவநேசர்பூம்பாவையாரை வேறு ஒருவருக்கும் மணம் செய்து கொடுக்க விரும்பவில்லை. அம்மையார் கன்னிமடாத்திலேயே தவம் கிடந்துசிவனடி சேர்ந்தார்.

 

திருமயிலைக் கபாரலீச்சரத் திருக்கோயிலின் மேலைக் கோபுரத்து அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் திருஞானசம்பந்தர் இருக்கிறார். திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சிபங்குனிப் பெருவிழாவின்  எட்டாம்நாள் காலையில் நடக்கிறது. அப்போது திருஞானசம்பந்தர்பூம்பாவைசிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் சாம்பலுக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை வைத்துதிருஞானசம்பந்தரின் திருப்பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவை உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபதுஎண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் திருமயிலை என்று கூறுவர்.

 

பங்குனிப் பெருவிழாவின் போதுஇத் திருக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் எட்டாம்நாளில்அறுபத்துமூன்றுநாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் சிறப்புப்பெற்றது. அப்போது சிவபெருமான் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஆறாவது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும்அடியவர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது.

 

உவந்துக் கிட்டார் கழு ஏறிட--- 

 

கிட்டார் --- சிவநெறியைக் கிட்டாதவர்கள் ஆகிய சமணர்கள். 

 

சமணர்கள் உவந்து தாமே கழு ஏறிய வரலாறு

 

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல்சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கிமுடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல்பல சமயங்கள்அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

 

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலேகொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவிஅரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின.உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால்சோழ மன்னனது திருமகளாய்பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து,பாண்டிய அமைச்சராய் இருந்துசைவநிலைத் துணையாய்அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்திஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். 

 

அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும்அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்துமுறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்துபாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து,சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்துஅதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். 

 

திருஞானசம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கிஅப்பரிடம் விடை கேட்டனர். திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை உன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்றுகோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

 

வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

            மிகநல்ல வீணைதடவி

 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்

            உளமே புகுந்த அதனால்,

 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

            சனி பாம்பு இரண்டும் உடனே,

 ஆசு அறும் நல்லநல்ல,அவைநல்லநல்ல

            அடியாரவர்க்கு மிகவே”

 

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்துஅப்பரை உடன்படச் செய்து விடைபெற்றுமுத்துச் சிவிகை ஊர்ந்துபல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்கபாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். 

 

இவ்வேளையில் எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும்,அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர்பார்த்து நின்றனர்.

 

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கிகுலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடிகண்ணீர் ததும்பி கைகூப்பிமண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர்கோன் சிவிகை விட்டிழிந்துஅவரைத் தமது திருக்கைகளால் எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும்குலச்சிறையார் கைகூப்பி,

 

 “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் 

     இனி எதிர் காலத்தின் சிறப்பும்

இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால் 

     எற்றைக்கும் திருவருள் உடையேம்

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 

     நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,

வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்

     மேன்மையும் பெற்றனம் என்பார்"    --- பெரியபுராணம்.

 

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரியமங்கையர்க்கரசியாரையும்குலச்சிறையாரையும் சிறப்பித்துத் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடிகோயிலுள் புகுதலும்அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறிஆலவாயானைத் தெரிசித்துதமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார். 

 

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண்டுமுட்டு” “கேட்டுமுட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அனுமதி பெற்று,திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்றுதாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து,ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்கசம்பந்தர் இது அரசன் ஆணையால் வந்தது என்று உணர்ந்து,

 

    “செய்ய னேதிரு வாலவாய் மேவிய

  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்

  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்

  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

 

என்று பாடியருளினார். 

 

“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது,சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லிமயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். 

 

மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கிதிருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும்அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூறஅரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கத்தில் நான் சேருவேன்அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

 

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்

தேன் நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”      --- பெரியபுராணம்.

                                         

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறிஅரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தனர். திருஞானசம்பந்தர் அபயம் தந்துஅடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்றுதென்னவனாய் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும்,தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்றுபாண்டியர் கோன் மாளிகை புக்கார். 

 

ஆலமே அமுதமாகஉண்டுவானவர்க்கு அளித்துக்

காலனை மார்க்கண்டர்க்காக்காய்ந்தனை,அடியேற்கு இன்று

ஞாலம்நின் புகழே ஆகவேண்டும்நான் மறைகள் ஏத்தும்

சீலமே! ஆல வாயில்சிவபெருமானே! என்றார்.                    --- பெரியபுராணம்.

 

பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பிதலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க,சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,கவுணியர் வேந்து,

 

மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்

பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,

ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

 

என்று பாடித் தேற்றினார்.

 

            அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாம் எனஅமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்கசுவாமிகள்"மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடிவலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டுபாலறாவாயரைப் பணியபிள்ளையார் மீண்டுத் திருநீறு பூசநோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

 

            பின்னர்சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இடஅவை சாம்பலாயின. பின்,புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விடஅது நீருடன் கீழ்நோக்கிச் சென்றதுதிருஞானசம்பந்தப் பெருமான் "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் அற்புதத் திருப்பாசுரம் பாடிஅந்த ஏட்டினை வைகையாற்று வெள்ளத்தில் இட்டார். அந்த ஏடு நீரை எதிர்த்துச் சென்றது.  "வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்துநின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

 

தங்கச் செக்கோல் அசை சேவக--- 

 

தங்கம் -- பொன்அழகு.

 

செக்கோல் --- செங்கோல் என்னும் சொல்சந்தத்தை நோக்கி, "செக்கோல்" என வந்தது. 

 

 

கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் தண்டைச் சிக்கார அயில் வேல் விடு பெருமாளே--- 

 

கொங்கு நாட்டில் தொக்கி விளங்கும் அவிநாசி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற,  தண்டையை அணிந்த திருப்பாதங்களுடன்அழகியகூரிய வேலாயுதத்தைச் விடுத்தருளியவர்.

 

சிக்கார --- சிங்கார என்னும் சொல்சந்தத்தை நோக்கி, "சிக்கார" என்று வந்தது.

 

திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.

 

இறைவர்        : அவிநாசிலிங்கேசுவரர்அவிநாசி ஈசுவரர்அவிநாசியப்பர்பெருங்கேடிலியப்பர்.

இறைவியார்  : கருணாம்பிகைபெருங்கருணை நாயகி.

தல மரம்        : பாதிரி (ஆதியில் மாமரம்)

 

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டதுதற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. 

            

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும்சுப்பிரமணியர் சந்நிதியும்அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும்நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.

 

மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.

 

முதலை வாயினின்றும் பிள்ளையை அழைத்த வரலாறு:

 

வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வரும் நாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார்.  திருப்புக்கொளியூரை அடைந்தார். மாடவீதி வழியே நடந்தார்.

 

அப்பொழுது அங்கேஒரு வீட்டில் மங்கல ஒலியும்மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான்அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளேஇரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலிஇறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர்நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர்.  வன்தொண்டரை வணங்கினர். வன்தொண்டர்அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்என்று உள்ளம் கொண்டார். பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்துஅங்கே போனார்.  திருப்பதிகம் பாடினார். "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,

 

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,

அரைக்குஆடு அரவாஆதியும் அந்தமும் ஆயினாய்,

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

 

என்று வேண்டினார். உடனேகாலன்பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால்எந்த வயதை அடைந்திருப்பானோஅந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலைபிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர்புதல்வனை அழைத்துக் கொண்டு  அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர்அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர்நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.

 

அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.

 

கருத்துரை

 

முருகா! தேவரீரது திருவடிகளை எக்காலத்திலும் மறவேன்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...