இல்லை என்னாது அருள்பவன் இறைவன்

 


இல்லை என்னாது அருள்பவன் இறைவன்

-----

 

நல்லவர்கள் வாயால் நவிலும் மொழி பொய்யாமல்,

இல்லை எனாது உள்ள மட்டும் ஈவார்கள்; --- நல்லகுணம்

அல்லவர்கள் "போ வா" என்று ஆசை சொல்லி நாள் கழித்தே

இல்லை என்பார் இப் பாரிலே

 

            மேலோர் தாழ்ந்தோர் இயல்பு பற்றிசீகாழி அருணாசலக் கவிராயர் பாடிய இப் பாடலின் பொருள்---

 

            இவ்வுலகில் நல்லவர்கள் தமது வாயால் சொன்ன சொல் தவறாதுஇல்லை என்று வந்தோர்க்குஇல்லை என்று சொல்லாமல்தம்மிடத்தில் பொருள் இருக்கும் வரையில் கொடுத்து உதவுவார்கள். நல்லவர் அல்லாத புல்லர்கள்தம்மிடத்தில் வந்தவர்களை, "இன்று போய் நாளை வாருங்கள்" என்று ஆசை மொழிகளைச் சொல்லிவீணே நாள்களைக் கழித்துஇறுதியில் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

 

            இந்தப் பாடலின் கருவாக அமைந்ததுசீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடல் ஆகும். இல்லை என்றுசெல்வந்தரிடம் சென்று இரப்பவரை ஆற்றுப்படுத்தும் முகமாகப் பாடிய பின்வரும் அருமையான பாடல்.

 

நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்லநாளையும்

"உச்சிவம்" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,

பிச்சர்நச்சு அரவு அரைப் பெரியசோதிபேணுவார்

இச்சை செய்யும் எம்பிரான் எழில்கொள் காழி சேர்மினே! 

 

இதன் பொருள் ---

 

            பொருளை விரும்பிப் பிறர்தமது மனை வாயிலை வந்து  அடையக் கண்டும்அச் செல்வர், (தன்னிடத்து உள்ள பொருளை விரும்பிக் கொடுத்து உதவாமல்) "நாளை நண்பகல் போதில் வருக" எனக் கூறும் உரையைக் கேட்டுஉள்ளம் வருந்துவதன் முன்னம்நம் மேல் ஈடுபாடு உடையவரும்,  விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும்வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய சீகாழிப் பதியை அடைவீர்களாக.

 

            திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த சீகாழிக்குப் போந்துஅங்கே திருக்கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பாடிய அருணகிரிநாதரும்இக் கருத்தையே வைத்துத் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது அறிந்து இன்புறத்தக்கது. 

 

"செக்கர் வானப் பிறைக்குஇக்கு மாரற்கு அலத்

     தெற்கில் ஊதைக்குஅனல் ...... தணியாத

சித்ர வீணைக்குஅலர்ப் பெற்ற தாயர்க்குஅவச்

     சித்தம் வாடிகனக் ...... கவிபாடி,

 

கைக் கபோலக் கிரிபொன் கொள் ராசிகொடைக்

     கற்ப தாருசெகத் ...... த்ரயபாநு,

கற்றபேர் வைப்பு என

செத்தை யோகத்தினர்க்

     கைக்குள் நான் வெட்கி நிற்- ...... பது பாராய்".

 

என்பது அத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதி.

 

இதன் பொருள் ---

 

            செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும்கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும்தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும்தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும்வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும் வீணாக மன வாட்டத்தினை அடைந்துவிலைமாதர்க்குக் கொடுப்பதற்காகபொருள் உள்ளவர்களைத் தேடிஅவர்கள் மீது பெருமை மிக்கப் பாடல்களைப் பாடிஅப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத் துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும்பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும்கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும்,  மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும்கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும்பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்துகுப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.

 

            வறுமையில் வாடும் ஒருவன் தனது இருப்பிடத்தைத் தேடி வந்துஉயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும்உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர்தாராளமாகப் பொருளைத் தராமல், "இன்று போய்நாளை வா" என்று அலைய வைத்துமிகச் சிறிய அளவில் பொருள் தருவர். தராமலும் விடுவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்துஅதனை அறவழியில் செலவிடாமலும்தானும் அனுபவிக்காமலும்பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண் உறுவர்.

 

            திருத்தணிகைத் திருப்புகழிலும் இக் கருத்தையே வைத்துஅருணகிரிநாதர் பாடி உள்ள திருப்புகழ்.....

 

உடையவர்கள் ஏவர்எவர்கள் என நாடி,

     உளமகிழ ஆசு ...... கவிபாடி,

உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது

     என உரமுமான ...... மொழிபேசி,

 

நடைபழகி மீளவறியவர்கள் நாளை

     நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு

     நளின இரு பாதம் ...... அருள்வாயே.

 

இதன் பொருள் ---

 

            திருத்தணிகை முருகா! செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய்அவர்கள் மனம் மகிழும்படிஆசு கவிகள் பாடியும்உமது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும்ஓயாது நடந்து நடந்து சென்றும்பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி நாளை வாநாளை வா” என்று அத் தனவந்தர் கூறஅதனால் அகமும் முகமும் வாடி வருந்துதற்கு முன்பாகவேசிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.

 

            ஒரு காசும் கொடுக்க மனமில்லாத பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளிகொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையை உடையவர்அள்ளி வழங்குகின்ற வள்ளல்பரம தாதாதங்களின் புகழ் மேருமலை போல் உயர்ந்ததுமேருமலை வரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள். ஆனால்ஒரு காசும் ஈய மனம் வராமல், "நாளை வாருங்கள்" என்று சொன்னதுமேநாளைக்கு வந்தால் கொடுப்பார் என்னும் ஆசையோடுஇப்படியே சென்று சென்று வந்துஅகம் வாடிமுகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவார்கள்.

 

"அறிவுஇலாப் பித்தர்உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

     அசடர்பேய்க் கத்தர்நன்றி ...... அறியாத

அவலர்மேற் சொற்கள் கொண்டுகவிகளாக்கிப் புகழ்ந்து,

     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்துதெருவு உலாத்தித் திரிந்து,

     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமேயான்

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றிபரிந்து,

     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே".

 

என்று காஞ்சிமா நகரில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீதும் ஒரு திருப்புகழ்ப் பாடலைப் பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

            மெய்யறிவு இல்லாத பித்துப் பிடித்தவரும்தேவரீருடைய திருவடியை வணங்காத கொடிய வஞ்சகரும்கீழ்மக்களும்பேய்த் தன்மை கொண்டு அலைபவரும்நன்றியறிவு இல்லாத பயனற்றவர்களும்ஆகியோர் மீது நல்ல சொற்களைத் தொடுத்து பாடல்களைப் புனைந்து பாடி அவர்களைப் புகழ்ந்து,  அவர்களை வாழ்த்தியும்அவர்கள் இருக்கும் இடம்தொறும் திரிந்து,  பொருளைத் தேடிசிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டு வந்து,  பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து,  அப் பொதுமகளிருக்கே அந்தப் பொருளை மழைபோல் சொரிந்து,அடியேன் பயனில்லாமல் திரிகின்ற புல்லிய வழியின் இகழ்ச்சியை மாற்றிஅடியேன் மீது அன்பு வைத்துஎன் அறிவு தெளிவு பெறுமாறு முத்தி இன்பத்தை எனக்கு என்றைய தினம்தான் தருவீரோ?

 

            நற்குணமும்கொடைப் பண்பும் இல்லாத மனிதர்களைப் புகழ்ந்து பொய்யாகப் பாடினதால்தான் துன்பம் தீரவில்லை என்பதாகஇரட்டைப் புலவர் பாடிய பாடல் ஒன்று....

 

குன்றும் குழியும் குறுகி வழி நடப்பது

என்று விடியும் எமக்குஎம் கோவே! --- ஒன்றும்

கொடாதானைக் கோ என்றும்கா என்றும் கூறில்,

இடாதோ நமக்கு இவ் இடி.

 

இதன் பொருள் ---

 

            எமது தலைவரே! மலைகளையும்தாழ்ந்த பள்ளத் தாக்குகளையும் கடந்து வழிச் செல்கின்ற துயரம் எமக்கு எப்போது நீங்கும்? (என்று இரட்டையரில் ஒரு புலவர் சொன்னார். அதற்கு விடையாக மற்றவர்) புலவர்களுக்கு ஒன்றும் தராதவனைகாமதேனுவே என்றும்கற்பகச் சோலையே என்றும் பொய்யாகப் புகழ்ந்து பேசினால்இத்தகைய துன்பம் வராமல் போகுமோ? (என்று சொன்னார்).   இடி --- துன்பம் .

 

            "இறைவனிடம் கையேந்துங்கள்அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்று அமரர் நாகூர் அனீபா அவர்கள் பாடியது நினைவுக்கு வருகின்றது.

 

"வேண்டத் தக்கது அறிவோய் நீ,

வேண்ட முழுதும் தருவோய் நீ"

 

என்றார் மணிவாசகப் பெருமான்.

 

"யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் 

தியாகாங்க சீலம் போற்றி"

 

என்றும்,

 

"வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே"

 

"வேண்டும் அடியர் புலவர்,வேண்ட அரிய பொருளை,

     வேண்டும் அளவில் உதவும் ...... பெருமாளே".

 

"அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன,

     அவை தருவித்து அருள் ...... பெருமாளே".

 

என்றும் முருகப் பெருமான் குறித்துப் பாடி உள்ளார் அருணகிரிநாதர்.

 

            இல்லை என்று சொல்லாதவன் இறைவன் ஒருவனே. மக்களில் சிலர்யாராவது தமது குறையைச் சொன்னால்உடனே செய்து தருவதாக வாக்குறுதி தருவார்கள். நம்பிக்கையும் ஆறுதலும் உண்டாகும். பின்பு அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதே தெரியாது. தொடர்பு கொண்டால், "தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்" என்று தொடர்பு இல்லாத பதில் வரும்.

 

            "இப்படிப் பொய்யான வாக்குறுதி தருபவர்களையே நம்பி உள்ளம் வருந்தி இருப்பதை விடஇல்லை என்னாது அருள்கின்ற இறைவன் நம்புதல் நலம் தரும். மனமேஎன்னுடன் திருவோற்றியூர்க்கு வா. தியாகப் பெருமானிடம் இருந்து நீ வேண்டிய எல்லாவற்றையும் வாங்கித் தருகின்றேன் என்கின்றார் வள்ளல்பெருமான்.

 

கெடுக்கும் வண்ணமே பலர்உனக்கு உறுதி

      கிளத்துவார்அவர் கெடுமொழி கேளேல்,

அடுக்கும் வண்ணமே சொல்கிறேன்,எனை நீ

     அம்மை இம்மையும் அகன்றிடாமையினால்,

தடுக்கும் வண்ணமே செய்திடேல்,ஒற்றித்

     தலத்தினுக்கு இன்று என் தன்னுடன் வருதி,

மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்

     வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே!.

 

இதன் பொருள் ---

 

     என்னுடைய நெஞ்சமேஉன்னைக் கெடுக்கும் கருத்தோடு,பலர் நன்மை செய்வது போலச் சொல்லுவார். அவர்கள் கூறும் கெடுமொழிகளைக் கேளாதே. முற்பிறவிகளிலும்,இப் பிறவியிலும் என்னை நீ விடாது தொடர்கின்றபடியால்உனக்கு அடுத்தனவாகிய நான்உனக்கு நல்லவற்றையே சொல்லுகின்றேன். நான் சொல்வதைத் தடுத்து நடக்காதே. திருவொற்றியூர்க்கு இன்று என்னுடன் நீ வா. நீ வேண்டிய எல்லாவற்றையும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானிடம் இருந்து பெற்று உனக்குத் தருவேன். 

 

இல்லை என்பதை அறியாதவன் இறைவன். 

எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்பவன் இறைவன்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...