மதுராந்தகம் - 0729. குதிபாய்ந்து இரத்தம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குதிபாய்ந்து இரத்தம் (மதுராந்தகம்)

முருகா!
திருவடியைப் பற்றி வாழும் அறிவை அருள்வாயாக.
  
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான
  
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
     கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்

குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
     கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே

உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
     கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத

உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
     றுங்க ருத்தை யென்று ...... தருவாயே

கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
     ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே

கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
     பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா

மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
     மந்த னிற்பி றந்த ...... குமரேசா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குதி பாய்ந்து இரத்தம் வடி தொளைத் தொக்கு,
     இந்த்ரியக் குரம்பை ...... வினைகூர், தூர்

குணபாண்டம் உற்று, அகிலம் எனக் கைக்
     கொண்டு, இளைத்து, அயர்ந்து, ...... சுழலாதே,

உதிதாம் பரத்தை உயிர் கெடப் பொன்
     கிண்கிணிச் சதங்கை ...... வித,கீத

உபய அம்புயப் புணையை இனிப் பற்-
     றும் கருத்தை என்று ...... தருவாயே.

கதை சார்ங்க கட்கம் வளை அடல் சக்-
     ரம் தரித்த கொண்டல் ...... மருகோனே!

கருணை அஞ்சனக் கமல விழிப் பொன்
     பைம் புனக் கரும்பின் ...... மணவாளா!

மதன அந்தகர்க்கு மகவு எனப் பத்-
     மம் தனில் பிறந்த ...... குமரஈசா!

மதுராந்தகத்து வட திருச் சிற்-
     றம்பலத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


      கதை சார்ங்க கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த --- கதாயுதம், சாரங்கம் என்னும் வில், வாள், பாஞ்ச்சன்சனியம் என்னும் சங்கு, வலிமை வாய்ந்த சுதர்சனம் என்னும் சக்கரம் ஆகிய ஐந்து ஆயுதங்களையும் தரித்த

       கொண்டல் மருகோனே --- மேகவண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!

       கருணாஞ்சனக் கமலவிழி --- கருணையையும் அஞ்சனத்தையும் கொண்ட தாமரையைப் போன்ற கண்களை உடைய

        பொன் பைம்புனக் கரும்பின் மணவாளா --- அழகிய பசுமையான தினைப்புனத்தில் இருந்த இனியவளா வள்ளிநாயகியின் மணவாளரே!

        மதன அந்தகர்க்கு மகவு எனப் பத்ம்ம் தனில் பிறந்த குமரேசா --- மன்மதனுக்கு இயமனாக விளங்கிய சிவபெருமானுக்குக் குழந்தையாக தாமரையில் பிறந்த குமாரக் கடவுளே!

         மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே --- மதுராந்தகம் என்னும் திருத்தலத்தில் உள்ள வடதிருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் விளங்கும் பெருமையில் மிக்கவரே!

         குதிபாய்ந்து இரத்தம் வடிதொளைத் தொக்கு --- பாய்ந்து ஓடும் இரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை உடையதும்

         இந்த்ரியக் குரம்பை --- ஐந்து பொறிகளை உடையதுமான இந்த உடம்பு,

         வினை கூர் தூர் குண பாண்டம் உற்று --- வினையின் விளைவாக நிரம்பியுள்ள குணங்களுக்குப் பாத்திரமான இந்த பாண்டத்தினை அடைந்து,

         அகிலம் எனக் கைக் கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே --- இதுவே எல்லாம் ஆகும் என்று கொண்டு, அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல்,

         உயிர்கெட உதிதாம் பரத்தை --- ஆன்ம தத்துவம் நீங்க, உள்ளத்தில் உதிக்கின்ற பரம்பொருளை,

         பொற் கிண்கிணிச் சதங்கை விதகீத உபய அம்புயப் புணையை இனி பற்றும் --- அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் இரு தாமரைகளை ஒத்த தேவரீரது திருவடிகளாகிய தெப்பத்தை இனியாவது பற்றிக் கொண்டு வாழும்

         கருத்தை என்று தருவாயே --- உள்ளத்தை எனக்கு நீ எப்போது அருள் புரிவீர்? 


பொழிப்புரை

     கதாயுதம், சாரங்கம் என்னும் வில், வாள், பாஞ்ச்சன்சனியம் என்னும் சங்கு, வலிமை வாய்ந்த சுதர்சனம் என்னும் சக்கரம் ஆகிய ஐந்து ஆயுதங்களையும் தரித்த மேகவண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!

         கருணையையும் அஞ்சனத்தையும் கொண்ட தாமரையைப் போன்ற கண்களை உடைய, அழகிய பசுமையான தினைப்புனத்தில் இருந்த இனியவளா வள்ளிநாயகியின் மணவாளரே!

     மன்மதனுக்கு இயமனாக விளங்கிய சிவபெருமானுக்குக் குழந்தையாக தாமரையில் பிறந்த குமாரக் கடவுளே!

     மதுராந்தகம் என்னும் திருத்தலத்தில் உள்ள வடதிருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் விளங்கும் பெருமையில் மிக்கவரே!

         பாய்ந்து ஓடும் இரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை உடையதும், ஐந்து பொறிகளை உடையதுமான இந்த உடம்பு, வினையின் விளைவாக, நிரம்பியுள்ள குணங்களுக்குப் பாத்திரமான இந்த பாண்டத்தினை அடைந்து, இதுவே எல்லாம் என்று கொண்டு, அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல், ஆன்ம தத்துவம் நீங்கியவழி, உள்ளத்தில் உதிக்கின்ற பரம்பொருளை, அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் இரு தாமரைகளை ஒத்த தேவரீரது திருவடிகளாகிய தெப்பத்தை இனியாவது பற்றி வாழும் உள்ளத்தை எனக்கு நீ எப்போது அருள் புரிவீர்? 
    
விரிவுரை

கருணாஞ்சனக் கமலவிழி, பொன் பைம்புனக் கரும்பின் மணவாளா ---

கருணை + அஞ்சனம் = கருணாஞ்சனம். அஞ்சனம் - மை.

வள்ளிநாயகியின் கருணை நிறைந்த திருக்கண்கள். மை தீட்டப்பட்ட திருக்கண்கள். தாமரை மலரை ஒத்த திருக்கண்கள்.

மதன அந்தகர்க்கு மகவு எனப் பத்ம்ம் தனில் பிறந்த குமரேசா --- மன்மதனுக்கு அழிவைத் தந்த அந்தகராக விளங்கியவர் சிவபெருமான். அவருக்குக் குழந்தையாக, அவரையே நிகர்க்க அவதரித்தவர் முருகப் பெருமான்.

மன்மதனை எரித்த வரலாறு

ஒரு சமயம், இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.     ---  கந்தபுராணம்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு
யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி,
"மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 


குதிபாய்ந்து இரத்தம் வடிதொளைத் தொக்கு ---

உடலில் பாய்ந்து ஓடுகின்ற குருதியானது வடியும்படியாக ஒன்பது தொளைகள் இந்த உடலில் உள்ளன.

தொக்கு - தோல்.  தோலினால் ஆனது இந்த உடம்பு.

இந்த்ரியக் குரம்பை ---

இந்திரியம் - பொறிகள்.  குரம்பை - பறைவைக் கூடு, சிறுகுடில், உடல், பத்தாயம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளை உடையது இந்த உடம்பு.


வினை கூர் தூர் குண பாண்டம் உற்று ---

வினையின் காரணமாக வந்தது இந்த உடம்பு.
தூர் குணம் - குணம் நிறைந்தது.
பாண்டம் - உடம்பு.

அகிலம் எனக் கைக் கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே ---

அகிலம் - எல்லாம்.

இந்த உடம்பையே பொருள் என எண்ணி, ஆன்ம லாபத்தை ஈட்டுவதை விடுத்து, ஆன்மாவை இளைக்கப்பண்ணி, சோர்வு அடைந்து, மீண்டும், மீண்டும் பிறவிக் கடலில் விழுந்து சுழலும் தன்மை உடையது இந்த ஆன்மா.


உயிர்கெட உதி தாம் பரத்தை ---

தத்துவங்களையும் ஆன்மாவைப் பற்றியும் கூறுமிடத்து, ரூபம் தரிசனம் என மூன்று நிலைகள் உண்டு. ரூபம் என்பது பொதுவாய், நிருவிகற்பமாய் அறிதல். தரிசனம் என்பது ஐயமாக அறிதல். சுத்தி என்பது தெளிவாக அறிதல்.  ஆத்தும சுத்தி ஆன நிலையில், சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் நிகழும்.

தச காரியம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவையாவன ---

1. தத்துவ ரூபம் --- மண் முதல் சிவம் ஊறாக உள்ள 36  தத்துவங்களின் குணங்களை அறிதல்.

2. தத்துவ தரிசனம் --- மேற் கூறிய தத்துவங்களை சடம் என  அறிதல்.

3. தத்துவ சுத்தி --- தத்துவங்களை சிவஞானத்தாலே தனக்கு வேறாக அறிதல்.

4. ஆத்ம ரூபம் --- ஐந்து மலங்களும் நீங்கி ஆத்ம ஞானம் என்னும் அறிவே வடிவென அறிதல்.

5. ஆத்ம தரிசனம் --- தத்துவங்களை அறிந்து நீங்கிஇவற்றினின்று நீங்கிய அறிவு நான் என அறிதல்.

6. ஆத்தும சுத்தி --- பெத்தத்தினும் முத்தியினும் சிவன் உபகரிக்கின்றார் என்று தன்னுடைய சுதந்திர ஆனியை அறிதல்.

7. சிவ ரூபம் --- தத்துவம் முப்பத்தாறினுக்கும் அப்பாலாய் வாக்கு மனாதீத கோசரமாய் ஞானமே  வடிவாய் இருப்பது என அறிதல்.

8. சிவ தரிசனம் --- தத்துவம் முப்பத்தாறையும் அறிவித்துத் தரிசிப்பித்து நீங்கி, இவற்றினின்றும் நீங்கி நிற்கும் ஆத்மாவையும் தரிசிப்பித்து  நிற்கின்ற ஞானம் என அறிதல்.

9. சிவயோகம் ---  இந்த ஞானம் தன்னை விட்டு நீங்காது என அறிந்து அதுவாய் நிற்றல்.

10. சிவபோகம் --- சிவத்தோடு இரண்டறக் கலந்து, சிவானந்தத்தைப் புசித்து வருதல்.

இந்தத் தசகாரியங்களை இன்னும் விரிவாக சித்தாந்த சாத்திரங்களைக் கற்றார் வாய்க் கேட்டு உணர்ந்து உய்வு பெறுக.  இவற்றை அறிவது மிகவும் அவசியம் ஆகும்.

கட்டு அறுத்து எனை ஆண்டு,கண்ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடு இரண்டும்அறி யேனையே.       --- திருவாசகம்.

"யானாகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே"             ---  கந்தர் அநுபூதி.


பொன் கிண்கிணிச் சதங்கை விதகீத உபய அம்புயப் புணையை இனிப் பற்றும் கருத்தை என்று தருவாயே --- 

புணை - பற்றுக்கோடு, தெப்பம். 

பிறவிக் கடலில் தடுமாறும் உயிர்க்கு, இறைவன் திருவடியே தெப்பம் ஆகும்.

காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். 
  
செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியேப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயல் காற்று, கலக்கத்தைச் செய்யும், மகளிரின் தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல் காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.

தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தைக் கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து' என்றார் சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப் பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார்.

 இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
                 என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
      இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
                 எனக்கொங்கை வரிசைகாட்டும்
 துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
                 சுழல்வந்து வந்து அடிப்ப,
      சோராத ஆசையாம் கான் ஆறு வான்நதி
                 சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
    கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                 கைவிட்டு, மதிமயங்கி,
      கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                 கண் அருவி காட்டும் எளியேன்,
    செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
                 செய்வையோ? சத்து ஆகி, என்
      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
                 தேசோ மயானந்தமே!

என்றார் தாயுமான அடிகளார்.

துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், ப்பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.

என்றருளினார் அப்பர் பெருமான்.
                                                                                                            
அறிவு இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல் எயில் உடுத்த தில்லை காவல!
வமபு அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள் எனும் நலத்தார் பூட்டி,
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

என்று கோயில் நான்மணிமாலையில் அருளினார் பட்டினத்து அடிகள்.
 
இறைவன் திருவடியைப் பற்றுகின்ற அறிவை இறையருளாலேதான் பெறமுடியும். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றது போல. விளக்கினை ஏற்றி, விளக்கொளியின் துணையால் தான் பொருள்களை விளக்கம் காணமுடியும்.

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு ஆவர் தாமே.

மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும்
காய விளக்கு அது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே.      --- திருமந்திரம்.

அருள்ஒளி விளங்கிட, ஆணவம் எனும்ஓர்
இருள் அற, என்உளத்து ஏற்றிய விளக்கே

துன்புஉறு தத்துவத் துரிசு எலாம் நீக்கிநல்
இன்புஉற, என் உளத்து ஏற்றிய விளக்கே

மயல்அற, அழியா வாழ்வு மேல்மேலும்
இயல்உற, என் உளத்து ஏற்றிய விளக்கே

இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

கருவெளி அனைத்தும் கதிர்ஒளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான இயல்ஒளி விளக்கே

ஆகம முடிமேல் அருள் ஒளி விளங்கிட
வேகம் அதுஅறவே விளங்கு ஒளி விளக்கே

ஆரியர் வழுத்திய அருள்நிலை அநாதி
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே.       ---  திருவருட்பா.

திருவிளங்க, சிவயோக சித்தி எலாம் விளங்க,
         சிவஞான நிலை விளங்க, சிவஅனுபவம் விளங்க,
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம்பலத்தே
         திருக்கூத்து விளங்க, ஒளி சிறந்த திருவிளக்கே,
உருவிளங்க, உயிர் விளங்க, உணர்ச்சி அது விளங்க,
         உலகம்எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்து ஒருபால் விளங்க,
         வயங்கு மணிப்பொது விளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே.  ---  திருவருட்பா.

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே ---

மதுராந்தகம் என்னும் திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. இத் திருத்தலத்தில் பழமையான திருவெண்காட்டீசர் கோயில் ஒன்று உள்ளது. வடதிருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயில் அருணகிரிநாதப் பெருமான் காலத்தில் இத்திருத்தலத்தில் விளங்கி இருந்தது போலும்.


கருத்துரை

முருகா! திருவடியைப் பற்றி வாழும் அறிவை அருள்வாயாக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...