“பொருள்உடையான் கண்ணதே போகம், அறனும்
அருள்உடையான் கண்ணதே ஆகும், - அருள்உடையான்
செய்யான் பழி,பாவம் சேரான், புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.” – சிறுபஞ்சமூலம்.
உலக இன்பமானது (அறவழியில் ஈட்டிய) செல்வப் பொருள் உடையவனிடத்து உண்டாகும். அறவழியில் ஒழுகும் நல்லொழுக்கமும் உள்ளத்தில் அருள் உள்ளவனிடத்தில் உள்ளதாகும். அத்தகைய அருள் உடையவன், பழிப்புக்கு இடமாகிய தீய செயல்களைச் செய்யான். தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான். அதானல் அவனிடத்து பழியும், பாவமும் சேராது. புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்திப் பிழைக்க மாட்டான்.
இவ்வுலக இன்பத்தை அடைதற்கு, பொருள் காரணம் ஆனதுபோல், அவ்வுலக இன்பத்தை அடைவதற்கு அருள் காரணம் ஆயிற்று என்பதால் “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.
No comments:
Post a Comment