பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நீரும்நிலம் அண்டாத (பொது)


முருகா! 

சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.



தானதன தந்தான தானதன தந்தான

     தானதன தந்தான ...... தனதான


நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி

     நீளமக லஞ்சோதி ...... வடிவான


நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல

     நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்


சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத

     சோதிமரு வும்பூமி ...... யவையூடே


தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட

     சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே


வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்

     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல


வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட

     மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே


ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு

     மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா


ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத

     லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி,

     நீளம் அகலம் சோதி ...... வடிவான


நேசம் மலரும் பூவை, மாது இன் மணமும் போல,

     நேர்மருவி, உண்காதல் ...... உடன்மேவி,


சூரியன் உடன் சோமன் நீழல் இவை அண்டாத,

     சோதி மருவும் பூமி ...... அவை ஊடே,


தோகை மயிலின் பாகன் ஆம் என மகிழ்ந்து ஆட,

     சோதி அயிலும் தாரும் ...... அருள்வாயே.


வாரி அகிலம் கூச, ஆயிர பணம் சேடன்

     வாய்விட ஒட, எண் பாலும் ...... உடுபோல,


வார் மணி உதிர்ந்து ஓடவே, கவின் நிறைந்து ஆட,

     மாமயில் விடும் சேவல் ...... கொடியோனே!


ஆரியன், அவன் தாதை, தேடி இனமும் பாடும்

     ஆடல் அருணஞ் சோதி ...... அருள்பாலா!


ஆனை முகவன் தேடி ஓடியெ, அணங்கு ஆதல்

     ஆசை மருவும் சோதி ...... பெருமாளே.

பதவுரை

வாரி அகிலம் கூச --- கடல்கள் எல்லாம் அஞ்சவும்,

ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒட --- ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும்,

எண்பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே … அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், (ஏ – அசை)

கவின் நிறைந்து ஆட ---  அழகு நிறைந்த நடனம் செய்யும்படி,

மாமயில் விடும் --- பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற,

சேவல் கொடியோனே ---  சேவலங்கொடியை உடையவரே!

ஆரியன், அவன் தாதை தேடி இனமும் பாடும் --- பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற

ஆடல் அருணம் சோதி அருள்பாலா --- ஆடலையுடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனை முகவன் தேடி ஓடியே --- ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும்,

அணங்கு ஆதல் ஆசை மருவும் சோதி பெருமாளே --- வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி ... மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல,

நீளம் அகலம் சோதி வடிவான ... நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும்,

நேச மலரும் பூவை ---  அன்பு விரிகின்ற இதயமலரை

மாது இன் மணமும் போல நேர் மருவி --- அழகும் இனிய வாசனையும் போல கலந்து

உண் காதலுடன் மேவி --- உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து,

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத --- சூரியனுடைய வெயில், சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும்,

சோதி மருவும் பூமி அவை ஊடே --- ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே,

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட --- தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய

சோதி அயிலும் தாரும் அருள்வாயே --- ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை

கடல்கள் எல்லாம் அஞ்சவும், ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும், அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், அழகு நிறைந்த நடனம் செய்யும்படி, பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற, சேவலங்கொடியை உடையவரே!

பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற ஆடலை உடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும், வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல, நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும், அன்பு விரிகின்ற இதயமலரை, அழகும் இனிய வாசனையும் போல கலந்து, உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து, சூரியனுடைய வெயில் சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும், ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே, தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய, ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.


விரிவுரை

நீரும் நிலம் அண்டாத தாமரை ---

தாமரை மண்ணில் தண்ணீரில் தொடர்புடன் முளைப்பது. இங்கே தண்ணீரும் மண்ணும் சம்பந்தப்படாத தாமரைக் கொடி என்பது மூலாதாரத்தில் இருந்து முளைத்து எழுகின்ற சுழுமுனையைக் குறிக்கின்றது. அது தாமரைக் கொடிபோல் வளைந்து வளைந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

“பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்று உண்டு,

தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது,

ஊரில்லை காணும், ஒளியது ஒன்றுண்டு,

கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.”. – திருமந்திரம்


நீளம் அகலம் சோதி வடிவான நேச மலரும் பூ ---

பூ - இதயமலர். இதய புண்டரீக மலர். இதயக் கமலம். அப் புண்டரீகமலர் மீது ஒரு மின்னொளி வடிவாக இடையறாது ஒரு பரம்பொருள் திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றது.


மாதின் மணமும் போல் நேர் மருவி உண்காதல் உடன் மேவி ---

மாது - அழகு. அழகும் இனிய மணமும்போல் அப் பரம்பொருளைச் சார்ந்து அருட்காதலுடன் இதனுடன் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும்.

"அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே" என்ற சிவஞானபோத எட்டாவது சூத்திரத்தின்படி, அதனுடன் அனன்னியம் பெற்று திருவடியில் ஆன்மா தங்கி நிற்கும். அவ்வாறு நின்ற ஆன்மா, பாசநீக்கம் பெற்று பரமானந்தம் எய்தி, பாவனாதீத நிலையில் நிற்கும்.

அவனே தானே ஆகிய அந்நெறி

ஏகன்ஆகி இறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.. ---  சிவஞானபோதம் 9-ஆம் சூத்திரம்.


சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவையூடே ---

அவை - சபை.  அது சகஸ்ராரம் ஆகிய பேரம்பலம்.

இதயாகாசம் - சிற்றம்பலம்.

சகஸ்ராரம் - பேரம்பலம்.

சகஸ்ராரம் என்பதைத் திருக்கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உணர்த்துகின்றது.

சகஸ்ராரமாகிய மேலைப் பெருவெளியில் சூரியசந்திரர்களுடைய வெய்யிலும் நிலவும் இல்லை. ஆனால், அங்கு இடையறாத ஒரு பேரொளி விளங்கிக்கொண்டு இருக்கும். இடையறாத சிவயோக சாதனை செய்து சகஸ்ரார சித்தி பெற்றோர்களே அதனை அறிவார்கள்.

"வான்இந்து கதிர் இலாத நாடு அண்டி, நமசிவாய வரை ஏறி" என்று பழநித் திருப்புகழில் இதே கருத்தை அடிகளார் கூறி இருக்கின்றார். “இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத பொன் இடம்” என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார். 


தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்தாட ---

தோகைமயில் - தோகைமயில் போன்ற உமையம்மையார். உவமை ஆகுபெயர்.

இனி, மயிலாக இருந்து சிவபெருமானைப் பூசித்தவர் என்றும் பொருள்படும்.  அம்பிகை மயில் உருவுடன் வழிபட்ட திருத்தலம் திருமயிலாப்பூர்.

உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட நடராஜ மூர்த்தியைப் போல் அடியேனும் நடனம் புரிந்து இன்புற வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆடுவது மகிழ்ச்சியினால் விளையும் மெய்ப்பாடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெற்ற ஆன்மா இன்ப நடம் புரியும்.


சோதி அயிலும் தாரும் அருள்வாயே ---

அயில் - கூர்மை. அது வேலாயுதத்தைக் குறிக்கின்றது. வேலை எனக்கு அருள் புரியும் என்பதன் உட்பொருள், வேல் பரபூரண ஞானமாதலின், ஞானத்தை அருள்புரியும் என்பதாகும். காதல் கொண்ட தலைவி காதலனுடைய மலர்மாலையை விரும்புவாள். இங்கே அருட்காதல் கொண்ட பக்குவம் உள்ள ஆன்மா முருகவேளுடைய மலர்மாலையை விரும்புகின்றது.

மால்கொண்ட பேதைக்குஉன்    மணநாறும்

மார்தங்கு தாரைத்தந்து அருள்வாயே.      ---நீலங்கொள் திருப்புகழ்.


வாரி அகிலம் கூச ---

மயில் ஆடுகின்ற போது எழு கடல்களும் அஞ்சின. அகிலம் - எல்லாம்.  

“குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்

திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே.”

என்ற கந்தர் அலங்காரப் பாடலினால், மயிலின் பெருமையை அறிக.


ஆயிரம் பணம் சேடன் வாய்விட ஓட ---

ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் மயிலின் நடனத்தைக் கண்டு அஞ்சி, தனது வாய்களைப் பிளக்கவும், பயந்து ஓடவும் செய்தான். விடவும் ஓடவும் என விரிக்க. 

“செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை

   சிந்தப் புராரி அமிர்தம்

திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்

   தீ விஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல

   சங்கார கோர நயனத்

தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு

   சண்டப் பரசண்ட மயிலாம்”. -– மயில் விருத்தம்.

எண்பாலும் வார்மணி உதிர்ந்து ஓடவே ---

ஆதிசேடனுடைய பணாமகுடங்களில் உள்ள நீண்ட நாகரத்தின மணிகள் உதிர்ந்து, எட்டுத்திக்குகளிலும் சிந்தி ஓடின.  மணிகள் உதிர்கின்ற அளவில் அஞ்சி சேடன் ஓடினான் என்று குறிப்பிடுகின்றார்.


கவின் நிறைந்த மாமயில் விடும் சேவற்கொடியோனே ---

மயிலை ஆடவிடுகின்ற சேவலனே என்று பொருள். மயில் என்ற இடத்தில், இரண்டாம் வேற்றுமை தொக்கி நிற்கின்றது. எனவே, "மயில் விடும்" என்பதற்கு "மயிலை விடும்" என்று பொருள் செய்யப்பெற்றது.

உலகம் இன்புறும் பொருட்டு, நாத தத்துவத்தினின்றும் சுத்தமாயையை கலக்கி, அதினின்றும் ஏனைய தத்துவங்களை இறைவன் உண்டாக்குகின்றான்.

இந்த உட்பொருளை விளக்கவே முருகவேள் மயிலை நடனம் செய்ய விடுகின்றார் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.


சேவல் கொடியோனே ---

சேவல் - நாத தத்துவம். மயில் விந்துத் தத்துவம். நாத தத்துவத்தை உடையவன் முருகன்.

மயில் ஆடுவதனாலும் சேவல் கூவுவதனாலும், சிவதத்துவங்கள் விளக்கமுற்று, அதனால் வித்யா தத்துவங்களும், ஆன்ம தத்துவங்களும் தொழிற்படுகின்றன. 


ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள்பாலா ---

ஆரியன் – பிரமதேவன்.  

அவன் தாதை – பிரமதேவரின் தந்தை ஆகிய திருமால்.

மாலும் அயனும் காணாத சோதி வடிவாய் நின்ற சிவமூர்த்தியின் திருக்குமாரர் முருகவேள்.

பிரமன் - இராஜச குணம். திருமால் - தாமத குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனை அடைய முடியாது.

மால் அயன் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு ---

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.


ஆடல் அருணம் சோதி ---

அருணம் - சிவப்பு. இறைவர் சிவந்த சோதி வடிவானவர். அது கருணை நிறைந்த சோதி என்க.


அருட்சோதி --- அருள்மயமானது.

சுயஞ்சோதி ---  தானே விளங்குவது.

பரஞ்சோதி --- பெரிய பொருளாக விளங்குவது.

சிவசோதி --- மங்கலத்தைத் தருவது.

ஞானசோதி --- அறிவின் வடிவாயது.

ஏமசோதி --- இன்பத்தை வழங்குவது.

வாமசோதி --- அழகியது.

நடனசோதி --- எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது.

இவ்வாறு பற்பல நாமங்களையும் கொண்டது சோதி ஆகும்.


ஆனைமுகவன் தேடி ஓடியே அணங்கு ஆதல் ---

ஆனைமுகவன் - தாரகாசுரன். அவன் போர் எங்கே என்று தேடி வருபவன். தேவர்கட்குப் பெருந்துயர் செய்தவன். மாயையில் வல்லவன்.

அணங்கு - வருத்தம். அவன் வருத்தத்தை அடைதலை அடியவர்களாகிய அமரர் பொருட்டு ஆறுமுகப் பெருமான் புரிந்தனர்.


கருத்துரை


முருகா! சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.









பொது --- 1117. பக்கமுற நேரான

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பக்கம்உற நேரான (பொது)


முருகா!

உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,  

உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.



தத்ததன தானான தத்ததன தானான

     தத்ததன தானான ...... தனதான


பக்கமுற நேரான மக்களுட னேமாதர்

     பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான


பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை

     பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற்


புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு

     பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன்


பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது

     புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே


இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்

     எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே


எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள

     எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா


மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ

     மத்தமயில் மீதேறி ...... வருவோனே


வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


பக்கம் உற நேரான மக்கள் உடனே, மாதர்

     பத்தியுடன் மேல்மூடி, ...... இனிதான


பட்டின் உடனே மாலை இட்டு, நெடிது ஓர் பாடை

     பற்றி, அணைவோர் கூவி, ...... அலைநீரில்


புக்கு, முழுகா, நீடு துக்கமது போய், வேறு

     பொன் தீ இடவே, ஆவி ...... பிரியாமுன்,


பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது

     புத்தி நெடிது ஆம் வாழ்வு ...... புரிவாயே.


இக்கன் உகவே நாடு முக்கணர், மகாதேவர்,

     எப்பொருளும் ஆம் ஈசர் ...... பெருவாழ்வே!


எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முது சூர்மாள,

     எட்டி எதிரே ஏறும் ...... இகல்வேலா!


மக்களொடு வான்நாடர், திக்கில் முனிவோர் சூழ,

     மத்த மயில் மீது ஏறி ...... வருவோனே!


வைத்தநிதி போல்நாடி, நித்தம் அடியார் வாழ

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


பதவுரை


இக்கன் உகவே நாடு முக்கணர் --- கரும்பு வில்லினை உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும்,

மகா தேவர் --- தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும்,

எப்பொருளும் ஆம் --- எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய,

ஈசர் பெரு வாழ்வே --- சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!

எட்ட அரிது ஓர் வேலை வற்ற --- ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும்,

முதுசூர் மாள --- சூரபதுமன் ஆதியோர் மாளவும்,

எட்டி எதிரே ஏறும் இகல் வேலா --- மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!

மக்களோடு வான்நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே --- மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போலக் கருதி வழிபடும் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் --- பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும்,

பத்தியுடன் மேல் மூடி இனிதான பட்டின் உடனே ---  முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடியும்,

மாலை இட்டு –-- மாலை இட்டும்,

நெடிது ஓர் பாடை பற்றி --- நீண்டதொரு பாடையில் கிடத்தி,

அணைவோர் கூடி --- அணைபவர்கள் எல்லோரும் கூடி,

அலை நீரில் புக்கு முழுகா, நீடு துக்கம் அது போய் --- அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே,

வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் --- மாற்றார்கள் போல, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே,

பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே --- தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.

பொழிப்புரை

    கரும்பினை வில்லாக உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும், எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய, சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!

    ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும், சூரபதுமன் ஆதியோர் மாளவும், மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!

    மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!

    சேமநிதி எனக் கருதி தேவரீரை நாள்தோறும் வழிபடும் அடியவர்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

    பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும், முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடி, மாலை இட்டு, நீண்டதொரு பாடையில் கிடத்தி, அணைபவர்கள் எல்லோரும் கூடி அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே, மாற்றார்கள் போல உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே, தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.

விரிவுரை


இக்கன் உகவே நாடு முக்கணர் --- 

இக்கு – கரும்பு. இக்கன் – கரும்பினை வில்லாக உடைய மன்மதன். 

உகுதல் – உதிர்தல், சிதறுதல், சாதல்.

முக்கண்ணர் என்னும் சொல் முக்கணர் என வந்தது.

முக்கண் பரம்பொருள் இக்கனைப் பொடி ஆக்கிய வரலாறு

        இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

      "தந்தையே! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

      சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை,   கிரியை,  யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி,  தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒருகணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது.

      இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவிக்கின்றனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல்கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர்தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

      இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்,  அருவமும்,   உருவமும்,  உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"


"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும் நீரார்"


      "சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன்,  ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்,   சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மைபோல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத் தக்கது" என்றார்.

      அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து,  சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார்.  மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன? அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை மணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.


"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".


      பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

      "அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால்,  பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுதும் உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் ஒருவரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

      "சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

      "திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

      "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

    "முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

      "சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

      "உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

      "திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் சிவபரம்பொருள் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

    "உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

     "தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள், உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

      "சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

      இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது  அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் கூறுவதைப் போல் என்னிடம் கூறினாய். நீ சொன்னவை எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவுபெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகாது. ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம், தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.


"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே".


      பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ?  பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்சபாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

      அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

      பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

      மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

      பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில்  உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

      மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத்  தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி,  மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும்,  சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது,  தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்திதேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து,  வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்திதேவர் விடை கொடுத்தார்.

      மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

      இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.  


எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முதுசூர் மாள, எட்டி எதிரே ஏறும் இகல் வேலா --- 

எட்ட அரிது ஆகிய வேலை - ஆழம் காண அரிதாகிய கடல்.


வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- 


    வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என்று பாடுவார் வள்ளற்பெருமான். இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணை என்றும் மாறாத இயல்பை உடையது என்பதால் “மாறாத" என்றார் அடிகளார். “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.


"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்

சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,

கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து

முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.”      --- திருஞானசம்பந்தர்.


"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,

சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,

மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.


பல் அடியார் பணிக்குப் பரிவானை,

         பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,

செல் அடியே நெருங்கித் திறம்பாது

         சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,

"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"

         நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.

வல் அடியார் மனத்து இச்சை உளானை,

         வலிவலம் தனில் வந்துகண் டேனே.          --- சுந்தரர்.


"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"....    --- திருவாசகம்.


தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த

வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய

மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"

தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே.  --- திருவாசகம்.


"உற்ற இடத்தில் உதவநமக்கு

     உடையோர் வைத்த வைப்பு" அதனை,

கற்ற மனத்தில் புகும் கருணைக்

     கனியை விடைமேல் காட்டுவிக்கும்,

அற்றம் அடைந்த நெஞ்சே! நீ

     அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,

செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,

     சிவாயநம என்று இடு நீறே.                 --- திருவருட்பா.


உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்

     ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,

கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்

     கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்

"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"

     இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,

திலகமே, திரு ஒற்றி எம் உறவே,

     செல்வமே, பரசிவ பரம்பொருளே.         --- திருவருட்பா.


பக்கம் உற நேரான மக்களுடனே மாதர்......... வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் ---

உடம்பை விட்டு உயிர் பிரிந்ததும், மனைவியும் மக்களும், உற்றாரும், பிறரும் கூடி இருந்து அழுவர். பிணத்தை நன்றாக அலங்காரம் செய்வர். “மையினால் கண் எழுதி, மாலை சூட்டி” என்பார் அப்பர் பெருமான். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்றுப் பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்துவிடுகிறது. சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் திக்கு இரையாக்குவார்கள். அவ்வாறு உடலுக்குத் தீயினை மூட்டிய உறவினரும் மற்றோரும் தீட்டுப்போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள். அந்த நிலை வரும் முன்னர் இறைவனது திருவடியை நாள்தோறும் வழிபட்டு, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளவேண்டும்.


“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 

பேரினை நீக்கிப் பிண மென்று பேரிட்டுச் 

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 

நீரினில் மூழ்கி கினைப் பொழிந் தார்களே.”  -- திருமந்திரம்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.”  -- திருப்புகழ்.


கருத்துரை

முருகா! உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,  உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.


24. உண்மையான புலையன்

"நீசனோ நீசன்? நினையுங்கால் சொல்தவறும்

நீசனே நீசன்; அவனையே - நீசப்

புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம்

புலையனாம் என்றே புகல்."


ஆராய்ந்து பார்த்தால், புலால் உண்பவன் உண்மையான புலையன் அல்ல. சொன்ன சொல்லில் இருந்து மாறுபடுபவனே உண்மையான புலையன். சொன்ன சொல் தவறாத, ஊன் மட்டும் உண்ணும் புலையனை இழிவான புலையன் என்று சொல்லும் புலையனே மேலான புலையன் என்று சொல்லலாம்.


84. வழுவழுத்த உறவு

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்

     வளநாட்டில் எடுத்த ராகம்

தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்

     இருப்பதுவே தக்க தாகும்!

குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்

     கல்லாமை குணமே! நாளும்

வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்

     றியபகையே வண்மை யாமே.


இதன் பொருள் ---


    இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் – அணிகள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்ட திருத் தண்டலை இறைவரின்  வளம்பொருந்திய  நாட்டிலே,  எடுத்த ராகம் தழுதழுத்துப்  பாடுவதின்  மௌனமாய் இருப்பதுவே தக்கது ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக்  காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும்; குழை குழைத்த கல்வியினும்  கேள்வியினும் கல்லாமை குணமே - தெளிவற்ற  கல்வி  கேள்விகளை விடக்  கல்லாமையே நன்மை தருவதாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற உறவைக் காட்டிலும் நீங்காத சினத்தைப் பொருந்திய பகையே வளம் உடையதாகும்.


23. புல்லரிடம் மூன்று குணங்கள்

“செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம்,

தங்கு மொழிசந் தனம்போலும், - பங்கியெறி

கத்தரியைப் போலும்,இளங் காரிகையே! வஞ்சமனம்

குத்திரர்பால் மூன்று குணம்.”


இளம்பெண்ணே! செந்தாமரை போலும் அழகான மலர்ந்த முகமும், நல்ல மணமுடைய சந்தனம் போலும் இனிமை பொருந்திய மொழியும், முடியை வெட்டுகின்ற கத்தரிக்கோலைப் போலும் வஞ்சனை பொருந்திய மனமும் என வஞ்சகரிடம் இம் மூன்று கொடுங்குணங்கள் உள்ளன.


(வதனம் - முகம்.  பங்கி - தலைமயிர்.  குத்திரர் - வஞ்சகர்.)


83. ஊருடன் கூடி வாழ்

தேரோடும் மணிவீதித் தண்டலையார்

     வளங்காணும் தேசம் எல்லாம்

போரோடும் விறல்படைத்து வீராதி

     வீரரென்னும் புகழே பெற்றார்,

நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு

     நடப்பதுவே நீதி ஆகும்!

ஊரோட உடனோட நாடோட

     நடுவோடல் உணர்வு தானே.


      (தொ-ரை.) தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும் தேசம் எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய  தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரரெனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றியடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும், நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடுநிலை தவறாமல் நடத்தல் அறிவுடைமை அல்லவா?

    ‘ஊரோட உடன் ஓடு!; நாடு ஓட நடுவோடு!' என்பது பழமொழி. ‘ஊருடன் கூடிவாழ்' என்றார் ஒளவையார். “உலகத்தோடு ஒட்ட ஒழிகல்” என்றார் திருவள்ளுவ நாயனார். மாற்றங்களைக் கொண்டது உலகவாழ்க்கை. மனிதர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை உண்டு. ஒழுகலாறுகள் உண்டு. வாழ்க்கை முறையில் வேறுபாடும் உண்டு. சமயநெறிகளிலும் வேறுபாடு உண்டு. இவை ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் இருக்கலாம். ஒத்துப் போகவும் முடியாது. ஆனாலும், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துபோவதுதான் அறிவுடைமை. நல்லவர் என்று கருதி யாரையும் ஏற்றுக் கொள்ளுவதும், தீயவர் என்று கருதி யாரையும் விலக்குவதோ கூடாது. இப்பாடலில், வீராதி வீர்ரெனும் புகழே பெற்றார் என்று குறிப்பிட்டு உள்ளது சிந்தனைக்கு உரியது. பெருவீரராக ஒருவர் இருப்பதால், அவர் மற்றவரை தாழ்வாக எண்ணுவது அறிவுடைமை ஆகாது. அனைத்துத் தரப்பு மக்களோடும் கூடி வாழ்தல் வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் எல்லா நிலையிலும் இருக்கலாம். ஆனாலும், ஒத்துப் போய் வாழ்வதே அறிவுடைமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூறு கூறும். வசு என்றால் பூமி என்று பொருள். பூமி என்றால் பூமியில் வாழும் மனிதர்களைக் குறிக்கும். ‘உலகமே ஒரு குடும்பம்’ என்றும் வழங்கப்பட்டு வருகிறது. (வசுதா + ஏவ + குடும்பகம் = வசுதைவ குடும்பகம்). சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பார்கள். யாருடைய உதவியும் யாருக்கும் எந்த நேரத்திலும் தேவைப்படும்.

வேண்டுதலும், வேண்டாமையும் மனிதனுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் ஆகும். இதை விருப்பு வெறுப்பு என்றும் சொல்லலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒன்றில் விருப்பத்தை வைத்து விட்டால், அதில் உள்ள குற்றம் குறை தோன்றாது. ஒன்றில் வெறுப்பை வைத்து விட்டால், அதில் உள்ள நன்மை தோன்றாது. எனவே, விருப்பு வெறுப்பு கூடாது. விருப்பு, வெறுப்பு காரணமாக, வினைகள் விளைகின்றன. வினைகள் காரணமாக பிறப்பு உண்டாகின்றது. பிறப்பு உண்டானால் இறப்பும் உண்டு. சங்கிலித் தொடர் போல, இவை யாவும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருளை விரும்புவதால்,அது நிலைக்காமல் போய்விடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. வெறுப்புக் கொள்வதால், அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. இந்த அச்சமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. 

 

    வேண்டுதல் --- பற்றாலும், ஆசையாலும், பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.

 

     வேண்டாமை --- வெறுப்பாலும்,  பொருந்தாமையாலும்,  பகைமையாலும் ஒன்றை விரும்பாமை.

 

      நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும், கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும், கருவை கருப்பை மூடியிருப்பது போலவும், ஆசையானது, உண்மை அறிவை விளங்கவொட்டாமல் மறைத்திருக்கிறது. உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமாக,  ஒன்றை விரும்புதலும், ஒன்றை வெறுத்தலும், அவற்றால் விளையும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்று, பிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால், வெறுப்பு வருகின்றது.

      இந்த ஆசையும், அதனால் வினையின் விளைவும்,அதன் காரணமாக விருப்பு வெறுப்புக் கொள்வதும், அதனால் உண்டாகும் பிறப்பு இறப்புத் துன்பங்களும் நம்மைப் பற்றாமல் இருக்கவேண்டுமானால், அவற்றால் வரும் துன்பங்களை இல்லாமல் போக வேண்டுமானால், ஆசையை அடக்க வேண்டும். எது விதிக்கப்பட்டதோ, அதன்படி நடந்துகொள்ளவேண்டும். அப்போது விருப்பு வெறுப்புத் தோன்றாது. பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். தொந்தம் - துவந்தம் - இரட்டைகள் என்னும்,விருப்பு - வெறுப்பு,சுகம் - துக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடவேண்டும்.

“ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்” என்பது வள்ளற்பெருமானாரின் அருள்வாக்கு.


22. புல்லர் இருமலுக்கு ஒப்பு

“துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே,

மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும்

கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்

கடுக வசமாகை யால்.” — நீதிவெண்பா.


நஞ்சு போலும் கசப்பான மருந்தால் இருமல் அடங்கிப் போகும். இனிமைக்கு மாறாக உள்ளதால், கடும் சொல்லைக் கண்டு தீயவர்கள் விரைந்து அடங்கிப் போவார்கள். எனவே, மிகுந்து வரும் இருமல் நோயும், தீயோரும் ஒப்பானவர்கள் என்று உணர்தல் வேண்டும்.


(கடு - நஞ்சு போன்று கசப்பானவை. கடுக - விரைந்து.  வசம் ஆதல் - அடங்கிப் போதல். பன்னும் - சொல்லப்படும்.  துன்னும் - மிகுந்து இருக்கும்.)


82. சொல் ஒன்று - செயல் ஒன்று

தனத்திலே மிகுத்தசெழுந் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்,

இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம்

     ஒன்றாகி எல்லாம் செய்வார்;

சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ

     சொல்வதொன்று! செய்வதொன்று!

மனத்திலே பகையாகி உதட்டிலே

     உறவாகி மடிவர் தாமே.


இதன் பொருள் ---

        தனத்திலே மிகுந்த செழுந்தண்டலையார் பொன்னி வளம் தழைத்த நாட்டில் - செல்வத்திலே சிறப்புற்ற வளமிக்க திருத்தண்டலை இறைவருடைய காவிரியின் வளங்கொழிக்கும் நாட்டிலே, இனத்திலே மிகும் பெரியோர் மனம் வாக்கு ஒன்று ஆகி எல்லாம் செய்வார் - நட்பிலே சிறந்த பெரியோர்கள் நினைவும் சொல்லும் ஒன்றுபட்டு யாவற்றையும் இயற்றுவார்கள்; சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று - செற்றத்திலே சிறந்த கீழ்மக்களின் வேலையெனிலோ கூறுவது ஒன்று, செய்வது மற்றொன்று, மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவு ஆகி மடிவர் - உள்ளத்திலே பகை வைத்துக்கொண்டு பேச்சிலே உறவு காண்பித்துக் காலத்தைக் கழிப்பர்.


         ‘உள்ளே பகை, உதட்டில் உறவு,' என்பது பழமொழி. "கனவினும் இன்னாது மன்னோ, வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு" என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


“யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேருந் துணைமை உடையவர், - சாரல்

கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - யாருக்கு ஒருவரது உள்ளத்தைத் தேர்ந்து அறியும் ஆற்றல் உள்ளது?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் – மலைச் சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே! கேள்;  மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாகவே இருக்கின்றனவே!


“மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு

வினைவேறு பட்டவர்பால் மேவும், - அனமே,

மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே

கனம்ஒன்று மேலவர்தம் கண்.” ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

அன்னம் போன்றவளே! ஒழுங்கற்ற செயலைச் செய்யும் கீழோரிடத்தில் மனமும் சொல்லும் செய்யும் செயலும் ஒன்று பட்டு இராது. வேறு வேறாக இருக்கும். ஆனால், பெருமை பொருந்திய பெரியோரிடத்தில் மனமும் சொல்லும் உயர்ந்த செயலும் ஒன்றாகவே இருக்கும்.


21. அறிவீனரைத் திருத்துதல் ஆகாது

“அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும், உள்ளியது

கந்தம் கெடுமோ கரை.”


மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ? மாறாது. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா? இல்லை.


(அவ்வியம் - பொறாமை.  திவ்விய – மேலான. கந்தம் - மணப்பண்டங்கள்.  உள்ளி - வெள்ளைப் பூண்டு. கந்தம் - தீநாற்றம்.  கரை - சொல்லு.)


81. பொல்லாத கள்ளர்

“செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத

     கள்ளர்இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்

     திருநீறு குழைக்குங் கள்ளர்

அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்

     கள்ளர்இவர் ஐவர் தாமே.”


இதன் பொருள் ---

        செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே - வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 

        திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் – பொருட்களைத் திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே. இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் - எனின், தீய கள்ளர் யார் என வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய கள்ளருடன் கூடிக் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு குழைத்திடும் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளர்கள் ஆகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவருமே ஆவர்.

      ‘ஆசாரக் கள்ளர்’  ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோர். இவர்களைக்  கண்டு  பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார். ஆகையால் வெளிப்படையாகத் திருடரெனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், தம்மிடத்துச் செல்வம் இருந்தும் இல்லாதவர் ஓபல நடித்துப் பொருள் குவிப்போர். இவர்கள் தோற்றத்தில் நல்லவராக நடித்து மக்களை ஏமாற்றுவோர் ஆவர். 

    அன்று பாடிக் காட்டிய இந்த நிலை, இக்காலத்தில் கண்ணால் காணக் கூடியதாக உள்ளது. 


        இவ்வாறு கள்ளத்தனமாக நடந்துகொள்பவரைக் குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடினார்.


“கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்;

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்;

கண்காணி யாகக் கலந்து எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.”        -- திருமந்திரம்.

        மேற்பார்வையிட்டு ஏற்பன செய்விப்போன் கண்காணி எனப்படுவான். உயிர்களுக்குக் கண்காணியாக உள்ளவன் இறைவன். இந்த  உண்மையினை அறியாது பலர் தவறான செய்கைகள் பலவற்றையும் செய்கின்றனர். அவர்கள் எண்ணத்தில் கண்காணி இல்லை. இன்னும் சிலர் இதை நன்கு அறிந்து வைத்து இருந்தும், சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்காக அடியார் வேடம் பூண்டு பிறரை மருட்டிப் பொருள் குவிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இவர்களுக்கு ஏதும் பொருள் ஈயாவிட்டால், இவர்களால் நமக்குத் துன்பம் ஏதும் உண்டாகுமோ என்னும் அச்சம் காரணமாக இவர்களுக்குப் பொருள் மிக வழங்குவோர் உண்டு. இவர்களுக்குப் பொருளை நிறையத் தந்தால் தாம் செய்த பாவம் தொலைந்து விடும் என்னும் அஞ்ஞானிகளும் இல்லாமல் இல்லை. மேற்பார்வையாளனாகக் கலந்து எங்கும் நலம்பெற, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று அருள்பவன் இறைவன். அங்ஙனம் நின்று அருள்பவனை ஆசாரத்தில் நின்று நற்பண்புகளை வளர்த்துக் கொண்ட உண்மை அடியவர்கள் கள்ளத்தனம் ஒழிந்தவர் ஆவர். 

பத்தி நெறியில் நில்லாமல், வேட மாத்திரத்தால் அடியார் போன்று காட்சி அளித்து, பொருளைக் கருதி, நன்னெறியைப் பிறருக்கு எடுத்து உரைப்பவர்களைப் பித்தர் என்கிறார் திருமூல நாயனார். இப் பித்தர்கள் பெருநோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள்.


“பத்திவிற்று உண்டு பகலைக் கழிவிடும்

மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது

வித்துக் குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்

பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே."        -- திருமந்திரம்.

        வேட மாத்திரையால் பத்தி உடையார் போன்று ஏனையார்க்கு நெறிமுறைகளைப் போதித்து, விலைபெற்று வாழும் வஞ்சகர் வீண்பொழுது கழிக்கும் பொருட்பித்தர் ஆவர். அவருக்கே மறுபிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான வினையை நெல்லைக் குற்றி அரிசியாக்கி உண்பது போல், சிவகுருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்து எனச் செய்தவர், பிறப்பு என்னும் விளைநிலத்தைப் பாழ் செய்தவர் ஆவர். திருவடியுணர்வு கைவந்த இவர் சிவப்பித்தர் ஆவார். அவர்களுக்கு எக்காலத்தும் பிறப்பு இல்லை. 


20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி.”


கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழம் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் தொலைவிலும், சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழம் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும்.  ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களுக்குக் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது.  (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.)


(கொம்பு உளது - ஆடு மாடு முதலியன.  வெம்புதல் - சினம் கொள்ளுதல்.  கரி - யானை.  வம்பு - தீமை.)


80. தேவதேவன் ஆடும் இடத்திலே பேய்களும் ஆடும்


பேரான கவிராச ருடன்சிறிய

     கவிகளும்ஒர் ப்ரபந்தம் செய்வார்!

வீராதி வீரருடன் கோழைகளும்

     வாள்பிடித்து விருது சொல்வார்;

பாராளும் தண்டலைநீள் நெறியாரே!

     இருவரையும் பகுத்துக் காணில்,

ஆராயும் மகாதேவர் ஆடிடத்துப்

     பேய்களும் நின் றாடுமாறே.


இதன் பொருள் ---

    பார் ஆளும் தண்டலைநீள் நெறியாரே - உலகைக் காத்து அருளும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!

    பேரான கவிராசருடன் சிறிய கவிகளும் ஓர் பிரபந்தம் செய்வார் - புகழ்பெற்ற கவியரசருடன் சிறு கவிஞரும் ஒரு நூல் எழுதுவர்; வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார் - பெருவீரர்களுடன் வீரமற்றவர்களும் வாளேந்தி வெற்றி வெற்றி என்று கூறுவார்கள். இருவரையும் பகுத்துக் காணில் - இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப் பேய்களும் நின்று ஆடும் ஆறே - (பெரியோர்) ஆராய்ச்சி செய்யும் சிவபெருமான் ஆடும் இடத்திலே பேய்களும் நின்று ஆடுவது போலாம்.

      எல்லோரும் பெருவீரராக இருப்பது இல்லை. எல்லோரும் பெருங்கவிஞராகவும் இருப்பதும் இல்லை. பெருவீரர் இருப்பதனாலேயே மற்றவரும் போர்செய்யப் போகாமல் இருக்க முடியாது. பெரும் புலவரைக் கண்டு சிறுபுலவர் கவிசெய்யாமல் இருத்தலும் இயலாது. இருதிறத்தாரும் கலந்திருப்பதே உலகியல். சிவபரம்பொருள் திருநடனம் புரியும் இடத்தில்தான் பேய்களும் கூத்தாடுகின்றன.


பொது --- 1116. கட்டம்உறு நோய்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கட்டம்உறு நோய் (பொது)


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே 

தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


தத்ததன தானான தத்ததன தானான

     தத்ததன தானான ...... தனதான


கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய

     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே


கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு

     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன்


இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி

     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன்


எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத

     இட்டமினி தோடார ...... நினைவாயே


துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்

     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே


மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ

     மத்தமயில் மீதேறி ...... வருநாளை


வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில், மாமாய

     கட்டுவிடும் ஓர் காலம் ...... அளவாவே,


கத்த உறவோர், பாலர், தத்தை, செறிவார், வாழ்வு

     கற்புநெறி தான்மாய, ...... உயர்காலன்


இட்ட ஒரு தூதாளும் முட்ட, வினையால் மூடி,

     இட்ட விதியே ஆவி ...... இழவாமுன்,


எத்தி, உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத,

     இட்டம் இனிதோடு ஆர ...... நினைவாயே.


துட்டர் என ஏழ்பாரும் முட்டவினையாள் சூரர்

     தொக்கில் நெடு மாமார்பு ...... தொளையாகத்


தொட்ட, வடிவேல் வீர! நட்டம் இடுவார் பால!

     சுத்த தமிழ் ஆர் ஞான ...... முருகோனே!


மட்டு மரை நால்வேதன் இட்டமலர் போல் மேவ,

     மத்தமயில் மீது ஏறி ...... வரு நாளை,


வைத்த நிதி போல் நாடி, நித்தம் அடியார் வாழ,

     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.


பதவுரை

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினை ஆள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாகத் தொட்ட வடிவேல் வீர --- தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        நட்டம் இடுவார் பால --- அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

        சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே --- தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ --- நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து,

மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில், 

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல்

        மாமாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே --- உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு, 

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய --- சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக 

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட --- பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க, 

வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

பொழிப்புரை

        தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!

        அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!

         தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!

          நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து, அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில்,  சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!

துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடலானது, உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு,  சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க,  வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.

விரிவுரை


மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ --- 

மட்டு – நறுமணம். மரை – தாமரை. நால்வேதன் – பிரமதேவன். இட்டமலர் – விருப்பமான மலர். 

பிரமதேவன் விரும்பி வீற்றிருப்பது தாமரை மலர்.


மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- 

மத்தம் - அதிக உற்சாகம்.


வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- 

        வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணையானது என்றும் மாறாத இயல்பை உடையது என்பதா “மாறாத" என்றார் அடிகளார்.

        “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.


"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்

சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,

கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து

முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.”     --- திருஞானசம்பந்தர்.


"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,

சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,

மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.


பல் அடியார் பணிக்குப் பரிவானை,

         பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,

செல் அடியே நெருங்கித் திறம்பாது

         சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,

"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"

         நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.

வல் அடியார் மனத்து இச்சை உளானை,

         வலிவலம் தனில் வந்துகண் டேனே.          --- சுந்தரர்.


"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"....    --- திருவாசகம்.


"தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த

வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய

மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"

தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே."  --- திருவாசகம்.


"உற்ற இடத்தில் உதவநமக்கு

     உடையோர் வைத்த வைப்பு" அதனை,

கற்ற மனத்தில் புகும் கருணைக்

     கனியை விடைமேல் காட்டுவிக்கும்,

அற்றம் அடைந்த நெஞ்சே! நீ

     அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,

செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,

     சிவாயநம என்று இடு நீறே.                 --- திருவருட்பா.


உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்

     ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,

கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்

     கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்

"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"

     இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,

திலகமே, திரு ஒற்றி எம் உறவே,

     செல்வமே, பரசிவ பரம்பொருளே.         --- திருவருட்பா.


கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- 

கட்டம் – துன்பம்.

குடில் – குடிசை. உடம்பைக் குறித்தது. 

குடில் - குடிசை. உடம்பைக் குரம்பை என்றும் சொல்வார்கள். எப்போது விழும் என்று தெரியாது. ஆனால், விழுந்தே தீரும் என்பதால் குடில் என்றார்.  இந்த உடம்பு, எலும்பு சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம் முதலிய பல அசுத்தப் பொருள்களால் ஆனது. அந்த அசுத்தங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.  இந்த உடம்பு தனியே துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்காது. இனிப்பு நிறைந்த பொருளைச் சிறிதுதான் உண்ணலாம். விரும்பினாலும், ஒரு பூசணிக்காய் அளவு உண்ண இயலாது.  மனைவியுடன் சிறிது நேரம்தான் இன்புறலாம். தூங்கினால் சுகம்தான். ஓயாது தூங்கிக் கொண்டிருக்க முடியாது.  இப்படி எதை எதை இன்பமாகக் கருதி அனுபவிக்கின்றோமோ, அந்த இன்பங்களை இந்த உடம்பால் தொடர்ந்து அனுபிவிக்க இயலாது. வெயிலும் மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி நுகர்வது இந்த உடம்பு.  


கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய..... வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- 


சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்

         ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,

    பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,

         ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்

     தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்

         ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என”  ---  பழநித் திருப்புகழ்.

        வினை – பிராரத்த வினை. பிராரத்த வினையினை அனுபவித்துக் கழிக்கவே இந்த உடல் இறைவனால் அருளப்பட்டது. வினையை அனுபவிக்க வேண்டி காலம் வரை உடம்பில் உயிர் இருக்கும். வினைப் போகம் தீர்ந்துவிட்டால், உடம்பில் உயிரானது ஒருகணமும் இருக்காது.


“வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய் வினை தான் ஒழிந்தால் 

தினைப் போது அளவும் நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை

நினைப்போரை மேவும் நினையாரை நீங்கி இந் நெறியில் நின்றால்

உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே”  --பட்டினத்து அடிகளார்.


எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- 

ஏத்தி என்னும் சொல் எத்தி என வந்தது. 

ஏத்துதல் – புகழ்தல், உயர்த்தல், வாழ்த்திக் கூறுதல். துதித்தல்.

    இறைவனை நாள்தோறும் வழபாடு செய்ய வேண்டும். காலம் கருதிச் செய்தல் கூடாது. “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது அறிக.

     இறைவனை முத்தமிழால் ஓத வேண்டும் என்றார். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கின்ற பெருமான் ஓதுவாரை நிச்சயம் வாழவைப்பான் என்பது வெளிப்படை. உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழி. இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தான். “நன்பாட்டுப் புலவனாய் சங்கம் ஐறி” என்பார் அப்பர் பெருமான். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே. சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கற்புணையை நற்புணை ஆக்கியது தமிழ்; எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல்தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்; இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 


கருத்துரை


முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.


19. கயவரைத் திருத்துதல் இயலாது


“துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும், பாம்பு

துர்ச்சனரை ஒக்குமோ? தோகையே! - துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே, பாம்பு மணி

மந்திரத்தால் ஆமே வசம்.” — நீதிவெண்பா.

பெண்ணே! கெட்ட குணம் உடையோரும் பாம்பும் ஓரு நிலையில் ஒத்து இருந்தாலும், பாம்பு கெட்டவருக்கு ஒப்பு ஆகுமா?  ஆகாது.  எவ்வாறு எனில், பாம்பு மணிமந்திரங்களுக்கு அடங்கிக் கொடுமை செய்யாது இருக்கும்.  ஆனால், கயவர்கள் எவ்வழியிலும் அடங்கி, திருந்தி,  நல்வழிப்பட மாட்டார்கள்.

        (பாம்புக்குப் பால் வார்த்தாலும், விடத்தையே உமிழும் என்பார்கள். துர்ச்சனர் - கெட்டவர்.  துலை - ஒப்பு.  இணங்கார் - திருந்தார்.)

    எவ்விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்ப வசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம். கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் - மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். 

மனிதர்களை முதல் இடை கடை என்று மூன்றுவகைப் படுத்தலாம். முதல் வகையினர் பக்குவர்கள். இவர்கள் உள்ளும் புறமும் தூய்மையானவர். உள்ளேயும் வெளுப்பு, புறத்தேயும் வெளுப்பு. "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பக்குவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் எழாது. இடைப்பட்டவர்கள் பக்குவாபக்குவர்கள். அதாவது, பக்குவப்பட்டவர்களும் அல்லர், பக்குவப்படாதவர்களும் அல்லர். இவர்கள் அகத்தே கறுத்து, புறத்தே வெளுத்து இருப்பவர்கள். 

கடைப்பட்டவர்களாகிய கயவர்களிடத்து அஞ்ஞானம் நிறைந்து இருக்கும். இவர்கள் உள்ளும் புறமும் கறுத்தவர்கள். கடவுள் உண்டு என்பதையும், பாவபுண்ணியங்கள் உண்டு என்பதையும், வினையின் பயன் உண்டு என்பதையும் நம்பாதவர்கள். இவர்களைப் பீடித்து உள்ள இந்தத் தீராத நோயானது, தீராத பிணியாகிய பிறவிப்பிணிக்குக் காரணமாக அமைகின்றது. உடல்நோய், உள்ளநோய், உயிர்நோய் ஆகியவற்றைத் தீர்த்து அருள் புரிகின்ற மருத்துவராக இறைவன் உள்ளான். வள்ளற்பெருமான் பாடியருளிய பாடலைக் காணலாம்.


"கல்லையும் உருக்கலாம்; நார் உரித்திடலாம்;

கனிந்த கனியாச் செய்யலாம்;

கடுவிடமும் உண்ணலாம்; அமுது ஆக்கலாம்; கொடும்

     கரடிபுலி சிங்கம் முதலா

வெல்லும் மிருகங்களையும் வசம் ஆக்கலாம்;அன்றி

     வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம்; மணலை

     மேவுதேர் வடம் ஆக்கலாம்;

இல்லை ஒரு தெய்வம், வேறு இல்லை, எம் பால்இன்பம்

      ஈகின்ற பெண்கள் குறியே

எங்கள்குல தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்

      எத்துணையும் அரிது அரிதுகாண்;

வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா

      மணி உலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

       வளர் வயித்தியநாதனே."

இதன் பொருள் ---

     மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரான் ஆகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) கோயில் கொண்டு அருளும் வைத்தியநாதப் பெருமானே!  கருங்கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்து எடுக்கலாம்; அக் கல்லைப் பழுத்த பழமாகவும் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப் போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்களுக்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை உடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும். அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்தினை அருள்வீராக.

     எரிமலைகளில் கற்கள் உருகி நெருப்புக் குழம்பாய் வெளிவருவதைப் பார்க்கின்றோம். எனவே,  “கல்லையும் உருக்கலாம்” என்றார்.  சிற்பத்தொழில் வல்லவர், கல்லில் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண,  "கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் “கல் நார் உரித்து என்னை ஆண்டு கொண்டான்" எனவும், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்” என்று பாடி உள்ளதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வள்ளல்பெருமான் பாடுகின்றார். கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால்,  அவனுக்கு அடியவராகிய அப்பர்பெருமான், சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டு, சாவாது இருந்தார். “வஞ்சனை பால்சோறு ஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே” அப்பர்பெருமானே பாடி உள்ளார். இதனை, "நஞ்சு அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு" என்றே சேக்கிழாரும் பாடி உள்ளார். எனவே, “கடல் விடமும் உண்ணலாம், அமுது ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான்.  "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்" என்று தாயுமான அடிகளார் பாடி உள்ளார்.  அதனை ஒட்டியே, "கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்" என்றார் வள்ளல்பெருமான். வாழைத் தண்டை விறகு ஆக்கினார் பட்டினத்தார். உலகவர், வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் பேசுவர். எனவே, “மிக்க வாழைத் தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். கயவர்கள் காம இன்பத்தையே பெரிதும் விரும்பி இருப்பர். காம இன்பம் தரும் பெண் அல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளால் அன்றி இத்தகு கயவர்க்கு அறிவு விளக்கம் பெறாது என்பது பற்றி, அவர் கொண்டு உள்ள “உணர்வு அற மருந்து அருள்க” என வேண்டுகிறார்.


79. நீ நீயாகவே இரு


"பன்னகவே ணிப்பரமர் தண்டலையார்

     நாட்டிலுள பலருங் கேளீர்!

தன்னறிவு தன்னினைவு தன்மகிமைக்

     கேற்றநடை தகுமே அல்லால்,

சின்னவரும் பெரியவர்போ லேநடந்தால்

     உள்ளதுபோம்! சிறிய காகம்

அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையும்

     கெட்டவகை ஆகும் தானே.”


இதன் பொருள் ---

    பன்னக வேணிப் பரமர் தண்டலையார் நாட்டில் உள பலரும் கேளீர் – பாம்புகளை அணிந்த திருச்சடையை உடைய பரம்பொருளாகிய திருத்தண்டலை இறைவரின் நாட்டில் வாழ்வோரே கேளுங்கள்.

    தன் அறிவு தன் நினைவு தன் மகிமைக்கு  ஏற்ற  நடை  தகுமே – தனது அறிவுக்கும், தனது சிந்தனைக்கும், தனது தகுதிக்கும் தக்க ஒழுக்கம் தகும். அல்லால் – அதை விடுத்து, சின்னவரும் பெரியவர் போலே நடந்தால் உள்ளது போம் – அறிவு ஒழுக்கங்களால் சிறியவரும், அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த சான்றோர் போல நடந்துகொள்ளத் தலைப்பட்டால், உள்ளதும் போய்விடும், (அது மேலும்), சிறிய காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டவகை ஆகும் - இழிந்த காகமானது உயர்ந்த அன்னத்தைப்போல நடக்கத்  தொடங்கித் தன் நடையையும் இழந்தவாறு முடியும்.

    ‘விரலுக்குத் தக்க வீக்கம்' எனவும் ‘அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டது' எனவும் பழமொழிகள் வழங்குகின்றன.

    கோழியாக இருந்தால் முட்டை இட்டுத்தான் ஆகவேண்டும். சேவலாக இருந்தால் கூவ வேண்டும். ஒன்றின் வேலையை இன்னொன்று செய்யமுடியாது. செய்ய முயல்வதும் பயனற்றதாக முடியும்.

      பெரியவர் ஒருவரைப் பார்த்து, சிறியவரும் அவர்போல ஆகவேண்டும் என்றால் அவருக்கு உரிய நிலையில் நிற்கவேண்டும். பெரியவரைப் போல வேடமிட்டால் போதாது. கல்வி அறிவில்லாத ஒருவன், கவி பாட முற்பட்டால், அது கவியாக இருக்காது. உண்மை வேறு, போலி வேறு. பண்புகளால்தான் ஒருவருக்கு உயர்வு உண்டாகும். உருவத்தால் உயர்வு உண்டாகாது. காக்கை கருநிறமாக இருந்தாலும், வானத்தில் பறந்தாலும், அது கருடன் ஆகாது. உயரத்தில் பறக்கின்றது என்பதற்காக ஊர்க்குருவி பருந்தாக மாட்டாது.

      காகம் ஒன்று, அன்னப் பறவையைப் பார்த்து, தானும் அதுபோல ஒயிலாக நடக்கப் பழகி, அது வராமல், தனக்கு இயல்பாக இருந்து நடையையும் இழந்துவிட்டது. அதுபோல, அவரவர் அவரவரது அறிவு, நினைவு, பெருமைக்கு ஏற்றபடி ஒழுகுதல் வேண்டும். சிறியவர் பெரியவரைப் போல நடந்தால், உள்ளதையும் இழக்க நேரிடும் 


"கான மயில் ஆடக்கண்டு இருந்த வான் கோழி,

தானும் அதுவாகப் பாவித்து, ---தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே,

கல்லாதான் கற்ற கவி".

 

என்பது ஔவையார் பாடி அருளிய "மூதுரை"யில் வரும் பாடல்.

 

இதன் பொருள்---

 

      ஆழ்ந்து முறைப்படிக் கற்கவேண்டிய நூல்களைக் கற்று உணராமல், கற்றோர் சொல்லும் சொற்களைக் கேட்டு, கல்லாத ஒருவன் சொல்லும் கவியானது, காட்டிலுள்ள மயில் தன் தோகையை விரித்து ஆடுவதைப் பார்த்த வான்கோழி,  தன்னையும் மயிலாகவே நினைத்துக்கொண்டு தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடியதைப் போன்றதாகும்.

      மயிலும் வான்கோழியும் உருவத்தால் ஒரோவழி ஒத்து இருப்பதுபோல் தோன்றும். மயிலுக்கு அழகான வண்ணங்கள் பொருந்திய தோகை உண்டு. அது தனது கலாபம் எனப்படும் தோகையை விரித்து ஆடினால் மிக அழகாக இருக்கும். காண்போர்க்கு இன்பம் உண்டாகும். வான்கோழிக்கு அழகான தோகை இல்லை. அழகற்ற சிறகு மட்டுமே உண்டு. நாமும் ஆடிப் பார்க்கலாமே என்று, தன்னையும் ஒரு மயிலாக எண்ணி, வான்கோழி தனது அழகற்ற சிறகை விரித்து ஆடினால் அழகாக இருக்காது. யாரும் அதை ரசிக்க மாட்டார்கள். 

      கற்றவர் சொல்லும் சொல், நூற்பொருள் விளங்குமாறு இருக்கும். கேட்போர்க்கு இன்பம் தரும். அல்லாதார் சொல்வது அவ்வாறு இருக்காது. 

 

காளமேகப் புலவர் பாடல்,

"வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள், 

பாழ்த்த குரல் எடுத்துப் பாடினாள்--நேற்றுக்

கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேன் என்று, 

பழுதை எடுத்து ஓடிவந்தான் பார்"

 என்பதாகும். 

 இதன் பொருள்---

       எல்லாராலும் வாழ்த்தப் பெறுகின்ற, திரு நாகைக்காரோணம் என்னும் நாகப்பட்டினத்தில் இருந்த அழகு மிக்க தேவதாசி ஒருத்தி, தனது பாழான குரலை எடுத்துப் பாடினாள். அந்தக் குரலைக் கேட்டதுமே, நேற்று தனது கழுதையை இழந்து தேடிக் கொண்டிருந்த வண்ணான் ஒருவன், அவள் குரல் கழுதையின் குரலைப் போல் இருக்கவே, கழுதையைக் கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே , அதைக் கட்டுவதற்கு ஒரு கயிற்றை கையில் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பார். 

      பாடுவதற்கு உடல் அழகு போதாது. குரல் அழகு வேண்டும். பாடத் தகுந்தவர் பாடவேண்டும். ஆடத் தகுந்தவர் ஆடவேண்டும். நீ நீயாக இரு. BE YOURSELF.


மேன்மையையே விரும்புக

மேன்மையையே விரும்புக

-----


    உலகில் எத்தனையோ வகையான மக்களைக் காண்கின்றோம். பலர் பலவகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். சிலர் வாழ்வில் உயர்கின்றனர்.  சிலர் வழுக்கி வீழ்கின்றனர். மக்கள் வாழ்க்கை அமைவின் போக்கிலே எத்தனை எத்தனையோ மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் காண முடியும். நேற்று, செல்வராக வாழ்ந்தவர் இன்று வறுமையில் உழலுகின்றார். நேற்றுவரை உயர் பதவியில் செருக்கோடு இருந்தவர், இன்று சாதாரண மனிதராக இருக்கின்றார். நேற்றுவரை எல்லா வகையாலும் தாழ்த்தப் பெற்று இருந்தவர் இன்று எதிர்பாராத வகையில் உயர்த்தப் பெறுகின்றார். இதுதான் உலக இயற்கை. "பெருமையும் சிறுமையும் தான்தர வருமே" என்கிறது "வெற்றிவேற்கை" என்னும் நூல். ஒருவனுக்கு மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும், பிறரால் உண்டாவதில்லை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு. செல்வமும் வறுமையும், வாழ்வும் தாழ்வும் நிலையானவை அல்ல. வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம் என்பதை, வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையில் தெளிவாக்கி உள்ளது.

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” 

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஒர் ஊர் நண்ணினும் நண்ணுவர்”

(யானையின் பிடர்மேல் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து, அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமை எய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர்.)


“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்

அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” 

(பிறரை ஏவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும், வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர்)


“அறத்து இடு பிச்சை கூவி இரப்போர்

அரசரோடு இருந்து அரசாளினும் ஆள்வர்” 

(வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும், செல்வராகி அரசு அங்கங்களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர்.)


“குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்

அன்றைப் பகலே அழியினும் அழிவர்” 

(மலையளவு பெரும்பொருள் பெற்றவரும், பெற்ற அப்பொழுதே அதனை இழப்பினும் இழப்பர்.)



“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்

கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்” 

(ஏழு நிலைகளுடைய மாளிகையும் அடியுடன் சாய்ந்து அழிந்து, கழுதைகள் மேய்கின்ற பாழ்நிலம் ஆனாலும் ஆகும்.)


“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி

நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” 

(எருதுகளும், கழுதைகளும் மேய்ந்த பாழ்நிலமானது,  பொன்னால் ஆகிய வளையலை அணிந்த  மாதர்களையும், ஆடவர்களையும் பொருந்தி, நெற்குவியல்களைய உடைய பெரிய நகரம் ஆனாலும் ஆகும்.)


    “இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா, வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா” என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்.

    இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மனிதரின் வாழ்க்கையிலும் காணலாம். இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:


“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட,

மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்

சென்று இரப்பர் ஓரிடத்துக் கூழ் எனில், செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற்று அன்று” -- நாலடியார்.

    அறுசுவை உள்ள உணவினை, அன்புள்ள மனைவி ;இன்னும் உண்ணுக, இன்னும் உண்ணுக' என்று ஊட்டி உபசரிக்க உண்டு மகிழ்ந்தவர்களின் வாழ்க்கை அப்படியே நிலைத்து இருக்காது. ஒரு நாள் எல்லாம் மாறி வறுமை நிலையை அடைந்து, ஒருவாய்க் கூழுக்காகப் பிறர் வீடு தேடிச் சென்று பிச்சை எடுக்கவும் நேரிடலாம். நிலையற்ற செல்வம் சீமானை ஏழை ஆக்கும். சீமானும் ஏழை ஆவான். செல்வம் நிலையானது என்று கருதக் கூடியது அல்ல.


“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை

வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட

மனையாளை மாற்றார் கொள”  -- நாலடியார்.

    யானையின் கழுத்து பொலிவு பெறும்படி, குடை நிழலில் பல சேனைகட்குத் தலைவராக ஆரவாரமாய் உலாச்சென்ற மற்றத் தீவினையானது கெடுக்க, அதனால், தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர்.

    “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்நூல்கள்” பலவற்றையும் ஆராய்ந்தால், இத்தகைய எண்ணற்ற சான்றுகளைக் காணலாம். “அவிழ்ச் சுவையே அறிந்து, தமிழ்ச் சுவை அறியாத தம்பங்கள்” இதனைக் கற்றோர்பால் அறிந்து உணரவேண்டும்.  நிலையாமை குறித்து தமது முன்னோர் பாடிவைத்த பாடல்களின் உண்மை நிலையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம். தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.

    தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை. 

    தாழ்மையாக – அமைதியாக, அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறுவார்கள். அவ்வாறு இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக நடப்பார்கள். அப்படிப்பட்டவர்களே பெருந்தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர். அப்படி வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர். தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர் என்னும் உண்மையைத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகிறார்.


“பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.” 


“பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை

பெருமிதம் ஊர்த்து விடல்” 


என்னும் திருக்குறட்பாக்களின் கருத்தை உணர்தல் வேண்டும்.


    உயர்ந்தோர் தாழ்ந்தால்,உலகுக்குக் கெடுதலே இல்லை. ஆனால் தாழ்ந்தோர் உயர்ந்தோராகி, அதிகாரமும் செல்வமும் கிடைக்கப் பெற்றால், அவருக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் கேடு அமைவது இயற்கை. அறிவற்றவனிடத்தில் பெருஞ்செல்வமானது, அவனது முயற்சி எதுவும் இன்றித் தானே வந்து அமைந்த காலத்தில், தொடர்பு ஏதும் இல்லாத அயலார் அதனை நிறைய அனுபவிக்க, தான் மேற்கொள்ளும் செயலில் எல்லா வகையிலும் ஊடுபாடு உள்ள உறவினர் பசித்து இருப்பர் என்ற இன்னொரு கொடுமையையும் திருவள்ளுவ நாயனார் காட்டுகின்றார்.


“ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர், பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை”      -- திருக்குறள்.


    எனவே, நல்லோர்க்கு உயர்வு வந்தால், நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை. அல்லவர்க்கு உயர்வு வந்தால், அவருக்கு மட்டுமன்றி, சமுதாயத்துக்கே தீங்கு விளைவிக்கும். இது நடைமுறையில் காண்கின்ற, யாவரும் அறிந்த உண்மை.  ஒருசிலர் தங்கள் பதவியோ செல்வநிலையோ எவ்வளவு உயர்ந்தாலும் அதனால் இறுமாப்போ கொள்ளாமல், தமது முன்னைய நிலையினையும், தாம் சார்ந்து உள்ள சமூகத்தின் நிலையினையும் எண்ணி, தமது பதவி உயர்வாலும், செல்வ வளத்தாலும் பிறருக்குத் தம்மால் இயன்ற வரையில் நன்மைகளை ஆராய்ந்து ஆய்ந்து செயல்படுவர். ஒரு சிலர் அத்தகைய ஆக்கப்பணி செய்யாவிட்டாலும், தமது உயர்வின் செருக்கால் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். பிறரைச் சிறுமைப் படுத்திச் சிறுசொல் சொல்லமாட்டார்கள். ஆனால் அற்ப அறிவினர்களுக்கு வாழ்வு வந்தால், அந்த வாழ்வின் செருக்கால் அவர்கள் கெடுவதோடு, சமுதாயத்தையும் கெடுத்து, பல கொடுமைகளைச் செய்வார்கள். 

   இந்திரன் தன் நிலையில்லாத பதவியின் செருக்கால், நெறி பிறழ்ந்து, மாற்றான் மனைவியை அடையும் கொடும் செயலைச் செய்து தாழ்வினை அடைந்தான் என்ற புராண வரலாறு எல்லோரும் அறிந்ததே. திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு,  குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும்,  கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். 

 

“சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.”           --- நாலடியார்.

 இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும், மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.   (முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.)


“செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.”

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். 

இதன் பொருள் ---

       இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்தியபோது, தமது அறியாமை காரணமாக,  தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள். சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள். உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள். தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே." 

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர். 

“தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே.”  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார்,  தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர், காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்த உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய்,  இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை - நிழல். மாடு - செல்வம்)

    எனவே, சமுதாயம் செம்மை பெற வேண்டுமானால், எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமானால், நல்லவர் உயர்வு பெற வேண்டும். நல்லவர்கள் எக்காலத்திலும், பிற உயிர்க்கு நன்மையையே விரும்புவார்கள். மேன்மை ஒன்றையே விரும்பி, மேன்மை தரும் செயல்களையே செய்வார்கள். எல்லா உயிரும் விரும்புவது மேன்மையே. எனவே, மேன்மையையே விழைதல் வேண்டும்.

“தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ

மன்உயிர்க்கு இன்னா செயல்” -- திருக்குறள்.

தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்ந்து இருக்கும் ஒருவன், பிற உயிர்க்கும் துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதை, நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நீரும்நிலம் அண்டாத (பொது) முருகா!  சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர். தானதன தந்தான தானதன தந்தான      தான...