தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

 


“குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்

     குணம்போலும், ஈக்கள் எல்லாம்

கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்

     கூடுய்த்த நறவுபோலும்,


பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற

     பாலன்என் றுட்கருதியே

பாராட்டி முத்தம்இட் டன்பாய் வளர்த்திடும்

     பண்பிலாப் புருடர்போலும்,


துயிலின்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்

     தொட்டுத் தெரித்திடாமல்,

தொகைபண்ணி வைத்திடுவர்; கைக்கொண்டு போகவரு

     சொந்தமா னவர்வேறுகாண்!


வயிரமொடு சூரனைச் சங்கார மேசெய்து

     வானவர்க் குதவுதலைவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் –

சூரனை வயிரமொடு சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா - சூரபதுமனைச் சினந்து சங்காரம் செய்து தேவர்களுக்குத் துணைபுரிந்த முதல்வரே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம்போலும் - குயிலின் முட்டையைத் தன்னுடையது என்று நினைத்துக் காகம் அடைகாக்கும் தன்மையைப் போலும்,

ஈக்கள் எல்லாம் கூடியே தாம் உண்ணவேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் - எல்லா ஈக்களும் சேர்ந்து தாம் பருகவேண்டும் என்று நினைத்து நாள்தோறும் அடையில் கொண்டு வைத்த தேனைப் போலவும், 

பயில் சோரருக்குப் பிறந்திடத் தாம் பெற்ற பாலன் என்று உள் கருதியே - (தம் மனைவியருடன்) கலந்த கள்ளக் காதலருக்குப் பிறந்த பிள்ளையைத் தாங்கள் பெற்ற மகன் என்று மனத்தில் எண்ணி, பாராட்டி முத்தம் இட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – கொண்டாடி, முத்தம் கொடுத்து அன்புடன் வளர்க்கின்ற மனித இயல்பு இல்லாத ஆடவர்களைப் போலவும், 

துயில் இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால் தொட்டுத் தெரித்திடாமல் - தூக்கம் இல்லாமல் செல்வத்தை ஈட்டி ஒருவர்க்கும் அணுவளவும் கொடுக்காமல், தொகை பண்ணி வைத்திடுவர் - தொகை தொகையாக எண்ணி வைத்திடுவர், கைக்கொண்டு போக வரு சொந்தமானவர் வேறு - (அப்பொருளை) எடுத்துக்கொண்டு போக வருகின்ற உரிமையாளர் வேறு ஆவார்.


விளக்கம் –

  பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணாமற் சேர்த்து வைப்பவருடைய பொருளை, அவர் வாழும் காலத்திலேயே பிறர் அனுபவிக்க நேரும். உடம்பின் நிலையாமை மற்றும் செல்வத்தின் நிலையாமை குறித்த இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது. 

ஒருவனுக்கு அளவுபடாத செல்வம் வருவது, கூத்தாடும் இடத்தில் கூத்தினைக் காண, ஒவ்வொருவராக வந்து திரள்வது போல சிறிது சிறிதாக வந்து பெருகும். அப்படி வந்த செல்வமானது ஒழிந்து போகும் காலம் வரும்போது, கூத்து முடிந்தவுடன், மக்கள் ஒருசேரப் போய்விடுவது போலப் போய் ஒழியும். பெரும் செல்வமாகிய துறக்கச் செல்வமும், ஒருவன் சிறுகச் சிறுகச் செய்து வந்த நல்வினை காரணமாக அவனை வந்து அடையும். அந்த நல்வினை ஒழிந்து, தீவினை வந்த காலத்து, அது முற்றுமாகப் போய்விடும். கூத்தாடுகின்ற இடமாக இருந்தாலும், கூத்து நடக்க இல்லையானால் ஒருவரும் வருவதில்லை.  நல்வினை இல்லையானால் செல்வம் வருவதில்லை.

    “கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெரும்செல்வம், போக்கும் அது விளிந்து அற்று” என்பது நாயனார் அருளிய திருக்குறள். எனவே, செல்வம் இருக்கின்ற காலத்திலேயே விரைந்து அறம் செய்க என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.


    குயில்களுக்கு கூடு கட்டத் தெரியாது, அதனால் குயில் தான் இட்ட முட்டையை காக்கையின் கூட்டிலேயே இட்டு விடுகிறது. காக்கைகள், குயிலின் முட்டையை தன் முட்டை என்று நினைத்து, அதனைத் தன் முட்டைகளுடனே சேர்த்து அடைகாக்கும். குயிலின் குஞ்சு, காக்கையின் குஞ்சிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், காக்கை அதனைத் தன் குஞ்சு போலவே உணவளித்து வளர்க்கும். இதனைத் திருமூல நாயனார் பின்வரும் மந்திரத்தால் காட்டுகின்றார்.

“குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் 

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் 

இயக்கில்லை போக்கில்லை ஏன்என்பதில்லை 

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.”

குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போகமயக்கத்தால் இயங்காமலும், போக்கு இல்லாமலும், ஏன் என்று கேட்கா மலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்றாள்.

    மலர்கள் தோறும் தேனைத் தேர்ந்து சிறிது சிறிதாக எடுத்துக் கூடுகளில் தேனீக்கள் சேகரிக்கின்றன. ஆனால் அந்தத் தேனைத் தேனீக்கள் அனுபவிப்பது இல்லை. தேனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். தேனீக்கள் தேனை இழக்கின்றன. அதுபோல் பொருளைத் தேடி வைத்தவர்கள் செல்வத்தின் நிலையாமை காரணமாகச் செல்வத்தை இழக்கிறார்கள். செல்வம் இருந்த காலத்தில் இவர்கள் நல்ல அறம் செய்யவில்லை. இல்லாதவர்களுக்குக் கொடுக்கவில்லை. செல்வம் இழந்த நிலையில் அவர்களும் அனுபவிக்க இயலாது. தேனீக்கள் தேன் சேகரித்து இழக்கும் செயலைக் காட்டி விரைந்து அறம் செய்வதை வலியுறுத்தும் நாலடியார் பாடல் பின்வருமாறு ---

“உடாஅதும் உண்ணாஅதும் தம்முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட

உய்த்தீட்டும் தேனீக் கரி.”

ஒருவன் தேடி வைத்த பொருள், அவன் வாழுகின்ற காலத்திலேயே வேறு ஒருவனுக்குச் சொந்தமாகலாம். எனவே, தேடி வைத்த பொருள் உள்ளபோதே, நல்ல அறங்களைச் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.  

“....... ...... ..... தூயோய் நின்னை,

நல்வினைப் பயன்கொல் நான்கண்டது என,

தையல், கேள்! நின் தாதையும் தாயும்

செய்த தீவினையில் செழுநகர் கேடுஉறத்

துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன்

அன்புகொள் அறத்திற்கு அருகனேன், ஆதலின்

மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து,

தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே,

மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்.” ---  மணிமேகலை, கச்சிமாநகர் புக்க காதை.

இதன் பதவுரை ---

தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என - தூய குணம் செய்கைகளை உடையாய்!  நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி, மேலும் கூறலுற்று, தையல் கேள் – நங்கையே கேட்பயாக. நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்தமை கேட்டு - உனது தந்தையும் தாயும் முற்பிறப்பில் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரை மாநகர் தீக்கிரையாகிக் கேடு எய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் - புத்த தேவனின் அருள் அறத்தினைப் புரியும் தகுதியுடையேன், ஆகலின் – ஆதலாலே, மனைத் திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென அறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத்தனை ஆயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத்தினை உடைய பெருந்தவம் செய்யலானேன்.

முற்பிறப்பில் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றார் என்பதை, "செய்த தீவினையின் துன்புற" என்றும், அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினார். 


“சுழல் சகடக் கால்போலும், தோன்றியே அழிமின் போலும்,

அழன்மன வேசை போலும்,  அருநிதி மேவிநீங்கும்;

பழமைபோல் அதனைநம்பிப்  பழியுறச் செருக்கல்,மேக

நிழலினை நம்பிக் கைக்கொள்  நெடுங்குடை நீத்தல் ஒப்பே.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

உருளும் வண்டியின் உருளையின் கால்போலவும், தோன்றி மறையும் மின்னைப் போலவும், நச்சு உள்ளமுடைய பொதுமகள் போலவும், செல்வம் பொருந்தி நீங்கும். அச் செல்வத்தை அழியாது இருக்கும் என்று நம்பி, வசை பெருகும்படி தற்பெருமை கொள்ளுதல், மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கிவிடுவதை ஒக்கும்.


“புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற

செல்வத்தின் பன்மைத் தன்மை 

நிலைமேலும் இனி உண்டே? 'நீர் மேலைக் 

கோலம்' எனும் நீர்மைத்து அன்றே, 

தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் 

படர்புறத்தும் தாவி ஏறி, 

மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் 

வானரங்கள், வரம்பு இலாத.”   ---  கம்பராமாயணம், இராவணன் வதைப் படலம்.


இதன் பதவுரை ---

வரம்பிலாத வானரங்கள் - அளவற்ற குரங்குகள்; மலைமேல் நின்று ஆடுவபோல் - மலை ஒன்றின் மேல் நின்று (மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல;  தலைமேலும் தோள்மேலும் தட முதுகின் படர் புறத்தும் - இராவணேசுவரனுடைய தலைகள் மேலும், தோள்கள் மேலும், அகன்ற முதுகின் விசாலப் பரப்பின் மீதும்; தாவி ஏறி - தாவிக் குதித்து ஏறி;  ஆடின - நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து -இழிந்த புலைத் தன்மை உடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு ஒருப்படும்;  பொது நின்ற செல்வத்தின் - (உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும் தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை  - இழிந்த தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ? - இராவணன் வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில் உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து  அன்றே - (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேல் குமிழியின் (நிலையிலாக்) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

முக்கோடி வாழ்நாளும், முயன்று உடைய பெருந்தவமும், முதல்வன் முன் நாள், எக்கோடியாராலும் வெல்லப்படாய்  எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் கொண்டிருந்த இராவணன், எல்லாம் தொலைந்து வீழ்ந்து கிடக்கின்றான். அவனது உடல் மீது வானரங்கள் தாவிக் குதித்து நடனம் ஆடுகின்றன. செல்வத்தின் நிலையாமைக்கு உவமை இதுவே என்பது குறித்து, கவிச்சக்கவர்த்தி, தனது கூற்றாக இப்படிக் கூறி உள்ளார்.


44. கருடா! சுகமா?

“ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள், அவனிக் கெல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்; நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்;

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்,

ஏன் பிள்ளாய்! கருடா! நீசுகமோ? என்று

      உரைத்தவிதம் என்ன லாமே!»


இதன் பொருள் –

    பிள்ளாய் – இளைஞனே!  ஆம்  எனக்  கொடுக்கும்  பெரியோரை அடுத்தவர்கள் - முடியும்  என்று  அளிக்கும்  சான்றோரைச் சார்ந்தவர்கள், பிள்ளாய்! அவனிக்கெல்லாம் நாம் அதிகம் என்பர் – இளைஞனே! உலகிலே  நாமே  சிறப்புடையேம்  என்று  நடந்துகொள்வர்! நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார் - பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர், பிள்ளாய் வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் – இளைஞனே! வானமே தனது மேனியாக, எங்கும் நிறைந்த திருமேனியை உடைய திருத்தண்டலையிலே எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் அணிகலனாக வாழ்கின்ற பாம்பு, ஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோ? என்று உரைத்தவிதம் என்னலாமே - ‘என்ன பிள்ளாய்! கருடனே? நீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

      பிள்ளை - இளைஞன். ‘பிள்ளை'  என்பது  விளியேற்றால், ‘பிள்ளாய்' என ஆகும். நண்ணார் - பகைவர். வானம் போல எங்கும்  நிறைந்தவர் இறைவர். ஆகையால், ‘வான் எனும் மேனித் தண்டலையார்' என்றார். கருடனைக் கண்டால் பாம்பு நடுங்குவது இயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால், கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தால் சுகம்' என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

“தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை, செற்றார் செயக் கிடந்தது இல்” என்னும் திருக்குறள் காண்க. சான்றோர் இனத்துள் தானும் ஒருவனாக வாழவல்லவனைப் பகைவர் எவரும் அவனைச் செய்வதற்கு உரியது எதுவும் இல்லை. “பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே” என்பது திருமூலர் வாக்கு. “பெரியாரொடு நட்பு இனிது” என்பது சுந்தரர் தேவாரம்.


குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்


குணம் கெட்ட துட்டன்

-----


உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும் தன்மை உடையன. மனிதன் எப்போதும் கூட்டமாக வாழும் தன்மை உடையவன். தன் உள்ளத்திற்குப் பொருந்திய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு அவனுக்கு வாய்ப்பு உண்டு. தனியாகப் பிறந்த மனிதன் முதலில் தாய் தந்தையுடன் வாழ்கிறான். பின்பு சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறான். அதன் பின்பு மனைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறான். அதன் விளைவாகக் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பத்தை நடத்துகிறான். மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவர்களோடு பேரன் பேத்திகளைப் பெறுகிறான். அவற்றால் அவனுடைய குடும்பமே பெரியது ஆகிவிடுகிறது. ஊரார், உற்றார் என்று அவன் பிறருடன் சேர்ந்து வாழ்கிறான். 

அவனுடைய நிலைமையும், தலைமையும் பெருகப் பெருக அவன் இணக்கம் கொள்ளும் மனித சமூகம் விரிகிறது. நாட்டில் உள்ள மக்களோடு இணங்கி வாழ்கிறவன் பெரிய தலைவனாகிறான். உலகம் முழுவதும் உள்ள மக்களோடு சேர்ந்து வாழ்கிறவன் மிகமிகப் பெரிய மனிதனாகிறான். சிலருக்குத் தம்முடைய சுற்றத்தார்களை மாத்திரம் தெரிந்துகொள்ளும் வாழ்க்கை இருக்கும். சிலர் உறவினர்களாலும், ஊரவர்களாலும் மதிக்கப்படுகிற நல்லவர்களாக வாழ்கிறார்கள். அப்படியே நாட்டுக்குத் தலைவராக உள்ளவர்களை, உலகத்தவர் பலர் தெரிந்து கொள்ளும் மேன்மையும் இருக்கிறது.

'இனம் இனத்தோடு சேரும்' என்று சொல்வார்கள். நம்முடைய பண்புக்கு ஏற்றபடி அந்தப் பண்பை வளர்க்கின்ற மக்களோடு சேருவதுதான் இயல்பு. நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறான் இறைவன். நம்மிடத்தில் உள்ள தீய குணங்கள் மாற்றுவதற்கு ஏற்பச் சிறந்த மக்களோடு சேருவதற்கும் வாய்ப்பு உண்டு. உடம்பில் அழுக்கு இருக்கும்போது அழுக்கோடு புரண்டு கொண்டிருப்பவன் அறியாதவன். அழுக்கை நீக்குவதற்கு இறைவன் தண்ணீரைக் கொடுத்திருக்கிறான். அழுக்கைப் பூசிக் கொண்டு வாழாமல் அதனை மாற்றிக் கொள்வதற்குரிய நீரைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. அதுபோல இந்த உலகத்தில் அழுக்கு நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள்; தூய நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள். மனிதன் பிறந்தவுடன் எந்தப் பழக்கத்தையும் கொண்டு வருவது இல்லை. பழைய பிறவியில் இருந்த அவனுடைய சில குணங்கள், இயல்பாக இருக்கின்றன. ஆனாலும் அவற்றை மெல்லப் போக்கிக் கொள்வதற்கு நல்ல குணங்கள் உள்ளவர்களோடு இணங்க வேண்டும். அப்படி இணங்குவதனால் குற்றங்கள் குறைந்து, குணங்கள் பெருகும். விலங்குகள்கூட மனிதர்களோடு பழகினால் தம்முடைய குணங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்கின்றன. 

    "நிலத்து இயல்பால் நீர்திரிந்த அற்றாகும் மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு" என்பது திருக்குறள். நமக்கு இயல்பாக உள்ள அறிவு விளக்கம் பெறுவதற்கும், குணம் சிறந்து நிற்பதற்கும் நல்லவர்களுடைய இணக்கம் தேவை. “நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமுமே அல்லாது, நின்கும் நிலை உளதோ” என்பது பட்டினத்தடிகளார் அருள்வாக்கு. அல்லாதவர்களுடைய இணக்கத்தால் நம்மிடத்து ஏற்கெனவே பொருந்தி உள்ள தீய குணங்கள் வளர்வதோடு, நாம் யாரைச் சார்ந்து உள்ளோமோ, அவர்களுடைய தீயகுணங்களும் நம்மைச் சாரும். மனிதன் வரவர நல்லவற்றை எண்ணவும் நல்லவற்றைப் பேசவும் நல்லவற்றைச் சிந்திக்கவும் வேண்டும். இவற்றை இயல்பாகப் பெறாவிட்டாலும் சிறந்து நிற்பவர்களுடன் இணங்க வேண்டும். “குற்றம் குறைந்து, குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணை என நம்பு கண்டாய்” என்பது தாயுமானார் அருள்வாக்கு. 

    நாமாக எதையும் அறிந்துகொள்ள முடியாது. அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்பு உடையது உயிர். பெரியவர்களுடன் பழகினால் எண்ணுதற்குரிய நல்லவைகள் இன்ன இன்ன என்பது தெரியவரும். நல்லவற்றைச் செய்வதற்கு முன்னால் நல்லவற்றை நினைக்கவும், பேசவும் தெரிந்து கொள்வதே சிறந்த சாதனை. பணத்தை வைத்துக் கொண்டு, உடல் பலத்தை வைத்துக் கொண்டு, மக்கள் துணையை வைத்துக் கொண்டு தனக்கு மட்டும் அன்றிப் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களையே செய்ய வேண்டும். அதற்கு நமக்கு வாய்ப்பு இல்லையென்று எண்ணிப் பலர் சோர்ந்து போகிறார்கள். எடுத்தவுடன் மனிதன் செயலில் இறங்குவது இல்லை. மனத்திலே எண்ணி, பலகாலம் சிந்தித்து, அதனை நிறைவேற்றுவதற்கு என்ன வழி என்று ஆலோசிக்கிறான். அதைப்பற்றி மற்றவர்களுடன் பேசுகிறான். அதன் பின்னே அதனைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடுகிறான். மனத்தில் எத்தனை திண்மையான எண்ணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி செயலை நிறைவேற்றுவதற்குரிய வகை தானே வந்து சேரும்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர் 

திண்ணியர் ஆகப் பெறின்”

என்று திருவள்ளுவ நாயனார் கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் வேண்டிய கருவிகள் தாமே வந்து சேரும். 

நாம் இப்போது எத்தனையோ கருவிகளைப் பெற்றிருக்கிறோம். அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொள்ளாமையால், நம்மால் வெற்றி காண முடிவது இல்லை. கிடைத்த பொருளைக் கொண்டு பெறத் தக்க பெரும்பயன் இருக்க, அதனை மறந்து, கிடைத்ததைக் கொண்டு சிறப்பாக வாழப் பழகாமல், கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டு நிற்கிறோம். இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற கருவிகளுள் மிகச் சிறந்தது அறிவு. தனுகரண புவன போகங்கள் ஆகியவை விலங்குகளுக்குக் கிடைக்காத வகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தக்கபடி முயற்சி செய்து, நல்ல பயனை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 'பெறுதற்கரிய பிறவி' என்று மனிதப் பிறவியைச் சொல்வதற்குக் காரணம் இதுதான். நாம் அந்தக் கருவிகளைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்வதில்லை. அதற்கான வழி நமக்குத் தெரிவதில்லை. பயன்படுத்திக் கொள்ளும் நல்லவர்களைக் கண்டு நாம் செய்யலாம். 

     சிறு குழந்தை உலகத்தினரைப் பார்த்து ஒவ்வொன்றாகப் பழக்கம் செய்து கொள்கிறது. ஒடுவதும், ஆடுவதும், சிரிப்பதும், அழுவதும் ஆகிய எல்லாமே குழந்தை பிறரிடமிருந்து தெரிந்து கொள்பவைகளே. தாய்தந்தை உலகம் ஆகியவற்றோடு கலந்து மெல்ல மெல்லப் புதிய பழக்கங்களை உண்டாக்கிக் கொள்கிறது. ஆகவே, அறிவை உடைய மனிதன் தனக்கு தெரியாவிட்டாலும் நல்லவர்களுடன் கலந்து நல்ல எண்ணங்களையும் நல்ல பேச்சையும் நல்ல செயல்களையும் தெரிந்து கொள்ளலாம். 

நல்லவர்களோடு இணங்குவது என்பது எளிதில் வருவது இல்லை. உலகில் பெரும்பாலும் தீயவர்களுடைய ஆதிக்கமே நிலவுகிறது. ஆகையால், தீயவர்களுடைய கூட்டத்திற்குள் புகுவது மிக எளிதாக இருக்கிறது. நாம் தீயவர்களை ஒதுக்கி, நல்லவர்களைத் தேட வேண்டும். நன்மை என்பது பலவகைப்படும். அறம் செய்வது நன்மை; பொருள் ஈட்டுவது நன்மை; நல்ல முறையில் இன்பம் பெறுவதும் நன்மைதான். நம் வாழ்நாள் மிகக் குறுகியது என்பதை உணர்ந்து எல்லாவற்றிலும் சிறந்த நன்மை எது, அதனைப் பெறுவதற்குரிய வழி என்ன என்று ஆராயவேண்டும். மிகச் சிறந்த நன்மை இறைவன் அருளைப் பெறுவதுதான். அந்த அருளைத் தருவதற்குரிய நாயகனாகிய இறைவன் எப்போதும் இருக்கிறான்; எங்கும் இருக்கிறான். நாம் முயன்றால் அருள் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டான். 

ஆனால், முயல்வதற்குரிய வழி தெரியாமல் நாம் திண்டாடுகிறோம். நம்முடைய இணக்கமெல்லாம் இறைவனைப் பற்றி எண்ணாதவர்களுடைய இணக்கமாகவே இருக்கிறது. ஏதோ சம்பிரதாயத்திற்காக, கடவுள் என்று சொல்லிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக சாமியார் வேடம் பூண்டு, பொய்யாக வாழ்கிறவர்களோடு உறவு வைத்துக் கொண்டு வாழ்வதால் பயன் இல்லை. அவர்களுடைய இணக்கம் நமக்கு நலம் தராது. “இணக்கம் அறிந்து இணங்கு”, “சேர் இடம் அறிந்து சேர்” என்ற ஔவையின் அருள்வாக்கை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய இயற்கை மாறவேண்டுமானால், நல்ல குணங்கள் படிய வேண்டுமானால், முதலில் நாம் தீயவர்களுடன் இணங்கக் கூடாது. இறைவனை வணங்கித் துதிக்க அறிந்த மனிதர்களுடன் இணங்க வேண்டும். பெரும்பாலோருடைய நிலை அப்படி இல்லை. வணங்கத் தெரியும். துதிக்கத் தெரியும். கைமேல் பலன் தருகிற மக்களைத்தானே வணங்க வேண்டும், துதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாச் செயலுக்கும் மூலகாரணனாக இருந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றித் தருகிறவன் இறைவன். தம்மால் புகழ்ந்து துதிப்பதற்கு உரியவன் அவன்தான் என்பதை அறிவாளிகள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் எண்ணுவது இல்லை. 

உலகத்தில் சிறுசிறு இலாபங்களில் மனத்தைப் போக்கி வாழ்கின்றவர்கள் இறைவனை வணங்குவதும் இல்லை; துதிப்பதும் இல்லை. ஓரிடத்தில் ஒரு பெரிய விருந்து நடக்க இருந்தது. விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காகப் பூந்தி பண்ணிக் குவித்திருந்தார்கள். அந்தப் பூந்தியில் எறும்பு வந்து மொய்த்துக் கொள்ளுமோ என்ற ஐயம் விருந்து செய்யும் தலைவருக்கு உண்டாயிற்று. உடனே அங்கே இருந்த ஒரு பெரியவர் ஒரு தந்திரம் செய்தார். கொஞ்சம் சருக்கரையைக் கொண்டு வந்து பூந்திக் குவியலைச் சுற்றிச் சிறிது தூரம் விட்டு வட்டமாகத் தூவினார். எறும்புகள் வந்தன. அந்தச் சருக்கரையிலேயே நின்று மொய்த்திருந்தன. அதைத் தாண்டிப் பூந்திக் குவியலுக்குப் போகவில்லை. பூந்தியாகிய பெரிய பயனைப் பெறாமல் சர்க்கரையாகிய சிறிய பயனைப் பெற்று நின்றுவிட்டன. 

மனிதனும் அப்படித்தான் இருக்கிறான். தான் பெறுகிற புலன் நுகர்ச்சியைப் பெரிதென்று எண்ணி அதனோடு நின்றுவிடுகிறான். இன்னும் சிலர் அறிவினால் ஆராயும் ஆராய்ச்சியில் ஏற்படுகிற இன்பக் கிளுகிளுப்புக் கண்டு அதோடு நின்றுவிடுகிறார்கள். அவர்கள் எல்லாம் சின்ன எறும்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இறைவன் அருள்பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்தத் துறையில் எண்ணியும் பேசியும் செயல் செய்தும் வாழ்கிறவர்களே சிறந்த நன்மையை அடைவார்கள். இறைவனை  வணங்கித் துதித்து அவனுடைய திருவருளைப் பெறுகிறவர்களே மனிதப் பிறவியில் பெரிய பயனை அடைவார்கள். அத்தகைய மனிதர்களோடு இணங்க வேண்டுமென்று அறியாது, இறைவனை வணங்கித் துதிக்க அறியாதவரோடு இணங்கிப் பயன் இல்லை. இவர்களுடன் இணங்குவதால் நம்மிடத்தே இயல்பாக உள்ள தீக்குணங்கள் அல்லாமல், புதிய தீயகுணமும் வந்து சேரும். 

இறைவனை வணங்காமலும் துதிக்காமலும் இருக்கிறவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுடன் இணங்குவது கூடாது என்கிறார் அருணகிரிநாதர். நூல்களை எல்லாம் ஆராய்ந்திருந்தாலும், தத்துவங்களை அறிந்திருந்தாலும், பல பெரிய மனிதர்களை அறிந்திருந்தாலும், எத்தனை பண்பாடு இருந்தாலும், இறைவனுடைய அன்புப் பிணைப்பு இல்லாத இடத்து, அவர்கள் திருமங்கல்யம் இல்லாத அழகியைப் போன்றோர் என்றே சொல்ல வேண்டும். "இந்த நிலையில் இருக்கிற என்னைக் காக்க வேண்டும்' என்று முருகப் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிறார் அருணகிரிநாதர். 

மல சம்பந்தத்தினால் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுடைய இடரைப் போக்குகிறவன் முருகன். அவன் நிர்மலன். "குணம் கெட்டதுட்டனாகிய என்னை, நிர்மலன் ஆகிய நீ ஈடேற்ற வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொள்கிறார். முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வேலாயுதத்தை வைத்திருக்கிறார். அது ஞானத்தின் அடையாளம். அது ஞானவெற்றியைத் தருகின்ற விக்கிரம வேலாயுதம். வேல் புகுந்த இடத்தில் தோல்வி என்பது சிறிதும் இராது. 

அசுரர்களைப் போர்க்களத்தில் அந்த வேலாயுதம் கொன்றது. அசுரர்கள் ஊனை உணவாக உடையவர்கள். ‘பிசிதர்' என்று அருணகிரிநாதர் சொல்லுகிறார். அவர்கள் ஊனை உண்பவர்கள் ஊனை உண்ணும் வாயிலிருந்து நிணம் கக்குகிறது. வேல் அவர்களுடைய வாய்களை இரத்தமும் ஊனும் கக்கும்படி செய்கிறது. ஊன் உண்ணுகிற அசுரர்களை, 'பிசிதர்' என்கிறார் அருணகிரிநாதர். தாம் உண்ட ஊன் உணவைக் கக்குவது போல, வேல், அவர்களது வாயைக் கிழித்துப் புண்படுத்தி நிணத்தைக் கக்கும்படி செய்கிறது. அவர்கள் உடம்பு சிதைந்து, குலைந்து போர்க்களத்தில் வீழ்ந்தமையால் பலருக்குக் கொண்டாட்டம். பிறரைக் கொன்று கொண்டாடி வந்த அசுரர்கள், உயிர்விட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறார்கள், அவர்களுடைய திண்ணடாட்டத்தால் உலகில் உள்ள உயிர்கள் கொண்டாட்டம் அடைகின்றன.

போர்க்களத்தில் அசுரர்களுடைய உடல்கள் துண்டு பட்டுக் கிடக்கின்றன, சாமானிய உடல்போல் இல்லாமல் மலைபோல் இருக்கிற அசுரர்கள் பிணமாகக் கிடக்கிறார்கள். மயானத்தில் காக்கையும் கழுகும் வந்து ஊனைக் கொத்தித் தின்னும். பிணம் உள்ள இடத்தில் அவை விருந்து அயரும். காக்கையும் கழுகும் பந்தலிட்டுப் பறக்கின்றன. நான் முந்தி, நீ முந்தி என்று பிணங்குகின்றன, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அசுரர்களுடைய பிணங்கள் கிடப்பதனால் எங்கே பார்த்தாலும் பந்தல் போட்டது போலக் காக்கையும் கழுகும் இணைந்து பறக்கின்றன. பேய்கள் சேர்ந்து கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடுகின்றன. பேய்கள் வைரவருடைய சாபத்தால் உணவு இல்லாமல் வாடுபவை. உயிரோடு இருப்பவர்கள் உடலை உண்ணக் கூடாது என்பது அவர்களுக்கு இட்ட கட்டளை. ஆகையால், போர்க்களத்தில் இறந்தவர்களை உண்பதற்காக அவை தேடிக்கொண்டிருக்கும். போர் நடக்கிறது என்றால் பேய்களுக்குத்தான் முதலில் கொண்டாட்டம். 

இங்கே அலகைகள் எல்லாம் துணங்கை ஆடுகின்றன. துணங்கை என்பது கைகளைக் கோர்த்துக்கொண்டு சுற்றிச் சுற்றி ஆடுகிற ஒருவகையான ஆட்டம். போர்க்களத்தில் கிடந்த அசுரர்களுடைய உடல்களைத் தின்று வயிறு தடித்து பேய்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. பலகாலம் பட்டினி கிடந்து, போதிய உணவு எங்கே கிடைக்கப் போகின்றது என்று வாடி நின்றவை அவை. இப்போது தம் அளவுக்கு மிஞ்சி விருந்து உண்டு துணங்கை ஆடுகின்றன. மேலே கொடியும், கழுகும் இணைந்து பந்தல் போட, அந்தப் பந்தலின் கீழே கைகோத்து நடமாடி முருகப் பெருமானை வாழ்த்துகின்றன. அந்தப் பேய்கள். திருமுருகாற்றுப் படையில் முருகன் சூரனோடு போர் செய்ததால் பேய்மகள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்கிறார் நக்கீரர். 

“உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் 

குருதிய ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் 

கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை 

ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர 

வென்றடு விறல்களம் பாடித் தோள்பெயரா 

நினம்தின் வாயள் துணங்கை துங்க."

கொடியும் கழுகும் தம்முள் போராடிப் பிணங்கிப் போட்டி போட்டு ஊனை ஈர்க்கின்றன. அலகைகள் தமக்கு வேண்டிய உணவை உண்டு கைகோத்து ஆடுகின்றன. இவ்வாறு அசுரர்கள் போர்க்களத்தில் படும்படியாக வெற்றிவேலை விடுத்தார் முருகப் பெருமான். “துட்டர்களாகிய அசுரக் கூட்டங்களை வேலாயுதத்தால் அழித்து வெற்றி கண்ட நிர்மலனே! துட்டன் ஆகிய என்னை, என்பாலுள்ள தீய பண்புகளை எல்லாம் மாற்றி ஈடேற்ற வேண்டும்” என்று இந்தப் பாட்டில் வேண்டிக் கொள்கிறார் அருணகிரிநாதர். 

“வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக் 

குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்! கொடியும் கழுகும் 

பிணங்க, துணங்கை அலகை கொண்டாட, பிசிதர்தம்வாய் 

நிணம்கக்க விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே!”   -- கந்தர் அலங்காரம்.

    காக்கையும் கழுகும் ஒன்றனோடு ஒன்று போட்டி போடவும், பேய்கள் துணங்கைக் கூத்து ஆடவும், ஊன் உணவை உடைய அசுரர்களின் வாய்கள் நிணத்தைக் கக்கவும் வெற்றிவேற்படையை விடுத்து அருளிய மலமற்ற தூய முருகப் பெருமானே! தேவரீரை உடம்பால் வணங்கி, வாயினால் புகழந்து அறியாத துட்டர்களுடன் பொருந்தி இருந்து, குணம் கெட்டுப்போன தீயவனாகிய அடியேனை நற்கதி அடையும்படி செய்தருள்வாய்: 



90. உளவன் இல்லாமல் ஊர் பாழாகாது

“குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்

     கூர்இரும் புகளைவெல்லும்

கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்

     கோத்திரம் எலாம் அழிக்கும்


நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து

     நண்ணுபற வைகளை ஆர்க்கும்

நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்

     நவில்சாதி தனையிழுக்கும்


உலவுநல் குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்

     டுற்றாரை யீடழிப்பர்

உளவன்இல் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்

     உலகமொழி நிசம் அல்லவோ


வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட

     மதயானை தன்சோதரா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் –


வலமாக வந்து அரனிடத்தில் கனிகொண்ட மதயானைதன் சோதரா - அரனை வலமாகச் சுற்றிவந்து அவரிடம் மாங்கனிநினைப் பெற்ற மூத்த பிள்ளையார் ஆகிய விநாயகரின் தம்பியாகிய இளைய பிள்ளையாரே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய்க் கூர் இரும்புகளை வெல்லும் - (இரும்பின்) குலமான சம்மட்டியும் குறடும் (கொல்லன்) கைக்குத் துணைபுரிந்து மிகுதியான இரும்புகளை அடக்கும்; 


கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன் கோத்திரம் எலாம் அழிக்கும் – இரும்பால் ஆன கோடரியின் உள்ளே மரமானது (காம்பாகச்) சேர்ந்து இருந்து, தன் மரபான மரங்களை ஒழிக்கும்; 


நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் - அழகான பார்வைக்குருவி (தன்னைப் பார்த்து) வந்து அருகில் அமரும் பறவைகளைக் கட்டுப்படுத்தும்; 


நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று நவில் தன் சாதிதனை இழுக்கும் - அன்புடன் வளர்க்கப்பட்ட கலைமான் (காட்டில்) சென்று சொல்லப்படும் தன் இனத்தை அகப்படுத்தும்; 


உலவும் நல்குடிதனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பார் - (பலருடனும்) பழகும் நல்ல குடியிலே கோள் உரைப்போர் சேர்ந்து கொண்டு உறவினரின்  மதிப்பைக் கெடுப்பர்; 


‘உளவன்  இல்லாமல் ஊர் அழியாது' எனச் சொல்லும் உலகமொழி நிசம் அல்லவோ - ‘உளவு கூறுவோன் இல்லாவிட்டால் ஊர் கெடாது' என்று கூறும் உலகச்சொல் உண்மை அன்றோ?


‘பார்வை விலங்கு - ‘பார்வைப் பறவை' என்பவை மனிதர்களால் பழக்கப்பட்டு, அவற்றின் இனத்தைப் பிடிக்கப் பயன்படுபவை. குறடு - பற்றுக்கோடு. ‘உளவன் இன்றி ஊர் பாழாகாது' என்பது பழமொழி. கோடரி என்ற சொல்லே கோடாலி' என மருவியது.


43. சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே இராட்டினமா!

“வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய்

      மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்

கற்கட்டா கியமடமும் காணியும் செம்

      பொனுந்தேடும் கருமம் எல்லாம்

பொற்கொத்தாம் செந்நெல்வயல் தண்டலையா

      ரே! சொன்னேன் பொன்னா டாகும்

சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே

      ராட்டினத்தைச் சுமந்த வாறே.”


இதன் பொருள் –-

    பொன் கொத்துஆம் செந்நெல் வயல் தண்டலையாரே - பொன்கொத்துப் போல விளையும் செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!  

    வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர் - உறவினர்களை வெறுத்த முதியவராய், உண்மையறிவே ஒரு வடிவம் எனக் காணப்படுவோர், கல்கட்டு ஆகிய மடமும் காணியும் செம்பொனும் தேடும் கருமம் எல்லாம் - கல்லால் கட்டப்பட்ட மடமும் நிலமும் செம்பொன்னும் சேர்க்கிற வேலையெல்லாம், பொன் நாடு ஆகும் சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்த ஆறே - பொன்னுலகாகிய சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுதும் இராட்டினத்தைக் கக்கத்தில் இடுக்கிச் செல்லும் தன்மையை ஒக்கும்.

      இராட்டினம் : நூல் நூற்கும் கருவி. நூல் நூற்பதனாலே கிடைக்கும் வருவாய் சிறிதாகும். அது வறுமையின் அடையாளம். அக் கருவியைப் பொன்னாட்டிற்கும் சுமந்து செல்வது (பற்றைக் காட்டுவதால்) நகைப்புக்கு இடமானது. பேரின்ப வீட்டிற்குச் செல்லும் நிலையிலுள்ள உண்மை அறிவினர் (மெய்ஞ்ஞானி) உலகத் தொடர்பாகிய மடமும் பொன்னும் நிலமும் தேடுவது நகைத்தற்கு உரியதாகும். உலகப் பற்றை விட்டுவிட்ட உண்மை ஞானி, பொன்னையும் பொருளையும் தேடி அலையமாட்டார். அப்படித் தேடினால், அவர் உண்மை ஞானி அல்ல. பொய் வேடம் பூண்டு இருப்பதாகக் கொள்ளுதல் வேண்டும்.

    ‘சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே த்தைச் சுமத்தல்’ என்பது பழமொழி.


89. பயனற்ற உறுப்புக்கள்

தேவா லயஞ்சுற்றி டாதகால் என்னகால்

     தெரிசியாக் கண்என்னகண்

தினமுமே நின்கமல பாதத்தை நினையாத

     சிந்தைதான் என்னசிந்தை


மேவா காம்சிவ புராண மவை கேளாமல்

     விட்டசெவி என்ன செவிகள்

விமலனை வணங்காத சென்னிஎன் சென்னிபணி

     விடைசெயாக் கையென்னகை


நாவார நினையேத்தி டாதவாய் என்னவாய்

     நல்தீர்த்தம் மூழ்காவுடல்

நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்

     நண்ணினாற் பலனேதுகாண்


மாவாகி வேலைதனில் வருசூரன் மார்புருவ

     வடிவேலை விட்டமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் —-


வேலைதனில் மாஆகி வருசூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா! - கடல் நடுவிலே மாமரமாகி வந்த சூரபதல் ன் மார்பிற்படும்படி வடிவேலை விடுத்தருளிய முருகப் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


தேவ ஆலயம் சுற்றிடாத கால் என்ன கால்? - இறைவன் எழுந்தருளி உள்ள திருக்கோயிலை வலம் வராத கால் கால் அல்ல; தெரிசியாக் கண் என்ன கண்? - காணாத கண் பயனற்ற கண்; தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை? - நாடோறும் உன் தாமரைத் திருத்தாள்களை எண்ணாத உள்ளம் பயனற்றது; மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள்? - பொருந்திய சைவ ஆகமங்களையும் சிவபுராணங்களையும் கேளாது விலகும் செவிகள் பயனற்றவை; விமலனை வணங்காத சென்னி என் சென்னி - குற்றமற்ற சிவபரம்பொருளை வணங்காத தலை பயனுடையது அல்ல; பணிவிடை செயாக் கை என்ன கை? - தொண்டு செய்யாத கைகள் பயனற்றவை; நாவு ஆர நினை ஏத்திடாத வாய் என்ன வாய்? - நா நிறைய உன்னை வாழ்த்தாத வாய் பயனற்றது; நானிலத்து நல்தீர்த்தம் மூழ்கா உடல் என்ன உடல்? - உலகிலே தூய சிவதீர்த்தங்களில் மூழ்காத உடம்பால் பயனில்லை; பாவி ஆகிய சனனம் நண்ணினால் பலன் ஏது? - பாவத் தன்மை பொருந்திய இத்தகைய பிறவி எடுத்ததனாலே எப்பயனும் இல்லை.


     விளக்கம்தேவ + ஆலயம்: தேவாலயம். சிவபுராணம் என்றதனால் ஆகமமும் கோயிலும் பிறவும் சிவத்தொடர்பு ஆயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகைப்படும். ஆகையால் நிலம் நானிலம் ஆயிற்று. நான்கு + நிலம்: நானிலம்.


     இறைவனை வழிபட்டு உய்வதற்கே மனித உடம்பு வாய்த்தது. வழிபடாத பிறவி பயனற்றது என்பது சொல்லப்பட்டது.


கோள்இல் பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. திருக்குறள்.


எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள், தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளுதல் இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல என்கிறார் திருவள்ளுவ நாயனார். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதும் கொள்ளப்படும். காணும் தன்மை இல்லாத குருட்டுக் கண் பயன்றறது போலவே, வணங்காத தலையும் பயன்றறது என்றார். இனம் பற்றி, வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனற்றவை எனவும் கொள்ளவேண்டும் என்பது கூறப்பட்டது. எண் சாண் உடம்பிற்குத் தலையே முதன்மை என்பதால், திருவள்ளுவ தேவர், தலையைக் குறிப்பட்டுப் பாடினார்.


இறைவனை வணங்குவதற்குத் தான் தலை. அவனை வாழ்த்துவதற்குத் தான் வாய். அவன் திருவடிகளை வணங்கிக் கூப்புவதற்குத் தான் கை. திரு அங்கமாலை என்னும் திருப்பதிகம் அப்பர் பெருமானாரால் காட்டப் பெற்றது. உடல் உறுப்புக்களைப் பற்றிப் பாடப் பெற்றது. அதில், தலை வணங்கவேண்டும், கண்கள் காண வேண்டும், செவிகள் கேட்க வேண்டும், மூக்கு முரல வேண்டும், வாய்வாழ்த்த வேண்டும், நெஞ்சம் நினைய வேண்டும், கைகள் கூப்ப வேண்டும், உடம்பு இறைவன் திருக்கோயிலை வலம் வரவேண்டும், கால்கள் இறைவனுடைய திருக்கோயிலை சூழ வேண்டும் என்று அங்க உறுப்புக்களின் பயனைக் காட்டிப் பாடி இருப்பார்.  


திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே  கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே”, கண்இமைத்துக் காண்பார்தம் கண்என்ன கண்ணே  நாராயணாவென்னா நாவென்ன நாவேஎனஞ் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சிழர் குரவைப் பகுதியில் காட்டப்பட்டு உள்ளது.


ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண் எல்லாம் காணாத கண்களே”, “ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே”, ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளேஎனத் திருஞானசம்பந்தப் பெருமானார் பாடியள்ள திருப்பதிகத்தையும் காண்க.


வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

 தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

 சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

 வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.” அப்பர் தேவாரம்.


வள்ளற்பெருமானார் பாடியுள்ள பின் வரும் பாடல்களையும் கருத்தில் கொள்க.


எந்தை! நினை வாழ்த்தாத பேயர் வாய், கூழுக்கும்

ஏக்கு அற்று இருக்கும் வெறுவாய்;

எங்கள் பெருமான்! உனை வணங்காத மூடர் தலை,

இகழ்விறகு எடுக்கும் தலை;

கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர் கண்,

கலம் நீர் சொரிந்த அழு கண்;

கடவுள்! நின் புகழ்தனைக் கேளாத வீணர் செவி,

கைத்து இழவு கேட்கும் செவி;

பந்தம்அற நின்னை எண்ணாப் பாவிகள் தம் நெஞ்சம்,

பகீர் என நடுங்கும் நெஞ்சம்;

பரம! நின் திரு முன்னர் குவியாத வஞ்சர் கை,

பலி ஏற்க நீள் கொடும் கை;

சந்தம்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!”


ஐய! நின் சீர்பேசு செல்வர் வாய், நல்ல தெள்

அமுது உண்டு உவந்த திருவாய்;

அப்ப! நின் திருவடி வணங்கினோர் தலை, முடி

அணிந்து ஓங்கி வாழும் தலை;

மெய்ய! நின் திருமேனி கண்ட புண்ணியர் கண்கள்,

மிக்கஒளி மேவு கண்கள்;

வேல! நின் புகழ் கேட்ட வித்தகர் திருச்செவி,

விழாச் சுபம் கேட்கும் செவி;

துய்ய! நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம், மெய்ச்

சுகரூபமான நெஞ்சம்;

தோன்றல்! உன் திருமுன்னர் குவித்த பெரியோர் கைகள்

சுவர்ணம் இடுகின்ற கைகள்,

சையம்உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உள்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே ---  திருவருட்பா.


வீட்டுத் தலைவ!நின் தாள்வணங்கார் தம் விரிதலை, சும் 

மாட்டுத் தலை, பட்டி மாட்டுத் தலை; புன் வராகத்தலை; 

ஆட்டுத் தலை,வெறி நாய்த்தலை; பாம்பின் அடுந்தலை;கல் 

பூட்டுத் தலை:வெம் புலைத்தலை; நாற்றப் புழுத்தலையே"      --- திருவருட்பா.

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...