12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்

ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை

தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்

தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா


ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் (உலகத்தில் உள்ள யாவர்க்கும்) குற்றம் அற்ற  நல்ல அடிமை ஆவான். ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே,  எல்லா உலகத்தையும் தவறாமல் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

    (லோகம் - உலகம்.  வடசொல்.  ஆசு - குற்றம்.)


72. ஆடம்பரத்துக்கு மதிப்பு அதிகம்


சகமிக்க தண்டலையார் அடிபோற்றும்

     மகராசர் சபையில் வந்தால்,

சுகமிக்க வேசையர்க்குப் பொன்நூறு

     கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ

அகமிக்க சோறிடுவார்! அந்தணருக்

     கெனின்நாழி அரிசி ஈவார்!

பகடிக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக்

     கொருகாசு பாலிப் பாரே.


இதன் பொருள் ---


    சகம் மிக்க  தண்டலையார்  அடி போற்றும்  மகராசர் சபையில் வந்தால் - உலகில் சிறப்புற்று விளங்கும் திருத் தண்டலை இறைவரின்  திருவடியை வணங்கும் பெருமன்னர்களின் அவைக்குப் போனால், சுகம் மிக்க வேசையர்க்கு நூறு பொன் கொடுப்பர் - இன்ப மிகத் தரும் கணிகையர்க்கு நூறு பொன் கொடுப்பார்கள், தமிழ் சொன்ன பேர்க்கோ அகம் மிக்க சோறு இடுவர் - தமிழ்க் கவி கூறியவர்க்கு வீட்டில் மிகுந்துள்ள சோற்றைப் போடுவர். அந்தணருக்கு எனின் நாழி அரிசி ஈவர் – அந்தணர்களுக்கு ஆயின் படியரிசி கொடுப்பர். பகடிக்கோ பணம் பத்து திருப்பாட்டுக்கு ஒருகாசு பாலிப்பார்! – பகடிக்கு எனில் பத்துப் பணமும், அழகிய பாவினுக்கு ஒரு காசும் அளிப்பார்கள்.

    பகடி - ஏமாற்றுகிறவன் (வெளிவேடக்காரன்), ஆடம்பரக்காரன்.   பகட்டு – ஆடம்பரம், தற்பெருமை, கவர்ச்சி, ஏமாற்று, அதட்டு, பகட்டுதல் – வெளிமினுக்குதல், வேடங்காட்டுதல், ஆடம்பரம் காட்டுதல், வெருட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல்.

    பகட்டுக் காட்டுவது செயற்கையானது. தொடக்கத்தில் பெருமை தருவது போல் இருந்து, நாளடைவில் எல்லாச் சிறுமைகளையும் ஒருசேரக் கொண்டு வந்து சேர்க்கும். இது ஆடம்பரம் செய்வோருக்கு மட்டுமல்லாது, ஆடம்பரத்தில் மயங்குவோருக்கும் பொருந்தும். புறத்தே பொலிவிழக்கச் செய்யும் நோய்களைப் போல் அல்லாது, உள்ளத்தில் அழுக்காறு, பேராசை முதலிய குற்றங்களை மிகுத்து, மனிதனை இழிநிலையில் தள்ளிவிடும். ஆடம்பரத்தால் அரசுகள் அழிந்து ஒழிந்ததை வரலாறு கூறும். உழைக்காமல், ஆடம்பரமாக வாழ எண்ணும் அற்பபுத்தி உள்ளவர்கள் பகட்டுக் காட்டுவார்கள்.

    இவர்கள் மிகக் கொடியவர்கள் என்பதைக் காட்ட, “நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

“ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!

ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர்  சிவனவன் தாள்களே.”

என்னும் திருமந்திரப் பாடலில் ஆடம்பரம் காட்டுவோரை, ‘அறிவிலிகள்’ என்கிறார் திருமூல நாயனார்.

இதன் பொருள் ---

    முயற்சி ஏதும் இல்லாமல், வயிறு வளர்த்தலையே  பயனாகக் கருதி,  தவம் செய்வோரைப் போல பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி, உலகத்தாரை அஞ்சுவித்துத்  திரிகின்ற அறிவிலிகாள்! உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீங்கள், வேடத்திற்குப் பொருந்துமாறு உண்மை அன்பை உள்ளத்தில் வைத்து, ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று, சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடையது.


“இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த

அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்

பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்

கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.”. – திருமந்திரம்

இதன் பொருள் ---

    தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்களில் சிலர், ஒழுக்கத்தால் உயர்வு அடைய நினை யாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு  ஏற்ற ஒழுக்கத்தை உடையவராய் நிற்கமாட்டாமையின்,  தமது குலத்தன்மை அழிநுமாறு, அந்நிலையில் நீங்கி, உலகம் தம்மைக் கடவுளராக  மதித்துப் போற்றப்படும் மிக உயர்ந்த நிலையைப் பெறுதற்பொருட்டு,  தவ வேடத்தைப் புனைந்து கொள்வர்.  இவ் இருசாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களைச் செயது பாழ்பட்டுவரும் கொடியவர்கள் ஆவர். 

    பகட்டுக் காட்டி வயிறு வளர்ப்போர் எய்தும் நிலை குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடி உள்ளார்.

“பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து,

பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்,

பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்

சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.”

இதன் பொருள் ---

    உள்ளத்தில் தவ உணர்வு இல்லாமல், புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு  நடித்தவர் புண்ணியர் ஆகமாட்டார். அவர் பாவிகளே ஆவர். அவர்  மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. அவரது நடிப்பின் பயனாக இம்மையில் சிறிது இன்பத்தை நுகர்ந்தாலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைவர். 

    பொய்வேடத்தால், ஆடம்பரத்தால் மயக்குதலும், மயங்குதலும் உலக இயற்கை என்பது அறிவுறுத்தப்பட்டது. உலக நடப்பை அறிந்து, செம்மைப்பட வேண்டும்.


11. இல்வாழ்தல்

 



“உற்றபெருஞ் சுற்றம் உற,நன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க; பசுவின்வால் - பற்றி

நதிகடத்தல் அன்றியே, நாயின்வால் பற்றி

நதிகடத்தல் உண்டோ நவில்.”

பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்கலாம்.  நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தைக் கடத்தல் இயலாது.  பொருந்திய உறவினர் சூழ, ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல இல்லறத் துணையோடு பெருநெறியாகிய இல்லறத்தை செம்மையாக நடத்திடலாம்.  அதனால் பிறவியாகிய வெள்ளத்தைக் கடக்கலாம் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

ஆற்று வெள்ளம் பிறவியைக் குறிக்கும். பசுவின் வாலைப் பற்றி ஆற்று வெள்ளத்தைக் கடத்தல், நல்ல மனைவியோடு இல்லறத்தை நடத்தலைக் குறிக்கும். நாயின் வாலைப் பற்றிக் கடத்தல் தீக்குணம் பொருந்திய மனைவியோடு வாழ்தலைக் குறிக்கும்.


71. ஒழியாதவை

“உபசாரம் செய்பவரை விலக்கிடினும்

     அவர்செய்கை ஒழிந்து போகாது;

அபசாரம் செய்வாரை அடித்தாலும்

     வைதாலும் அதுநில் லாது;

சுபசாரத் தண்டலையார் வளநாட்டில்

     திருடருக்குத் தொழில்நில் லாது;

விபசாரம் செய்வாரை மேனியெல்லாம்

     சுட்டாலும் விட்டி டாரே.”


இதன் பொருள் –


    சுபசாரத் தண்டலையார் வளநாட்டில் - நலம் நிறைந்த திருத்தண்டலை இறைவரின் வளம் நிறைந்த நாட்டினில், உபசாரம் செய்பவரை விலக்கிடினும் அவர் செய்கை ஒழிந்து போகாது - நலம் புரிவாரைத் தடுத்தாலும் அவர் செயல் நீங்கிவிடாது, அபசாரம் செய்வோரை அடித்தாலும் வைதாலும் அது நில்லாது - தீங்கு புரிவோரைத் தண்டித்தாலும் பழித்தாலும் அவர் செயல் ஒழியாது, திருடருக்குத் தொழில் நில்லாது - திருடரை (என்ன செய்தாலும்) திருட்டுத் தொழில் விடாது, விபசாரம் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும் விட்டிடார் - விபசாரத் தொழிலில் ஈடுபட்டவரை உடம்பெல்லாம் சூடு போட்டாலும் விடமாட்டார்.


10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி,

எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும்

அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

அநந்தம் விழியென்று அறி.” — நீதிவெண்பா


மக்கள் எல்லார்க்கும் இரு கண்களே உள்ளன. நன்கு கற்றவர்களுக்கு ஊனக் கண் இரண்டோடு அறிவுக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய நகக் கண்கள் ஐந்தோடு சேர்த்து,  கண்கள் ஏழாகும். பொருந்துகின்ற நல் தவத்தால் அருள்ஞானம் பெற்றவர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு.

(அநந்தம் தவம் -  அழியாத தவம். அநந்தம் விழி - அளவில்லாத கண்கள். மூன்று விழி - ஊனக்கண் இரண்டும் அறிவுக்கண் ஒன்றும்.  விழி ஏழாவன – ஊனக்கண் இரண்டும், கொடுக்கும் கையில் உள்ள நகக் கண் ஐந்தும்.)


70. அஞ்சாதவர்

போரஞ்சார் அதிவீரர்! பொருள் அஞ்சார்

     விதரணம்சேர் புருடர்! தோயும்

நீரஞ்சார் மறைமுனிவர்! நெருப்பஞ்சார்

     கற்புடைய நிறைசேர் மின்னார்!

வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா

     ரே! சொன்னேன் மதமா என்னும்

காரஞ்சா திளஞ்சிங்கம் கனத்தவலி

     யாம்தூதன் கால்அஞ் சானே.


இதன் பொருள் ---

    வார் அஞ்சா முலையிடம் சேர் தண்டலையாரே - கச்சுக்கு அடங்காத முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டருளி, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரே!

    அதிவீரர் போர் அஞ்சார் - பெரிய வீரர்கள் போர்செய்ய அஞ்சமாட்டார்கள், விதரணம் சேர் புருடர் பொருள் அஞ்சார் - கொடைப்பண்பு உடைய ஆடவர் பொருளுக்கு அஞ்சமாட்டார், மறைமுனிவர்கள் தோயும் நீர் அஞ்சார் – வேதம் உணர்ந்த முனிவர் முழுகும் நீரைக் கண்டு (முழுக) அஞ்சிடார், கற்பு உடைய நிறைசேர் மின்னார் நெருப்பு அஞ்சார் - கற்பினை உடைய ஒழுக்கம் மிகுந்த பெண்டிர் நெருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார், இளஞ்சிங்கம் மதம் மா என்னும் கார் அஞ்சாது - இளைய சிங்கம் மதமுடைய யானையாகிய மேகத்திற்கு அஞ்சிடாது, கனத்த வலி ஆம் தூதன் கால் அஞ்சான் - திண்ணிய வலிமையுடைய தூதுவன் நடைக்கு அஞ்சிடான்.

      மறைமுனிவர் நீரின் முழுக அஞ்சாமை போலக் கற்புடைய மாதர் நெருப்பில் முழுக அஞ்சார் என்றது சிறப்புடையது.


மந்திரம் என்றால் என்ன

மந்திரம் என்றால் என்ன

----


    “மந்திரமும் தந்திரமும்” என்று சொல்லுவார்கள். மந்திரம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டது. தந்திரம் என்பது நூல்களை ஓதுவதால் உண்டாகும் அறிவு. சமூக வலைத்தளங்களில் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும், ஆற்றல் வாய்ந்த மந்திரங்கள் என்றும் பதிவுகள் உலா வருகின்றன. அவரவர் எதைப் படிக்கின்றார்களோ, அதை அப்படியே நம்பி, மேலனுப்பவும் செய்கின்றனர்.

    எந்த மந்திரமும் சொல் அளவிலோ, எழுத்து அளவிலோ, ஆற்றல் வாய்ந்த மந்திரம் ஆகாது. சற்குருவின் முகமாக அது உபதேசிக்கப்பட வேண்டும். ‘சற்குரு’ என்னும் சொல் பொருள் ஆழம் மிக்கது. வேட மாத்திரத்தால் குருவாக உள்ளவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்கள் நாம் நம்பும்படியாக எதையும் மிக அழகாகப் பேசுவார்கள். எல்லாம் பொருள் கருதியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குருவைத் தேடி நாம் அலைதல் வேண்டாம். அதற்காக மனம் ஏங்கி, இறைவனை வேண்டி இருந்தால் போதும். பலகாலம் ஏங்கி இருத்தலைக் கண்டு, பரம்பொருளே குருநாதனாக வந்து நம்மை அகப்படுத்துவார். இது யானையைக் காட்டி யானையைப் பிடிப்பது போல. ஆட்டினைக் காட்டி, வேங்கையைப் பிடிப்பது போல.


“ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்,

மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ?

கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா

வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே.”

என்பது சிவவாக்கியர் பாடல்.

இதன் பொருள் -- ஒரு வரம்பை ஏற்படுத்தி, அவ்வரம்பினைக் கடந்து வருகின்றவர்களைக் கொல்லுவதற்காகச் சொல்லி உள்ள உனது ஆஞ்ஞாபனையைக் கடந்து வந்த கயாசுரனைக் கொன்று, அந்தத் தோலைப் போர்வையாக இட்டுக் கொண்ட ஞானாசிரியனாகிய சிவபெருமானே! (கயாசுரன் என்பது உயிர்களிடத்துப் பொருந்தி உள்ள ஆணவத்தைக் குறிககும்.) ஒரு புலியைப் பழக்க விரும்பிய வேடுவன், ஒர் ஆட்டினை, அதைப் பிடிக்க நியமித்த ஓரிடத்தில் கட்டுவிக்க, புதருக்குள் மறைந்திருந்த புலியானது வெளிப்பட்டு வந்து, தனக்கு நல்ல இரை கிடைத்தது என்று ஆட்டின் மீது பாயும்போது, புலியை வசமாகப் பிடிப்பது போல, எனக்கு இவ்வுலகத்தில் யாவரும் கண்டு விருப்பும் கொள்ளுகின்ற, பொன்னைக் காட்டி, அதனிடத்தில் ஆசையை உண்டாக்கி, அதன் வழியே வருகின்ற உலக வாழ்க்கையில் அகப்படுத்தி, எனது அறிவை மயக்குவது திருவருளுக்கு அழகு ஆகுமோ? இனியாவது உமது திருவருட் சத்தியைக் கொண்டு எனக்கு மோட்ச வீட்டை உணர்வித்து, உனது திருவடியை அடைந்து குடியிருக்கின்ற பெரியோர்களிடத்தில், உங்களைப் போல் இவனும் நமக்கு ஒரு அன்பன் ஆவான் என்று சொல்லி, எனது ஞானானுபவ குணத்தை அவர்களிடத்திலும் வெளிப்படுத்துபம்படி வேண்டிக் கொள்ளுகின்றேன். 

    “பிறியாக் கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு” என்பது, குமரகுருபர அடிகள் அருளிய திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.  “அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமை” என்பது திருவாசகம். எனவே, இறைவன் மானிடச் சட்டை தாங்கித்தான் குருவாக வருவான். அப்படித் தானாக நம்மைத் தேடி வருபவர்தான் ஞானகுரு அல்லது சற்குரு. “மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே” என்று முருகப் பெருமானைப் போற்றுவார் அருணகிரிநாதர். “தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே” என்பது திருவாசகம். அப்படி வந்த சற்குரு பெருங்கருணை வைத்து, மந்திர உபதேசம் புரிவார். அது மந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பாடலாகவும் இருக்கலாம். அல்லது ஒரு வார்த்தையாகவும் இருக்கலாம். குருநாதன் உபதேசிப்பது எதுவோ, அதுவே மந்திரம் ஆகும். “நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியம் விளக்குகிறது. “சொன்னது மந்திரமா, இட்டது பச்சிலையா” என்பது திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்து அடிகளார் பாடியது. இறைவனைக் கருதி, எது சொல்லப்பட்டதோ அதுவே மந்திரம் ஆகும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    நான் பிறந்த ஊரில் இருந்த சிவானந்த மவுனகுரு சுவாமிகள் குறித்து அறியாதார் யாரும் இல்லை. கோணிப்பட்டை சாமி என்று அவரைக் குறிப்பிடுவார்கள். அவர் கோணிப்பட்டையைத் தான் கோவணமாக அணிந்து இருந்தார். அது ஏன் என்பது நான் அறிந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு. கதை அல்ல. திருநீறும் வில்வ இலையும் கொடுத்தே தன்னிடத்து வந்தவர்களின் தீராப் பிணியைத் தீர்த்து அருளியவர். பல்லாயிரக் கணக்கானவர்களை சைவர் ஆக்கிய புனிதர். எனது இளமைப் பருவத்தில் ஆறு ஆண்டுகள் தினமும் அவரைத் தரிசித்துப் பணி செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். அவர் உபதேசம் பெற்ற கதையை அவரே சைகையால் சொன்னார். குடியாத்தம் நகருக்கு அருகில் உள்ள மகாதேவ மலையில் அப்போது இருந்த ஒரு பெரியவரிடத்தில் உபதேசம் பெறச் சென்றார். குருவின் சந்நிதானத்தில் நின்றார். மகைதேவ மலையில் இருந்த குரு தெலுங்கு மொழியில் “ஏன் வந்தாய்” என்று கேட்டாராம். “உபதேசம் பெற வந்தேன்” என்று சொன்னாராம். “கழுதைக்கு என்ன உபதேசம்? போய், செய்கிற வேலையை ஒழுங்காகச் செய்” என்றாராம். குருவின் ஆணைப்படி, திரும்பி வந்து, அவர் சொன்னதையே உபதேசமாகக் கொண்டு, தான் செய்து வந்த திருக்கோயில் திருப்பணியை இறைச் சிந்தனையோடு செய்த அருளாளர்தான் எமது சிவானந்த மவுனகுரு சுவாமிகள்.

    இன்னொரு நிகழ்வை இங்கே சிந்திப்பது பயன் தரும். இராமானுஜர் அருளுபதேசம் பெறுவதற்கு வேண்டி, திருவரங்கத்தில் இருந்து, திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில், அவர் வாழ்ந்திருந்த இல்லத்தின் முன் சென்று நின்றாராம். “யார்” என்று உள்ளே இருந்து திருக்கோட்டியூர் நம்பிகளின் குரல் வந்தது. “நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்” என்று சொன்னாராம். “போய் வா” என்று விடை வந்தது. கதவு திறக்கவில்லை. இப்படி, பதினேழுமுறை சென்றும் குருதரிசனம் கிடைக்கவில்லை. படினெட்டு முறை சென்றும் உபதேசம் குருதரிசனம் கிடைக்கப் பெறாமல் திரும்பினார் இராமானுசர். அடுத்து முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளின் திருமாளிகை அடைந்து, திருக்கதவின் முன் நின்று, “அடியேன் இராமானுஜன் வந்துள்ளேன்” என்றாராம். திருக்கதவம் திறக்கப்பட்டது. நம்பிகளின் அருளுபதேசம் கிடைக்கப் பெற்றது. பதினேழு முறை ‘நான்” என்று சொன்னபோது கிடைக்காத அருளுபதேசம், “அடியேன்” என்று சொன்னதும் கிடைத்தது. ‘நான்’ என்னும் எண்ணம் உள்ளவரையில், குருதரிசனம் கிடைக்காது. 

    நாம் ஒருவரைக் காண வேண்டி, அவரது முகவரியைக் வைத்துக் கொண்டு, அவர் வாழுகின்ற ஊருக்குச் செல்கிறோம். அந்த முகவரிக்குச் செல்லும் வழியைக் காட்டவே நல்லவர் ஒருவரின் துணை வேண்டும். தவறாக வழி காட்டுவோர் இல்லாமல் இல்லை. சரியான வழியைக் காட்டுபவரும், தவறான வழியைக் காட்டுவோரும் மனித வடிவில்தான் இருப்பர். (சற்குருவும், அசற்குருவும் மனித வடிவில்தான் இருப்பர்) ஒருவழியாக, நாம் காண விரும்பியவர் வாழுகின்ற வீட்டினைக் கண்டு, கதவைத் தட்டுகிறோம். காண விரும்பியவர் கதவைத் திறந்தால் மட்டம் போதாது. அவர் இதற்கு முன்னர் நாம் அறிந்தவராகவும் இருக்கலாம். முன்னர் பார்த்து அறியாதவராகவும் இருக்கலாம். நம்மை இன்னார் என்று அறிந்து, அவர் நம்மை வரவேற்கவில்லையானால், நாம் எடுத்த அத்தனை முயற்சியும் வீணே. அவராக வந்து கதவைத் திறந்து, நம்மைப் பார்த்து, விரும்பி வரவேற்றால் நமது எண்ணமும், முயற்சியும் நிறைவேறும். வீட்டிற்குள் அழைத்துச் சென்று இனிய சொற்களைப் பேசி, நம்மைத் தக்கபடி உபசரிக்கவில்லையானால், பலன் இல்லை. அதுபோலத்தான் குருதரிசனமும். நமக்கு நல்வினைப் பயன் இருந்தால்தான் குருதரிசனம் கிடைக்கும். 

    அப்பர் பெருமானது பெருமைகளைக் கேள்வியுற்ற அப்பூதி அடிகள், அவரைத் தமது குலகுருவாகக் கொண்டு இருந்தார். அப்பர் பெயரால் பல அறங்களைச் செய்து வந்தார். அப்பர் பெருமானை நேரில் பார்த்தது இல்லை. அப்பர் மீது தாம் கொண்டிருந்த அன்பின் அறிகுறியாகத் தாம் அமைத்த தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றுக்கும் “திருநாவுக்கரசு” என்னும் பெயரையே சூட்டினார். திருத்தல யாத்திரையின் போது, திங்களூர் வழியே சென்ற அப்பர், அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தரையும், அதில் தமது பெயர் வரைந்து இருப்பதையும் கண்டார். அதை அமைத்தவர் யார் என்று அங்கிருந்தவர்களைக் கேட்டு, அவர்கள் மூலமாகவே அப்பூதி அடிகள் இல்லம் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டார். அப்பூதி அடிகளின் வீட்டின் தலைக்கடை வாயிலில் வந்து நின்றார். அதை அறிந்த அப்பூதி அடிகள் விரைந்து வந்து அப்பரை வணங்கினார். அப்பரும் வணங்கினார். அப்போதும் அப்பர் எப்படி இருப்பார் என்பது அப்பூதி அடிகளுக்குத் தெரியாது. அப்பர் பெருமானே தம்மை இன்னார் என்று அறிவித்தபின்னரே, வந்தவர் அப்பர் என்பதை அறிந்து கொண்டார் அப்பூதி அடிகள். இப்படித்தான் குருதரிசனம் கிடைக்கும்.

    “இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்” என்று திருவாசகம் கூறும். மணிவாசகப் பெருமானை இறைவன் ஆட்கொண்ட விதமும் இவ்வாறுதான். மணிவாசகர் இறைவனைத் தேடிப் போகவில்லை. இறைவன்தான் மணிவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டார். “தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே” என்றுதான் மணிவாசகர் பாடி உள்ளார்.

    அப்படி நம்மை அகப்படுத்தி ஆட்கொண்ட குருநாதர் உபதேசிப்பதே மந்திரம். மந்திர உபதேசம் பெற்றால் மட்டுமே போதாது. மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும். “உரு ஏறத் திரு ஏறும்” என்பார்கள். உரு ஏற ஏற, மந்திர ஆற்றல் பெருகும். மற்றபடி, சக்தி வாய்ந்த மந்திரம் என்று எதையாவது சொல்வது எல்லாம் அறியாமையே ஆகும். ஒரு மந்திரத்தைக் கோடி முறை உருவேற்றினால் ஆற்றல் பெருகும் என்று சொல்வார்கள். அப்படி உருவேற்றித் திரு ஏறிய அம்மையார் ஒருவரை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவேன்.

“பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்

நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,

பாவம் ஆயின பாறிப் பறையவே,

தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.”

என்பது அப்பர் தேவாரம். நூறு ஆயிரம் என்பது ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் என்பது ஒரு கோடி. பூவனூர்ப் புனிதன் என்பது திருப்பூவனூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும் சிவனைக் குறிக்கும். அவனுடைய நாமம் என்பது திருவைந்தெழுத்து. “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு. திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒரு கோடி முறை உருவேற்றியவர்கள், தமது பாவங்கள் (சஞ்சித கர்மங்கள்) எல்லாம் அழிய, இந்திர பதவியை விடவும் மேலான அருட்செல்வத்தை அடைவார்கள் என்கிறார் அப்பர் பெருமான்.

நாள் ஒன்றுக்கு 108 என்று வைத்துக் கொண்டால், மாதம் ஒன்றுக்கு 3240 ஆகிறது. ஒரு வருடத்துக்கு 38,880 ஆகிறது. இப்படி, 257 ஆண்டுகள் கழிந்தால்தான் ஒரு கோடி ஆகும். அவ்வளவுக்கு மனிதனின் வாழ்நாள் அமைவது இல்லை. ஒருநாளைக்கு 108 முறை சொன்னாலே போதும் என்று அமைந்து விடுபவர்கள் உண்டு. அது சிரத்தை ஆகாது. இருக்கின்ற வாழ்நாளில், எவ்வளவுக்கு சிரத்தையுடன் மந்திரத்தை உருவேற்றுகின்றோமோ, அவ்வளவுக்கு ஆற்றல் பெருகும் என்பதுதான் உண்மை.

அது போலத்தான், நூல்கள் ஓதுவதும். ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்திநின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை” என்பது பெரியபுராணம். சொல் நன்றாகத் தெரியும். ஆனால், அதன் பொருள் மறைந்து கிடக்கும். பொருளை உணர்தல்தான் அறிவு. புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.

     அறிதல், தெரிதல், கற்றல், என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,

“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்"

என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

    "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த, தாம் உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 

      மணல்கேணியைத் தோண்டுவது போல, முயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால், கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்க, கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலக நூல். இன்னொன்று அறிவு நூல். உலக நூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவு நூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் எல்லாம், அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.

     ஆக, கற்றல் என்பது மிக எளிதானதே. அதில் மனம் வைக்கவேண்டும். முயற்சி இருக்கவேண்டும். முயற்சியில் தான் எல்லாமே உள்ளது. முயற்சி என்பது தோண்டுவதைக் குறிக்கும். எவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு தண்ணீர் ஊறும். எவ்வளவு முயல்கின்றோமோ, அவ்வளவுக்கு அறிவு ஊறும். ‘கலை அறிவு’ என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. ‘அருள் அறிவு’ என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு.

     "பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டிப் பாரம். சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்." என்கின்றார் வள்ளல்பெருமான். திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான். “தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகவே இவ்வாறு அருளி உள்ளார்.

     நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவை, ‘கலை அறிவு’ என்கிறோம். 

     ஒருவன் ஒரு பிறவியில் எத்தனை புத்தகங்களைப் படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், நாம் வாழும் நாளில் சுமார் ஆயிரம் நூல்களைப் படிக்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் ஒரு சில நூல்களையே முயன்றுதான் படிக்க முடிகின்றது. படிக்கப் படிக்க, மறந்துகொண்டே வருகின்றது. படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் முடியும். இந்த நூலறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது.  அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? என்றால் வள்ளல்பெருமான் ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகின்றார்.

     ஒரு ஆள் சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை, ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல் பெருமானாரின் கணக்கு.       

     நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் 10 கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 2 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 2,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கம் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்கவேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.

"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."

என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

     நூறு ஆண்டுகள் என்பது சௌரமான ஆண்டைக் குறிக்கும். சந்திரமான ஆண்டு என்பது 120 ஆகும். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில், 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார்.

     தொண்டரடிப்பொடி ஆழ்வார் போட்ட கணக்கு ஒருபுறம். இன்னொரு புறம், சேரமான் பெருமாள் நாயனார் போட்ட கணக்கு ஒன்றையும், பதினோராம் திருமுறையில் வரும் "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் பகுதியில் காண்போம்.


“விதித்தன வாழ்நாள் பெரும்பிணி  விச்சைகள் கொண்டுபண்டே

கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை, குங்குமக் குன்று அனைய

பதித்தனம் கண்டனம், குன்றம்வெண் சந்தனம் பட்டனைய

மதித்தனம் கண்டனம், நெஞ்சு இனி என்செய்யும் வஞ்சனையே.”

இதன் பொருள் ---

     நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு, பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலை உடைய தனங்களை முன்னே கண்டோம், பின்பு அத் தனங்கள், மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டன போல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்து விட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

     விதித்த வாழ்நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணினால், பெரிய நோய்கள் வந்து வெதுப்புகின்றன. காமநோயும் வந்து வெதுப்புகின்றது. இதில் என்னத்தைச் சாதிப்பது?

“வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல், மிக அவற்றுள்

ஈண்டிய வெந்நோய், முதலது  பிள்ளைமை, மேலது மூப்பு

ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு, இங்ஙனே

மாண்டன, சேர்தும் வளர்புன்  சடைமுக்கண் மாயனையே.” 

இதன் பொருள் ---

     படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள், மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இந்த உடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வரையறுக்கிறான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவகையாய்த் திரள்கின்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. வரையறுக்கப்பட்ட ஆண்டுகளிலும் தொடக்கப் பகுதி குழந்தைப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. அவைகளிலும் அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்? ஆகையால், நாம் மிக இளம் பருவத்திலேயே வேறு எதனையும் பொருட்படுத்தாமல், நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

    இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலை அறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? என்றால், அதுதான் இல்லை. நம்முடைய முயற்சி இன்மைதான் பிரச்சினை. முயற்று இன்மை, இன்மை புகுத்தி விட்டது.

     கற்பது என்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல என்று மிகவும் எளிதான வழியைத் தான் நம் மீது கருணை வைத்து திருவள்ளுவ நாயனார் காட்டினார் என்பதை உணர்தல் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித் தானே ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும்.

     நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையானது கல்விச் செல்வம் என்பதால், அதையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரை மட்டும் காணலாம்.

     "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, ‘நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா’ என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரமே இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். எனவே, தோண்ட வேண்டியது மணலைத் தான். கடினமான பாறையை அல்ல. எளிதான கற்றலைத் தான் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

“மந்திரம் என்றால் என்ன” என்ற தலைப்பில் அருளாளர் அ. ச. ஞானசம்பந்தனார் ஒரு அரிய நூலைத் தந்து உள்ளார். வாய்ப்பு நேருமாயின் படித்துப் பயன் பெறலாம்.



69. ஏழையர்க்குத் தெய்வமே துணை

“அந்தணர்க்குத் துணைவேதம், அரசருக்குத்

     துணை வயவாள், அவனி மீது

மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்

     துணை மதுர வார்த்தை அன்றோ?

நந்தமக்குத் துணையான தண்டலைநீள்

     நெறியாரே! நண்ப ரான

சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்

     தெய்வமே துணையென் பாரே.


இதன் பொருள் ---


அந்தணர்க்கு வேதம் துணை – வேதியர்க்கு வேதமே ஆதரவு - அரசருக்கு வயவாள் துணை - மன்னர்க்கு வெற்றிமிகும் வாளே ஆதரவு, அவனி மீது மைந்தர்க்குத் தாயார் துணை - உலகிலே குழந்தைகட்கு அன்னையே ஆதரவு, தூதருக்கு மதுர வார்தையன்றோ துணை - தூதர்களுக்கு இனியமொழி அன்றோ ஆதரவு?, நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே நண்பரான சுந்தரர்க்குத் துணை - நமக்குத் துணையாக இருக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே அவருக்குத் தோழரான சுந்தரர்க்குத் துணை ஆனார். நாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணை என்பார் - எப்போதும் ஏழைகட்குத் தெய்வமே ஆதரவு என்று அறிந்தோர் கூறுவர்.


     திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்பது பழமொழி.


9. நலமுடன் வாழ

“ஓருபோது யோகியே, ஓண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே என்ப, - திரிபோது

ரோகியே, நான்குபோது உண்பான் உடல்விட்டுப்

போகியே என்று புகல்."


ஒளி உள்ள இளம் தளர்போலும் கைகளை உடைய பெண்ணே!  யோகி என்பவன் ஒரு நாளைக்கு ஒருபோது மட்டும் உண்பான்.  உலக இன்பங்களில் உழல்பவன் ஒரு நாளைக்கு இருவேளை உண்பான்.  நோயாளி ஒரு நாளில் மூன்று வேளை உண்பான். நான்கு வேளைகள் உண்பவன், உடலை விட்டு விரைவில் இறந்துபோகக் கூடியவனாகத்தான் இருப்பான் என்று சொல்வாயாக.


(யோகி - தவம் செய்பவன்.  போகி - சிற்றின்பப் பிரியன்.  திரிபோது - மூன்று வேளை.  ரோகி - நோயாளி.)


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்

நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு

பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக

அஞ்சுமவன் கேட்பது அறிந்து.”


சொல்லுங்கால், பிச்சை எடுப்பவன் நொய்தான ஒரு துரும்பை விடவும் நொய்தான பஞ்சைக் காட்டிலும் மிகவும் எளியவன் ஆவான்.  அவ்வாறு மிகவும் நொய்தானவனை, வீசும் காற்றானது அடித்துச் செல்லாதோ என்றால், அக்காற்றும் கூடப் பிச்சை எடுப்பவனைத் தெரிந்துகொண்டு, வீடு வீடாக இரக்கும் அவன், தன்னிடம் ஏதேனும் இரப்பானோ என அஞ்சி அவனிடம் நெருங்க அஞ்சும்.



68. வெண்ணெய் இருக்க, நெய் தேடி அலைதல்

தண்ணமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள்

     நெறியே! நின்தன்னைப் பாடில்

எண்ணமிக இம்மையினும் மறுமையினும்

     வேண்டியதுண் டிதையோ ராமல்,

மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்

     தேதிரிபா வாணர் எல்லாம்

வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக்

     கொண்டலையும் வீணர் தாமே.


இதன் பொருள் ---


    தண் அமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள் நெறியே - குளிர்ச்சி பொருந்திய மலர்ச் சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! நின் தன்னைப் பாடில் – உம்மை வாயாரப் பாடித் துதித்தால், எண்ணம் மிக இம்மையிலும் மறுமையிலும் வேண்டியது உண்டு - மனநிறைவு பெற இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டியது கிடைக்கும்; இதை ஓராமல் - இதனைச் சிந்தியாமல், மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே திரி பாவாணர் எல்லாம் - இப் புவியில் மக்களைப் புகழ்ந்து பாடி அலைந்து திரியும் புலவர்கள் யாவரும், வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்கொண்டு அலையும் வீணர் தாமே - தமது கையில் வெண்ணெய் இருக்கும்போது (அதை உருக்கிப் பயன் கொள்ளாமல்) நெய் எங்கே உள்ளது என்று தேடித் திரியும் அறிவிலாரே ஆவார்.


     ‘'வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான் ஏன்?' என்பது பழமொழி. மக்களைப் புகழ்தலாவது அவர்கள் செய்யாததைச் செய்தார்களென்றும் அவர்களிடம் இல்லாத பண்பை இருப்பதாகவும் கூறிப் பாடுதல். 

“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;

     காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;

     போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;

மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;

இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்

     யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.”      --- இராமச்சந்திர கவிராயர்.


    வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், 

    உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாகவும்,  கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.


இதனை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....


தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

     சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்;

     ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                                          

மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல்

     விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,

கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

பொடிக் கொள் மேனி எம் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


“காணியேல் பெரிது உடையனே!

     கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,

பேணியே விருந்து ஓம்புமே!” என்று

     பேசினும் கொடுப்பார் இலை;

பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண்

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து

     உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,

“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புரை வெள் ஏறு உடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

          

வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனை,

     பாவியை, வழக்கு இ(ல்)லியை,

பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று

     பாடினும் கொடுப்பார் இலை;

பொன் செய் செஞ்சடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நலம் இலாதானை, “நல்லனே!” என்று,

     நரைத்த மாந்தரை, “இளையனே!”,

குலம் இலாதானை, “குலவனே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

புலம் எலாம் வெறி கமழும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அலமரது அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நோயனை, “தடந்தோளனே!” என்று,

     நொய்ய மாந்தரை, “விழுமிய

தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,

     சாற்றினும் கொடுப்பார் இலை;

போய் உழன்று கண் குழியாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,

      ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,

“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புள் எலாம் சென்று சேரும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,

     “காமதேவனை ஒக்குமே”,

முற்றிலாதானை, “முற்றனே!”, என்று

     மொழியினும் கொடுப்பார் இலை;

பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,

      “சால நல அழகு உடை ஐயனே!”

“கை உலாவிய வேலனே!” என்று,

     கழறினும் கொடுப்பார் இலை;

பொய்கை ஆவியில் மேதி பாய்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                     

அருட்புலவர்கள் மிகச் சிலரே உண்டு. “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும் வழங்குவார்.  "இம்மையே தரும் சோறும் கூறையும்" என்ற அருள் வாசகத்தை உன்னுக.


    பொருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, பொருள் இன்மை வறுமை. அதனால் அவருக்கு நேருகின்ற துன்பம். அருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, அருள் இன்மை வறுமை. அதனால் அவர் படுகின்ற துன்பம். அருள் நூலாசிரியர் யாரும் பொருளைக் குறித்துப் பாடுவது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு அருள் நூல்களை ஓதினால் இந்த உண்மை தெற்றென விளங்கும்.


“இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்

சிலர், பலர் நோலா தவர்.”


என்று திருவள்ளுவ நாயனார் பாடியள்ளதும், அதற்குப் பரிமேலழகர் வகுத்துள்ள உரையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.  குறிப்பாக, இத் திருக்குறள், "தவம்" என்னும் அதிகாரத்தில் வருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்" என்பது பரிமேலழர் கண்ட வளமிக்க உரை. இதில் பரிமேலழகர் காட்டும் தெளிவு ---  "செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன",  என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.


ஈதல், இசைபட வாழ்தல்

ஈதல், இசைபட வாழ்தல்

-----


     சமுதாயம் சிறந்து வாழ ஈகை என்னும் அறத்தினை வற்புறுத்திய திருவள்ளுவ நாயனார், அறவழியில் நின்று ஒழுக மறுப்பவரை நோக்கி, ‘உனக்குப் புகழ் உண்டாகவாவது, நீ மறைந்த பின்னரும் உன்னைப் பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவாவது பிறருக்குக் கொடுத்து உதவு’ என்னும் குறிப்புத் தோன்ற ‘புகழ்’ என்னும் அதிகாரத்தினை அமைத்துள்ளார். 


     “ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று முதலிலேயே கொடுத்தலையும், அதன் வழியே புகழ் பெறுதலையும் சுட்டிக் காட்டி, புகழாகிய ஊதியம் பெறுதலே உயிர்க்கு உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவ நாயனார். உலகில் அனைவரும் தாம் செய்த பணிக்கு ஊதியம் எதிர்பார்க்கின்ற நிலை ஒருபுறம் இருக்க, எந்தப் பணியும் செய்யாமலேயே மிகுந்த ஊதியத்தை விரும்புகின்ற போக்கு நிறைந்த மக்களிடையில் வாழும் நமக்கு, நாயனார் காட்டும் ‘புகழ்’ என்னும் ஊதியம், புதிய ஒன்றுதான். தான் சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஊதியமாக எண்ணும் நிலையில், உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து அதனால் பெறும் புகழே ஊதியம் என்கிறார் நாயனார். உண்மையும் அதுதான்.


     உழைக்காமலே செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அப்படி ஈட்டிய செல்வத்தைக் கூட, பிறருக்குத் தந்து உதவவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்களின் செல்வமானது, “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” என்னும் நிலையில் நிச்சயம் ஒருநாள் இல்லாது போகும். தேனீக்கள் சுற்றிச் சுற்றி உழன்று, தேன் உள்ள மலர்களைத் தேடிச் சென்று, சிறுச்சிறிதாகத் தேனைக் கொண்டுவந்து, பெரிய பெரிய தேனடைகளை வைக்கும். அந்தத் தேனடைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தேனீக்கள் தேனை இழப்பதோடு தம் உயிரையே இழந்துவிடுகின்றன. உலோபத்தனம் மிகுந்தவரின் செல்வம் இப்படித் தான் கரையும். உலோபியரின் இயல்பு குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது.


"திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்

     தேடிப் புதைத்து வைப்பார்,

சீலை நலமாகவும் கட்டார்கள், நல்அமுது

     செய்து உணார், அறமும் செயார்,


புரவலர்செய் தண்டம் தனக்கும், வலுவாகப்

     புகும் திருடருக்கும் ஈவார்,

புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,

     புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,


விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்

     வெகுபணம் செலவாகலால்

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என

     மிகுசெட்டி சொன்னகதைபோல்,


வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்

     மற்றொருவருக்கு ஈவரோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


     பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.  நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.  நல்ல உணவு சமைத்து உண்ணமாட்டார். எந்த நல்ல அறவழியிலும் பொருளைச் செலவு செய்யமாட்டார். அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார். புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.  குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்,  மிக்க பொருள் செலவழிவதனாலே, கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல,  உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?


“பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்

உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்

இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.” -- நல்வழி. 


     பெரிய இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்த மக்கள், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர் எம்மை விரும்பி நேசித்தவர் என்று யாரையும் விரும்பாதவர்கள் உலோபிகள். அவர்கள் வந்து தம்மைச் சரண் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார். பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணை உண்டாக்கினால் அவருக்கு எல்லாம் கொடுப்பார்.


     நாம் தேடுகின்ற பொருளாகிய ஊதியம், நம்மை விட்டுச் ‘செல்வோம் செல்வோம்’ என்று சென்று கொண்டே இருக்க, புகழாகிய ஊதியமோ நாம் மறைந்த பின்பும் என்றும் நிலைத்து நம்மை வாழ வைக்கின்றது என்ற உண்மையை உய்த்து உணரவேண்டும். பிற அனைத்தும் உலகில் நில்லாது மறைய, புகழ் ஒன்றே மனிதனை எல்லோர் உள்ளத்திலும் என்றும் வாழவைப்பதாகும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்” என ஒரு திருக்குறள் வழியே காட்டுகிறார். ‘ஒன்றா’ என்னும் சொல்லுக்கு, ஒப்பில்லாத என்று பொருள்.


     இந்த நிலையில்லாத உலகத்தில் என்றும் நிலைத்திருப்பது, தனக்கு ஒப்பு இல்லாத புகழ் ஒன்றே என்பதை விளக்கி, எப்படியும் வாழ நினைக்கும் மனிதன், நல்லன செய்து, அல்லன கடிந்து, புகழ் ஓங்க வாழவேண்டுமே என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் ‘புகழ்’ என்னும் அதிகாரம். எனவே, நிலைபெற்ற புகழைப் பெற, நிலையற்ற மனிதன், நிலையற்ற வாழ்வில் தன் நிலையற்ற பொருள் முதலியவற்றால் சிறக்க, ‘ஈகை’ என்னும் அறத்தினைப் புரிந்து வாழ வேண்டும். ‘உயர்ந்த புகழ்', ‘நீள் புகழ்’  ‘இசை என்னும் எச்சம்’ என்று புகழ் விளக்கப் பெறுகின்றது. ஈகையைச் செய்தவர் இறந்து போவது நிச்சயம். ஆனால், அவரது பருவுடம்பு மறைந்த பின்னரும், அவரது ‘புகழுடம்பு” இறவாது நிலைத்து இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளல்கள் செய்த அறச் செயல்களை இன்றும் இந்த உலகமானது போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, முன்னோர் ஈட்டிய புகழை நாமும் பெறவேண்டும் என்று ஆற்றுப்படுத்துகின்றார் திருவள்ளுவ நாயனார். 


     உலகில் பிறக்கின்றோம் நாம். வளர்கின்றோம்; வாழ்கின்றோம். வாழ்நாள் கழிகின்றது. இறுதியில் இறக்கின்றோம். இது மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான நியதி. “பெருங்காரியம் போல் வரும் கேடு உடம்பால் பிரியம் கூர வந்து கருவூறிப் பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்” என்று அருணகிரிநாதர் பாடியளவிலேயே மனித வாழ்க்கை கழிதல் கூடாது. ஒரறிவுடைய மரம் தொடங்கி எல்லா உயிர்களும் பிறந்து, இருந்து, வாழ்ந்து மறைகின்றன. ஆனால், ஆறு அறிவுடைய மனிதன் பிறவற்றினும் மேம்பட்ட காரணத்தினால், தான் என்றும் நிலைக்க வழி காணவேண்டும். உலகில் பிறந்தவர் யாவரும் எப்படியும் மறையப் போகின்றனர். மறைந்த பின்னும் நினைத்துப் பார்க்கும்படியாக, ‘ஈகை’ என்னும் அறத்தினைச் செய்யவில்லையானால், அப்படிப்பட்டவன் பிறவாது இருந்தாலே நலமாக இருந்திருக்கும். புகழோடு வாழ்ந்து மடியாதவர், பிறத்தலை விடப் பிறவாமல் இருப்பதே நல்லது என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு. 


“தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று”    --- திருக்குறள்.


     மக்களாகப் பிறந்து, ஈகை’ என்னும் அறித்தைப் புரியாது, பயனின்றி வாழ்ந்தால் கூடப் பரவாயில்லை. மாறாகப் பல கொடுமைகளைச் செய்து இகழ்ச்சி அடைகின்றார்கள் பலர். தாமும் கெட்டு, தாம் வாழும் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் கொடுமையை எண்ணிய நாயனாரின் அருள் உள்ளம் வருந்தி, “தோன்றாமை நன்று” என்று கூற வைத்தது. இத்தகைய கொடுமனம் படைத்தவர்கள் பலர் தோன்றாது இருந்தால் - நல்லவை செய்து ‘நீள்புகழ்’ பெறுவோர் பலர் பிறந்திருந்தால், இன்று உலகில் காணப்படும் கொடுமைகள் இல்லாது இருக்கும். மக்களின் வாழ்வு மெத்த மகிழ்ச்சியாகவே அமையும்.  நல்லனவற்றைச் செய்து ‘நீள்புகழ்’ பெறாத மக்களைத் தாங்குகின்ற நிலத்தை எண்ணுகிறார் திருவள்ளுவ நாயனார். நிலத்துக்கு ‘நல்லாள்’ என்னும் அற்புதமான பெயரைச் சூட்டி மகிந்த திருவள்ளுவ நாயனார், அந்த நல்லாள் இசை ஒழிய வாழவேண்டி வந்ததே, அதனால், நிலமானது வளம் குன்றிப் போகுமே என்றும் வருந்துகிறார். 


வசைஇலா வண்பயன் குன்றும், இசையிலா 

யாக்கை பொறுத்த நிலம்” -- திருக்குறள். 


     புகழுடம்பினைப் பெறாத, வெற்றுடம்பினரை இந்த ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. நல்லன செய்யாது, அல்லனவே செய்பவர் வாழ்கின்ற நாடு, ‘நாடா வளத்தன’ என்ற நிலையிலிருந்து மாறி, தன் வண்பயனாகிய வளமெல்லாம் அழிய, மக்கள் பசியும் பிணியும் பகையும் பற்றி வாடுவார்கள் என்பதை, “வசை இல்லா வண்பயன்” என்னும் சொல்லால் திருவள்ளுவ நாயனார் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றார். இன்று நாம் கண்முன் காணுகின்ற காட்சிதான் இது. திருவள்ளுவர் அருள்வாக்குப் பொய்யாகிப் போகுமா? நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும், அவற்றை மக்கள் எல்லோரும் நிறைவாக அனுபவிக்கின்ற நிலை இல்லையே. உயிர் உணர்வற்ற மாக்களால் தானே இந்த அவலம் எல்லாம் நிகழ்கின்றது. உலகம் வாழ வேண்டுமாயின், இத்தகைய கொடுமையாளர்கள் இல்லாது ஒழியவேண்டும். இவர்களை ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்கக் கூடாது என்பதைப், புகழ் என்னும் அதிகாரத்தால் காட்டிய நாயனார், தனிமனிதன் புகழோடு வாழ்வதால் தரணியே சிறக்கும் என்று காட்டினார். தான் வாழ்வதோடு, சமுதாயமும் சிறக்க வாழவேண்டும் என்று அறத்தை ஆற்றிப் புகழ் பெறாத வசையாளர் வழியே வையமும் சமுதாயமும் எப்படி மாறும் என்பதையும் காட்டினார்.  என்றென்றும் புகழொடு வாழ விரும்பும் மக்களினம், திருவள்ளுவ நாயனார் காட்டிய கடமை உணர்வைக் கருத்தில் இருத்துதல் வேண்டும்.




பொது --- 1114. கரவுசேர் மகளிர்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கரவுசேர் மகளிர் (பொது)


முருகா! 

மௌனம் ஆகிய கூட்டில் அடியேன் இருந்து, 

பேரானந்தத்தை அனுபவிக்க அருள் புரிவாய்.


தனதனா தனதனந் தனதனா தனதனந்

     தனதனா தனதனந் ...... தனதான


கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்

     களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங்


கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்

     கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும்


அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்

     பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும்


அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்

     சரமனோ லயசுகந் ...... தருவாயே


பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்

     படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல்


பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்

     பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி


குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்

     குடிலவே ணியிலணிந் ...... தவராகங்


குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்

     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.


                   பதம் பிரித்தல்


கரவுசேர் மகளிர் குங்கும பயோதர தனங்-

     களின் அறா துயில்வதும், ...... சரிபேசும்


கர சரோருக நகம் பட விடாய் தணிவதும்,

     கமல நாபியின் முயங் ...... கிய வாழ்வும்,


அரவுபோல் இடை படிந்து இரவு எலா முழுகும் இன்ப

     நல் மகா உததி நலம் ...... பெறுமாறும்,


அதர பான அமுதமும் தவிரவே, மவுன பஞ்-

     சர மனோலய சுகம் ...... தருவாயே.


பரவும் ஆயிர முகம் கொடு திசா முக தலம்

     படர் பகீரதி விதம் ...... பெற, ஆடல்


பயில், பணா வனம் உகந்த குண மாசுண கணம்,

     பனி நிலா உமிழும் அம் ...... புலி, தாளி,


குரவு, கூவிளம், அரும்பு இதழி, தாதகி, நெடும்

     குடில வேணியில் அணிந் ...... தவர் ஆகம்


குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும்

     குமரனே! அமரர் தம் ...... பெருமாளே.

பதவுரை

பரவும் ஆயிரமுகம் கொடு திசாமுக தலம் படர் பகீரதி --- பரந்து, ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை,

விதம் பெற ஆடல் பயில் பணா, வனம் உகந்த குண மாசுண கணம் --- விதவிதமாக ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம்,

பனி நிலா உமிழும் அம்புலி --- குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசுகின்ற சந்திரன்,

தாளி --- தாளி அறுகு,

குரவு --- குராமலர், 

கூவிளம் --- வில்வம்,

அரும்பு இதழி --- மலர்ந்த கொன்றை,

தாதகி --- ஆத்தி, (இவைகளை)

நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் குழைய --- (தமது) நீண்டு வளைந்த திருச்சடையில் அணிந்த சிவபரம்பொருளின் திருமேனி குழையுமாறு,

ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே --- அன்புடன் தழுவிய உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!

அமரர் தம் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் --- வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும்,

சரி பேசும் கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும் ---வளையல்கள் ஒலிக்கின்ற தாமரை மலர் போன்ற கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படுமாறு செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், 

கமல நாபியின் முயங்கிய வாழ்வும் --- தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வதில் பெறும் இன்பமும், 

அரவு போல் இடை படிந்து --- பாம்பினைப் போன்ற நுண்மையான இடையில் படிந்து,

இரவெலா(ம்) முழுகும் இன்ப நல் மகா உததி --- இரவு முழுதும் இன்பக் கடலிலே மூழ்கி இருப்பதும்,

நலம் பெறுமாறும் அதர பான அமுதமும் --- நல்ல சுகம் கிடைக்குமாறு வாயிதழில் ஊறும் எச்சிலை அமுதைப் போலப் பருகுவதும்,

தவிரவே --- (இவை யாவும்) தவிரும்படியாக,

மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே --- மெளனம் என்னும் கூண்டில் அடைந்து கிடக்கும் மன ஒடுக்கம் என்னும் சுகத்தை அருள் புரிவீராக.


பொழிப்புரை

        ஆயிரக் கணக்கான கிளைகளாய்ப் பரந்து நோக்கும் இடம் எல்லாம படர்ந்து செல்லும் கங்கை, விதவிதமாக ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசுகின்ற சந்திரன், தாளி அறுகு, குராமலர், வில்வம், மலர்ந்த கொன்றை, ஆத்தி, ஆகிய இவைகளைத் தமது நீண்டு வளைந்த திருச்சடையில் அணிந்த சிவபரம்பொருளின் திருமேனி குழையுமாறு அன்புடன் தழுவிய உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!

        தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், வளையல்கள் ஒலிக்கின்ற தாமரை மலர் போன்ற கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படுமாறு செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வதில் பெறும் இன்பமும், பாம்பினைப் போன்ற நுண்மையான இடையில் படிந்து, இரவு முழுதும் இன்பக் கடலிலே மூழ்கி இருப்பதும், நல்ல சுகம் கிடைக்குமாறு வாயிதழில் ஊறும் எச்சிலை அமுதைப் பருகுவது போல் பருகுவதும் தவிரும்படியாக, மெளனம் என்னும் கூண்டில் அடைந்து கிடக்கும் மன ஒடுக்கம் என்னும் சுகத்தை அருள் புரிவீராக.

விரிவுரை

பரவும் ஆயிரமுகம் கொடு திசாமுக தலம் படர் பகீரதி ---

பகீரதன் தவம் புரிந்து கொண்டு வந்ததால், கங்கைக்குப் பகீரதி என்று ஒரு பெயர் அமைந்தது. கங்கை நதியானது ஆயிர முகங்களோடு பரந்து பாய்கிறது. “ஆயிர முகத்து நதி” என்று அடிகளார் அருளிய “திருவேளைக்காரன் வகுப்பு” கூறும். “ஆயிர மாமுகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர்சடை மேல் பயில” என்று அப்பர் தேவாரம் கூறும்.


விதம் பெற ஆடல் பயில் பணா, வனம் உகந்த குண மாசுண கணம் --- 

பணா – பாம்பு.

வனம் உகந்த குணம் – காட்டில் வாழ்வதை விரும்புகின்ற பாம்பு.

மாசுண கணம் --- பாம்புக் கூட்டம்.


பனி நிலா உமிழும் அம்புலி --- 

அம்புலி – சந்திரன்.

பனி நிலா - குளிர்ந்த ஒளி,

"பனிநிலா எறிக்கும் சென்னி" --- அப்பர் தேவாரம்.


தாளி --- 

தாளி அறுகு, “தாளி அறுகாம் உவந்த தார்” என்பது மணிவாசகம்.


நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி --- 

குடில வேணி --- வளைந்த திருச்சடை.

        உமாதேவியார் உலகம் உய்யும் பொருட்டு ஒளிகட்கு எல்லாம் மூலகாரணமாய் உள்ள சிவபெருமானுடைய திருக்கண்களை மூடியருளினார். உலகமெல்லாம் இருண்டுவிட்டது. அதன் காரணமாக, இறைவனை விட்டுப் பிரிந்து, மண்ணுலகில் வந்து, காஞ்சியம்பதியில் கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத்தை எழுந்தருளப் புரிந்து வழிபாடு ஆற்றினர். அம்மையின் அன்பை உலகு உணர்ப் புரிவான் வேண்டி, பெருமான் நதியில் வெள்ளம் வரச் செய்தனர். அதுகண்ட அம்மை, தனக்கு ஆபத்து வந்தது என்று எண்ணாது, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது வருகின்றதே என்று பயந்து, இலிங்கத்தைத் தழுவிக் கொண்டனர். அம்மையின் அன்பைக் கண்ட ஆலமுண்ட நீலகண்டர் குழைந்து அருள் புரிந்தனர். இந்த வரலாறு பெரியபுராணத்தில் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் சற்று மாறுபட்டுச் சொல்லப்பட்டு உள்ளது, காஞ்சிப் புராணத்திலும் விரிவாகச் சொல்லப்பட்டு உள்ளது.

        உமாதேவியார் தழுவக் குழைந்தபடியால், அம்மையின் வளைச்சுவடும், திருமுலைத் தழும்பும் சிவலிங்கத் திருமேனிக்கு உண்டாயின.

“பூதியாகிய புனித நீர் ஆடிப்

     பொங்கு கங்கை தோய் முடிச்சடை புனைந்து

காதில் வெண் குழை கண்டிகை தாழக்

     கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்

ஆதி தேவனார் ஆயும் மாதவஞ் செய்

     அவ் வரங்கொலோ? அகிலம் ஈன்று அளித்த

மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு

     வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்.”    --- பெரியபுராணம்.


“தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து,மத

வெங்கண் கரிஉரி போர்த்தசெஞ் சேவகன் மெய் அடையக்

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்

செங்கைக் கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே.”  ---  அபிராமி அந்தாதி.


கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் --- 

கரவு - வஞ்சகம். விலைமாதர்களைக் கரவுசேர் மகளிர் என்று சொன்னார். அருளைக் கருதாது பொருளைக் கவர்தலில் மட்டுமே மனதைச் செலுத்தி, அது காரணமாக வஞ்சக எண்ணத்துடன் கூடிய நடத்தை உடையவர்கள் விலைமாதர்கள். தமது முலைகளின் மீது குங்குமக் குழம்பினைச் பூசி, விதவிதமாகத் தம்மை அலங்கரித்துக் காமுகர் உள்ளத்தைத் தமது வலையில் விழவைப்பர்.

தனம் – முலை. பயோதரம் – பயம் – பால். உதரம் – உயிறு. பால் பொருந்தி இருக்கின்றதால், முலைக்குப் பயோதரம் என்ற பெயர் உண்டானது. குங்குமக் குழம்பு பூசப்பட்டு உள்ளதால், “குங்கும பயோதரம்” என்றார்.


சரி பேசும் கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும் ---

சரி – வளையல். சரி பேசும் -- வளையல்கள் ஒலிக்கின்ற.

கரம் – கை.

சரோருகம் – தாமரை.

விடாய் – காம விடாய்.


கமல நாபியின் முயங்கிய வாழ்வும் --- 

தாமரை போன்ற தொப்பூழ்க்குழி. “கமலநாபன்” “பத்மநாபன்” என்று திருமாலை வழங்குவர்.


அரவு போல் இடை படிந்து --- 

பாம்புப் போன்று வளைந்து உள்ள நுண்மையான இடை.

“ஏந்து அரா வாய்ந்த நுண்ணிடை” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். “அராப்பயில் நுண்ணிடையார்” என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையார்.


மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே --- 

பஞ்சரம் – கூடு. மெளனம் என்னும் கூடு. மோனம் என்னும் கூட்டில் அடைந்து கிடப்பதால் உண்டாகும் மனவொருமைப்பாட்டினால் உண்டாகும் ஆனந்தம்.

        உயிர் இறந்த பிறகு உடம்பு இருந்தாலும் அதில் உணர்ச்சி இருப்பதில்லை. அதை வெட்டினாலும் குத்தினாலும் துடிப்பதில்லை. கொசுக் கடித்தால் உடனே துள்ளுகிறோம். புண் வந்தால் துடிக்கிறோம். இதே உடம்பு, உயிர் இறந்த பிறகு என்ன பண்ணினாலும் உணர்ச்சி இன்றிக் கட்டையாகி விடுகிறது.  அப்படி உணர்ச்சி இல்லாமல் உயிருள்ள உடம்பு இருக்குமா? ஒருவன் அயர்ந்து தூங்குகிறன். 'உடம்பு மறந்து  தூங்குகிறான்' என்று சொல்கிறோம். மூட்டைப் பூச்சி கடிக்கிறது. அது அவனுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் உடம்பிலே உணர்ச்சி  இருப்பதில்லை. அந்தப் பூச்சி அழுத்தமாகக் கடித்தால் சற்றே புரண்டு  படுக்கிறான். மயக்கம் போட்டு விழுந்தவன் மண்டையில் காயம் பட்டு  இரத்தம் ஒழுகுகிறது. ஆனாலும், அவனுக்கு உணர்ச்சி இருப்பதில்லை. அவன் உடம்பிலே  உயிர் இருந்தாலும் உணர்ச்சி அற்றுப் போகிறது. 

உடம்பு உணர்ச்சி மரத்துப் போக ஊசி குத்தி, மருத்துவம் செய்கிறார்கள். கத்தியினால் அறுத்து, மருந்து போட்டுப்  பின்பு தைக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பில் உணர்ச்சி  இருப்பதில்லை. எனவே, உயிர் உடம்பில் இருக்கும்போதே உணர்ச்சி அற்றுப் போகும் நிலை வருவது உண்மைதான் என்று தெரிகிறது. அப்படியே ஒருவகை நிலையில் யோகியர்களுக்கு உடம்பு உணர்ச்சி அற்றுப் போகிறது. உடம்பு இருந்தும் இறந்துவிட்டது போல ஆகிவிடுகிறது. அந்த நிலையில் பெற்ற அனுபவத்தையே, "இறந்தே விட்டது இவ்வுடம்பே" என்று அருணகிரிநாதர் சொல்கிறார். உடம்பு உணர்ச்சியற்றுப்  போவதற்கு முன்பு படிப்படியாகச் சில முயற்சிகள் செய்து பழகவேண்டும். இறைவனை எப்போதும் வாயாரப் பாடவேண்டும். அமைதியாகிருந்து தியானித்தல் வேண்டும். மனத்தால் நினைக்கும்போது வேறு நினைப்புகளும் இடையிடையே தலைப்படும். அவற்றை மெல்ல மெல்ல ஒட்ட வேண்டும். நினைப்பில் அழுத்தமும்  ஒருமைப்பாடும் ஏறியவுடனே மற்ற நினைப்புகள் தமே ஒழிந்து, இறைவனுடைய உணர்வே மிக்கு நிற்கும்.

நினைவு என்பது மனத்தோடும் அறிவோடும் ஒட்டியது. உணர்வு என்பது அனுபவத்தோடு  இணைந்தது. அந்த நினைப்பையும் மறந்து அனுபவத்திலே மனம் கரையும். திரும்பத்  திரும்ப ஒன்றை நினைத்து நினைத்துப் பழகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகும்.  "நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து,  நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து" என்று தமது அனுபவத்தை வள்ளல்பெருமான் காட்டுகிறார். நினைக்க வேண்டும். இடையறாது நினைக்கவேண்டும். நினைப்பு முறுகின பக்குவத்தில் உணர்ச்சி  தலைப்படும். உணர உணர,  சலனம் ஒழியும்.  அமைதி பிறக்கும். பொறிகளால் உண்டான அனுபவம் மனத்தில் வாசனையாக நிற்கும். நினைப்பு உள்ளவரையில் மனம் இயங்கியது. உணர்வு உள்ள வரையில் உள்ளம்  இயங்கியது. மனம் நின்றபோது அனுபவத்தை உணரும் உள்ளம் இயங்கத் தொடங்கியது. மனம் இயங்கும்போது உருவம் நாமம் எல்லாம் நினைவு இருந்தன. 

மனமும் அடங்கி, உள்ளம் இயங்கியபோது இன்னது என்று சொல்ல இயலாத ஒன்று உணர்ச்சியிலே  தட்டுப்படும். அது இன்னது என்று தெரியாது. அப்படி இருக்கும் நிலையே குணம் உள்ள நிலை. அதற்கு வடிவில்லை. ஆனால், அனுபவத்தைத் தரும் இயல்பு உண்டு. அதுதான் குணம்.  நிர்க்குணம் உணர்வு ஒன்றியது.  எல்லாம் ஒருங்கியபோது அந்தக் குணமும் மறைந்து போகவேண்டும். நான் அனுபவிக்கிறேன் என்ற உணர்வும் மறைந்து போகவேண்டும். மயக்க மருந்தை மூக்கிலே காட்டும்போது மருத்துவர் ஒன்று இரண்டு என்று எண்ணச் சொல்கிறார். எண்ணிக்கொண்டே வருகிறவன் கடைசியில் எண்ணுவதை மறந்து  தன்னையும் மறந்துவிடுகிறான். அது போன்ற நிலை வரும். “மெளனத்தை உற்று நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்னை மறந்து இருந்தேன்” என்று அருணை அடிகளார் கந்தர் அலங்காரத்தில் பாடுவார்.

கருத்துரை

முருகா! மௌனம் ஆகிய கூட்டில் அடியேன் இருந்து, பேரானந்தத்தை அனுபவிக்க அருள் புரிவாய்.








7. இளமையில் கல்வி

“வருந்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்,

வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்

வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து

தாழும்அவர் தம்அடிக்கீழ்த் தான்


தன்னை மக்கள் வளைத்து வருத்தப்படுத்த வளைந்து கொடுத்த மூங்கில் கொம்பு, பெருமை வாய்ந்த அரசரின் தலைமுடியின்மேல் பல்லக்கு ஆகச் சிறப்புப் பெறும்.  வளையாத மூங்கில் கம்பானது, தாழ்வுபெற்று கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு அவருடைய காலின்கீழ் கிடந்து உலகமெல்லாம் அலைந்து இழிவுபடும்.

(கருத்து — இளமையில் பெற்றோரும் ஆசிரியரும் வற்புறுத்திக் கல்வி கற்க வைக்க,   பெற்றோரும் ஆசிரியரும் காட்டிய வழியில் வருந்திக் கல்வியறிவைப் பெற்ற பிள்ளைகள், பிற்காலத்தில் பெரியோர் பலரும் பாராட்டும்படி சிறப்பைப் பெறுவார்கள்.  இளமையில் உடம்பை வருத்தி, கல்வியறிவைப் பெற எண்ணாமல் சோம்பியிருந்து ஊர் சுற்றிய பிள்ளையானவன், பிழைக்க வழியில்லாமல், ஊர்தோறும் திரிந்து, கீழ்மக்களிடத்திலே அவர்களை இட்ட வேலைகளைச் செய்து சிறுமைப்பட்டுக் கிடப்பார்கள்.)

(வேழம்பர் - கழைக்கூத்தாடிகள்.  வேய் - மூங்கில்.  மேதினி - உலகம்.)


66. தாயைப் பழித்து மகள்

முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி

     தனைப்பழித்து, முரணே பேசிப்

பின்பலரை உடன்கூட்டி நூதனமா

     நடத்துவது பிழைபாடு எய்தில்

துன்பறியாக் கதியருளும் தண்டலைநீள்

     நெறியாரே! தூயள் ஆகி

அன்புளதா யைப்பழித்து மகள்ஏதோ

     செயத்தொடங்கும் அறிவு தானே.


இதன் பொருள் ---


    துன்பு அறியாக் கதி அருளும் தண்டலை நீள் நெறியாரே - துன்பம் காணாத நற்கதியைக் கொடுக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே! 

    முன் பெரியோர் தொண்டு பட்டு நடந்த வழிதனைப் பின் பழித்து முரணே பேசி - முற்காலத்தில் பெரியோர்கள் பழைமையாக ஒழுகிய நெறியைப் பிற்காலத்தே இகழ்ந்து மாறு கூறி, பலரை உடன் கூட்டி நூதனம் ஆ(க) நடத்துவது பிழைபாடு எய்தில் - பலரை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு புதுமையாக ஒன்றைச் செய்வது கைகூடாவிட்டால் (அது), தூயள் ஆகி அன்பு உள தாயைப் பழித்து - நன்னெறி உடையவளும் அன்புடையவளும் ஆன அன்னையை இகழ்ந்து கூறி, மகள் ஏதோ செயத் தொடங்கும் அறிவு தானே - (அவள்) மகள் தவறான நெறியிலே செல்லத் துவக்கும் அறிவு போலவே ஆகும்.


     ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்று நன்னூல் கூறும். ஆயினும் முன்பு தூயதாக இருந்த பெரியோர் நெறி எப்போதும் தாயதாகத்தானே இருக்கும். அருமையான இந்த நெறியில் பழக விரும்பாத அறிவற்ற சிலர், பழைமையை விரும்பாது, அதை இகழ்ந்து கூறுவதும், புதுநெறி புதுப்பிப்பதும் தகாது என்பது கருத்து. (தொண்டு - பழைமை.) ‘தாயைப் பழித்து மகள் அவிசாரி ஆனாளாம்' என்பது பழமொழி.


 மாணிக்கக் கற்கள் அவற்றின் குற்றம் குறைவு அற்ற தன்மையை வைத்தே மதிப்பிடப் பெறுதல் வேண்டும். அவற்றை இழைத்துச் செய்த நகைகள் பழமையானதாக இருக்கலாம். அல்லது புதுமையானதாகவும் இருக்கலாம். உயர்ந்தோர்கள் மாணிக்கத்தின் குற்றமற்ற தன்மை கருதியே அதனை விரும்பி அணிவர். இடைப்பட்டவர்கள் மாணிக்கத்தின் தன்மையையும் அதனைப் பதித்துள்ள நகையையும் அவற்றின் பழமையையும் ஆராய்ந்து அணிந்து கொள்வர். கடைப்பட்டவர்கள், மணியையும் அணிகலனையும் பற்றித் தெளிந்த அறிவில்லாதவர்கள். ஆகையினால் பலர் கூடிப் புகழ்ந்தால் தாமும் புகழ்வர். பலர்கூடி இகழ்ந்தால் தாமும் இகழ்வர். இவர்கள் தமக்கென ஓர் அறிவு இல்லாதவர்.

 

      தொன்மையான நெறிகளை அறிவுறுத்தும் பழமையான நூல்கள் பல உள்ளன. நீதிநூல்கள் ஆகட்டும். அருள் நூல்கள் ஆகட்டும். அவற்றை அருளிச் செய்தவர்கள் அனைவரும், மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்தவர்களே. அவர்கள் அருளிச் செய்த நூல்களை ஓதித் தெளிந்தால், மெய்ப்பொருளை உணரலாம். ஆயிரக் கணக்கான பாடல்கள் பழமையான நூல்களில் பல்லாண்டுகளாக அழியாமல் உள்ளன. அவற்றை ஓதித் தெளிதல் வேண்டும்.

 

      இந்த உண்மையைத் தெளியாது, இக்காலத்தார் பலரும் ஒருவகைச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகின்றனர். அது பகுத்தறிவு என்றும் சொல்கின்றனர். அதாவது, தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதுபோல், தமிழுக்குப் பழைய தமிழ் எனப் பெயரிட்டு, அதில் சில மாற்றங்கள் செய்து புதிய தமிழ் உருவாக்கவேண்டும் என்பது அவரது கருத்து.  இதற்கு, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" என்னும் நன்னூல் சூத்திரத்தைத் துணையாகக் கொள்கின்றனர். இது நன்னூலில் வரும் சூத்திரம்தானா என்று அறியாதவர்களும் உண்டு. அவர்களும் இது குறித்துப் பேசுகின்றனர். "பழைய காலைத் தூர்க்காதே, புதிய காலை விடாதே" என்னும் பழமொழியும் உண்டு என்பதை  அவர்கள் நினைவில் கொள்வதில்லை. பழமையில் இருந்துதான் புதுமை தோன்றும் என்பதையும் அவர்கள் மறந்து விடுகின்றனர். 


6. இவையிவை வீண்

“காந்தன் இல்லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்,

சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம், - ஏந்திழையே

அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம், அவமே

துன்எயிறுஇல் லார்ஊண் சுவை.” — நீதிவெண்பா


மணிகளால் இழைக்கப்பட்ட அணிகளை அணிந்தவளே! கணவன் இல்லாத கனத்த கூந்தலை உடைய பெண்ணின் அழகு வீண்.  பொறுமை என்பது இல்லாதவரின் தவம் வீண் ஆகும். தாயில்லாத பிள்ளை இருப்பது வீணே. நெருங்கிய பற்கள் இல்லாதவர்கள் உண்ணும் உணவின் சுவையும் வீணே.


65. தன்வினை தன்னைச் சுடும்

 



“மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில்

     கெடுப்பதற்கு மனத்தி னாலே

உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே

     கெடுவன்என்பது உண்மை அன்றோ?

தென்னவன்சோ ழன்பணியும் தண்டலைநீள்

     நெறியாரே! தெரிந்து செய்யும்

தன்வினைதன் னைச்சுடவோட் டப்பம்வீட்

     டைச் சுடவும் தான்கண் டோமே.”


இதன் பொருள் ---

        தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள் நெறியாரே - பாண்டியனும் சோழனும் வழிபடும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!

         மண்ணுலகில் பிறர்  குடியை வஞ்சனையில் கெடுப்பதற்கு - நிலவுலகிலே மற்றவர் குடும்பத்திற்கு  வஞ்சனையாலே கெடுதி செய்வதற்கு, மனத்தினாலே உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே கெடுவன் என்பது உண்மை அன்றோ - உள்ளத்திலே நினைத்தாலும், வாயினால் கூறினாலும் அவனே அழிவான் என்பது உண்மை ஆகும்.

         தெரிந்து செய்யும் தன்வினை தன்னைச் சுட - (தீமை என)  அறிந்தும்  செய்கின்ற  தன்வினை  தன்னை  எரிக்கவும், ஓட்டப்பம் வீட்டைச் சுடவும் தான் கண்டோம் - ஓட்டடை வீட்டை எரிக்கவும் கண்டிருக்கிறோம்.


      ஓட்டப்பம் வீட்டைச் சுடல் : பட்டினத்தார் துறவு பூண்டபின், வெறியர்போல ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தாராம். அவருடைய உடன்பிறந்தாள் அவருடைய அந் நிலையின் உயர்வை உணராதவளாய், தங்களைப் பிறர் பழிப்பதாக நினைத்து, இவரைக் கொன்றுவிட நினைத்தாள். தன் வீட்டிற்கு வந்தபோது நஞ்சு கலந்து சுட்டு வைத்திருந்த ஓட்டடையை அவருக்குக் கொடுத்தாள். அவர் அந்த அடையை வீட்டின்மீது எறிந்து, ‘தன்வினை தன்னைச் சுடும் -  ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என மொழிந்தார். உடனே வீடு எரிந்ததாம். அன்றுமுதல் இது பழமொழியாக வழங்குகிறது. ‘கெடுவான் கேடு நினைப்பான்' என்னும் பழமொழியும் இங்குப் பொருந்தும். “தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்னும் திருவள்ளுவர் வாக்கும் இங்கு வைத்து எண்ணத் தக்கது.


5. அன்பினால் நன்மை

“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா

வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர்

பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்

சுகம்உறுதல் நல்லோர் தொழில்.” — நீதிவெண்பா


நல்ல நாக்கானது தன்னோடு இருந்துகொண்டே தனக்கு கேடு விளைவிக்கும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்டே சுவை வகைகளை அனுபவிப்பது போல, பகைவர் பலர் இருந்தாலும், அவர்களிடம் உண்மை அன்பைக் காட்டி, அவர்களின் மூலம் நன்மையை அடைதல் நல்லோர் செயலாகும்.




64. பூசை வேளையில் கரடி

“நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்து

     இங்கிதமா நிருபர் முன்னே

பேசுவதே உசிதம்அல்லால், நடுவில்ஒரு

     வன்குழறிப் பேசல் எல்லாம்

வாசம்மிகுந் தண்டலைநீள் நெறியாரே!

    அபிடேக மலிநீ ராட்டிப்

பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட்டு

    ஓட்டுவது போலுந் தானே.”


      வாசம் மிகும் தண்டலைநீள் நெறியாரே - மணம் சிறந்த சோலைகள் உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரே!, 


    சபையில் வந்தால் நிருபர் முன்னே நேசமுடன் வேளை அறிந்து இங்கிதம் ஆ - அரசவையிலே சென்றால் அரசருக்கு எதிரில் அன்பையும் காலத்தையும் அறிந்து குறிப்பாக, பேசுவதே உசிதம் - (தன் வேண்டுகோளை) விண்ணப்பித்துக் கொள்வதே நலம் தரும். 


    அல்லால் – அவ்வாறு அல்லாமல், 


    நடுவில் ஒருவன் குழறிப் பேசல் எல்லாம் - இடையிலே ஒருவன் தடுமாறிக் கூறுவன யாவும், அபிடேகம் மலி நீர் ஆட்டிப் பூசை பண்ணும் வேளையிலே - திருமஞ்சனமாக நிறைந்த நீரை ஆட்டி வழிபாடு செய்யும் நேரத்தில், கரடியை விட்டு ஓட்டுவது போலும் - கரடியை (அவிழ்த்து) விட்டு ஒட்டுவது போலாகும்.


    ‘சிவபூசை வேளையில் கரடி வந்தது போல' என்பது பழமொழி. கரடி என்பதற்கு வெவ்வேறு பொருள் உரைக்கப்படுகிறது. உசிதமானதைக் கொள்ளவும்.


அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின்

-----

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.

“பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே."

இதற் பொருள் -– 

        பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும்,  தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.

    மனிதன் உலகில் வாழப் பிறந்தவன். தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழவைக்கவும் பிறந்தவன். இந்த அடிப்படை உண்மையினை உணராத காரணத்தினால்தான் மனிதன் ஒன்றை விட்டு ஒன்று பற்றி எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ செய்து, எப்படியோ காலத்தைக் கடத்துகின்றான். சிலர் தமது வாழ்வே பெரிதென எண்ணி, அவ்வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்கு ஒரு கண் கெட்டாலும் பரவாயில்லை, மற்றவனுடைய இரண்டு கண்களும் கெடவேண்டும் என்று பிறர்க்குத் தீங்கு இழைப்பதிலேயே இன்பம் காணுவதையும் காணுகின்றோம், பிறர் சொல்லவும் கேட்கின்றோம்.

    இந்த அவலநிலை மனிதனிடத்தில், மனித உணர்வு அற்றதனாலே உண்டானது.  “பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறிப் போந்தார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருஏளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.

        வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லையே என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சாலச் சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.

    அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் மனிதனுக்கு உயர்ந்த ஒர் உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும் - சமுதாயம் தழைக்கும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.

        “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்பட்டது.  முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன்,  செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம். 

    "மறந்தும் பிறன்கேடு சூழற்க,சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

      திருவள்ளுவ நாயனார்,  "இன்னா செய்யாமை"  என்னும்  அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார். 

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."                 --- திருக்குறள்.

        எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளையாவது செய்யாது இருக்கக் கற்றுக் கொள்ளுதல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது. நல்லது செய்ய முடியாதவர்கள் சும்மா இருந்தாலே போதும். இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் பெற வேண்டினால், மேலே குறித்த புறநானூற்றுப் பாடலின் கருத்தை உளவாங்கி வாழக் கற்றுக் கொள்ளுதல் நல்லது.


அருளுடைமை

அருளுடைமை

----

        உலகில் பிறந்து மனைவி மக்களொடு வாழ்ந்து, சுற்றத்தையும் தழுவி அவர்களிடத்தும் அன்பைப் பொழிந்து வாழும் மனிதன், பிற எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, அவர்களிடத்தும், அவற்றினிடத்தும் கருணை உள்ளம் படைத்தவனாய் வாழும் நிலையில் நிற்பதே அருளுடைமை ஆகும். அருளுடைமை என்பது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் என்று பொருள்படும். உயிர்கள் மீது செல்லுகின்ற ஆசையே ‘அன்புடைமை’ என்றும், ‘அருள் உடைமை’ என்றும் சொல்லப்படும். ஆயினும், அன்பு என்பது தனக்குத் தொடர்பு உடைய மனைவி மக்கள், சுற்றத்தார் மீது காட்டுவது. அருள் என்பது தனக்குத் தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மீதும் செலுத்தப்படுவது.

        திருக்குறளில் இல்லறம், துறவறம் என்ற இரு நிலையாக வாழ்க்கையினைப் பாகுபடுத்தி, முதலில் இல்லற நெறிக்கு உரிய அறங்களை வரிசைப்படுத்தி அருளிய திருவள்ளுவ நாயனார், துறவறநெறிக்கு முதலாவதாய் 'அருளுடைமை” என்பதை அருளுகின்றால். “அருளுடைமை” துறவறத்தின் முதல் அதிகாரமாக வைக்கப் பெற்றுள்ளது. இல்லறத்தின் முதிர்ச்சியே துறவறம் ஆகும்.

        இல்லறத்தில் பிறக்காத அருளுடைமை என்னும் பண்பு, துறவறத்தில் திடீர் என்று முளைக்கப் போவது இல்லை. அரும்புதான் மரலாகும். அரும்பு இல்லாமல் மலர் இல்லை. எனவே, அருளுடைமை என்பது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் அமைந்திருக்க வேண்டிய பண்பு என்பது அறியப்படும். அன்புடைமையின் எல்லை விரிந்தால் அது அருளுடைமையில் சென்று முடியும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “அருள் என்னும் அன்பு ஈன் குழவி”  என்று பின் பொருட்பாவில் விளக்கி அருளினார்.. எனவே இந்த அருளுடைமை என்பது உலக உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை ஆகும்.

    திருவள்ளுவ நாயனார் கல்விச் செல்வம், பொருட் செல்வம், செவிச்செல்வம் போன்ற பிற செல்வங்களை எல்லாம் விளக்கிச் சொல்லி, இவற்றுக்கு எல்லாம் மேலானது அருட்செல்வம் என்று காட்டுகிறார். “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்று கூறி அருளுகிறார். அருட்பாலில் இவ்வாறு காட்டிய நாயனார், பொருட்பாலில், “கேள்வி” என்னும் அதிகாரத்தில் முதலாவதாக, “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்றும் கூறி உள்ளாரே என்னும் ஐயம் உண்டாவது இயல்பே. கேள்விச் செல்வத்தின் சிறப்பினை உணர்த்த வந்த நாயனார், கேள்விச் செல்வத்தை உயர்ந்ததாகப் பொருட்பாலில் வைத்து அருளினார். ஆராய்ந்து அறியப் புகுந்தால், கேள்விச் செல்வம் என்பது, அருட்செல்வம் பெறுதற்கு வழியாக அமையும் என்பது விளங்கும். “கேட்டல்” என்பது ஞானத்திற்கு உரிய நான்கு பாதங்களில் ஒன்று. எனவே, அருட்செல்வமே எல்லாவற்றிலும் மேம்பட்டது என்பதும், உலக உயிர்கள் இன்ப நெறியில் வாழ அருட்செல்வமே வழிவகுக்கும் என்பதும் அறிதல் வேண்டும்.

        “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்று, அருளுடைமை அதிகாரத்தின் முதல் திருக்குறளின் பிற்பகுதியில் நாயனார் சொல்லியதன் அருமையை ஆழ்ந்து சிந்தித்தால், பொருளால் வரும் செல்வங்கள் மேலானவை அல்ல என்பது விளங்கும். உலகில் பிறந்த மனிதன் பலவகையிலும் ஓடி ஓடி, யார் யாருடைய துணையையும் கொண்டு, பொருளைக் குவித்து, எப்படி எப்படியோ கட்டி ஆளுகிறான். இறுதியில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, வெறும் கையோடு இறந்து போகிறான். குவித்து வைத்த செல்வத்தை அவன் ஆர அனுபவித்தானா என்றால், இல்லை. பொருளைத் தேடி ஒடி ஒடி உழைத்த மனிதன் அருளைத் தேடி அலையவில்லை. அதானல், அவன் கீழ்மகனாகவே வாழ்ந்தான் என்பதுதான் உண்மை. அதனால்தான், கீழ்மக்களிடத்தும் பொருள் உண்டு என்பதைக் காட்ட, “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் நாயனார். தேடிய பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வழிவகை அறியாத மனிதர்களைப் பார்த்து “கேடுகெட்ட மானிடரே” என்றும், “பாவிகாள்” என்கிறார் ஔவைப் பிராட்டியார். “கேடுகெட்ட மானிடரை! கேளுங்கள், கூடு விட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார், பாவிகாள், அந்தப் பணம்” என்று இரங்குகிறார். “உங்கள் வல்வினை நோய், ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது, உங்கள் அத்தம் எல்லாம்  ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே?" என்கிறார் அருணகிரிநாதர். வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்றுதான் நினைக்கிறோம். பொருள் படைத்தவனாக இருந்தால் இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்து விடலாம் என்பது உலகவர் எண்ணம். ஆனால், திருவள்ளுவரும், அருணகிரிநாதரும் அருள் இன்றியமையாதது  என்கின்றனர்.  இறைவனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம், தொழில் முதலியவற்றால் வருவது பொருள். பொருள் இருந்தால் போதாது. அருள் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. 

"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

 என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். 

      இந்த உலகத்தில் பொருள் இருந்தால்தானே வாழமுடியும். வாழ்ந்து முடிந்த பின்னர் தானே இறைவன் திருவடியை அடைய முடியும். எனவே, முதலில் பொருளோடு இவ்வுலகில் வாழ்வோம். அதன் பின்னர் அருளோடு அவ்வுலகம் செல்வோம் என்று கூறுகின்றவர்களும் உள்ளனர். அவர்களுக்கு அறிவுறுத்தவே, 

"பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார் 

அற்றார் மற்று ஆதல் அரிது" 

 என்று அருளின் சிறப்பை உணர்த்தினார் திருவள்ளுவ நாயனார். பொருளோடு அருளையும் தேடுவதே அறிவுடைமை.  இந்த உலகத்தில் பொருளோடு வாழும் காலத்திலேயே, பொருளைக் கொண்டு அறச் செயல்களைப் புரிந்து, அருளைப் பெறாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. அருளும் பொருளும் ஒருங்கே உடையவன் தான், இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் நாயனார் அருளிய இரண்டு திருக்குறள்களையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணினால் கிடைக்கின்ற விடை. எனவே, பொருள் மட்டும் இருந்தால் வாழ்ந்துவிடலாம் என்பது மறுக்கப்படுகிறது. அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும். 

        ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பதுதான் பொருள். நல்ல நெறியில் இன்பமாகத் தானும் வாழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழ்வதே வாழ்வு. நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் கழிந்த போவது தாழ்வு. ஒருவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்கு, நல்ல நெறியிலே சென்று, இன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும்,  உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது. பொருள் நிறைய இருப்பதனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதைப் பொருள் நிறையப் படைத்து உள்ளவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். பொருளை மலைமலையாகக் குவித்து வைத்துள்ளோருக்கு, அந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் அச்சத்தைத் தந்துகொண்டு இருக்கிறது. நிச்சயமாக இன்பத்தைத் தரவில்லை.   

        உலகம் நல்ல வழியில் வாழ வகுக்கப் பெற்றுள்ள நெறிகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் மனிதன் அருளானவன் ஆவான். அருளானது தானாகவே வந்து அவனிடத்து வெளிப்படும் என்கிறார் அருணகிரிநாதர். 

“தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்

இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்

கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.”   --கந்தர் அலங்காரம்.

    அவன் அந்த அருளை ஆள்வான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். “நல்லாற்றான் நாடி அருள் ஆள்க, பல்லாற்றான் தேடினும் அஃதே துணை” என்பது திருக்குறள். பொருளை ஆள்வதை விட, அருளை ஆள்வதே சிறந்தது என்பது மட்டுமல்ல, அதுவே எளிமையில் கிட்டுவதும் கூட. எனவேதான், “அருள் ஆள்க” என்கின்றார் நாயனார். அந்த அருளை ஆளுகின்ற நிலையைப் பெற்றபின், அந்த அருளே அவனுக்குத் துணையாக நின்று அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் அல்லாத மற்றவருக்கும் நலம் பயக்கும்.

         எனவே, பிறரை ஆள நினைக்கின்றவர்கள், உலகை ஆள நினைக்கின்றவர்கள், அருளை ஆள முதலில் பயிலவேண்டும். பிற துணையை நாடாது, அருளையே துணையாக நாடவேண்டும் இந்த உண்மையினை வற்புறுத்தி, “அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை” என்று தெளிவாகவும், துணிந்தும் கூறுகின்றார். அருளாளனுடைய செயல் எப்படி அமையவேண்டும் என்பதையும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார். “மன்னுயிர் ஒம்பி, அருள் ஆள்வார்க்கு இல் என்ப, தன் உயிர் அஞ்சும் வினை” என்கிறார். பெற்றுள்ள செல்வத்தால், மன் உயிர் ஓம்பி அருளை ஆளவேண்டும் என்று எண்ணுகின்ற அருளாளனுக்கு புறத் தோற்றங்கள் எல்லாம் மறைந்து விடும். இன்னார் - இனியார், உற்றார் – மற்றவர், எமது நாட்டான் - பிறநாட்டான் என்ற மாறுபாடு தோன்றாது.  இதுவே அருளாளன் நிலை. 

  "எவ்வுயிரும் பராபரன் சந்நிதி” என்றனர் சமயச் சான்றோர். திருவள்ளுவர் “மன்னுயிர் ஒம்பி” என்கின்றார். புறத் தோற்றமாகிய உடலைச் சொல்லவில்லை. கண்ணால் காண முடியாத நிலையில் ஒவ்வொரு உடம்பிலும் குடிகொண்டு உள்ள உயிரைச் சொல்லுகின்றனர். அவ்வுயிர் என்றும் நிலைபெற்று உள்ளது என்பதால், “மன்னுயிர்” எனப்பட்டது. அந்த உயிரை ஓம்பவேண்டும். “ஒம்புதல்” என்ற சொல் மிக உயர்ந்தது. அவ்வாறு “மன்னுயிர் ஒம்பின், தன் உயிர்க்கும் ஏதம் இல்லை”  என்பது திருவள்ளுவ நாயனார் அருள்மொழி. முல்லைக்குத் தேர் ஈந்த பாரியும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனும், புறா ஒன்றிற்காகத் தனது உடம்பேயை அறுத்துத் தந்த சிபியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளற் பெருமானும் இவ்வாறு வாழ்ந்து காட்டியவர்களே.

        உலகில் வலியாரும், மெலியாரும் என்றுமே உள்ளனர். தன்னின் மெலியாரைச் சாடி, வருத்தித் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது மனிதநிலை. தனி மனிதனாயினும் சமூகமாயினும் நாடுகளாயினும் இந்த நியதிக்கு விலக்கு இல்லை. எனவேதான் இந்தக் கொடுமைக்கு மருந்தாக - மாற்றாக – அருளுடைமை. என்னும் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில் நம்மைத் தெருட்டுகிறார் நாயனார். “நீ உன்னினும் வலி குன்றியவனைத் துன்புறுத்தி, உன் வாழ்வை வளமாக்க நினைக்கிறாயே, அதோ அந்தப் பக்கம் உன்னினும் வலியவன் ஒருவன் உன்னைத் தாக்கி, புடைத்து, அழித்துத் தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு வருவது உனது கண்ணுக்குத் தெரியவில்லையா?”  என்று கேட்கிறார்.

“முடவனை மூர்க்கன் கொன்றால்,

     மூர்க்கனை முனிதான் கொல்லும்;

மடவனை வலியான் கொன்றால்,

     மறலிதான் அவனைக் கொல்லும்;

தடவரை முலைமாதே! இத்

     தரணியில் செருக்கினாலே,

மடவனை அடித்த கோலும்

     வலியனை அடிக்கும் கண்டாய்.”

என வரும் விவேக சிந்தாமணிப் பாடல் இத் திருக்குறளைப் பற்றி எழுந்ததே ஆகும்.

இதன் பொருள் –-

    விசாலமான மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே!  இந்த உலகத்தில், கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால், அந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான். அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால், அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான். செல்வச் செருக்கு காரணமாக, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது, பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் வந்து பொருந்தி, (முன்னே ஏழையை அடித்த வலியவனை) அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.

    இதை எண்ணிப் பார்க்கின்ற நல்ல மனம் இருந்தால், மற்றவருக்குக் கொடுமை இழைக்க யாருக்கும் மனம் வராது.  உலகம் அருளற்ற, அவல வாழ்வில் மனம் செல்லாது. பொருள் பொருள் என்று அலைந்து திரிந்து, பிறரை வறுத்தி வாழும் அவலநிலை நீங்க வேண்டும். எல்லோரும் அருளுடையராய் வாழ்தல் வேண்டும்.





4. இனிய சொல்லை யாவரும் விரும்புவர்

“மென்மதுர வாக்கால் விரும்பும் சகம், கடின

வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம், - நன்மொழியை

ஓதுகுயில் ஏதுஅங்கு உதவியது? கர்த்தபந்தான்

ஏதுஅபரா தம்செய்தது, இன்று.” — நீதிவெண்பா


இனிமையான குரல் உள்ள குயிலானது எதைக் கொடுத்தது?   யாரும் விரும்பாத கத்தலை உடைய கழுதை எதைக் கெடுத்தது? ஓசை நயத்தால்தான் குயிலை விரும்புவர்கள் கழுதையை வெறுக்கிறார்கள். அதுபோல, மென்மையான இன்மொழியைக் கேட்டே மகிழும் உலகத்தவர்தான் கடுமையான வன்சொல்லைக் கேட்டு வெறுக்கிறார்கள். (மதுரம் - இனிமை.  சகம் - உலகத்தினர். கர்த்தபம் - கழுதை.  அபராதம் - கெடுதி.)


63. முழுப் பூசணிக்காயை மறைத்தல்

 

“தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்

வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே

     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்

புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்

     லாதொருவர் போதிப் பாரோ!

நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்

     மறைத்ததுவும் நிசம தாமே!”


இதன் பொருள் –


தத்தை மொழி உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம் தழைத்த நாட்டில் -  கிளியெனப் பேசும் உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டுள்ள திருத்தண்டலை இறைவரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே மேன்மை இல்லை - அறிவுடைய அமைச்சன் இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, வேந்தர்க்கு எல்லாம் புத்தி நெறி நீதி சொல்லும் மந்திரி அல்லாது ஒருவர் போதிப்பாரோ - அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும்,  அரசு முறைமையையும் கற்பிக்கும் அமைச்சரை அன்றி வேறு ஒருவர் கற்பிப்பாரோ?, நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய் மறைத்ததுவும் நிசமது ஆம் - நாள்தோறும் உண்ணும் உணவிலே முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (அமைச்சர் இல்லாத அரசவையிலே) உண்மையாக முடியும்.


“முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமோ?” என்பது பழமொழி. அறிந்தோ அறியாமலோ மறைவாக நிகழ்ந்துவிட்ட தவறை அல்லது வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்றைத் தனது அறிவீனத்தால் மறைக்க முற்படுவதை இது குறிக்கும். மந்திரியைச் ‘சுமதி’ என்று திருவிளையாடல் புராணம் கூறும். ‘சுமதி’ என்றால் நல்லறிவு உடையவன் என்று பொருள். (சு=நல்ல. மதி=அறிவு) மதிமந்திரி என்று அமைச்சனைக் கூறுதல் உண்டு. “மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று நறுந்தொகை கூறும். அமைச்சனுக்கு அழகாவது மேல் வரும் காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல் ஆகும். 


3. அறிவுடையாரின் பகைமை நல்லது

 


“அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்,

சிறுவன் பகையாம், செறிந்த - அறிவுடைய

வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான், முன்

கொன்றதுஒரு வேந்தைக் குரங்கு.” — நீதிவெண்பா

முன் ஒரு காலத்தில் அறிவும் வெற்றியும் உடைய வேடன் ஒருவன், ஒரு அந்தணன் உயிரைக் காத்தான். ஒரு குரங்கு ஓர் அரசனை அறிவில்லாமையால் கொன்றுவிட்டது. அதுபோல, அறிவு உடையவன் பகைவன் ஆனாலும் அன்புள்ள நண்பனாக விளங்குவான். அவனால் யாதொரு தீங்கும் நேராது. ஆனால், அறிவு இல்லாதவன் நண்பனாக இருந்தாலும், அவனால் நன்மை இல்லை. அவன் பகைவனாக மாறவும் கூடும்.

    (அறிவன் - அறிவுடையவன். சிறுவன் - அறிவில்லாதவன். செறிந்த - நிறைந்த. வென்றி - வெற்றி. வனசரன் - காட்டில் திரிபவன், வேடன். வேதியன் - பார்ப்பனன்.)

வனசரன் கதை.

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒர் அந்தணனுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். மணியை வாங்கிய அந்தணன்  அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகையில், வழியில் யாரேனும் கள்வர் கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, வீட்டிற்குச் சென்றதும் மணியைக் கக்கி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அம் மணியை வாயில் போட்டுக் கொண்டான்.  இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தணனைத் தொடர்ந்து போய் வழிமறித்து, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அந்தணன் அதனைக் கேட்டு அஞ்சி, "மாணிக்கம் உன் வயிற்றில் தானே உள்ளது" என்று சொன்னான். இருவரும் இவ்வாறு வாதிட்டுக் கொண்டு இருக்கும்போது,  திருடர்கள் வந்து அந்தணனைப் பிடித்துக் கொண்டு மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள். அந்தணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அவன் அறிவு உள்ளவன். ஆதலால், அவன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, அவனைக் காக்க எண்ணி, திருடர்களைப் பார்த்து, "ஐயா நாங்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டு இருந்தோம். மாணிக்கம் வயிற்றில் எப்படி இருக்கும்.  வேண்டுமானால் என் வயிற்றை அறுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான். வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்த திருடர்கள் மாணிக்கம் இல்லாதது கண்டு, வேடனை வீணாகக் கொன்றுவிட்டோமே என்று எண்ணி, அந்தணனை விட்டுவிட்டார்கள். அந்தணன் உயிர் பிழைத்தான் மாணிக்கத்தோடு. வேடன் அந்தணனுக்குப் பகைவனாக இருந்தாலும் அவன் அறிவு உள்ளவனாக இருந்ததால், அந்தணன் மீது அன்பு கொண்டு அவனைக் காக்கத் தனது உயிரை விட்டான்.

குரங்கின் கதை

ஓர் அரசன், ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.  ஒரு நாள் அரசன் அக் குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, "இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே" என்று ஆணையிட்டு உறங்கச் சென்றான். அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து அமர்ந்தது. குரங்கு அதனைப் பார்த்து, அந்த ஈயைக் கொல்லத்தான் அரசன் தன்னிடம் கத்தியைக் கொடுத்துள்ளான் என எண்ணியது. அதன் அறிவின்மைதான் காரணம். அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஓங்கிக் குத்தியது. ஈ பறந்து விட்டது. ஆனால் அரசன் மாண்டான். அரசனிடம் குரங்கு அன்புடனிருந்தாலும், அறிவின்மையால் இத் தீங்கு அரசனுக்கு நேர்ந்தது.

        அறிவு உடைய ஒருவன் பகைவனாக இருந்தாலும், அந்தப் பகைமை காரணமாகத் தீங்கு செய்யமாட்டான். அறிவில்லாதவனோடு நட்புக் கொண்டால், அவனது அறியாமையால் அவன் செய்கின்ற தீய செயலினால் துன்பம் வரும். எனவே, அறிவில்லாதவனது நட்பை விட, அறிவுடையவனது பகைமையே நல்லது.

“பேதை பெரும் கெழீஇ நட்பின், அறிவு உடையார்

ஏதுஇன்மை கோடி உறும்.”

என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் பின்னாளில் எழுந்தது எனக் கருதலாம்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"மாயமா ரீசன் மடிந்தான், கவுசிகன்தான்

ஏயதவம் உற்றான், இரங்கேசா! - ஆயதனால்

பேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார்

எதின்மை கோடி யுறும்."

இதன் பொருள் ---

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே!  மாய மாரீசன் - மாயமானாகி வந்த மாரீசன் என்பான், மடிந்தான் - (இராவணனோடு நெடுநாள் நட்புக் கொண்டிருந்தும், அவன் பேச்சைக் கேட்டு, அதன்படி செய்ததால், இராமன் கை அம்பால்) இறந்தான், கவுசிகன் தான் - விசுவாமித்திரன், ஏய தவம் பெற்றான் - வசிட்டரோடு பகை கொண்டிருந்தும் இசைந்து செய்து தவ மகிமையைப் பெற்றான், ஆயதனால் - ஆகையால், இது, பேதை பெரும் கழீஇ நட்பின் - அறிவில்லாதவனது மிகவும் நெருங்கிய நட்பைக் காட்டிலும், அறிவு உடையார் ஏதின்மை - நல்லறிவு உடையவரது பகைமை, கோடி உறும் - கோடி பங்கு நன்மை பெறும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- பேதை நட்பின், மேதை பகையே மேலானது.

விளக்கவுரை --- மூடனாகிய இராவணனுக்கும் மாரீசனுக்கும் பல்லாண்டு நேசம் பெருகி மருகன் மாமன் முறை ஏற்பட்டு இருந்தது. இருந்தும் பேதையாகிய இராவணன் பேச்சைக் கேட்டு, அதன்படி மாயமானாகி சீதாபிராட்டிக்கு எதிரில் சென்ற மாரீசன், இராமன் அம்பால் உயிர் துறந்து மாண்டான்.  

"பிரம்மரிஷி" (பெருமுனி) என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு ஏற்றவாறு வழங்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தது. இத்தகைய பட்டம் பெற்றவர் மற்ற முனிவர்களில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார். ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை "மகரிஷி" என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை "பிரம்மரிஷி" என்பர். எவர் ஒருவர் பிரமஞானம் பெற்றவராக கருதப்படுகின்றாரோ, அவரே பிரம்மரிஷி என்று அழைக்கப்படுவார். பிருகு, அத்திரி, அங்கிரசர், காசிபர், விசுவாமித்திரர், வசிட்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் சப்தரிஷிகள் எனப்படுவர்.

ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காகத் தனது படைகளுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிட்டரின் ஆசிரமம் பக்கமாக வந்தான்.. தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிட்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றார்.

அதற்கு கெளசிகன், "எனக்கும், எனது படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீங்கள் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்துப் பரிமாற முடியும்?’’ என்று கேட்டான்.

வசிட்டர்,  "முடியும், மன்னா!  நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்று நேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகி விடும்" என்றார்.

பிறகு வசிட்டர், தனது ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, "வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்"  என்றார். அப்படியே சற்று நேரத்தில் அறுசுவை விருந்து தயாரானது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

வசிட்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன்,  "கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறு கேட்டான். வசிட்டர் மறுத்தார்.

வசிட்டரின் பெருமை அறியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிட்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

வசிட்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், "தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். "கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’" என்று வசிட்டர் சொல்ல, "படை பரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்" என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டான்.

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றான். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு, இலிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூசை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், இராமலட்சுமணர்களை அழைத்து வந்தார். இராமபிரான் தாடகையை அழிக்க அத்திரம் தொடுத்தார். இராமரின் அத்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிந்தாள்.

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திரருக்குக் காட்சி கொடுத்து "இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய், காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிட்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிட்டரே உனக்கு குரு ஆவார்" என்று அருள் செய்தனர்.

வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் பெரும் பகை நேரிட்டு இருந்தது. இருந்தும் வசிட்டர் மேதாவி. ஆகையால், அவரோடு பகை கொண்ட விசுவாமித்திரருக்கு நன்மையே உண்டாயிற்று. அந்தப் பகைமை காரணத்தால், அவர் கடும் தவம் புரிந்தார். ஆகையால், அருந் தவமுனிவராய், வசிட்டர் மெச்சும் வேதிய முனிவராய் விளங்கினார். பகைமை உணர்வு கொண்டு இருந்த வசிட்டரால் விசுவாமித்தரருக்கு யாதொரு நீங்கும் நேரவில்லை.

இதனால் இராவணனைப் போன்ற பேதையின் பெருங்கழீஇ நட்பைப் பார்க்கிலும், வசிட்டரைப் போன்ற அறிவுடையாரது ஏதின்மை கோடி உறும் என்பது விளங்குகின்றமை காண்க.


"இசைந்த சிறுமை இயல்பு இலா தார்கண்

பசைந்த துணையும் பரிவாம், - அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்

பகையேயும் பாடு பெறும்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

இசைந்த சிறுமை இயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் - தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களை உடைய பண்பிலாதாரிடத்தில் நேயங் கொண்ட அளவும் துன்பமேஆம்; அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவினார்கண் - மாறிய செயல்களை விளையாட்டாகவும் விரும்பாத சிறந்த அறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகை கொள்ளுதலும் கூட மாட்சிமைப் படும்.

பெரியோரிடத்துப் பகைசெய்தலினும், சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெருந்தீங்கு பயக்கும்.


"நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவில் என்னும்

சொல்வழி கண்டனம் யாம்,தொகு சீர்த்தில்லை அம்பலத்து

வில்வழி தானவர் ஊர் எரித்தோன், வியன் சாக்கியனார்

கல்வழி நேர்நின்று அளித்தனன் காண்க சிவகதியே."

                             --- கோயில் திருப்பண்ணியர் விருத்தம். 11-ஆம் திருமுறை.

    "நொய்யார் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று" என்னும் சொல்லாவது -- சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார். கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது. இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத்தின் மேல் வைத்ததும். இதனால், `நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச் செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...