Arulveli
வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா
26. தீயவரை நல்லார் அணுகார்
“குணம் நன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணம் நன்கு உடையார் குறுகார்; - குணம்உடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசுஒலிக்கும்
வண்ணானுக்கு உண்டோ வழக்கு.” — நீதிவெண்பா
ஆடையை அணியும் இயல்பு இல்லாத சமண மதத்தினர் இருக்கும் இடத்தில், அழுக்கு ஆடைகளை வெளுக்கும் தொழில் செய்யும் வண்ணானுக்கு வேலை இல்லை. அதுபோல, நல்லியல்பு இல்லாத தீயோரிடத்தில், நல்ல இயல்புகளை உடைய பெரியோருக்கு வேலை இல்லை.
(தூசு - ஆடை. ஒலித்தல் - மாசு நீக்கி வெளுக்கச் செய்தல். ஆடை உடுத்தாத சமணர், திகம்பரர் எனப்படுவர், வெள்ளை ஆடை உடுத்துகின்ற சமணர் சுவேதாம்பரர் எனப்படுவர்)
86. பெண் என்றால் பேயும் இரங்கும்
உரங்காணும் பெண்ஆசை கொடிதாகும்!
பெண்புத்தி உதவா தாகும்!
திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும்!
பெண்சென்மம் சென்மம் ஆமோ?
வரங்காணும் தண்டலைநீள் நெறியாரே!
பெண்ணிடத்தின் மயக்கத் தாலே
இரங்காத பேருமுண்டோ? பெண்என்ற
வுடன்பேயும் இரங்குந் தானே.
இதன் பொருள் ---
வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே - நலம் பொருந்திய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே!
பெண்ணிடத்தில் மயக்கத்தாலே இரங்காத பேரும் உண்டோ - பெண்ணிடம் உண்டாகும் தடுமாற்றத்தினால் (பெண்ணைக் கண்டவுடன்) இரக்கம் காட்டாதவரும் உளரோ?, பெண் என்றவுடன் பேயும் இரங்கும் – பெண் என்றாலே பேயும் இரங்கும் (என்பார்கள்.) (எனினும்), உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும் - விரைவு படுத்தும் பெண் ஆசை கொடியது ஆகும்; பெண்புத்தி உதவாது ஆகும் - பெண்ணின் அறிவுரை பயன் தராது ஆகும்; (ஆகையால்), திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும் – நட்மை தருவது போலக் காணப்படும் பெண்மொழி கொடியதாகும், பெண்சென்மம் சென்மம் ஆமோ - பெண்பிறப்பு இன்பந்தரும் பிறப்பு என்று சொல்ல முடியுமோ?
வரம் – நன்மை, விருப்பம், மேன்மை. பொருட்பெண்டிர் ஆசையினால் மேல் விளைவு கருதாது தவறான வழியிலே செல்வதுபற்றிக் கொடியது என்றார். ஔவையார் அருளியது போல காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைக் குறை கூறியதாகக் கொள்ளுதல் கூடாது. ஔவையார் குறித்தது குலமகளிரை. பெண்புத்தி உதவாது என்றும், பெண்வார்த்தை தீது என்று கூறியதும் பெண்தரும் இன்பம் ஒன்றையே பெரிது எனக் கருதி அவர் சொல்லில் மயங்குதல் கூடாது என்பது குற்றித்ததே. அவ்வாறு கொள்ளாவிட்டால், அது குலமகளிரை இழிவுபடுத்தியது ஆகிவிடும். உலகிலே பெண் பிறப்பே பல்வகைத் துன்பத்தினும் ஈடுபடுவதால் ‘பெண் சென்மம் சென்மம் ஆமோ' என்றார். ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்' என்பது பழமொழி.
அறத்துப்பாலில், இல்வாழ்க்கைத் துணநலம் என்று மகளிரைச் சிறப்பித்த திருவள்ளுவ நாயனார், பொதுமகளிரை, வரைவில் மகளிர் என்று பொருட்பாலில் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளத் தக்கது. எவர் சிற்றின்பத்ததின் பொருட்டு, தமது மனைவி மீது பெருவிருப்பத்தைக் கொண்டு, அவள் ஏவியபடி நடக்கின்றாரோ, அவர் இம்மை, மறுமை, அம்மையாகிய வீடுபேறு ஆகிய மூன்றையும் அடைவதற்குத் துணையாக இருக்கும் அறத்தினை அடையமாட்டார். அதுவும் அல்லாமல், அறம், இன்பம் ஆகிய இரண்டினையும் அடைவிக்கும் பொருளைச் செய்தலை மேற்கொண்டவர்கள், பொருளைச் செய்வதற்கு, பெண்வழி நிற்றல் என்பது இடையூறாய் உள்ளதால், பொருளையும் அடையமாட்டார் என்பதைப் பெண்வழிச் சேறல் என்றும் குறிப்பிட்டார் திருவள்ளுவ நாயனார் என்பதை அறிக.
தசரதர் தன் மனைவியருள் ஒருவர் ஆகிய கைகேயி மீது வைத்த அதீத ஆசையால் விளைந்த விளைவுகளை எண்ணிப் பார்க்க. பெண்வழிசை சேறலால் விளைந்த கொடுமைகளை இது விளக்கும்.
25. தீயவர் ஒழுக்கத்தைப் போற்றாதே
"ஞானம்ஆ சாரம் நயவார் இடைப் புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில்,
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி என்றே விடு."
மேலான அறிவையும் ஒழுக்கத்தையும் விரும்பிக் கடைப்பிடிக்காதவரிடத்திலே, புகழ்ந்து சொல்லப்படும் நான்கு வேதங்களின் அருமைகளைக் கற்று வைத்திருக்கின்ற முறைமையைச் சொல்லுவது என்பது, தீவினை மிக்க பாவிகள் வைத்திருக்கும் மண்பாண்டத்தில், உயர்ந்த கங்கையின் நீரை நிறைத்து வைத்து இருக்கும் முறையைப் போன்றது என்று எண்ணி, அதை விட்டு விடுக.
"மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை எண்ணுக.
85. சிறுநெருப்பு என்று இகழாதே
“அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்
எக்குலத்தார் ஆனால் என்ன?
உருப்பயிலும் திருநீறும் சாதனமும்
கண்டவுடன் உகந்து போற்றி,
இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றும்
சிறியரென்றும் இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிதென்று முன்றானை
தனின்முடிய நினைந்த வாறே.”
இதன் பொருள் ---
தண்டலைவாழ் அருப் பயிலும் சிவன் அடியார் – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் அருவுருவமாக எழுந்தருளி உள்ள, அருவப் பொருளாகிய சிவபரம்பொருளின் தொண்டர்கள், எக்குலத்தார் ஆனால் என்ன - எந்தக் குலத்தவரானாலும் குறை இல்லை, உருப் பயிலும் திருநீறும் சாதனமும் கண்டவுடன் - வடிவிலே விளங்கும் திருநீற்றினையும் மற்றைச் சிவசின்னங்களையும் பார்த்தவுடன், உகந்து போற்றி இருப்பதுவே முறைமை அல்லால் - சிறப்பித்து வாழ்த்தி இருப்பதே தக்கது ஆகும். அல்லாமல், ஏழை என்றும் சிறியர் என்றும் இகழ்ந்து கூறின் – வறியவர் எனவும் உருவத்திலும் அறிவிலும் சிறியவர் எனவும் பழித்துப் பேசுதல் என்பது, நெருப்பினையே சிறிது என்று முன் தானை தனில் முடிய நினைந்த ஆறு - தீயின் வடிவம் சிறியது என எண்ணி முன்தானையில் முடிய நினைத்தற்குச் சமமாகும்.
அரு : உருவமில்லாத நிலை. சாதனம் : சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள். உகப்பு - உயர்வு (சிறப்பு). ‘நெருப்பைச் சிறிதென்று நினைக்கலாமா!' என்பது பழமொழி. திருமூலதேவ நாயனார் அருளிய திருமந்திரத்துள் ‘மகேசுர நிந்தை கூடாமை” பற்றிக் கூறப்பட்டு உள்ளதை இங்கு வைத்து எண்ணுக. “அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட மதிமூடி” எனவரும் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.
இறைவன் எங்கே இருப்பான் என்றால், எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் அவன் நிறைந்து இருப்பான் என்பர் பெரியோர்.
"ஈறாய்,முதல் ஒன்றாய்,இரு பெண்ஆண்,குணம் மூன்றாய்,
மாறாமறை நான்காய்,வரு பூதம்அவை ஐந்தாய்,
ஆறுஆர்சுவை, ஏழ்ஓசையொடு, எட்டுத்திசை தானாய்,
வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே."
என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய் (ஈறாய்), ஒடுங்கிய உடலைத் தான் ஒருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய் (முதல் ஒன்றாய்), சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய் (இரு பெண் ஆண்), சத்துவம், இராஜசம், தாமதம் என்னும் முக்குண வடிவினனாய் (குணம் மூன்றாய்), எக்காலத்தும் மாறுபடாத நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவினனாய், வான், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பூதங்களாய், நாக்கு என்னும் பொறியைக் கவருகின்ற உப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவைகளாய், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியிலும், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழ் மொழியிலும் வழங்கப் பெறுகின்ற ஓசைகள் ஏழாகவும், நேர்திசைகள் நான்கு, கோணத் திசைகள் நான்கு என எட்டுத்திசைகள் ஆகியவற்றில் நிறைந்தவனாய், கண்ணும் ஒளியும், கதிரும் சூரியனும், ஒளியும் சூடும் போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளில் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. இது மேற்குறித்த பாடலின் பொழிப்புரை.
எல்லாம் வல்ல தனமையன் ஆன இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்றால், "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" தில்லைக் கூத்தன் என்றார் அப்பர் பெருமான். "மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" ஆகிய இறைவன் திருமுதுகுன்றம் என்று இன்றைக்கு வழங்கப் பெறும் விருத்தாசலத்தில் திருக்கோயில் கொண்டு உள்ளான் என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். “தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி” என்றார் மணிவாசகப் பெருமான். தில்லையிலே திருநடனம் புரிகின்ற பெருமான் எல்லா உயிர்களிலும் விளங்குகின்றான். "இறைவரோ தொண்டருள் ஒடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்றார் ஔவைப் பிராட்டியார். இக் கருத்தை வலியுறுத்தி, இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்பதற்கு விடை பகருகின்றது "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்....
"இந்து இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்
இந்து இரவி காந்தத்து இலங்குமே --- இந்து இரவி
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்
நேத்திரத்தோர் பாலே நிறைவு."
இதன் பொருள் ---
திங்கள், ஞாயிறு என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்தத் திங்கள், ஞாயிறு ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும். அதுபோல, திங்கள் ஞாயிறு என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அக் கடவுளின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.
(இந்து - சந்திரன். இரவி - சூரியன். கிரணம் - ஒளி. நேத்திரம் - கண். நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன். நேத்திரத்தோர் - அடியவர்.)
அடியவர்கள் என்றும் எளிய தோற்றத்துடனேயே இருப்பார்கள். அவர்களிடத்தில் பகட்டு இருக்காது. இறையருளைப் பெறுவதற்கான சாதனங்கள் இருக்கும். அவர்களது தோற்றத்தைக் கண்டதுமே, இறைவனைக் கண்டதாகவே எண்ணி வணங்கி வாழ்தல் வேண்டும். இதை,
"எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
திருநீறும் சாதனமும் கண்டால், உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்து அடிமைத் திறம்நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர்தேவர், அவர்தேவர் என்று சொல்லி
இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே."
என்னும் திருத்தாண்டகத்தால் காட்டி அருளினார் அப்பர் பெருமான்.
யாவராக இருந்தாலும், நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பி நோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
அல்லது செய்தல் ஓம்புமின்
அல்லது செய்தல் ஓம்புமின்
-----
மனிதன் உலகில் தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழ வைக்கவும் பிறந்தவன். இந்த உண்மையை உணராத சிலர், தமது வாழ்வே பெரிதென எண்ணி, தம் வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். மனிதராகப் பிறப்பு எடுத்து, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இல்லாத, விலங்கு மனம் படைத்தோரால் இந்த அவலம் ஏற்பட்டது.
உருவத்தால் ஒத்து இருப்பதாலேயே மக்கள் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் பண்பாகிய, பகுத்தறிவு என்று சொல்லப்படும் ஆறாவது அறிவு பொருந்தி இருக்கவேண்டும். பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவாகிய மன அறிவைக் குறிக்கும். மன அறிவு என்பது, "நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல்" என்று தொல்காப்பிய வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது.
“உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால், வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.” -- திருக்குறள்.
மனிதன் தனக்குள்ள விலங்குத் தன்மையில் இருந்து நீங்கவேண்டுமானால், இலங்கு நூல்களை அவன் படித்து ஒழுகவேண்டும். உள்ளத்தில் உள்ள கசடு அறும்படியாகக் கற்க வேண்டும். கற்ற வழி நிற்றல் வேண்டும்.
"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்" --- திருக்குறள்.
இதன் பொருள் ---
அறிவு துலங்கும் நூல்களைக் கற்றாரோடு, அவற்றைக் கல்லாதவரை ஒப்பு நோக்க விலங்கையும் மக்களையும் போல்வர்.
மனித வடிவில் இருப்பதாலேயே ஒருவனை மனிதன் என்ற கொள்ள முடியாது. அவரவர்க்கு உள்ள குணங்களை வைத்து, அவர் இன்ன விலங்கு என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவரோடு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்னும் கருத்து அமைய, "குமரேச சதகம்" என்னும் நூலில் ஒரு பாடல் உள்ளது.
“தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
தள்ளிச்செய் வோர்குரங்கு;
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
தாம்பயன் இலாதமரமாம்;
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
வெறியர்குரை ஞமலியாவர்;
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
மேன்மையில் லாதகழுதை;
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
தூங்கலே சண்டிக்கடா;
சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்
துட்டனே கொட்டுதேளாம்;
மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
வலமாக வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.”
இதன் பொருள் ---
மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா - முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு - தான் கொண்டது தான் கொள்கை எனக் கொண்டு, பெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர், மனிதர்களில் குரங்கு போன்றவர்.
சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் - பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில், குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர்.
வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர் - வேண்டுமென்றே எளியவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள்.
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை - தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்.
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா - சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்குமூஞ்சியே, மனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான்.
சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் - மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்யும் கீழ்மகன் தான் மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.
“பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறினார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.
வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லை என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.
அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் உயர்ந்த உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும். நாடு நலம் பெற்றால் வீடும் நலம் பெறும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.
திருவள்ளுவ நாயனார், "இன்னா செய்யாமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார்.
"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்." --- திருக்குறள்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்கிறது ‘கொன்றைவேந்தன்’ முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது. முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன், செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம்.
எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளை மட்டுமாவது செய்யாது இருத்தல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது.
புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.
“பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்
பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.
இதன் பொருள் -–
பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும், தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.
எனவே, நன்மை செய்து வாழ்வது நல்லது. நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், நன்மையை மனத்தால் விழையலாம். நன்மை செய்ய மனம் இல்லாவிட்டாலும், தீமையாவது செய்யாமல் வாழப் பழகிக் கொள்வது நன்மையைத் தரும். அதுவே அறம் கூறும் ஆக்கம் தரும்.
பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நீரும்நிலம் அண்டாத (பொது)
முருகா!
சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.
தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான ...... தனதான
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி ...... வடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி ...... யவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி,
நீளம் அகலம் சோதி ...... வடிவான
நேசம் மலரும் பூவை, மாது இன் மணமும் போல,
நேர்மருவி, உண்காதல் ...... உடன்மேவி,
சூரியன் உடன் சோமன் நீழல் இவை அண்டாத,
சோதி மருவும் பூமி ...... அவை ஊடே,
தோகை மயிலின் பாகன் ஆம் என மகிழ்ந்து ஆட,
சோதி அயிலும் தாரும் ...... அருள்வாயே.
வாரி அகிலம் கூச, ஆயிர பணம் சேடன்
வாய்விட ஒட, எண் பாலும் ...... உடுபோல,
வார் மணி உதிர்ந்து ஓடவே, கவின் நிறைந்து ஆட,
மாமயில் விடும் சேவல் ...... கொடியோனே!
ஆரியன், அவன் தாதை, தேடி இனமும் பாடும்
ஆடல் அருணஞ் சோதி ...... அருள்பாலா!
ஆனை முகவன் தேடி ஓடியெ, அணங்கு ஆதல்
ஆசை மருவும் சோதி ...... பெருமாளே.
பதவுரை
வாரி அகிலம் கூச --- கடல்கள் எல்லாம் அஞ்சவும்,
ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒட --- ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும்,
எண்பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே … அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், (ஏ – அசை)
கவின் நிறைந்து ஆட --- அழகு நிறைந்த நடனம் செய்யும்படி,
மாமயில் விடும் --- பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற,
சேவல் கொடியோனே --- சேவலங்கொடியை உடையவரே!
ஆரியன், அவன் தாதை தேடி இனமும் பாடும் --- பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற
ஆடல் அருணம் சோதி அருள்பாலா --- ஆடலையுடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!
ஆனை முகவன் தேடி ஓடியே --- ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும்,
அணங்கு ஆதல் ஆசை மருவும் சோதி பெருமாளே --- வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!
நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி ... மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல,
நீளம் அகலம் சோதி வடிவான ... நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும்,
நேச மலரும் பூவை --- அன்பு விரிகின்ற இதயமலரை
மாது இன் மணமும் போல நேர் மருவி --- அழகும் இனிய வாசனையும் போல கலந்து
உண் காதலுடன் மேவி --- உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து,
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத --- சூரியனுடைய வெயில், சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும்,
சோதி மருவும் பூமி அவை ஊடே --- ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே,
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட --- தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய
சோதி அயிலும் தாரும் அருள்வாயே --- ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.
பொழிப்புரை
கடல்கள் எல்லாம் அஞ்சவும், ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும், அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், அழகு நிறைந்த நடனம் செய்யும்படி, பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற, சேவலங்கொடியை உடையவரே!
பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற ஆடலை உடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!
ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும், வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!
மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல, நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும், அன்பு விரிகின்ற இதயமலரை, அழகும் இனிய வாசனையும் போல கலந்து, உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து, சூரியனுடைய வெயில் சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும், ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே, தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய, ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.
விரிவுரை
நீரும் நிலம் அண்டாத தாமரை ---
தாமரை மண்ணில் தண்ணீரில் தொடர்புடன் முளைப்பது. இங்கே தண்ணீரும் மண்ணும் சம்பந்தப்படாத தாமரைக் கொடி என்பது மூலாதாரத்தில் இருந்து முளைத்து எழுகின்ற சுழுமுனையைக் குறிக்கின்றது. அது தாமரைக் கொடிபோல் வளைந்து வளைந்து மேல்நோக்கிச் செல்கின்றது.
“பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்று உண்டு,
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது,
ஊரில்லை காணும், ஒளியது ஒன்றுண்டு,
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.”. – திருமந்திரம்
நீளம் அகலம் சோதி வடிவான நேச மலரும் பூ ---
பூ - இதயமலர். இதய புண்டரீக மலர். இதயக் கமலம். அப் புண்டரீகமலர் மீது ஒரு மின்னொளி வடிவாக இடையறாது ஒரு பரம்பொருள் திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றது.
மாதின் மணமும் போல் நேர் மருவி உண்காதல் உடன் மேவி ---
மாது - அழகு. அழகும் இனிய மணமும்போல் அப் பரம்பொருளைச் சார்ந்து அருட்காதலுடன் இதனுடன் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும்.
"அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே" என்ற சிவஞானபோத எட்டாவது சூத்திரத்தின்படி, அதனுடன் அனன்னியம் பெற்று திருவடியில் ஆன்மா தங்கி நிற்கும். அவ்வாறு நின்ற ஆன்மா, பாசநீக்கம் பெற்று பரமானந்தம் எய்தி, பாவனாதீத நிலையில் நிற்கும்.
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன்ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.. --- சிவஞானபோதம் 9-ஆம் சூத்திரம்.
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவையூடே ---
அவை - சபை. அது சகஸ்ராரம் ஆகிய பேரம்பலம்.
இதயாகாசம் - சிற்றம்பலம்.
சகஸ்ராரம் - பேரம்பலம்.
சகஸ்ராரம் என்பதைத் திருக்கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உணர்த்துகின்றது.
சகஸ்ராரமாகிய மேலைப் பெருவெளியில் சூரியசந்திரர்களுடைய வெய்யிலும் நிலவும் இல்லை. ஆனால், அங்கு இடையறாத ஒரு பேரொளி விளங்கிக்கொண்டு இருக்கும். இடையறாத சிவயோக சாதனை செய்து சகஸ்ரார சித்தி பெற்றோர்களே அதனை அறிவார்கள்.
"வான்இந்து கதிர் இலாத நாடு அண்டி, நமசிவாய வரை ஏறி" என்று பழநித் திருப்புகழில் இதே கருத்தை அடிகளார் கூறி இருக்கின்றார். “இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத பொன் இடம்” என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார்.
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்தாட ---
தோகைமயில் - தோகைமயில் போன்ற உமையம்மையார். உவமை ஆகுபெயர்.
இனி, மயிலாக இருந்து சிவபெருமானைப் பூசித்தவர் என்றும் பொருள்படும். அம்பிகை மயில் உருவுடன் வழிபட்ட திருத்தலம் திருமயிலாப்பூர்.
உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட நடராஜ மூர்த்தியைப் போல் அடியேனும் நடனம் புரிந்து இன்புற வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆடுவது மகிழ்ச்சியினால் விளையும் மெய்ப்பாடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெற்ற ஆன்மா இன்ப நடம் புரியும்.
சோதி அயிலும் தாரும் அருள்வாயே ---
அயில் - கூர்மை. அது வேலாயுதத்தைக் குறிக்கின்றது. வேலை எனக்கு அருள் புரியும் என்பதன் உட்பொருள், வேல் பரபூரண ஞானமாதலின், ஞானத்தை அருள்புரியும் என்பதாகும். காதல் கொண்ட தலைவி காதலனுடைய மலர்மாலையை விரும்புவாள். இங்கே அருட்காதல் கொண்ட பக்குவம் உள்ள ஆன்மா முருகவேளுடைய மலர்மாலையை விரும்புகின்றது.
மால்கொண்ட பேதைக்குஉன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந்து அருள்வாயே. ---நீலங்கொள் திருப்புகழ்.
வாரி அகிலம் கூச ---
மயில் ஆடுகின்ற போது எழு கடல்களும் அஞ்சின. அகிலம் - எல்லாம்.
“குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்
திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே.”
என்ற கந்தர் அலங்காரப் பாடலினால், மயிலின் பெருமையை அறிக.
ஆயிரம் பணம் சேடன் வாய்விட ஓட ---
ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் மயிலின் நடனத்தைக் கண்டு அஞ்சி, தனது வாய்களைப் பிளக்கவும், பயந்து ஓடவும் செய்தான். விடவும் ஓடவும் என விரிக்க.
“செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை
சிந்தப் புராரி அமிர்தம்
திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்
தீ விஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயனத்
தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு
சண்டப் பரசண்ட மயிலாம்”. -– மயில் விருத்தம்.
எண்பாலும் வார்மணி உதிர்ந்து ஓடவே ---
ஆதிசேடனுடைய பணாமகுடங்களில் உள்ள நீண்ட நாகரத்தின மணிகள் உதிர்ந்து, எட்டுத்திக்குகளிலும் சிந்தி ஓடின. மணிகள் உதிர்கின்ற அளவில் அஞ்சி சேடன் ஓடினான் என்று குறிப்பிடுகின்றார்.
கவின் நிறைந்த மாமயில் விடும் சேவற்கொடியோனே ---
மயிலை ஆடவிடுகின்ற சேவலனே என்று பொருள். மயில் என்ற இடத்தில், இரண்டாம் வேற்றுமை தொக்கி நிற்கின்றது. எனவே, "மயில் விடும்" என்பதற்கு "மயிலை விடும்" என்று பொருள் செய்யப்பெற்றது.
உலகம் இன்புறும் பொருட்டு, நாத தத்துவத்தினின்றும் சுத்தமாயையை கலக்கி, அதினின்றும் ஏனைய தத்துவங்களை இறைவன் உண்டாக்குகின்றான்.
இந்த உட்பொருளை விளக்கவே முருகவேள் மயிலை நடனம் செய்ய விடுகின்றார் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.
சேவல் கொடியோனே ---
சேவல் - நாத தத்துவம். மயில் விந்துத் தத்துவம். நாத தத்துவத்தை உடையவன் முருகன்.
மயில் ஆடுவதனாலும் சேவல் கூவுவதனாலும், சிவதத்துவங்கள் விளக்கமுற்று, அதனால் வித்யா தத்துவங்களும், ஆன்ம தத்துவங்களும் தொழிற்படுகின்றன.
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள்பாலா ---
ஆரியன் – பிரமதேவன்.
அவன் தாதை – பிரமதேவரின் தந்தை ஆகிய திருமால்.
மாலும் அயனும் காணாத சோதி வடிவாய் நின்ற சிவமூர்த்தியின் திருக்குமாரர் முருகவேள்.
பிரமன் - இராஜச குணம். திருமால் - தாமத குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனை அடைய முடியாது.
மால் அயன் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு ---
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.
(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.
ஆடல் அருணம் சோதி ---
அருணம் - சிவப்பு. இறைவர் சிவந்த சோதி வடிவானவர். அது கருணை நிறைந்த சோதி என்க.
அருட்சோதி --- அருள்மயமானது.
சுயஞ்சோதி --- தானே விளங்குவது.
பரஞ்சோதி --- பெரிய பொருளாக விளங்குவது.
சிவசோதி --- மங்கலத்தைத் தருவது.
ஞானசோதி --- அறிவின் வடிவாயது.
ஏமசோதி --- இன்பத்தை வழங்குவது.
வாமசோதி --- அழகியது.
நடனசோதி --- எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது.
இவ்வாறு பற்பல நாமங்களையும் கொண்டது சோதி ஆகும்.
ஆனைமுகவன் தேடி ஓடியே அணங்கு ஆதல் ---
ஆனைமுகவன் - தாரகாசுரன். அவன் போர் எங்கே என்று தேடி வருபவன். தேவர்கட்குப் பெருந்துயர் செய்தவன். மாயையில் வல்லவன்.
அணங்கு - வருத்தம். அவன் வருத்தத்தை அடைதலை அடியவர்களாகிய அமரர் பொருட்டு ஆறுமுகப் பெருமான் புரிந்தனர்.
கருத்துரை
முருகா! சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.
பொது --- 1117. பக்கமுற நேரான
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பக்கம்உற நேரான (பொது)
முருகா!
உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,
உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி ...... வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பக்கம் உற நேரான மக்கள் உடனே, மாதர்
பத்தியுடன் மேல்மூடி, ...... இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு, நெடிது ஓர் பாடை
பற்றி, அணைவோர் கூவி, ...... அலைநீரில்
புக்கு, முழுகா, நீடு துக்கமது போய், வேறு
பொன் தீ இடவே, ஆவி ...... பிரியாமுன்,
பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது
புத்தி நெடிது ஆம் வாழ்வு ...... புரிவாயே.
இக்கன் உகவே நாடு முக்கணர், மகாதேவர்,
எப்பொருளும் ஆம் ஈசர் ...... பெருவாழ்வே!
எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முது சூர்மாள,
எட்டி எதிரே ஏறும் ...... இகல்வேலா!
மக்களொடு வான்நாடர், திக்கில் முனிவோர் சூழ,
மத்த மயில் மீது ஏறி ...... வருவோனே!
வைத்தநிதி போல்நாடி, நித்தம் அடியார் வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதவுரை
இக்கன் உகவே நாடு முக்கணர் --- கரும்பு வில்லினை உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும்,
மகா தேவர் --- தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும்,
எப்பொருளும் ஆம் --- எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய,
ஈசர் பெரு வாழ்வே --- சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!
எட்ட அரிது ஓர் வேலை வற்ற --- ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும்,
முதுசூர் மாள --- சூரபதுமன் ஆதியோர் மாளவும்,
எட்டி எதிரே ஏறும் இகல் வேலா --- மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!
மக்களோடு வான்நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே --- மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போலக் கருதி வழிபடும் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் --- பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும்,
பத்தியுடன் மேல் மூடி இனிதான பட்டின் உடனே --- முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடியும்,
மாலை இட்டு –-- மாலை இட்டும்,
நெடிது ஓர் பாடை பற்றி --- நீண்டதொரு பாடையில் கிடத்தி,
அணைவோர் கூடி --- அணைபவர்கள் எல்லோரும் கூடி,
அலை நீரில் புக்கு முழுகா, நீடு துக்கம் அது போய் --- அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே,
வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் --- மாற்றார்கள் போல, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே,
பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே --- தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.
பொழிப்புரை
கரும்பினை வில்லாக உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும், எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய, சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!
ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும், சூரபதுமன் ஆதியோர் மாளவும், மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!
மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!
சேமநிதி எனக் கருதி தேவரீரை நாள்தோறும் வழிபடும் அடியவர்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும், முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடி, மாலை இட்டு, நீண்டதொரு பாடையில் கிடத்தி, அணைபவர்கள் எல்லோரும் கூடி அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே, மாற்றார்கள் போல உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே, தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.
விரிவுரை
இக்கன் உகவே நாடு முக்கணர் ---
இக்கு – கரும்பு. இக்கன் – கரும்பினை வில்லாக உடைய மன்மதன்.
உகுதல் – உதிர்தல், சிதறுதல், சாதல்.
முக்கண்ணர் என்னும் சொல் முக்கணர் என வந்தது.
முக்கண் பரம்பொருள் இக்கனைப் பொடி ஆக்கிய வரலாறு
இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.
"தந்தையே! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒருகணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது.
இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவிக்கின்றனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல்கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர்தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.
இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"
"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும் நீரார்"
"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மைபோல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே செய்யத் தக்கது" என்றார்.
அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன? அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை மணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.
"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".
பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.
"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுதும் உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் ஒருவரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".
"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".
"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"
"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"
"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"
"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"
"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"
"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் சிவபரம்பொருள் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"
"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"
"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள், உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"
"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."
இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் கூறுவதைப் போல் என்னிடம் கூறினாய். நீ சொன்னவை எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவுபெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகாது. ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம், தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.
"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே".
பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்சபாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.
அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.
பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.
மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.
பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம். யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.
மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்திதேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்திதேவர் விடை கொடுத்தார்.
மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.
இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.
எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முதுசூர் மாள, எட்டி எதிரே ஏறும் இகல் வேலா ---
எட்ட அரிது ஆகிய வேலை - ஆழம் காண அரிதாகிய கடல்.
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே ---
வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என்று பாடுவார் வள்ளற்பெருமான். இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.
“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணை என்றும் மாறாத இயல்பை உடையது என்பதால் “மாறாத" என்றார் அடிகளார். “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.
"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்
சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.” --- திருஞானசம்பந்தர்.
"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.
பல் அடியார் பணிக்குப் பரிவானை,
பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருங்கித் திறம்பாது
சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"
நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.
வல் அடியார் மனத்து இச்சை உளானை,
வலிவலம் தனில் வந்துகண் டேனே. --- சுந்தரர்.
"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க".... --- திருவாசகம்.
தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய
மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"
தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே. --- திருவாசகம்.
"உற்ற இடத்தில் உதவநமக்கு
உடையோர் வைத்த வைப்பு" அதனை,
கற்ற மனத்தில் புகும் கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம் அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,
சிவாயநம என்று இடு நீறே. --- திருவருட்பா.
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,
கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்
கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்
"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"
இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,
திலகமே, திரு ஒற்றி எம் உறவே,
செல்வமே, பரசிவ பரம்பொருளே. --- திருவருட்பா.
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர்......... வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் ---
உடம்பை விட்டு உயிர் பிரிந்ததும், மனைவியும் மக்களும், உற்றாரும், பிறரும் கூடி இருந்து அழுவர். பிணத்தை நன்றாக அலங்காரம் செய்வர். “மையினால் கண் எழுதி, மாலை சூட்டி” என்பார் அப்பர் பெருமான். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்றுப் பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்துவிடுகிறது. சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் திக்கு இரையாக்குவார்கள். அவ்வாறு உடலுக்குத் தீயினை மூட்டிய உறவினரும் மற்றோரும் தீட்டுப்போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள். அந்த நிலை வரும் முன்னர் இறைவனது திருவடியை நாள்தோறும் வழிபட்டு, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளவேண்டும்.
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிண மென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி கினைப் பொழிந் தார்களே.” -- திருமந்திரம்.
“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,
ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,
ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி
ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,
நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது
நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,
நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி
நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.
கருத்துரை
முருகா! உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன், உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.
24. உண்மையான புலையன்
"நீசனோ நீசன்? நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன்; அவனையே - நீசப்
புலையனாம் என்று உரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல்."
ஆராய்ந்து பார்த்தால், புலால் உண்பவன் உண்மையான புலையன் அல்ல. சொன்ன சொல்லில் இருந்து மாறுபடுபவனே உண்மையான புலையன். சொன்ன சொல் தவறாத, ஊன் மட்டும் உண்ணும் புலையனை இழிவான புலையன் என்று சொல்லும் புலையனே மேலான புலையன் என்று சொல்லலாம்.
84. வழுவழுத்த உறவு
இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
இருப்பதுவே தக்க தாகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
றியபகையே வண்மை யாமே.
இதன் பொருள் ---
இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் – அணிகள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்ட திருத் தண்டலை இறைவரின் வளம்பொருந்திய நாட்டிலே, எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய் இருப்பதுவே தக்கது ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக் காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும்; குழை குழைத்த கல்வியினும் கேள்வியினும் கல்லாமை குணமே - தெளிவற்ற கல்வி கேள்விகளை விடக் கல்லாமையே நன்மை தருவதாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற உறவைக் காட்டிலும் நீங்காத சினத்தைப் பொருந்திய பகையே வளம் உடையதாகும்.
23. புல்லரிடம் மூன்று குணங்கள்
“செங்கமலப் போதுஅலர்ந்த செவ்விபோ லும்வதனம்,
தங்கு மொழிசந் தனம்போலும், - பங்கியெறி
கத்தரியைப் போலும்,இளங் காரிகையே! வஞ்சமனம்
குத்திரர்பால் மூன்று குணம்.”
இளம்பெண்ணே! செந்தாமரை போலும் அழகான மலர்ந்த முகமும், நல்ல மணமுடைய சந்தனம் போலும் இனிமை பொருந்திய மொழியும், முடியை வெட்டுகின்ற கத்தரிக்கோலைப் போலும் வஞ்சனை பொருந்திய மனமும் என வஞ்சகரிடம் இம் மூன்று கொடுங்குணங்கள் உள்ளன.
(வதனம் - முகம். பங்கி - தலைமயிர். குத்திரர் - வஞ்சகர்.)
83. ஊருடன் கூடி வாழ்
தேரோடும் மணிவீதித் தண்டலையார்
வளங்காணும் தேசம் எல்லாம்
போரோடும் விறல்படைத்து வீராதி
வீரரென்னும் புகழே பெற்றார்,
நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு
நடப்பதுவே நீதி ஆகும்!
ஊரோட உடனோட நாடோட
நடுவோடல் உணர்வு தானே.
(தொ-ரை.) தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும் தேசம் எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரரெனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றியடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும், நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடுநிலை தவறாமல் நடத்தல் அறிவுடைமை அல்லவா?
‘ஊரோட உடன் ஓடு!; நாடு ஓட நடுவோடு!' என்பது பழமொழி. ‘ஊருடன் கூடிவாழ்' என்றார் ஒளவையார். “உலகத்தோடு ஒட்ட ஒழிகல்” என்றார் திருவள்ளுவ நாயனார். மாற்றங்களைக் கொண்டது உலகவாழ்க்கை. மனிதர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை உண்டு. ஒழுகலாறுகள் உண்டு. வாழ்க்கை முறையில் வேறுபாடும் உண்டு. சமயநெறிகளிலும் வேறுபாடு உண்டு. இவை ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் இருக்கலாம். ஒத்துப் போகவும் முடியாது. ஆனாலும், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துபோவதுதான் அறிவுடைமை. நல்லவர் என்று கருதி யாரையும் ஏற்றுக் கொள்ளுவதும், தீயவர் என்று கருதி யாரையும் விலக்குவதோ கூடாது. இப்பாடலில், வீராதி வீர்ரெனும் புகழே பெற்றார் என்று குறிப்பிட்டு உள்ளது சிந்தனைக்கு உரியது. பெருவீரராக ஒருவர் இருப்பதால், அவர் மற்றவரை தாழ்வாக எண்ணுவது அறிவுடைமை ஆகாது. அனைத்துத் தரப்பு மக்களோடும் கூடி வாழ்தல் வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் எல்லா நிலையிலும் இருக்கலாம். ஆனாலும், ஒத்துப் போய் வாழ்வதே அறிவுடைமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூறு கூறும். வசு என்றால் பூமி என்று பொருள். பூமி என்றால் பூமியில் வாழும் மனிதர்களைக் குறிக்கும். ‘உலகமே ஒரு குடும்பம்’ என்றும் வழங்கப்பட்டு வருகிறது. (வசுதா + ஏவ + குடும்பகம் = வசுதைவ குடும்பகம்). சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பார்கள். யாருடைய உதவியும் யாருக்கும் எந்த நேரத்திலும் தேவைப்படும்.
வேண்டுதலும், வேண்டாமையும் மனிதனுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் ஆகும். இதை விருப்பு வெறுப்பு என்றும் சொல்லலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒன்றில் விருப்பத்தை வைத்து விட்டால், அதில் உள்ள குற்றம் குறை தோன்றாது. ஒன்றில் வெறுப்பை வைத்து விட்டால், அதில் உள்ள நன்மை தோன்றாது. எனவே, விருப்பு வெறுப்பு கூடாது. விருப்பு, வெறுப்பு காரணமாக, வினைகள் விளைகின்றன. வினைகள் காரணமாக பிறப்பு உண்டாகின்றது. பிறப்பு உண்டானால் இறப்பும் உண்டு. சங்கிலித் தொடர் போல, இவை யாவும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருளை விரும்புவதால்,அது நிலைக்காமல் போய்விடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. வெறுப்புக் கொள்வதால், அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. இந்த அச்சமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது.
வேண்டுதல் --- பற்றாலும், ஆசையாலும், பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.
வேண்டாமை --- வெறுப்பாலும், பொருந்தாமையாலும், பகைமையாலும் ஒன்றை விரும்பாமை.
நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும், கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும், கருவை கருப்பை மூடியிருப்பது போலவும், ஆசையானது, உண்மை அறிவை விளங்கவொட்டாமல் மறைத்திருக்கிறது. உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமாக, ஒன்றை விரும்புதலும், ஒன்றை வெறுத்தலும், அவற்றால் விளையும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்று, பிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால், வெறுப்பு வருகின்றது.
இந்த ஆசையும், அதனால் வினையின் விளைவும்,அதன் காரணமாக விருப்பு வெறுப்புக் கொள்வதும், அதனால் உண்டாகும் பிறப்பு இறப்புத் துன்பங்களும் நம்மைப் பற்றாமல் இருக்கவேண்டுமானால், அவற்றால் வரும் துன்பங்களை இல்லாமல் போக வேண்டுமானால், ஆசையை அடக்க வேண்டும். எது விதிக்கப்பட்டதோ, அதன்படி நடந்துகொள்ளவேண்டும். அப்போது விருப்பு வெறுப்புத் தோன்றாது. பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். தொந்தம் - துவந்தம் - இரட்டைகள் என்னும்,விருப்பு - வெறுப்பு,சுகம் - துக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடவேண்டும்.
“ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்” என்பது வள்ளற்பெருமானாரின் அருள்வாக்கு.
22. புல்லர் இருமலுக்கு ஒப்பு
“துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே,
மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும்
கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசமாகை யால்.” — நீதிவெண்பா.
நஞ்சு போலும் கசப்பான மருந்தால் இருமல் அடங்கிப் போகும். இனிமைக்கு மாறாக உள்ளதால், கடும் சொல்லைக் கண்டு தீயவர்கள் விரைந்து அடங்கிப் போவார்கள். எனவே, மிகுந்து வரும் இருமல் நோயும், தீயோரும் ஒப்பானவர்கள் என்று உணர்தல் வேண்டும்.
(கடு - நஞ்சு போன்று கசப்பானவை. கடுக - விரைந்து. வசம் ஆதல் - அடங்கிப் போதல். பன்னும் - சொல்லப்படும். துன்னும் - மிகுந்து இருக்கும்.)
82. சொல் ஒன்று - செயல் ஒன்று
தனத்திலே மிகுத்தசெழுந் தண்டலையார்
பொன்னிவளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம்
ஒன்றாகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ
சொல்வதொன்று! செய்வதொன்று!
மனத்திலே பகையாகி உதட்டிலே
உறவாகி மடிவர் தாமே.
இதன் பொருள் ---
தனத்திலே மிகுந்த செழுந்தண்டலையார் பொன்னி வளம் தழைத்த நாட்டில் - செல்வத்திலே சிறப்புற்ற வளமிக்க திருத்தண்டலை இறைவருடைய காவிரியின் வளங்கொழிக்கும் நாட்டிலே, இனத்திலே மிகும் பெரியோர் மனம் வாக்கு ஒன்று ஆகி எல்லாம் செய்வார் - நட்பிலே சிறந்த பெரியோர்கள் நினைவும் சொல்லும் ஒன்றுபட்டு யாவற்றையும் இயற்றுவார்கள்; சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று - செற்றத்திலே சிறந்த கீழ்மக்களின் வேலையெனிலோ கூறுவது ஒன்று, செய்வது மற்றொன்று, மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவு ஆகி மடிவர் - உள்ளத்திலே பகை வைத்துக்கொண்டு பேச்சிலே உறவு காண்பித்துக் காலத்தைக் கழிப்பர்.
‘உள்ளே பகை, உதட்டில் உறவு,' என்பது பழமொழி. "கனவினும் இன்னாது மன்னோ, வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு" என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.
“யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை உடையவர், - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.” --- நாலடியார்.
இதன் பொருள் ---
யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - யாருக்கு ஒருவரது உள்ளத்தைத் தேர்ந்து அறியும் ஆற்றல் உள்ளது?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் – மலைச் சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே! கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாகவே இருக்கின்றனவே!
“மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு
வினைவேறு பட்டவர்பால் மேவும், - அனமே,
மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே
கனம்ஒன்று மேலவர்தம் கண்.” --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
அன்னம் போன்றவளே! ஒழுங்கற்ற செயலைச் செய்யும் கீழோரிடத்தில் மனமும் சொல்லும் செய்யும் செயலும் ஒன்று பட்டு இராது. வேறு வேறாக இருக்கும். ஆனால், பெருமை பொருந்திய பெரியோரிடத்தில் மனமும் சொல்லும் உயர்ந்த செயலும் ஒன்றாகவே இருக்கும்.
21. அறிவீனரைத் திருத்துதல் ஆகாது
“அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும், உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.”
மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ? மாறாது. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா? இல்லை.
(அவ்வியம் - பொறாமை. திவ்விய – மேலான. கந்தம் - மணப்பண்டங்கள். உள்ளி - வெள்ளைப் பூண்டு. கந்தம் - தீநாற்றம். கரை - சொல்லு.)
81. பொல்லாத கள்ளர்
“செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்
நெறியாரே! திருடிக் கொண்டே
எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத
கள்ளர்இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்
திருநீறு குழைக்குங் கள்ளர்
அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்
கள்ளர்இவர் ஐவர் தாமே.”
இதன் பொருள் ---
செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே - வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் – பொருட்களைத் திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே. இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் - எனின், தீய கள்ளர் யார் என வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய கள்ளருடன் கூடிக் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு குழைத்திடும் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளர்கள் ஆகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவருமே ஆவர்.
‘ஆசாரக் கள்ளர்’ ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவோர். இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார். ஆகையால் வெளிப்படையாகத் திருடரெனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், தம்மிடத்துச் செல்வம் இருந்தும் இல்லாதவர் ஓபல நடித்துப் பொருள் குவிப்போர். இவர்கள் தோற்றத்தில் நல்லவராக நடித்து மக்களை ஏமாற்றுவோர் ஆவர்.
அன்று பாடிக் காட்டிய இந்த நிலை, இக்காலத்தில் கண்ணால் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு கள்ளத்தனமாக நடந்துகொள்பவரைக் குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடினார்.
“கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்;
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்;
கண்காணி யாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.” -- திருமந்திரம்.
மேற்பார்வையிட்டு ஏற்பன செய்விப்போன் கண்காணி எனப்படுவான். உயிர்களுக்குக் கண்காணியாக உள்ளவன் இறைவன். இந்த உண்மையினை அறியாது பலர் தவறான செய்கைகள் பலவற்றையும் செய்கின்றனர். அவர்கள் எண்ணத்தில் கண்காணி இல்லை. இன்னும் சிலர் இதை நன்கு அறிந்து வைத்து இருந்தும், சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்காக அடியார் வேடம் பூண்டு பிறரை மருட்டிப் பொருள் குவிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இவர்களுக்கு ஏதும் பொருள் ஈயாவிட்டால், இவர்களால் நமக்குத் துன்பம் ஏதும் உண்டாகுமோ என்னும் அச்சம் காரணமாக இவர்களுக்குப் பொருள் மிக வழங்குவோர் உண்டு. இவர்களுக்குப் பொருளை நிறையத் தந்தால் தாம் செய்த பாவம் தொலைந்து விடும் என்னும் அஞ்ஞானிகளும் இல்லாமல் இல்லை. மேற்பார்வையாளனாகக் கலந்து எங்கும் நலம்பெற, நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று அருள்பவன் இறைவன். அங்ஙனம் நின்று அருள்பவனை ஆசாரத்தில் நின்று நற்பண்புகளை வளர்த்துக் கொண்ட உண்மை அடியவர்கள் கள்ளத்தனம் ஒழிந்தவர் ஆவர்.
பத்தி நெறியில் நில்லாமல், வேட மாத்திரத்தால் அடியார் போன்று காட்சி அளித்து, பொருளைக் கருதி, நன்னெறியைப் பிறருக்கு எடுத்து உரைப்பவர்களைப் பித்தர் என்கிறார் திருமூல நாயனார். இப் பித்தர்கள் பெருநோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள்.
“பத்திவிற்று உண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக் குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே." -- திருமந்திரம்.
வேட மாத்திரையால் பத்தி உடையார் போன்று ஏனையார்க்கு நெறிமுறைகளைப் போதித்து, விலைபெற்று வாழும் வஞ்சகர் வீண்பொழுது கழிக்கும் பொருட்பித்தர் ஆவர். அவருக்கே மறுபிறப்பும் உண்டு. பிறப்புக்கு அடிப்படையான வினையை நெல்லைக் குற்றி அரிசியாக்கி உண்பது போல், சிவகுருவின் திருக்கடைக்கண் நோக்கால் எரிசேர் வித்து எனச் செய்தவர், பிறப்பு என்னும் விளைநிலத்தைப் பாழ் செய்தவர் ஆவர். திருவடியுணர்வு கைவந்த இவர் சிவப்பித்தர் ஆவார். அவர்களுக்கு எக்காலத்தும் பிறப்பு இல்லை.
20. துட்டனைக் கண்டால் தூர விலகு
“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.”
கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழம் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் தொலைவிலும், சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழம் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களுக்குக் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது. (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.)
(கொம்பு உளது - ஆடு மாடு முதலியன. வெம்புதல் - சினம் கொள்ளுதல். கரி - யானை. வம்பு - தீமை.)
80. தேவதேவன் ஆடும் இடத்திலே பேய்களும் ஆடும்
பேரான கவிராச ருடன்சிறிய
கவிகளும்ஒர் ப்ரபந்தம் செய்வார்!
வீராதி வீரருடன் கோழைகளும்
வாள்பிடித்து விருது சொல்வார்;
பாராளும் தண்டலைநீள் நெறியாரே!
இருவரையும் பகுத்துக் காணில்,
ஆராயும் மகாதேவர் ஆடிடத்துப்
பேய்களும் நின் றாடுமாறே.
இதன் பொருள் ---
பார் ஆளும் தண்டலைநீள் நெறியாரே - உலகைக் காத்து அருளும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!
பேரான கவிராசருடன் சிறிய கவிகளும் ஓர் பிரபந்தம் செய்வார் - புகழ்பெற்ற கவியரசருடன் சிறு கவிஞரும் ஒரு நூல் எழுதுவர்; வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார் - பெருவீரர்களுடன் வீரமற்றவர்களும் வாளேந்தி வெற்றி வெற்றி என்று கூறுவார்கள். இருவரையும் பகுத்துக் காணில் - இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப் பேய்களும் நின்று ஆடும் ஆறே - (பெரியோர்) ஆராய்ச்சி செய்யும் சிவபெருமான் ஆடும் இடத்திலே பேய்களும் நின்று ஆடுவது போலாம்.
எல்லோரும் பெருவீரராக இருப்பது இல்லை. எல்லோரும் பெருங்கவிஞராகவும் இருப்பதும் இல்லை. பெருவீரர் இருப்பதனாலேயே மற்றவரும் போர்செய்யப் போகாமல் இருக்க முடியாது. பெரும் புலவரைக் கண்டு சிறுபுலவர் கவிசெய்யாமல் இருத்தலும் இயலாது. இருதிறத்தாரும் கலந்திருப்பதே உலகியல். சிவபரம்பொருள் திருநடனம் புரியும் இடத்தில்தான் பேய்களும் கூத்தாடுகின்றன.
பொது --- 1116. கட்டம்உறு நோய்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கட்டம்உறு நோய் (பொது)
முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே
தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால ...... மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார ...... நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி ...... வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில், மாமாய
கட்டுவிடும் ஓர் காலம் ...... அளவாவே,
கத்த உறவோர், பாலர், தத்தை, செறிவார், வாழ்வு
கற்புநெறி தான்மாய, ...... உயர்காலன்
இட்ட ஒரு தூதாளும் முட்ட, வினையால் மூடி,
இட்ட விதியே ஆவி ...... இழவாமுன்,
எத்தி, உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத,
இட்டம் இனிதோடு ஆர ...... நினைவாயே.
துட்டர் என ஏழ்பாரும் முட்டவினையாள் சூரர்
தொக்கில் நெடு மாமார்பு ...... தொளையாகத்
தொட்ட, வடிவேல் வீர! நட்டம் இடுவார் பால!
சுத்த தமிழ் ஆர் ஞான ...... முருகோனே!
மட்டு மரை நால்வேதன் இட்டமலர் போல் மேவ,
மத்தமயில் மீது ஏறி ...... வரு நாளை,
வைத்த நிதி போல் நாடி, நித்தம் அடியார் வாழ,
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதவுரை
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினை ஆள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாகத் தொட்ட வடிவேல் வீர --- தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!
நட்டம் இடுவார் பால --- அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!
சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே --- தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!
மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ --- நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து,
மத்த மயில் மீது ஏறி வரு நாளை --- அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில்,
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் --- துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல்
மாமாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே --- உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு,
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய --- சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக
உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட --- பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க,
வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் --- வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக,
எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே --- நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.
பொழிப்புரை
தீயவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்திக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்களின் அகன்ற மார்பினைத் தொளைத்துச் செல்லும்படியாக கூர்மையான வேலை விடுத்து அருளிய வீரரே!
அம்பலக் கூத்தர் அருட்புதல்வரே!
தூய தமிழை நன்கறிந்து ஞான வடிவாக உள்ள முருகப் பெருமானே!
நறுமணம் மிக்க தாமரைமலரில் வீற்றிருக்கும், நான்கு வேதங்களை ஓதும் பிரமதேவனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் இருந்து, அதிக உற்சாகமான மயிலின் மேல் தேவரீர் ஏறி வரும் நாளில், சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
துன்பத்தைத் தருகின்ற நோய்களும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடலானது, உலகமாயையால் உண்டாகும் பந்தத்தில் இருந்து விடுபட்டு, (வினைப் போகம் தீர்ந்த காலத்தில்) உயிர் போகும் சமயத்தை உணர்ந்து கொண்டு, சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்புநெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய எமன் அனுப்பிவிட்ட ஒப்பற்ற தூதுவர்களும் வந்து தாக்க, வினைகளால் மூடப்பட்ட விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, நாள்தோறும் தேவரீரைப் போற்றி, முத்தமிழால் ஓதி வழிபட, விருப்பத்தை மகிழ்வோடு வைத்து அடியேனை நினைந்து அருளுவீராக.
விரிவுரை
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ ---
மட்டு – நறுமணம். மரை – தாமரை. நால்வேதன் – பிரமதேவன். இட்டமலர் – விருப்பமான மலர்.
பிரமதேவன் விரும்பி வீற்றிருப்பது தாமரை மலர்.
மத்த மயில் மீது ஏறி வரு நாளை ---
மத்தம் - அதிக உற்சாகம்.
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே ---
வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.
“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணையானது என்றும் மாறாத இயல்பை உடையது என்பதா “மாறாத" என்றார் அடிகளார்.
“அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.
"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்
சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.” --- திருஞானசம்பந்தர்.
"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.
பல் அடியார் பணிக்குப் பரிவானை,
பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருங்கித் திறம்பாது
சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"
நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.
வல் அடியார் மனத்து இச்சை உளானை,
வலிவலம் தனில் வந்துகண் டேனே. --- சுந்தரர்.
"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க".... --- திருவாசகம்.
"தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய
மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"
தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே." --- திருவாசகம்.
"உற்ற இடத்தில் உதவநமக்கு
உடையோர் வைத்த வைப்பு" அதனை,
கற்ற மனத்தில் புகும் கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம் அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,
சிவாயநம என்று இடு நீறே. --- திருவருட்பா.
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,
கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்
கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்
"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"
இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,
திலகமே, திரு ஒற்றி எம் உறவே,
செல்வமே, பரசிவ பரம்பொருளே. --- திருவருட்பா.
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் ---
கட்டம் – துன்பம்.
குடில் – குடிசை. உடம்பைக் குறித்தது.
குடில் - குடிசை. உடம்பைக் குரம்பை என்றும் சொல்வார்கள். எப்போது விழும் என்று தெரியாது. ஆனால், விழுந்தே தீரும் என்பதால் குடில் என்றார். இந்த உடம்பு, எலும்பு சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம் முதலிய பல அசுத்தப் பொருள்களால் ஆனது. அந்த அசுத்தங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த உடம்பு தனியே துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்காது. இனிப்பு நிறைந்த பொருளைச் சிறிதுதான் உண்ணலாம். விரும்பினாலும், ஒரு பூசணிக்காய் அளவு உண்ண இயலாது. மனைவியுடன் சிறிது நேரம்தான் இன்புறலாம். தூங்கினால் சுகம்தான். ஓயாது தூங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்படி எதை எதை இன்பமாகக் கருதி அனுபவிக்கின்றோமோ, அந்த இன்பங்களை இந்த உடம்பால் தொடர்ந்து அனுபிவிக்க இயலாது. வெயிலும் மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி நுகர்வது இந்த உடம்பு.
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்புநெறி தான் மாய..... வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் ---
சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்
ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,
ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என” --- பழநித் திருப்புகழ்.
வினை – பிராரத்த வினை. பிராரத்த வினையினை அனுபவித்துக் கழிக்கவே இந்த உடல் இறைவனால் அருளப்பட்டது. வினையை அனுபவிக்க வேண்டி காலம் வரை உடம்பில் உயிர் இருக்கும். வினைப் போகம் தீர்ந்துவிட்டால், உடம்பில் உயிரானது ஒருகணமும் இருக்காது.
“வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய் வினை தான் ஒழிந்தால்
தினைப் போது அளவும் நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை
நினைப்போரை மேவும் நினையாரை நீங்கி இந் நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே” --பட்டினத்து அடிகளார்.
எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே ---
ஏத்தி என்னும் சொல் எத்தி என வந்தது.
ஏத்துதல் – புகழ்தல், உயர்த்தல், வாழ்த்திக் கூறுதல். துதித்தல்.
இறைவனை நாள்தோறும் வழபாடு செய்ய வேண்டும். காலம் கருதிச் செய்தல் கூடாது. “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது அறிக.
இறைவனை முத்தமிழால் ஓத வேண்டும் என்றார். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கின்ற பெருமான் ஓதுவாரை நிச்சயம் வாழவைப்பான் என்பது வெளிப்படை. உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழி. இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தான். “நன்பாட்டுப் புலவனாய் சங்கம் ஐறி” என்பார் அப்பர் பெருமான். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே. சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை நற்புணை ஆக்கியது தமிழ்; எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல்தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்; இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.
கருத்துரை
முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய்.
வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா
வெஞ்சொல்லும் பொய்மையும் வேண்டா ----- மனிதன் மனிதனாக வாழ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுகையில், செம்ம...
-
ஔவையார் அருளிய "மூதுரை" கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ————- பொருளே நோக்கமாக வாழும் உலகியல் வ...
-
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா ? நட்ட கல்லு...
-
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்) மாதர் மயக்கில் ஆழாது , முத்தமிழால் முருகனைப் பாடி உய்ய ...