ஆமையும் மனிதனும்

 



ஆமையும் மனிதனும்

-----

உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. நோய் துன்பத்தையே விளைவிப்பது. ஆனால், பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கிறதே! அப்படியிருக்க, அதனை நோய் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். பிறவியில் இடையிடையே இன்பம் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் விளைவது பெருந்துன்பமே ஆகும். "பிறவியால் வருவன கேடு" என்றார் திருஞானசம்பந்தர்.

இவ்வுண்மையை ஓர் அரிய உவமையால் ஒரு தேவாரப் பாடலின் மூலம் விளக்கி அருளினார் அப்பர் பெருமான். ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலை நீரை ஏற்றி அதில் ஆமையை இடுவர். நீர் சிறிது சிறிதாகச் சூடேறுகிறது. அந்த ஆமை தனக்கு வரப்போகும் அழிவை அறியாது தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறது. அந்த இன்பம் அதற்குத் துன்பமாய் முடியப் போகிறது. உலகில் ஐம்புல நுகர்ச்சியால் வரும் இன்பம் இத்தகையதே ஆகும். எனவே, உலகில் சிறிது இன்பம் உளதாயினும் அது துன்பமாகவே முடிதல் கண்கூடு. இதனால் பிறவி துன்பத்தையே விளைவிக்கும் என்பதும், அது பற்றியே அது நோய் எனப்பட்டது என்பதும் தெளிவாகும். பின்வரும் திருநாவுக்கரசர் தேவாரத்தைக் காண்க...

"வளைத்து நின்று ஐவர் கள்வர் 

வந்து எனை நடுக்கம் செய்யத்

தளைத்து வைத்து உலையை ஏற்றித் 

தழல் எரி மடுத்த நீரில்

திளைத்து நின்று ஆடுகின்ற 

ஆமைபோல் தெளிவு இலாதேன்,

இளைத்து நின்று ஆடுகின்றேன், 

என்செய்வான் தோன்றி னேனே."

இதன் பொருள் ---

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?

நாலடியாரில் 'பேதைமை' என்ற அதிகாரத்தில் ஒரு பாடல் வரும். 


"கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப, ஆமை

நிலை அறியாது அந் நீர் படிந்தாடியற்றே-

கொலைவல் கொடுங் கூற்றம் கோள் பார்ப்ப, ஈண்டை

வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு." --- நாலடியார்.


இதன் பொருள் ---

கொல்லுந் தொழிலில் வல்லமை ஊடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன், தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்க, இவ் வுலகப் பற்றாகிய வலையில் கிடந்து அதன்கண் களித்து இருப்பாரது பேதைமை இயல்பு,  தன்னைக் கொல்லும் கொலைஞர் தன்னை உலையில் இட்டு அடுப்பில் ஏற்றித் தீக்கொளுவ, ஆமை நிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடி மகிழ்ந்தாற் போன்றது.

பேதைமை என்பது தனக்கு வரும் இடுக்கணை அறியாது களித்திருக்கும் இயல்பு உடையது என்பது கருத்து. 'மாண்பு' என்னும்  உயர் மொழியால் கூறியது, மிக்க இழிவை உணர்த்திற்று.

பிறவற்றைக் கொன்று, அவற்றின் ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கும் கொலைஞரே அவற்றைக் கொல்லும் முறைமையை நன்கு அறிவர். ஆமையைக் கொல்வது அரிது. அதைக் கொல்லும் வகையை உணர்ந்தோர் நெருப்பு மூட்டி உலை நீரை அடுப்பில் ஏற்றி அதில் ஆமையை இடுவர். தீயும் சுடர்விட்டு எரியும். நீரும் சூடு ஏறிக் கொதிக்கும். ஆமையும் வெதுவெதுப்பான நீரில் இன்புற்றுத் திளைக்கும். நீர் காயக்காய, சூடு பொறுக்கமாட்டாமல், ஆமை மாய்ந்துகொண்டே வரும். தான் அழிந்து வரும் நிலையை அறியாது அது. ஆமைக்கும் மாக்களுக்கும் வாழ்க்கை இன்பமும், அழியும் நிலையினை அறியாமையும் பொது. 

அப்பர் பெருமான் சமண மதத்தில் சேர்ந்து ஒழுகி, மீண்டு உய்ந்தவர். ஆதலின், சமணர்கள் குறித்தது ஓர் உவமையைத் தமது திறத்திற்கு ஏற்றி, நமது திறத்தை நாடச் செய்தருளினார். தொலைவில் இராமல், சூழ்ந்து (வளைத்துக்) கொண்ட கள்வர்க்கு நடுங்காதார் எவர்? ஒருவர் அல்லர் ஐவர். "ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள் சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்?" என்று ஐம்புலன்களின் சேட்டை குறித்து அருணகிரிநாதர் இரங்கிப் பாடி உள்ளார்.  ஐவரும் சூழ்ந்து நடுக்கம் விளைக்கினும், அவர் சூழ்ச்சிக்கு ஆளாகி, அவர் ஆட்டுகின்ற வகையிலே ஆடியும் ஓட்டுகின்ற வகையிலே ஓடியும், காட்டுகின்ற வகையிலே கண்டும், ஊட்டுவதை எல்லாம் உண்டும், துன்பத்தில் இருந்தாலும், அவர் திறத்தில் ஓர் இன்பம் உண்டுபோலத் தோன்றும். அவ்வின்பத்தையே நாடி, அவர் வலையிலே சிக்கி வருந்துவதற்கே மீண்டும் அவாவுறுதல் பேதைமை அன்றி வேறு இல்லை. ஆமைக்குத் தெளிவு இருந்தால், வெந்நீரில் திளைத்து ஆடாது. நீரின் வெப்பம் அதன் உடலுக்கு இனிதாய் இருந்தது. அதைத் தெளியாமையே ஆமைக்கு அழிவாகியது. 

மெய் வாய் கண் மூக்குச் செவி ஆகிய ஐந்தனாலும் முறையே ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஐந்தும் பிறப்பு இறப்பாகிய துன்பத்தை விளைக்கும் என்று தெளியாமையே பேரின்ப வாழ்வு பெறவொட்டாது தடையாய் இருப்பது. பிறந்து இறந்து உழலும் பெருந்துன்பத்தைச் செய்கின்றது. தெளிந்து திருவருள் பெற்று உய்வதற்கே இந்தப் பிறவி வாய்த்தது. தெளியாமல் ஐம்புலத்து ஆசை வலையுட்பட்டுப் பிறவிப்பெருங் கடலில் விழுந்து துன்புறுதற்கு உண்டானது அல்ல இந்த மானிடப் பிறவி.

பானுகோபன் வீரவாகுதேவர் முன் நின்று போர் செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து, தான் தன் குலத்தொடு வேரறச் சாய்ந்தொழிய இருக்கும் பின் விளைவைச் சிறிதும் தெளிந்திடவில்லை. அதனால், அவனை `உலைபடும் இளவெந்நீரின் உளம் மகிழ் கமடம் ஒத்தான்` எனத் தணிகைப் புராணத்தில் குறித்தருளினார் கச்சியப்ப முனிவர். கமடம் - ஆமை.

பிறவி என்பது தீராத நோய் என்பது அறிவில்லார்க்குச் சிறிதும் புலனாகாது. ஆனால், அறிவுடையார்க்கு அது நன்கு விளங்கித் தோன்றும். ஆதலால் அவர் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர். பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்றருளினார் அப்பர் பெருமான். உலகத்து மருந்துகள் வேறு வேறு இடங்களில் கிடைப்பன. ஆகவே அவற்றைப் பெறுதற்கு அலைதல் வேண்டும். சில சமயங்களில் அவை கிடைக்காமலும் போகலாம். ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையது அல்ல. வேண்டிய போது கிடைக்கும் தன்மை வாய்ந்தது திருவருள் மருந்து. அதுவே நல்ல மருந்து. "நல்ல மருந்து இம் மருந்து - சுகம் நல்கும் வயித்தியநாத மருந்து" என்று பாடினார் வள்ளல்பெருமான். மேலும், உலகத்து மருந்துகள் உடலுக்கு உரியவை. ஆதலால் அவை உண்ணுதற்கு உரியவாகின்றன. இறைவனாகிய மருந்தோ உயிருக்கு உரியது. ஆதலால், அது எண்ணுதற்கு உரியதாகின்றது. அதுபற்றியே இறைவனை நினையுங்கள் என்று அறிவுறுத்தினர் தமது அருளாளர்கள். 

உய்யும் நெறியாகிய முத்திநெறி அறியாமல் மூர்க்கரோடு இணங்கி இருந்தால், வாழ்நாள் வீணே கழியும். மூப்பும் உண்டு. அதன் பின்னர் மரணம் நிச்சயம் உண்டு. அதன் முன்னரே, நல்வினைகளைச் செய்து நற்கதியைத் தேடவேண்டும் என முயல்வதுதான் அறிவுடைமை. அல்லாதது பேதைமை. "பேதைமை என்பது ஒன்று யாது எனின். ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறியாமை என்பதன் இலக்கணம் என்னவெனில், கேடு தருவனவற்றை எல்லாம் விரும்பி ஏற்றுக் கொண்டு, ஆக்கம் தருவனவற்றைக் கைவிடுதல் ஆகும். ஆக்கம் என்பது வீடுபேறு. கேடு என்பது பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ற தன்மை.

பேதைமையால், அறியாமையால் வரும் கேடு என்ன என்பதை, திருவள்ளுவ நாயனார் மேலும் தெரிவிப்பது, "ஒருமைச் செயல் ஆற்றும் பேதை, எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு.” ஐயோ! பேதைமையால் வரும் கேடு இவ்வளவு கொடியதா? ஆமாம். ஆமாம். பேதை என்பவன் ஒருவன், இனிவரும் பிறவிகளில் எல்லாம் தான் படவேண்டிய நரகத் துன்பத்தை, இப்போது கிடைத்த இந்த ஒரு பிறவிலேயே தேடிக் கொள்ளும் வல்லமை படைத்தவன் என்கிறார் நாயனார்.

இந்தக் கேட்டை மனிதகுலம் அடையாமல், புனிதகுலம் பெறவேண்டுமென்றுதான் வள்ளற்பெருமானார், பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவிக்கிறார்.


"ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,

அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,

கூற்று வருங்கால் அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ,

கூற்றுஉதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,

வேற்றுஉரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,

வீண்உலக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,

சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற

தருணம் இது, சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே."


இதன் பொருள் ---

ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் முன்பே அணை செய்து காத்துக்கொள்ள நினையாத உலக மக்களே! அகங்காரமாகிய பேய் பிடித்து அலைந்து வருந்துகிறீர்கள்.  நாளை எமன் வருவானாயின் என்ன செய்வீர்கள். அந்தோ! அந்த எமனை உதைத்து நீக்கிய சிவனுடைய சிவந்த திருவடியைப் போற்றி வழிபட விரும்புகின்றீர்கள் இல்லை. பிறவற்றைப் பேசித் தீவினைகளை மிகுவித்து மெலிகின்றீர்கள்ற. வீணான உலகியலில் கொடுமை நிறைந்த பொய் வழக்கங்களைக் கைவிட்டு எம்பால் வந்து அடைவீர்களாக. நான் உரைக்கின்ற சொற்களை ஏற்றருளுதற்கு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் இதுவாதலால், நீவிர் அவனது ஞானசத்தியைப் பெறுதற்கு உடனே வருவீர்களாக; நான் சொல்லும் இது சத்திய வாக்காகும்.

     வள்ளலார் சொல்லுகின்றவற்றைக் கேளாது அசட்டை செய்து ஒழுகுகின்றமை புலப்பட, “அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்” என்று கூறுகின்றார். கூற்று - உயிர் கவரும் எமன். மார்க்கண்டனது உயிரைக் கவர வந்த எமனைக் காலால் உதைத்து விலக்கிய சிவனுடைய அருட்செயலை விதந்து, “கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீர்” என்று புகல்கின்றார். வேற்று உரைத்தல் - அருள் நெறிக்கு வேறாகியவற்றை விளம்புதல். உலகியலில் காணப்படுகின்ற தீய வழக்கங்கள் துன்பம் விளைவிப்பனவாதலால் அவற்றைக் கைவிடுதல் வேண்டி, “வீண் உலக கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்” என மொழிகின்றார். சாற்று - சொல்வது. சிற்சத்தி - திருவருள் ஞானத்தால் விளையும் மெய்ம்மையான ஆற்றல். இதனால் சன்மார்க்க நன்னெறிக்கு வேறாகியவற்றைப் பேசி உலகக் கொடுவழக்கங்களைக் கைவிடுமாறு வேண்டுகின்றார்.

இறைவனது இருப்பில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டாம். அவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள் பேதைமையைத் தவிர்த்துப் பேரருளைப் பெற்று, பிறவாத நிலையிலே, இறவாத இன்ப அன்பில் திளைத்து இருக்க, இறைவன் திருவடியை மறவாது போற்றுவோம்.




பொது --- 1091. கருதியே மெத்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கருதியே மெத்த (பொது)

முருகா! 

அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.


தனதனா தத்த தனதனா தத்த

     தனதனா தத்த ...... தனதான


கருதியே மெத்த விடமெலாம் வைத்த

     கலகவா ளொத்த ...... விழிமானார்


கடினபோ கத்த புளகவா ருற்ற

     களபமார் செப்பு ...... முலைமீதே


உருகியான் மெத்த அவசமே வுற்ற

     வுரைகளே செப்பி ...... யழியாதுன்


உபயபா தத்தி னருளையே செப்பு

     முதயஞா னத்தை ...... அருள்வாயே


பருவரா லுற்று மடுவின்மீ துற்ற

     பகடுவாய் விட்ட ...... மொழியாலே


பரிவினோ டுற்ற திகிரியே விட்ட

     பழயமா யற்கு ...... மருகோனே


முருகுலா வுற்ற குழலிவே டிச்சி

     முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே


முருகனே பத்த ரருகனே வெற்பு

     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


கருதியே மெத்த விடம் எலாம் வைத்த

     கலக வாள் ஒத்த ...... விழி மானார்,


கடின போகத்த, புளக வார் உற்ற

     களபம் ஆர் செப்பு ...... முலைமீதே


உருகி, யான் மெத்த அவசமே உற்ற

     உரைகளே செப்பி ...... அழியாது, உன்


உபய பாதத்தின் அருளையே செப்பும்

     உதய ஞானத்தை ...... அருள்வாயே.


பரு வரால் உற்று மடுவின் மீது உற்ற

     பகடுவாய் விட்ட ...... மொழியாலே,


பரிவினோடு உற்ற திகிரியே விட்ட

     பழய மாயற்கு ...... மருகோனே!


முருகு உலா உற்ற குழலி, வேடிச்சி

     முலையின் மேவுற்ற ...... க்ருபைவேளே!


முருகனே! பத்தர் அருகனே! வெற்பு

     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.

பதவுரை


பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே --- துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, 

பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே --- அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே! 

முருகு உலாவுற்ற குழலி --- மணம் கமழும் கூந்தலை உடையவளும்,

வேடிச்சி முலையின் மேவு உற்ற க்ருபையோனே --- வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே! 

முருகனே --- முருகப் பெருமானே!

பத்தர் அருகனே --- அடியவர்க்கு அருகில் இருப்பவரே

வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே --- கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் --- மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின்

கடின போகத்த, புளக வார் உற்ற களபம் ஆர் செப்பு முலைமீதே உருகி --- வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி,

யான் மெத்த அவசமே உற்ற உரைகளே செப்பி அழியாது --- நான் மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல்,

உன் உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே --- தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.


பொழிப்புரை

துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு,  அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்குத் திருமருகரே! 

மணம் கமழும் கூந்தலை உடையவளும், வேடர் மகளுமாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களை விரும்பி அணைந்த கருணை மிக்கவரே! 

முருகப் பெருமானே!

அடியவர்க்கு அருகில் இருப்பவரே!

கிரவுஞ்சமலை பொடிபட்டு அழிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

மனதில் எண்ணியே விடம் அனைத்தும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை மிக்கதும், போகம் தருவதும், புளகாங்கிதம் அடையச் செய்வதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான முலைகளின் மீது மனம் உருகி, மிகவும் தன்வசம் இழந்த நிலையில் காமப் பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல்,  தேவரீரது திருவடிகளின் கருணை பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை அடியேனுக்கு அருள் புரிவீராக.

விரிவுரை


பருவரால் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே --- 


பருவரால் --- பருவரல் = துன்பம். "பருவரல்" என்னும் சொல் பாடல் நயம் கருதி "பருவரால்" என நீண்டது.

மடு - கயம், குளம்.

பகடு - எருமைக் கடா, ஆண்யானை, எருது. இங்கு ஆண்யானை என்பது பொருந்தும்.


பரிவினோடு உற்று அ(த்) திகிரியே விட்ட பழய மாயற்கு மருகோனே --- 

பரிவு --- இரக்கம், அன்பு, கருணை.

திகிரி - சக்கரம். இங்கு திருமாலின் திருக்கையில் விளங்கும் ஆழிப்படையைக் குறிக்கும்.

"திகிரி ஏவிட்ட" என்றால், திகிரியை ஏவிய என்றும், "திகிரியே விட்ட" என்றால், திகிரியை விடுத்து அருளிய என்றும் பொருள் படும்.

"வாரண மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,

வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே, எறிந்த

     மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்...மருகோனே!"


எனவும்,


"வெங்கை யானை வனத்திடை, துங்க மா முதலைக்கு, 

     வெருண்டு, மூலம் என, கரு- ...... டனில் ஏறி,

விண் பராவ, அடுக்கிய மண் பராவ, அதற்கு

     விதம் பராவ அடுப்பவன் ...... மருகோனே!"

எனவும் திருப்புகழ்ப் பாடல்களில் அடிகளார் குறித்து அருளியமை காண்க.

திருமால், கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.


முருகு உலாவுற்ற குழலி --- 

முருகு - தெய்வத்தன்மை, இளமை, மணம், அழகு, தேன்.

தெய்வத் தன்மை உடைய மகளிரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு.

தேன் என்று கொண்டால், தேன் நிறைந்த மலர்களைச் சூடியுள்ள என்றும் பொருள்படும்.


பத்தர் அருகனே --- 

அருகு - அண்மை, பக்கம், இடம்.

அடியவர்களுக்கு அண்மையில் இருப்பவர். "மெய்யடியவர்கட்கு அண்மையனே" என்பது மணிவாசகம். "இடம்" என்று கொண்டால், அடியவர்களிடத்தில் இருப்பவர் முருகப் பெருமான் என்று ஆகும்.


கருத்துரை

முருகா! அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக.






மக்கட்செல்வம்

 


மக்கட் செல்வம்

-----

வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்றார் திருவள்ளுவ நாயனார். "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க''  என்று பெரியோர்கள் வாழ்த்துவது உண்டு. அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது அல்ல. வாழ்வு பெருவாழ்வாக விளங்குவதற்குப் பெறவேண்டிய பேறுகள் பதினாறு என்பதே அதன் பொருள். இவை மனை, மனைவி, மக்கள், தாய், நீர், நிலம், கால்நடைகள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, ஏவல், பொன், மணி, புகழ் எனப் பதினாறாகச் சொல்லப்படும்.

"துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்

அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு

புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!"

என்பது காளமேகப் புலவர் பாடியுள்ள பாடல். 

(துதி = புகழ், வாணி = கல்வி, விசயம் = வெற்றி, சந்தானம் = மக்கட்பேறு, சவுபாக்கியம் = சிறந்த இன்பம், நோவு அகல் = நோய் இல்லாத)

"மதுரைத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் மேலான பரம்பொருளே! புகழ், கல்வி, மனவுறுதி, வெற்றி, மக்கட்பேறு, தைரியம், செல்வம், அதிக தானியவளம், சிறந்த இன்பம், நல்ல அனுபோகம் (துய்ப்பு) ஞானம், பொலிவு, நாளும் வந்தமையும் சிறப்பு, அறம் செய்யும் பண்பு, நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாமையுடன் கூடிய நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகளையும் எனக்குத் தந்து அருள்செய்வாயாக" என்பது இப்பாடலின் பொருள். பின்வரும் பாடல்களையும் காண்க.


"கலையாத கல்வியும், குறையாத வயதும்,

     ஓர் கபடு வாராத நட்பும்,

கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,

கழுபிணி இலாத உடலும்,

    

சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,

     தவறாத சந்தானமும்,

தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,

தடைகள் வாராத கொடையும்,

    

தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு 

துன்பம் இல்லாத வாழ்வும்,

துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய 

தொண்டரொடு கூட்டு கண்டாய்;


அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!

    ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

    அருள் வாமி! அபிராமியே!"


"சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச

தனயை! மா தேவி! நின்னைச்

சத்யமாய், நித்யம் உள்ளத்தில் துதிக்கும்

உத்தமருக்கு இரங்கி, மிகவும்


அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தனதானியம்,

    அழகு, புகழ், பெருமை, இளமை,

அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ் நாள், வெற்றி,

ஆகு நல்ஊழ், நுகர்ச்சி


தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ

சுக ஆனந்த வாழ்வு அளிப்பாய்;

சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி

சூலி! மங்கள விசாலி!


மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை

வளர் திருக் கடவூரில் வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்

வாமி! அபிராமி உமையே! --- அபிராமியம்மைப் பதிகம்.

இவற்றுள் ஒவ்வொன்றும் சிறந்த செல்வமே. எனினும் மக்கட் செல்வமே தலைசிறந்த செல்வமாகும் என்பது புகழேந்திப் புலவருடைய கருத்து. பெருமகனது கருத்து.

"பொன் உடையரேனும் புகழ் உடையரேனும், மற்று

என்னுடைய ரேனும் உடையரோ? - இன்அடிசில்

புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய்

மக்களை இங்கு இல்லாதவர்." --- நளவெண்பா.

இதன் பொருள் --

(பின்னும் நளன் தமயந்தியை நோக்கி) பொருள் படைத்த செல்வர்களாக இருப்பினும், புகழின் மேம்பட்டவராக இருப்பினும், இன்னும் உலகில் அடைய வேண்டிய எந்தப் பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாக இருப்பினும், சுவையுடைய சோற்றுத் திரளுள் நுழைத்துக் கிண்டுகின்ற செந்தாமரை மலர்போன்ற கைகளையும், மலர்மணங் கமழுகின்ற சிவந்த வாயையும் உடைய குழந்தைகளை இவ்வுலகில் பெற்றெடுக்காதவர்கள், மேற்கூறிய எல்லாச் செல்வமும் இருந்தாலும் அதனால் பயன் பெற்றவர்களாக மாட்டார்கள்.

பிசிராந்தையாரால் நெறிப்படுத்தப் பெற்ற பாண்டியன் அறிவுடை நம்பி, இன்பத் துறையில் எளியனாய் இருந்து, மக்கட்பேறு இல்லாமல் இருந்து, பின்னர் அதனைப் பெற்று இன்புற்றான். தன் பெயருக்கு ஏற்ப நல்லறிவு உடை நம்பியாய் அவன் திகழ்தலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்குக் காட்ட எண்ணினான்.  செல்வ வாழ்வு என்பது தனியாக ஒருவன் உண்பதில் இல்லை. விருந்தோடு உண்பதுதான் இன்பம் தருவதாகும். அந்த இன்பமும், இளங் குழந்தைகள் தம்முடைய சிறுகையை நீட்டிக் குறுகுறு என நடந்து வந்து, தம் பெற்றோர் உண்ணும் உணவினல் தமது இரு கைகளையும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழாவியும், தம் உடல் எங்கும் சிதறியும் இன்பச் சிறு தொழில் புரிய, அவர் சிதைத்துச் சிதறப்படும் உணவை உண்ணும்போது உண்டாகும் இன்பம் பெரிது, அப்போது அந்த இளங்குழந்தைகள் மிழற்றுகின்ற சொல் செவிக்கு இன்பமும், அவர் செய்யும் செயல் உடலுக்கு இன்பமும் தந்து, அறிவை மயக்குதலின், உயிர் வாழ்வின் பயன் இதுவே என உணர்ந்தான். அதனை ஒரு பாட்டாகப் பாடினான்.

"படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்,

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே." --- புறநானூறு.

"மக்கட்பேறு" என்பது திருக்குறளில் ஏழாவது அதிகாரமாகும். 'மக்கள்' என்பது ஆண், பெண் இரண்டையும் குறிக்கும். திருககுறளுக்கு உரை கண்ட பரிமேலழகர், 'புதல்வரைப் பெறுதல்' என இதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். புதல்வர் என்பது பெண் மக்களைக் குறிக்காது நீங்கிவிடும். இது ஒரு மாறுபட்ட கொள்கை என்பது அறிஞர் பெருமக்களின் கருத்து. உண்மையில் திருவள்ளுவ நாயனாரது கொள்கை ஆண் பெண் ஆகிய இருவகைக் குழந்தைகளையும் ஒப்பாகக் கருதுவதே ஆகும். அதற்கு ஏற்றது "மக்கட்பேறு' என்பதே. இவ்வுண்மையை இத்தலைப்பில் "மக்கள்' என எட்டுத் திருக்குறள்களில் காணப்படுவதாலும், "புதல்வர்' என்னும் சொல் காணப்படாமையாலும் நன்கு அறியலாம். பிள்ளைத்தாய்ச்சியராய் இருக்கும் பெண்கள் அன்பு உள்ளங்கொண்டு அமைதியான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைப்பேறு எளிதாகவும் மகிழ்வாகவும் இருக்கும். வீரமுள்ள குழந்தைகளைப் பெறு வதற்காகப் பிள்ளைத்தாய்ச்சிகளுக்கு வீரர்களின் வரலாற்றைக் கூறுவதும் உண்டு. கருவுற்ற பெண்ணின் உடல்நலம் மனநலம் அனைத்தும் குழந்தையையும் சென்றடையும் என்பது முற்றிலும் உண்மை.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனிக் கலை ஆகும். இந்தக் கலையை எந்தக் கல்லூரியிலும் பயில முடியாது. அதை நன்கு அறிந்து அறிவிப்பவர்கள் நம் நாட்டு மூதாட்டிகளே. நாகரிகப் பெண்மணிகள் அவர்களைக் 'கிழடுகள்' என்பார்கள். அறிவுள்ள பெண்மணிகள் அவர்களைக் 'கிழட்டுச் செல்வங்கள்' என்பார்கள். 'குழந்தைகளின் அணைப்பை கொண்டிருக்கின்ற தாய்மார்கள், கணவரது அணைப்பிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். காரணம், பால் சுரக்கும் உறுப்பில் காம நீர் சுரந்துவிடுதல் கூடாது. அது கைக்குழந்தையின்வயிற்றில் செரிக்காது. அதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு. மாந்தம் முதலிய நோய்கள் குழந்தைகளுக்கு வந்து துன்புறுத்தும்' என்பது இக் கிழட்டுச் செல்வங்களின் கருத்து.  குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு உறங்க வைக்கின்ற தமிழகத்தின் தாலாட்டுப் பாடல்கள் மிக இனிமையானவை. அப்பாடல்களுக்கு உறங்க வைக்கும் வலிமை மட்டுமின்றி, இசையுணர்வு, சொல்லறிவு, சிறந்த பண்பு, விரிந்த மனம், வீர உணர்ச்சி ஆகியவைகளைக் குழந்தைகளுக்கு ஊட்டும் ஆற்றலும் உண்டு.

சைவ சமயத் தலைவர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசரை சமண சமயத் தலைவர்கள் நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) தள்ளிப் பூட்டினார்கள். ஏழு நாள்கள் கழித்துத் திறந்து பார்த்தால் சாம்பலாக இருப்பார் என்பது சமணர்களின் எண்ணம். அந்த நீற்றறை திருநாவுக்கரசு நாயனாருக்கு எப்படி இருந்தது என்பதைப் பெரியபுராணம் கூறுகின்றது.

"வெய்யநீற்று அறை அதுதான்

வீங்கு இளவேனில் பருவம்

தைவரு தண் தென்றல்அணை

தண்கழுநீர்த் தடம்போன்று

மொய்ஒளிவெண் நிலவு அலர்ந்து

முரன்ற யாழ்ஒலியினது ஆய்

ஐயர் திருவடி நீழல்

அருள் ஆகிக் குளிர்ந்ததே."

இதன் பொருள் ---

வெப்பத்தை உடைய அந்நீற்றறையே மிக்க இளவேனில் காலத்தில் வீசி வருகின்ற குளிர்ந்த தென்றல் அணைகின்ற, தண்ணிய கழுநீர் மலர்கள் நிறைந்த வாவி போன்று ஒளிமிக்க வெண்மையான முழுமதியின் ஒளி விரிந்து, ஒலிக்கின்ற யாழின் ஒலியுடன் கூடியதாய் இறைவரின் திருவடி நீழலினது அருள் மயமாய்க் குளிர்ந்தது.

அந்த நீற்றறை எப்படி இருந்தது என்பதைத் திருநாவுக்கரசு நாயனார்,

"மாசில் வீணையும், மாலை மதியமும், 

வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், 

மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே, 

ஈசன் எந்தை இணையடி நீழலே." 

என்று பாடி அருளினார்.

இப்பாடலில். ஒரு நயம் புதைந்து கிடக்கிறது. அது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலனுக்கும் குளிர்ச்சியும். இனிமையும் தருகின்ற ஐந்து பொருள்களை இதில் காட்டியதே ஆகும். மாசில் வீணை - காதுக்கு இனிமை, மாலை மதியம் - கண்ணுக்கு இனிமை, வீசும் தென்றல் - மூக்குக்கு இனிமை, வீங்கு இளவேனில் - உடம்பிற்கு இனிமை, தாமரைப் பொய்கையின் நீர் - நாவிற்கு இனிமை.

மேலை நாட்டினரும் கூட, ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் ஒரு பொருளைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அத்தகைய ஒரு பொருளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே திருவள்ளுவ நாயனார் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். அது,  "கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்  ஒண்தொடி கண்ணே உள" என்பதே ஆகும். பெண்ணுக்குச் சொன்னது ஆணுக்கும் ஆகும். இதிலிருந்து மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் பொருள் இவ்வுலகில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணுமே என்று தெரிகிறது. திருவள்ளுவ நாயனார் அத்தகைய ஆணையும் பெண்ணையும் சேர்ந்து வைத்து அவர்களுடைய ஐம்புலனுக்கும் இன்பம் பயக்க வேறொரு பொருளும் உண்டு என்று சுட்டிக் காட்டுகிறார். அப்பொருள்தான் "மக்கட் செல்வம்" ஆகும்.

சிறு குழந்தைகளுடைய மனம், படம் எடுக்கும் கருவியைப் போன்றது. எது தன் எதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னுள் பதித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அது ஆராய்ந்து கொண்டிருக்கும் தன் கண்களால் அகப்பட்டதைப் பதிப்பித்துக் கொள்ளும் உள்ளம் படைத்தது. ஆகவே மக்கட் செல்வத்தை வளர்ப்பதில் மிக்க விழிப்பாக இருத்தல் வேண்டும்.

"தக்கார் தகவு இலர் என்பது, அவரவர் 

எச்சத்தால் காணப் படும்."

என்பது திருவள்ளுவர் வாக்கு. எச்சம் என்பதற்கு எச்சில் உண்மை, குறை, செயல், மிச்சம் பறவை, மலர், பிள்ளை எனப் பல பொருள் உண்டு. பரிமேலழகர் எடுத்துக் கொண்ட பொருள் 'பிள்ளை' என்பது.  "ஒருவர் தக்கவரா அல்லவரா என்பதை அவரவர்களுக்கு மக்கள் உண்மையாலும் இன்மையாலும் அறியப்படும். தக்கார்க்கு எச்சம் உண்டாதலும். தகவு இலர்க்கு இல்லையாதலும் ஒருதலை" எனவும் கூறியிருக்கிறார். 

பெற்றோர்கள் எதையும் மறைத்துச் செய்யவும் மறைத்துப் பேசவும் தெரிந்தவர்கள். குழந்தைகளுக்கு இத்தகைய ஆற்றல் இராது. அவர்கள் வெள்ளை மனத்துடன் வெளிப்படையாக நடக்கவும், பேசவும் செய்வர். அவர்களிடத்துப் பழகி, அவர்களுடைய பேச்சு, நடத்தை பழக்க வழக்கங்கள், குணம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவைகளை அறிந்து, அவர்களது பெற்றோர்கள் தக்காரா? தகவிலரா? என்பதை நன்கு அறியலாம் என்ற திருவள்ளுவரது கருத்து மிக அழகானது. 

"இளமையில் கல்" என்பது தமிழ்ப் பாட்டியின் அறிவுரை. பிள்ளைகளைப் படிக்க வைப்பது பெற்றோர்களின் கடமை. கல்வி பயின்று வரும்பொழுது குழந்தைகளின் மனப் போக்கை அறியவேண்டும். அவற்றின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்குரிய கல்வியையே கற்பிக்கவேண்டும். குறிக்கோள் இல்லாத கல்வி பயனற்றது. அது செல்லவேண்டிய இடத்தைக் குறியாமல் சாலையில் நடந்துகொண்டே இருப்பதைப் போன்றது.

கல்வியின் அருமை பெருமைகளை இளமை நன்கு அறியாது. அவர்களின் விளையாட்டுப் புத்தி கல்வியைக் கெடுத்துவிடும். சில துடுக்குத் தனத்தினால் துள்ளித் திரியும். அத்தகைய பிள்ளைகளின் மீது பெற்றோர் அதிக அக்கரை கொண்டு திருத்தியாக வேண்டும். அன்பும், ஆசையும் கொண்டு திருத்தாமல் விடுவது அவர்களுக்குப் பெருந் தீமை விளைவிப்பதாகும். பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காமல் எவ்வளவுதான் செல்வத்தைக் கொட்டிக் குவித்து வழங்கினாலும் அது அவர்களுக்குப் பயன் தராது.

பிள்ளைகளின் உடல் வளர்வதைப் போலவே அவர்களது அறிவும் வளர்ந்து வரும். நாளுக்கு நாள் இவர்களது சிந்தனையும் வலுப்பெற்று வரும். அதனால் அவர்கள் தங்கள் நோக்கங்களைப் பெருக்கிக் கொண்டே வருவார்கள். அவர்களது முதல் அறிவு கேள்வியாலேயே வளர்கின்றது. ஆகவே, நமக்கு எவ்வளவு தொல்லைகள் இருந்தாலும் அமைதியாக இருந்து, குழந்தைகள் கேட்கும் வினாக்களுக்கு எல்லாம் விடை கூறியாக வேண்டும். விளையாட்டிற்காகவும் பொய் சொல்லக் கூடாது. வேடிக்கைக்காகவும் ஏமாற்றக் கூடாது. எதையும் கூறி அச்சுறுத்துதல் ஆகாது. சிற்றோடையில் ஊறி ஒடும் தெளிந்த நீரைப் போல அவர்கள் உள்ளத்தில் அறிவு தானாகச் சுரந்து வழியும். அதனை வளர்க்கப் பெரிதும் முயலவேண்டும். அதைத் தடைப் படுத்தாமல் இருந்துவிட வேண்டும். பழமையைப் புகுத்தினாலும் பகுத்தறிவு கொண்டு புகுத்தவேண்டும். "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே; போனால் சாத்திரத்திற்கு ஆகாது” என்று கூறி அச்சுறுத்துவதை விட, "இரண்டு கழுதைகளுக்கு மத்தியில் போகாதே. போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்"  என்று கூறுவது நலம் தரும். இந்த முறையானது குழந்தைகளின் அறிவை வளர்க்கப் பெருந்துணை செய்யும். 

பழங்காலத் தாய்மார்கள் குழந்தைகளின் உடலை, அறிவை மட்டும் வளர்த்து வரவில்லை. அவர்களின் வீரத்தையும் வளர்த்து வந்தார்கள். பொன்முடியார் என்பவர் மறக்குடியில் பிறந்து  நல்லிசைப் புலமை பெற்ற பெருமாட்டியார். மக்கள் நல்லொழுக்கம் உடையவராய் இருத்தல் வேண்டும் என்ற நோக்கங்கொண்டவர்.  மறக்குடி மகள் ஒருத்தியின் கூற்றில் வைத்துப் பொன்முடியார் பின்வருமாறு பாடி உள்ளார்.

"ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." --புறநானூறு.

இதன் பொருள் ---

மகனைப் பெற்று வளர்த்து விடுதல் எனது முதற் கடமையாகும். அவனை நற்பண்புகளால் நிறைந்தவன் ஆக்குவது தந்தைக்கு உள்ள கடமையாகும். அவனுக்கு வேண்டும் வேலை வடித்துக் கூரிதாக்கித் தருவது கொல்லனது கடமையாகும். நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும். விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கு அரிய போரைச் செய்து, பகைவரது யானைகளைக் கொன்று வென்று மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும்.

குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பித்தலில், பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது இங்கே அறிவுறுத்தப்பட்டது. வெற்றுக் கல்வியைத் தருவதை விட, தொழிற்கல்வியைத் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கும் கல்வியைத் தருவது அரசின் கடமை.

பழந்தமிழர்கள் தமது மக்களின் உடல், அழகு, அறிவு, ஆற்றல், வீரம் ஆகியவற்றை வளர்ப்பதைவிட அவர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதையே முதற்கடமையாகக் கொண்டிருந்தார்கள். அதனை, "ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்றும், "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை" என்றும் "ஒழுக்கம் விழுப்பம் தரும், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" என்றும் வரும் திருவள்ளுவர் திருவாக்கால் நன்கு அறியலாம்.

தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்த தமிழாசிரியர்கள், தமது மாணவர்க்கு நல்லொழுக்கத்தை வளர்க்கப் பின்வரும் கருத்து அமைந்த பாடல்களை அக்காலத்தில் சொல்லித் தருவது உண்டு.

(1)  இந்திரர் அமிர்தமே கிடைத்தாலும், அது மிகச் சுவையானது, நாமே உண்டு மகிழலாம் என்று சான்றோர் தனித்து உண்பது இல்லை. பழிச் செயலால் இவ்வுலகமே வருவதானாலும் அதைக் கொள்வதில்லை. புகழ் பெறுவது என்றால் தமது உயிரையும் கொடுப்பர்.

(2) பெற்ற தாய் பசித்திருக்கப் பார்ப்பது, மகனுக்குப் பெரிய இழிவு. இருப்பினும் சான்றோர்களால் பழிக்கப்பட்ட செயல்களைச் செய்து தாயின் பசியைப் போக்க எண்ணுதல் கூடாது.

(3) சுமந்து நொந்து பெற்ற தாய் பசித்து இருக்க, பிராமண போஜனம் செய்து பெருமை தேடிக் கொள்ளக் கூடாது.  

(4) உயிரை இழப்பதா? மானத்தை இழப்பதா? என்ற ஒரு நிலை வந்தால், உயிரை இழந்தேனும் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில், உடல் நிலையாமையை உடையது. மானம் என்றும்  நிலைத்து நிற்பது.

ஒருவன் பெறவேண்டிய பேறுகளில், அறிவறிந்த நன்மக்களைப் பெறுவதே சிறந்த பேறு என்பதால், "பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை, அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்றார் திருவள்ளுவ நாயனார். பண்புடைய நன்மக்களைப் பெற்ற ஒருவனது குடும்பத்தை, ஏழு தலைமுறை ஆயினும் துன்பம் சென்றடையாது என்பதைக் காட்ட, "எழுமை எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்று அருளினார். தம் புதல்வரைத் தமது பொருள் என்றும், தன் மக்களின் பொருள் அவரவர் செயலைப் பொறுத்தது என்றும் அறிவுறுத்த, "தம் பொருள் என்ப தம் மக்கள், அவர் பொருள் தம்தம் வினையால் வரும்" என்றார். தம் மக்கள் சிறுகையால் குழப்பிய கூழ் அமுதத்தினும் மிக இனிமை பயப்பதாக இருக்கும் என்னும் அருமையை "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்" என்னும் திருக்குறளின் வழி காட்டினார். யாழின் ஒலியும், குழலின் ஓசையும் இனிமையாய் இருக்கின்றன என்று கூறுபவர்கள், தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டவர்கள் அல்லர் என்பதை, "குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்னும் திருக்குறளில் காட்டினா். தன் மகனைச் சிறந்த அறிஞன் எனச் சான்றோர்களால் கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை  விடப் பெருமகிழ்ச்சி அடைவாள் என்பதை, "ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும், தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்னும் திருக்குறளால் காட்டினார். தான் பெற்ற பிள்ளை தன்னைவிட அதிக அறிவைப் பெற்று விளங்குவது (தமக்கு மட்டும் அல்லாது) பிறருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும் என்பதை, "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது" என்று நிறுவினார். ஒரு நல்ல தந்தை தன் மகனுக்குச் செய்யும் பேருதவி அவனைக் கல்வி, அறிவு, ஒழுக்கம் உள்ளோரின் அவையிலே முதன்மையாக இருக்கும்படி செய்தல் வேண்டும் என்பதை, "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்று அருளினார். ஒரு நன்மகன் தன் தந்தைக்குச் செய்யும் பேருதவி,  'இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் புரிந்தானோ' எனப் பிறர் கூறும்படி நடத்தலே  என்பதை, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான்கொல் என்னும் சொல்"  என்று அருளினார்.

பின்வரும் பாடல்களின் கருத்தை உள்ளத்தில் கொண்டால், "புற்று ஈசல் போலப் புலபுல எனக் கலகல எனப் புதல்வர்களைப் பெறுவீர்" என்று பட்டினத்தார் நொந்து கொண்டபடி ஆகாமல், அறிவார்ந்த நன்மக்களைப் பெறுவதின் அருமை விளங்கும்:

"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்

குலமுழுதும் நன்மை உண்டாம், 

அன்றி, அறிவு  இல்லாத பிள்ளை ஒரு

நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

ரே! சொன்னேன் வருடந் தோறும் 

பன்றிபல ஈன்றும் என்ன, குஞ்சரம் ஒன்று

ஈன்றதனால் பலன் உண் டாமே". ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் --- 

திருச்சிற்றம்பலத்திம் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளும் பெருமானே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவவரே! பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளைப் பெற்றெடுத்தாலும் பயன் என்ன?,  யானையானது ஒரு கன்றை பெற்றாலும் மிக்க பயன் உண்டாகும். அதுபோலவே, நலம் தரும் பிள்ளை ஒருவனைப் பெற்றாலும் அவனது மரபுக்கு எல்லாம் நலம் உண்டாகும். அல்லாமல், அறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை விளையுமா? (இல்லை).

  குலம் முழுதும் நன்மை உண்டாகும் என்றார். "எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்னும் திருவள்ளுவ நாயானர் அருள் வாக்கின்படி, குற்றமற்ற நல்லமகன் ஒருவன் பிறந்துவிட்டால், எழுகின்ற பிறவி எல்லாம் தீயவை தாக்கமாட்டாது.


"பொற்பு அறிவு இல்லாத பலபுத்திரரைப் பெறலின்,ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்று ஆமே, ---  பொற்கொடியே!

பன்றிபல குட்டி பயந்ததனால் ஏது பயன்

ஒன்று அமையாதோ கரிக் கன்று ஓது". ---  நீதிவெண்பா

இதன் பொருள் ---

பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ?  நீ சொல். அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவுள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் நலமாகும்.

(பொற்பு - அழகு, பொலிவு, மிகுதி. பொற்பு அறிவு - நல்ல அறிவு. பயத்தல் - ஈனுதல். கரி - யானை.)



கற்பன விட்டேன் - கழல் பணிந்தேனே

 



கற்பன விட்டேன், கழல் பணிந்தேனே.

-----


உடலுக்கு உறுதியைத் தந்து, அதனைப் பேணுவதற்காக உணவை உண்ணுகின்றோம். உண்ணும்போது, உடலுக்கு உறுதியைத் தந்து, உள்ளத்து உணர்வைத் தெளிவிக்கின்ற உணவையே உண்ணவேண்டும். சுவை கருதி, கண்ட கண்ட உணவை எல்லாம் உண்டால் கேடு நிச்சயம். நாம் உண்ணும் உணவானது, மூன்று வகைகளில் செயல்படும். ஒன்று, உடலுக்கு வளமையைத் தரும். உள்ளத்தில் நல்லுணர்வை மிகுக்கும். எஞ்சியது சக்கையாகக் கழியும். உடலுக்கு வளத்தைத் தந்து, உள்ளத்தில் நல்லுணர்வு மிகவில்லையானாலும், உண்ட உணவு செரிமானம் ஆகி, சக்கையானது கழியாமல் இருந்தாலும் நல்லதல்ல. 


கள்ளை விரும்பி ஒருவன் உண்பானானால், அவனது உடல் தளர்கின்றது. உள்ளம் நல்லுணர்வை இழக்கின்றது. எஞ்சியது சிறுநீராக வெளியேறுகின்றது. அதுபோலவே, நல்ல உணவை உண்டால், அது உடலை வளப்படுத்தி, உணர்வைச் செம்மைப்படுத்தும்.


அதுபோலத்தான், நல்லறிவைப் புகட்டுகின்ற நூல்களை ஓதி, நல்லறிவு பெறுதல் வேண்டும். அட்டைப் பகட்டுடன் வெளிவந்து அறிவை மயக்குகின்ற நூல்களைப் படித்தல் கூடாது. அறிவு விளக்கம் பெறவேண்டும் என்பதற்காகவே, கல்வியைக் கற்கின்றோம். கற்ற கல்வியைப் பழுதற ஓதி, தெளிவு பெற்று, அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு, விளக்கிக் கொள்ளவும் வேண்டும். கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் மேன்மை பெற்ற பெரியோரை நாடி இருந்து, கல்வியின் பயனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அறிவு விளங்கவில்லையானால், கற்ற கல்வியால் பயன் இல்லை.


பறவைக்குச் சிறகு போல், மனிதனுக்குக் கல்வி தேவைப்படுகின்றது. கல்வி அறிவு இல்லாதவன் சிறகு இழந்த பறவை போல, வலிமை இழந்து மடிவான். கண் இருந்தும், குருடனாய், காது இருந்து செவிடனாய், கால் இருந்தும் முடவனாய், உயிர் இருந்தும் சடமாய் இழிந்து போவான்.


பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும். ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம். உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன  அருள் நூல்களும், ஞான சாத்திரங்களும், தோத்திர நூல்களும் ஆகும். அவை நமது அறவை விளக்க வந்தவை.  நூல்களை ஓதுவதன் பயன் வீடுபேற்றை அடைவதே ஆகும். எனவே தான், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்றது நன்னூல்.


அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர். 


அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும், அறிவை மயக்கும் நூல்கள் பல.  அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல்,  ஆன்றோர்கள் அருளிய கூறிய அறிவு நூல்களைப் படித்து நலம் பெறுதல் வேண்டும்.


திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக".  இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”. "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.


பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.


"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திரு உடையாரே பிறவியை

நீக்கும் திரு உடையார்."


இதன் பொருள் ---


பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு ஏற்ற, வீட்டுலகினை உடையவர் ஆவர்.


பொன்னை வாங்குவோன், அதனை நிறுத்தும், அறுத்தும், சுட்டும், உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடி,  பிறவியினை நீக்கும்படியான உண்மை நூல்களைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். கண் சென்று பார்த்ததையே விரும்பி, அதுவே உண்மை எனக் கற்றால், உண்மை நூலை அடைய இயலாது.


கற்றதனால் ஆய பயன் கடவுளைக் கருதுவதே ஆகும். கற்றதும் கேட்டதும் கொண்டு, கற்பனை கடந்த காரணனைக் கசிந்து உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது, சிறிது படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்கு உற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடும் வம்பரை இடித்துரைக்கின்றனர் தாயுமான அடிகளார்.


"கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக?

கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்

குற்றம்அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு

குணம் குறி அற்று இன்பநிலைகூட அன்றோ."  --- தாயுமானார்.


"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணையல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார் இல்." --- நாலடியார்.


ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக் கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.


வாய் என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது. உணவை உண்டு உயிரை வளர்க்க இறைவன் தந்த கருணை அது. பிற உயிர்கள் எவற்றாலும் பேச முடியாது. வாயினால் உணர்வை வெளிப்படுத்த முடியாது. அது மனிதப் பிறவி ஒன்றுக்கே கிடைத்தது. அந்த வாயைக் கொண்டு, உணவை உண்டு உடல் கொழுப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதும், வீண் பேச்சுக்களைப் பேசி வினையைப் பெருக்குவதும் கூடாது. இறைவன் திருப்புகழைப் பாடித் துதிப்பதற்கு அமைந்த கருவி வாய் ஆகும் என்பதை உணர வேண்டும்.


கசப்பு, உறைப்பு, துர்ப்பு, குளிப்பு, இனிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தவறாமல் காமம் வெகுளி மயக்கங்களை வென்ற இறைவனுடைய சிவந்த திருவடிகளை எப்போதும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாக்கு ஆகும் என்கின்றது "அறநெறிச்சாரம்".


மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினையோ அல்லது இழிவினையோ அடைகிறது. மனம் ஒயாது தொழிற்படும் இயல்பினை உடையது. உறக்கத்தில் கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில், அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.


மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம். நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.


இறைவனை நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோ, எப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது. இந்த நாள் நம்முடைய நாள். எனவே, விடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.


இந்த ஞானமானது, நூல்களைப் படிக்கத் தொடங்கிய உடனே வந்து விடாது. "கல்வி கரை இல" என்றார் ஔவையார். கல்வி என்பது கரை இல்லாத கடலைப் போன்றது. கடலில், பலவகையான உயிரினங்கள் வாழ்வது போல, கல்வி என்னும் கடலில் பலவகையான நூல்கள் உள்ளன. நூல்களிலும் பல பிரிவுகள் உள்ளன. எல்லை காணப்படாததாய் உள்ளதால், அவற்றின் எல்லையைக் கண்டுவிட வேண்டும் என்னும் வேட்கை மீதூரப்பட்டு, பல நூல்களையும் ஆரய்ந்து கற்கத் தோன்றும். கடல் நீரை உண்டால், தாகவிடாய் தீராது. அது போல நூல்கடலால், அறிவு விடாய் தீராது. எனவே, "கல்வி என்னும் பல்கடல் பிழைத்து" என்றார் மணிவாசகர்.  கற்ற கல்வியைக் கொண்டு வாதம் புரிந்து மலைத்தல் கல்வியாளர்களின் நிலை. அதிலிருந்து தப்பிப் பிழைத்து உய்யவேண்டும் என்பதால் இவ்வாறு கூறினார்.


கல்வியாளரகள் தான் இப்படி என்றால். சமயவாதிகள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,


"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.


"சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்,

     சமய பஞ்ச பாதகர் ...... அறியாத,

தனிமை கண்டது ஆன, கிண் கிணிய தண்டை சூழ்வன,

     சரண புண்டரீகம் ...... அது அருள்வாயே."


என்றார் அருணகிரிநாதப் பெருமான்.


சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும், கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்கு உரியவை. வாதம் புரிவதற்கு அல்ல.


பதிஞானம் என்னும் இறைஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமே உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டும், கலகமிட்டுத் திரிவர். எனவே, "கற்றாரை யான் வேண்டேன்" என்றும், "இதுவரையில் கற்றதும் போதும்" என்றும், புலம்பினார் மணிவாசகப் பெருமான்.


உற்றாரை யான்வேண்டேன்; ஊர்வேண்டேன்; பேர்வேண்டேன்;

கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனியமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே.


இதன் பொருள் ---


திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற கூத்தப்பெருமானே! உறவினரை நான் விரும்பவில்லை. வாழ்வதற்கு ஊரை விரும்பவில்லை. புகழை விரும்பவில்லை. (வேறு பற்று எனக்கு இல்லை) கல்வியை மட்டும் கற்றவரை நான் விரும்பவில்லை. கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடிக்கே, கன்றை உடைய பசுவினது மனத்தைப் போல, கனிந்து உருகுவதை நான் உன்பால் விரும்புகின்றேன்.


கலைஞானம் என்னும் நூல் அறிவின் பயன், அனுபவ ஞானம் என்னும் அனுபூதி ஞானத்தைப் பெறுவதே ஆகும். அதனைப் பெற முயலாது, கலைஞானத்தை (நூல் அறிவை) மட்டும் விரும்பிப் பயில்கின்றவர்களை "வேண்டேன்" என்று கூறினார். அந்த மேலான அனுபவம் இறையருளால் தமக்குக் கிடைத்து விட்டதால், இனி தமக்கு நூல் அறிவு தேவையில்லை என்பதால், "கற்பனவும் இனி அமையும்" என்றார். தாய்ப் பசுவானது, தன் கன்றினை நினைந்து கதறுவது போல, தான் இறைவனை நினைந்து கதறி உருக வேண்டும் என்பார்,  "கற்றாவின் மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே" என்றார்.


நுண்ணிய அறிவைப் பெற்றவர்க்கு, நூல்களை ஓதவேண்டிய அவசியம் இல்லை என்பதை,


"கோலும், புல்லும், ஒருகையில் கூர்ச்சமும்,

தோலும் பூண்டு துயரம் உற்று என்பயன்?

நீல மாமயி லாடு துறையனே

நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே."


என்னும் பாடலால் அறிவுறுத்துகின்றார் அப்பர் பெருமான்.


மூன்று கிளைகளை உடைய கோல் யோகதண்டம் எனப்படும். அந்த யோகதண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு, தருப்பையும்,  தருப்பைப் புல்லால் ஆன கூர்ச்சத்தையும் வைத்துக் கொண்டும், மான் தோலை உடுத்துக் கொண்டும் என்னதான் தவம் செய்தாலும், தான் ஓதிய நூல்களின் பொருளை உணர்ந்து தெளியவேண்டும். அவ்வாறு தெளியாத போது துயரமே மிஞ்சி இருக்கும். நுண்மையான அறிவைப் பெற்றவர்களுக்கு நூல் தேவையில்லை. அதுபோல, மெய்ப்பொருளை உள்ளவாறு நுணுகி அறிந்த மெய்ஞ்ஞானிகளுக்கு, அந்த சாதனங்கள் தேவையில்லை என்கின்றார் அப்பர் பெருமான்.


எத்தனை நூல்களைக் கற்றாலும், அவை உணர்த்துவது, உயிரானது அஞ்ஞான இருளில் இருந்து துன்பத்தில் உழலுவதில் நீங்கி, ஞானத்தைப் பெற்றுப் பேரின்ப வாழ்வைப் பெறவேண்டும் என்பதுதான். அதனைத் தெளிந்துகொள்ள, பல நூல்களைத் தான் கற்கவேண்டும் என்பதில்லை. கற்கின்ற ஒரு நூலை, ஐயம் திரிபு அற ஓதி, உணர்ந்தாலே போதும்.


"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் மெய்த்தன்மை காண்பது அறிவு" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார். மெய்ப்பொருளை உணர்ந்து, பொய்ப்பொருள்களில் இருந்து விடுபட்டு, மெய்யறிவு பெறுவதே ஆன்மா பெறவேண்டிய உன்னதமான நிலை.


குருவருளால் இது நிகழும் என்பதை,


"உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

பற்றிய மாயா படலம் எனப் பண்ணி,

"அற்றனை நீ" என்று அடிவைத்தான் பேர்நந்தி

கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே."


என்னும் திருமந்திரத்தின் மூலம் அறிவுறுத்தினார் திருமூல நாயனார்.


வினைப் பயனால் உண்டானது இந்த உடம்பு. ஆணவம் முதலான மலங்கள் உடம்பு எடுத்த ஆசையால் உண்டாயின. இவையெல்லாம் அறிவை மறைக்கும் மாயத் திரை என்பதை உணரச் செய்து, " நீ அவை எல்லாவற்றையும் நீக்கி விட்டாய்" எனக் கூறி, சிவபெருமான் குருவடிவாக, என் தலைமேல் தனது திருவடிகளைச் சூட்டி அருளினார். அந்த நிலையில், இதுவரை நான் கற்றதெல்லாம் பொய் என்று உணா்ந்து, அவற்றை எல்லாம் விட்டேன். குருவடிவான இறைவன் திருவடிகளைப் பணிந்தேன். 


மணிவாசகப் பெருமான், "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்றும், திருமூல நாயனார், "கற்றன விட்டேன், கழல் பணிந்தேனே" என்றும் பாடி அருளியதன் உண்மை இதன் மூலம் விளங்கும்.


சரி. இந்த நிலை வாய்க்க என்ன செய்யவேண்டும்? உண்மை அறிவு விளங்கும் நூல்களைத் தேர்ந்து கற்று, கற்றாரை அணுகி இருந்து, உண்மை ஞானத்தைப் பெற முயலவேண்டும். இது மட்டும் போதுமா? என்றால், திருமூலர் மேலும் ஒரு வழியைக் கூறி அருளுகின்றார்.


"விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்;     

விளக்கினின் முன்னே வேதனை மாறும்;     

விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்,  

விளக்கில் விளங்கும் விளக்கு அவா் தாமே."    


இதன் பொருள் ---


கற்ற கல்வி அறிவாலும், அதனால் விளைந்த ஆன்ம அறிவாலும், மயக்கம் கொண்டுள்ள உங்களின் உயிர் உணர்வாகிய திரியில், திருவருள் ஞானம் என்னும் சுடரைக் கொளுத்தி, ஞான விளக்கை ஏற்றுங்கள். அந்த ஒளியில், ஒளி மயமாக, எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகின்ற, ஞானவெளியில் விளங்கும் பரம்பொருளைத் தரிசியுங்கள். அந்தத் திருவருள் ஒளியின் முன்னர், இதுவரையில் உங்களுக்கு உண்டாகி இருந்த துன்பங்கள் அனைத்தும் அற்று ஒழியும். இவ்வாறு பசுஞானமாகிய ஆன்ம அறிவை, இறைஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே, அந்த விளக்கின் உள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.


புறத்திலே உள்ள இருள் அகல விளக்கை ஏற்றுவது போல, அகத்திலே உள்ள, துன்பத்தையே விளைக்கின்ற அஞ்ஞான இருள் அகலுமாறு, இறைவனது அருள் விளக்கை ஏற்றுங்கள். அந்த விளக்கின் முன்னால் உங்களுடைய வேதனைகள் அனைத்தும் தொலைந்து ஒழியும்.


"அலையும் மனத்தைப் பிடித்து வைத்து, அதில்

உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்

அழகு விளக்கைப் பதித்து வைத்து, அதும் ... அவியாதே

அறிவை உருட்டித் திரட்டி வைத்து, அதில்

அமிர்த குணத்தைத் துதிக்க வைத்து, என்னை

அடிமை படைக்கக் கருத்தில் முற்றிலும் நினையாயோ?"


என்று அருணகிரிநாதப் பெருமான் பாடிய திருப்புகழ்ப் பாடல் வரிகள் அருமையாக உணர்த்துவதை அறிந்து இன்புறுக.


கல்விச் செல்வம்


கல்விச் செல்வம்

-----

செல்வங்கள் பலவற்றுள் கல்வியும் ஒருவகை. இதனை, "கேடு இல் விழுச் செல்வம்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். "கேடு இல்லாத சிறந்த செல்வம்" என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும் என்பது இதனால் விளங்கும். பொன், பொருள், நிலம் முதலிய பிற செல்வங்கள் நீராலும் நெருப்பாலும் அழியக் கூடியன. திருடு போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால், கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது, வெம்மையான நெருப்பில் வேகாது, கொள்ளையிட முடியாது, கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகிலுள்ள செல்வங்களில், பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ள முடியாத ஒரே செல்வம் கல்விச் செல்வமே ஆகும்.

"வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால்

வேகாது, வேந்த ராலும்

கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும்

நிறைவு ஒழியக் குறைபடாது,

கள்ளத்தார் எவராலும், களவாட

முடியாது, கல்வி என்னும்

உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும்

பொருள்தேடி உழல்வது என்னே."

என்னும் தனிப்பாடல் இதனை விளக்கி நிற்கும்.


"கடல் உலகில் உற்றபொருளுக்கு உள்ளே நன்மைதரு

கல்வி நிலைபெற்ற பொருளாம்,

கனலினால் உருகாது, புனலினால் கரையாது,

கள்ளரால் திருட ஒ(ண்)ணாது,


திடமான ராசாதி ராசராலும்.அதைத்

தீண்டிச் சிதைக்க ஒ(ண்)ணாது,

செயல்மிக்க மாதரால் சேதம் ஆகாது,ஒருவர்

செலவிடில் குறைவு உறாதாம்;


அடம் மிகு சகோதரர்க்கு இடம் அது கொடாது, அதனை

அளவிடவும் முடியாது காண்,

அப் பொருளினைப் பெறாது இப்புவியில் அலைகின்ற

அற்பர் உறு பயன் என்கொலோ? --- தனிப்பாடல்.

ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. ஆனால், கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒரு மன்னன் இடத்திலுள்ள செல்வங்கள் அனைத்தினுக்கும் மேலாக, கற்றவன் இடத்திலுள்ள கல்விச் செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும் என்பதை அறிவுறுத்த,

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் 

தன்தேயம் அல்லால் சிறப்பு இல்லை, கற்றோர்க்குச் 

சென்றஇடம் எல்லாம் சிறப்பு"

ஔவைப் பிராட்டியார் "மூதுரை" என்னும் நூலில் இவ்வாறு பாடி உள்ளார்.

பிற செல்வங்கள் ஒருவனிடம் சேர்ந்தால், அவனிடம் நிலைத்து நில்லாமல் அவனை விட்டு விலகி ஓடிப்போய் விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால் வாழ்விலும் தாழ்விலும் மட்டுமல்லாமல், சாவிலும் உடனிருந்தே அழியும். பொருட்செல்வத்தை அதனைப் பெற்றவன் வழிநடத்த வேண்டும். ஆனால், கல்விச் செல்வம் தன்னை உடையவனை வழி நடத்தும். 

கல்விச் செல்வத்தைப் பெற்ற குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்குச் சில தலைமுறை வரையிலாவது அந்த மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். பிற செல்வங்களைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அச் செல்வம் அடுத்த தலைமுறை வரையிலாவது நிலைத்திருக்கும் என்பது உறுதியில்லை.

பிற செல்வங்களைத் தேடிப் பயன் பெற்று மகிழ்ச்சியோடு வாழவேண்டுமானால், ஒருவன் கல்விச் செல்வத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். கல்விச் செல்வம் ஒன்று இல்லாமல் வேறு எத்தகைய செல்வத்தை ஒருவன் புற்று இருந்தாலும், அதனால் முழுப்பயனை அடைய முடியாது. துன்பத்தை அடையவும் நேரிடும். 

கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம் என்கிறது நாலடியார்,

"வைப்புழிக் கோள்படா; வாய்த்து ஈயின் கேடுஇல்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற."

சேர்த்து வைத்த கல்வியறிவை யாரும் திருடிக் கொண்டு போய்விட முடியாது. பிறருக்கு வழங்குவதாலும் கல்விச் செல்வமானது குறையாமல் வளரவே செய்யும். மிகச் சிறந்த எலிமை மிக்க அரசர்களானாலும் ஒருவனது கல்விச்செல்வத்தைப் போரிட்டுப் பெற்று விட முடியாது. தனக்குப் பின்னர் வரும் சந்ததியினருக்கு மிச்சம் என ஒருவன் வைத்துவிட்டுச் செல்ல வேண்டியது கல்விச் செல்வமே தவிர வேறுஏதும் இல்லை.

செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது நாம் காணக் கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதான் நிற்பது காணச் சகியாத காட்சியாகும். உழைக்கும்போது மாடுகளின் முன்னே மக்களை வைத்து ஒப்பு நோக்குதலும் உண்டு. 'மாடுபோல் உழைக்கின்றான்' என்று உழைப்பாளி ஒருவனைக் குறிப்பிடுவது உலகியலில் காணலாம். ஆனால், கல்லாதவன் முன்னே கற்றவரை வைத்து ஒப்பு நோக்குதல் எங்கும் எப்போதுமில்லை. விதைக்காதபோது விளைவு இல்லை. சமைக்காதபோது உணவு இல்லை.  உழைக்காதபோது பலனும் இல்லை. அதுபோலவே, கல்லாதபோது ஒருவனுக்குச் சிறப்பும் இல்லை.

தோண்டாத மணலுக்குள் நீர் மறைந்திருப்பது போலக் கல்லாதார் உள்ளத்தில் அறிவும் மறைந்திருக்கிறது. தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல் கற்கக் கற்க அறிவும் சுரக்கிறது. எந்த அளவிற்குத் தோண்டினாலும் அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் காணப்படுவது போல, எந்த அளவிற்குக் கற்றாலும் அந்த அளவிற்கு அறிவும் நிரம்பிக் காணப்படும். "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார்.

எல்லோரிடத்திலும் அறிவு புதைந்து உள்ளது. அறிவு இல்லாதவர் என்று எவரும் எங்கும் இல்லை. ஆனால், அதை  விளங்கச்செய்ய வேண்டும். கல்விச்செல்வத்தாலேயே ஒருவனது அறிவு விளக்கம் பெறும். இது ஒன்று. மற்றொன்று பட்டறிவு எனப்படும் அனுபவம். பட்டுப் பட்டு அறிவை வளர்க்கப் பல ஆண்டுகள் வேண்டும். ஆனால் கல்வி கற்று அறிவை வளர்க்கச் சில நாட்கள் போதும்.

கல்விச் செல்வம் கடல் போன்று பரந்து விரிந்ததொரு பெருஞ்செல்வம் ஆகும். ஒருவன் வாழ்நாள் முழுதும் படிப்பினும் அதனை முழுதும் பெற்றுவிட முடியாது. இவ்வுலகிலுள்ள மக்களின் கல்விச் செல்வத்தை நூறில் ஒரு பங்கு பெற்றவர் ஆயிரத்தில் ஒருவர்கூட இல்லை எனலாம். "கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு" எனக் கலைமகள் கூறுவதாகத் தெய்வத் தமிழ்மகள், ஔவைப் பிராட்டி கூறுகிறார்.

கல்லாத மக்களிடத்தும் சில பொழுது அறிவு காணப்படும். எனினும், அது குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் கலங்கிய நீர் போன்றது. கற்றவருடைய அறிவு ஆறுகளில் ஊறிச் சிலுசிலுத்து ஒடுகின்ற தெளிந்த நீரைப் போன்றது. கல்வி வேறு, அறிவு வேறு என்பதை ஒப்புக் கொண்டால், கற்றவனுடைய அறிவு வேறு, கல்லாதவனுடையறிவு வேறு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கற்றவரும் கல்லாதவரும் மக்களே. கற்களிலும், வயிரக்கல், கருங்கல் என்று இருப்பது காணலாம். கற்றவர்கள் வயிரக்கல் போன்றவர்கள். கல்லாதவர்கள் கருங்கல் போன்றவர்கள்.

"என் மகன் படிக்கவில்லை. எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன. அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஒருவன். அதைக்கேட்ட கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்கள், "இனி இரண்டு என்று எவரிடமும் கூறாதே, உனக்கு மூன்று எருமைகள் உள்ளன என்றே கூறு" என்று கூறினாராம். பாவம் கல்லாத மக்கள் பொல்லாத விலங்குகள் என்பது அவரது கருத்து போலும்.

கல்விச் செல்வத்தை முதுமையில் முயன்றாலும் பெற முடியாது. அது இளமையில் பெறவேண்டிய ஒன்று. முதுமையில் ஒருவன் பெறவேண்டிய செல்வங்கள் அனைத்திற்கும் இது உற்ற துணையாக இருக்கும். முதுமையிற் கல்வி முயன்றாலும் வராது.. வந்தாலும் தங்காது. 

பதின்பருவத்தில் இருக்கிற பிள்ளைகள், ஏதேனும் ஒரு செயலைக் கவனக்குறைவின் காரணமாக ஒழுங்காகச் செய்யாமல் குழப்பிவிடும்போது, ‘இன்னும் சின்னப் பிள்ளையா நீ? இவ்வளவு வளர்ந்தும் பொறுப்பு வரவில்லையே?’ என்று பெரியவர்கள் கடிந்து கொள்வார்கள். பெற்றவர்கள், பொறுப்பு என்னும் தலைச்சுமையைப் பிள்ளைகள்மேல் சுமத்தத் தொடங்கும் பருவம் அது. சுமந்து பழகத்தான் வேண்டும். அவ்வாறு பொறுப்பைப் பழக்கிவிடாத பெற்றோரைப் பின்னாளில் பிள்ளைகளே திட்டுவதாக அமைந்தது பின்வரும் பழம்பாடல் ஒன்று.

"அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்தது அல்லால்,

துள்ளித் திரிகின்ற காலத்தில் என்றன் துடுக்குஅடக்கிப்

பள்ளிக்கு வைத்திலனே தந்தை ஆகிய பெரும் பாதகனே."

"என் தந்தை எனக்கு அள்ளி அள்ளிப் பணத்தைக் கொடுத்தார். புத்தாடைகளை வாங்கிக் கொடுத்தார். "நான் பெற்றது பிள்ளை அல்ல, யாருமே காணாத பெரும்பேறு" என்று என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார். நானும் துள்ளித் திரிந்தேன். ஆனால் அவர் எனது துடுக்கை அடக்கவில்லை. பொறுப்பானவனாக வாழ முடியவில்லை. ஒட்டியும் முட்டியும் வாழ ம் க்கவில்லை. அடப் பாதகத் தந்தையே! வெறும் கொள்ளிக்கும் கடனுக்குந்தானா என்னைப் பிள்ளை என்று பெற்றாய்?"

"இளமையிற் கல்" என்பது ஒளவையின் வாக்கு. " பிறவி எடுத்த தனக்குப் பாழ் கற்று அறிவில்லா உடம்பு" என்கிறார் விளம்பி நாகனார். இளமையிற் கல்வியை இழந்தவன், கண்களையும் இழந்தவன் ஆவான். "கற்றவன் முகத்திலிருப்பதே கண்; மற்றது புண்" என்பது திருவள்ளுவ நாயனார் கண்ட உண்மை. 

"கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்" என்பது ஒரு வழக்குமொழி. கண்டதை எல்லாம் படிப்பவன் பண்டிதன் ஆகமுடியாது. அறிவை விளங்கச் செய்கின்ற நல்ல நூல்கள் எவையெவை என்பதைக் கண்டு, அவற்றைப் படித்தால் ஒரு வன் பண்டிதன் ஆகலாம் என்பதே உண்மை. எனவே, அட்டைப் பகட்டுடன், வணிக நோக்கத்தோடு வருகின்ற நூல்களைப் படிக்காமல், மனத் தடுமாற்றத்தைப் போக்கி, நல்லறிவை வளர்க்கின்ற அறிவு நூல்களையே படிக்க வேண்டும். படிக்க வேண்டியவை அறிவு நூல்களே. பொழுதுபோக்குக்காகப் படித்தால், பொழுதுதான் போகும். அறிவு விளங்காது. படித்து அறிந்தவைகளைச் சிந்தித்து உணர வேண்டும். நல்லதைக் கொள்ள வேண்டும். பின் அப்படியே நடக்க வேண்டும். உள்ளத்தில் படிந்து உள்ள கசடுகள் நீங்கத் துணை செய்கின்ற நூல்களையே படிக்கவேண்டும். படித்தவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

"கல்வி" என்னும் அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவன் கற்கவேண்டிய நூல்களைக் கற்வேண்டும்; கற்பனவற்றைக் குற்றம் நீங்கக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்றுத் தேர்ந்தபின், அதற்குத் தகுந்தவாறு ஒழுகுதல் வேண்டும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "கற்க கசடு அறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள்.

அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல, நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால், உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். 

கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும். இதனால், மக்கள் அனைவரும் கற்கவேண்டிய நூல்களைக் கற்கவேண்டும் என்பதும், கற்கும் முறை இது என்பதும், முறைப்படி கற்ற பின்னர் ஒழுகும் முறை இது என்பதும் அறிவிக்கப்பட்டது.

கல்வி என்பதை, அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக்கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம். மக்கள் பிறப்பு சில்நாள், பல்பிணி, சிற்றறிவு உடையவை என்பதால், அவர் எவ்வாறு கற்றல் வேண்டும் என்பது, பின்வரும் நாலடியார் பாடல்களால் தெளியப்படும்.

"கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே, நீர் ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து."   

இதன் பொருள் ---

கல்விகள் அளவில்லாதன. ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சில ஆகும். சற்று அமைதியாக நினைத்துப் பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாய் இருக்கின்றன. நீர் நீங்கப் பாலை உண்ணும் பறவையைப் போல, பொருத்தமுடைய நூல்களைத் தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ள ஆராய்ந்து கற்பார்கள்.

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்."

இதன் பொருள் ---

அளவு அமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பது,  கலகல என்று இரையும் அவ்வளவே அல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் எங்கும் இல்லை.

"இற்றைநாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" என்றும்,  "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும்.

கல்வியின் குறிக்கோள் அறிவை அடைவது மட்டுமல்ல: அன்பையும் அருளையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதும் ஆகும். எனவே, அழியாத கல்விச் செல்வத்தை நமது சந்ததியினர் இளமையிலேயே பெறத் துணை நிற்போம். கற்றதுபோதும் என்று நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாளின் இறுதி வரை கற்றுக் கொண்டே இருப்போம். "ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதைக் கருத்தில் கொண்டு, எக்காலத்தும் அழியாத கல்விச்செல்வத்தைப் பெற்று வாழ்வோம்.

கல்லாமையால் உண்டாகும் கேடுகளை விளக்க, "கல்லாமை" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து, அதன் இறுதியில், அறிவு துலங்கும் நூல்களைக் கற்றவர்களையே மக்கள் என்றும், கல்லாதவர்களை விலங்கு என்றும் காட்டி, "விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருத்தலைக் கருத்தில் கொள்க.


பொது --- 1090. குடலிடை தீதுற்று

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


குடலிடை தீதுற்று (பொது)

முருகா! 

திருவடிப் பேற்றினை அருள வேண்டும்.


தனதன தானத் தனதன தானத்

     தனதன தானத் ...... தனதான


குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்

     குலவிய தோலத் ...... தியினூடே


குருதியி லேசுக் கிலமது கூடிக்

     குவலயம் வானப் ...... பொருகாலாய்


உடலெழு மாயப் பிறவியி லாவித்

     துறுபிணி நோயுற் ...... றுழலாதே


உரையடி யேனுக் கொளிமிகு நீபத்

     துனதிரு தாளைத் ...... தரவேணும்


கடலிடை சூரப் படைபொடி யாகக்

     கருதல ரோடப் ...... பொரும்வேலா


கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்

     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா


சடையினர் நாடப் படர்மலை யோடித்

     தனிவிளை யாடித் ...... திரிவோனே


தனிமட மானைப் பரிவுட னாரத்

     தழுவும்வி நோதப் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


குடல்இடை தீதுஉற்று, இடைஇடை பீறிக்

     குலவிய தோல் அத் ...... தியின் ஊடே


குருதியிலே சுக்கிலம் அது கூடிக்

     குவலயம் வான் அப்பு ...... ஒருகாலாய்


உடல்எழு மாயப் பிறவியில் ஆவித்து,

     உறுபிணி நோய் உற்று ...... உழலாதே,


உரைஅடியேனுக்கு ஒளிமிகு நீபத்து

     உனதுஇரு தாளைத் ...... தரவேணும்.


கடல்இடை சூரப் படை பொடியாகக்

     கருதலர் ஓடப் ...... பொரும்வேலா!


கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்

     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா!


சடையினர் நாடப் படர்மலை ஓடித்

     தனி விளையாடித் ...... திரிவோனே!


தனிமட மானைப் பரிவுடன் ஆரத்

     தழுவும் விநோதப் ...... பெருமாளே.

பதவுரை

கடல் இடை சூரப் படை பொடியாக --- கடலின் இடையே சூரபதுமனுடைய படைகள் பொடிபட்டு அழிய,

கருதலர் ஓடப் பொரும் வேலா --- பகைவர்கள் ஓட்டம் பிடிக்கப் போர் புரிந்த வேலவரே!  

கதிர்விடு வேலைக் கதிரினில் மேவி --- கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ்சூரியனைப் போலத் திருஞானசம்பந்தராய் அவதரித்து,

கலைபல தேர் முத்தமிழ் நாடா --- முத்தமிழ் விளங்கும் தமிழ்நாட்டில் பல கலைகளையும் ஓதாது உணர்ந்தவரே! 

சடையினர் நாடப் படர்மலை ஓடித் தனி விளையாடித் திரிவோனே --- சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலைமலையில் தனியாக ஓடி விளையாடித் திரிந்தவரே!

தனி மடமானைப் பரிவுடன் ஆரத் தழுவும் விநோதப் பெருமாளே --- ஒப்பற்ற இளமான் போன்ற வள்ளிநாயகியை அன்புடன்  தழுவிய அழகு வாய்ந்த பெருமையில் மிக்கவரே! 

குடல் இடை தீது உற்று --- குடல் கெடுதல் அடைந்து,

இடை இடை பீறிக் குலவிய தோல் அத்தியின் ஊடே ---இடையிடையே கிழிபட்டுக் கிடக்கும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலின் ஊடே, 

குருதியிலே சுக்கிலம் அது கூடி --- மகளிர் சுரோணிதத்துடன் விந்துவும் சேர்ந்து, 

குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப் பிறவியில் ஆவித்து --- மண், வான், நீர், ஒப்பற்ற காற்று இவைகளுடன் தீ ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வந்து பிறந்து, 

உறுபிணி நோய் உற்று உழலாதே --- சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து உழலாமல்,

உரை அடியேனுக்கு --- தேவரீரைப் புகழ்ந்து உரைக்கும் அடியேனுக்கு,

ஒளிமிகு நீபத்து உனது இருதாளைத் தரவேணும் --- அழகிய கடப்பமலர்கள் சூடப்பட்டு உள்ள திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

பொழிப்புரை

கடலின் இடையே சூரபதுமனுடைய படைகள் பொடிபட்டு அழிய, பகைவர்கள் ஓட்டம் பிடிக்கப் போர் புரிந்த வேலவரே!  

கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ்சூரியனைப் போலத் திருஞானசம்பந்தராய் அவதரித்து, முத்தமிழ் விளங்கும் தமிழ்நாட்டில் பல கலைகளையும் ஓதாது உணர்ந்தவரே! 

சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலைமலையில் தனியாக ஓடி விளையாடித் திரிந்தவரே!

ஒப்பற்ற இளமான் போன்ற வள்ளிநாயகியை அன்புடன்  தழுவிய அழகு வாய்ந்த பெருமையில் மிக்கவரே! 

குடல் கெடுதல் அடைந்து, இடையிடையே கிழிபட்டுக் கிடக்கும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலின் ஊடே, மகளிர் சுரோணிதத்துடன் விந்துவும் சேர்ந்து,  மண், வான், நீர், ஒப்பற்ற காற்று இவைகளுடன் தீ ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வந்து பிறந்து, சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து உழலாமல், தேவரீரைப் புகழ்ந்து உரைக்கும் அடியேனுக்கு, அழகிய கடப்பமலர்கள் சூடப்பட்டு உள்ள திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

விரிவுரை

கலைபல தேர் முத்தமிழ் நாடா --- 

இது திருஞானசம்பந்தப் பெருமனைக் குறிக்கும். முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக வந்து அவதரித்தார் எனக் கூறுவர். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று அருளினார் அருணகிரிநாதப் பெருமான். பிறப்பு இறப்பைக் கடந்த பரம்பொருள் மனித வடிவம் கொள்வதாக எண்ணுதல் கூடாது. முருகப் பெருமான் திருவருள் பெற்று சாயுசிய நிலையை அடைந்த அபரசுப்பிரமணியங்களுள் ஒன்று திருஞானசம்பந்தராக அவதரித்து எனக் கொள்ளுதல் வேண்டும். திருஞானசம்பந்தப் பெருமானின் அவதார நோக்கங்களுள் ஒன்றாக, "நாவாண்ட பலகலையும் நலம் சிறக்க" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியதைச் சிந்தித்து வந்தித்தல் வேண்டும்.


குடல் இடை தீது உற்று, இடை இடை பீறிக் குலவிய தோல் அத்தியின் ஊடே குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப் பிறவியில் ஆவித்து, உறுபிணி நோய் உற்று உழலாதே --- 

குருதி - இரத்தம். இங்கே மகளிரின் செந்நீரைக் குறிக்கும். ஆணின் வெண்மையான சுக்கில நீரும், பெண்ணின் செந்நீரும் கலந்து கரு உருவாகும்.

உதிரம், தசை, எலும்பு, தோல், நரம்பு, புழு, சீதம், குடல், கொழுப்பு, மயிர், மூளை முதலியவைகள் சேர்ந்து ஒரு உடம்பாக அமைந்துள்ளது.

இதன் அருவருப்பை நமது இராமலிங்க அடிகள் கூறுமாறு காண்க.

புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில் புகுந்து

நான் இருக்கின்ற புணர்ப்பும்

என்பொலா மணியே, எண்ணிநான் எண்ணி

ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு

மயங்கிஉள் நடுங்கி ஆற்றாமல்,

என்பெலாம் கருக இளைத்தனன், அந்த

இளைப்பையும் ஐய நீ அறிவாய். ---  திருவருட்பா.


இதில் தந்தையின் கூறு ---

நாடியும் நாளமும் நவில் இள எலும்பும்

வெள்ளை நீரும் வெள்ளிய பற்களும்

தலைமயிர் நகமும் தந்தையின் கூறாம்.


தாயின் கூறு ---

சிறிய குடலும் சிவப்பு நீரும்

மருவிய கொழுப்பும் மன்னும் ஈரலும்

நுவல் நுரையீரலும் நோக்கும் இதயமும்

தசையும் நிணமும் தாயின் கூறாம்.


உயிர்க்குணம்  ---

அறிவும் ஆக்கமும் ஆழ்ந்த நோக்கமும்

இன்பமும் துன்பமும் இனிய வாழ்க்கையும்

உயிரின் குணம்என உரைப்பர் நூல்வலோர்.


உணவின் சாரம்  ---

உடலின் அமைப்பும் ஒள்ளிய நிறமும்

ஆடலும் ஆண்மையும் அமைந்த நிலையும்

நாணமும் மடமும் நான்ற கொள்கையும்

உண்வின் சாரம் என்று உரைப்பர் நூல்வலோர். --- உடல்நூல்.

"ஐந்து விதம் ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை" எனத் தாயுமான ஆடிகளார் கூறியிருப்பதும் காண்க. "பஞ்சபூத உடல் அது சுமந்து" என்று அருணகிரிநாதப் பெருமான் கூறி இருப்பதும் அறிக.

உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே. எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசி, காமம், பிறவி என அறிக. 

பசி உடம்பைப் பற்றியது. 

காமம் உள்ளத்தைப் பற்றியது. 

பிறவி உயிரைப் பற்றியது.

பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்ல உரையில் அடங்கா. பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள்தாம் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை என்ன என்ன உருவில் உட்செலுத்துகின்றனர்?. பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம், குலம், கல்வி, வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்." --- நல்வழி.

பசி நோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன?  பசி நோய் மிக்கபோது கண்ணொளி மங்குகின்றது. கரசரணாதிகள் தடுமாறுகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள்.  அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.

"எட்டரும் பொருளே! திருச்சிற்றம்பலத்தே

இலகிய இறைவனே! உலகில்

பட்டினி உற்றார், பசித்தனர், களையால்

பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில், எந்தாய்!

என்உளம் நடுங்குவது இயல்பே." ---  திருவருட்பா.

பசி நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள். பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி" என்றார்.  

"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புஉழி". --- திருக்குறள்.

பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும்.  ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்".

என்று அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.

இத்தகைய பொல்லாத பசியை முருகவேளுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி உரைத்து மாற்றிவிட்டதாகக் கூறுகின்றார் அருணகிரிநாதர்...

குகனெ குருபர னேயென நெஞ்சில்

     புகழ, அருள்கொடு நாவினில் இன்பக்

     குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் ...... பசிஆறி....---  திருப்புகழ்.

யாவராலும் மாற்றமுடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து திருவேலிறைவன் திருநாமங்கள் என அறிக.


காம நோய் ---

இக் காமநோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி போதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. ஆனை மேல் பவனிவரும் இந்திரன், இதனால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான்.  இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான்.  கலைகளை ஆய்ந்தாரும், பகைவரைக் காய்ந்தாரும் காமநோயால் வீந்தார்கள். இதன் வலிமைதான் என்னே? முடி துறந்தான் ஒருவன். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாது, புன் மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.

"உடம்பினால் ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழ்

உத்தமனைக் காணும் பொருட்டு".

என்பதனை அறியாமல், உடம்பையும் பாழ்படுத்துகின்றனர்.  காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான். காகாசுரன் கண்ணிழந்தான்.

இந் நோயை அறவே அகற்றினாரும் உள்ளனர்.   வீடுமரும், அநுமரும், குமரகுருபரரும், சிவப்பிரகாசரும், அப்பர் பெருமானும் என்க.

அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தனர். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என உணர்க.


கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்

தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.  ---  கந்தர் அலங்காரம்.


பிறவிப் பிணி ---

இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம் நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில் நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.


எண்ணிலாத நெடுங்காலம்

எண்ணிலாத பலபிறவி

எடுத்தே இளைத்து இங்கு அவைநீங்கி

இம்மானிடத்தில் வந்து உதித்து,


மண்ணில் வாழ்க்கை மெய்யாக

மயங்கி உழன்றால்அடியேன்உன்

மாறாக் கருணை தரும்பாத

வனசத் துணைஎன்று அடைவேனோ


கண்ணின் மணியே உயிர்க் கனியே

கருணைப் பயுலே சுகக் கடலே

கச்சித் தாய் உச்சியை மோந்து

கண்ணோடு அணைக்கும் திருத்தாளா


புண்ணியோர் எண்ணிய கரும்பே

பொழிமும் மதவாரண முகத்தோன்

பொற்புஆர் துணையே அற்புதனே

போரூர் முருகப் பெருமாளே. ---  திருப்போரூர்ச் சந்நிதி முறை.


"பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு".

என்பது பொய்யாமொழி. 


செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது எது? அதுதான் முருகனுடைய திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும், அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்”. "செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளை உன்னி உணர்க.


"அநுபவ சித்த பவக்கடலில் புகாது, எனை

வினவி எடுத்து அருள் வைத்தகழல் க்ருபாகரன்"... ---  பூதவேதாள வகுப்பு.


"உறவுமுறை மனைவிமகவு எனும்அலையில் எனதுஇதய

உருவுடைய மலினபவ சலராசி எறவிடும் உறுபுணையும்".... ---  சீர்பாத வகுப்பு.


"பலகாலும் உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துஉடன் வாழ ...... அருள்வேளே,

பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே".     ---  (நிலையாத) திருப்புகழ்.

எனவே, முருகவேளின் திருநாமத் துதியினால் உடல்பிணியாகிய பசியையும், திருவடித் தியானத்தினால் உள்ளப் பிணியாகிய காமப் பிணியையும், திருவடி தியானத்தினால் உயிர்ப் பிணி ஆகிய பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.


ஒளிமிகு நீபத்து உனது இருதாளைத் தரவேணும் --- 

ஒளி - அழகும், வண்ணமும். நீபம் - கடப்பமலர்.


கருத்துரை


முருகா! திருவடிப் பேற்றினை அருள வேண்டும்.





எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.

 

ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்

-----

தான் செய்கிற செயல் ஒவ்வொன்றும் தனக்குப் பல காலத்திற்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் யாவரும் விரும்புவர். ஒரு நாளைக்கு மட்டும் சோறு சமைத்துச் சாப்பிடுகிறவன் அன்றாடம் காய்ச்சி. பல காலத்துக்கும் பொருள் சேகரித்து வைத்துக் கொண்டு சுகமாகச் சாப்பிடுகிறவன் செல்வன். பல காலத்திற்குப் பலவகையில் பயன்படுகிற நற்செயலைச் செய்கிறவனே அறிவாளி.

நம்முடைய உடம்பு நிலையானது அல்ல என்று நமக்குத் தெரியும். வாழ்நாளைப் பொறுத்து உடம்பு இருக்கிறது. உயிருக்கு இறுதி இல்லை. என்றைக்கு இறைவனோடு ஒன்று படுகிறதோ அன்றைக்குத்தான் அதன் பயணம் முடிவடைகிறது. அந்த உயிருக்குப் பயன்படுகிற பொருளைச் சேமித்து வைக்க வேண்டும். நம்முடைய கைப்பொருளை இல்லை என்பவர்களுக்கு இட்டு வைத்திருந்தால், அது நமக்குப் பின்னால் உயிருக்குப் பயன் அளிக்கும் என்கின்றார் அருணகிரிநாதர்.

ஒரு நல்ல செயலைச் செய்தால், அது எப்போது வந்து பலன் தரும் என்கின்ற ஆராய்ச்சிக்கு அவசியம் இல்லை. செயலுக்கு உரிய பலன் எப்போதாவது வந்தே தீரும்.

"நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி 

என்று தருங்கொல் எனவேண்டா, - நின்று 

தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத் 

தலையாலே தான் தருதலால்"

என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இதற்கு விளக்கம் தருகின்றது. ஒருவனுக்கு ஓர் உதவியைச் செய்தால், அதன் பயன் மறுபடியும் நமக்கு எப்படிக் கிடைக்கும் என்ற சிந்தனை கூடாது. நிச்சயமாக செய்ததைவிடக் குறைவாகத் கிடைக்காது, அதிகமாகவே கிடைக்கும். தென்ன மரத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

இதைப் போலவே, அருணகிரிநாதர் நமக்கு உபதேசம் செய்கிறார். "நீ உன்பால் வந்து இரப்பவர்களுக்கு உன்னுடைய பொருளை இட்டால், அதனால் என்ன பயன் என்று நினைக்காதே. நீ அளிக்கிற கொடை உனக்கு எங்காயினும் வந்து உதவி பண்ணும். நீ செய்த தருமம் ஒன்று,  அதற்கான இறையருள் ஒன்று. இரண்டும் உனக்கு உதவி செய்ய எப்படி வரும், எங்கே வரும், எப்போது வரும் என்று உனக்கே தெரியாது. எங்காயினும் அந்த இரண்டும் வந்து உதவும்"  என்கிறார்.  பசிக்கு ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறவர்களை வலிய அழைத்து, உணவு கொடுக்கின்ற தருமம் எங்காயினும் வரும். 

எங்காயினும் என்றால் இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல. மறுபிறவியிலும் வரும். சிவஞானிக்கு ஒரு கவளம் அன்னம் இட்டால், எடுக்கிற பிறவியில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாமல் வாழலாம். அறம் செய்தால், அது பின்பு வந்து விளையும். பொருள் கொடுத்தால், அது பிறன் ஒருவனால் உனக்குக் கொடுக்கப்படுகிற பொருளாக வந்து சேரும்.அருணகிரிநாதர், ஓர் உவமை சொல்லுகிறார். "முருகப் பெருமானுடைய அருள்போல், ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்" என்கிறார்; "வேலையில் வேலை விட்டோன் அருள் எங்காயினும் வரும்" என்கின்றார்.

இறைவன் திருவருள், யாருக்கு, எப்போது, எப்படி வரும் என்று சொல்ல முடியாது. இறைவன் திருவருளினாலே நல்லது பொல்லாதது ஆகிய இரண்டுமே வந்து கொண்டிருந்தாலும் தீமை வரும்போதுதான், "இறைவன் என்னைப் இப்படி சோதிக்கிறார்” என்று  பலர் நினைக்கிறார்கள். இறைவனுடைய அருளை உணர்வதற்கு மனம் இருந்தால், வாழ்க்கையில் ஒவ்வொரு கனமும் அவனுடைய திருவருளை அனுபவிக்கலாம்.

அலுவலக வேலையாக ஒருவர் டெல்லிக்குப் போக விமானச்சீட்டு வாங்கி வைத்து, பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார். அன்றைக்கு என்று அவருடைய குழந்தைக்குச் சற்று உடம்பு சரியில்லை. மனைவி அவரைப் போகக்கூடாது என்று தடுக்கிறாள். போவதைத் தடுத்து விட்டதாக மனைவியின் மேல் கடுங்கோபம் உண்டானது. பொறுத்துக் கொண்டார். மறநாள் செய்தித் தாளில், அவர் கிளம்பிச் செல்ல இருந்த விமானம் நடுவழியில் விழுந்து எரிந்து விட்டதாக வந்ததைப் படித்தவுடன்தான், இறைவனுடைய திருவருள் நம்மை ஊருக்குப் போகாது தடுத்திருக்கிறது என்று நினைந்து உருகினார். மனைவியிடத்தில் கோபித்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத நன்மைகள் இப்படி எத்தனையோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இறைவனுடைய திருவருள் என்று நினைக்க மனம் இல்லை. எதிர்பாராமல் வந்து நிற்கிற இலாபத்தைக் காண்கிறோம். அதை நம் அதிருஷ்டம் என்று சொல்கிறோம். 

எதிர்பாராத வகையில் யாராவது எங்காயினும் உதவி செய்தால், அதை அவன் செய்தான் என்று நினையாமல் அவனைக் கருவியாகக் கொண்டு இறைவன் திருவருள் துணை செய்தது என்று நினைக்க வேண்டும். துன்பம் வந்தால் யாரோ நமக்கு வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறோம். செய்தவனிடம் கோபப்படுகிறோம். எதிர்பார்த்து விளைந்தால் நம்மால் விளைந்தது எனச் சொல்லிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நல்லது வந்தாலும் இறைவன் திருவருள் என்று நினைக்க வேண்டும், தீயது வந்தாலும் அவ்வாறே நினைக்க வேண்டும். 

உடம்புக்கு வந்த நோயை எப்படிக் குணமாக்குவது என்று மருத்துவருக்குத் தான் தெரியும். உயிருக்கு வந்துள்ளது தீராத நோயாகிய பிறவிநோய். நம்முடைய புண்ணிய பாவ வினைகளைக் கழுவிவிட வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கிறான். அவன் அருளால் நம்முடைய ஊழ்வினைக்கு ஏற்ப இன்பதுன்பங்கள் விளைகின்றன. துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் இறைவனுடைய திருவருள் என்று நினைந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தினாலே வருத்தம் இராது. இன்ப துன்பம் இரண்டும் அவர்களுக்குச் சமமாகவே இருக்கும். 

ஒரு கிலோ இரும்பு கனமா? ஒரு கிலோ பஞ்சு கனமா?' என்று கேட்டால், கொஞ்சம் மந்தமான புத்தி உள்ளவர், பஞ்சைவிட இரும்பு கனமானது என்று எண்ணி, "இரும்புதான் கனம்'"என்று சொல்லலாம். அறிவாளியாக இருந்தால்,  "பஞ்சாய் இருந்தால் என்ன? இரும்பாய் இருந்தால் என்ன?  இரண்டு சமம்" என்று சொல்லுவார். அதுபோலத்தான், இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால் என்ன? இரண்டும் ஆண்டவன் அருள்தான்' என்று நினைப்பவர்களுக்கு இன்பமும் துன்பமும் சமமாகவே இருக்கும். இன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் புதிய மகிழ்ச்சியை அடையாது. துன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் துவளாது.

"நன்றாங்கால் நல்லவாக் காண்பவன், அன்றாங்கால் 

அல்லற்படுவது எவன்" 

என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

நல்லதுதான் வேண்டும், தீயது வேண்டாம் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை. அடியார்கள் அப்படித்தான் நினைப்பார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்" என்று இவர்களை அடையாளப் படுத்துகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

நம்மை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் நினைக்கிறபடி எல்லாம் வேலை செய்யும் வேலைக்காரன் அல்ல அவன்.  குழந்தை கேட்கிறபடி எல்லாம் உணவுப் பண்டங்களைக் கொடுத்து விட்டால் குழந்தை உருப்படாது. பலாப்பழம் வேண்டும் என்று குழந்தைக் கத்துகிறது. தாய் அதை அதன் கண்ணில் படாமல் ஒளித்து விடுகிறாள். குழந்தை மாந்தம் வந்து துன்பப்படக் கூடாது என்கிற மேலான கருணையால் அப்படிச் செய்கிறாள். நமக்கு இன்பம் அளிப்பது எது, துன்பம் அளிப்பது எது என்று நமக்குத் தெரியாது. இறைவனுக்குத் தெரியும். "வேண்டத் தக்கது அறிவோய் நீ" என்கின்றார் மணிவாசகப் பெருமான். நம்முடைய பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப இறைவன் அருள் துன்பமாகவும் வரலாம்.  இன்பமாகவும் வரலாம். இரண்டையும் அவன் திருவருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

துன்பம் இன்பம் இரண்டும் கலந்த வாழ்வில் இறைவன் அருள் என்பது தனியாக வருவது இல்லை. இரண்டுமே அவனுடைய அருள்தான். இத்தகைய மனப்பாங்கு வந்துவிட்டவர்கள் இடுக்கண் வந்தால், அதைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நமக்குத் துன்பம் வந்தால் நெஞ்சு நடுங்குகிறது. இன்பம் வந்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. துன்பத்தைத் துன்பம் என்று பார்க்காமல் இறைவன் அருள் என்று நினைப்பார்க்கு,  'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று உறுதி வந்துவிடும். 

இறைவனுடைய திருவருள் எப்படிக் காப்பாற்றும் என்று சொல்ல முடியுமா? ஒரு பாலைவனத்திலே போய் நிற்பான். தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்று அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான். அவ்வழியே போகிறவன் தனக்காக எடுத்துச் செல்லும் இளநீரை இவனுக்குக் கொடுத்து விடுவான். இறைவன் திருவருள் இவன் தாகத்திற்கு இளநீராக வரும். எம்பெருமான் அருள் எங்கு வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது; எங்காயினும் வரும். 

"பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது" என்கின்றார் அருணகிரிநாதர். இறைவன் அருள் இன்ன இடத்தில் இப்படி வரும், இப்படி உபகாரம் செய்யும் என்று சொல்ல முடியாமல் எங்காயினும் வந்து உதவி செய்வது போலவே, இரப்பவர்களுக்குத் தருமம் செய்கிற பொருளும் வந்து உதவும். இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல; வேறு உலகத்தில், வேறு பிறவியிலும் வந்து சாரும்.  இது தெரிந்தும், இறைவனிடம் பத்தி பூண்டு இருக்காமல், பொருளை ஈட்டி, அதைப் பிறருக்குக் கொடுக்காமல் தமக்கே பயன்பட வேண்டும் என்று பலர் சேமித்து வைத்துக் கொள்ளுகிறார்களே, அவர்களைப் பார்த்து அருணகிரிநாதர், "வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும்  சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனி வழிக்கே?" என்று பாடுகிறார்.

யாசிப்பவர்களுக்கு இடாமல் பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்கள், தம்மிடம் உள்ள பணம், தங்கம்,  தாங்கள் கட்டிக்கொண்ட அழகான வீடு, மனைவி இவைகள் எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணை என நினைக்கிறார்கள். வங்காரம் - தங்கம். ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் நிலையானது, எப்போதும் அது துணையாக இருக்கும் என்று நினைக்கிறான். பெரிய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். அதில் பல அறைகள் இருக்கின்றன.  மாடு கட்டும் கொட்டகையே மிகப் பெரியதாக, மிக அழகாக இருக்கிறது. அந்த மாளிகையில் இறைவனுக்கு ஒர் இடம் இல்லை. இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் விருப்பபடி கட்டியிருக்கிறான். சிங்காரமான வீட்டில், சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான். தன்னுடைய கைப்பொருளை மனைவிக்கே பலரும் கொடுத்து விடுகிறார்கள், காரணம் அவளால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவுதான். 

இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்க்கு இடாமல் தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும், வீடாக வைத்திருப்பவர்களும், மடந்தையரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர்களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு திட்டமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரையறை ஏதும் இல்லை. "நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.  

திருமூல நாயனார் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.

"அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்,

இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,

கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே"  

இதன் பொருள் ---

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர். சமைத்து முடித்த பின்பு அவ்வுணவை உண்டார். பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சிலவற்றை உசாவுதல் செய்தார்.  அச்செயலுக்கு இடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி,  அது நீங்குதற்பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார.  படுத்தவர் படுத்துவிட்டவரே ஆயினார். மீள எழுந்திருக்கவில்லை.

அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. யாவும் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவை போல இருக்கும். எதுவரை வரும்? என்றால்,  "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்கிறார் பட்டினத்தார். பணம், பொருள்,  வீடு எல்லாம் உயிர் இருக்கிற வரைக்கும் அனுபவிக்கலாம். உயிர் போகும் காலத்தில் அவை கூடவர மாட்டா. அவை வீட்டோடு சரி. அன்புடைய மடந்தையராவது கூட வருவார்களா?  என்றால், “விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே." பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது தெருமுனை வரையில் வருவார்கள். சுடுகாட்டுப் பக்கம் திரும்பியவுடனேயே அவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். ஆகவே, பெண்களும் வீதி மட்டுந்தான் வருவார்கள். அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? என்றால், அவர்களும் சுடுகாட்டோடு நின்று விடுவார்கள்; "விம்மி விம்மி இரு கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே"  நம்மைத் தொடர்ந்து வருவன எவை? "பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார் பட்டினத்தார்.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக 

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு 

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே, 

பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." 

என்பது பட்டினத்தார் அருளிய பாடல்.

இருவினை - புண்ணிய பாவ வினை என்பன உலகிலுள்ள மக்களின் கண்ணுக்குத் தெரியாதவை. அவை உண்டு என்பது, அவற்றின் விளைவாகிய இன்ப துன்பங்களை அநுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. 

இரண்டு கம்பிகள் ஒரே மாதிரியாகத்தான் ஒடுகின்றன. ஒரு கம்பியைத் தொட்டால்  ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொட்டால் அதிர்ச்சி உண்டாகின்றது. இந்த விளைவைக் கொண்டே இதில் மின்சாரம் உள்ளது என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. கம்பியில் உள்ள மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. தாக்கும் போதுதான் தெரிகிறது. இரு வினைகளும் இப்படியே அனுபவமாக வந்து தாக்கும் போதுதான் பாவம் புண்ணியம் என்ற உண்மை தெரியும். 

உயிர் போகின்ற கடைசி வழிற, ஒரு தனி வழி. யாரும் உடன் வரமுடியாத தனி வழி. உடம்போடு போகத் துணை உண்டு. உயிரோடு போகத் துணை இல்லை  "நும்மை நேடிவரும் தொலையா வழி" என்று அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே நம்மைத் தேடி வருகிற தொலையா வழி அது. அதில் நீங்கள் பயணம் செல்லும் போது துணை வேண்டுமென்றால், மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதப் பெருமானை வணங்கி, ஏற்றவர்களுக்குக் கீரை இருந்தாலும், வெந்தது எது இருந்தாலும பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்ய வேண்டும். அதுதான் தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக வந்து உதவும்.

ஒரு நாள் இரண்டு நாள் போகக்கூடிய வழியாக இருந்தாலே, 'துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகள் யாத்திரை செய்யப்போகிறதோ தெரியாது. அது போகிற வழியும் தொலையாத நெடு வழி. யாரும் துணைக்கு வர இயலாத தனிவழி. பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் தனி வழிக்குத் துணையாக வரமுடியாது.  அவற்றைச் சங்காதம் என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டிவரும். உயிரைத் தொடர்ந்து வருவது புண்ணிய பாவ வினைகள்தாம். நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். 

இறைவனுடைய அருளைப் பெற நினைக்கிறவர்களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் பொருளாகத் தோன்றாது. இறைவன் அருளில் பற்று வைத்திருப்பவர்களுக்குப் பொருளிலே பற்று இருக்காது. இறைவன் அருள் உதவி செய்ய வந்தால், பொருள் அறமாக மாறிவிடும். இளையான்குடி மாறனார் என்கிற நாயனார் இருந்தார். அவர் தனது செல்வம் முழுவதையும் சிவனடியார்களுக்கே அமுது படைப்பதில் செலவிட்டுக் கொண்டிருந்தார். என்னிடத்தில் பொருள் இருந்தால் நானும் அறம் செய்வேன் என்று சிலர் கூறுவார்கள். பொருள் வந்தால் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டார். மாறனாருக்கு வறுமை உண்டாயிற்று. வீட்டில் வைத்திருந்த நெல்லைக் கொண்டுபோய் அன்று காலையில்தான் விதைத்துவிட்டு வந்தார். மாலையிலே இடி மின்னனுடன் மழை வந்துவிட்டது. கும்மிருட்டுக் காலத்தில் பசியோடு ஒருவர் வந்தார்.  கொட்டுகிற மழையில்இரவுக் காலத்தில் பசியோடு வந்தார் அவர். நாயனார் வீட்டில் உணவு இல்லை. சமைக்கலாம் என்றால் அரிசி இல்லை. விறகு இல்லை. அத்தனை வறுமை! 

அவருடைய வேதனையை ஒரே விநாடியில் உணர்ந்து கொண்டாள் அவருடைய மனைவி. காலையிலே விதைத்த நெல் இந்த மழையில் நிச்சயம் மேலாகத்தான் மிதக்கும். அதுவும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்கும். வயலுக்குப் போய் அதை அரித்துக் கொண்டு வந்தால், அதைக் குத்தி அரிசியாக்கி விரைவில் சமைத்து விடலாம் என்று ஆறுதல் கூறினாள். அவரும் அப்படியே கொட்டுகிற மழையில் கூடையை எடுத்துக் கொண்டு போய் நெல்லை அரித்து வந்தார். விறகு இல்லை. வீட்டில் மேல் இருந்த கூரையிலுள்ள கம்புகளைப் பிரித்துக் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். காய்கறி ஒன்றும் இல்லை. புறக்கடையில் இளம் பயிராகக் குழியில் ஏதோ இருந்தது. அதை அப்படியே அவசர அவசரமாக அரிந்து கொண்டு வந்தார். 

அவர் குழியிலுள்ள பயிரையா அரிந்தார்? தம்முடைய பாசத்தின் அடிவேரையே அரிந்தார். இதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருமையாகப் பாடுகின்றார். 

"வழிவரும் இளைப்பி னோடும் வருத்திய பசியி னாலே,

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று,

குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவி, பாசப்

பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க"

வழி நடந்து வந்த இளைப்போடு, வருத்துகின்ற பசியினாலும் மனம் வருந்தி நிற்பார் எம் ஐயன் என்னும் அன்பினால் மீதூர்ந்தவராய்ச் சென்று குழிகளினின்றும் உயர்ந்து மேற்செல்லாத புன்செய் நிலத்தில் முளைத்திருக்கும் கீரை வகைகளைத் தடவி, அக் கீரைகளில் சிலவற்றைத் தம் பாசத்தின் வேரைக் களைவார் போலப் பறித்துக் கறியமுதுக்குக் கொடுத்தார். சமையல் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து பார்த்தால் அடியாரைக் காணவில்லை. யாவர்க்கும் மேலான சிவபிரான் சோதி வடிவாய்க் காட்சி தந்து,

"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ, அணங்கி னோடும்

என்பெரும் உலகை எய்தி, இருநிதிக் கிழவன் தானே

முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல் கேட்ப

இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான்"

என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்து வந்த நீ, உன் மனைவியோடும் என்னுடைய பெருமை பொருந்திய சிவலோகத்தை அடைந்து, குபேரனே தனக்கு உரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்.

இறைவன் அருளை மனத்தில் வைக்காதவர்களுக்கு தங்கமாகவும் வீடாகவும் பொருளைச் சேர்த்துக் கொள்ளத் தெரியும். மடந்தையர்களுக்காகப் பொருளை அழிக்கத் தெரியும். அவர்களுடைய வீடும் மடந்தையருமா உயிர்போகும் தனி வழிக்குத் துணையாக வருவார்கள்? அத்தகையவர்களைப் பார்த்து இடித்து உரைக்கிறார் அருணகிரிநா"ர். 'நீங்கள் எவற்றை வாழ்க்கைக்கு நலம் செய்யும் என்று சேர்த்து வைக்கிறீர்களோ அவை பிறகு உதவ வருவதில்லை. ஏற்பவர்களுக்கு இட்டதுதான் வரும். அது எப்போது எப்படி வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படியும் எங்கேனும் வரும். முத்துக்களையுடைய கடலில் வேலை விட்டவனுடைய அருள் போல எங்காயினும் வந்து உதவும். இது சத்தியம்"  என்று அருளையும், பொருளையும் இணைத்து ஒர் அறிவுரைப் பாடலை அருள்கிறார் அருணை முனிவர். 

"பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன்.அருள் போல்உதவ 

எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது, இடாமல் வைத்த 

வங்காரமும், உங்கள் சிங்கார வீடும், மடந்தையரும் 

சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனிவழிக்கே!" 

இதன் பொருள் ---

நல்வழியில் செல்லாமல் அல்வழியில் சென்று கேட்டினை அடைகின்ற மனிதர்களே! பொங்கி ஆர்ப்பரிக்கின்ற கடலில் வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகனுடைய திருவருளைப் போல, உங்களிடம் வந்து யாசித்த ஏழைகளுக்கு இட்ட புண்ணியத்தின் விளைவு தப்பாமல் உதவும்பொருட்டு எவ்விடத்திலாயினும் உங்களை நாடி வரும். அப்படி இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் பெட்டியில் பாதுகாத்து வைத்த பொன்னும், உங்கள் அழகிய வீடும், அழகிய மனைவிமாரும் உயிர் உடம்பை விட்டுச் செல்லும் தனிமையான வழிக்குத் துணை ஆகுமோ?

ஆசைகள் மூன்று என்று சொல்வார்கள். பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்பவை அவை. இந்தக் காலத்தில் மண்ணாசை என்பதற்குப் பொருளே வேறாகி விட்டது. நாடு பிடிக்க ஆசைப்படுவது மண்ணாசை. விரிவான நிலங்களை வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்வதும் மண்ணாசையே. தனக்கென்று வாழும் இடம் ஒன்று பெற விரும்புவதும் மண்ணாசை என்றே கொள்ளலாம். அப்படி வைத்துக் கொண்டால் இங்கே அருணகிரிநாதர் மூவகை ஆசைக்கும் உரிய பொருள்களைச் சொல்கிறார். வங்காரத்தில் உள்ள விருப்பம் பொன்னாசை, சிங்கார வீட்டில் மேலுள்ள ஆசை மண்ணாசை, சிங்கார மடந்தைபால் உள்ள பற்று பெண்ணாசை. 

அறம் செய்யாத பொருளும், அதனால் உண்டான போகமும், உயிர் பிரிந்து போகும்போது துணையாக வரமாட்டா. இறைவன் திருவருள் போல் தவறாமல் வந்து உதவுவது, ஏற்பவர்க்கு இட்டதே ஆகும்.


ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...