5. அன்பினால் நன்மை

“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா

வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர்

பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்

சுகம்உறுதல் நல்லோர் தொழில்.” — நீதிவெண்பா


நல்ல நாக்கானது தன்னோடு இருந்துகொண்டே தனக்கு கேடு விளைவிக்கும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்டே சுவை வகைகளை அனுபவிப்பது போல, பகைவர் பலர் இருந்தாலும், அவர்களிடம் உண்மை அன்பைக் காட்டி, அவர்களின் மூலம் நன்மையை அடைதல் நல்லோர் செயலாகும்.




64. பூசை வேளையில் கரடி

“நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்து

     இங்கிதமா நிருபர் முன்னே

பேசுவதே உசிதம்அல்லால், நடுவில்ஒரு

     வன்குழறிப் பேசல் எல்லாம்

வாசம்மிகுந் தண்டலைநீள் நெறியாரே!

    அபிடேக மலிநீ ராட்டிப்

பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட்டு

    ஓட்டுவது போலுந் தானே.”


      வாசம் மிகும் தண்டலைநீள் நெறியாரே - மணம் சிறந்த சோலைகள் உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரே!, 


    சபையில் வந்தால் நிருபர் முன்னே நேசமுடன் வேளை அறிந்து இங்கிதம் ஆ - அரசவையிலே சென்றால் அரசருக்கு எதிரில் அன்பையும் காலத்தையும் அறிந்து குறிப்பாக, பேசுவதே உசிதம் - (தன் வேண்டுகோளை) விண்ணப்பித்துக் கொள்வதே நலம் தரும். 


    அல்லால் – அவ்வாறு அல்லாமல், 


    நடுவில் ஒருவன் குழறிப் பேசல் எல்லாம் - இடையிலே ஒருவன் தடுமாறிக் கூறுவன யாவும், அபிடேகம் மலி நீர் ஆட்டிப் பூசை பண்ணும் வேளையிலே - திருமஞ்சனமாக நிறைந்த நீரை ஆட்டி வழிபாடு செய்யும் நேரத்தில், கரடியை விட்டு ஓட்டுவது போலும் - கரடியை (அவிழ்த்து) விட்டு ஒட்டுவது போலாகும்.


    ‘சிவபூசை வேளையில் கரடி வந்தது போல' என்பது பழமொழி. கரடி என்பதற்கு வெவ்வேறு பொருள் உரைக்கப்படுகிறது. உசிதமானதைக் கொள்ளவும்.


அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின்

-----

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.

“பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே."

இதற் பொருள் -– 

        பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும்,  தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.

    மனிதன் உலகில் வாழப் பிறந்தவன். தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழவைக்கவும் பிறந்தவன். இந்த அடிப்படை உண்மையினை உணராத காரணத்தினால்தான் மனிதன் ஒன்றை விட்டு ஒன்று பற்றி எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ செய்து, எப்படியோ காலத்தைக் கடத்துகின்றான். சிலர் தமது வாழ்வே பெரிதென எண்ணி, அவ்வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, தனக்கு ஒரு கண் கெட்டாலும் பரவாயில்லை, மற்றவனுடைய இரண்டு கண்களும் கெடவேண்டும் என்று பிறர்க்குத் தீங்கு இழைப்பதிலேயே இன்பம் காணுவதையும் காணுகின்றோம், பிறர் சொல்லவும் கேட்கின்றோம்.

    இந்த அவலநிலை மனிதனிடத்தில், மனித உணர்வு அற்றதனாலே உண்டானது.  “பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறிப் போந்தார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருஏளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.

        வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லையே என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சாலச் சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.

    அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் மனிதனுக்கு உயர்ந்த ஒர் உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும் - சமுதாயம் தழைக்கும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.

        “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்பட்டது.  முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன்,  செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம். 

    "மறந்தும் பிறன்கேடு சூழற்க,சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

      திருவள்ளுவ நாயனார்,  "இன்னா செய்யாமை"  என்னும்  அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார். 

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."                 --- திருக்குறள்.

        எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளையாவது செய்யாது இருக்கக் கற்றுக் கொள்ளுதல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது. நல்லது செய்ய முடியாதவர்கள் சும்மா இருந்தாலே போதும். இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் பெற வேண்டினால், மேலே குறித்த புறநானூற்றுப் பாடலின் கருத்தை உளவாங்கி வாழக் கற்றுக் கொள்ளுதல் நல்லது.


அருளுடைமை

அருளுடைமை

----

        உலகில் பிறந்து மனைவி மக்களொடு வாழ்ந்து, சுற்றத்தையும் தழுவி அவர்களிடத்தும் அன்பைப் பொழிந்து வாழும் மனிதன், பிற எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, அவர்களிடத்தும், அவற்றினிடத்தும் கருணை உள்ளம் படைத்தவனாய் வாழும் நிலையில் நிற்பதே அருளுடைமை ஆகும். அருளுடைமை என்பது எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதல் என்று பொருள்படும். உயிர்கள் மீது செல்லுகின்ற ஆசையே ‘அன்புடைமை’ என்றும், ‘அருள் உடைமை’ என்றும் சொல்லப்படும். ஆயினும், அன்பு என்பது தனக்குத் தொடர்பு உடைய மனைவி மக்கள், சுற்றத்தார் மீது காட்டுவது. அருள் என்பது தனக்குத் தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மீதும் செலுத்தப்படுவது.

        திருக்குறளில் இல்லறம், துறவறம் என்ற இரு நிலையாக வாழ்க்கையினைப் பாகுபடுத்தி, முதலில் இல்லற நெறிக்கு உரிய அறங்களை வரிசைப்படுத்தி அருளிய திருவள்ளுவ நாயனார், துறவறநெறிக்கு முதலாவதாய் 'அருளுடைமை” என்பதை அருளுகின்றால். “அருளுடைமை” துறவறத்தின் முதல் அதிகாரமாக வைக்கப் பெற்றுள்ளது. இல்லறத்தின் முதிர்ச்சியே துறவறம் ஆகும்.

        இல்லறத்தில் பிறக்காத அருளுடைமை என்னும் பண்பு, துறவறத்தில் திடீர் என்று முளைக்கப் போவது இல்லை. அரும்புதான் மரலாகும். அரும்பு இல்லாமல் மலர் இல்லை. எனவே, அருளுடைமை என்பது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் அமைந்திருக்க வேண்டிய பண்பு என்பது அறியப்படும். அன்புடைமையின் எல்லை விரிந்தால் அது அருளுடைமையில் சென்று முடியும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “அருள் என்னும் அன்பு ஈன் குழவி”  என்று பின் பொருட்பாவில் விளக்கி அருளினார்.. எனவே இந்த அருளுடைமை என்பது உலக உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை ஆகும்.

    திருவள்ளுவ நாயனார் கல்விச் செல்வம், பொருட் செல்வம், செவிச்செல்வம் போன்ற பிற செல்வங்களை எல்லாம் விளக்கிச் சொல்லி, இவற்றுக்கு எல்லாம் மேலானது அருட்செல்வம் என்று காட்டுகிறார். “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்று கூறி அருளுகிறார். அருட்பாலில் இவ்வாறு காட்டிய நாயனார், பொருட்பாலில், “கேள்வி” என்னும் அதிகாரத்தில் முதலாவதாக, “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்றும் கூறி உள்ளாரே என்னும் ஐயம் உண்டாவது இயல்பே. கேள்விச் செல்வத்தின் சிறப்பினை உணர்த்த வந்த நாயனார், கேள்விச் செல்வத்தை உயர்ந்ததாகப் பொருட்பாலில் வைத்து அருளினார். ஆராய்ந்து அறியப் புகுந்தால், கேள்விச் செல்வம் என்பது, அருட்செல்வம் பெறுதற்கு வழியாக அமையும் என்பது விளங்கும். “கேட்டல்” என்பது ஞானத்திற்கு உரிய நான்கு பாதங்களில் ஒன்று. எனவே, அருட்செல்வமே எல்லாவற்றிலும் மேம்பட்டது என்பதும், உலக உயிர்கள் இன்ப நெறியில் வாழ அருட்செல்வமே வழிவகுக்கும் என்பதும் அறிதல் வேண்டும்.

        “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்று, அருளுடைமை அதிகாரத்தின் முதல் திருக்குறளின் பிற்பகுதியில் நாயனார் சொல்லியதன் அருமையை ஆழ்ந்து சிந்தித்தால், பொருளால் வரும் செல்வங்கள் மேலானவை அல்ல என்பது விளங்கும். உலகில் பிறந்த மனிதன் பலவகையிலும் ஓடி ஓடி, யார் யாருடைய துணையையும் கொண்டு, பொருளைக் குவித்து, எப்படி எப்படியோ கட்டி ஆளுகிறான். இறுதியில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, வெறும் கையோடு இறந்து போகிறான். குவித்து வைத்த செல்வத்தை அவன் ஆர அனுபவித்தானா என்றால், இல்லை. பொருளைத் தேடி ஒடி ஒடி உழைத்த மனிதன் அருளைத் தேடி அலையவில்லை. அதானல், அவன் கீழ்மகனாகவே வாழ்ந்தான் என்பதுதான் உண்மை. அதனால்தான், கீழ்மக்களிடத்தும் பொருள் உண்டு என்பதைக் காட்ட, “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் நாயனார். தேடிய பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வழிவகை அறியாத மனிதர்களைப் பார்த்து “கேடுகெட்ட மானிடரே” என்றும், “பாவிகாள்” என்கிறார் ஔவைப் பிராட்டியார். “கேடுகெட்ட மானிடரை! கேளுங்கள், கூடு விட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார், பாவிகாள், அந்தப் பணம்” என்று இரங்குகிறார். “உங்கள் வல்வினை நோய், ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது, உங்கள் அத்தம் எல்லாம்  ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே?" என்கிறார் அருணகிரிநாதர். வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்றுதான் நினைக்கிறோம். பொருள் படைத்தவனாக இருந்தால் இந்த உலகத்தில் நன்றாக வாழ்ந்து விடலாம் என்பது உலகவர் எண்ணம். ஆனால், திருவள்ளுவரும், அருணகிரிநாதரும் அருள் இன்றியமையாதது  என்கின்றனர்.  இறைவனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம், தொழில் முதலியவற்றால் வருவது பொருள். பொருள் இருந்தால் போதாது. அருள் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. 

"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

 என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். 

      இந்த உலகத்தில் பொருள் இருந்தால்தானே வாழமுடியும். வாழ்ந்து முடிந்த பின்னர் தானே இறைவன் திருவடியை அடைய முடியும். எனவே, முதலில் பொருளோடு இவ்வுலகில் வாழ்வோம். அதன் பின்னர் அருளோடு அவ்வுலகம் செல்வோம் என்று கூறுகின்றவர்களும் உள்ளனர். அவர்களுக்கு அறிவுறுத்தவே, 

"பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார் 

அற்றார் மற்று ஆதல் அரிது" 

 என்று அருளின் சிறப்பை உணர்த்தினார் திருவள்ளுவ நாயனார். பொருளோடு அருளையும் தேடுவதே அறிவுடைமை.  இந்த உலகத்தில் பொருளோடு வாழும் காலத்திலேயே, பொருளைக் கொண்டு அறச் செயல்களைப் புரிந்து, அருளைப் பெறாதவர்களுக்கு அந்த உலகம் இல்லை. அருளும் பொருளும் ஒருங்கே உடையவன் தான், இம்மையும் மறுமையும் நல்வாழ்வு பெறுவான். இதுதான் நாயனார் அருளிய இரண்டு திருக்குறள்களையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணினால் கிடைக்கின்ற விடை. எனவே, பொருள் மட்டும் இருந்தால் வாழ்ந்துவிடலாம் என்பது மறுக்கப்படுகிறது. அருள் இருந்தால்தான் அந்தப் பொருளினால் நல்ல பயனை அடைந்து வாழ முடியும். 

        ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தான் என்பதுதான் பொருள். நல்ல நெறியில் இன்பமாகத் தானும் வாழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழ்வதே வாழ்வு. நல்லது அல்லாத வழியில் வாழ்நாள் கழிந்த போவது தாழ்வு. ஒருவன் நன்றாக வாழ்ந்தவன் என்பதற்கு, நல்ல நெறியிலே சென்று, இன்ப வாழ்வு வாழ்ந்தவன் என்பதே பொருள். உயிரும்,  உடம்பும் ஒட்டிப் பல காலம் கிடப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை என்று சொல்ல இயலாது. பொருள் நிறைய இருப்பதனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதைப் பொருள் நிறையப் படைத்து உள்ளவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். பொருளை மலைமலையாகக் குவித்து வைத்துள்ளோருக்கு, அந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் அச்சத்தைத் தந்துகொண்டு இருக்கிறது. நிச்சயமாக இன்பத்தைத் தரவில்லை.   

        உலகம் நல்ல வழியில் வாழ வகுக்கப் பெற்றுள்ள நெறிகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் மனிதன் அருளானவன் ஆவான். அருளானது தானாகவே வந்து அவனிடத்து வெளிப்படும் என்கிறார் அருணகிரிநாதர். 

“தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்

இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்

கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.”   --கந்தர் அலங்காரம்.

    அவன் அந்த அருளை ஆள்வான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். “நல்லாற்றான் நாடி அருள் ஆள்க, பல்லாற்றான் தேடினும் அஃதே துணை” என்பது திருக்குறள். பொருளை ஆள்வதை விட, அருளை ஆள்வதே சிறந்தது என்பது மட்டுமல்ல, அதுவே எளிமையில் கிட்டுவதும் கூட. எனவேதான், “அருள் ஆள்க” என்கின்றார் நாயனார். அந்த அருளை ஆளுகின்ற நிலையைப் பெற்றபின், அந்த அருளே அவனுக்குத் துணையாக நின்று அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் அல்லாத மற்றவருக்கும் நலம் பயக்கும்.

         எனவே, பிறரை ஆள நினைக்கின்றவர்கள், உலகை ஆள நினைக்கின்றவர்கள், அருளை ஆள முதலில் பயிலவேண்டும். பிற துணையை நாடாது, அருளையே துணையாக நாடவேண்டும் இந்த உண்மையினை வற்புறுத்தி, “அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை” என்று தெளிவாகவும், துணிந்தும் கூறுகின்றார். அருளாளனுடைய செயல் எப்படி அமையவேண்டும் என்பதையும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார். “மன்னுயிர் ஒம்பி, அருள் ஆள்வார்க்கு இல் என்ப, தன் உயிர் அஞ்சும் வினை” என்கிறார். பெற்றுள்ள செல்வத்தால், மன் உயிர் ஓம்பி அருளை ஆளவேண்டும் என்று எண்ணுகின்ற அருளாளனுக்கு புறத் தோற்றங்கள் எல்லாம் மறைந்து விடும். இன்னார் - இனியார், உற்றார் – மற்றவர், எமது நாட்டான் - பிறநாட்டான் என்ற மாறுபாடு தோன்றாது.  இதுவே அருளாளன் நிலை. 

  "எவ்வுயிரும் பராபரன் சந்நிதி” என்றனர் சமயச் சான்றோர். திருவள்ளுவர் “மன்னுயிர் ஒம்பி” என்கின்றார். புறத் தோற்றமாகிய உடலைச் சொல்லவில்லை. கண்ணால் காண முடியாத நிலையில் ஒவ்வொரு உடம்பிலும் குடிகொண்டு உள்ள உயிரைச் சொல்லுகின்றனர். அவ்வுயிர் என்றும் நிலைபெற்று உள்ளது என்பதால், “மன்னுயிர்” எனப்பட்டது. அந்த உயிரை ஓம்பவேண்டும். “ஒம்புதல்” என்ற சொல் மிக உயர்ந்தது. அவ்வாறு “மன்னுயிர் ஒம்பின், தன் உயிர்க்கும் ஏதம் இல்லை”  என்பது திருவள்ளுவ நாயனார் அருள்மொழி. முல்லைக்குத் தேர் ஈந்த பாரியும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனும், புறா ஒன்றிற்காகத் தனது உடம்பேயை அறுத்துத் தந்த சிபியும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளற் பெருமானும் இவ்வாறு வாழ்ந்து காட்டியவர்களே.

        உலகில் வலியாரும், மெலியாரும் என்றுமே உள்ளனர். தன்னின் மெலியாரைச் சாடி, வருத்தித் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது மனிதநிலை. தனி மனிதனாயினும் சமூகமாயினும் நாடுகளாயினும் இந்த நியதிக்கு விலக்கு இல்லை. எனவேதான் இந்தக் கொடுமைக்கு மருந்தாக - மாற்றாக – அருளுடைமை. என்னும் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில் நம்மைத் தெருட்டுகிறார் நாயனார். “நீ உன்னினும் வலி குன்றியவனைத் துன்புறுத்தி, உன் வாழ்வை வளமாக்க நினைக்கிறாயே, அதோ அந்தப் பக்கம் உன்னினும் வலியவன் ஒருவன் உன்னைத் தாக்கி, புடைத்து, அழித்துத் தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு வருவது உனது கண்ணுக்குத் தெரியவில்லையா?”  என்று கேட்கிறார்.

“முடவனை மூர்க்கன் கொன்றால்,

     மூர்க்கனை முனிதான் கொல்லும்;

மடவனை வலியான் கொன்றால்,

     மறலிதான் அவனைக் கொல்லும்;

தடவரை முலைமாதே! இத்

     தரணியில் செருக்கினாலே,

மடவனை அடித்த கோலும்

     வலியனை அடிக்கும் கண்டாய்.”

என வரும் விவேக சிந்தாமணிப் பாடல் இத் திருக்குறளைப் பற்றி எழுந்ததே ஆகும்.

இதன் பொருள் –-

    விசாலமான மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே!  இந்த உலகத்தில், கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால், அந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான். அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால், அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான். செல்வச் செருக்கு காரணமாக, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது, பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் வந்து பொருந்தி, (முன்னே ஏழையை அடித்த வலியவனை) அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.

    இதை எண்ணிப் பார்க்கின்ற நல்ல மனம் இருந்தால், மற்றவருக்குக் கொடுமை இழைக்க யாருக்கும் மனம் வராது.  உலகம் அருளற்ற, அவல வாழ்வில் மனம் செல்லாது. பொருள் பொருள் என்று அலைந்து திரிந்து, பிறரை வறுத்தி வாழும் அவலநிலை நீங்க வேண்டும். எல்லோரும் அருளுடையராய் வாழ்தல் வேண்டும்.





4. இனிய சொல்லை யாவரும் விரும்புவர்

“மென்மதுர வாக்கால் விரும்பும் சகம், கடின

வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம், - நன்மொழியை

ஓதுகுயில் ஏதுஅங்கு உதவியது? கர்த்தபந்தான்

ஏதுஅபரா தம்செய்தது, இன்று.” — நீதிவெண்பா


இனிமையான குரல் உள்ள குயிலானது எதைக் கொடுத்தது?   யாரும் விரும்பாத கத்தலை உடைய கழுதை எதைக் கெடுத்தது? ஓசை நயத்தால்தான் குயிலை விரும்புவர்கள் கழுதையை வெறுக்கிறார்கள். அதுபோல, மென்மையான இன்மொழியைக் கேட்டே மகிழும் உலகத்தவர்தான் கடுமையான வன்சொல்லைக் கேட்டு வெறுக்கிறார்கள். (மதுரம் - இனிமை.  சகம் - உலகத்தினர். கர்த்தபம் - கழுதை.  அபராதம் - கெடுதி.)


63. முழுப் பூசணிக்காயை மறைத்தல்

 

“தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்

வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே

     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்

புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்

     லாதொருவர் போதிப் பாரோ!

நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்

     மறைத்ததுவும் நிசம தாமே!”


இதன் பொருள் –


தத்தை மொழி உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம் தழைத்த நாட்டில் -  கிளியெனப் பேசும் உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டுள்ள திருத்தண்டலை இறைவரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே மேன்மை இல்லை - அறிவுடைய அமைச்சன் இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, வேந்தர்க்கு எல்லாம் புத்தி நெறி நீதி சொல்லும் மந்திரி அல்லாது ஒருவர் போதிப்பாரோ - அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும்,  அரசு முறைமையையும் கற்பிக்கும் அமைச்சரை அன்றி வேறு ஒருவர் கற்பிப்பாரோ?, நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய் மறைத்ததுவும் நிசமது ஆம் - நாள்தோறும் உண்ணும் உணவிலே முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (அமைச்சர் இல்லாத அரசவையிலே) உண்மையாக முடியும்.


“முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமோ?” என்பது பழமொழி. அறிந்தோ அறியாமலோ மறைவாக நிகழ்ந்துவிட்ட தவறை அல்லது வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்றைத் தனது அறிவீனத்தால் மறைக்க முற்படுவதை இது குறிக்கும். மந்திரியைச் ‘சுமதி’ என்று திருவிளையாடல் புராணம் கூறும். ‘சுமதி’ என்றால் நல்லறிவு உடையவன் என்று பொருள். (சு=நல்ல. மதி=அறிவு) மதிமந்திரி என்று அமைச்சனைக் கூறுதல் உண்டு. “மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று நறுந்தொகை கூறும். அமைச்சனுக்கு அழகாவது மேல் வரும் காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல் ஆகும். 


3. அறிவுடையாரின் பகைமை நல்லது

 


“அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்,

சிறுவன் பகையாம், செறிந்த - அறிவுடைய

வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான், முன்

கொன்றதுஒரு வேந்தைக் குரங்கு.” — நீதிவெண்பா

முன் ஒரு காலத்தில் அறிவும் வெற்றியும் உடைய வேடன் ஒருவன், ஒரு அந்தணன் உயிரைக் காத்தான். ஒரு குரங்கு ஓர் அரசனை அறிவில்லாமையால் கொன்றுவிட்டது. அதுபோல, அறிவு உடையவன் பகைவன் ஆனாலும் அன்புள்ள நண்பனாக விளங்குவான். அவனால் யாதொரு தீங்கும் நேராது. ஆனால், அறிவு இல்லாதவன் நண்பனாக இருந்தாலும், அவனால் நன்மை இல்லை. அவன் பகைவனாக மாறவும் கூடும்.

    (அறிவன் - அறிவுடையவன். சிறுவன் - அறிவில்லாதவன். செறிந்த - நிறைந்த. வென்றி - வெற்றி. வனசரன் - காட்டில் திரிபவன், வேடன். வேதியன் - பார்ப்பனன்.)

வனசரன் கதை.

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒர் அந்தணனுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். மணியை வாங்கிய அந்தணன்  அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகையில், வழியில் யாரேனும் கள்வர் கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, வீட்டிற்குச் சென்றதும் மணியைக் கக்கி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அம் மணியை வாயில் போட்டுக் கொண்டான்.  இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தணனைத் தொடர்ந்து போய் வழிமறித்து, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அந்தணன் அதனைக் கேட்டு அஞ்சி, "மாணிக்கம் உன் வயிற்றில் தானே உள்ளது" என்று சொன்னான். இருவரும் இவ்வாறு வாதிட்டுக் கொண்டு இருக்கும்போது,  திருடர்கள் வந்து அந்தணனைப் பிடித்துக் கொண்டு மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள். அந்தணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அவன் அறிவு உள்ளவன். ஆதலால், அவன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, அவனைக் காக்க எண்ணி, திருடர்களைப் பார்த்து, "ஐயா நாங்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டு இருந்தோம். மாணிக்கம் வயிற்றில் எப்படி இருக்கும்.  வேண்டுமானால் என் வயிற்றை அறுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான். வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்த திருடர்கள் மாணிக்கம் இல்லாதது கண்டு, வேடனை வீணாகக் கொன்றுவிட்டோமே என்று எண்ணி, அந்தணனை விட்டுவிட்டார்கள். அந்தணன் உயிர் பிழைத்தான் மாணிக்கத்தோடு. வேடன் அந்தணனுக்குப் பகைவனாக இருந்தாலும் அவன் அறிவு உள்ளவனாக இருந்ததால், அந்தணன் மீது அன்பு கொண்டு அவனைக் காக்கத் தனது உயிரை விட்டான்.

குரங்கின் கதை

ஓர் அரசன், ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.  ஒரு நாள் அரசன் அக் குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, "இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே" என்று ஆணையிட்டு உறங்கச் சென்றான். அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து அமர்ந்தது. குரங்கு அதனைப் பார்த்து, அந்த ஈயைக் கொல்லத்தான் அரசன் தன்னிடம் கத்தியைக் கொடுத்துள்ளான் என எண்ணியது. அதன் அறிவின்மைதான் காரணம். அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஓங்கிக் குத்தியது. ஈ பறந்து விட்டது. ஆனால் அரசன் மாண்டான். அரசனிடம் குரங்கு அன்புடனிருந்தாலும், அறிவின்மையால் இத் தீங்கு அரசனுக்கு நேர்ந்தது.

        அறிவு உடைய ஒருவன் பகைவனாக இருந்தாலும், அந்தப் பகைமை காரணமாகத் தீங்கு செய்யமாட்டான். அறிவில்லாதவனோடு நட்புக் கொண்டால், அவனது அறியாமையால் அவன் செய்கின்ற தீய செயலினால் துன்பம் வரும். எனவே, அறிவில்லாதவனது நட்பை விட, அறிவுடையவனது பகைமையே நல்லது.

“பேதை பெரும் கெழீஇ நட்பின், அறிவு உடையார்

ஏதுஇன்மை கோடி உறும்.”

என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் பின்னாளில் எழுந்தது எனக் கருதலாம்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"மாயமா ரீசன் மடிந்தான், கவுசிகன்தான்

ஏயதவம் உற்றான், இரங்கேசா! - ஆயதனால்

பேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார்

எதின்மை கோடி யுறும்."

இதன் பொருள் ---

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே!  மாய மாரீசன் - மாயமானாகி வந்த மாரீசன் என்பான், மடிந்தான் - (இராவணனோடு நெடுநாள் நட்புக் கொண்டிருந்தும், அவன் பேச்சைக் கேட்டு, அதன்படி செய்ததால், இராமன் கை அம்பால்) இறந்தான், கவுசிகன் தான் - விசுவாமித்திரன், ஏய தவம் பெற்றான் - வசிட்டரோடு பகை கொண்டிருந்தும் இசைந்து செய்து தவ மகிமையைப் பெற்றான், ஆயதனால் - ஆகையால், இது, பேதை பெரும் கழீஇ நட்பின் - அறிவில்லாதவனது மிகவும் நெருங்கிய நட்பைக் காட்டிலும், அறிவு உடையார் ஏதின்மை - நல்லறிவு உடையவரது பகைமை, கோடி உறும் - கோடி பங்கு நன்மை பெறும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- பேதை நட்பின், மேதை பகையே மேலானது.

விளக்கவுரை --- மூடனாகிய இராவணனுக்கும் மாரீசனுக்கும் பல்லாண்டு நேசம் பெருகி மருகன் மாமன் முறை ஏற்பட்டு இருந்தது. இருந்தும் பேதையாகிய இராவணன் பேச்சைக் கேட்டு, அதன்படி மாயமானாகி சீதாபிராட்டிக்கு எதிரில் சென்ற மாரீசன், இராமன் அம்பால் உயிர் துறந்து மாண்டான்.  

"பிரம்மரிஷி" (பெருமுனி) என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு ஏற்றவாறு வழங்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தது. இத்தகைய பட்டம் பெற்றவர் மற்ற முனிவர்களில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார். ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை "மகரிஷி" என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை "பிரம்மரிஷி" என்பர். எவர் ஒருவர் பிரமஞானம் பெற்றவராக கருதப்படுகின்றாரோ, அவரே பிரம்மரிஷி என்று அழைக்கப்படுவார். பிருகு, அத்திரி, அங்கிரசர், காசிபர், விசுவாமித்திரர், வசிட்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் சப்தரிஷிகள் எனப்படுவர்.

ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காகத் தனது படைகளுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிட்டரின் ஆசிரமம் பக்கமாக வந்தான்.. தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிட்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றார்.

அதற்கு கெளசிகன், "எனக்கும், எனது படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீங்கள் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்துப் பரிமாற முடியும்?’’ என்று கேட்டான்.

வசிட்டர்,  "முடியும், மன்னா!  நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்று நேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகி விடும்" என்றார்.

பிறகு வசிட்டர், தனது ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, "வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்"  என்றார். அப்படியே சற்று நேரத்தில் அறுசுவை விருந்து தயாரானது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

வசிட்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன்,  "கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறு கேட்டான். வசிட்டர் மறுத்தார்.

வசிட்டரின் பெருமை அறியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிட்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

வசிட்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், "தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். "கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’" என்று வசிட்டர் சொல்ல, "படை பரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்" என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டான்.

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றான். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு, இலிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூசை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், இராமலட்சுமணர்களை அழைத்து வந்தார். இராமபிரான் தாடகையை அழிக்க அத்திரம் தொடுத்தார். இராமரின் அத்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிந்தாள்.

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திரருக்குக் காட்சி கொடுத்து "இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய், காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிட்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிட்டரே உனக்கு குரு ஆவார்" என்று அருள் செய்தனர்.

வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் பெரும் பகை நேரிட்டு இருந்தது. இருந்தும் வசிட்டர் மேதாவி. ஆகையால், அவரோடு பகை கொண்ட விசுவாமித்திரருக்கு நன்மையே உண்டாயிற்று. அந்தப் பகைமை காரணத்தால், அவர் கடும் தவம் புரிந்தார். ஆகையால், அருந் தவமுனிவராய், வசிட்டர் மெச்சும் வேதிய முனிவராய் விளங்கினார். பகைமை உணர்வு கொண்டு இருந்த வசிட்டரால் விசுவாமித்தரருக்கு யாதொரு நீங்கும் நேரவில்லை.

இதனால் இராவணனைப் போன்ற பேதையின் பெருங்கழீஇ நட்பைப் பார்க்கிலும், வசிட்டரைப் போன்ற அறிவுடையாரது ஏதின்மை கோடி உறும் என்பது விளங்குகின்றமை காண்க.


"இசைந்த சிறுமை இயல்பு இலா தார்கண்

பசைந்த துணையும் பரிவாம், - அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்

பகையேயும் பாடு பெறும்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

இசைந்த சிறுமை இயல்பிலாதார்கண் பசைந்த துணையும் பரிவாம் - தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களை உடைய பண்பிலாதாரிடத்தில் நேயங் கொண்ட அளவும் துன்பமேஆம்; அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவினார்கண் - மாறிய செயல்களை விளையாட்டாகவும் விரும்பாத சிறந்த அறிஞர்களிடத்தில், பகையேயும் பாடு பெறும் - பகை கொள்ளுதலும் கூட மாட்சிமைப் படும்.

பெரியோரிடத்துப் பகைசெய்தலினும், சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெருந்தீங்கு பயக்கும்.


"நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவில் என்னும்

சொல்வழி கண்டனம் யாம்,தொகு சீர்த்தில்லை அம்பலத்து

வில்வழி தானவர் ஊர் எரித்தோன், வியன் சாக்கியனார்

கல்வழி நேர்நின்று அளித்தனன் காண்க சிவகதியே."

                             --- கோயில் திருப்பண்ணியர் விருத்தம். 11-ஆம் திருமுறை.

    "நொய்யார் உறவில் நல்வழி நின்றார் பகை நன்று" என்னும் சொல்லாவது -- சாக்கிய நாயனார் சிவலிங்கத்தைக் கல்லால் எறிதலை நியமமாகக் கொண்டு செய்து முத்தி பெற்றார். கல்லால் எறிதல் பகைமைச் செயலாயினும் அன்பு காரணமாகச் செய்யப்பட்டது. இங்ஙனமே கண்ணப்ப நாயனார் தமது செருப்புக் காலைச் சிவலிங்கத்தின் மேல் வைத்ததும். இதனால், `நல்வழியில் நிற்கும் நல்லோர் பிறர்க்குத் தீங்குபோல எவற்றையேனும் செய்வாராயினும் அச் செயற்குக் காரணம் பகைமையாகாது, அன்பேயாய் இருக்கும்.


62. அரிசி உண்டேல் வரிசை உண்டு

 


“பிரசம்உண்டு வரிபாடும் தண்டலையார்

     வளநாட்டிnf பெண்க ளோடு

சரசம்உண்டு! போகம் உண்டு! சங்கீதம்

     உண்டு! சுகம் தானே உண்டு இங்கு

உரைசிறந்த அடிமையுண்டோ? இடுக்கணுண்டோ?1

     ஒன்றும்இல்லை! உலகுக் கெல்லாம்

அரிசியுண்டேல் வரிசைஉண்டாம்!அக்காளுண்

     டாகில்மச்சான் அன்புண் டாமே!”


இதன் பொருள் –


வரி பிரசம் உண்டு பாடும் தண்டலையார் வள நாட்டில் - வண்டுகள் தேனைப் பருகி ரீங்காரம் செய்கின்ற திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்திய நாட்டிலே, பெண்களோடு சரசம் உண்டு – பெண்களாலே இனிய பண்பு உண்டாகும், போகம் உண்டு - பொருள் உண்டாகும், சங்கீதம் உண்டு - இசையின்பம் உண்டாகும், சுகம் தானே உண்டு - நலமும் கிடைக்கும், இங்கு உரை சிறந்த அடிமை உண்டோ? - இவ் வாழ்வில் பேச்சில் சிறந்த அடிமைத் தன்மை உண்டோ?,  இடுக்கண் உண்டோ? - துன்பம் உண்டோ?,  ஒன்றும் இல்லை - யாதும் இல்லை, உலகுக்கு எல்லாம் அரிசி உண்டேல் வரிசை உண்டாம் – உலகத்திற்கு எல்லாம் அரிசி இருந்தால் சிறப்பு உண்டு, அக்காள் உண்டாகில் மச்சான் அன்பு உண்டாம் - தமக்கை இருந்தால் (அவள் மூலம்) மைத்துனன் அன்பு கிடைக்கும்.


      பிரசம் - தேன். வரி - வண்டு. போகம் : அனுபவப் பொருள்கள். இல்லாளே இல்லத்துக்கு வேண்டியவற்றை ஒழுங்கு செய்து வைப்பவள். ஆகையால் அவளிருந்தால் பொருள் உண்டு, போகம் உண்டு என்றார். “இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை” என்னும் ஔவையார் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக. “இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால்” என்னும் திருவள்ளுவ நாயனார் பொய்யாமொழியையும் இங்கு வைத்து எண்ணுக. அரிசி செல்வத்தைக் குறிக்கும். ‘அக்காள் இருந்தால் மச்சான் உறவு உண்டு' என்பது பழமொழி. ‘உரை சிறந்த அடிமை' என்பது வஞ்சப் புகழ்ச்சி (புகழ்வது போலப் பழித்தல்)


2. பெரியோர் தொடர்பு - சிறியோர் தொடர்பு

அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும்

பெருகுஒளிசேர் முத்தும் பெறலாம், - நரிநுழையில்

வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்

தோலும்அல்லால் வேறும்உண்டோ சொல்.


சிங்கத்தின் குகையிலே புகுந்தால் அங்கே மற்ற மற்ற விரும்பப் படாத பொருள்கள் இருக்குமாயினும், அங்கே யானையின் தந்தமும், அதினின்றும் மிக்க ஒளி பொருந்திய முத்தும் கிடைக்கப் பெறலாம்.  நரியின் குழியிலோ, அறுந்த வால்களும், சிறிய மயிர்களும், உடைந்த எலும்பும், கழுதையின் தோலும் ஆகிய இவ்வகையான தாழ்ந்த பொருள்களை அல்லாமல், வேறு உயர்ந்த பொருள்கள் எவையேனும் கிடைக்குமா, சொல்வாயாக.

        (அரி - சிங்கம்.  மந்திரம் - குகை.  மருப்பு - கொம்பு.  நுழை - குழி. கர்த்தபம் - கழுதை.) 

        உயர்வு பெற விரும்பினால் உயர்ந்தோரிடமே சேர வேண்டும் என்பது கருத்து.


61. குரங்கின் கையில் பூமாலை


பரங்கருணை வடிவாகும் தண்டலையார்

     வளநாட்டில் பருவம் சேர்ந்த

சரங்குலவு காமகலை தனையறிந்த

     அதிரூபத் தைய லாரை

வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக்

     கேகொடுத்தால் வாய்க்கு மோதான்?

குரங்கினது கையில்நறும் பூமாலை

     தனைக்கொடுத்த கொள்கை தானே!


இதன் பொருள் ---


      பரங்கருணை வடிவு ஆகும் தண்டலையார் வளநாட்டில் - உயர்வான அருள் உருவாகிய திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டினில், பருவம் சேர்ந்த காமசரம் குலவு கலைதனை அறிந்த அதிரூபத் தையலாரை - (மங்கைப்) பருவம் அடைந்த இன்பக் கலையைத் தெரிந்த பேரழகுடைய பெண்களை, வரம்பு உறு தாளாண்மை இல்லா மட்டிகளுக்கே கொடுத்தால் வாய்க்குமோ - கட்டுப்பாட்டில் அடங்கிய, முயற்சியற்ற மூடர்களுக்குத் துணைவியர் ஆக்கினால் பொருத்தமாகுமோ?, குரங்கினது கையில் நறும் பூமாலை தனைக் கொடுத்த கொள்கைதானே - (அவ்வாறு ஆக்கினால்) குரங்கின் கையிலே மணமுள்ள மலர் மாலையை அளித்த கொள்கையைப் போலாகும்.


      ‘குரங்கின் கையில் கொடுத்த பூமாலை' என்பது பழமொழி. “தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு” என்பது குமரேச சதகம். தனக்கு நன்மையைச் சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டைப் பிய்த்து எறிந்த குரங்கின் கதை அறிந்ததே. “மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ?” என்று குமரேச சதகம் கூறும்.


நல்லோர் எங்கும் தோன்றலாம்

"தாமரை,பொன், முத்து, சவரம்,கோ ரோசனை,பால்

பூமருதேன், பட்டு, புனுகு,சவ்வாது, - ஆம்அழல்மற்று

எங்கே பிறந்தாலும் எள்ளாரே, நல்லோர்கள்

எங்கே பிறந்தாலும் என்?"


தாமரை மலரும், பொன்னும், முத்தும், சாமரையும், கோரோசனையும், பாலும், மணமிக்க பூவில் கிடைத்த தேனும், பட்டும், புனுகும், சவ்வாதும். நெருப்பும் ஆகிய இவை பதினொன்றும் கீழான இடத்தில் இருந்து கிடைத்தாலும் அவற்றை யாரும் இகழ்ந்து கூறமாட்டார்கள். அதுபோல, நற்குணம் உடையவர்கள் எந்த இனத்தில் பிறந்து இருந்தாலும் இகழப்பட  மாட்டார்கள்.


தாமரை சேற்றில் விளைவது. தாமரையை விரும்புபவர்கள் சேற்றை விரும்பமாட்டார்கள். பொன் மண்ணிலிருந்து கிடைப்பது. மண்ணை விரும்பாமல் பொன்னையே விரும்புவர். முத்து சிப்பியில் இருந்து பெறப்படுவது. சிப்பியை விரும்பாமல் முத்தையே விரும்புவர். சாமரை கவரிமானின் மயிர்த்தொகுதி. கோரோசனை பசுவின் வயிற்றிலும், பால் பசுவின் மடியிலும் கிடைப்பது. தேன் அடையில் கிடைப்பது. பட்டு, பூச்சியின் எச்சில். புனுகு, சவ்வாது ஒருவகைப் பூனையின் உடலில் இருந்து பெறப்படும் அழுக்கு. நெருப்பு இழிந்த கட்டையிலும் விளங்கும்.


(சவரம் - கவரி. பூ - அழகு. மரு - மணம்.  அழல் - நெருப்பு. எள்ளார் - இகழார்.)


60. இவர்க்கு இது இல்லை

கற்றவர்க்குக் கோபமில்லை! கடந்தவர்க்குச்

     சாதியில்லை! கருணை கூர்ந்த

நற்றவர்க்கு விருப்பமில்லை! நல்லவருக்

     கொருகாலும் நரகம் இல்லை!

கொற்றவருக் கடிமையில்லை! தண்டலையார்

     மலர்ப்பாதம் கும்பிட் டேத்தப்,

பெற்றவர்க்குப் பிறப்பில்லை! பிச்சைச்சோற்

     றினுக்கில்லை பேச்சுத் தானே.


இதன் பொருள்  ---


கற்றவர்க்குக் கோபம் இல்லை – கற்று அறிந்தவருக்குச் சினம் இல்லை, 


கடந்தவர்க்குச் சாதி இல்லை – பற்றுக்களைக் கடந்தவர்க்குச் சாதி வேறுபாடு இல்லை, 


கருணை கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை - அருள் மிகுந்த நல்ல தவத்தினர்க்கு எதிலும் பற்று இல்லை, 


ஒருகாலும் நல்லவர்க்கு நரகம் இல்லை - எப்போதும் நல்லவர்களுக்கு நரகம் இல்லை, 


கொற்றவருக்கு அடிமையில்லை - அரசர்கள் (பிறர்க்கு) அடிமையாவது இல்லை, 


தண்டலையார் மலர்ப்பாதம் கும்பிட்டு ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின் மலரடியை வணங்கி வாழ்த்தும் பேறு பெற்றவர்கட்குப் பிறவித் துன்பம் இல்லை, 


பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை - இரந்து உண்ணும் உணவுக்கு எந்தப் பேச்சும் இல்லை.


பிறரை வஞ்சித்தல், பிறர் பொருளைத் திருடுதல், பொய் சொல்லல் முதலான தொழில்களைச் செய்பவன் பிறருக்குக் கேடு விளைவிப்பதோடு, தானும் கெட்டுப் போவான். அவற்றினும் பிச்சை எடுத்தல் இழிவானது அல்ல. ‘பிச்சைச் சோற்றினுக்கு இல்லை பேச்சுத்தானே' என்றார். 


பொது --- 1113. ஞாலமோடு ஒப்ப

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஞாலமோடு ஒப்ப (பொது)


முருகா! 

தேவரீரது திருவடியை நாள்தோறும் வழிபட,  உபதேசப் பொருளை அருள்வாய்.


தானனா தத்தனத் தானனா தத்தனத்

     தானனா தத்தனத் ...... தனதான


ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்

     தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம்


நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்

     டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே


நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

     டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா


நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்

     றோதநீ திப்பொருட் ...... டரவேணும்


கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்

     தானும்வே தக்குலத் ...... தயனாருங்


கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்

     போதுறா நிற்பஅக் ...... கொடிதான


காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்

     கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக்


காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்



ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா, நற்சொலைத்

     தீது எனா, நல் தவத்து ...... அணைவோர்தம்


நாதமோடு உள்கருத்து ஓடவே தர்க்கம் இட்டு,

     ஓயும் நாய் ஒப்பவர்க்கு ...... இளையாதே,


நீலமேனிக் குலத் தோகை மேல் உற்று, நிட்-

     டூர சூர் கெட்டு உகப் ...... பொரும்வேலா!


நேசமாய் நித்தம் நின் தாளை, நீள் அச்சம்அற்று

     ஓத நீதிப் பொருள் ...... தரவேணும்.


கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்-

     தானும், வேதக் குலத்து ...... அயனாரும்,


கூறும் வான், அப்புவிக்கு ஊறு தீரக் குறிப்பு

     ஓது உறா நிற்ப, அக் ...... கொடிது ஆன


காலன் மார்பு உற்று உதைத்தானும், ஓர் கற்பு உடைக்

     கோதை காமக் கடற்கு ...... இடைமூழ்கக்


காவிசேர் கொத்து அலர்ப் பாணம் ஏய் வித்தகக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


பதவுரை


    கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும் --- அழகிய திருப்பாற்கடலின் நடுவில், கோபம் நிறைந்த பாம்பாகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொண்டுள்ள திருமாலும்,


    வேதக் குலத்து அயனாரும் --- வேதம் ஓதும் குலத்துப் பிரமனும்,


    கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும் --- சொல்லப்படுகின்ற வானுலகத்திலும் நிலவுலகத்திலும் உள்ளோருக்கு நேரும் இடையூற்றினைத் தீர்க்கும் வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, (தன்னை வழிபட்ட மார்க்கண்டேயருக்காக) அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும்,


    ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க --- (முறையே திருமகள், கலைமகள், மலைமகள் ஆகிய) ஒப்பற்ற கற்பு வாய்ந்த பெண்ணுடன் கூடி காமக் கடலின் இடையே முழுகும்படிக்கு,


    காவி சேர் கொத்து அலர் அப் பாணம் ஏய் வித்தகக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- நீலோற்பல மலர்களின் கொத்தால் ஆன கணையை அவர்கள் மீது எய்யும் வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே!


    ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல்சொலைத் தீது எனா --- மக்களே! உலகத்தோடு ஒட்ட ஒழுகல் நல்லது என்று சொல்லப்படும் நல்ல உபதேசத்தை தீது என்று கருதி,


    நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே --- நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் அறிவுரையையும், அவர்கள் சொன்ன அறிவுரையின் உண்மைக் கருத்தும், தாங்கள் புரியும் தருக்க வாதத்தில் பின்னிட்டு ஓடும்படி அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் தோற்றுப் போகாமல்,


    நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று --- நீலநிறமும் தோகையும் உடைய மயிலின் மீது இவர்ந்து,


    நிட்டூர சூர் கெட்டு உகப் பொரும் வேலா ---   கொடியவன் ஆகிய சூரபதுமன் அழிந்து போகுமாறு போர் புரிந்த வேலாயுதப் பெருமானே!


    நேசமாய் நித்த(ம்) நின் தாளை --- நாள்தோறும் அன்புடன் தேவரீரது திருவடிகளை,


     நீள் அச்சம் அற்று ஓத நீதிப் பொருள் தரவேணும் --- அச்சம் சிறிதும் இல்லாமல் ஓதி வழிபடுவதற்கு உரிய சாத்திரப் பொருளை உபதேசித்து அருள் வேண்டும்.


பொழிப்புரை


         அழகிய திருப்பாற்கடலின் நடுவில், கோபம் நிறைந்த பாம்பாகிய ஆதிசேடன் மீது அறிதுயில் கொண்டுள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், சொல்லப்படுகின்ற வானுலகத்திலும் நிலவுலகத்திலும் உள்ளோருக்கு நேரும் இடையூற்றினைத் தீர்க்கும் வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, (தன்னை வழிபட்ட மார்க்கண்டேயருக்காக) அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், முறையே திருமகள், கலைமகள், மலைமகள் ஆகிய ஒப்பற்ற கற்பு வாய்ந்த பெண்ணுடன் கூடி காமக் கடலின் இடையே முழுகும்படிக்கு, நீலோற்பல மலர்களின் கொத்தால் ஆன கணையை அவர்கள் மீது எய்யும் வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே!

        மக்களே! உலகத்தோடு ஒட்ட ஒழுகல் நல்லது என்று சொல்லப்படும் நல்ல உபதேசத்தை தீது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் அறிவுரையையும், அவர்கள் சொன்ன அறிவுரையின் உண்மைக் கருத்தும், தாங்கள் புரியும் தருக்க வாதத்தில் பின்னிட்டு ஓடும்படி அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் தோற்றுப் போகாமல், நீலநிறமும் தோகையும் உடைய மயிலின் மீது இவர்ந்து, கொடியவன் ஆகிய சூரபதுமன் அழிந்து போகுமாறு போர் புரிந்த வேலாயுதப் பெருமானே! நாள்தோறும் அன்புடன் தேவரீரது திருவடிகளை, அச்சம் சிறிதும் இல்லாமல் ஓதி வழிபடுவதற்கு உரிய சாத்திரப் பொருளை உபதேசித்து அருள் வேண்டும்.


விரிவுரை


ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல்சொலைத் தீது எனா --- 

    “உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி.

    கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகும். எனவே, அந்த ஒழுக்கத்தைக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார். உயர்ந்தாரொடு பொருந்த நடத்தலாவது, உயர்ந்தார் பலரும் நடந்து காட்டிய வழியில் நடத்தல். அறிவில்லாதார், அவரைப்போன்ற அறிவிலாதார் ஒழுக்கத்தையும், அவர்கள் செய்யும் செயலையும் நியாப்படுத்தி, அறிவுடையோர் கூறும் நற்சொற்களை ஏளனம் செய்து ஒழுகுவர். உலகம் என்னும் சொல் உலகத்தில் வாழும் உயர்ந்தோரையே குறிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.


உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே --- பிங்கலந்தை.


உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்னே.   ---   நன்னூல்.

நூல் நடையோடு உலக நடையும் அறிதல் வேண்டும். நூல்களுள் சொல்லியவற்றுள், இக் காலத்திற்குப் பொருந்தாதவற்றை ஒழித்து, நூல்களுள் சொல்லாதனவற்றுள், இக் கால நடைக்குப் பொருந்துவனவற்றை அறிந்து நடத்தல் வேண்டும்.

“தேரோடு மணிவீதித் தண்டலையார்

வளங்காணும் தேச மெல்லாம் 

போரோடும் வில்படைத்து வீராதி

வீரரென்னும் பகழே பெற்றார், 

நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு

நடப்பதுவே நீதி யாகும், 

ஊரோட உடனோட நாடோட

நடுவோடல் உணர்வு தானே.” ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும் தேசம்  எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய தெருக்களையுடைய தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரர் எனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றி அடைந்து மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும், நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச் செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும், ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும் செல்லும் நெறியிலே தாமும் நடத்தல் அறிவுடைமை ஆகும்.

“குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும்

விலங்காமல் எய்தியக் கண்ணும் ---  நலம்சான்ற

மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை

நெய்யிலாப் போல்சோற்றின் நேர்.” ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம் ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும் தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால் சோற்றின் நேர் - இன்பம் நிரம்பிய தீதற்ற தொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலக ஒழுக்கம் அறியானாய் இருத்தல் நெய் இல்லாத பால் சோற்றினுக்கு ஒப்பாகும்.


நல் தவத்து அணைவோர் தம் நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு இளையாதே --- 

    நல் தவத்து அணைவோர் தம் நாதம் --- நல்ல தவத்தைப் பயிலுகின்றவர்களின் திருவாயில் இருந்து பிறக்கும் சொல். அவர்கள் கூறும் அறிவுரையை மறுத்துப் பேசும் இயல்பு உடையவர்கள் நாய்க்கு ஒப்பாவார்கள். 

"அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;

கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்

செவ்விய கொளல்தேற்றா தாங்கு"     -- நாலடியார்.

இதன் பொருள் ---

இறைச்சியை எடுத்துக் கொண்டு, வீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்கு, பால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாத பெரியோர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது, நல்லறிவு இல்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.

"குக்கலைப் பிடித்து நாவிக் 

கூண்டினில் அடைத்து வைத்து,

மிக்கவே மஞ்சள் பூசி, 

மிகுமணம் செய்தாலும் தான்,

அக்குலம் வேறதாமோ? 

அதனிடம் புனுகு உண்டாமோ?

குக்கலே குக்கல் அல்லால், 

குலம் தனில் சிறந்ததாமோ?"    -- விவேக சிந்தாமணி.

தெருநாயைப் பிடித்து,  புனுகு பூனையை அடைக்க வேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து, அதற்குத் தினந்தோறும் மேன்மையான மஞ்சளைப் பூசி, மிக்க நறுமணமுடையதாக ஆக்க முயற்சித்தாலும், அந் நாயானது தனது நிலையில் இருந்து மாறி, புனுகுப் பூனையாக ஆகிவிடுமோ? அதனிடத்தில் மணம் மிகுந்த வாசனைப் பொருளான புனுகுதான் உண்டாகுமா?  நாய் என்றுமே நாய்தான். அது என்றும் உயர்ந்த புனுகுப் பூனை ஆகாது. 

நாயினது வால் இயல்பகாவே கோணலாக இருக்கும். அதை நேராக்க யாராலும் முடியாது. அதுபோல, கீழ்மக்கள் மனக்கோட்டம் உள்ளவராக இருப்பதால், அவர் எவர் சொல்லையும் கேட்டுத் திருந்தமாட்டார். எனவே, அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற குற்றத்தைச் செய்து அவமானப் படவேண்டாம் என்பது கருத்து.

நாயினது இயல்பு எப்படி, நல்லவற்றை ஒதுக்கி விட்டு, அல்லாதவற்றைக் கொள்ளுமோ, அதுபோலவே மனித மனமும். நல்வழிப்படுத்துகின்றவர் பார்வையில் இருக்கும்வரை நல்லவனாக இருக்கும். கொஞ்சம் காவல் குறைவு பட்டால் அது தனது இயல்பான வேலையில் இறங்கும். ஆசிரியர் இருக்கும் வரை மாணவர்கள் அடங்கி இருப்பார்கள். ஆசிரியர் இல்லாத போது வாலை அவிழ்த்துவிட்டுக் கொள்வார்கள்.

எவ்வளவுதான் கற்றவர்களாக இருந்தாலும், நல்ல பதவியில் இருந்தாலும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், சமயத்தில் தங்களின் இயல்பான குணத்தைக் காட்டி விடுவார்கள். நல்லவர்கள் இனத்தில் இருக்கும்வரை தான் எல்லாம். எனவேதான், "மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார்.

"நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்".

"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்".

"நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்".

என்பன நாயைப் பற்றி வழங்கும் பழமொழிகள்.

எனவே, நாய்க்குணம் படைத்தோரது வாதத் தொடக்கினில் அகப்பட்டு இளைத்துப் போகாமல் அருள் புரிய வேண்டும் என்னும் குறிப்பை அடிகளார் வைத்து உள்ளார்.


கோல வாரிக்கு...... காலன் மார்பு உற்று உதைத்தானும் ..... இடைக் கோப அராவில் படுத்தானும் --- ஓர் கற்பு உடைக் கோதை காமக் கடற்கு இடை மூழ்க..... காவி சேர் கொத்து அலர் அப் பாணம் ஏய் வித்தகக் காமவேள் ---

“வேள்” என்னும் சொல்லுக்கு விருப்பதை உண்டாக்குபவன் என்று பொருள். கரிய நிறம் உடைய திருமாலின் மகனாகிய மன்மதன், கருநிறத்தோன் ஆதலின் “கருவேள்” எனப்படுவான். அவன் உயிர்களுக்குக் காமத்தில் விருப்பத்தை ஊட்டுபவன். செம்மேனி எம்மான் ஆகிய சிவபரம்பொருளின் புதல்வர் ஆகிய முருகப் பெருமான், “சேவ்வேள்” எனப்படுவார். செவ்வேட்பரமன் உயிர்களுக்கு, காமத்தை அகற்றி, அருள் வேட்கையை உண்டு பண்ணுபவர். “காமம் அகற்றிய தூயனடி” என்பது திருவருட்பா. 

மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூ, மாம்பூ,  முல்லைப்பூ, அசோகம்பூ, நீலோற்பலப்பூ என்ற மலர்கள்.

தாமரைப்பூ --- நினைப்பூட்டும்;

மாம்பூ --- பசலை நிறந்தரும்;

அசோகம்பூ --- உணர்வை நீக்கும்;

முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்;

நீலோற்பலப்பூ --- கொல்லும்.

தலைவனை நாடிய தலைவிக்கு அந் நினைவை அதிகப்படுத்துவது மன்மதன் விடுகின்ற தாமரைப் பூங்கணை.

“நினைக்கும் அரவிந்தம், நீள்பசலை மாம்பூ,

அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு

முல்லை இடைகாட்டும், மாதே முழுநீலம்

கொல்லுமதன் அம்பின் குணம் .”      --- இரத்தினச் சுருக்கம்.


மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

“வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;


வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;


நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,


அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”

      தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.


மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

“வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;


வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;


சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;


அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!”

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

--- யானை அழியாத இருளாகும்.

--- மிகுபடை பெண்கள் ஆவர்.

--- உடைவாள் தாழை மடல் ஆகும்.

--- போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும், 

--- கொடி மகர மீன் ஆகும்.

--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

--- குடை சந்திரன் ஆவான்.

--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.

--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.


மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.


வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு ஓதுறா நிற்ப, அக் கொடிதான காலன் மார்பு உற்று உதைத்தானும் ---

வானுலகத்திலும் நிலவுலகத்திலும் வாழும் யாருக்கும் மரணம் என்னும் ஊறு உண்டாவது நிச்சயம். வானலகத்தில் உள்ளவர்களேயானாலும், அவர்கள் அனுபவித்து வருகின்ற புண்ணியத்தின் பயன் தீர்ந்த பிறகு, மண்ணுலகில் பிறந்துதான் ஆகவேண்டும். பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் நீக்கி, மரணம் இல்லைப் பெரு வாழ்வு வாழவெண்டுமானால், இறைவன் திருவடியை அடைய வேண்டும். இறைவன் திருவடியை வழிபடுவோருக்கு, எமபயம் இல்லை. இதை உணர்த்தவே, தனது திருவடியை வழிபட்டுக் கொண்டு இருந்த மார்க்கண்டேய முனிவரது உயிரைக் கவர வந்த எமனைத் தனது திருவடியால் உதைத்து, மரணமில்லாப் பெருவாழ்வில் மார்க்கண்டேயரை வைத்து அருளினார் என்னும் புராண வரலாற்றை இங்கே அடிகளார் நமக்கு நினைவுபடுத்தினார். 


காமவேள் மைத்துனப் பெருமாளே –-

திருமாலின் மகன் மன்மதன். திருமாலின் தங்கை உமாதேவியார். திருமாலின் மகள்களான வள்ளிநாயகியையும், தேவயானையையும் மணம் புரிந்தவர் முருகப் பெருமான். இந்த உறவுமுறையில் மன்மதனுக்கு மைத்துனர் ஆகிறார் எந்தை கந்தவேள்.


கருத்துரை

முருகா! தேவரீரது திருவடியை நாள்தோறும் வழிபட, உபதேசப் பொருளை அருள்வாய்.


பொது --- 1112. கோலகாலத்தை


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கோல காலத்தை (பொது)


முருகா! 

பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல், 

அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வாய்.



தானனா தத்தனத் தானனா தத்தனத்

     தானனா தத்தனத் ...... தனதான


கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்

     கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற்


கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்

     கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான்


சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்

     த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ்


சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்

     கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ


ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்

     தாரவா ரக்கடற் ...... கிடைசாயும்


ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்

     டாதரூ பத்தினிற் ...... சுடராய


காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்

     காகவே ளைப்புகக் ...... கழுநீராற்


காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


கோல காலத்தை விட்டு, ஆசு பாட, கொடிக்

     கோவை பாட, கொடிக் ...... கொடி வாதில்


கோடி கூளக் கவிச் சேனை சாட, கெடிக்

     கூறு காளக்கவிப் ...... புலவோன் யான்,


சீல காலப் புயல், பாரிசாதத் தரு,

     த்யாக மேருப் பொருப்பு ...... என ஓதும்


சீதரா! சித்ர வித்தாரமே செப்பிடக்

     கேள் எனா நிற்பதைத் ...... தவிர்வேனோ?


ஆல காலப் பணிப் பாயல் நீளப் படுத்து,

     ஆரவாரக் கடற்கு ...... இடைசாயும்


ஆழி மாலுக்கும், நல் சாமவேதற்கும் எட்-

     டாத ரூபத்தினில் ...... சுடர் ஆய


காலகால ப்ரபு, சாலுமால் உற்று உமைக்

     காக வேளைப் புகக் ...... கழுநீரால்


காதும் வேழச் சிலைப் பார மீனக் கொடிக்

     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.


பதவுரை

ஆலகாலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு இடை சாயும் ஆழி மாலுக்கும் --- ஆலகால விடத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேடன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், ஆழிப்படையை ஏந்தியவனுமான திருமாலுக்கும்,


நல் சாமவேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய காலகால ப்ரபு ---  நல்ல சாமவேதன் ஆகிய பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவானவனும், காலகாலனும் ஆகிய  சிவபெருமான்


சாலும் மால் உற்று உமைக்காக வேளைப் புக --- உமாதேவியார் மீது மிக்க மையல் கொண்டு, அவரை மணம் புரியத் தக்க காலம் உண்டாக்குவதற்காக,


கழுநீரால் காதும் வேழச் சிலைப் பாரம் மீனக்கொடிக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- செங்கழு நீர் மலர் ஆகிய அம்பினைக் கொண்டு சிவபிரானைத் தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், மீனக் கொடியை உடையவனுமாகிய மன்மதனுடைய மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே! 


கோலகாலத்தை விட்டு --- வீண் ஆடம்பரங்களை விடுத்து,


       ஆசு பாட --- ஆசு கவிகளைப் பாடவும்,


       கொடி கோவை பாட --- கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைகள் பாடவும்,  


கொடிக் கொடி வாதில் --- காக்கைகள் போலக் கூச்சலிடும் வாதத்தில்,


       கோடி கூளக் கவிச் சேனை சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான் --- கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கூட்டத்தை வெல்வேன் என்று தனது கீர்த்தியைக் கூறும் பாடல்களைப் பெருமழை போலப் பாட வல்ல புலவன் நான் (என்று என்னையே மதித்துக் கொண்டு)


சீல காலப் புயல் --- உரிய காலத்தில் பெய்யும் பருவமழை போன்றவன்,


       பாரிசாதத் தரு --- பாரிசாதம் என்னும் தெய்வ மரத்துக்கு ஒப்பானவன்,


        த்யாக மேருப் பொருப்பு என ஓதும் சீதரா --- கொடையில் மேருமலை என்றும் போற்றப் பெறுகின்ற திருமால் போன்றவன், (என்று இவ்வாறெல்லாம் பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து, அவர்களிடம் சென்று)


சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத் தவிர்வேனோ --- சித்திரக் கவி, வித்தாரக் கவி வகைகளை நான் பாட, நீ கேட்பாயாக என்று நிற்பதை ஒழிவேனோ? 


பொழிப்புரை


        ஆலகால விடத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேடன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், ஆழிப்படையை ஏந்தியவனுமான திருமாலுக்கும், நல்ல சாமவேதன் ஆகிய பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவானவனும், காலகாலனும் ஆகிய  சிவபெருமான், உமாதேவியார் மீது மிக்க மையல் கொண்டு, அவரை மணம் புரியத் தக்க காலம் உண்டாக்குவதற்காக, செங்கழு நீர் மலர் ஆகிய அம்பினைக் கொண்டு சிவபிரானைத் தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், மீனக் கொடியை உடையவனுமாகிய மன்மதனுடைய மைத்துனர் என்னும் பெருமையில் மிக்கவரே! 


வீண் ஆடம்பரங்களை விடுத்து, ஆசு கவிகளைப் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைகள் பாடவும்,  காக்கைகள் போலக் கூச்சலிடும் வாதத்தில், கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கூட்டத்தை வெல்வேன் என்று தனது கீர்த்தியைக் கூறும் பாடல்களைப் பெருமழை போலப் பாட வல்ல புலவன் நான் என்று என்னையே மதித்துக் கொண்டு, உரிய காலத்தில் பெய்யும் பருவமழை போன்றவன், பாரிசாதம் என்னும் தெய்வ மரத்துக்கு ஒப்பானவன், கொடையில் மேருமலை என்றும் போற்றப் பெறுகின்ற திருமால் போன்றவன் என்று, இவ்வாறெல்லாம் பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து, அவர்களிடம் சென்று, சித்திரக் கவி, வித்தாரக் கவி வகைகளை நான் பாட, நீ கேட்பாயாக என்று நிற்பதை ஒழிவேனோ? 


விரிவுரை


கோலகாலத்தை விட்டு --- 

கோலகாலம் – கோலாலம் என்றும் சொல்லப்படும். பெரோலி, கூக்குரல், பகட்டு என்று பொருள்.


ஆசு பாட --- 

ஆசு – நால்வகைக் கவிகளில் ஒன்று.

கவிகள் நான்கு; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி. விரைந்து பாடப்படுவது ஆசுகவி எனப்படும்.

“நாலுகவி த்யாகா”                      --- கந்தர் அநுபூதி.

“ஆசுகவி முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன

  முகுள பரிமள நிகில கவிமாலை”       --- சீர்பாதவகுப்பு


கொடி கோவை பாட --- 

கொடி - கொடிக்கவி, 

கோவை -அகத்தறையில் வைத்துப் பாடப்படுவது.   பிரபந்த வகைகளில் ஒன்று.


கொடிக் கொடி வாதில் --- 

கொடி – காக்கை.

கொடி – நீளம், பெருக்க என்னும் பொருளில் வந்தது.


கோடி கூளக் கவிச் சேனை சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான் --- 

கோடி – அளவற்ற என்னும் பொருளில் வந்தது. 

கூளம் – குப்பை.

கூளக் கவிச் சேனை – பலவகைக் கவிஞர்கள் கூட்டம்.

கெடி – வல்லமை, புகழ்.


காளக் கவி –--

காளம் – கருமை.

    சூல் கொண்ட கருமேகமானது மழையைப் பொழிவது போலக் கவி பாடும் திறம். காளமேகப் புலவர் என ஒரு புலவர் அதிவேகமாகப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

“இம் என்னு முன்னே எழுநூறும், எண்ணுாறும்,

அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ-சும்மா

இருந்தால் இருந்தேன், எழுந்தேனே ஆமாயின்

பெருங்காள மேகம் பிளாய்!”

என்பது தனிப்பாடல். ‘இம்’ என்று சொல்வதற்கு முன்னே எழுநூறு எண்ணுாறு பாடல்களும், 'அம்' என்று அடுத்துச் சொன்னால் அதற்குள் ஆயிரம் பாட்டுகளும் ஆகிவிடாதோ? சிறுவனே! சும்மா இருந்தாலும் இருப்பேன். பாடத் தொடங்கினேனானால் பெரிய கார்மேகமாகப் பொழிவேன் (என்று அறிவாயாக)


“மடல்,பரணி, கோவையார், கலம்பகம்

     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,

          வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு

மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,

     விருதுகொடி, தாள மேள தண்டிகை,

          வரிசையொடு உலாவும் மால் அகந்தை ......தவிர்ந்திடாதோ?” --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


சீல காலப் புயல் –

புயல் – மழை பொழியும் மேகம்.

காலப் புயல் – பெய்ய வேண்டிய பருவ காலத்தில் பெய்யும் மழைமேகம்.


பாரிசாதத் தரு --- 

தரு – மரம். பாரிசாதம் என்னும் மரம் தேவலோகத்தில் உள்ளதாகச் சொல்லப்பெறும். 


த்யாக மேருப் பொருப்பு என ஓதும் சீதரா --- 

தியாகம் --- கொடை, பிறருக்காக ஒன்றை விட்டுக் கொடுத்தல்.

மேருப் பொருப்பு - மேருமலை 

சீதரன் – சீதேவியைத் திருமார்பில் தரித்தவன். திருமால். சீதரன் என்னும் சொல், வடமொழியில் ஸ்ரீதரன் என்று வழங்கப் பெறும்.


சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத் தவிர்வேனோ --- 

சித்ரம் --- சித்திரக் கவி, 

வித்தாரம் – வித்தாரக் கவி.

நால்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி ஆகிய நான்கு வகைச் செய்யுட்கள்.

ஆசுகவி - ஒருவன் கருத்திற்கு ஏற்ப உடனே பாடுதல்.

மதுரகவி - இனிமையாக அழகாகப் பாடுதல்,

சித்ரகவி - சித்திரத்தில் அடைத்தற்கு உரிய செய்யுள்.

வித்தாரகவி - விரிந்த காவியங்கள் பாடுதல்.

        செல்வத்தை வறிதே வைத்து வாழும் பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர்.  சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீண் போயினர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் இறைவனைப் பாடி உய்யும் திறன் அறியாது கெடுவர். இப்படி வீணாகாதபடிக்கு முரகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.


“குன்றும் வனமும் குறுகி வழிநடந்து

சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்

கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்

இடாதோ அதுவே இது.”                                --- இரட்டையர்.


“வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி

மஞ்சரி கோவை தூது           பலபாவின்

வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி

வந்தியர் போல வீணில்      அழியாதே”.             --- திருப்புகழ்.


“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,

     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,

     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,

மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,

இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்

     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.”     ---  இராமச்சந்திர கவிராயர்.


ஆலகாலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு இடை சாயும் ஆழி மாலுக்கும், நல் சாமவேதற்கும் எட்டாத ரூபம் ---

பணி --- பாம்பு.

ஆலகாலப் பணி – கொடிய விடத்தை உடைய பாம்பு. இங்கே ஆதிசேடனைக் குறித்தது.

ஆரவாரக் கடல் – அலைகளை எறிந்துகொண்டே இருக்கும் கடல். இங்கே திருப்பாற்கடலைக் குறித்தது.

ஆழி – சக்கரம். சக்கரப் படையை ஏந்திய திருமால்.

சாமவேதன் --- பிரமன். சாமவேதம் பாடுகின்ற பிரமன்.

“சாமவெண் தாமரைமேல் அயனும்”. --- திருஞானசம்பந்தர்.

எட்டாத ரூபம் --- திருமாலும் பிரமனும் அறியமுடியாதபடி, சோதி வடிவாய் நின்ற சிவபிரானது வடிவம்.


காலகால ப்ரபு ---  

காலகாலன் – எமனுக்கும் எமன் ஆன சிவபெருமான்.

தனது அடியவரான மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த காலனை வதைத்தவர் சிவபெருமான்.


கழுநீரால் காதும் வேழச் சிலைப் பாரம் மீனக்கொடிக் காமவேள் மைத்துனப் பெருமாளே --- 

கழுநீர் --- செங்கழுநீர் மலர். காதுதல் - போர் புரிதல்.

வேழச் சிலை – கரும்பு வில்.

மீன் கொடிக் காமவேள் --- மீனைத் தனது கொடியில் உடைய மன்மதன்.

சிவபரம்பொருளின் தவநிலையைக் குலைக்க, மன்மதன், தேவர்களின் ஏவலுக்கு இணங்க அவர்மீது மலர் அம்புகளைத் தொடுத்தான் மன்மதன்.  மன்மதன் திருமாலின் மகன் என்ற முறையில் முருகப் பெருமானுக்கு மைத்துனன் ஆவான்.


கருத்துரை


முருகா! பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல், 

அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வாய்.



59. சிறியோர் பெரியோர் ஆகார்

 


சி”றியவராம் முழுமூடர் துரைத்தனமாய்

     உலகாளத் திறம்பெற் றாலும்,

அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்

     உடையோர்கள் ஆக மாட்டார்;

மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா

     ரே! சொன்னேன், வாரி வாரிக்

குறுணிமைதான் இட்டாலும் குறிவடிவம்

     கண்ணாகிக் குணம்கொ டாதே!


இதன்பொருள் ---


மறிதரும் மான் மழு ஏந்தும் தண்டலையாரே - மறித்து நோக்கும் மானையும் மழுவையும் ஏந்தியவரே? திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளே! 


வாரிவாரிக் குறுணி மைதான் இட்டாலும் குறிவடிவம் கண் ஆகிக் குணம் கொடாதே – குறுணி அளவு மையை வாரிவாரித் தடவினாலும் கண்போன்று எழுதிய ஓவியம், உண்மையில் கண் ஆகி நலம் தராது, (அதுபோல),சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய் உலகு ஆளத் திறம் பெற்றாலும் - அற்பராகிய முழுமூடர்கள் அரசியலில் கலந்து நாட்டை ஆளும் திறத்தை அடைந்தாலும், அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமும் உடையோர்கள் ஆகமாட்டார் - அறிவுடையவரைப் போல நற்பண்பு உடையவர்களாக மாட்டார்கள்.


58. பசுவதை செய்து, செருப்பினைத் தானமாக அளித்தல்.

“விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில்

     ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி

வசைபெருக அநியாயம் செய்து, பிறர்

     பொருளையெலாம் வலிய வாங்கித்

திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மம் என்றும்

     தானம்என்றும் செய்வ தெல்லாம்

பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா

     னங்கொடுக்கும் பண்பு தானே!"


இதன் பொருள் ---


விசையம் மிகும் தண்டலையார் வளநாட்டில் – வெற்றியில் மேம்பட்டு விளங்கும் திருத்தண்டலை இறைவர் திருநாட்டில்,


 ஒருத்தர் சொல்லை மெய்யாய்  எண்ணி - ஒருவர்  கூறுவதையே உண்மை என்று கருதி, வசைபெருகப் பிறர் பொருளை அநியாயம் செய்து வலிய வாங்கி - பழி வளரும்படியாகப் பிறருடைய செல்வத்தை, நியாயம் அல்லாத செயல்களின் மூலம் வலியக் கவர்ந்து, திசைபெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும் தானம் என்றும் செய்வது எல்லாம் – எட்டுத் திக்கினும் வளரும் புகழுக்கு உரிய செயல் எனவும், தருமம் எனவும், தானம் எனவும் புரிந்து வாழும் இச் செயல்கள் யாவும், பசுவினையே வதைசெய்து செருப்பினைத் தானம் கொடுக்கும் பண்புதானே - பசுவினைக் கொன்று (அதன் தோலால் தைக்கப்பட்ட) செருப்பைத் தானம் கொடுத்த தன்மையே ஆகும்.


    ‘பசுவைக் கொன்று செருப்பைத் தானம் கொடுத்தல்' என்பது பழமொழி. பசுவை உதைப்பது பெரும்பாவம். அந்தப் பெரும்பாவத்தைச் செய்துவிட்டு, பசுவின் தோலால் ஆன செருப்பைப் பிறருக்குத் தானமாக அறித்துப் புண்ணியம் சேர்க்க எண்ணுவது நகைப்புக்கு உரியது. அதுபோலத்தான், பிறருடையசெல்வத்தை முறையற்ற வழிகளில் அநியாயமாக, வலிதில் கவர்ந்து, பிறர் மெச்ச வேண்டி, தான தருமங்கள் செய்வதும்.


பொது --- 1111. காதல்மோகம் தரும்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

காதல்மோகம் தரும் (பொது)


முருகா, 

பொதுமாதர்மேல் செல்லும் புலனை மாற்றி, 

தேவரீரது திருவடியில் வைக்க அருள் புரியவேண்டும்.


தானனா தந்தனந் தானனா தந்தனந்

     தானனா தந்தனந் ...... தனதான


காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்

     காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண்


காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்

     காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும்


ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்

     தோநமோ கந்தஎன் ...... றுரையாதே


ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்

     றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ


தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்

     தாரம்வா சந்திசந் ...... தனநீடு


சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்

     தானமா தெங்கள்பைம் ...... புனமேவும்


தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்

     சேகரா தண்டையங் ...... கழல்பேணித்


தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்

     தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை, சிங்-

     கார நாகம், செழும் ...... கனிவாய், கண்


காள கூடம், கொடும் கால ரூபம், பொரும்

     காம பாணம், சுரும்பு ...... இனம்வாழும்


ஓதி கார், செஞ்சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து,

     ஓம் நமோ கந்த என்று ...... உரையாதே,


ஊசல் ஆடும் புலன் தாரியே சென்று நின்று,

     ஓயுமாறு ஒன்றையும் ...... கருதாதோ?


தாதகீ, சண்பகம், பூகம், ஆர் கந்த மந்-

     தாரம், வாசந்தி, சந் ...... தனம், நீடு


சாம வேதண்ட வெம் கோப கோதண்ட சந்-

     தான மாது, எங்கள் பைம் ...... புனமேவும்


தீது இலா வஞ்சி, அம் சீத பாதம் படும்

     சேகரா! தண்டைஅம் ...... கழல்பேணி,


தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும்

     தேசிகா! உம்பர்தம் ...... பெருமாளே.


பதவுரை


தாதகீ --- ஆத்தி மரங்கள்,


சண்பகம் --- சண்பக மரங்கள்,


பூகம் --- பாக்கு மரங்கள், 


ஆர் கந்த மந்தாரம் – மணம் நிறைந்த மந்தார மரங்கள், 


வாசந்தி --- குருக்கத்தி, ஆடாதோடை, திப்பிலி முதலிய மரவகைகள்,


சந்தன(ம்) --- சந்தன மரங்கள், (ஆகியவை)


நீடு --- நிறைந்து விளங்கும்,


சாம வேதண்டம் --- கரிய நிறத்தை உடைய வள்ளிமலையில், 


வெம்கோப கோதண்டம் சந்தான மாது --- கொடிய கோபத்தை உடையவர்களும், வில்லினை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்கள் குலத்தில் வளர்ந்த மாதும்,


எங்கள் --- அடியேங்களுக்கு உகந்தவளும்,


பைம்புனம் மேவும் --- பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்துகொண்டு இருந்தவளும், 


தீதிலா வஞ்சி அம் சீதபாதம் படும் சேகரா --- குற்றம் அற்ற வஞ்சிக்கொடி போல்பவளும் ஆகிய வள்ளிநாயகியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் பொருந்துகின்ற திருத்தலையை உடையவரே!


தண்டை அம் கழல் பேணி --- தண்டை, அழகிய கழலை அணிந்து திருவடிகளை வழிப்பட்ட 


தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா --- உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் பொருந்த வைத்துள்ள ஆதிமுதற் பரம்பொருளாகிய சிவபெருமான் தொழுகின்ற குருநாதரே!


உம்பர் தம் பெருமாளே --- தேவர்கள் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!


காதல் மோகம் தரும் கோதைமார் --- காம உணர்வை மிகுதிப்படுத்துகின்ற பொதுமாதரின், 


கொங்கை சிங்கார நாகம் –-- முலைகள் அழகிய மலையைப் போன்றவை, 


செழும் கனி வாய் --- வாயானது செவ்வியகோவைக் கனி போன்றது,


கண் காளகூடம், கொடும் கால ரூபம், பொரும் காம பாணம் --- கண்கள் கருமையான கொடிய விடம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு போன்றவை என்றும், 


சுரும்பினம் வாழும் ஓதி கார் --- வண்டுகள் குடி புகுந்து உள்ள கூந்தல் கருமேகம் போன்றது,


செம் சொல் மென் பாகு தேன் --- (அவர்களின்) செவ்விய சொற்கள் இனிமையைத் தருகின்ற வெல்லப் பாகு மற்றும் தேன்,


என்று அயர்ந்து --- என்று (அவர் தரும் இன்பத்தையே பெரிதாக எண்ணி, இவ்வாறு உவமைகள் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கூறிச்) சோர்வினை அடைந்து,


ஓம் நமோ கந்தா என்று உரையாதே --- ஓம் நமோ கந்தா என்று தேவரீரது திருநாமத்தை வாயாரச் சொல்லாமல், 


ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று --- எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்களின் வழியே சென்று, அதன்படியே வாழ்கின்ற அலைச்சலானது,


ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ --- ஓய்வுறும்படியாக நல்ல நெறியினை அடியேன் பின்பற்றுமாறு திருவுள்ளம் பற்றோதோ?

பொழிப்புரை

ஆத்தி மரங்கள், சண்பக மரங்கள், பாக்கு மரங்கள், மணம் நிறைந்த மந்தார மரங்கள், குருக்கத்தி, ஆடாதோடை, திப்பிலி முதலிய மரவகைகள், சந்தன மரங்கள், ஆகியவை நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளிமலையில், கொடிய கோபத்தை உடையவர்களும், வில்லினை ஏந்தியவர்களும் ஆகிய வேடர்கள் குலத்தில் வளர்ந்த மாதும், அடியேங்களுக்கு உகந்தவளும், பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்துகொண்டு இருந்தவளும்,  குற்றம் அற்ற வஞ்சிக்கொடி போல்பவளும் ஆகிய வள்ளிநாயகியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் பொருந்துகின்ற திருத்தலையை உடையவரே!

தண்டை கழல் ஆகியவற்றை அணிந்து திருவடிகளை வழிப்பட்ட உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் பொருந்த வைத்துள்ள ஆதிமுதற் பரம்பொருளாகிய சிவபெருமான் தொழுகின்ற குருநாதரே!

        தேவர்கள் தலைவர் என்னும் பெருமையில் மிக்கவரே!

காம உணர்வை மிகுதிப்படுத்துகின்ற பொதுமாதரின் முலைகள் அழகிய மலையைப் போன்றவை, வாயானது செவ்விய கோவைக் கனி போன்றது, கண்கள் கருமையான கொடிய விடம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு போன்றவை என்றும், வண்டுகள் குடி புகுந்து உள்ள கூந்தல் கருமேகம் போன்றது, அவர்களின் செவ்விய சொற்கள் இனிமையைத் தருகின்ற வெல்லப் பாகு மற்றும் தேன் என்று அவர் தரும் இன்பத்தையே பெரிதாக எண்ணி, இவ்வாறு உவமைகள் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கூறிச் சோர்வினை அடைந்து, ஓம் நமோ கந்தா என்று தேவரீரது திருநாமத்தை வாயாரச் சொல்லாமல், எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்களின் வழியே சென்று, அதன்படியே வாழ்கின்ற அலைச்சலானது, ஓய்வுறும்படியாக நல்ல நெறியினை அடியேன் பின்பற்றுமாறு திருவுள்ளம் பற்றோதோ?


விரிவுரை


சாம வேதண்டம் --- 

சாமை – கருநிறம். 

வேதண்டம் – மலை.


கோதண்டம் ---

வில். இங்கே வில்லினை ஏந்திய வேடர்களைக் குறித்தது.


சந்தான மாது --- 

சந்தானம் – மரபு, சந்ததி, தொடர்பு.

வேடர்கள் மரபில் வளர்ந்தமையால் இவ்வாறு கூறப்பட்டது.


தீதிலா வஞ்சி அம் சீதபாதம் படும் சேகரா --- 

வள்ளிநாயகியின் திருப்பாதசேகரர் முருகப் பெருமான். “பணி யா என வள்ளி பதம் பணியும், தணியா அதிமோக தயாபரனே” என்பது கந்தர் அனுபூதி.

“மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என, இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும் ..மிகவேறாய்,


வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ......உளம் நாடி,


அருகு சென்று அடைந்து, அவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்

     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன்.....அணைவோனே!”

                                                                          --திருவண்ணாமலைத் திருப்புகழ்.


“பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா!”                   --சுவாமிமலைத் திருப்புகழ்.


கொங்கை சிங்கார நாகம் –-- 

சிங்கார நாகம் – அழகிய மலை.


ஓம் நமோ கந்தா என்று உரையாதே --- 

கந்தன் என்பது முருகப் பெருமானுடைய திருநாமங்களில் ஒன்று. அது உமாதேவியாரால் வழங்கப்பட்டது என்னும் சிறப்பினை உடையது.

“அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,

நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்


கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,

அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு


கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,

மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய


முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்

அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த


வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!”

என்பது திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா. 

இதன் பொருள் ---

        கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலை அக்குழந்தைகள் பருகி, அழுது விளையாடி இருக்க, மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒருசேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி, “கந்தன்” என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க, அவ் அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்த பெருமானே!

        அருணகிரிநாதர் அருளிய நூல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி எனக் கந்தன் என்னும் திருநாமத்தையே கொண்டு இருப்பதன் மூலம் “கந்தன்” என்னும் திருநாமத்தின் சிறப்பினை உணர்ந்து கொள்ளலாம்.

“கந்தநம! ஐந்து முகர் தந்த முருகேசநம! கங்கை உமை தன்

மைந்த நம! பன்னிரு புயத்த நம! நீப மலர் மாலை புனையும்

தந்தை நம! ஆறுமுக ஆதி நம! சோதி நம! தற்பரமதாம்

எந்தை நம! என்றும் இளையோய் நம! குமார நம! என்றுதொழுதார்.”

                                                          --- கந்தபுராணம், திருவிளையாட்டுப் படலம்.


“சென்றே இடங்கள் கந்தா எனும்பொ 

செஞ்சேவல் கொண்டு வரவேணும்”    --- திருச்செங்கோட்டுத் திருப்புகழ்.


“துன்பநோய் சிந்த, நல் கந்த வேள் என்று, உனைத்

 தொண்டினால் ஒன்று உரைக்க ...... அருள்வாயே.”  --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


வால! குமர! குக! கந்த! குன்று எறி

     வேல! மயில! எனவந்து கும்பிடு

      வான விபுதர் பதி இந்த்ரன் வெந்துயர்.....களைவோனே! --- திருவானைக்காத் திருப்புகழ்.


“மைவருங் கண்டத்தர் மைந்த! கந்தா! என்று வாழ்த்தும் இந்தக்

கைவருந் தொண்டு அன்றி மற்று அறியேன்”       --- கந்தர் அலங்காரம்.


ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று --- 

தாரி – வழி. ஊசல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டே இருப்பதுபோல, உயிரானது ஐம்புலன்களின் வழியே எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும். இந்த ஊசலாட்டம் தீரவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

“சாந்து உடனே புழுகு தோய்ந்த அழகார் குழலை

     மோந்து, பயோதரம் ...... அது அணையாகச்

சாய்ந்து, ப்ரதாபமுடன் வாழ்ந்து, அநுராக சுக

     காந்தமொடு ஊசி என, ...... மடவார்பால்

கூர்ந்த க்ருபா மனது போந்து, உன தாள் குறுகி,

     ஓர்ந்து, உணரா உணர்வுஇல் ...... அடிநாயேன்,

கூம்பு அவிழ் கோகநக பூம்பத கோதில் இணை

     பூண்டு, உறவாடு தினம் ...... உளதோதான்?”    --- சிதம்பரத் திருப்புகழ்.


"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர், அமையும், அவர் என் செய?

மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே."      --- கோயில் நான்மணி மாலை.


கருத்துரை

முருகா! பொதுமாதர்மேல் செல்லும் புலனை மாற்றி, தேவரீரது திருவடியில் வைக்க அருள் புரியவேண்டும்.






57. அற்பருக்கு வாழ்வு வந்தால்.....

 

விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக்

     கண்ணோட்டம் மிகவும் செய்வார்!

சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியா

     திறுமாந்து துன்பம் செய்வார்!

பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! பண்பில் லாத

அற்பருக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்

     திரி குடைமேல் ஆகும்தானே!


இதன் பொருள் ---


பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையாரே - பலதுறைப் பட்டவர்களுக்கும் நல்வாழ்வை அருளும் திருத்தண்டலை இறைவரே! 


விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிக வணங்கி மிகவும் கண்ணோட்டம் செய்வார் - அறிவாளிகளுக்கு வாழ்வு நேர்ந்தால் மிகவும் வணக்கமாக யாரிடத்திலும்  நாகரிகமாக நடந்துகொள்வர்; 


சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது இறுமாந்து துன்பம் செய்வார் - அறிவில்லாதார்க்கு வாழ்வு வந்தால் எதனையும் நோக்காமல் செருக்குடன் யாவருக்கும் இடையூறு செய்வார்கள்; 


பண்பு இல்லாத அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடைமேல் ஆகும் - நற்குணம் இல்லாத கீழ்மக்களுக்கு வாழ்வு கிடைத்தால் நள்ளிரவிலே தலைக்குமேல் குடை இருக்கும்.


      கண்ணோட்டம் : கருணை உடைமை. அன்பு உடைமை. இரக்கம் உடைமை.  தம்மிடம் பழகியவர் செய்யும் தவறுகளைப் பொறுத்தல். அதுவே நாகரிகம். ‘பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்' என்பார் திருவள்ளுவ நாயனார். ‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பர்' என்பது பழமொழி. குமரேச சதகம் - 41-ஆவது பாடல் காண்க.


56. கொடுவோரும், வாழ்வோரும்

உள்ளவரைக் கெடுத்தோரும், உதவியற்று

     வாழ்ந்தோரும், உறைபெற் றோரும்,

தள்ளிவழக் குரைத்தோரும், சற்குருவைப்

     பழித்தோரும் சாய்ந்தே போவார்.

பள்ளவயல் தண்டலையார் பத்தரடி

     பணிந்தோரும், பாடி னோரும்,

பிள்ளைகளைப் பெற்றோரும், பிச்சையிட்ட

     நல்லோரும் பெருகு வாரே.


இதன் பொருள் ---

பள்ளவயல் தண்டலையார் பத்தர் அடி பணிந்தோரும் பாடினோரும் - பள்ளமான வயல்களை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின் அடியவர்களின் திருவடிகளை  வணங்கினவரும்,  பாடினவரும்,  பிள்ளைகளைப்  பெற்றோரும் - குழந்தைகளைப் பெற்றவர்களும், பிச்சை இட்ட நல்லோரும் - இரந்தவர்க்குக் கொடுத்தவர்களும், பெருகுவார் - (வாழ்வில்) மேம்படுவார்கள். 

உள்ளவரைக் கெடுத்தோரும் - (செல்வம்) உடையவர்களுக்குத் தீங்கு செய்தவர்களும், உதவி  அற்று வாழ்ந்தோரும் - (பிறர்) துணையை நாடாமல் வாழ்கின்றவர்களும், உறை பெற்றோரும் - (பொய்வழக்குச் சொல்லி, அதன்வழி) செல்வத்தைப் பெற்றவரும், வழக்கு தள்ளி உரைத்தோரும் - வழக்கிலே நடுநிலை நீங்கிக் கூறியவர்களும், சற்குருவைப் பழித்தோரும் - நல்லாசிரியரை இகழ்ந்தவர்களும், சாய்ந்தே போவார் - கெட்டே போவார்கள்.


55. கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், காடு நல்லது.

 


படுங்கோலம் அறியாமல் தண்டலையார்

     திருப்பணிக்கும் பங்கம் செய்வார்;

நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார

     வீணனைப்போல் நீதி செய்வார்;

கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?

     மழையுண்டோ? கேள்வி யுண்டோ?

கொடுங்கோல்மன் னவன் நாட்டிற் கடும்புலிவா

     ழுங்காடு குணமென் பாரே!"


இதனத் பொருள் ---

        படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும் பங்கம் செய்வார் - அடையப் போகும் தன்மையை உணராமல் திருத் தண்டலை இறைவருக்கு ஆற்றும் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல் நெடுங்கோளும்  தண்டமுமாய்  நீதி செய்வார் - வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர்; (இதனால்) கெடும் கோபம் அல்லாமல் விளைவு  உண்டோ மழை உண்டோ கேள்வி உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமே விளைவது அல்லாமல், நாட்டில் விளைவும், மழையும், கேள்விமுறையும்  இருக்குமோ?,  கொடுங்கோல் மன்னவன் நாட்டில் கடும்புலி வாழும் காடு குணம் என்பார் – முறை தவறிய அரசன்  வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

      கோள் - கொலை. அரசன் ஆட்சி முறையானதாக இருந்தால், அந்த நாட்டில் மழைபெய்து விளைவு பெருகி நாடு வளம் உற்று இருக்கும். 

        தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேய்ப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

        பின்வரும் பாடல்களை இங்குக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

"கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்

 கடும்புலி வாழும் காடு நன்றே.".       --- வெற்றிவேற்கை.

நீதிமுறைமை இல்லாத கொடுங்கோல் அரசர் ஆட்சி புரியும் நாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டில் இருப்பது நல்லது.

கொடுங்காலன் தன்னைத் தானே  புகழ்ந்து கொண்டு  தருக்கி இருப்பான். அவன் நாட்டிலே குடிகளுக்கு  அச்சமும்  கவலையும் அளவின்றி  இருக்கும்.


"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மனிதர் எல்லார்க்கும்  நீதி முறை இல்லாத அரசனது நாடானது வறுமை உடையது ஆகும்.


"சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன்தேர் குறவர் தேயம் நன்றே.".        --- வெற்றிவேற்கை.

அறிவு ஒழுக்கங்களால்  நிறைந்த பெரியோர்  இல்லாத பழைமையான  நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும், குறவர் வசிக்கும் மலைப் பக்கத்தில் இருப்பது  நல்லது.


54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

 



“கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;

    செங்கோலிற் கடல்சூழ் வையம்

புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,

    நரகமில்லை; பொய்யி தன்றால்;

உரப்பார்க்கு நலம்புரியும் தண்டலையா

    ரே! சொன்னேன்! ஒருமை யாக

இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ?

    ஒருக்காலும் இல்லை தானே!»


இதன் பொருள் ---

        உரப்பார்க்கு  நலம் புரியும்  தண்டலையாரே - மெய்யறிவாளிகட்கு நன்மை அருளும் திருத் தண்டலை இறைவரே! ஒருமையாக இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சம் உண்டோ - ஒருதலையாகப் பிச்சை எடுப்போர்க்கு வெறும் சோற்றுக்கும் பஞ்சமா?, ஒருக்காலும் இல்லை - எப்போதும் இராது, (அதுபோல), கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை – உள்ளத்திலே ஒன்றும் வெளியிலே ஒன்றுமாக வாழும் வஞ்சகர்க்கு நல்ல கதியானது கிடைப்பதில்லை. கடல்சூழ்  வையம்  செங்கோலின்  புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கம் அல்லால் நரகம்  இல்லை - கடலால்  சூழப்பட்ட உலகத்திலே செங்கோலு முறையால் ஆட்சி செய்வார்க்கு இறுதியிலே சுவர்க்கம் வாய்க்குமே அல்லாமல், நரகம் வாய்க்காது. இது பொய் அன்று - இது பொய் அல்ல.

      ‘இரப்பாள் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?' என்பது பழமொழி. பிச்சை எடுக்கப் புகுந்தவருக்கு வெண்சோறு நிச்சயமாகக் கிடைக்கும். அதுபோல, உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றுமாக வஞ்சகமாக வாழ்வோருக்கும், கொடுங்கோல் அரசு புரிவோருக்கும் நரகம் நிச்சயம் உண்டு என்பது சொல்லப்பட்டது.

     "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு" என்பது, ஆத்திசூடி என்னும் நூலில் மூன்றாவதாக ஔவைப் பிராட்டியார் கூறும் நல்லுரை, “இயல்வது கரவேல்” என்பது.  (கரத்தல் --- கொடுக்காது இருத்தல்,  ஒளித்தல்,  மறைவு,  வஞ்சனை,  களவு, பொய்.)

        பிறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் வளர்ச்சி உண்டு. உடம்பு நாளாக நாளாக வளருகின்றது. மனிதனுக்கும் அப்படித்தான். ஆனால், எந்த உயிரும் சிரிக்கவும், பேசவும் அறிந்து கொள்வது இல்லை. மனிதன் மட்டும்தான், குழந்தையாக உள்ளபோதே, பிறர் சொல்லும் சொற்களின் பொருள்களைக் குறிப்பால் உணர்ந்து தெரிந்து கொள்ளுகின்றான். கல்வி பயிலுவதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறுகின்றான். "யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது" என்பதை உணர்ந்து, "பூ மேல் மயல் போய் அற" வாழ்ந்து, மெய்ப்பொருளைப் புணர அறியாமல், பெற்ற அறிவைக் கொண்டு, பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை கொண்டு அலைகின்றான். "மூ ஏடணை என்று முடிந்திடுமோ?" என்று இரங்குகின்றார் அருணகிரிதாநப் பெருமான். மூவாசைகளுக்கும் பொருளே ஆதாரம் என்பதால், பொருளாசை கொண்டு மனிதன் அளக்கமுடியாத பாவங்களை எல்லாம் துணிந்து பயன்றுகொண்டே இருக்கின்றான். "பொருள் இருந்தால் எல்லாம் ஆகும்" என்ற அறிவு மயக்கத்தில் அலைகின்றான்.

      உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுவையான நீர் வேண்டும்; உடலின் அழுக்கு நீங்கி ஒளிபெற நீரும், நல்ல ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில், அவனது உயிர் வீணே அழிந்து போகின்றது. 

         இந்த இழிநிலையை, பின்வரும் திருப்புகழ்ப் பாடலின் மூலம் உணர்த்தி, முருகன் திருவருளைப் பெற்று உய்ய அருணகிரிதாப் பெருமான் வழிகாட்டி அருளுகின்றார்.

“உடுக்கத் துகில் வேணும், நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும், நல்

     ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய்..உறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்

     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்

     படுக்கத் தனிவீடு வேணும், இவ் ....வகையாவும்

கிடைத்துக் க்ருகவாசி ஆகிய

     மயக்கக் கடல்ஆடி, நீடிய

     கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ....அவமே போம்.

க்ருபைச் சித்தமும், ஞான போதமும்

     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ

     கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ....ஒருநாளே.”

 

      உள்ளத்தில் கரவு கொண்டுள்ளவர்க்கு எல்லாம் கடுமையான நரகங்கள் வாய்க்கும் என்கிறார் அப்பர் பெருமான்.

 

“இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்;

கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்;

பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்;

அரக்கனுக்கு அருளும் வைத்தார்; ஐயன் ஐயாறனாரே.”

இதன் பொருள் ---

      தலைவராகிய திருவையாற்று இறைவர், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளி உள்ளார். அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தமது அருளை வழங்கி உள்ளார். நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குவார்.  பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.

      "கடுநரகங்கள்" என்று சுவாமிகள் அருளிச் செய்ததனால், கரத்தல் கடுமையான பாவம் என்பதும், அப் பாவத்திற்கு, ஒரு நரகம் அல்ல, பலவிதமான நரகங்களில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.

“கெடுவாய் மனனே! கதிகேள், கரவாது

இடுவாய்: வடிவேல் இறைதாள் நினைவாய்:

சுடுவாய் நெடுவேதனை தூள்படவே:

விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.”

என்று கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதப் பெருமான், நாமெல்லாம் உய்தி பெறுவதற்கான நல்வழியைக் காட்டி அருளுகின்றார்.

      கெட்டுப் போகின்ற நிலையில் உள்ள எனது மனமே,  நீ அடைய வேண்டிய கதியைப் பெற உனக்கு நான் சொல்லுவதைக் கேட்பாயாக. மனதில் வஞ்சனை, அதாவது ஒளிவு மறைவு இல்லாமல் பிறருக்கு உதவி செய்வாயாக. கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடைய முருகப்பெருமானின் திருவடிகளை நினைப்பாயாக.  பெருந்துன்பத்தை விளைக்கும் வினைகளை ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக. வினையை விளைக்கின்ற செயல்களை விட்டு ஒழிப்பாயாக.

      தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தல் கூடாது என்னும் கரத்தல் ஆகிய காரியம், உள்ளத்தில் ஆசை இருப்பதன் காரணமாக உண்டாகின்றது. ஒருவன் தன்னிடத்தும், தனது பொருளினிடத்தும் உண்டான ஆசை காரணமாகவே, கரப்பு என்னும் எண்ணம் உண்டாகும்.

        கொடுக்க முடிந்ததைக் கரவாமல் கொடுத்தலும், கொடுக்க இயலாததை இல்லை என்று மறுப்பதும் செய்யலாம். கொடுக்க முடியாததைக் கொடுப்பதாகச் சொல்லுவதும், கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறுப்பதும், இல்லை ஒருவனுடைய புகழைக் கெடுப்பது மட்டும் அல்லாமல், இல்லை என்று வருவோர்க்குத் துன்பத்தை விளைப்பதும் ஆகும்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்என மறுத்தலும், இரண்டும்

ஆள்வினை மருங்கில் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே

 இரப்போர் வாட்டல்; அன்றியும் புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில்..." -- புறநானூறு.

இதன் பொருள் ---

        கொடுக்க முடிந்ததைக் கொடுக்கின்றேன் என்று தருவதும், கொடுக்க இயலாததைத் தருவதற்கு இல்லை என்று கூறித் தர மறுப்பதும் ஆகிய இரண்டுமே, நல்ல உயர்ந்த நட்புக்கான அடையாளங்கள். தர முடியாததைத் தருவதாகச் சொல்லுவதும், தரக் கூடியதைக் கூட இல்லை என மறுப்பதும் ஆகிய இரண்டுமே இல்லை என்று வருவோரை மிகவும் வருந்தச் செய்யும். மேலும், இவை தருவோர் பெறுகின்ற புகழை அடைக்கும் வாயில்களும் ஆகும்.

        தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

நாட்டை ஆள்பவர் நீதிமுறையுடன் அரசு புரிதல் வேண்டும். அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல் போல் நேராக இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது. அது "செங்கோன்மை" எனத் திருவள்ளுவ நாயனாரால் அடையாளம் இடப்பட்டது. "செங்கோன்மை" என்பது நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், "பொச்சாவாமை" என்னும் அதிகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. “கொடுங்கோன்மை” இதற்கு மாறானது.

        “நல்ல நீதி மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல் புவியாளும் வண்மை செய்த தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார், கொடுங்கோன்மை செலுத்தி நின்ற மூர்க்கமுள்ள அரசனும், தன் மந்திரியும் ஆழ்நரகில் மூழ்கு வாரே!" எனத் தண்டலையார் சதகம் பிறிதொரு பாடலில் கூறும்.


5. அன்பினால் நன்மை

“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகம்உறுதல் நல்லோர் தொழில்....