திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 59 -- ஒற்றாடல்
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "துறவினர் கோலத்தில் சென்று, தடைகளைக் கடந்து, எண்ணிப் பார்த்து, என்ன செய்தாலும் சோர்வு கொள்ளாதவர் ஒற்றர் எனப்படுவார்" என்கின்றார் நாயனார்.
பார்ப்பனர், வணிகர் முதலானோர் செல்லக் கூடாத இடங்களிலும் செல்லக் கூடிய துறவி வடிவத்தையும், தீர்த்த யாத்திரை மேற்கொண்டோர் வடிவத்தையும் கொண்டு செல்வானாயின், பிறர் ஐயுறுதல் இராது என்றார்.
இதற்குத் திருக்குறள்...
துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்து ஆராய்ந்து,
என்செயினும் சோர்வு இலது ஒற்று.
இதற்குப் பரிமேலழகர் பொருள் ---
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து --- முற்றும் துறந்தாராயும் விரத ஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து;
என் செயினும் சோர்வு இலது ஒற்று --- ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத் துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“வந்தசுக சாரன் வடிவை நிருதன்அன்றிச்
சிந்தைசெய்தார் காண்பார், சிவசிவா! --- பந்தம்
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று.”
இதன் பொருள் ---
சுகன், சாரன் என்னும் இருவரும் இராவணனுடைய ஒற்றர்கள். குரங்கு வடிவு கொண்டு இராமர் படையுள் புகுந்தனர். உளவு பார்த்தனர். விபீடணன் செய்த மந்திரத்தால் உண்மை வெளிப்பட்டது. இராமபிரான் அவர்கள் பால் இரக்கம் காட்டித் தன் வரவை இராவணனுக்குச் சொல்லுமாறு விடுத்தனன்.
பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க.
அகன் உறப் பொலிந்த வள்ளல்
கருணையால் அழுத கண்ணன்,
'நகம் நிறை கானின் வைகும்
நம் இனத்தவரும் அல்லர்;
தகை நிறைவு இல்லா உள்ளத்து
இராவணன் தந்த ஒற்றர்;
சுகன், இவன்; அவனும் சாரன்'
என்பது தெரியச் சொன்னான்.
உள்ளத்தே முழுதும்) நிரம்பி, முகத்திலும் பொங்கிப் பொலியும் கருணையையுடைய வள்ளலாகிய இராமபிரானின் அருள் தேக்கத்தைக் கண்டு மனம் உருகி அழுத கண்களையுடைய வீடணன், “இவர்கள் மலைகள் நிறைந்த கானகங்களில் வாழும் நம்முடைய இனத்தவராகிய வானரர்களும் அல்லர். நற்பண்புகள் நிறையாத மனத்தினை உடைய இராவணன் அனுப்பியுள்ள ஒற்றர்கள். இவனோ சுகன் எனும் பெயருடையான். அவனோ சாரன் எனும் பெயருடையான்” என்று இராமபிரான் அறியுமாறு எடுத்துரைத்தான்.
கல்விக்கண் மிக்கோன் சொல்ல,
கரு மன நிருதக் கள்வர்,
'வல் விற் கை வீர! மற்று இவ்
வானரர் வலியை நோக்கி,
வெல்விக்கை அரிது என்று எண்ணி,
வினையத்தால் எம்மை எல்லாம்
கொல்விக்க வந்தான்; மெய்ம்மை;
குரங்கு நாம்; கொள்க!' என்றார்.
உண்மைக்) கல்வியில் மேம்பட்டு உயர்ந்தவனான வீடணன் இவ்வாறு கூறுகையில், இருண்ட மனமுடைய அரக்கராகிய அந்த ஒற்றர்கள், இராமபிரானை நோக்கி, வலியவில் ஏந்திய கையினையுடைய வீரனே! இந்த வானர வீரர்களின் வலிமையை உணர்ந்து, இவர்களை இராவணன் வெல்லுமாறு செய்தல் இயலாது என்று கருதி, சூழ்ச்சியினால் எம் போன்ற குரங்குகளை எல்லாம் கொலையுண்ணுமாறு செய்ய வந்தவன் இவ் வீடணன். சத்தியம்; நாங்கள் உண்மையில் குரங்குகளே என்று மனங் கொள்ள வேண்டும் என்றனர்.
'கள்ளரே! காண்டி' என்னா
மந்திரம் கருத்துள் கொண்டான்;
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர்,
தீர் வினை சேர்தலோடும்,
துள்ளியின் இரதம் தோய்ந்து,
தொல் நிறம் கரந்து, வேறு ஆய்
வெள்ளி போன்று இருந்த செம்பும்
ஆம் என, வேறுபட்டார்.
இதனைக் கேட்ட வீடணன், இவர்கள் வானரர் அல்லர். கள்வரே காண்பாயாக என்று (ஒரு) மந்திரத்தை மனத்துக்குள் உருவேற்றினான் அரக்கர் ஆகிய ஒற்றர்கள் (பகைவர் வேடத்தைத்); தெளிவாகத் தெரிவிக்கவல்ல, குரங்கு வடிவத்தை மாற்ற வல்ல அம்மந்திர ஆற்றல் நெருங்கியவுடன், பாதரசத் துளி மேலே படப்பெற்றுப் பழைய நிறம் மறைந்து, புதுநிறம் பெற்று, வெள்ளிபோல இருந்த செம்பு, மீண்டும் புடம் இட்டால் செம்பு ஆகவே ஆவது போன்று, குரங்கு உரு மாறிப் பழைய அரக்கர் வடிவத்தைப் பெற்றார்கள்.
No comments:
Post a Comment