நிறைகுடம் தளும்பாது --- குறைகுடமே கூத்தாடும்

 

 

நிறைகுடம் தளும்பாது - குறைகுடம் கூத்தாடும்.

----

 

     திருக்குறளில், "வலி அறிதல்" என்னும் ஓர் அதிகாரம். இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "சூழல் அமைந்தபடி வாழாதவனும், வலிமைகளின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தனக்கு அமைந்துள்ள சூழலுக்கு ஏற்ப வாழவேண்டும். தன்னுடைய வலியையும் மாற்றான் வலியையும் ஆராயவேண்டும். அவ்வாறு இல்லாமல், தனது வலியையே பெரிதாக மதித்துக் கொண்டு விரைந்து கெட்டுப் போவான் என்றதால், ஒருவன் தன்னோடு ஒத்தார் இடத்து நட்பாய் இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்க விருப்பம் இல்லையாயின், பிறரிடத்துப் பகை கொள்ளும் முன் அவரது வலியை அறிதல் வேண்டும். அவற்றை அறியாது தனது வலியையே பெரிதாக மதித்துக் கொண்டு, பிறரோடு மாறுகொண்டு, செயலைத் தொடங்குபவன், எடுத்துக் கொண்ட செயல் முற்றுப் பெறாது விரைந்து அழிந்து விடுவான் என்பதைக் காட்ட,

 

அமைந்து ஆங்கு ஒழுகலான், அளவு அறியான், தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.                 

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.  --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     அறைகல் அருவி அணிமலை நாட --- பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் --- நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் --- நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் --- கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் --- மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால்,  -–  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்.        --- நீதிநெறி விளக்கம்

 

இதன் பொருள் ---

 

     தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் --- தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று --- குளிர்ந்த நீரை விட்டுத் தீச்சுடரை வளர்த்தது போலாம்; ஆதலால், தன்னை வியவாமை அன்றே --- வியப்பாவது தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் --- இன்பத்தை விரும்பாமையன்றோ இன்பமாகும்?

 

         தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் அழிந்தே போகும் என்பது.

 

     எரியும்போது நெய் சொரிந்து தீ வளர்த்தல் போல, வளருமென்று, எரியும்போது தண்ணீர் சொரிந்து அதன் வளர்ச்சியை எதிர்நோக்கினான் என்பது பெறப்படும்.

 

 

கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்.       ---  நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்று ஆங்கு அறிந்து --- அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அடங்கி --- அவற்றிற்கேற்ப அடக்கமாய், தீது ஒரீஇ --- (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி --- (அந் நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றது கொண்டு மனம் திருத்தி --- கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி --- தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டு, பணி அற நின்று --- சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து --- தனிப்பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே --- நிற்கின்ற ஞானியரே, நீள்நெறி சென்றார் --- வீட்டையும் வழியில் நின்றவராவர்.

 

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியன. அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை, வாய்மை முதலியன.

  

கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்.              ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் --- தான் கற்ற கல்விகளும், காட்சி பரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமையடையும்;  தான் உரைப்பின் --- அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் --- தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

 

         பேதைமை என்பது, பிறர் கருத்து அறியாது அவர் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மையுடையது.

 

     இத் திருக்குறளைக் கையாண்டு காஞ்சிப் புராணத்தில் ஒரு பாடல் வரும்....

 

செந்நெறி நோக்கி ‘‘அமைந்தாங்கு

     ஒழுகான், அளவு அறிகில்லான்

தன்னை வியந்தான் விரைந்து

     கெடும்எனல் சத்தியம் கண்டாம்,

மன்னிய மேரு வரையோடு

     இகலி வளர்ந்து எழு விந்தம்

முன் உள தோற்றமும் வீறும்

     முழுதும் இழந்தது மன்னோ.    --- காஞ்சிப் புராணம்.  

 

இதன் பொருள் ---

 

     நன்னெறியை ஆராய்ந்து அதனில் மனம் அடங்கப் பெற்று நடவாதவனாய், தன் அளவை அறியானாய்த் தன்னையே மதித்துப் பிறரொடு பகை கொண்டவன் விரையக் கெடுவன் என்னும் திருவாக்கு மெய்ம்மொழி ஆதலைக் கண்டோம். நிலைபெற்ற பெருமையுடைய மேருமலையொடு பகைத்து வளர்ந்து எழுந்த விந்தமலை முன் இருந்த தோற்றத்தையும், பெருமையையும் முழுதும் இழந்தது அந்தோ!

 

பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை

தரியாது உயர்வு அகன்று தாழும், - தெரியாய்கொல்,

பொன்உயர்வு தீர்த்த புணர் முலையோய்! விந்தமலை

தன்உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.      ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

         திருமகளால் உண்டாகும் உயர்வை அழகினால் நீக்கிய பெரிய முலைகளை உடையவளே!  அகத்திய முனிவர் முன்னே தன்னை வியந்த விந்த மலையானது, அவர் தனது கைகளால் அழுத்தத் தாழ்ந்து தனது உயர்வை நீங்கியது.  அதுபோல, பெரியோர் முன்னை தன்னைத் தானே வியந்த பேதையும் இழிந்து தாழ்வை அடைவான்.

 

 

உன்பால் உறும் உயர்வை ஓர்ந்து பிறர் பாராட்டின்

இன்புஆம், நீ சொன்னால் இளிவு ஆமே, --- பொன்புனைந்த

தன்முலையைத் தன்கையால் தான் வருடின், ஓர் மங்கைக்கு

உள்மலி இன்பு உண்டோ உணர்.               --- திருமதீபிகை.

 

இதன் பொருள் ---

 

     உன்னுடைய உயர் நலங்களை உலகத்தார் உணர்ந்து புகழ்ந்தால் இன்பம். நீயே சொல்ல நேர்ந்தால், அழகிய பெண் ஒருத்தி தன் கொங்கையைத் தானே வருடியதுபோல், நகைப்புக்கே இடம் ஆகும்.

 

பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்

     விளக்கேற்றிப் புகுத வேண்டும்!

கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து

     நடந்து,தலை கீழாய் வீழ்வார்!

வறுமையினும் மறுமையினும் காணலாம்,

     தண்டலையார் வாழும் நாட்டில்

நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே

     கூத்தாடி நிற்ப தாமே!

 

இதன் பொருள் ---

 

     தண்டலையார் வாழும் நாட்டில் --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள நீள்நெறி நாதர் உள்ள நாட்டில், பொறுமையுடன் அறிவு உடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் --- பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச் சென்று காணவேண்டும்!, கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து நடந்து தலைகீழாய் வீழ்வர் --- செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து தலைதடுமாறி அழிவார்கள்; வறுமையினும் மறுமையினும் காணலாம் --- வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம்; (எப்போதும் ஒரு மாதிரியே இருப்பர்), நிறை குடமோ தளும்பாது --- நீர் நிறைந்த குடம் எனிலோ தளும்புவதும் செய்யாது; குறைகுடமே கூத்தாடி நிற்பது ஆம் --- நீர் குறைந்த குடம்தான் கூத்தாடி நிற்கும்.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...