95. இல்லற மாண்பு

 


“தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்


சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்


சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!


அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே - பார்வதிதேவியும், உநிர்க்கு எல்லாம் தாயியினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை - நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலாக அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர் தமை - அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையை உடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” என்னும் திருவள்ளுவ நாயனார் வாய்மொழியையும், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்னும் ஔவையின் அருள்மொழியையும் கருத்தில் கொள்க.

No comments:

Post a Comment

79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

  “ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்      அமுதபா னம்கொடுக்கும் ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்      அப்போதும் உதவிசெய்வன் கூறுமதி தேய்...