96, புராணங்கள்

“தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

     சாரும்வா மனம், மச் சமே,

  சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த

     சரிதமே, பிரமாண் டமும்,


தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;

     நெடியமால் கதை;வை ணவம்

  நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,

     நீடிய புராணம் நான்காம்;


கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,

     கமலா லயன்கா தைஆம்;

  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

     கனல் காதை ஆக்கி னேயம்;


அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —

அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும் அத்தனே - அலை வீசும் கங்கை ஆற்றையும் வெண்திங்களையும் அறுகையும் மிலைந்த தலைவனே!  

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம், பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் - நிலைமைசேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் - நிலையான இவை பத்தும் உயர்ந்த சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை - நெடியவனான திருமாலின் கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய புராணம் நான்கு ஆம் - பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம், கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம் - கலைவல்லார் கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -, கனல் காதை ஆக்கினேயம் - அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.

சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம் இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப் பதினெண் புராணங்கள்.

8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...