“சின்னமெங்கே? கொம்பெங்கே? சிவிகையெங்கே?
பரியெங்கே? சிவியார் எங்கே?
பின்னைஒரு பாழும்இல்லை! நடக்கைகுலைந்
தால்உடனே பேயே அன்றோ?
சொன்னவிலும் தண்டலையார் வளநாட்டிற்
குங்கிலியத் தூபம் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தாற் கும்பிடெங்கே?
வம்பர்இது தனையெண் ணாரே!”
இதன் பொருள் —-
சொல் நவிலும் தண்டலையார் வள நாட்டில் - புகழ்பெற்ற திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டிலே, நடக்கை குலைந்தால் - (ஒருவருடைய) ஒழுக்கம் கெட்டால், சின்னம் எங்கே - (வெற்றிச்) சின்னம் எங்கே?, கொம்பு எங்கே - (ஊது) கொம்பு எங்கே?, சிவிகை எங்கே - பல்லக்கு எங்கே?, சிவியார் எங்கே? - பல்லக்குத் தூக்குவோர் எங்கே?, பரி எங்கே - குதிரை எங்கே?, பின்னை ஒரு பாழும் இல்லை - (ஒழுங்கு கெட்ட பிறகு) எந்த மதிப்பும் இராது, உடனே பேயே அன்றோ - உடனே பேய்போலவே ஆய்விடுவர், குங்கிலியத் தூபம் காட்டும் சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே - குங்கிலியப் புகை காட்டும் நன்முயற்சியை விட்டு விட்டால் (கோயிலுக்கு மக்கள் வந்து) கும்பிடுவது இருக்குமா?, வம்பர் இதுதனை எண்ணார் - வீண்பேச்சுக்காரர் நன்னடக்கையைப் பற்றிச் சிந்தியார்.