100. நூலாசிரியரின் வணக்கம்


மலர்இதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை

     மருக்கொழுந்து உயர்கூ விளம்

  மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட

     மணிமுடி தனிற்பொ றுத்தே


சிலர்எருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு

     செம்முள்ளி மலர்சூ டவே

  சித்தம்வைத்து அவையும்அங் கீகரித் திடுமகா

     தேவதே வா!தெ ரிந்தே


கலைவலா ருரைக்குநன் கவியொடுஅம் பலவாண

     கவிராயன் ஆகும் என்புன்

  கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுஉன்

     கடன் ஆகும், அடல்நா கமும்


அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் —-

அடல் நாகமும், அலைபெருகு கங்கையும், செழுமதியமும் புனையும் அமலனே - கொல்லும் பாம்பும், அலைமிகுந்த கங்கையும், நல்ல பிறையும் அணிந்த தூயவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மலர் இதழி - மலர்ந்த கொன்றை, பைங்குவளை - பசிய குவளை, மென்முல்லை - மெல்லிய முல்லை, மல்லிகை - மருக்கொழுந்து, உயர் கூவிளம் - உயர்ந்த வில்வம், மற்றும் உள வாச மலர் - வேறும் உள்ள மணமலர், பத்திரம் - பச்சிலைகள் (ஆகியவற்றை) சிலர் சூட - சில (அடியார்கள்) அணிவிக்க, மணிமுடி தனில் பொறுத்து - நவமணிகள் இழைத்த திருமுடியில் ஏற்று, சிலர் எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு செம்முள்ளி மலர்சூட - சிலர் எருக்க மலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகாதேவ தேவா - மனம் வைத்து அவற்றையும் ஏற்று அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!

கலைவலார் தெரிந்து உரைக்கும் நன்கவியொடு - கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்ல பாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகும் என் புன்கவியையும் சூடிய - அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, மனம் மகிழ்ந்திடுவது உன் கடன் ஆகும் - திருவுள்ளம் களித்தருளுவது உன் கடமை ஆகும்.

No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...