37. மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்

இரந்தனையித் தனைநாளும் பரந்தனை,நான்

     என்றலைந்தாய்! இனிமே லேனும்

கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்

     நெறியாரே காப்பார் என்னும்

உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்,

     உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!

மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்

     தண்ணீரும் வார்ப்பர் தாமே.”


இதன்பொருள்


மரம்தனை வைத்தவர் வாடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பர் - மரத்தை வைத்தவர்கள் அது வாடிடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பார்கள். (ஆகையால்), 


இத்தனை நாளும் இரந்தனை, பரந்தனை நான் என்று அலைந்தாய் - இத்துணை நாட்களாக (உணவு வேண்டி) இரந்து, நான் நான் என்று உன்னையே நினைத்துத் திரிந்தாய், இனிமேலேனும் - இனியாவது, கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் - திருநீற்றுப் பச்சையையும்  பிறைத் திங்களையும் திருச்சடையில் மிலைந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்நீள்நெறிஎன்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே காத்து அருள் புரிவார், என்னும் உரந்தனை வைத்து இருந்தபடி இருந்தனையே - என்கிற உறுதியை உள்ளத்தில் மேற்கொண்டு (பேராசையின்றி) அமைதியாக இருந்தனையானால், உள்ள எலாம் உண்டாம் உண்மை - (பழவினை வாயிலாக) இருப்பன யாவும் உனக்குக்  கிடைக்கும்! இது வாய்மையாகும்!


      மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்' என்பது பழமொழி. 

No comments:

திருமகள் விரும்பி உறையும் இடங்கள்

     திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது..... 1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அ...