"பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்
பெரியன், உயர் வதுவை வடிவன்
பிச் சாடனன்,காம தகனன், மற லியைவென்ற
பெம்மான், புரம் தகித்தோன்,
மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி
வௌவினோன், வீரே சுரன்,
மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்
வனசரன்,கங்கா ளனே,
விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி,
மிக்கசக் கரம்உதவி னோன்,
விநாயகற்கு அருள்செய்தோன், குகன்உமை யுடன்கூடி
மிளிர்ஏக பாதன், சுகன்,
அறிவரிய தட்சிணா மூர்த்தியொடு இலிங்கம்ஆம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
இதன் பொருள் —-
பிறைசூடி - இளம்பிறையைத் திருமுடியில் தரித்தோன், உமைநேசன் - உமாதேவியின் காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி - சேக்கிழான் (இடப ஊர்தி), நடம் இடும் பெரியன் - திருநடனம் புரியும் அண்ணல், உயர் வதுவை வடிவன் - உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சாடனன் - பிச்சை எடுப்போன், காம தகனன் - மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் - காலனை உதைத்த பெரியோன், புரம் தகித்தோன் - முப்புரத்தை எரித்தவன், மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் - வீரம் நிறைந்த சலந்தரனைக் கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் - பிரமன் தலைகளில் ஒன்றைக் கிள்ளினோன், வீரேசுரன் - (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த அரன் - சரபேசுரன், உமை பாகன் - உமை பங்கன் (அர்த்தநாரீசன்) வனசரன் - வேடன், கங்காளன் - என்பு அணிந்தோன், விறல் மேவு சண்டேச ரட்சகன் - வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன், கடுமாந்தி - நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் - (திருமாலுக்கு) உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள் செய்தோன் - மூத்த பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி - முருகன் உமை ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் - விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் - இன்ப வடிவமானவன், அறிவு அரிய தட்சிணாமூர்த்தியொடு - அறிய இயலாத தக்கிணாமூர்த்தியுடன், இலிங்கம் ஆம் - இலிங்கம் ஆகிய, ஐயனே - தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!