16. எதனையும் ஆராய்ந்து செய்க


“செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்

செய்யின், மனத்தாபம் சேருமே; - செய்யஒரு

நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்

பொற்கொடியைச் சேர்துயரம் போல்.” — நீதிவெண்பா


செய்கின்ற செயலை நன்றாக ஆராய்ந்து செம்மையாகச் செய்தல் வேண்டும். வேறு விதமாகச் செய்தால் வருத்தம்தான் சேரும். முன் ஒரு காலத்து நல்ல குழந்தை ஒன்றைச் செம்மையாகப் பாதுகாத்துக் கொண்டு இருந்த கீரிப்பிள்ளையை ஆராயமல் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்குச் சேர்ந்த துன்பம் போன்றதாகும் அது. (மனத் தாபம் - வருத்தம், துன்பம். நற்குடி - நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை. நகுலன் - கீரிப்பிள்ளை.)


பொற்கொடி நகுலனை ஆராயாமல் கொன்ற கதை.


முன்ஒரு காலத்தில் ஒரு பார்ப்பனப் பெண் தனக்குக் குழந்தை இல்லாமையால், ஒரு கீரிப் பிள்ளையைக் குழந்தைபோல் பாவித்து அன்போடு வளர்த்து வந்தாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்தாலும் கீரிப்பிள்ளையிடம் அன்பு குறையாமல் அதையும் வளர்த்து வந்தாள். ஒரு நாள் தன் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கவைத்து, அதற்குக் காவலாகக் கீரிப்பிள்ளையைப் பக்கத்தில் விட்டுவிட்டு, நீர் கொண்டு வரக் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்திற்குச் சென்றாள்.  அச்சமயத்தில் குழந்து உறங்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. அதனைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் கொன்றது.  கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகியது. அந்த நிலையில் தன் எசமானியிடம் தன் மகிழ்ச்சியைக் காட்ட எண்ணி வெளியில் வந்தது. நீர்க்குடத்தோடு வந்த பார்ப்பனி, கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகுவதைக் கண்டு, குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்று விட்டது என்று எண்ணி, நீர்க்குடத்தை அதன்மேல் போட்டு உடைத்தாள்.  கீரிப்பிள்ளை இறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தாள்.  குழந்தை உயிரோடு இருந்ததையும், பாம்பு இறந்து கிடந்ததையும் பார்த்தாள்.  தன் குழந்தையைக் காப்பாற்றவே, கீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றது என உணர்ந்து, ஆராயாமல் கீரிப்பிள்ளையைக் கொன்றதை நினைந்து வருந்தி உயிர் துறந்தாள்.


16. எதனையும் ஆராய்ந்து செய்க

“செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச் செய்யின், மனத்தாபம் சேருமே; - செய்யஒரு நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப் பொற்கொடியைச் சேர்...