ஈதல், இசைபட வாழ்தல்
-----
சமுதாயம் சிறந்து வாழ ஈகை என்னும் அறத்தினை வற்புறுத்திய திருவள்ளுவ நாயனார், அறவழியில் நின்று ஒழுக மறுப்பவரை நோக்கி, ‘உனக்குப் புகழ் உண்டாகவாவது, நீ மறைந்த பின்னரும் உன்னைப் பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவாவது பிறருக்குக் கொடுத்து உதவு’ என்னும் குறிப்புத் தோன்ற ‘புகழ்’ என்னும் அதிகாரத்தினை அமைத்துள்ளார்.
“ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று முதலிலேயே கொடுத்தலையும், அதன் வழியே புகழ் பெறுதலையும் சுட்டிக் காட்டி, புகழாகிய ஊதியம் பெறுதலே உயிர்க்கு உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவ நாயனார். உலகில் அனைவரும் தாம் செய்த பணிக்கு ஊதியம் எதிர்பார்க்கின்ற நிலை ஒருபுறம் இருக்க, எந்தப் பணியும் செய்யாமலேயே மிகுந்த ஊதியத்தை விரும்புகின்ற போக்கு நிறைந்த மக்களிடையில் வாழும் நமக்கு, நாயனார் காட்டும் ‘புகழ்’ என்னும் ஊதியம், புதிய ஒன்றுதான். தான் சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஊதியமாக எண்ணும் நிலையில், உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து அதனால் பெறும் புகழே ஊதியம் என்கிறார் நாயனார். உண்மையும் அதுதான்.
உழைக்காமலே செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அப்படி ஈட்டிய செல்வத்தைக் கூட, பிறருக்குத் தந்து உதவவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்களின் செல்வமானது, “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” என்னும் நிலையில் நிச்சயம் ஒருநாள் இல்லாது போகும். தேனீக்கள் சுற்றிச் சுற்றி உழன்று, தேன் உள்ள மலர்களைத் தேடிச் சென்று, சிறுச்சிறிதாகத் தேனைக் கொண்டுவந்து, பெரிய பெரிய தேனடைகளை வைக்கும். அந்தத் தேனடைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தேனீக்கள் தேனை இழப்பதோடு தம் உயிரையே இழந்துவிடுகின்றன. உலோபத்தனம் மிகுந்தவரின் செல்வம் இப்படித் தான் கரையும். உலோபியரின் இயல்பு குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது.
"திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்
தேடிப் புதைத்து வைப்பார்,
சீலை நலமாகவும் கட்டார்கள், நல்அமுது
செய்து உணார், அறமும் செயார்,
புரவலர்செய் தண்டம் தனக்கும், வலுவாகப்
புகும் திருடருக்கும் ஈவார்,
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,
புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,
விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்
வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என
மிகுசெட்டி சொன்னகதைபோல்,
வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
மற்றொருவருக்கு ஈவரோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார். நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார். நல்ல உணவு சமைத்து உண்ணமாட்டார். எந்த நல்ல அறவழியிலும் பொருளைச் செலவு செய்யமாட்டார். அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார். புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார். குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில், மிக்க பொருள் செலவழிவதனாலே, கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல, உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?
“பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்
உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.” -- நல்வழி.
பெரிய இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்த மக்கள், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர் எம்மை விரும்பி நேசித்தவர் என்று யாரையும் விரும்பாதவர்கள் உலோபிகள். அவர்கள் வந்து தம்மைச் சரண் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார். பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணை உண்டாக்கினால் அவருக்கு எல்லாம் கொடுப்பார்.
நாம் தேடுகின்ற பொருளாகிய ஊதியம், நம்மை விட்டுச் ‘செல்வோம் செல்வோம்’ என்று சென்று கொண்டே இருக்க, புகழாகிய ஊதியமோ நாம் மறைந்த பின்பும் என்றும் நிலைத்து நம்மை வாழ வைக்கின்றது என்ற உண்மையை உய்த்து உணரவேண்டும். பிற அனைத்தும் உலகில் நில்லாது மறைய, புகழ் ஒன்றே மனிதனை எல்லோர் உள்ளத்திலும் என்றும் வாழவைப்பதாகும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்” என ஒரு திருக்குறள் வழியே காட்டுகிறார். ‘ஒன்றா’ என்னும் சொல்லுக்கு, ஒப்பில்லாத என்று பொருள்.
இந்த நிலையில்லாத உலகத்தில் என்றும் நிலைத்திருப்பது, தனக்கு ஒப்பு இல்லாத புகழ் ஒன்றே என்பதை விளக்கி, எப்படியும் வாழ நினைக்கும் மனிதன், நல்லன செய்து, அல்லன கடிந்து, புகழ் ஓங்க வாழவேண்டுமே என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் ‘புகழ்’ என்னும் அதிகாரம். எனவே, நிலைபெற்ற புகழைப் பெற, நிலையற்ற மனிதன், நிலையற்ற வாழ்வில் தன் நிலையற்ற பொருள் முதலியவற்றால் சிறக்க, ‘ஈகை’ என்னும் அறத்தினைப் புரிந்து வாழ வேண்டும். ‘உயர்ந்த புகழ்', ‘நீள் புகழ்’ ‘இசை என்னும் எச்சம்’ என்று புகழ் விளக்கப் பெறுகின்றது. ஈகையைச் செய்தவர் இறந்து போவது நிச்சயம். ஆனால், அவரது பருவுடம்பு மறைந்த பின்னரும், அவரது ‘புகழுடம்பு” இறவாது நிலைத்து இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளல்கள் செய்த அறச் செயல்களை இன்றும் இந்த உலகமானது போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, முன்னோர் ஈட்டிய புகழை நாமும் பெறவேண்டும் என்று ஆற்றுப்படுத்துகின்றார் திருவள்ளுவ நாயனார்.
உலகில் பிறக்கின்றோம் நாம். வளர்கின்றோம்; வாழ்கின்றோம். வாழ்நாள் கழிகின்றது. இறுதியில் இறக்கின்றோம். இது மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான நியதி. “பெருங்காரியம் போல் வரும் கேடு உடம்பால் பிரியம் கூர வந்து கருவூறிப் பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்” என்று அருணகிரிநாதர் பாடியளவிலேயே மனித வாழ்க்கை கழிதல் கூடாது. ஒரறிவுடைய மரம் தொடங்கி எல்லா உயிர்களும் பிறந்து, இருந்து, வாழ்ந்து மறைகின்றன. ஆனால், ஆறு அறிவுடைய மனிதன் பிறவற்றினும் மேம்பட்ட காரணத்தினால், தான் என்றும் நிலைக்க வழி காணவேண்டும். உலகில் பிறந்தவர் யாவரும் எப்படியும் மறையப் போகின்றனர். மறைந்த பின்னும் நினைத்துப் பார்க்கும்படியாக, ‘ஈகை’ என்னும் அறத்தினைச் செய்யவில்லையானால், அப்படிப்பட்டவன் பிறவாது இருந்தாலே நலமாக இருந்திருக்கும். புகழோடு வாழ்ந்து மடியாதவர், பிறத்தலை விடப் பிறவாமல் இருப்பதே நல்லது என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.
“தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” --- திருக்குறள்.
மக்களாகப் பிறந்து, ஈகை’ என்னும் அறித்தைப் புரியாது, பயனின்றி வாழ்ந்தால் கூடப் பரவாயில்லை. மாறாகப் பல கொடுமைகளைச் செய்து இகழ்ச்சி அடைகின்றார்கள் பலர். தாமும் கெட்டு, தாம் வாழும் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் கொடுமையை எண்ணிய நாயனாரின் அருள் உள்ளம் வருந்தி, “தோன்றாமை நன்று” என்று கூற வைத்தது. இத்தகைய கொடுமனம் படைத்தவர்கள் பலர் தோன்றாது இருந்தால் - நல்லவை செய்து ‘நீள்புகழ்’ பெறுவோர் பலர் பிறந்திருந்தால், இன்று உலகில் காணப்படும் கொடுமைகள் இல்லாது இருக்கும். மக்களின் வாழ்வு மெத்த மகிழ்ச்சியாகவே அமையும். நல்லனவற்றைச் செய்து ‘நீள்புகழ்’ பெறாத மக்களைத் தாங்குகின்ற நிலத்தை எண்ணுகிறார் திருவள்ளுவ நாயனார். நிலத்துக்கு ‘நல்லாள்’ என்னும் அற்புதமான பெயரைச் சூட்டி மகிந்த திருவள்ளுவ நாயனார், அந்த நல்லாள் இசை ஒழிய வாழவேண்டி வந்ததே, அதனால், நிலமானது வளம் குன்றிப் போகுமே என்றும் வருந்துகிறார்.
வசைஇலா வண்பயன் குன்றும், இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்” -- திருக்குறள்.
புகழுடம்பினைப் பெறாத, வெற்றுடம்பினரை இந்த ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. நல்லன செய்யாது, அல்லனவே செய்பவர் வாழ்கின்ற நாடு, ‘நாடா வளத்தன’ என்ற நிலையிலிருந்து மாறி, தன் வண்பயனாகிய வளமெல்லாம் அழிய, மக்கள் பசியும் பிணியும் பகையும் பற்றி வாடுவார்கள் என்பதை, “வசை இல்லா வண்பயன்” என்னும் சொல்லால் திருவள்ளுவ நாயனார் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றார். இன்று நாம் கண்முன் காணுகின்ற காட்சிதான் இது. திருவள்ளுவர் அருள்வாக்குப் பொய்யாகிப் போகுமா? நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும், அவற்றை மக்கள் எல்லோரும் நிறைவாக அனுபவிக்கின்ற நிலை இல்லையே. உயிர் உணர்வற்ற மாக்களால் தானே இந்த அவலம் எல்லாம் நிகழ்கின்றது. உலகம் வாழ வேண்டுமாயின், இத்தகைய கொடுமையாளர்கள் இல்லாது ஒழியவேண்டும். இவர்களை ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்கக் கூடாது என்பதைப், புகழ் என்னும் அதிகாரத்தால் காட்டிய நாயனார், தனிமனிதன் புகழோடு வாழ்வதால் தரணியே சிறக்கும் என்று காட்டினார். தான் வாழ்வதோடு, சமுதாயமும் சிறக்க வாழவேண்டும் என்று அறத்தை ஆற்றிப் புகழ் பெறாத வசையாளர் வழியே வையமும் சமுதாயமும் எப்படி மாறும் என்பதையும் காட்டினார். என்றென்றும் புகழொடு வாழ விரும்பும் மக்களினம், திருவள்ளுவ நாயனார் காட்டிய கடமை உணர்வைக் கருத்தில் இருத்துதல் வேண்டும்.