76. சுகம் படுக்கை அறியாது

தானவனா கியஞானச் செயலுடையார்

     மாதர்முலை தழுவி னாலும்

ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும்

     அனுபோகம் அவர்பால் உண்டோ?

கானுறையுந் தண்டலையார் அடிபோற்றும்

     சுந்தரனார் காமி போலாய்

மேனவிலும் சுகம்படுக்கை மெத்தையறி

     யாதெனவே விளம்பி னாரே.


இதன் பொருள் ---

    கான் உறையும் தண்டலையார் அடிபோற்றும் சுந்தரனார் - மணம் தங்கிய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடியை வணங்கும் சுந்தரமூர்த்தி நாயனார், காமி போலாய் - காமுகனைப் போல் நடந்துகொண்டு, மேல் நவிலும் படுக்கைச் சுகம் மெத்தை அறியாது எனவே விளம்பினார் - உயர்த்திக் கூறப்படும் படுக்கை இன்பத்தைப் பஞ்சணை அறியாது (மெத்தை போலவே தாம் இருப்பதாக) என்று கூறினார்; (ஆகையால்) தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார் - தாமும் இறைவனும் ஒன்றெனும் உணர்வு வந்த அறிவுச் செயல் உடையோர், மாதர்முலை தழுவினாலும் - பெண்களைக் கூடினாலும், ஆனதொழில் வகை வகையாச் செய்தாலும் - கலவிக்குரிய தொழில்களை வகைவகையாகப் புரிந்தாலும், அவர்பால் அனுபோகம் உண்டோ - அவர்களிடம் அந்த இன்பப் பற்று இராது.

      துறவிகள் உலகத்தோடு கலந்திருந்தாலும் பற்று அற்றவராகவே இருப்பார்கள் என்பது கருத்து. கான் என்னும் சொல்லுக்கு மணம் என்று பொருள் உண்டு.

        தவவேடம் பூண்டு, தவநெறியில் நின்று ஒழுகி, எப்போதும் இறைவனையே தியானம் செய்து வாழ்கின்ற துறவிகளுக்குப் பல படைக்கலங்கள் துணையாக இருக்கின்றன. அவர்களுக்குத் தாடி ஒரு படை. உடம்பில் பூசியிருக்கும் திருநீறு ஒரு படை, கழுத்தில் அணிந்துள்ள உருத்திராட்சம் ஒரு படை. பகைவர்கள் இவற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.  புறத்திலே துறவுக்கு உரிய கோலத்தைப் புனைந்து கொள்வது அகத்திலே கொண்ட திண்மைக்கு அடையாளம். மனத்திற்குள் துறவுத் தன்மை இன்றி, வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் அவர்கள் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள். வெற்று வேடத்தால் பயன் இல்லை. "வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?"என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

 "மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்,

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்,

மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுனயோக ஞானிகள் 

முலைத்தடத்து இருப்பினும் பிறப்பு அறுத்து இருப்பரே”  

என்று பேசுகிறார் சிவவாக்கியர். 

      மனசிலே மாசு இல்லாத உண்மை ஞானிகள் மகளிருக்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய மார்பிலே பழகினாலும் மனத்திலே அழுக்கு உறாமல் இருப்பார்கள். 'அது எப்படி?' என்று கேட்கலாம். குழந்தைகள் இருப்பது இல்லையா? பெண்களின் மார்பிலே தவழ்ந்து கிடக்கிற குழந்தைகளுக்குக் காம உணர்ச்சி உண்டாவதில்லை. அந்த நிலையில் இருப்பவர்கள் உண்மை ஞானிகள். அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்,  புலன்களை எல்லாம் வென்றவர்கள். முனிவர்கள் பொறிகளை அடக்கியவர்கள். புலன் இன்பங்களை வேண்டாம் என்று உதறியவர்கள். அவர்கள் உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள். 


No comments:

கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்      உபகாரம் தருமம் செய்து கொண்டபொருள் விலைவாசி காணிதே      டிக்கோடி கொடுப்ப தல்லால் வண்டருமாய் ஒன்றுபத்து ...