73. பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே

"பணம்தானே அறிவாகும்! பணம்தானே

     வித்தையும்ஆம்! பரிந்து தேடும்

பணம்தானே குணமாகும்! பணம் இல்லா-

     தவர் பிணமாம் பான்மை சேர்வர்!

பணம் தானே பேசுவிக்கும்! தண்டலைநீள்

    நெறியாரே! பார் மீதில் தான்

பணம் தானே பந்தியிலே! குலம் தானே

    குப்பையிலே படுக்கும் தானே."

இதன் பொருள்  ---

    தண்டலைநீள் நெறியாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே!

    பணந்தானே அறிவு ஆகும் - பணமே அறிவாக மாறும், பணந்தானே வித்தையும் ஆம் - பணமே கல்வியைத் தரும், பரிந்து தேடும் பணந்தானே குணம் ஆகும் - விரும்பிச் சேர்க்கும் பணமே குணம் எனக் காட்சிதரும், பணம் இல்லாதவர் பிணம் ஆம் பான்மை சேர்வர் - பணம் இல்லாதோர் பிணம் என்னுந் தன்மையர் ஆவர், பணந்தானே பேசுவிக்கும் - பணமே (பேசாதவரையும்) பேசுமாறு செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே குலந்தானே குப்பையிலே படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம் குப்பையிலும் சேரும்.

    ‘பணமில்லாதவன் பிணம்' ‘பணம் பந்தியிலே குலம் குப்பையிலே' ‘பணம் பத்தும் செய்யும்' என்பன பழமொழிகள்.


No comments:

நூலறிவும் நுண்ணறிவும்

நூலறிவும், நுண்ணறிவும் ----- "முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதுஉம்  கற்றனம் என்று களியற்க,-சிற்றுளியால்  கல்லும் தகரும், தகரா, கனங்குழ...