"பணம்தானே அறிவாகும்! பணம்தானே
வித்தையும்ஆம்! பரிந்து தேடும்
பணம்தானே குணமாகும்! பணம் இல்லா-
தவர் பிணமாம் பான்மை சேர்வர்!
பணம் தானே பேசுவிக்கும்! தண்டலைநீள்
நெறியாரே! பார் மீதில் தான்
பணம் தானே பந்தியிலே! குலம் தானே
குப்பையிலே படுக்கும் தானே."
இதன் பொருள் ---
தண்டலைநீள் நெறியாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே!
பணந்தானே அறிவு ஆகும் - பணமே அறிவாக மாறும், பணந்தானே வித்தையும் ஆம் - பணமே கல்வியைத் தரும், பரிந்து தேடும் பணந்தானே குணம் ஆகும் - விரும்பிச் சேர்க்கும் பணமே குணம் எனக் காட்சிதரும், பணம் இல்லாதவர் பிணம் ஆம் பான்மை சேர்வர் - பணம் இல்லாதோர் பிணம் என்னுந் தன்மையர் ஆவர், பணந்தானே பேசுவிக்கும் - பணமே (பேசாதவரையும்) பேசுமாறு செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே குலந்தானே குப்பையிலே படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம் குப்பையிலும் சேரும்.
‘பணமில்லாதவன் பிணம்' ‘பணம் பந்தியிலே குலம் குப்பையிலே' ‘பணம் பத்தும் செய்யும்' என்பன பழமொழிகள்.