69. ஏழையர்க்குத் தெய்வமே துணை

“அந்தணர்க்குத் துணைவேதம், அரசருக்குத்

     துணை வயவாள், அவனி மீது

மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்

     துணை மதுர வார்த்தை அன்றோ?

நந்தமக்குத் துணையான தண்டலைநீள்

     நெறியாரே! நண்ப ரான

சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்

     தெய்வமே துணையென் பாரே.


இதன் பொருள் ---


அந்தணர்க்கு வேதம் துணை – வேதியர்க்கு வேதமே ஆதரவு - அரசருக்கு வயவாள் துணை - மன்னர்க்கு வெற்றிமிகும் வாளே ஆதரவு, அவனி மீது மைந்தர்க்குத் தாயார் துணை - உலகிலே குழந்தைகட்கு அன்னையே ஆதரவு, தூதருக்கு மதுர வார்தையன்றோ துணை - தூதர்களுக்கு இனியமொழி அன்றோ ஆதரவு?, நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே நண்பரான சுந்தரர்க்குத் துணை - நமக்குத் துணையாக இருக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே அவருக்குத் தோழரான சுந்தரர்க்குத் துணை ஆனார். நாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணை என்பார் - எப்போதும் ஏழைகட்குத் தெய்வமே ஆதரவு என்று அறிந்தோர் கூறுவர்.


     திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்பது பழமொழி.


No comments:

பொது --- 1122. மக்கள் ஒக்கல் தெரிவை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மக்கள் ஒக்கல் (பொது) முருகா!  தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக. த...