“அந்தணர்க்குத் துணைவேதம், அரசருக்குத்
துணை வயவாள், அவனி மீது
மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்
துணை மதுர வார்த்தை அன்றோ?
நந்தமக்குத் துணையான தண்டலைநீள்
நெறியாரே! நண்ப ரான
சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்
தெய்வமே துணையென் பாரே.
இதன் பொருள் ---
அந்தணர்க்கு வேதம் துணை – வேதியர்க்கு வேதமே ஆதரவு - அரசருக்கு வயவாள் துணை - மன்னர்க்கு வெற்றிமிகும் வாளே ஆதரவு, அவனி மீது மைந்தர்க்குத் தாயார் துணை - உலகிலே குழந்தைகட்கு அன்னையே ஆதரவு, தூதருக்கு மதுர வார்தையன்றோ துணை - தூதர்களுக்கு இனியமொழி அன்றோ ஆதரவு?, நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே நண்பரான சுந்தரர்க்குத் துணை - நமக்குத் துணையாக இருக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே அவருக்குத் தோழரான சுந்தரர்க்குத் துணை ஆனார். நாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணை என்பார் - எப்போதும் ஏழைகட்குத் தெய்வமே ஆதரவு என்று அறிந்தோர் கூறுவர்.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்பது பழமொழி.