58. இவையே போதும்

 



58. இவையே போதும்


"பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர்

     பூவலம் செய வேண்டுமோ?

  பொல்லாத கொலைகளவு இலாத நன்னெறி உளோர்

     புகழ்அறம் செய வேண்டுமோ?


நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்

     நல்லறம் செய வேண்டுமோ?

  நல்மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு

     நதி படிந்திட வேண்டுமோ?


மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்

     விரும்பி வழிபட வேண்டுமோ?

  வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை

     வேண்டி அர்ச்சனை செய்வரோ?


ஐயாறு உடன் கமலை, சோணாசலம், தில்லை

     அதிபனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே --- திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் எனப்படும் தில்லை ஆகிய திருத்தலங்களின் தலைவனே! அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர் பூவலம் செய வேண்டுமோ --- அழிவில்லாத உண்மையும் ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வருதல் வேண்டுமோ?

பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ --- தீய கொலையும் களவும் ஆகிய பாதகச் செயல்கள் அற்று, நல்லொழுக்க நெறியில் நற்பவர் புகழத்தக்க அறங்களைச் செய்தல் வேண்டுமோ?

நையாத காமத்தை லோபத்தை விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ --- என்றும் குறையாத ஆசையையும் உலோபத்தனத்தையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தைச் செய்தல் வேண்டுமோ?

நல் மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு நதி படிந்திட வேண்டுமோ --- நல்ல உள்ளத் தூய்மை பெற்றவர்கள், புண்ணிந நதிகளில் முழுகுதல் வேண்டுமோ?

மெய்யா நின் அடியரை பரவுவோர் உன்பதம் விரும்பி வழிபட வேண்டுமோ --- உமது அடியவரை உண்மையாக வணங்குவோர், உமது திருவடியைப் போற்றி வழிபட வேண்டுமோ?

வேதியர் தமைப் பூசை பண்ணுவோர், வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ --- மறையவரை வணங்குவோர், வானவரை விரும்பி மலரிட்டு வழிபடுவரோ?

    விளக்கம் --- பூவலம் செய்தல் என்பது திருத்தல யாத்திரை,  தீர்த்த யாத்திரை சென்று வருவதைக் குறிக்கும். அருள் நூல்களையும் நீதி நூல்களையும் ஓதி மெய்யறிவு பெறுதல் வேண்டும். அது குருமுகமாக அமைவதே சிறந்தது. 

    சற்குருவின் பெருமையைத் திருமந்திரம் கூறுமாறு காண்க...

"தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு,

தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்

தாள்தந்து, தத்துவ அதீதத்துச் சார் சீவன்

தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே."

இப் பாடலின் பொழிப்புரை : சற்குருவே தன்னை அடைந்த மாணாக்கர்க்குத் திருவருளை வழங்கிக் காக்கும் பதி ஆவான். அவனை அடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தையாலும், திருவடி சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்து விடுவான்.

    எனவே, சற்குருவின் பெருமை அவரது செயலால் விளங்கும் என்பதும், அது வெற்று வேடத்தால் மட்டுமே விளங்காது என்பதும் அறியப்படும்.

"தவிர வைத்தான் வினை, தன் அடியார் கோள்

தவிர, வைத்தான் சிரத்தோடு தன் பாதம்,

தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்,

தவிர வைத்தான் பிறவித் துயர் தானே."

இப் பாடலின் பொழிப்புரை : (சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும், ஒன்பது கோள்களின் தீங்கு நீங்கவும், யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

    எனவே, சற்குரு ஒருவனுக்கு இறையருளால் வாய்க்கவேண்டும். அதற்காகத்தான், தீர்த்த யாத்திரையும், தலயாத்திரையும் மேற்கொள்ளுவது. "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்னும் தாயுமான அடிகளின் அருள் வாக்கு உணரத்தக்கது.

    குருமுகமாக இருந்து அருள் நூல்களையும், நீதி நூல்களையும் ஓதித் தெளியவேண்டும். ஓதுவது, ஒழியாமல் நிகழவேண்டும். "ஓதுவது ஒழியேல்" என்ற ஔவையார் திருவாக்கின்படி, அறநூல்களை ஓயாது ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் குற்றமற ஓதுதல் வேண்டும். குற்றம் என்பது, ஐயம், திரிபு, மயக்கம் என குற்றங்கள் மூன்று என உணர்க. பொருளினிடத்தில் உண்டா, இல்லையா என்று ஐயுறுதல், ஒன்றை ஒன்றாக மாறுபட அறிதல், உண்மை அறியாமல் மயங்குதல். இந்தக் குற்றங்கள் கடிந்து கற்றல் வேண்டும்.

    இதனையே, திருவள்ளுவர், "கற்க. கசடுஅறக் கற்க. கற்பவை கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க" என்று கூறுகின்றார்.

"கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."

ஓதுவதன் பயன் ஒழுக்கம் உடைமை எனவும்,  ஒழுக்கம் இல்லாதார் ஓதியும் பயனில்லை என உணர்க.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ---  உலகநீதி.

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.---  கொன்றைவேந்தன்.

ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை.. ---  கொன்றைவேந்தன்.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.---  கொன்றைவேந்தன்.

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை..     --- முதுமொழிக் காஞ்சி.


"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." ---  அறநெறிச்சாரம்.


"பேருரை கண்டு அறியாது தலைச்சுமை

     ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,

போரில் நடந்து அறியாது பதினெட்டு

     ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,

ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்

     பொருள் சுமந்த அறிவிலோனும்,

காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த

     கழுதைக்குஒப் பாவர் தாமே." ---  தண்டலையார் சதகம்.


    இனி, ஓதுகின்ற நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுர்ணமி, அமாவாசை, பிரதமை.  என மாதத்தில் எட்டு நாள்கள் ஓதக் கூடாது.

"அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,

சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா

வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்

பித்தரும் பேசார் பிழை." --- ஔவையார்.

    ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும், தான்அடங்காப்

பேதையில் பேதையர் இல்." ---  திருக்குறள்.

    அவ்வாறு, பூவலம் செய்வதால் உண்டாகும் நற்பண்புகள் இயல்பாகக் கைவரப்பெற்ற ஒருவர் மேலும் பூவலம் செய்தல் வேண்டத் தகுவது அல்ல என்பதைக் காட்ட ‘பொய்யாத ....... வேண்டுமோ!' என்றார். 

    கொலை, களவு முதலிய பெரும் பாதகங்களை ஒருவன் செய்யாது ஒழுகுதல் நன்னெறி ஆகும். அதுவே அறமும் ஆகும் என்பதால், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார். மனமாசு அற்று, உயிர்கள்பால் கருணை பூண்டவர்கள், உலகமக்கள் எக்காலத்திலும் இன்புற்றிருக்க எண்ணுவார்கள். "எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" எனாறர் தாயுமானார்.

    காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவை உட்பகை என்பர் பெரியோர். உள்ளத்தில் மறைந்து உள்ள இந்தப் பகைகள் ஆன்மலாபத்தைக் கெடுத்து, உயிரைப் பிறவிக் குழியில் வீழ்த்துவன. 

நையாத காமம் - குறையாத ஆசை. 

சோண + அசலம். சோணாசலம், நெருப்பு மலை. திருவண்ணாமலையைக் குறிக்கும்.

    அடியவர் உள்ளத்தே ஆண்டவன் குடிகொண்டு இருப்பான்.  எனவே, அடியாரை வழிபட்டால் ஆண்டவனையே வழிபட்டதாகும். அடியார் வழிபாடு மிகுந்த நன்மையை அளிக்கும். அடியார்க்கு அடியாரையும் வழிபடலாம் என்பதால், "அடியார்க்கு அடியேன்" என்றும் "அடியார் அடியார்க்கும் அடியேன்" என்றும் திருத்தொண்டத் தொகை அறிவுறுத்துகின்றது.

    மெய்யடியார் பெருமையைக் குறிக்கும் பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க...


"மிடிஇட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம் எனவும்

        மெய் எலாம் உள் உடைந்து,

   வீறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய்

        வேதனைகள் உற, வேதனும்

துடியிட்ட வெவ்வினையை ஏவினான், பாவிநான்

        தொடர்இட்ட தொழில்கள் எல்லாம்

    துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டு ஆயது, உன

        தொண்டர்பணி செய்வது என்றோ?

அடிஇட்ட செந்தமிழின் அருமை இட்டு ஆரூரில்

        அரிவை ஓர் பரவைவாயில்

    அம்மட்டும் அடிஇட்டு நடை நடந்து அருள் அடிகள்

        அடிஈது முடிஈது என

வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே!

        வளமருவு தேவைஅரசே!

    வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை

        வளர்காதலிப் பெண்உமையே."    ---  தாயுமானார்.


:பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,

        புராந்தகி, த்ரியம்பகி, எழில்

    புங்கவி, விளங்கு சிவசங்கரி, சகஸ்ரதள

        புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி, மனாதீத நாயகி, குணாதீத

        நாதாந்த சத்தி என்று உன்

    நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே

        நான் உச்சரிக் கவசமோ?

ஆர் அணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ,

        அகிலாண்ட கோடிஈன்ற

   அன்னையே! பின்னையும் கன்னி என மறைபேசும்

        ஆனந்த ரூபமயிலே!

வார் அணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்

        வளமருவு தேவைஅரசே!

   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை

        வளர்காத லிப்பெண்உமையே." ---  தாயுமானார்.


"பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்து இரப்

பார்முகம் பார்த்து இரங்கும்

பண்பும், நின் திருவடிக்கு அன்பும், நிறை ஆயுளும்,

பதியும், நல்நிதியும், உணர்வும்,

சீர்கொண்ட நிறையும், உள்பொறையும், மெய்ப்புகழும், நோய்த்

தீமைஒரு சற்றும் அணுகாத்

திறமும்,மெய்த் திடமும், நல்இடமும், நின்அடியர் புகழ்

செப்புகின்றோர் அடைவர்காண்;

கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும், மயிலும், ஒரு

கோழிஅம் கொடியும், விண்ணோர்

கோமான்தன் மகளும்,ஒரு மாமான்தன் மகளும்,மால்

கொண்டநின் கோலம் மறவேன்,

தார்கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!" ---  திருவருட்பா


"வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ?

வானைஒரு மான் தாவுமோ?

வலிஉள்ள புலியை ஓர் எலிசீறுமோ? பெரிய

மலையை ஓர்ஈ சிறகினால்

துன்புற அசைக்குமோ? வச்சிரத் தூண்ஒரு

துரும்பினால் துண்டம் ஆமோ?

சூரியனை இருள் வந்து சூழுமோ? காற்றில் மழை

தோயுமோ? இல்லை, அதுபோல்

அன்புஉடைய நின்அடியர் பொன் அடியை உன்னும் அவர்

அடிமலர் முடிக்கு அணிந்தோர்க்கு,

அவலம் உறுமோ? காமம் வெகுளி உறுமோ? மனத்து

அற்பமும் விகற்பம் உறுமோ?

தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!" ---  திருவருட்பா.

    "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்றது திருமந்திரம். "வேதம்" என்னும் சொல், 'வித்' என்னும் சொல்லின் அடியாக வந்தது. வித் என்றால் வித்தை அல்லது அறிவு எனப்படும். மெய்யறிவு பெறுவதற்குத் துணை புரிவது வேதம். மெய்யறிவு பெற்ற உயிரானது அறவழியில் ஒழுகும். வேதம் என்பது வாழ்வியல் நெறி. ஆகமம் என்பது வழிபாட்டு நெறி. அறவழியில் நின்றோர் அனைவரும் அந்தணர். அவர் எல்லா உயிரும் இன்புற்றிருக்க எண்ணுவர். உலக நன்மைக்காகவே வாழ்வர் என்பதால், "அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்" என்றார் திருவள்ளுவ நாயனார். இவருள்ளத்தும் இறைவன் குடிகொண்டு இருப்பான். எனவே, வேதியரை வணங்கினோர் வேறு தேவரை வணங்கவேண்டியதில்லை என்றார். 


57. இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

 


57.  இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

                             -----


"மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதுஅரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேர்இடமும், வரும்எதுகை

     மோனை இல்லாத கவியும்,


காப்புஅமைவு இலாததோர் நந்தவனமும், நல்ல

     கரை இலா நிறை ஏரியும்,

  கசடு அறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,


கோப்புஉள விநோதம்உடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட்டமும்,

  குளிர்புனல் நிறைந்து வரும் ஆற்று ஓரம் அதில்நின்று

     கோடு உயர்ந்து ஓங்கு தருவும்,


ஆப்பு அது இல்லாத தேர், இவைஎலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஐயனே --- தலைவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மூப்பு ஒருவர் இல்லாத குமரி குடி வாழ்க்கையும் --- மூத்த ஒருவருக்கு அடங்கி வாழாமல் சுயேச்சையாக வாழ்கின்ற இளம் பெண்ணின் வாழ்க்கையும்,

  மூது அரண் இலாத நகரும் --- பழைமையான காவல் இல்லாத நகர மும், 

மொழியும் வெகுநாயகர் சேர் இடமும் --- அதிகாரம் படைத்தவர்கள் சேர்ந்துள்ள இடமும்,

வரும் எதுகை மோனை இல்லாத கவியும் --- இலக்கடத்தில் சொல்லப்படும் எதுகையும் மோனையும் சேராத பாடலும், 

காப்பு அமைவு இலாதது ஓர் நந்தவனமும் --- காவல் பொருந்தி இராத ஒரு பூங்காவும், 

நல்ல கரை இலா நிறை ஏரியும் --- நல்ல கரையில்லாது உள்ள நீர் நிறைந்த ஏரியும், 

கசடுஅறக் கற்காத வித்தையும் --- மனக் குற்றங்கள் அறுமாறு கல்லாத கல்வியும், 

உபதேச காரணன் இலாத தெளிவும் --- கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைகளால் வருகின்ற தெளிவும், 

கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர் செய் கூத்தாட்டமும் --- கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் என்பவர்கள் ஆடுகின்ற கூத்தும், 

குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் --- குளிர்ந்த நீர் நிறைந்து வரக்கூடிய ஆற்றின் கரையிலே வளருகின்ற நீண்ட உயர்ந்த கொம்புகளை உடைய மரமும், 

ஆப்பு அது இல்லாத தேர் ---- அச்சாணி இல்லாத தேரும், 

இவையெலாம் ஒன்று ஆகும் - இவை யாவும் ஒரே தன்மையுடையன ஆகும். இவை எல்லாம் அழியக் கூடியவை ஆகும்.


      விளக்கம் --- இதே பொருள் பட வந்துள்ளது, பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

"மூப்பு இலாக் குமரி வாழ்க்கை, 

முனை இலா அரசன் வீரம்,

காப்பு இலா விளைந்த பூமி, 

கரை இலாது இருந்த ஏரி,

கோப்பு இலான் கொண்ட கோலம், 

குருஇலான் கொண்ட ஞானம்,

ஆப்பு இலா சகடுபோலே 

அழியும் என்று உரைக்கல் ஆமே."

(தனக்கு மூத்தோர் ஒருவர் இருந்து, அவருக்கு அடங்கி வாழாத இளம் பெண்ணின் வாழ்க்கை, கோபம் கொள்ளாத அரசனின் வீரம், காத்தல் இல்லாத, நெல் விளைந்த நிலம், வலிமையான கரை இல்லாமல் இருந்த ஏரி, (குளம் என்றும் கொள்ளலாம்), பெருமைக்கு உரிய செல்வத்தைத் தன்னிடம் கொண்டு இராத ஒருவன் செய்துக் கொண்ட ஆடம்பரமான அலங்காரம்,

குருநாதர் ஒருவர் மூலம் அறிந்துகொள்ளாமல், ஒருவன் தானே கற்றுக் கொண்ட கல்வி அறிவு, இவை எல்லாம், அச்சாணி இல்லாத வண்டி போல, பயன்றறவையாய் அழிந்து போகும் என்று உறுதியாகச் செல்லலாம் என்பது இப்பாடலின் பொருள்.)

முதுமை + அரண் : மூதரண் என வந்தது. கோட்டை. 


மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் 

காடும் உடையது அரண். ---  திருக்குறள்.


மணிபோல் தெளிந்த நீர் நிலையும், நிலப்பகுதியும், மலைத் தொடர்களும், தொடர்ந்த நிழலோடு கூடிய காடுகளும் ஒரு நாட்டிற்குச் சிறந்த அரண்கள் ஆகும்.

அதிகாரம் படைத்தவர்கள் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால், தங்களில் யார் அதிகாரம் நிறைந்தவர் எனக் காட்டிக் கொள்வதிலும், ஒருவர் அதிகாரத்தை இன்னொருவர் பறிக்கும் செயலும் மிகுந்து இருக்கும்.

பாடலுக்கு இலக்கணமாக (இலட்சணமாக) உள்ளவை எதுகையும், மோனையும். அப்படி அமைந்தால் பாடல் இனிமையாக, சொல்லழகும், பொருள் அழகும் நிறைந்து இருக்கும். இக் காலத்தில் வரியைப் பிளந்து எழுதினாலே பாட்டு என்று ஆகிவிட்டது. "கானமயில் ஆடக் கண்டு இருந்த வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்து, தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி" என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இக்காலத்தில் பொருந்தும்.

கற்கவேண்டிய நூல்களைக் கற்று மனமாசு அடங்குவதே கல்வியாகும். கசடு அறக் கற்றலாவது,  நூலைக் கற்கும்போது உண்டாகும் விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடன் இருந்து பலகாலும் பயிலுதல் எனப் பரிமேலழகர் பெருமான் காட்டியது.

உபதேசகாரணன் - கற்பிக்குந் தலைவன். ‘கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்', ‘ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்' என்பவை இங்கு நினைக்கத் தக்கவை.

    கருத்து --- எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.


பிரார்த்தனை என்னும் மருந்து

 

பிரார்த்தனை என்னும் மருந்து

-----

1925-ஆம் ஆண்டில் தோன்றி, 1995 வரை வாழ்ந்திருந்த  "தமிழ்மாமுனிவர்" என்று போற்றப்பட்டு, பல அரிய செயல்களைச் செய்து, வாழ்ந்து காட்டி, நம்மிடையே இருந்து மறைந்த, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளில் ஒன்று,  "அருள்நெறி முழக்கம்" என்னும் நூல், ஆகும். இந்நூல் 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், "பிரார்த்தனை என்னும் மருந்து" என்னும் தலைப்பில் திருச்சிராப்பள்ளியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை. அன்பர்களின் சிந்தனைக்குத் தரப்படுகின்றது.

                                                            ---------------------------

சந்தேகம் மனிதர்களின் நேரிடையான சத்துரு. அது நம்முடன் உடன்பிறந்த ஒரு தொற்றுநோய். அதற்கு நாம் எளிதில் ஆளாகி விடுகின்றோம். சந்தேகம் என்ற ஒன்றினையே நாம் நம் வாழ்நாளில் காணாது வாழ முயற்சிக்க வேண்டும். அது நம் வாழ்வில் நம்மை அறிந்தும் அறியாமலும் இடம் பெற்று விடுகின்றது.

சந்தேகம் உண்டாவதனால் விளைகின்ற தீமைகள் பலப்பல. அதனை மக்கள் சமுதாயம் உணருவதில்லை. சந்தேக எண்ணம் கொண்டவர்கள் - புரிந்து கொள்ளாமல் சந்தேகத்திற்கு ஆளாகின்றவர்கள் - பிறப்பாலேயே சந்தேகப் பிராணியாகத் தோன்றி வாழ்கின்ற அன்பர்கள் செய்கின்ற, செய்ய முனைகின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற காரியங்கள் அனைத்தும் நாட்டில் எவ்வளவு தீமையை விளைவிக்கின்றன என்பதை அவர்கள் எள்ளளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற காரியம் நாட்டின் போக்கை சீர்கேடான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது.

கடவுளும் - அதன் பாதையும் - அருள்நெறியும் அது காட்டும் வழியும் - அன்பும் - அதனால் உண்டாகும் நன்மைகளும் நல்லனதாம். அவைகளைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை இன்றைய உலகில் அருளுடைப் பெருமக்களும், நாட்டில் வாழ்கின்ற நல்லன்பர்களும், அறநெறிச் செல்வர்களும் நன்கு உணர்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை. கடவுள்நெறி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளாத மக்கள் செய்கின்ற காரியங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் எத்தகைய முறையில் இருக்கின்றன என்பதும் அன்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள், அவைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற காரணத்தால் அவர்களுக்கு அதனைப் புரிந்து கொள்ளும் திறனும் -அறிவும் - போக்கும் கிடையாது. உண்மையான அறிவுக்கண் கொண்டு - மாற்றுக் கருத்துக்களை அகற்றி, மனம் அனைத்தும் ஒரு திறனாய்ப் பண்டைய இலக்கியங்களைப் படித்து உணர்ந்தால் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கடவுட்கொள்கைகள் - சொல்லோவியங்கள் - பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் தெள்ளெனப் புலனாகும்.

நாம் எந்தத் துறையில் அறிவைச் செலுத்துகின்றோமோ அத்துறையில்தான் நமக்குக் காட்சி தர முடியுமே அல்லாது வேற்றுத்துறையில் காட்சிதர முடியாது. மனம் போல வாழ்வு என்பதனைக் கொண்டு ஒருவனின் வாழ்வை நிர்ணயித்தார்கள் நமது பெருமக்கள். இன்றைய உலகில் இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதனின் அறிவு பல்வேறுபட்ட போர்வைகளைப் போர்த்திக் கொண்டு செல்லாநின்ற நிலை விபரீதமாகவும் - விசித்திரமாகவும் இருக்கின்றது.

இத்தகு காலத்திலும் இங்குக் கூடியிருக்கின்ற மாபெரும் கூட்டம், தமிழ்நாடும் - தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுப் பண்பாட்டை, கலாசாரத்தை - தமிழர்களின் நாகரீகத்தை - குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றை இன்னும் இழக்கவில்லை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதன் அதனை மறந்தோ, ஒதுக்கியோ, தனி இடம் கொடுத்தோ வாழ முடியாது. வாழ முற்பட்டாலும் அவனுக்கு வாழ்வதற்குத் தகுந்ததோர் வழி கிடைக்காது என்று உறுதியாகக் கூறலாம். விஞ்ஞானம் - அணுகுண்டு - அறப்போர். போர் - அஹிம்சை - அன்பு அறம் - பொருள் - பிரார்த்தனை - பட உலகம் - மேடைப் பேச்சு சமயப் பெரியார்களின் தொண்டுள்ளம் - தியாகிகளின் சேவை அனைத்திலும் இந்த இருபதாம் நூற்றாண்டு மிகமிக முக்கியத்துவம் பெற்று விட்டது என்பதை எவரும் நன்கு உணர்வர். மனித சமுதாய வாழ்விற்கு வேண்டிய அனைத்திலும் முக்கியத்துவம் தகுதியான இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டினை எப்படி நாம் ஒதுக்கி வாழ முடியும்?

மனிதர்களின் கருத்தும் - சிந்தனையும் நாட்டை வாழ்விக்க முடியாது. காலமும் கருத்தும் சிந்தனையும் நாட்டை நல்ல நிலைமையில் இட்டுச் செல்லும் என்று மக்கட் சமுதாயம் கருதுவது சரியன்று. காலமும் - கருத்தும் - சிந்தனையும் செயலும் ஒத்து நின்று இயங்கினால் ஓரளவுதான் பயனைத் தர முடியும். இவை அனைத்தும் நாட்டிற்கும் நமக்கும் பயனைத் தர வேண்டுமேயானால், அருளியல் கலவாத எதுவும் பயனைத் தர முடியும் என்று எதிர்பார்த்துச் செயல் செய்ய முனைதல் முடிவில் ஏமாற்றத்தைத் தான் தரும் என்பதை மக்கட் சமுதாயம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அருளியல் கலவாத அறிவு அழிவைத்தான் தரும்.

மதம் நாட்டின் நச்சுக் கோப்பை - அது வேண்டாத ஒன்று என்று கூறுவதன் காரணம் என்ன? மதம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அது எப்பொழுது தோன்றியது? என்ற பல கேள்விகளை எழுப்பி நன்கு சிந்தித்துப் பார்த்துப் பின்னர் முடிவுக்கு வாருங்கள். நீங்கள், காணுகின்ற நல்லதொரு முடிவு உங்களுக்கு விடையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூறுகின்றவர்கள் இடித்தலையும், எரித்தலையும் துணையாகக் கொண்டிருந்தால் அவர்கள் எடுத்திருக்கின்ற குறிக்கோள், செய்ய முனைந்திருக்கின்ற காரியங்கள் - அவர்களின் இலட்சியத்தில் எழுப்பப்பட்ட கொள்கைகள் அனைத்தும் எவ்விதம் நன்மையாக முடியும்?  நன்மையாக முடியும் என்று எதிர்பார்த்து இத்தகு காரியங்களில் ஈடுபட்டிருப்பதும் தவறுடையது என்பதை நம்முடைய மதிப்பிற்குரிய தோழர்கள் மறந்துவிடக் கூடாது.

இடித்தலும், எரித்தலும், உடைத்தலும், அழித்தலும் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியாது. நாட்டின் நன்மையைக் கருதித் தொண்டில் ஈடுபடுகின்ற அன்பர்கள் எக்காலத்தும் எந்தவிதக் காரணத்தைக் கொண்டும் தீய செயல்கள் செய்ய முனைதல் கூடாது. ஏன்? சிந்தனையில் - கருத்தில் கூட தீய கருத்துக்கள் தோன்றக் கூடாது. நமது எண்ணத்தின் எதிரொலிதான் நம் வாழ்வில் பிரதிபலிக்கும். எண்ணம்தான் சிந்தனையாக மாறும் - சிந்தனை உருப்பெற்ற பின் செயலில் உருவெடுக்கின்றது. ஆதலால், நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் மனதில் தீய கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் கூடாது. பகைவர்களிடம் அன்பு சொரியும் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் உளப் பண்பு நன்றாக வளரவேண்டும்.

ஒரு நாட்டின் நாகரிகம் - கலாசாரம் - பண்பாடு - வளம் - மொழி - நாகரீகம் முதலியவற்றை அந்நாட்டின் இலக்கியங்களின் மூலந்தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான இலக்கியங்கள்தான் அந்நாட்டின் படப்பிடிப்பு. நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் கடலாலும் - கறையானாலும் சூறையாடப்பட்டன. எஞ்சியிருக்கின்ற ஒன்று இரண்டு உண்மையான இலக்கிய ஏடுகளையும் இற்றைப் பகுத்தறிவுவாதிகள் எரிக்க முற்பட்டு விட்டார்கள். செய்யத் தகாத - நினைக்கவும் முடியாத காரியத்தையெல்லாம் புதுமையின் துணைகொண்டு அறிவினால் செய்துவிட முடியும் என்று கருதவும் தொடங்கி விட்டனர்.

இச்செய்தியைக் கேட்டதும் - உண்மையாகத் தமிழ் தமிழ்நாடு - தமிழ்க் கலாசாரம் - ஏன் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றுடைய ஒவ்வொரு தமிழனின் குருதியும் கொதிப்பேறுகின்றது. அவர்கள் கூறுகின்ற, கருதுகின்றபடி எஞ்சியிருக்கின்ற உண்மை இலக்கியங்கள் ஒன்று இரண்டையும் எரிக்கத் தலைப்பட்டு விட்டால் பண்டைத் தமிழகம், இற்றைத் தமிழகம், நாளைத் தமிழகம் பற்றி அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது?

அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற ஒவ்வொரு காரியத்தாலும் கலாசாரம் - பண்பாடு முதலியவற்றிற்கு அழிவே இல்லை என்பதை நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. அவர்கள் எதனை எதிர்பார்த்துச் செய்கின்றார்களோ அதற்கு மாறாகத்தான் நாடு இயங்கி வருகின்றது என்பதை உணர்ந்த பின்னர்தான் அவர்கள் தாங்கள் முயற்சித்த அந்தந்தக் காரியங்களை விடுத்துப் புதுப்புதுக் காரியங்களில் முனைகின்றனர் என்பதை யாவரும் நன்கு அறிந்திருக்கலாம்.

அழிவு ஏற்படும் என்று கருதிய உள்ளம், மேன்மேலும் நன்கு வளர்ச்சியைக் கண்டு மயங்குகின்றது. அவர்கள் செய்ய முனைந்த செயலால் நல்லதொரு வளர்ச்சிதான் காணமுடிகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் பிள்ளையார் உடைப்பு - கம்பராமாயண எரிப்பு முதலியவற்றால் இன்றைய மக்களிடம் புதியதோர் மறுமலர்ச்சி எழும்பி இருக்கின்றது. மக்களிடம் காணப்பட்ட மகத்தான மறுமலர்ச்சியால் இன்றைய நாட்டில் இலக்கியப் பற்றும், திருவுருவ வழிபாடும், சமயப்பற்றும் வளர்ந்தோங்கி உள்ளன. மக்கள் உள்ளத்தில் பற்றுதல் உண்டான காரணத்தால் நல்லதொரு வெற்றிதான் கிடைத்திருக்கின்றது என்பதை எல்லோரும் நன்கு அறிதல் வேண்டும்.

"கல்லிலும் செம்பிலுமா கடவுள் இருக்கின்றார்” என்று இதுவரை கூறி வந்தவர் இன்றைய தினம் அதற்கு மாறாக நடந்து காட்டி விட்டனர். நீங்கள் காட்டும் கல்லிலும் செம்பிலும் மட்டும் கடவுள் இல்லை. நாங்கள் செய்கின்ற, செய்து உடைக்கின்ற களிமண் பொம்மையிலும் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். கடவுள் இல்லை என்றால் அவர்கள் செய்த அந்தக் களிமண் விநாயகர் பொம்மையை உடைத்திருக்க வேண்டியதில்லையே! “கடவுள் அந்தக் களிமண் பொம்மையிலும் இருக்கின்றார்” என்ற நம்பிக்கையால்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பதை இன்றைய உலகில் யாவரும் நன்குணர்வர்.

என்றும் நம்பிக்கை இல்லாதவனை, நம்பிக்கை உள்ளவனாக நம்பும்படி செய்வதுதான் - நம்புகின்ற ஒரு மனித உருவாகச் செய்வதுதான் முடியாத காரியம். நம்பிக்கை உண்டானபின் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விட முடியும். “உருவத்திலும் கடவுள் இல்லை" என்று இதுவரை கூறிவந்தார்கள். இன்று “உருவத்திலும் கடவுள் இருக்கின்றார்” என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். உருவத்திலும் கடவுள் உண்டு என்று கூறும் அவர்களை நம்பிக்கையில் உள்ள அவர்களை வழிபாட்டில் கொண்டு வருவது எளிது. நமக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் யார் செய்கின்ற எச்செயலும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் நேர்மையும் - நம்பிக்கையும் - தன்னடக்கமும் - கட்டுப்பாடும் - உறுதியும் தகுதியான இடத்தைப் பெறுவதோடு நன்முறையில் நம் உள்ளத்தில் வளம் பெற வேண்டும்.

யார் எதனைச் செய்தாலும் அதனை அன்புடன் - முக மலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எது வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் நல்ல இதயம் வேண்டும். துன்பம் செய்தாரிடத்தும் அன்பு காட்டுங்கள். இன்னல் செய்தாரிடத்தும் அன்புமொழி பேசுங்கள். மாற்றாரிடத்தும் உற்றார் உறவினர் என்ற உள்ளத்துடன் பழகுங்கள். அதுதான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடும் புலியும் ஒரே துறையில் நின்று நீர் அருந்திய தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் நாம் என்பதை நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள். நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எக்காலத்தும் உங்கள் வாழ்நாளில் வெறுப்பிற்கும் - வெறிக்கும் ஆளாகி விடாதீர்கள். வெறுப்பும் வெறியும் மக்கள் சமுதாயத்தைக் கெடுத்து விடும். அது மக்கள் சமுதாயத்தின் துரோகி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மாற்று எண்ணம் கொண்டு, அறிந்தோ அறியாமலோ, அவர்கள் நம்மை எது கூறினாலும் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தும் அன்பின் வாழ்த்து வேறு விதத்தில் நம்மை நாடி வருகின்றது என்று எண்ணுங்கள். அந்த எண்ணந்தான் நம்மை அன்புடையவர்களாக என்றென்றும் வாழ்விக்கும்.

நாம் அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் நாடும் அன்புடைய நாடாக வாழமுடியும். மாற்று எண்ணங்கொண்டு அவர்கள் கூறுகின்ற அனைத்தும் நம்மை அல்ல. ஆக்கவும் காக்கவும் வல்ல அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கின்ற கடவுளைத் தான் கூறுகின்றார்கள் என்று நம்புங்கள். அந்த உயரிய நம்பிக்கை தான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும்.

பிள்ளையார் உடைப்புச் செய்தவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு தெரியும். அவர்கள் நமது சாக்கிய நாயனார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சாக்கியனார், தனது மதத்திற்குத் தெரியாமல் இந்து மதத்தில் பற்றுக் கொண்டு சமயக் கொள்கையில் பற்றுக் கொண்டு நமது திருவுருவங்களை அன்புடனும் அருளுடனும் வழிபட்டு வந்தனர். அதுபோலத்தான் இன்றைய பிள்ளையார் உடைப்புக் கட்சிக்காரர்களின் போக்கும் போய்க் கொண்டிருக்கின்றது.

இதுநாள்வரை உருவ வழிபாடு கூடாது என்று கூறிய நாம், இனிக் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டால், உலகம் நம்மை நிலையில்லாதவன் என்று தூற்றுமே; நாம் நமது அன்பை ஆண்டவனிடம் உடைப்பின் மூலமாகத்தான் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்களேயன்றி வேறில்லை. சாக்கிய நாயனார்க்கு இடம் கொடுத்த சமயம், இவர்களுக்கும் இடம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

“உண்மையுமாய் இன்மையுமாய்” இருக்கின்ற ஆண்டவன் “ஒளியாகவும் ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன்", தின்கின்ற வெற்றிலையாகவும் உண்கின்ற சோறாகவும் காட்சி தருகின்ற ஆண்டவன் “உடைப்பார் இடத்தும் எரிப்பார் இடத்தும்" உறுதியாக அன்பு காட்டுவான். அடக்கம்தான் என்றும் நன்மையைத் தரும்.

உலகில் இருளை ஒட்ட யாரும் முற்படுவதில்லை. ஒளியினை உண்டாக்கினால் இருள் தானாக ஓடிவிடும். நமக்கு வேண்டிய ஒன்றிலேயே அதன் வளர்ச்சி குறித்துக் கண்ணோட்டம் செலுத்தினால், வேண்டாத - விருப்பப்படாத ஒன்று தானாக விலகிச் செல்லும் என்பதை இளமை உள்ளங்கள் உணர்ந்து வாழ முற்பட வேண்டும். மாற்றாரின் தகாத செயல்களுக்குப் பரிகாரம் தேட முனைகிற காலத்து, அவைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து, நாம் நமது காரியங்களிலேயே கண்ணோட்டம் செலுத்தினால் நலம் உண்டு. உங்களுடைய பிரார்த்தனை உள்ளம் தோய்ந்ததாக இருக்கட்டும்.

சந்தேகப் பிராணிகள் எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர்களின் கூற்றைப் பெரிதென மதித்து நாம் செவி சாய்க்கக்கூடாது. “சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு” என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நாம் சந்தேகம் என்ற ஒன்றிற்கு எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுத்தல் கூடாது. நாம் சந்தேகத்தைக் கைக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. முன்னேற்றம் காண்பது ஒருபுறமிருக்க இருக்கின்ற தகுதியையும் இழக்க நேரிடும். சந்தேகப் பேய்க்கு இடங்கொடுத்தால் அதனின்றும் தப்பி வாழ வழி கிடையாது. தத்துவங்கள் சடங்குகள் - சின்னங்கள் சம்பிரதாயங்கள். கடவுள் கொள்கைகள் முதலியன பற்றித் தெரிந்து கொள்ளாமலே குறை கூறுவதனால் என்ன பயன்? அதனால் விபரீதங்கள்தான் விளைகின்றன.

கடவுள் என்பது ஆதி மனிதன் காலத்தில், கற்காலத்தில் - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த தமிழ்க் குடியினர் கண்டது. கடவுள் நெறி - அன்பு நெறி - அருள் நெறி ஆதிமனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. அவன், தான் கண்டுபிடித்த அப்பாற்பட்ட சக்திக்குக் கடவுள் என்ற பெயர் கொடுத்தான். அதனை உருவத்தில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டான்.

அந்த உயரிய தத்துவத்தை இன்று இருக்கின்ற புதுமை விரும்பி என்ற பெயர் கொண்டவர்கள் - தத்துவம் புரியாதவர்கள் - அழுக்கு மனம் படைத்தவர்கள் - குறுக்குப் புத்திக்காரர்கள் - மாற்று எண்ணம் கொண்டு, வேற்றுருவில் நடமாடுகின்ற மனித உருவங்கள் குறை கூறுகின்றன. இயற்கையின் படைப்புக்கு மனிதனின் அறிவும் - கருத்தும் - சிந்தனையும் பெயர் கொடுத்ததே அன்றிப் புதிதாக இந்த உலகில் இதுவரை ஒன்றையும் காணவில்லை. அடிப்படைத் தத்துவத்தை “பழமை” என்ற பெயரால் பிரிவுபசாரப் பத்திரம் வாசித்து வெறுத்து ஒதுக்குவதேன்?

மனிதனின் அறிவு உயிரற்ற ஒன்றைத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆண்டவன் படைப்பில் உயிர் உள்ளதும் - உயிர் இல்லாததும் இருக்கின்றன. மனிதனின் அறிவிற்கும் ஆண்டவனின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழமை இன்றிப் புதுமை இயங்க முடியாது. வேண்டாத ஒன்று என்று பழமையை வெறுத்து ஒதுக்குகின்றவர்கள் பழமைதான் , புதுமையின் தாயகம் என்பதை நன்கு உணர வேண்டும். புதுமையின் தாயகமான இன்றையப் பகுத்தறிவு வாதியர், சின்னங்களையும் சடங்குகளையும் வெறுத்து ஒதுக்குகின்றனர். சின்னங்களும் சடங்குகளும் இன்றி எதுவும் காண முடியாது. அவர்கள் கருதுகின்றபடி செய்தால் காலமும் பொருளும் குறைவாக இருக்கலாமே அன்றி, அவைகள் இன்றி எந்தக் காரியமும் செய்ய முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் சின்னங்களும் - சடங்குகளும் பின்னிக் கிடக்கின்றன. சின்னத்தையும் சடங்கையும் ஒதுக்குகின்றவர்கள் போடும் ஆரவாரமும் மந்திரமும் அதனுள் கட்டுப்பட்டன என்பதை மறந்து விடாதீர்கள்.

குறை கூறும் மக்கள் எதனையும் முழுதும் படிப்பதில்லை. பண்டைய இலக்கியங்களை முழுதும் படித்து அறிந்துணரும் திறன் இல்லை என்பதை அவர்கள் கூறாமல் கூறிக் கொள்ளுகின்றார்கள்.

மனிதனின் அறிவு, இரும்பை மைக் ஆகவும் - அரிசியைச் சோறாகவும் - துணியைச் சட்டையாகவும் கண்டது. அதுபோல, அருளுடைப் பெருமக்களின் அறிவு, கல்லைக் கடவுளாகக் கண்டது. இதில் என்ன தவறு? அறிவும் ஆராய்ச்சியும் ஓரளவுதான் பயன்தர முடியும். திருக்கோயில்களில் காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தை விளக்குகின்றன என்று தெளிவாக - ஆணித்தரமாக - துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். சமயச் சின்னங்களை அணிந்து தெருவில் வாருங்கள்.

இலக்கியத்தின் மூலம் சமயக் கொள்கைகளுக்கு மறுப்புக் காட்டினால், அது உண்மையான தமிழ் இலக்கியமாக இருக்க முடியாது. போலி இலக்கியங்களின் துணைகொண்டுதான் மறுக்க முடியும். பிளாட்டோ - இங்கர்சால் - ஜேம்ஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் துணைகொண்டு மறுக்க முற்படலாம். அவர்களும் உண்மைச் சமயத்தை வெறுத்தார்கள் அல்லர். சமயத்தில் காணப்பட்ட குறைகளைத்தான் கண்டித்தார்கள். அறிவுலக மேதை பெர்னாட்ஷாவும் சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவேதான் பாடுபட்டார். சமயம் மண்னோடு மண்ணாகி மக்கி மடியவேண்டும் என்று அவர் கருதினார் அல்லர். சமயம் திருந்தினால்தான் சமூகம் திருந்தி வாழ முடியும் என்ற காரணத்தால் அறிஞர் பெருமக்கள் அருளுடைய பெருமக்கள் காட்டிய கண்டு வாழ்ந்த உண்மைச் சமயத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையையும் - உண்மை இலக்கிய ஏடுகளையும் காண முற்பட்டார்கள்.

“சமயத்தில் பெருமையைத் தேடி தோல்வி உற்றவன்தான் கடவுள்மேல் - மதத்தின் மேல் - சமயக் காப்பாளர்கள் மேல் குறை கூறுகின்றான். தோல்வியுற்றவன் கண்டதுதான் நாத்திகம். விதி - வினை முதலியவற்றை வெல்ல முடியாத உனக்கு இவ்வுலகில் வாழ்வில்லை. வாழத் தெரியாத நீ துணிவு இல்லாத நீ சமயத்தைப் பற்றிக் குறை கூறுவது ஏன்?.."என்று அழகுபட மாவீரன் மாஜினி எழுதுகின்றான். குறைகூறுகின்ற மக்கள் அனைவரும் குறை கூறுமுன் சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஜனநாயகத்தில் இவ்வாறு இல்லாதிருக்க வேண்டுமேயானால், அரசு மதச்சார்பற்றதாக இருக்கட்டும். ஆனால் அதே நேரத்தில் மதச்சார்புடை அரசாகத்தான் இருந்தாக வேண்டும். அரசாங்கத்திற்கு வரி கொடுப்போரில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் மதத்தின் அடிப்படையை பின்பற்றி வாழ்கின்றவர்கள். ஜனநாயக அரசு அவர்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது சிறுபான்மையோரின் அரசாக இருத்தல் கூடாது. பெரும் பான்மையோரின் வாழ்விற்குப் புறம்பாகப் பேசவோ எழுதவோ படவுலகில் காட்டவோ இசையின் மூலம் பரப்பவோ உரிமை கொடுப்பதும் தவறுதான்.

பள்ளிகளில் பிறநாடுகள் போல, சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். "சமயப் பாடமே கற்பிக்கப்படாத பள்ளிகளே இந்திய நாட்டில் இல்லை” என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பள்ளிகளில் சமயப் பாடம் சட்டபூர்வமாக என்று கொண்டு வரப்படுகின்றதோ அன்றுதான் காந்தியடிகள் கண்ட நாட்டிற்கு அடிகோலியவர்கள் ஆவோம்.

காந்தியடிகள் கண்ட நாட்டை அமைத்தால்தான் நாமும் - பிற்காலச் சந்ததியார்களும் இன்புற்று வாழ முடியும். மேலும் உலகப் பெரியாரின் பொன்மொழியைக் காப்பாற்றிய - இலட்சியத்தை நிறைவேற்றிய பெருமையும் நம்மைச் சேரும். காந்தியடிகள் கண்ட நாட்டைக் காண எல்லோரும் பிரார்த்தனையைக் கைக்கொள்வோமாக.

மக்கட் சமுதாயத்தில் பிரார்த்தனை என்று வளம் பெறுகின்றதோ, அன்றே இயற்கையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனைதான் அண்ணல் காந்தியடிகளின் மருந்து.

அண்ணல் காந்தியடிகள் நோயுற்றிருந்த காலத்து உடனிருந்த அனைவரும் மருத்துவரை அழைத்து வர எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அண்ணல் காந்தியடிகள், “என்னுடைய உயிரை இந்த மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது. காப்பாற்றக் கூடிய ஒரு மருத்துவன் இருக்கின்றான். அவனை அழையுங்கள். அவன் நினைத்தால்தான் முடியும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆக்கவும் காக்கவும் வல்ல மாபெரும் சக்தி அவனுக்குத்தான் உண்டு. ஆதலால், நீங்கள் எல்லோரும் உலகின் நலம் கருதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார். அண்ணல் காந்தியடிகள் பிரார்த்தனையை வலியுறுத்திக் கூறும் காலத்து, "என்னால் பல நாள் உணவின்றி இவ்வுலகில் வாழ முடியும். ஆனால், ஒரு நாள்கூடப் பிரார்த்தனை இன்றி வாழ முடியாது” என்று கூறினார்.

நாம் அனைவரும் உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் ஆண்டவனை வழிபட்டால் அவன் உறுதியாக நமக்கு வாழ்வளிப்பான் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனை வீடுகள்தோறும், தெருக்கள்தோறும் கிளம்ப வேண்டும். பிரார்த்தனைதான் நம் உள்ளத்தைத் துய்மைப்படுத்தும் நமது பிரார்த்தனைதான் நம் உள்ளத்தில் உள்ள மாசுமறுவினைப் போக்க - வியாதியினைப் போக்க ஏற்றதொரு மருந்தாம். உள்ளத்து வியாதியினைப் போக்கப் பிரார்த்தனையைத் தவிர வேறு மருந்தில்லை. நமது பிரார்த்தனை உளங்கனிந்த பிரார்த்தனையாக இருக்கட்டும். ஒவ்வொரு தனிமனிதனும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்ந்தால் சமுதாயம் தானே திருந்தி வாழும்.


பொது --- 1088. மடவியர் எச்சில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மடவியர் எச்சில் (பொது)


முருகா! 

அடியேனை ஆண்டு அருள்வாய்.

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து

     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான


சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து

     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய்


படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற

     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே


குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த

     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.


                                பதம் பிரித்தல்


மடவியர் எச்சில் உண்டு, கையில் முதலைக் களைந்து,

     மறுமை தனில் சுழன்று, ...... வடிவான


சட(ம்)மிக வற்றி நொந்து, கலவி செயத் துணிந்து,

     தளர்வு உறுதற்கு முந்தி ...... எனை ஆள்வாய்.


படஅரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற

     பசு முகிலுக்கு உகந்த ...... மருகோனே!


குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த

     குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே.

பதவுரை

பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசுமுகிலுக்கு உகந்த மருகோனே --- படங்களை உடைய (ஆதி சேடன் என்னும்) பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

குடமுனி கற்க --- அகத்திய முனிவர் கற்க வேண்டி,

அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறத்தி நம்பு பெருமாளே --- குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

மடவியர் எச்சில் உண்டு --- பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு,

கையில் முதலைக் களைந்து --- கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து,

மறுமை தனில் சுழன்று --- மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று.

வடிவான சடம் மிக வற்றி நொந்து --- அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி,

கலவி செயத் துணிந்து --- புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து,

தளர்வு உறுதற்கு முந்தி எனை ஆள்வாய் --- தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

பொழிப்புரை

படங்களை உடைய ஆதி சேடன் என்னும் பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

அகத்திய முனிவர் கற்க வேண்டி, அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து, மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று. அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி, புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து, தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

விரிவுரை

குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- 

குடமுனி --- ஒருகாலத்தில் கடற்கரையில் இருந்த மித்திரா வருணர் என்பவர்கள் ஊர்வசி என்னும் தேவமாதைக் கண்டு காம உணர்வு மேலிட்ட போது, தங்கள் வீரியத்தை ஒருவர் கும்பத்திலும் ஒருவர் தண்ணீரிலும் விடுக்க, கும்பத்தில் இருந்து அகத்தியரும் தண்ணீரில் இருந்து வசிட்டரும் தோன்றினர் என்றும், இதனால் அகத்தியர் குடமுனி என்றும், வசிட்டர் கும்பமுனி என்றும் வழங்கப்படுகின்றனர்.

அகத்திய முனிவர் ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகை மலைக்குச் சென்று முருகனை நோக்கித் தவம் செய்வாயாக. அவ்வாறு செய்யின், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். தணிகை மலைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும். அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களை எல்லாம் போக்குவதும் அல்லாமல் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும். மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் அடைதற்கு எண்ணினாலும், மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளை எல்லாம் அத் திருத்த நீராடலால் அடையலாம்.

அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகால் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும் துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத்தணிகை மலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த திருத்தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ, தொழில்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்த அடைந்து இன்புறுவார்கள். தணிகைப் பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், செய்கை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி 'ஞான சத்திதரன்' என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் சாயுச்சிய பதவியை அடைந்து, அம்முருகப் பெருமானே ஆவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.

இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக் கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார். வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பலநாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம் உபதேசித்து அருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார். இவ்வாறு தணிகைப் புராணம் கூறும்.


குறத்தி நம்பு பெருமாளே --- 

நம்புதல் - விரும்புதல்.  "நம்பும் அடியர்தமை ஆளவந்த பெருமாளே" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் குறித்துள்ளது காண்க. 


கருத்துரை


முருகா! அடியேனை ஆண்டு அருள்வாய்.


பொது --- 1087. குடமென ஒத்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குடம் என ஒத்த (பொது)


முருகா! 

முத்திப் பேற்றை அருள்வாய்.


தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே


வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த

     மதசல முற்ற தந்தி ...... யிளையோனே


இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து

     இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்


தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.


                           பதம் பிரித்தல்


குடம்என ஒத்த கொங்கை, குயில்மொழி ஒத்த இன்சொல்,

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே!


வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த!

     மதசலம் உற்ற தந்தி ...... இளையோனே!


இடம்உடன் வைத்த சிந்தை இனைவு அற, முத்தி தந்து,

     இசை அறிவித்து வந்து ...... எனை ஆள்வாய்.


தடவரை வெற்பில் நின்று, சரவணம் உற்று எழுந்து,

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.

பதவுரை

குடம் என ஒத்த கொங்கை --- குடத்தை நிகர்த்த கொங்கைகளையும்,

குயில் மொழி ஒத்த இன் சொல் --- குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய,

குறமகள் வைத்த நண்பை நினைவோனே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதசலம் உற்ற தந்தி இளையோனே --- மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

தடவரை வெற்பில் நின்று --- உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து,

சரவணம் உற்று எழுந்து --- சரவணப் பொய்கையில் வளர்ந்து,

சமர்கள வெற்றி கொண்ட பெருமாளே --- சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து --- அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து,

இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் --- இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

பொழிப்புரை

குடத்தை நிகர்த்த கொங்கைகளையும், குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து, சரவணப் பொய்கையில் வளர்ந்து, சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து, இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

விரிவுரை

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- 

வரை - மலை. வடவரை - வடதிசையில் உள்ள திருக்கயிலை மலை.

மகாதேவர் என்னும் சொல் மகதெவர் என வந்தது.


மதசலம் உற்ற தந்தி இளையோனே --- 

மதசலம் --- மதநீர்.

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. மூத்தபிள்ளையார் என வழங்கப் பெறும் விநாயகப் பெருமானுக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.

விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்.  --- காஞ்சிப் புராணம்.                                           


 உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்

தறிநிறுவி, உறுதியாகத்

தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,

இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்

களித்து உண்டு, கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து

வரு வினைகள் தீர்ப்பாம். --- திருவிளையாடல் புராணம்.

        எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.


இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற  --- 

இனைவு - வருத்தம், 


கருத்துரை


முருகா! முத்திப் பேற்றை அருள்வாய்.


பொது --- 1086. சுடரொளி கதிரவன்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சுடரொளி கதிரவன் (பொது)


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்

     சூழ்ந்தோங் ...... கிடுபாரிற்


றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்

     சோர்ந்தோய்ந் ...... திடநாறுங்


கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்

     கான்போந் ...... துறவோருங்


கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்

     காய்ந்தாண் ...... டருளாயோ


தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்

     தாந்தோய்ந் ...... திருபாலும்


தமருக வொலிசவு தத்திற் றத்தத்

     தாழ்ந்தூர்ந் ...... திடநாகம்


படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்

     பாய்ந்தாய்ந் ...... துயர்கானம்


பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                பதம் பிரித்தல்


சுடர்ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச்

     சூழ்ந்து ஓங் ...... கிடு பாரில்,


துயர், இருவினை, பல சுற்றப் பட்டுச்

     சோர்ந்து ஓய்ந் ...... திட நாறும்


கடுக என எடும் என் உடல் பற்று அற்றுக்

     கான்போம் ...... துறவோரும்,


கனல் இடை விதியிடு தத் துக்கத்தைக்

     காய்ந்து ஆண்டு ...... அருளாயோ?


தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க,

     தாம் தோய்ந்து ...... இருபாலும்


தமருக ஒலி சவுதத்தில் தத்த,

     தாழ்ந்து ஊர்ந் ...... திட, நாகம்


படி நெடியவர் கரம் ஒத்தக் கெத்துப்

     பாய்ந்து ஆய்ந்து ...... உயர்கானம்


பயில்பவர் புதல்வ! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.


பதவுரை

தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்கத் தாம் தோய்ந்து --- பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி,

இருபாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த --- இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க,

தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த --- திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க

கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ --- கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில் ... ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில்

துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட --- துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக,

நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று --- பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து,

கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு --- சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற, 

தத் துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ --- அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?

பொழிப்புரை

பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி, இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக, பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து, சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற, அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?





வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

 



வயிற்றுப் பசிக்கு உணவு

அறிவுப் பசிக்கு கேள்வி

----

உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூல நாயனார். எனவே, உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வு வளர்வதன் பொருட்டே என்பதை அறிதல் வேண்டும். உயிர் உணர்வு வளர்தல் என்பது, உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள அஞ்ஞான உணர்வு நீங்கி மெய்யுணர்வு பெறுதல்.

உடம்பிலே உயிர் நிலைபெற்றுள்ளது என்பதை உணர்ந்து, உயிரை வளர்ப்பதற்கு, உடம்பை வளர்க்கவேண்டும். அதற்கு உடம்பும் உயிரும் ஒருங்கே செழித்து வளர்வதற்கு உரிய உணவைக் கொள்ளவேண்டும். உடம்பு பொய், நிலையற்றது. உயிர் மெய், நிலையானது. நிலையற்ற உடம்பைக் கொண்டு, நிலையான உயிரானது, நிலையான ஞானத்தைப் பெற்று, நிலையற்ற உடம்பால் உண்டாகும் பிறவியை ஒழித்து, நிலையான பரம்பொருளோடு கூடவேண்டும்.

தேகாத்மவாதி கொள்கைப்படி, உடம்பே உயிர் என்று கருதி, உடம்பைப் பேணுவதையே பெரிதாக மதித்து இருத்தல் உலக மக்கள் இயல்பு. அஞ்ஞானம் மிகுந்து இருப்பதால், உடம்பை ஏன் பேணவேண்டும், எப்படிப் பேணவேண்டும் என்னும் அறிவு இல்லாமல், நாக்கு ருசி ஒன்றையே கருதி, விரும்புகின்ற உணவை எல்லாம் மிகுதியாக உண்டு, உடம்பைப் பெருக்குவதோடு, நோயையும், காம உணர்வையும் பெருக்கி, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்பதும் மனித இயல்பு. அறிவின்மையால் இந்தக் கேட்டினைத் தேடிகொள்வதைத் தவிர்த்து, அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பதால், அறிவைப் பெருக்கிக் கொள்ளத் தக்க நூல்களைப் படிக்கவேண்டும். நூல்களைப் படிப்பதாலேயே அறிவு விளங்கிவிடாது. கற்று, அதன் வழி நின்றவரிடத்தல் கேட்டு அறிதல் வேண்டும்.

கல்லைமையால் உண்டாகும் கேடு பற்றி, "கல்லாமை" என்னும் அதிராகத்தில் உணர்த்திய நாயனார், "கேள்வி" என்னும் அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்பதை  வலியுறுத்துகின்றார். 

இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவனாக இருந்தால், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

எனவே, கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், "செவிச் செல்வம்" என்பது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

திருக்குறளில் கேள்வி என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது, வயிற்றினுக்கும் சிறிது உணவு இடப்படும்" என்கின்றார் நாயனார்.

வயிற்றுக்கு உணவு பெரிதெனத் தோன்றும்போது, உணவைத் தேடுதல் துன்பம். உணவிற்காகப் பொருள்களைத் தேடுதல் துன்பம். உணவின் மிகுதியால் உண்டாகும் உடல் பருமனால் துன்பம். உணவின் செறிவினால் உண்டாகும் காம உணர்வினால் துன்பம். 

கேள்வியால் மிகுந்த சுவை உண்டாவதையும், பின்னே மிகுந்த பயன் விளைவதையும் கருதி உணவு வெறுக்கப்படும். காதால் ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பின், ஏனைய புலன் இன்பங்கள் மறக்கப்படும். அது இல்லாதபோது, உடலின் நலம் கருதி சிறிது உணவு கொடுத்தால் போதும். உணவு மிகுந்தால், மனமானது கேள்வியில் பொருந்தாது. காமத்திலேயே பொருந்தும்.

வயிற்றைப் பேணுதல் உயிர் பொருட்டே அன்றி, உடம்பின் பொருட்டு அல்ல என்பது தோன்ற "வயிற்றுக்கும்" என்றார்.

"இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்" என்றும், "கழிபேர் இரையான்கண் நோய்" என்றும் நாயனார் காட்டி உள்ளதும் அறிக.

"செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள பாடல்...

"பொருள்துறைஉன் பாட்டேநல் பூசைஎன்றார் ஊரர்க்கு

அருள்துறையார் அன்புசெய்வார் ஆனார்; --- மருள்தேர்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

இதன் பொருள் ---

சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்டு திருவெண்ணெய்நல்லூரிலே திருவருட்டுறையிலே சென்று அற்புதக் காட்சி அளித்தருளினார் சிவபிரான். "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்தொண்டன் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலே ஆகும். ஆதலால், நம் மேலே தமிழ்ப் பாட்டுக்களைப் பாடு" என்று மேலும் அருளிச் செய்தார். சுந்தரர் வணங்கி, "அருட்பெருங் கடவுளே! தேவரீருடைய அனந்த குணங்களில் சிறியேன் எதை அறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்?" என்றார். அதற்குக் கடவுள், "நீ முன்னே என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தன் என்றே பாடு" என்று சொல்லி அருளினார். உடனே சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அருளினார். சிவபிரான் மகிழ்ந்து, "தொண்டனே!  நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பலவகையாகப் பாடு" என்று அருளினார். அக் கட்டளையின்படியே சுந்தரர் பல திருத்தலங்கட்கும் சென்று திருப்பதிகம் அருளிச் செய்தார். பற்பல அற்புதங்களையும் நிகழ்த்தினார். இறைவனே மிகவும் விரும்புவது அவன் திருச்செவியில் சாத்தப்படும் பாமாலைகளே. பூமாலைகள் வாடிவிடும். பாமாலை என்றும் வாடாது. பாமாலையானது இறைவனது உள்ளத்தைக் குளிரவைக்கும். கேட்போர் உள்ளத்தையும் குளிரவைக்கும். அன்போடு இறைவனைப் பாடி வழிபடவேண்டும். இறைவன் பெரிதும் விரும்புவது நிவேதனப் பொருள்களை அல்ல என்பதை இதன் வாயிலாக அறிதல் வேண்டும். 

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

பொருள் என்றது அகப்பொருள் புறப்பொருள்களை. அருட்டுறை என்பது திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர். மருள்தேர் --- மயக்கத்தினின்றும் தெளிந்த. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்பது பெரியபுராணத் திருப்பாடல் பகுதி.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று திருவள்ளுவ நாயனார் பாடியதற்கு ஏற்ப, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறிக.

"மற உரையும், காமத்து உரையும், மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடையாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

பாவத்தினை வளர்க்கும் சொற்களும், ஆசையினை வளர்க்கும் வார்த்தைகளும், சோம்பல் முதலியனவற்றை வளர்க்கும் சொற்களும் நிறைந்து காணும் இந்த உலகத்தில், அறத்தினை வளர்க்கும் சொற்களைக் கேட்டுத் தெளியும் நற்பேறு உடையவர்களே, பிறவியினை நீக்குவதற்கு உரிய வீட்டுலகினை உடையவர் ஆவார்.

"செந்தமிழ் நாடு என்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றார் அமரகவி. காதுகளில் இன்பத் தேன் வந்து பாயும்போது, வாயானது உணவை விரும்பாது. செவிச் சுவையால் உயிரானது பேரின்பத்தை அடையும்.

இராமன் முடிசூடப் போகின்றான் என்பதைக் கேட்ட மக்கள் யாவரும், தெய்வத் தன்மை பொருந்திய தேனைத் தமது காதுகளால் நுகர்ந்தார்கள், மற்ற புலன் இன்பங்களை மறந்தார்கள் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

"அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள

புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி

கவிக்கும்’என்று உரைக்கவே, களித்ததால், அது

செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?" --- கம்பராமாயணம், ஆறுசெல் படலம்.

இதன் பொருள் ---

ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம், இராமன் பொன்மயமான மகுடம் சூடப் போகிறான் என்று சத்துருக்கனன் அறிவித்த முரசொலி மூலம் கேட்டுப்  பெருமகிழ்ச்சி அடைந்தன.  இராமன் மூடி சூடப் போகின்றான் என்னும் அந்தச் சொல், செவி என்னும் பொறியால், கேள்வி என்னும் அறிவைப் பெற்று அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

     உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனை செய்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

எனவே, வயிற்றுப் பசிக்கு நல்ல உணவை அளவாக உண்டால் உடல் வளம் பெறும். உயிர் அறிவும் வளம் பெறும். உடம்பையே பொருட்டாக மதித்து, சுவையான உணவை மிகுதியாக உண்டால், உடல் பருப்பதோடு, நோய்தான் பெருகும். எனவே, 

"செவியின் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்,

அவியினும் வாழினும் என்?"

என்றார் திருவள்ளுவ நாயனார். "காதுகளால் அனுபவிக்கப்படும் கேள்விச் சுவையை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த உலகிற்கு வருவது என்ன?" என்கின்றார் நாயனார். மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும்.

"மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். விலங்குகள் தனது வயிற்றுப்பாட்டுக்கே உழலும். மனித வடிவில் இருந்தாலும் விலங்கு உணர்வோடு இருப்பவரை "மாக்கள்" என்றார்.

காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகள், சொல்சுவை, பொருள்சுவை என இருவகைப்படும். சொற்சுவை என்பது குணம், அலங்காரம் என இருவகைப்படும். 

குணம் என்பது பலவடிவுகளிலாவது, பல சீர்களிலாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது. அது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். கைகால் முதலிய உறுப்புக்கள் இருந்தும் உயிர் இன்மையால் மனிதன் எனக் கொள்ளப்படாதது போல, இந்தக் குணங்கள் இல்லாதவை செய்யுள் எனப்படமாட்டா.

அலங்காரம் எனப்படுவது, சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது. இது சொல் அலங்காரம், பொருள் அலங்காரம் என இருவகைப்படும். 

மக்களுக்கு அலங்காரம் செய்வனவாகிய அணிகலன்களைப் போல், காப்பியத்திற்கு அலங்காரம் செய்வன இவை இரண்டும்.

பொருட்சுவை என்பது, காமம் என்னும் ஒரு பொருளின்மீது உண்டாகும் விருப்பு. ஒரு பொருளின் மீது விருப்புத் தோன்றுவதால் உண்டாகும் களிப்பு. உயிர்களின் மீது உண்டாகும் கருணை. எல்லா உயிர்களின் மீதும் செல்கின்ற ஆசையும், வீரமும். தம்மோடு பொருந்தாத பகைவரை அழிக்கின்ற உருத்திரம். தெய்வம், விலங்கு, கள்வர் முதலானவர்களால் உண்டாகும் அச்சம். மூப்பு, பிணி, வருத்தம் முதலியவற்றால் உண்டாகும் இளிவரல், அருவருப்பு.  புதியவற்றையும், பெரியவனவற்றையும் அறிதலால் உண்டாகும் வியப்பு. பற்று அற்று இருக்கும் சமநிலை என்னும் சாந்தம் என்று சொல்லப்படும்.

வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையானது, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறுவகையான சுவைகளைக் குறிக்கும். நன்று, தீது என்பவற்றை அறிந்து ஒழுகும் மன உணர்ச்சி இல்லாது, இந்த சுவைகளையே பெரிதும் விரும்பி வாழ்கின்ற மனிதர்களை "மாக்கள்" என்றார். இவர்கள் இருப்பதால் உலகத்துக்கு யாதொரு பயனும் இல்லை. இறப்பதால் யாதொரு இழப்பும் இல்லை என்றார்.

வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

வயிற்றுப் பசிக்கே உணவு அவசியம். சுவைக்கு அல்ல. அறிவுப் பசிக்கு நல்ல கேள்வி அவசியம். அறிவு நலம் தரும் கேள்விகளையே எப்போதும் கற்றும் கேட்டும் வருதல் வேண்டும். நூல்கள் இரு வகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். 

ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விரும்பார்.  கற்க முன்வரமாட்டார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளமாட்டார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில், அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.

பொது --- 1085. கொடியன பிணிகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கொடியன பிணி (பொது)


முருகா! 

திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந் ...... தசடாகுங்


குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்

     கோண்பூண் ...... டமையாதே


பொடிவன பரசம யத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே


பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்

     பூண்டாண் ...... டருள்வாயே


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்தாங் ...... குடனாடத்


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோந்தாந் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனிலாடும்


பழயவர் குமரகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்



கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந்து, ...... அசடு ஆகும்


குடில்உற வரும்ஒரு மிக்கச் சித்ரக்

     கோண் பூண்டு ...... அமையாதே,


பொடிவன பரசமயத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே,


பொருள்அது பெற,அடி நட்புச் சற்றுப்

     பூண்டுஆண்டு ...... அருள்வாயே.


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்து ஆங்கு ...... உடன் ஆட,


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோம்தாம் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை ஒத்த, சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனில் ஆடும்


பழயவர் குமர! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.

பதவுரை

துடிபட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட --- உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, 

தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படிதரு பதிவ்ரதை ஒத்த --- தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, 

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர --- தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடியன பிணி கொடு --- கொடிதான நோய்களை அடைந்து,

விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் --- விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, 

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே --- உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, 

பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே --- நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல்,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே --- மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடிதான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல், மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

கொடியன பிணி கொடு, விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் குடில் ---

குடில் - குடிசை.

"கால்கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து

தோல்மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்

ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,

மால்கொடுத்து, ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே."    --- அப்பர் தேவாரம்.

இதன் பொருள் ---

மாமறைக்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபிரான், கால்களைக் கொடுத்து, கைகளை ஏற்றி, எலும்புக் கழிகளை நிரைத்து, மேலே புலாலை வேய்ந்து, குருதி நீரைக் கலந்து, தோலை தட்டிச் சுவரை வைத்து, இரண்டு வாயில்களையும், ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி, அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

இந்த உடம்பு எப்படிப் பார்த்தாலும் புழுக்கள் நெளிகின்றதும் நோய்கள் மலிந்து உள்ளதும் ஆகும்.

"எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால், ஆங்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு." --- ஔவையார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் எண்ணிப் பார்க்கும்போது இந்த உடம்பு பொல்லாத புழுக்கள், அவற்றால் மிகும் நோய் அகியவற்றைக் கொண்ட அற்பமான ஒரு கூடு. (உயிர்க் குருவி போய்விட்டால் அதனால் என்ன பயன்) இந்த உண்மையை நல்லவர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல உடல் இன்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர்.

"பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை" என்பார் மணிவாசகப் பெருமான்.

இந்த உடம்பானது மாயையால் ஆனது. பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

    "ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.


"பஞ்சுஇட்ட அணைமிசை

கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு

          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்

          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்

சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்

     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,

          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்

          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத

சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,

     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை

          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி

          பிடித்திட, அனைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி, 


தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,

உந்திக்கு அசனமும் மறந்திட்டு, உளமிக

          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி

          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்

சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,

     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு

          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை

          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,

சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,

இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை

          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு

          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்.....உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.


தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற

    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ? 

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்

    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை

    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்

    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்

    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம், மனக்

    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது, எந்தை அருள்

    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை

    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்

    ஏங்காமல், எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்

    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்

    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்

    தத்துவத்தை நீங்கி, அருள் சாரும் நாள் எந்நாளோ?

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு

    செல்லாமல், நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்

    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்

    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறு, அறிவில்

    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

புன்மலத்தைச் சேர்ந்து, மலபோதம் பொருந்துதல் போய்,

    நின்மலத்தைச் சேர்ந்து, மலம் நீங்கும் நாள் எந்நாளோ?

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்

    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

பைங்கூழ் வினைதான் படுசாவியாக, எமக்கு

    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்

    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்

    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்

    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்

    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத

    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்

    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை

    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை

    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்

    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த

    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த

    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

பஞ்சப் பொறியை, உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்

    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க

    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டு, அருளால்

    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்

    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போல, எமை

    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?

மாயையால் ஆன இந்த உடம்பு இறையருளால் நமக்கு வாய்த்தது. அதிலும் உயர்ந்த இந்த மனிதப் பெறிவி வாய்த்தது. இதன் அருமையை எண்ணி, இந்த உடம்பைப் போற்றிப் பாதுகாத்து, நல்வழியில் வாழ்ந்து, நற்கதியை அடைதல் வேண்டும். பிறவி அற்ற பெருநிலையை அடையவதற்கு உபாயமாகவே இந்த உடம்பு நமக்கு அருளப் பெற்று உள்ளது. இன்னொரு பிறவி எடுப்பதற்கு ஏதுவாக கருவழியில் புகுதல் கூடாது. பெருவழியில் புகுதல் வேண்டும்.

முருகன் பவரோக வைத்தியநாதன். அவருடைய அடியவர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்க்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

"முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே"      --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை


பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் ---

பொடிதல் - நிலைத்து நிற்காது அழிதல். 

பர சமயம் - அயல் சமயம். 

"பரசமய கலை ஆரவாரம் அற" என்பார் சீர்பாத வகுப்பில் அடிகளார். தத்தமது சமயமே உயர்ந்தது என்று ஆரவாரிப்பது பரசமயங்களின் ஆரவாரங்களில் இருந்து தப்பிப் பிழைத்தல் வேண்டும். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகப் பெருமான்.


"வம்பு அறாச் சில கன்னம் இடும், சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று, ...... அருளாலே,


தம் பராக்கு அற, நின்னை உணர்ந்து, உரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?"              --- கச்சித் திருப்புகழ்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்களாவுங்


கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும்

ஒழியுற மொழியில் துஞ்சு றாதன

கரணமும் ஒழியத் தந்த ஞானம் ...... இருந்தவாறென்."       ---  (அலகில்) திருப்புகழ்.


 "நிகரில் பஞ்ச பூதமும் நினையும் நெஞ்சும் ஆவியும்

   நெகிழ வந்து நேர்படும்                   அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர

   நிருப அங்கு மாரவெள்                   எனவேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                       அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்ட ரீகம்அது                   அருள்வாயே. "    ---  திருப்புகழ்.

இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள்.


கருத்துரை

முருகா! திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


நன்றி மறத்தல் பெரும்பாவம்


நன்றி மறத்தல் பெரும்பாவம் 

-----

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தைக் கழித்து, கரந்துறை வாசத்திற்கு (அஞ்ஞாத வாசம்) விராட தேசமே தகுந்தது என எண்ணி, பாண்டவர்கள் விராடனுடைய நாட்டின் எல்லையில், மயான பூமியில் உள்ள காளி கோயிலின் எதிரில் உள்ள வன்னி மரத்தில் தமது படைக்கலங்களை ஒளித்து வைத்து, தமது உருவை ஒருவரும் காணாவண்ணம் மாற்றிக் கொண்டு, விராட நாட்டில் புகுகின்றனர்.

தருமன், கங்கன் என்னும் துறவி ஆகின்றான். அவனை விராட மன்னன் தனது துணையாக ஏற்றுக் கொள்கின்றான். வீரத்தில் வல்லவனான பீமன், பலாயனன் என்னும் பெயருடன் தலைமைச் சமையல்காரனாக விராடன் அரண்மனையில் புகுகின்றான். ஊர்வசி தனக்கு முன்னரே அளித்திருந்த சாபத்தின் பலனாக, பேடி உருவத்தைத் தாங்கி, வில்லில் மிகுந்தவனாகிய அருச்சுனன், பிருகன்னளை என்னும் பெயரோடு, விராட மன்னனின் மகளாகிய உத்தரைக்குப் பாங்கியும் ஆசிரியரும் ஆகின்றான். நகுலன், தாமக்கிரந்தி என்னும் பெரயோடு, விராட மன்னனின் குதிரைப் படைகளைக் காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். கண்ணனே வியக்கும்படி ஞானசாத்திரங்களில் வல்லவனாகிய சகாதேவன், தந்திரிபாலன் என்னும் பெயர் தாங்கி, விராட மன்னனின் ஆநிரை (ஆ - பசு. நிரை - கூட்டம்) காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். பாஞ்சாலி, விரதசாரிணி என்னும் பெயரோடு, விராட மன்னன் தேவிக்கு வண்ணமகளாகப் பணியில் அமர்கின்றாள்.

இத்தனை உபகாரமும் விராட மன்னனின் கருணையினால் நடந்தது.  தேவமைந்தர்களான பாண்டவர்களும்,  அயோனிஜையாக வேள்வியில் அவதரித்த பாஞ்சாலியும் வாழ்ந்திருந்த காலத்தில் விராடநாடு எல்லா வளங்களும் நிறைந்ததாக விளங்கியது. நல்லவர்கள் வாழுகின்ற இடம் சிறக்கும். "இச்சை இல்லார் இட்ட மலம் பட்ட இடம் பொன் ஆகும்" என்பது வள்ளல்பெருமான் அருள்வாக்கு. கீழோரது பாதம் பட்டால், அந்த இடம் விளங்காது. நல்லவர்கள் பாதம் பட்ட இடம் விளங்கும். எனவே, பாண்டவர்கள் இருந்ததால் விராடநாடு செழிப்பாக இருந்ததில் ஐயம் இல்லை.

விராட நாட்டுக்கு வந்த வாசவன் என்னும் மற்போர் வீரனை வெல்லுதற்கு உரியவன், தலைமைச் சமையல்காரனான பலாயனனே என்று கங்கன் சொல்ல, விராட மன்னனின் ஆணைக்கு இணங்க, பலாயனனால் வாசவன் தோற்கடிக்கப்பட்டான்.

கீசகன் தனது தமக்கையும், விராட மன்னனின் தேவியும் ஆன சுதேட்டிணையைக் காண வந்தபோது, அவளுடன் இருந்த விரதசாரிணியைக் கண்டு அவளைக் காமுற்றான். பின்னர், அவனை, பலாயனன் கொன்று வீழ்த்தினான். அது கண்டு வெகுண்டு எழுந்த உபகீசகர்களையும் பலாயனன் கொன்று அழித்தான்.

  துரியோதனன் தனது ஒற்றர்களை நாலாபக்கமும் ஏவி, பாண்டவர்கள் வாழும் இடத்தை வெளிப்படுத்த முயன்றுகொண்டு இருந்தான். ஒற்றர்களில் ஒருவன் விராடனது நாட்டின் வளமிக்க வாழ்வையும், கீசகன் ஒரு வண்ணமகள் காரணத்தால் மடிந்ததையும் துரியோதனனுக்கு அறிவிக்கின்றான்.

துரியோதனன் ஆணைக்கு இணங்கி, விராட மன்னனது ஆநிரையைக் கவர, திரிகர்த்தன் என்பவன் படை எடுத்து வருகின்றான். திரிகர்த்தனை வென்று, அவனால் சிறைபிடிக்கப்பட்ட விராட மன்னனை பலாயனன் மீட்கின்றான். தமக்கிரந்தி பகைவர்களது குதிரைகளைக் கவர, தந்திரிபாலன் ஆநிரையை மீட்டு வருகின்றான்.

இதை அறிந்த துரியோதனன் பெரும் படைகளுடன் விராட நாட்டின் மீது போர்த் தொடுக்கின்றான். அவனை எதிர்கொள்ள, விராட மன்னின் மகன் உத்தரன், தக்க சாரதியைத் தேடுகின்றான். விரதசாரிணி சொல்ல, பிருகன்னளை சாரதி ஆகின்றான். போரில் தோற்று ஒடிய உத்தரனைத் தேரினை ஓட்டும்படி பணித்து, பிருகன்னளை போர் புரிகின்றான். 

போர் முகத்தில் தனக்கு எதிர் வந்த பேடியைக் கண்டு துரோணர் ஐயுறுகின்றார். நான்கு நாழிகையில், பிருகன்னளை ஆக இருந்த அருச்சுனன், ஊர்வசியின் சாபம் தீர்ந்தபடியால், தனது பழைய உருவைப் பெறுகின்றான். போரில் அனைவரையும் வென்று, உத்தரனோடு விராடநாடு திரும்புகின்றான். அருச்சுனன் மீண்டு வந்து, வன்னிமரப் பொந்தில் முன்புபோல ஆயுதங்களை வைத்து, பேடி வடிவம் கொண்டு, உத்தரனுடன் விராடனது தலைநகர்க்கு மீளுகின்றான்.

தன் மகனது வெற்றி அது என்று எண்ணிய விராட மன்னன், அவனை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யப் பணித்து, அவன் நாடு திரும்பும் வரையில், கங்கனோடு பகடை ஆடுகின்றான். தன் மகனது வெற்றியைப் பேசிய விராட மன்னனுக்கு, "அது பேடியின் வெற்றி" என்கின்றான். மனம் வெகுண்ட விராட மன்னன் தனது கையில் இருந்த பகடைக் காயை, கங்கன் மேல் வீச, அது கங்கனது நெற்றியில் பட்டு குருதி வழிய, விரதசாரிணி ஓடிவந்து, குருதியைத் தனது ஆடையால் மாற்றுகின்றாள். கங்கனது குருதி நிலத்தில் விழுந்தால், விராட நாட்டுக்குக் கேடு என்று சொல்லுகின்றாள் விரதசாரிணி. (நல்லவர்கள் இரத்தம் சிந்தக் கூடாது) விராடன் வருந்துகின்றான். அரண்மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கி, நெற்றி வடுவைக் கண்டு, தந்தையால் நிகழ்ந்தமை அறிந்து, பொறுக்குமாறு வேண்டுகின்றான். விராட தேசத்தில் உருமாறி இருப்பவர்கள் பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியுமே என உத்தரன் அறிவிக்கின்றான்.

பாண்டவர்களும் பாஞ்சாலியும் தமது உண்மை உருவை வெளிப்படுத்துகின்றனர். தருமனது நெற்றியில் உண்டான வடுவின் காரணத்தை, பாஞ்சாலி கூற, பீமன் சினம் கொள்ள, அருச்சுனன் வில்லை எடுக்கின்றான். தருமன் தனது தம்பியரின் சினத்தை மாற்றப் பின்வருமாறு அறிவுரை கூறுகின்றான். 

"பற்றி எரியும் தன்மையினை உடைய பெரும் காட்டில் வாழும் காலம் முடிந்து, அஞ்ஞாத வாசத்திற்குத் தக்க நாடு என எண்ணி, இந்த விராடநாட்டுக்கு வந்தோம். விராட மன்னனின் தயவால், நம்முடைய எண்ணம் ஈடேற இங்கு பாதுகாப்பாகத் தங்கி இருந்தோம். விராட மன்னனால் பல நன்மைகளை அடைந்த நாம் அவற்றைக் கருத்தில் கொள்ளாது, சினம் மிகுதியால் எனது நெற்றியில் வடுவினை உண்டாக்கிய ஒரு சிறு தவற்றினை விராட மன்னன் செய்தான் என்பதை மட்டும் பெரிதாக எண்ணி, அவன் மீது கோபத்தை வெளிப்படுத்த எண்ணுவது தவறு."

"ஒருத்தர் ஓர் உதவி செய்தாலும், காலத்தினால் செய்த அந்த உதவியை மறவாமல்,  பிறகு, அந்த உதவியைச் செய்தவர், செய்கின்ற பல குற்றங்களையும் பொறுப்பது பெரியோர் செய்கை. ஆனால், கீழ்மக்களோ, ஒருவர் தமக்குப் பல உதவிகளைச் செய்து இருந்தாலும், அவரது ஒரு செயல் தீமையைத் தருவதாய் முடிந்தால், அவர் முன்பு செய்த பல உதவிகளையும் மறந்து அவர் மீது சினம் கொள்ளாமல், அமைதியாய் இருக்கமாட்டார்".

"எனவே, நீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்வது நல்லதல்ல. பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன் செய்த பல நன்மைகளை எண்ணி, என் நெற்றியில் வடுச்செய்த இந்த ஒரு தீமையை மறந்துவிட வேண்டும்."

குந்திதேவியின் கட்டளை தனது மகன்கள் ஐவரும் எந்நாளும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது. தாயின் கட்டளையை மனம் கொண்ட பீமார்ச்சுனர், அண்ணனது சொல்லுக்கு மாறாது சினம் தணிந்தனர்.

இந்த நிகழ்வை வில்லிபுத்தூரார், பின்வரும் பாடல்களில் அமைத்துக் காட்டினார்.

"ஒன்று உதவி செய்யினும் அவ் உதவி மறவாமல்

பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக, ஒரு நவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே."

 

"அனலும் முதுகானகம் அகன்று, நெடுநாள் நம்

நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;

சினம் மிகுதலில் தவறு செய்தனன் எனப்போய்

முனிதல் பழுது ஆகும் என முன்னவன் மொழிந்தான்".

 

நாலடியார் இந்த உண்மையைப் பின்வருமாறு அறிவிக்கின்றது.

"ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்: --- கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்று தீது ஆயின்,

எழுநூறும் தீதாய் விடும்."

இதன் பொருள் ---

ஓர் உதவியைச் செய்தவர், பின்னர் தமக்குப் பலநூறு தீமைகளைச் செய்திருந்தாலும், பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால், கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்திருந்து, தவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டால், அந்த ஒரு தீமையையே மனத்தில் கொண்டு, முன்னர் செய்த எழுநூறு நன்மைகளையும் தீமையாகவே எண்ணுவர்.

கயவர்களின் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும் என்பது கருத்து.

"நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்கின்றது புறநானூறு.  உலகமே தலைகீழாகப் போய்விடும் என்ற போதும், ஒருவன் செய்த உதவியை அழிக்க முயன்றவர்க்கு உய்வு இல்லை. "நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் குன்றா வாய்மை" என்கின்றது கல்லாடம்.

வேதங்களை எல்லோராலும் படித்து அறிந்துகொள்ள முடியாது. எனவே, அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளை நீதிநூல்களாக வடித்துப் பெரியோர் தந்தனர். நீதிநூல்களில் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விளக்கமாகவே புராணங்கள் எழுந்தன என்பதை அறிதல் வேண்டும்.

எனவே, ஒருவர் தனக்குச் செய்த நன்மையானது சிறியதே ஆனாலும், அதனை நன்றி உணர்வுடன் நினைவில் கொள்ள வேண்டும். மறந்து விடுதல் ஆகாது. "நன்றி மறப்பது நன்று அன்று" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது கொண்டு,  "நன்றி மறவேல்" என்பதைப் பற்றி வாழ்தல் நன்மையைத் தரும்.


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை

 


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை.

-----

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பல ஆகும். அப்பண்புகள் அனைத்திலும் தலையாயது, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் பண்பு ஆகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வுஇல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்று அறவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார். எந்த நன்மைகளையும் மறந்து அழித்தவருக்கு மன்னிப்பு உண்டு. செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே இல்லை.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை ஆகும். முட்டுப்படாமல் யாரும் வாழ்ந்துவிட முடியாது. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாக விளங்குகின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதன் மூலமே சமுதாயமானது உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. ஒருவர் ஒரு காலத்தில் தமக்குச் செய்த நன்மையை மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் சிகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத் தலைப்பிற்கு உரை வகுத்த பரிமேலழகர், "தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை" என்பார். மணக்குடவர், மேலும் ஒரு படி கடந்து, "பிறர் செய்த தீமையையும் மறந்து நன்மையை மறவாமை" என்றார். "நன்றி எனப்படுவது இதயத்தின் நிறைவு" (Gratitude is the memory of the heart) என்று மேசியூ என்னும் மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுவார். சர் ராபர்ட் வால்போல் எனும் அறிஞர், "எதிர்கால நன்மைக்கு நிகழ் காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத்து இருக்கவேண்டும்" (Gratitude is a lively sense of future favours) என்பார்.

ஔவைப் பிராட்டியார் அருளிய அருந்தமிழ் நூல்களுள் "மூதுரை" என்பதும் ஒன்று. மூதுரை என்பதற்கு மூத்த உரை அல்லது அறிவுரை என்று பொருள். மூதுரை என்று வழங்கப்பட்டு வந்த இந்த அருமையான நூல் பிற்காலத்தில், "வாக்குண்டாம்" என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. "வாக்குண்டாம்" என்று இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் தொடங்குவதால், முதலில் வந்த சொல்லே நூலின் பெயராக அமைந்து விட்டது.  நன்றியுடைமையின் இன்றியமையாமையை நாள்தோறும் தாம் காணும் காட்சியினை வைத்தே அது அறிவுறுத்துகின்றது.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் வேரில் நீரை ஊற்றுகின்றான். தென்னங்கன்று வளர்கின்றது. எருவை இடுகின்றான். மேலும் நன்றாக வளர்கின்றது. நீண்ட மரமாக உயர்ந்து குலை தள்ளியது. மனிதன் தென்னையின் இளங்காயைப் பறித்து, அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகின்றான். அது இனிக்கின்றது. இவன் ஊற்றிய தண்ணீர் போல், அவன் குடித்த இளநீர் இல்லை.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால், அந்நன்றி

என்று தரும்கொல் என வேண்டா --- நின்று

தளரா வளர் தெங்கு, தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்"

என்று காட்டினார் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

நின்று தளரா வளர் தெங்கு - ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் - தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் - நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை.

நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பது கருத்து.

தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்ததும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது. ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.

அதுபோலவே,  ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம். செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பதும் இப் பாடலின் கருத்து. 

அறத்தை நாளும் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறி ஆகும். அறங்களைச் சிதைத்தல் மறம் (பாவம்) ஆகும். அது மன்னிக்க முடியாத பெரும் குற்றமும் ஆகும். ஒருவன் பெரிய அறங்களைச் சிதைத்தால் கூட, பாவம் என்னும் பாழ்நரகில் இருந்து மீண்டு விடலாம். ஆனால், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் அந்தப் பாவத்தில் இருந்து விடுதலை இல்லை.

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,

நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் 

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே, ஆயிழை கணவ!"         --- புறநானூறு.

இதன் பொருள் ---- 

அழகிய அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் மணவாளனே! பசுவின் மடியை அறுத்த பெரும்பாவத்தைப் புரிந்தோர்க்கும், பெண்ணின் தாய்மைப் பேற்றை அழித்த கொடுமையைப் புரிந்தோர்க்கும், இருமுது குரவர்களாகிய தாய், தந்தை, குரு முதலானோரைப் பழித்த கொடுமையாளர்க்கும், அவர்கள் செய்த தீமைகளுக்குப் பரிகாரம் உண்டு. ஆனால், இந்த மண்ணுலகமே கீழ்மேலாகப் புரளும் ஊழிக் காலம் வந்தாலும், செய்த நன்றியைக் கொன்றவர்களுக்கு அந்தப் பாவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

துன்பப்பட்ட காலத்தில் உதவிய ஒருவனுக்கு, அவன் துன்பப்படும் காலத்தில் உதவவில்லை என்றால், அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என்கின்றது "கலித்தொகை" என்னும் சங்கநூல்.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்

எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதே காண்"..

இதன் பொருள் ---

வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.


"இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்

வசைஅன்று, வையத்து இயற்கை –--  நசைஅழுங்க

நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து".

என்கிறது நாலடியார்.

தம்மிடம் கொடுக்க இயலாத ஒரு பொருளை வந்து கேட்பவரிடம் இல்லை என்பது ஒன்றும் குற்றம் இல்லை. இது உலக இயல்புதான். ஆனால், ஒன்றைத் தருவதாக வாக்களித்து விட்டு, பின் அந்த நம்பிக்கை கெட, இல்லை என்று பொய் கூறுவது, செய்த நன்றியை மறப்பதற்கு ஒப்பான குற்றம் ஆகும்.

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம் வாக்களித்து விட்டு சென்றான் சுக்கிரீவன். மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான். அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா செய்நன்றி மறந்தாய்" என்று. அப்போது அனுமன் கூறுவான் "பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன். எனவே, நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

"சிதைவு அகல் காதல் தாயை, 

தந்தையை, குருவை, தெய்வப்

பதவி அந்தணரை, ஆவை, 

பாலரை, பாவைமாரை

வதை புரிகுநர்க்கும் உண்டாம் 

மாற்றலாம் ஆற்றல், மாயா

உதவி கொன்றார்க்கு என்றேனும் 

ஒழிக்கலாம் உபயம் உண்டோ?"    --- கம்பராமாயணம்.

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும். இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்கு உரிய கழுவாய் உண்டு. ஆனால், செய்ந்நன்றி மறத்தலுக்கோ எத்தகைய கழுவாயும் இல்லை.

தனது அண்ணனான இராமனுக்கு அணுவளவேனும் துரோகம் எண்ணியிருந்தால், இன்னின்ன பாவங்களைப் புரிந்த பாவிகள் அடையும் கொடிய நரகத்தை நான் உறுவேனாக என்று பரதன் கூறுகின்றான். இதில் தலைமையாக அவன் சொல்லி இருப்பது சிந்தனைக்கு உரியது.

"கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,

மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,

நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே".    --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தனக்கும், தனது கன்றுக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருக்கின்றான். கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல், தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆகும். பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்து, அதைக் கைப்பற்றல் அறம் அல்லாத செயல் ஆகும். தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன் நாகரிகம் அற்ற நாவினை உடையவன். இவர்கள் அடைவது நரகமே ஆகும்.

தாய்ப்பாலை இழந்து இறந்து போன கன்றின் தோலை உரித்து அதனுள் வைக்கோலைப் பொதிந்து உயிருள்ள கன்று போல் காட்டிப் பகக்களிடம் வஞ்சமாய்க் கறக்கும் பாவச் செயல்கள் மலிந்து உள்ளன. இது பெரும்பாவம் என்கின்றது கம்பராமாயணமும், பின்வரும் சிறுபஞ்சமூலம் பாடலும்..


"தோற்கன்று காட்டிக் கறவார், கறந்தபால்

பாற்பட்டார் உண்ணார், பழிபாவம் - பாற்பட்டார்

ஏற்றவா தின்புற்று வாழ்வன ஈடு அழியக்

கூற்று உவப்பச் செய்யார் கொணர்ந்து."   --- சிறுபஞ்சமூலம்.

"சுக்கிரீவன் பெறுதற்கு அரிய அரசை நம்மால் பெற்றான். அவனுக்கு நாம் செய்த உதவியை அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு உதவியவர்க்குத் திரும்ப உதவி செய்யவேண்டும் என்னும் அறத்தை அவன் மறந்தான். நம்மால் பெற்ற அரசியல் வாழ்வில் இப்போது அவன் மயங்கிக் கிடக்கின்றான். செய்த நன்றிக்குத் திரும்ப உதவி செய்யாது, நன்றியைக் கொன்றுவிட்டான். அருமையான நட்பு என்னும் கயிற்றையும் அறுத்து விட்டான். இத்தகையவனைக் கொன்று அழித்தல் குற்றம் ஆகாது. நீ சென்று அவன் எண்ணம் என்ன என்று அறிந்து வருவாய்" என்று இராமபிரான் இலக்குவனுக்குக் கூறுகின்றார்.

"நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,

ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்

கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?

சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்."     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

இப்படி ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து,  பெறுவதற்கு அருமையான நட்பாகிய அன்புக் கயிறு அற அழித்து, எல்லோர்க்கும் ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையைக் குலைத்துவிட்டு, வாக்குத் தவறியவனைக்  கொன்று ஒழிப்பது, பழிபாவங்களிலிருந்து நீங்கிய செயலே ஆகும். ஆகவே, நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை ஆராய்ந்து அறிந்து வருவாய்;                                                                                               

"நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்

குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்

தங்குவன கண்டும் வலிமனங் கூடி

ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு

சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்ம்... 

என்று கல்லாடம் அறிவுறுத்தும்.


நன்றி அறிதல் --- புண்ணியம். நல்வினை.

நன்றி கொல்லுதல் --- பாவம். தீவினை.

பிற பாவங்களுக்குக் கழுவாய் உண்டு. நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் என்பதே இல்லை.

ஒருவர் தனக்குச் செய்த நன்மையை எக்காலத்தும் மறவாது இருத்தல் வேண்டும். அதன் அறிகுறியாகத்  தன்னால் முடிந்த உதவியைக் கைம்மாற்றாகச்  செய்யலாம். மணக்குடவர்  காட்டியபடி, ஒருவர்  தனக்குச் செய்த தீமையை  மறந்துவிட வேண்டும். அவர் செய்த உதவியை மறவாது  இருக்க வேண்டும். செய்த உதவியை மறந்து , பழித்துப் பேசுதலும், தீமை செய்தலும் பாவம் ஆகும்.  யார்க்கும் முட்டுப்பாடு வரும். தனக்கு உதவிய ஒருவருக்கு முட்டுப்பாடு வந்தத் என்பதை அறிந்தாலோ, கேள்விப்பட்டாலோ, முடிந்த வகையில் உதவுதல் வேண்டும். மேலே கலித்தொகை கூறியது போல, துன்பப்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.



057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...