39. காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு

ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்

     கழகாகும்; உலகில் யார்க்கும்

ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்

     களுக்கழகாய் இருக்கும் அன்றோ?

நீதிபெறு தண்டலையார் திருநீறு

     மெய்க்கழகாய் நிறைந்து தோன்றும்;

காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே

     அழகாகிக் காணுந் தானே.”


இதன் பொருள்


காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே அழகு ஆகிக் காணும் - காதில் அழகிய கடுக்கனை அணிந்தால், முகத்திற்கு அழகிய காட்சி தரும், (அவ்வாறே) ஓத அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு அழகு ஆகும் - புகழ்ந்து மாளாத  கல்வி அறிவு ஒருவனுக்குக் கிடைக்குமானால், (கல்விக்குத்) தக்க அவையில் இருக்க அழகாய் இருக்கும்; உலகில்  யார்க்கும் ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ - உலகினில் எவருக்கும் கொடைப் பண்புடன் அறிவும் கூடினால் (மற்ற) இனிய பண்புகளுக்கு அழகு விளங்கும் அல்லவா?, நீதி பெறு தண்டலையார் திருநீறு மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும் - அறம் நிறைந்த, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநீறு, அதனை அணிந்த உடம்புக்கு முற்றிலும் அழகாகக் காணப்படும்.


      கவினைத் தருவது நீறு’, ‘பூச இனியது நீறு,’ ‘பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு’, ‘அருத்தம் அது ஆவது நீறு, அஙவலம் அறுப்பது நீறுஎன்று திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகத்தை ஓதி உணர்க. அத்துடன், வள்ளல் பெருமான் அருளி உள்ள திருநீற்றுத் திருப்பதிகங்களையும் ஓதி உணர்தல் நலம். ’காதுக்குக் கடுக்கன், முகத்துக்கு அழகு' என்பது பழமொழி.


38. செங்கோல் அரசனே தெய்வம்

 



“நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

    வளநாட்டில், நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்

    புவியாளும் வண்மை செய்த

தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்;

    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்

   ஆழ்நரகில் மூழ்கு வாரே!”


இதன் பொருள் —-

நால் கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளிலும் வல்லவர்கள் புகழுமாறு சிறப்புற்று விளங்கும் திருத்தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில், நல்ல நீதிமார்க்கமுடன் நடந்து - நல்ல அறநெறியுடன் ஒழுகி, செங்கோல் வழுவாமல் புவி ஆளும் வண்மை செய்த - நடுநிலை தவறாமல் உலகத்தை  ஆளும் கொடையாளியான, தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் - துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள்; கொடுங்கோன்மை செலுத்தி நின்ற - தவறான ஆட்சி நடத்துகின்ற, மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் - கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும், ஆழ்நரகில் மூழ்குவார் - ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.

      “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்'  என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி.  “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்றார் திருவள்ளுவ நாயனார். தீர்க்கம் - துணிவு,  உறுதி.

86. திருநீறு அணியும் முறையும் - பலனும்

 



“பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்

     பரிந்துகை யாலெடுத்தும்,

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு

     பருத்தபுய மீதுஒழுக


நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற

     நினைவாய்த் தரிப்பவர்க்கு,

நீடுவினை அணுகாது, தேகபரி சுத்தமாம்,

     நீங்காமல் நிமலன் அங்கே


சத்தியொடு நித்தம்விளை யாடுவன், முகத்திலே

     தாண்டவம் செய்யுந்திரு,

சஞ்சலம் வராது,பர கதியுதவும், இவரையே

     சத்தியும் சிவனுமென்னலாம்,


மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்

     மால்மருகன் ஆனமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!”


இதன் பொருள் —-

மேரு இனிய மத்து என வைத்து அமுதினைக் கடையும் மால்மருகன் ஆன முருகா! - மேருமலையை அழகிய மத்தாகக் கொண்டு அமுதைக் கடைந்த திருமாலின் திருமருகர் ஆன முருகப் பெருமானே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

பத்தியொடு சிவசிவா என்று பரிவொடு திருநீற்றைக் கையால் எடுத்து - மனமார்ந்த பத்தி உணர்வுடன் ‘சிவசிவ’ என்று நாவாரச் சொல்லி, விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, பாரினில் விழாத படி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக - நிலத்தில் சிந்தாதவாறு மேல்நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம், நெற்றியில் அழுந்தல் உற மூவிரல்களால் நித்தமும் நினைவாய்த் தரிப்பவர்க்கு - நெற்றியில் நன்கு பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாள்தோறும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீடுவினை அணுகாது - நீண்ட நாளைய பழவினை நெருங்காது; தேக பரிசுத்தம் ஆம் - உடம்பு தூயது ஆகும்; அங்கே நிமலன் நீங்காமல் சத்தியொடு நித்தம் விளையாடுவன் - அவர்களிடத்தில் பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்; முகத்திலே திரு தாண்டவம் செய்யும் - முகத்திலே திருமகள் நடம்புரிவாள்; சஞ்சலம் வராது - மனக் கலக்கம் உண்டாகாது; பரகதி உதவும் - மேலான வீடுபேற்றை உதவும்; இவரையே சத்தியும் சிவனும் எனலாம் - இவர்களையே சத்தியும் சிவனும் எனப் போற்றி வணங்கலாம்.

     திருநீற்றை அன்புடன் அணிவோர் இம்மை மறுமை இன்பங்களை எளிதில் அடைவார் என்று கூறப்பட்டது.   திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தீருநீற்றுத் திருப்பதிகத்தை ஓதித் தெளிக.

37. மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்

இரந்தனையித் தனைநாளும் பரந்தனை,நான்

     என்றலைந்தாய்! இனிமே லேனும்

கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்

     நெறியாரே காப்பார் என்னும்

உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்,

     உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!

மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்

     தண்ணீரும் வார்ப்பர் தாமே.”


இதன்பொருள்


மரம்தனை வைத்தவர் வாடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பர் - மரத்தை வைத்தவர்கள் அது வாடிடாமல் நாளும் தண்ணீரும் வார்ப்பார்கள். (ஆகையால்), 


இத்தனை நாளும் இரந்தனை, பரந்தனை நான் என்று அலைந்தாய் - இத்துணை நாட்களாக (உணவு வேண்டி) இரந்து, நான் நான் என்று உன்னையே நினைத்துத் திரிந்தாய், இனிமேலேனும் - இனியாவது, கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் - திருநீற்றுப் பச்சையையும்  பிறைத் திங்களையும் திருச்சடையில் மிலைந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்நீள்நெறிஎன்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே காத்து அருள் புரிவார், என்னும் உரந்தனை வைத்து இருந்தபடி இருந்தனையே - என்கிற உறுதியை உள்ளத்தில் மேற்கொண்டு (பேராசையின்றி) அமைதியாக இருந்தனையானால், உள்ள எலாம் உண்டாம் உண்மை - (பழவினை வாயிலாக) இருப்பன யாவும் உனக்குக்  கிடைக்கும்! இது வாய்மையாகும்!


      மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்' என்பது பழமொழி. 

47. குற்றம் குற்றமே

“மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்?      நக்கீரர் வலிய ராகி வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா      யகரடுத்து விளம்பும் போதில், பற்றுளதண் டலைவாழும் க...