79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

 


“ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்

     அமுதபா னம்கொடுக்கும்

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்

     அப்போதும் உதவிசெய்வன்


கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்

     குவலயத் திருள்சிதைக்கும்

கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு

     குருவிக்கு மேய்ச்சலுண்டு


வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்

     மிகநாடி வருபவர்க்கு

வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன

     வியந்துளம் மகிழ்ந்துதவுவான்


மாறுபடு சூரசங் காரகம் பீரனே!

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!"


இதன் பொருள் ---


        மாறுபடு சூரசங்கார கம்பீரனே - பகைத்த சூரனைக் கொன்ற வீரனே!

வடிவேல் அணிந்த முருகா - கூரிய வேலை ஏந்திய முருகனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தண்ணீர் வற்றிவிட்டாலும் ஆறு, ஊற்று நீர் அமுதபானம் கொடுக்கும் - தண்ணீர் வறண்டு போயினும் ஆறு தன் ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்; 

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும், அப்போதும் உதவி செய்வன் - கதிரவனுடைய அரைப் பகுதியைப் பாம்பு மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளி தருவான்; 

கூறும் மதி தேய்பிறையதாகவே குறையினும், குவலயத்து இருள் சிதைக்கும் - சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை ஓட்டும்; 

கொல்லைதான் சாவி போய்விட்டாலும், அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு - புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப்போனாலும் அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்; 

    (அது போலவே)

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் - சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும், மிகநாடி வருபவர்க்கு - சாலவுந் தேடிவருவோர்களுக்கு, இல்லையென்று உரையாது வேறுவகை இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் - இல்லை என்று கூறாமல் வேறு வகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி மனம் மகிழ்ந்து கொடுப்பான்.


     கதிவரனை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக் கூறுவது புராணக்கதை. கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவும் உடையது). கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் எனப்படும்.  காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. உதாரி (வட) - கொடையாளி. உதாரம் - கொடை. மிடி - வறுமை. ‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள் கூறல் வேண்டும். கம்பீரம் (வட). வீரத் தோற்றம். 

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலன் உடையான் கண்ணே உள' என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி. “ஈதல், இசைபட வா.்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளின் வாய்மையை உணர்ந்த, கொடைப் பண்பு உடையோர் தம் உயிரையும் விடுவரே ஒழிய இல்லை என்று இயம்பார்.  “இன்மையால் சென்று இரந்தோர்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

95. இல்லற மாண்பு

 


“தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்


சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்


சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!


அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே - பார்வதிதேவியும், உநிர்க்கு எல்லாம் தாயியினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை - நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலாக அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர் தமை - அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையை உடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” என்னும் திருவள்ளுவ நாயனார் வாய்மொழியையும், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்னும் ஔவையின் அருள்மொழியையும் கருத்தில் கொள்க.

30. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

“மானொன்று வடிவெடுத்து மாரீசன்

      போய்மடிந்தான்! மானே என்று

தேன்ஒன்று மொழிபேசிச் சீதைதனைச்

      சிறையிருக்கத் திருடிச் சென்றோன்

வானொன்றும் அரசிழந்தான்! தண்டலையார்

      திருவுளத்தின் மகிமை காணீர்!

தானொன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று

      நினைப்பதுவும் சகசந் தானே.”


இதன் பொருள் —-

தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக் கோயில் கொண்டு விளங்கும் இறைவருடைய  திருவுள்ளப் பெருமையைப் பாருங்கள்!, மான்  ஒன்று  வடிவு எடுத்துப்போய் மாரீசன் மடிந்தான் - மானைப்போல்  ஒன்றிய  வடிவை எடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான், மானே என்று தேன் ஒன்றும்  மொழிபேசிச்  சீதைதனைச்  சிறையிருக்கத் திருடிச் சென்றோன் - மானே எனக் கூப்பிட்டுத் தேனைப்போல இனிக்கும் மொழிகளை மொழிந்து, சீதையைத்  திருடிச்  சிறைக்குக்  கொண்டு சென்ற இராவணன், வான் ஒன்றும் அரசு இழந்தான் - (நிலத்துடன்) வானையும் சேர்த்த தன் ஆட்சியைப் பறிகொடுத்தான், (ஆகையால்) தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசம் தான் - (உலகில் ஒருவன்) தான் ஒரு வேலையை எண்ணும்போது, தெய்வம் மற்றொன்று எண்ணுவது இயல்பே!

       ‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது' என்பது பழமொழி. தீவினை நினைத்தல் கூடாது. அது  இறைவன் திருவுள்ளச் சம்மதம் ஆனது அல்ல. அவ்வாறு தீவினை செய்தால் அதன் பயன் நன்றாக இராது.  நல்ல முயற்சியையும் அதன் பயனையும் இச் செய்யுள் குறை கூறவில்லை என்று அறிக.

79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

  “ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்      அமுதபா னம்கொடுக்கும் ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்      அப்போதும் உதவிசெய்வன் கூறுமதி தேய்...