செங்கோல் - கொடுங்கோல்

செங்கோன்மை - கொடுங்கோன்மை

-----

தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

நாட்டை ஆள்பவர் நீதிமுறையுடன் அரசு புரிதல் வேண்டும். அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல் போல் நேராக இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது. அது "செங்கோன்மை" எனத் திருவள்ளுவ நாயனாரால் அடையாளம் இடப்பட்டது. "செங்கோன்மை" என்பது நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், "பொச்சாவாமை" என்னும் அதிகாரத்தின் பின்னர் வைக்ககப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்தால், அக்குற்றத்தை ஆராய்ந்து, முகம் கொடாமல், நடுவுநிலைமையோடு இருந்து, உரிய தண்டனையைத் தேர்ந்து அளிப்பதே நீதி ஆகும்" என்கின்றார் நாயனார். "முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்" என்பது கலித்தொகை. முகம் கொடுத்தல் என்பது பழகியவர்க்குக் காட்டும் தாட்சண்ணியம் ஆகும்.

"ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை." --- திருக்குறள்.

இதன் பொருள் ---

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து,  அவ்வளவிற்றாகச் செய்வதே முறை ஆகும்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"இறைமகிழ வேந்தன் இளம் கன்றிற்காக

மகவினையும் தேர் ஊரும் ஆற்றால்

ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை."

இறை - சிவபெருமான். வேந்தன் - மனுநீதிச் சோழன். தன் மகனுடைய தேர்க்காலில் அகப்பட்டு இறந்த ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு, தானே தனது மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழனின் செங்கோன்மையைத் தெரிவிக்கும். 

சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து, இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.

அம் மணி ஓசை, மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றனர். மன்னர் பெருமான் சினந்துன, அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.

இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள். அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலமரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார். 

மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.

அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.

கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்துள் வரும் கழற்சிங்க நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை

விழச்சென்று அரிந்து விடுத்தார் --- கழற்சிங்கர்,

ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை."

கழற்சிங்க நாயனார், காடவர் குலத்தில் அவதரித்தவர்.  சிவபெருமான் திருவடிகளையே அன்றி மற்றொன்றும் அறியாத வாய்மையாளர். சிவபெருமானது திருவருளால் வடபுலத்தார்களைப் போரில் வென்றார். எங்கும் சைவசமயம் தழைத்து ஓங்குமாறு அரசு புரிந்தார். அவர் மாதேவியோடு சிவதரிசனம் செய்யுமாறு தலங்கள்தோறும் சென்று வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்தார். பூங்கோயிலின் உள்ளே சென்று புற்றிடங்கொண்டாரை வணங்கினார். அவருடைய மாதேவி திருக்கோயிலை வலம் வந்தாள். திருமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப் பூவை எடுத்து மோந்தாள். அதனைச் செருத்துணை நாயனார் கண்டு விரைந்து ஓடிவந்து, பூமண்டபத்திலிருந்த பூவை எடுத்து மோந்ததாகக் கருதி அவளைக் கூந்தலைப் பிடித்து இழுத்து வீழ்த்தி அவளுடைய மூக்கை அரிந்தார். திருக்கோயில் வலம் வந்துகொண்டிருந்த கழற்சிங்க நாயனாரும் இதனைக் கண்டார்.  நடந்ததை விசாரித்து அறிந்து, பூவை எடுத்த பூவை கையை அன்றோ முதலில் துணிக்கவேண்டும் என்றார். உடைவாளை உருவிக் கையைத் துணித்தார்.  

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராயந்து அவ்வளவிற்றாகச் செயவதே முறையாம் என்று திருவள்ளுவ நாயனார் அருளியச் செவ்வியை நோக்குக.

"பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்

கிழமை பிறிதுஒன்றும் கொள்ளார் வெகுளின்மன்

காதன்மை உண்டே, இறைமாண்டார்க்கு ஏதிலரும்

ஆர்வலரும் இல்லை அவர்க்கு."   --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால், பழமை - (இவர் நமக்கு அரசியலின்) தொன்று தொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும், கடைப்பிடியார் - நிலைநிறுத்தார்,  கேண்மையும் பாரார் - (இவர் நமக்கு) நண்பர் என்பதையும் கவனியார் பிறிது - (அவை) ஒழிய, கிழமை ஒன்றும் கொள்ளார் - (இவர் நமக்கு) உரியவர் என்பதையும் சிறிதும் நினையார், (ஆதலால்) இறை மாண்டார்க்கு - அரசியலில் அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமை உண்டோ?, அவர்க்கு - அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலார் எனவும், ஆர்வலரும் - (இவர்) அன்பு உடையர் எனவும், இல்லை - கிடையா.

அரசர் சினம் கொள்வாராயின், அயலார் எனவும் அன்புடையார் எனவும் பாரார் என்பதற்குச் சோழமன்னன் ஒரு பசுவினது கன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். 

"மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன

மகிழ்வொடு தாங்கி, யாரேனும்

இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்,தன்

இருவிழி நீரினை உகுப்பான்,

அன்னவெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று

அயின்றிடான், துயின்றிடான், எவரும்

நன்னகர் எங்கும் உளன் எனப் பகர

நாடொறும் இயங்குவோன் கோனே." ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகர் எங்கும் காணும்படி வருவோனே மன்னன் ஆவான். 

"காது இறைவனுக்குக் கண் எனலால்,மெய் 

காண்குறான் எனுமொழி மாற்றி,

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் 

வகைவகை இனிதுகேட்டு அமைந்த

மேதினிக் கிழமை நீங்கிடுந் தன்மை 

விளையினும் நடுவில் நீங்காது

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே

பார்த்திபன் கடமையாம் அன்றோ." ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  ஒற்றர் மொழியன்றிப் பிறர் மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.

இனிக் "கொடுங்கோன்மை" குறித்து திருவள்ளுவ நாயனார் கூறுவதைக் காண்போம். "கொடுங்கோன்மை" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தினந்தோறும் தனது நாட்டு மக்களுக்கு உண்டாகும் தீமைகளை ஆராய்ந்து, அதற்குத் தக்க நல்லாட்சி புரியாத அரசன் தினந்தோறும் தன்னுடைய நாட்டை இழப்பான்" என்கின்றார் நாயனார். தீமைகளைக் களைந்து, தீவினையாளரைத் தண்டித்து, குடிமக்களைக் காக்காவிட்டால், குடிமக்கள் நாள்தோறும் அரசனிடத்தில் வெறுப்பு அடைவர். சிறிது சிறிதாக ஆட்சியை இழக்க நேரிடும்.

"நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன்,

நாள்தொறும் நாடு கெடும்." --- திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானைப் பொன்மதுரைச்

சேவகன்தான் என்றும், திரியாத சூரன் என்றும்

நாள்தொறும் நாடி  முறை செய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்."

சேவகன் - வீரன். சூரன் என்பதும் அது. மாமனாகவும், பாணனாகவும் வந்தவன் வீரசூர பராக்கிரமம் பொருந்திய சிவபிரான் என்று அறிந்து நாடி முறைசெய்யா மன்னவன் நாடு கெடும். அரசன் கொடுங்கோலன் ஆயின், கடவுள் தாமே வந்து முறை செய்வார். திருவிளையாடல் புராணத்தில் மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம், விறகு விற்ற படலம் ஆகியவற்றினைக் காண்க.

மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம்

மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. தனபதியும் அவருடைய மனைவியும் சொக்கநாதரிடம் குழந்தைப் பேற்றினை வேண்டினர். ஒரு சமயத்தில் தனபதி தன்னுடைய சகோதரியின் மகனை தத்துப் பிள்ளையாகக் கொண்டார். தனபதியின் மனைவிக்கும், தங்கைக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதனால் மனம் வருந்திய தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணி,  தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவத்திற்காக காட்டிற்குச் சென்றார்.

தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த தனபதியின் சொந்தங்கள் அனைவரும் தனபதியின் தங்கையிடமிருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.  "என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும்போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார்.  இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். இறைவா! எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள்"என்று மனமுருக வழிபட்டாள். சோர்வு மிகுதியால் கோயிலிலேயே கண்ணயர்ந்தாள்.

அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி "பெண்ணே, நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம்"  என்று கூறினார். இறைவரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி, தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும், அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள்.  வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும், உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவன் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.

இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும், மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் "என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து அறத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள்" என்றார். வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் "வந்திருப்பது தனபதியே அல்ல" என்றனர்.

இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி, அவருடைய சொத்துக்களின் விவரம், உறவினர்களின் விவரம், அவர்களின் குடிப்பெயர், உடன்பிறந்தோர், குணங்கள், செய்தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்ட வழக்காடு மன்றத்தினர் "இவர் தனபதியே" என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர்.

பின்னர் வழக்காடு மன்றத்தினர் "தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய மருமகனுக்கு உரியது" என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும்போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர்.

விறகு விற்ற படலம்

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏமநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான்.

வரகுண பாண்டியனும் ஏமநாதனின் இசையைப் பராட்டி, அவன் தங்குவதற்கு அரசமாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் ‘இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை'  என்ற ஆணவ எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் "உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ?" என்று கேட்டான்.

அதற்கு வரகுணன் "நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன், தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏமநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான். மன்னனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் "சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன்" என்றார். கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். "இறைவா! நீதான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று மனமுருக‌ வேண்டினார்.

சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடுப்பில் அழுக்காடையும், தலையில் இருக்கும் பிறைச்சந்திரனை அரிவாளாக மாற்றி இடுப்பில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார்.  மாலை வேளையில் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார். பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து "நீ யார்?" என்று கேட்டான். அதற்கு, விறகு வெட்டியாக வந்த சொக்கநாதர் "நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை" என்றார். "பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்கத் தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன்" என்று கூறினார்.

ஏமநாதன் விறகுவெட்டியாக வந்த இறைவரிடம் "நீ முன்னர் பாடிய பாடலை இன்னொரு தரம் இசையோடு பாடு" என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி சாதாரிப் பண்ணினைப் பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில், இறைவனார் மறைந்தருளினார்.

பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் "இது நான் அறிந்த சாதாரிப் பண்ணே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?" என்று கூறிக் கவலையில் ஆழ்ந்தான். "இனி நாம் பாணபத்திரனோடு இசைவாதுவில் வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்"  என்று கூறித் தனது கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி "பாணபத்திரரே! இன்று யாம் ஏமநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம். அஞ்சற்க" என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு "அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ?" என்று கூறி வழிபாடு நடத்தினார்.

காலையில் அரசவை கூடியதும் வரகுணன் "ஏமநானை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது "ஏமநாதன் நேற்று வரை இங்கிருந்தான். நேற்றுமாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான்" என்று கூறினர்.

அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப் பொருட்களை வழங்கினான். பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தன்னுடைய சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்ந்தார்.

"நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி

நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்

நாடோறும் நாடு கெடும், மூட நண்ணுமால்

நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே." --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிகநெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை அறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதும் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மனிதர் எல்லார்க்கும் நீதி முறை இல்லாத அரசனது நாடானது வறுமை உடையது ஆகும்.

"பழமொழி விளக்கம்" என்று சொல்லப்படும் "தண்டலையார் சதகம்" என்னும் நூல், உலகநீதியைக் கூறுவது போலவே, அரசநீதி சிலவற்றையும் கூறி உள்ளது. திறமை இல்லாத அமைச்சர் அரசவையினில் நியாயம் இருப்பது இல்லை. அரசர்க்கு எல்லா அறிவுரையும் கூறவும், நியாய வழிகளைச் சொல்லவும் அமைச்சர் வேண்டுமே அன்றி, வேறொருவர் சொல்லுதல் ஆகாது. சிவபெருமான் திருத்தொண்டிற்குக் குறை செய்பவர்கள், நீண்ட கோலை உடையராய்ப் பயனற்ற வீணனைப் போல நியாயம் செய்வர் என்கிறது.

"தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்

வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே

     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்

புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்

     லாதொருவர் போதிப் பாரோ!

நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்

     மறைத்ததுவும் நிசம் அதாமே!"

இதன் பொருள் ---

கிளி எனப் பேசும் உமையம்மை (இடப் பாகத்தில்) அமரும் தண்டலையாரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், அறிவுடைய அமைச்சன் இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும், அரசு முறைமையைக் கற்பிக்கும் அமைச்சனை அன்றி, ஒருவர் கற்பித்தல் கூடுமா?  நாள்தோறும் உண்ணும் உணவிலே முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (மதிமந்திரி இல்லா அரசவையிலே) உண்மையாக முடியும்.

இவர்கள் நாட்டில் மழைதான் பெய்யுமோ? விளைச்சல்தான் உண்டோ? கொடுங்கோல் அரசன் வாழுகின்ற நாட்டை விடக் கடும்புலி வாழுகின்ற காடு நன்மை உடையது ஆகும் என்று கொடுங்கோல் மன்னன் நாட்டைப் பற்றிப் புலவர் கூறியிருப்பதை அறிய முடிகிறது. நல்ல அமைச்சர் துணையும் இல்லாமல், நீதி கெட்டு ஆரவாரமாக ஆட்சி செய்யும் மன்னனது நாட்டை விடக் காடே சிறந்தது என்கிறார் புலவர்.

"படுங்கோலம் அறியாமல் தண்டலையார்

     திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!

நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார

     வீணனைப்போல் நீதி செய்வார்!

கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?

     மழையுண்டோ? கேள்வி யுண்டோ?

கொடுங்கோல்மன் னவன் நாட்டிற் கடும்புலிவா

     ழுங்காடு குணமென் பாரே!

இதன் பொருள் ---

அடையப் போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள். வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர். (இதனால்)  (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும் கேள்வி முறையும்  இருக்குமோ? முறைதவறிய அரசன்  வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

அரசன் ஆட்சி நன்றாயிருப்பின் மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்று இருக்கும். இல்லையானால் இவை அழியும் என்று உலகம் கூறும். "கொடும்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடு நன்றே" என்று "வெற்றிவேற்கை" கூறும்.

செங்கோல் செலுத்தும் மன்னனையே உலகம் போற்றி வணங்கும். மன்னன் அறநெறி வழுவாமல் ஆட்சி நடத்த வேண்டும். செங்கோல் வளையாமல் உலகை ஆளுதல் வேண்டும். நாடு பல்வேறு வளங்களைப் பெறுவதாய் மன்னன் ஆட்சி அமைதல் வேண்டும். இவ்வாறு ஆட்சி செய்யும் மன்னனையே மக்கள் தெய்வம் என்பார்கள். இதற்கு மாறாகக் கொடுங்கோல் செலுத்தி ஆட்சி செய்யும் அறியாமை உடைய அரசனும் அவன் அமைச்சனும் மீளா நரகத்தில் அழுந்துவார்கள். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:

"நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

    வளநாட்டில் நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமற்

    புவியாளும் வண்மை செய்த

தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்

    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்

   ஆழ்நரகில் மூழ்கு வாரே!" --- தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

நால்வகைக் கவிஞர்களும் புகழுமாறு சிறப்புற்ற தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில் நல்ல அறநெறியுடன் ஒழுகி, நடுநிலை தவறாத ஆட்சியில் தவறாமல் உலகத்தை ஆளும் கொடையாளியான, துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள். தவறான ஆட்சி நடத்துகின்ற கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும் ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.

செங்கோல் என்றும், கொடுங்கோல் என்றும் பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. கோலில் அவ்வாறு பொறிக்கப்படவோ, எழுதப்படவோ இல்லை. நல்லாட்சி புரிந்தால் "செங்கோன்மை" என்றும், தீய ஆட்சி புரிந்தால் "கொடுங்கோன்மை" என்றும் கொள்ளவேண்டும்.





காதவழி பேர் இல்லாதவன் கழுதை

 


காதவழி பேர் இல்லாதவன் கழுதை

-----

இவ்வுலகத்தில் நிலையாக நிலைத்திருப்பது ஒன்று உண்டு. அதுதான் நிலையாமை. "நில்லாமையே நிலையிற்று ஆகலின்" என்பது "குறுந்தொகை" கூறுவது.  "நில்லா உலகில் நில்லோம், இனி நாம் செல்வோமே" என்பது திருவாசகம். "நில்லாத உலக இயல்பு" என்பது பெரியபுராணம். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது திருக்குறள். நில்லாமை ஒன்றையே நிலையாக உடைய இந்த உலகில், நிலைத்து இருப்பது புகழ் ஒன்றே ஆகும். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறநானூறு கூறும். அவ்வாறு குன்றாப் புகழை ஈட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்ததே இந்த மனித வாழ்க்கை.

"புகழ்" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தனக்கு ஒப்புமை இல்லாத உயர்ந்த புகழை அன்றி, இந்த உலகத்தில் அழியாது நிலைபெறுவது வேறு ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

தனக்கு ஒப்பு இல்லாமல் ஓங்குதலாவது, கொடுத்தற்கு அரிய உயிரையும், உறுப்பையும், பொருளையும் கொடுத்தலால், தன்னோடு ஒப்பு இல்லாமல் தானே உயர்கின்றது புகழ். உயிரைக் கொடுத்தவர் ததீசி முனிவர். உறுப்பைக் கொடுத்தவர் சிபிச் சக்கரவர்த்தி. கவசம், குண்டலம் முதலிய பொருள்களைக் கொடுத்தவன் கர்ணன்.

ஆதாரம் ஆகிய உலகம் உள்ள அளவும், ஆதேயம் ஆகிய புகழ் நிற்கும் என்பது, "சாதல் வந்து அடுத்தகாலும், தனக்கு ஒரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும்காலும் புகழ் உடம்பு இருக்கும்" என்னும் விநாயகப் புராணப் பாட்டால் காணலாம்.

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,

பொன்றாது நிற்பது ஒன்று இல்."            --- திருக்குறள்.


பின்வரும் பாடல்களைக் கருத்தில் வைத்தல் நலம்.

"ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து." ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

ஒன்றாக நல்லது உயிரோம்பல் - அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் - அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறிவழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் - இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது - வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

"ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு." ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் - பிறர்க்கு கொடுத்து உண்பவன் எனப்படுவான் உலகத்தில் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் - அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான்; நண்ணார் முன் சேறல் தெற்ற நகை ஆகும் - விரும்பாதவர் முன், ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சியை உண்டாக்கும்; பாடு அறியாதானை இரவு பகையாகும் - தனது தகுதி அறியாதவனை  இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

கனிகள் உப கார மாகும், 

சிட்டரும் அவ் வணம்தேடும் பொருளையெல்லாம்

இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார், 

மட்டுலவுஞ் சடையாரே! தண்டலையா

ரே! சொன்னேன் வனங்கள் தோறும் 

எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்

வாழ்ந்தாலும், என் உண்டாமே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை --- 

மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் என்  உண்டாம் - காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும், அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார்  வாழ்ந்தாலும் என் உண்டாம் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும் அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம் - அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

"ஓதஅரிய தண்டலையார் அடிபணிந்து

நல்லன் என்று உலகம் எல்லாம் 

போதமிகும் பேருடனே புகழ்படைத்து

வாழ்பவனே புருடன், அல்லால் 

ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த

பூதம் என இருந்தால் என்ன?

காதவழி பேரில்லான் கழுதையோடு

ஒக்கும் எனக் காணலாமே."   --- தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

ஓத அரிய தண்டலையார் அடி பணிந்து - சொல்லுதற்கு அரிய புகயை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடிகளைப் பணிந்து, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே - உலகில் உள்ளோர் எல்லாம் ‘இவன் நல்லவன்' என்று போற்றும் அறிவுமிக்க நற்பெயருடன், புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - புகழையும் படைத்து வாழ்கின்றவனே ஆண்மகன் ஆவான், அல்லால் - அவ்வாறு இல்லாமல்,   ஈதலுடன்  இரக்கம்  இன்றி - இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் கொடைப் பண்பும், உயிர்கள் மீது தயவும் இல்லாமல், பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன - பொன்னைக் காக்கும் பூதம்போல, தான் ஈட்டிய பொருளைக் காத்து வைத்து இருப்பதால் பயன் என்ன? காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காத தூரம் தன்னுடைய புகழ் விளங்குமாறு வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று அறியலாம்.

"உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,

துன்அரும் கேளிர் துயர் களையான் --- கொன்னே

வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், ஆஆ,

இழந்தான் என்று எண்ணப்படும்." ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தானும் உண்ணாமல், பிறருக்கு உதவிப் பெருமைப் படாமல், புகழை ஈட்டாமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை, சீ சீ வாழ்க்கையா அது? அப்படிப்பட்டவன் இருந்து என்ன? இறந்து என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை.

"பாவிதனம் தண்டிப்போர் பால் ஆகும், அல்லது அருள்

மேவு சிவன் அன்பர் பால் மேவாதே --- ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்கு ஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ? சொல்.: --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகும். அல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.

கொடைப் பண்பு ஆகிய ஆன்ம நேயமும், உயிர்க்கு இரங்குவதாகிய அருட்பண்பு என்னும் சீவகாருண்ணியமும் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். ஆன்நேயமும், சீவகாருண்ணியமும் உடையவர்களின் பூத உடம்பு அழிந்தாலும், அவர்தம் புகழுடம்பு என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அறநெறியில் வாழ்தலே அழியாத புகழைப் பெறுதற்கு உரிய ஒரே வழியாகும். இதனை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதையே புறநானூறு காட்டுகிறது.

மதுரை தமிழ் நிலைபெற்ற இடம். முச்சங்கம் வைத்து மொழி வளர்த்தவர்கள் பாண்டியர்கள். தமிழ் மொழியும் இலக்கியமும் தழைத்த  இடம் மாடமதுரை. புகழ்பூத்த புலவர்கள் வாழ்ந்த இடம். மதுரையில் அந்நாளில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் வாழ்ந்து வந்தார் அவர் சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய அறவோர். புரவலர்களின் புகழ்மிகு செயல்களை வடியா நாவில் வடித்துப் பாடியவர். அவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் வேந்தனைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 

இப் பாண்டியன்,  மிக்க பேராண்மை  உடையவன். இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர்வன்மை முதலிய பேராற்றல்களையே புகழ்ந்து பாடி இருக்கின்றனர்.  ஒருகால் இவனை ஆவூர் மூலங்கிழாரும், பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு அவர்கள் வெகுண்டு பாடியன மிக்க பெருமிதம் கொள்ளத் தக்கன ஆகும். "செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் இவ் வுலகு" என்பார் திருவள்ளுவ நாயனார்.  புலவர்கள் தன்மீது வெகுண்டார்களே என்று உள்ளம் கொள்ளாது வாழ்ந்தவன் அந்தப் பாண்டியன். அறநெறியில் வழுவாது வாழும் அரசர்க்கே புகழ் நிலைத்து இருக்கும் என்பதை அருமையாக விளக்குகின்ற பாடல் ஒன்று காண்போம்.

"கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும்,

நெடுங்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகன்மறவரும் என

நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமர் எனக் கோல் கோடாது,

பிறர் எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெரும் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்

உடையை ஆகி, இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுவாழ் எக்கர் மணலினும் பலவே." --- புறநானூறு.

இதன் பொருள் ---

ஓங்கி உயர்ந்த பெருமலை ஆகிய மேருவை வில்லாக்கி, வாசுகி என்ற பெரும்பாம்பை நாணாக அமைத்து, ஓர் அம்பைக் கொண்டு அதனையும் விடுக்காமலே, திரிபுரங்களையும் சிரித்தே எரித்து, பெருவலியை உடைய தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவரும், நீலமணி போன்ற கண்டத்தினை உடையவரும், பிறைச்சந்திரனைச் சூடிய திருச்சடையை உடையவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருமுகத்தில் உயர்ந்து விளங்கும் நெற்றிக்கண்ணைப் போல, மற்ற மன்னவர்க்கு எல்லாம் மேலாக விளங்கும் பூமாலை அணிந்த புகழ் மாறனே! மிக்க சினம் உடைய போர் யானையும், விரைந்து செல்லும் தன்மை உடைய குதிரையும், நீண்ட கொடியை உடைய தேரும், வயிரநெஞ்சு உடைய வீர மறவரும் என நால்வகைப் படைச் சிறப்பும் உடையதே அரசு என்றாலும், அரசின் பெருமை உயர்ந்த அறநெறியில் வழுவாது ஆட்சி புரிவதே ஆகும். எனவே, இவர் நமக்கு வேண்டியவர் என்று அவர் செய்த குற்றம் மறைக்கச் செங்கோல் வளைக்கவும், இவர் நமக்கு அயலார் என்பதால், அவரிடத்து உள்ள நற்குணங்களை எண்ணாது தண்டிக்கவும் நினைக்காமல், எல்லார்க்கும் பொதுவாக, செங்கதிர்ச் சூரியன்போல் சுடர் ஒளி வீசியும், திங்கள் வெண்ணிலவு போலத் தண்ணளி பொழிந்தும், மழைபோலக் கொடைகள் வழங்கியும், இல்லை என்று வருவோரே இல்லை என்று சொல்லும்படியாக நீ நீடூழி காலம் வாழ்வாயாக. பெரியோனே! வெண்மையான அலைகளை வீசும் தாழ்ந்த கடல்நீரை உடைய செந்திற்பதியில் முருகப் பெருமான் கோயில் கொண்டு இருக்கும் கடற்கரை ஓரம், காற்றடித்துக் கொண்டு வந்து கொட்டி இருக்கும் பெருமணல் பரப்பிலும் மிகவாக, நீ பலகோடி நூறாண்டு வாழ்வாயாக.

பாண்டியன் நன்மாறன் முப்புரங்க்ளையும் சிரித்தே அழித்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போலப் பிற வேந்தரினும் மேம்பட்டு விளங்குகின்றான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும் யானைகளையும்; விரைந்து செல்லும் குதிரைகளையும், கொடி பறக்கும் தேர்களையும், கூற்று உடன்று வரினும் எதிர்த்துப் போர் புரிய அஞ்சாத போர்மறவர்களையும் உடைய வேந்தனாய் உள்ளான். ஆயினும் அவனுக்குப் பெருமை சேர்ப்பன இவை மட்டுமே அல்ல. அறநெறியை முதலாக அடையவன் அரசன் என்னும் சிறப்பே அரசனின் உண்மையான உயர்வான சிறப்பாகும். எனவே அவன் மேற்கொள்ள வேண்டிய அறநெறிகள் மூன்றாகும். அவையாவன : ஒன்று : நமக்கு வேண்டியவர்கள்  தவறு செய்வார்களேயானால் அவர்களுக்காக நீதியினின்றும் வழுவக்கூடாது. இரண்டு: அயலார் தனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்மை விளைவிக்கும் செயல்களைச் செய்தாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்காமல், மாறாக செங்கோல் வளைந்து அவர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. மூன்று : பகலில் வான வீதியில் வரும் பகலவன் போல ஆண்மையும், இரவில் வெண்ணிறக் கதிர்களைச் சொரியும் சந்திரன் போன்று அருளும், காலத்தே பெய்து மக்கள் மனங்களைக் கணிவிக்கும் மழை போன்று கொடையும் உடையவனாக அரசன் விளங்க வேண்டும். இல்லை என்று இரந்து வந்துவிட்ட இல்லாதவர்க்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு ஈந்து அவர்தம் துயரினைத் துடைக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது.

பழைய புறநானூற்றுப் பாட்டே ஆயினும், அரசர்க்கு அறிவுறுத்தப் பெற்ற அறநெறியாகவே இருப்பினும், ஈராயிரம் ஆண்டுகள் கழிந்து முடிந்து போயிற்றே ஆயினும் கூட, இப்பாட்டில் இன்று நாம் அனைவரும் (தனிமனிதரும், அரசும்) மேற்கொள்ள வேண்டிய, மேற்கொண்டு உறுதியாக ஒழுகவேண்டிய அறநெறி தெள்ளத் தெளிவாகவே கூறப்பட்டு உள்ளதைக் காணலாம்.

எவ்வளவுதான் வல்லவராய் இருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும் என்பது இதன் மூலம் பெறப்படும் செய்தி ஆகும். அடுத்து, வல்லமையும், எதனையும் சாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டாலும்கூட, நம்மவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் முறையின்றிச் செய்யும் தீச்செயல்களைப் பொறுத்துப் பாதுகாப்பு கொடுக்கத் தலைப்பட்டு விட்டால் இறுதியில் அழிவு உறுதி என்பதாகும். அதுபோன்றே, நமக்கு வேண்டாதவர் என்பதற்காக அவர் செய்யும் நற்செயல்களுக்குக் கூடக் களங்கம் கற்பிக்கத் தொடங்குவோமானால், இறுதி நமக்கு உறுதி என்பதை உறுதியாக எண்ண வேண்டும். எனவே, ஒருவர் செய்வது நற்செயல் ஆயின் அதனைப் போற்றி வரவேற்று,  தீச்செயல் செயின் அதனைக் கடிந்து நீக்கி, கதிரவன் போல் ஆண்மையும், திங்களைப் போன்று அருளையும், மழையைப் போல் கொடையும் பண்பும் கொண்டு அறநெறியில் வாழ முற்படுவோமானால் திருச்செந்தூர் உறையும் திருமுருகன் திருக்கோயிலின்முன் குவிந்திருக்கும் மணலின் எண்ணிக்கை போலப் பல்லாண்டுகள் பயனுற இப்பாரில் வாழலாம் என்பது அறநெறி ஆகும். இந்த அறநெறியின் மூலம் புகழுற வாழாதவன், மனிதன் அல்ல. அவன் கழுதைக்கு ஒப்பாவான். எனவே, "காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனல் ஆமே" என்றது "தண்டலையார் சதகம்". 


மனம் என்னும் மலர்



மனம் என்னும் மலர்

-----

அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் ஆழ்கடலின் அடித்தளத்தில் கிடக்கிறது. அந்த அழுக்குப் படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறது. ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக ஆகாது. உயிர் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டே இருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவு உயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும். ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்.  பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால், மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவு உயிராகி நாலறிவு உயிராகி ஐந்தறிவு உயிராகிக் கடைசியில் ஆறறிவு உயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது பிறவிக் கடலின் நீர்மட்டத்தை அடைந்ததாக ஆகும். கடலின் அளவுற்ற ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல அழுக்குக்  குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள்  எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் இலட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். 

மற்றப் பிறவிகளை நினைத்தால் மனிதன் உயர்ந்தவன்தான். ஆனால், அவன் அடைய வேண்டிய  கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே ஆகிறான். பிறவிக் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றலும் அதற்கு இல்லை. மேலே வந்துவிட்டோம், இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. நீர் மட்டத்தின்மேல் மிதப்பதுதான் அவன் விருப்பம் என்றால் அந்த விருப்பமும் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்.  மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும். ஆதலால், கரை தெரிகிறதோ  இல்லையோ, கரை உண்டு என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் முயலும்போது அவன் கை சோரலாம். இடையிலே பல தடைகள் உண்டாகலாம்.  மெல்ல மெல்ல, சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பலப்பல மடங்கு மிகுதி ஆகும். இறுதியில் கரையையே அடைந்துவிடுவான்.  இப்போது நாம் நடுக்கடலில், முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனை அணுக வேண்டும். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். 

இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவன் என்னும் பொருளை அடைய வேண்டும். படியை வடமொழியில் 'சோபானம்' என்பார்கள்.  நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறைவனாகிய இலட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது  ஒழுக்கம் அல்லது நடத்தையைக் குறிக்கும். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். 

பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை அடியவர்கள் என்று சொல்கிறோம். அவர்களின் செயல்களும் வழிபாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவர் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். ஒருவர் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும்  தவறாமல் போய் வருகிறார். ஒருவர் நந்தவனம் வைக்கிறார். ஒருவர்  குளம் வெட்டுகிறார். இவர்கள் யாவரும் அடியவர்களே. ஒருவர் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறார். அவன் புகழைப் பாடுகிறார். ஒருவர் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார். அலங்கரிக்கிறார். நறுமலரால் அருச்சனை செய்கிறார். தூபதீபம் காட்டுகிறார். உணவை நிவேதனம் செய்கிறார். கற்பூர தீபம் காட்டுகிறார். வலம் வந்து பணிகிறார். அவரும் பத்தியுடையவரே. ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு கண்ணீர் வார இறைவனைத் தியானம் செய்கிறார். முதலில் சில நிமிடங்கள் இப்படி இருந்தவர் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறார். அவரும் அடியவரே.  நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எதற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்தையும், எனது என்ற  மமதையும் இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவரும் அடியவர்தான். ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிட, தானே பூசை செய்கிறவர் சிறந்தவர். அவரை விடக் கண்மூடி அமர்பவர் உயர்ந்தவர். அவரைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவர் மிகச் சிறந்தவர். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண்டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்கு உரியவை. 

சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல்மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவது அடுக்குக்கும் தொடர்பு உண்டு.  மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவது உண்டு. அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக்கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்டவனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடையவனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். 

அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும்  ஈடுபடுவது உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான் இணையில்லாத ஞானம் பெற்றவர். அவர் திருத்தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்தார்.  அது சரியை. நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். "சிவஞான சித்தியார்" இந்த உண்மையைச் சொல்கிறது.

"ஞான யோகக் கிரியா சரியை நாலும்

     நாதன்தன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;

ஊனம் இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்

     யோகி; கிரியாவான்தான் ஒண்கிரியை ஆதி

ஆன இரண்டினுக்கு உரியன்; சரியையினில் நின்றோன்

     அச் சரியைக்கே உரியன்; ஆதலினால் யார்க்கும்

ஈனம் இலா ஞானகுருவே குருவும்; இவனே

     ஈசன் இவன்தான் என்றும் இறைஞ்சி ஏத்தே."  

ஆதலின், மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடுதலும் பாடுதலும் ஆகியவற்றை  இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனாமலம்  தாக்காமல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். 

மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய  திருவுருவைத் தானே பூசிப்பது அது.  இறைவனை பிம்பம், தம்பம், கும்பம் என்னும் வகைகளில் ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப்  பத்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவபூசைக்கு உரிய விதிகள் பல. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம்  செல்லும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்பதில்லை. அவர்களும்  ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் "யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்று சொல்லி, பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். 

பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூபதீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப்  படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திருவிளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானைப் பூசை செய்த வரலாற்றை  அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டு இருக்கலாம். ஆயினும்,  பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் உண்டானது. 

முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 

"போத ஆனந்தத் தனிக்கடல் பருகும்

புயல்புரை முனிவனை வசிட்ட

மாதவன் ஆதி முனிவரும் உலோபா

முத்திரை தன்னொடும் வரித்துப்

போதொடு சாந்தம் மான்மதம் தீபம்

புகைமுதற் கருவி கைக்கொண்டு

மேதகு சிறப்பால் அருச்சனை செய்து

பின்னும் ஓர் வினாவுரை செய்வார்."

என்று பாடுகிறார் பரஞ்சோதியார்.  இங்கே முனிவர் பூசை செய்ததையே, "அருச்சனை செய்து" என்று சொன்னார். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது, கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதால்  சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டாகலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் திருநாம வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி,  நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிரம் நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய்வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். 

இந்த வழக்கத்தைச்  சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை  செய்யப் புகுந்தார். ஆயிர நாம அர்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக்  கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனையைத்  தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாக இட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. திருமால் வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடியில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினார் என்பது புராண வரலாறு. 

"பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறைய,

தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே,

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ."    --- திருவாசகம்.

பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை. இறைவன்  திருநாமத்தையும் சொல்லவேண்டும். மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது. அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத்தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும்  அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் உண்டாகும். மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் தூவ, வாய்ப் பழக்கத்தால் திருநாமத்தைச்  சொல்வதும் உண்டு. மனத்தை அலையவிட்டால் பூவைத்  தூவுவதும் நாமம் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன. 

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"   --- பட்டினத்தார். 

மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம்  இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரிநாதர், "தகட்டில் சிறந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்து அருளாய்" என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.

கடம்ப மலர்  முருகனுக்கு உகந்தது. கடம்பன் என்றே சொல்வார்கள்.  முருகனுக்குத் தகட்டைப் போலச்  சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு ஆசை.  இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப்  பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திருவடி பணியவும் அவன் திருவருள் துணை செய்தால்தான் முடியும். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகம்.  மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். பூசையில் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. "அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்  தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க" என்பது திருவாசகம். 

சரியை செய்து முதிர்ந்து கிரியையில் புக வேண்டும். கிரியை பழுத்து யோக  நெறியில் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானம் ஆக வேண்டும். கிரியையில் மனம்  ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று  ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனையில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடையாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல, இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் வளர வளர, மலர் இல்லாமலே மனம் திருவடித்  தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி.

மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. அதனை இறைவன்  திருவடியில் அணியும்போது, அது நமது மனமாகிய மலரை இடுவதற்கு அடையாளம் ஆகிறது. புற மலரை இடுவதனால் பூசை நிரம்பாது. அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்.  அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு  மனக்கணக்குப் போடும் பக்குவம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக்கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திருநாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் திருவடியைப் பற்றும்.  "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்னும் திருக்குறளில், "சேர்தல்" என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது  எளிதிலே கைகூடும் செயல் அல்ல. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள்வதைப் போல, மனம் பூவைக் கொண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டும்.

மனமும்  முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்ப மலர் மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியில் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "கல்மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்" என்பார் அப்பர் பெருமான். மனத்தைத் தாளில் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக  நிகழும்.  மனம் ஆசை வயப்பட்டு உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக்  கரத்தில் அடக்கப் பார்க்கிறது. அதை இறைவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை வள்ளலார். அதற்குத் திருவருள் துணையை நாடுகிறார். 

முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும்  வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபதுமனை அடக்கியவன். சூரபதுமனுடைய ஆசைக்கு  அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழுகின்றன. அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசையாகத்தான்  இருக்கும். அதை அளவிட முடியாது. ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால்  சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.  இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப்  பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரபதுமனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி  போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரபதுமனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர்கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி  நிற்கிறான். தன் மாயத்தால் எல்லாம் செய்யவல்ல அவன், இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்.  இதைச் சார்ந்த கிரகங்களையும் தன்  ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி,  அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன்  அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் (பிரமன்) அண்டத்தின் முகடு இருந்தது. அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: 

கடலையும் மலையையும் நாட்டையும் கடந்து,  வானவெளியைத் தாண்டி, மேலே பறந்து  சந்திரமண்டலத்தில் கொடி கட்ட ஆசைப்படாத அரசு இல்லை. மனிதர்களுக்கே இந்த  ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத்துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக தம்பம் போல  நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே  இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து,  இந்த்ர லோகத்தை முட்ட எட்டி,  சூரபதுமன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிடமாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது, கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல்லாம் படுநாசம். சூரபதுமனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். விண்ணவர் யாவரும் அஞ்சி நடுங்கினர். 

இத்தகைய நிட்டூரம் உடையவனை - பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டினவனை, அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரபதுமன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அப்படிபட்ட முருகப் பெருமானிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் செய்துகொள்கிறார் அருணகிரிநாதர். அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த சூரபதுமனை அடக்கினவன்  முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே  வழி காட்டுவான் என்று எண்ணி, இந்த வரலாற்றை இங்கே நினைத்துப் பின்வருமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.  

"தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள்இணைக்கே

 புகட்டிப் பணியப் பணித்து அருளாய், புண்டரீகன் அண்ட

முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் 

பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே!"           --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரது உலகத்தின் வாயிலைப் பிளந்து, அதுவரை ஓங்கி நின்று, இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று, ஆண்யானை போல் போர் புரிந்த கொடும் குணம் உடையவன் ஆகிய சூரபதுமனுக்குப் பயங்கரத்தை உண்டு பண்ணினவரே! இலைகளோடு கூடி சிவந்த நிறம் உள்ள கடப்பமலர் மாலையையும், அடியேனுடைய மனத்தையும் தேவரீருடைய இரண்டு திருவடிக்கே சேர்த்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளை இட்டு அருள்வீர்.

(தகடு - மென்மையும் தட்டையுமான வடிவு. தகடு என்பதற்குப் பூவின் புற இதழ் என்றும் பொருள் உண்டு. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய)

இறைவன் திருவடிகளில் மலரிட்டு வணங்கும்போது, நமது மனமாகிய மலரையும் சேர்த்து இட்டு வணங்குதல் வேண்டும். புறமலர் மட்டும் திருவடியில் சேர்ந்து, அகமலர் திருவடியில் பொருந்தவில்லையானால், பயனில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில், புறமலர் இல்லாமலே அகமலரால் இறைவனை வழிபாடு செய்யும் பக்குவத்தில் புகுத்தி விடும்.





65. உணவில் விலக்கு

 


                      65. உணவில் விலக்கு

                                  -----


கைவிலைக் குக்கொளும் பால், அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்,

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,


செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை, வெல்லம், மலாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,


எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம்,கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்.


ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---

ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும் அமலனே - ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கைவிலைக்குக் கொளும் பால் - கைவிலைக்கு வாங்கும் பாலும், 

அசப்பால் - ஆட்டுப்பாலும், 

வரும் கார் ஆ கறந்த வெண்பால் - வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும், 

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு, செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம், மலாவகம்,

சீர்இலா வெள் உள்ளி - சிறப்பில்லாத வெள்ளைப் பூண்டு, 

ஈர்உள்ளி - (சிறப்பில்லாத) வெங்காயமும், 

இங்குவொடு - பெருங்காயத்துடன், 

சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் - சிறப்பில்லாத வெள்ளைக் கத்தரிக்காயும், 

எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் - குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட பொருளும், 

கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் - சூரியன் ஒளியும், விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், 

இவையெலாம் சீலம் உடையோர்க்கு ஆகா - இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை, 

எனப் பழைய நூல் உரைசெயும் - என்று பழைமையான நூல்கள் கூறும்.


      ஐவகைப்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அசம் - ஆடு. கொம்மடி - தும்மட்டிக்காய். மலாவகம் - பிண்ணாக்கு. நிர்மாலியம் (வடமொழி) - கழிக்கப்பட்ட பொருள். எவ்வம் - குற்றம். கிரணம் : இங்கு ஞாயிற்றின் கதிரைக் குறிக்கின்றது.


செல்வச் செருக்கு கூடாது

 


செல்வச் செருக்கு கூடாது

----- 

  செல்வம், பொருள், பணம் என்னும் சொற்கள் மனிதனுடைய காதுகளில் விழுந்தாலே இன்பம் விளைகின்றது. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கல்வியும் மேலான செல்வம் என்று எண்ணுவது இல்லை. "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று நாயனார் அறிவுறுத்தியபடி,  கேள்வியைச் செவிச்செல்வம் என்று எண்ணுவதில்லை.

      உண்மையான செல்வம் இறையருளே என்பதை உணர்ந்தவர்கள் அருளாளர்கள். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்,  பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய பாங்கில், இறைவனையே "செல்வமே" என்று கொண்டாடியவர்கள். "திருவே! என் செல்வமே! என்றார் அப்பர் பெருமான். "செல்வமே! சிவபெருமானே!" என்றார் மணிவாசகர்.

  செல்வம், கல்வி முதலிய நலங்கள் ஒருவனுக்கு வாய்த்தால், உள்ளம் கனிந்து, அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண்டும்.   செல்வரை ஒருவன் சார்ந்து எத்தனை காலம் இருந்தாலும், அவன் செல்வன் ஆவதில்லை. ஆனால்,  இறையருளால் செல்வத்தோடு கல்வி நலமும் ஒருங்கே பெற்றுள்ள அறிவாளனிடம் ஒருவன் சேர்ந்து இருந்தால், செல்வ நலமும், கல்வி நலமும் நாளடைவில் ஒருங்கே வாய்க்கும்.

      "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நல்லறிவு இல்லாமல், செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டு திரிபவன், நெஞ்சத் திமிரால் நிலைகுலைந்து போவான்.

நான் (கற்றவன்) என்னும் செருக்கு, "அகங்காரம்" ஆகின்றது.

எனது என்னும் செல்வச் செருக்கு, "மமதை" ஆகின்றது.

      அகங்காரம் கொண்டுள்ளவனுக்கு, அகந்தையே மனைவி. மமதையே மகள். உலோபமே மகன். இடம்பம் பேரன் என்பர் பெரியோர்.

      திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு, குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும், கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். இது எப்படிப்பட்டது?  என்றால், எலும்பைக் கடித்துக் கொண்டு இருந்த நாய்க்கு, சிறு மாமிசத் துண்டம் கிடைத்தது போல.

 

"சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்."           --- நாலடியார்.

இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.   ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

      முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள்.

 

"வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு."

என்று பெரியோர் காட்டினார். வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

"செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்."

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

இதன் பொருள் --- 

    இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்;  எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக  இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையர் ஆவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

 

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே."

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே."   --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார், தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனம் ஆக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?)  பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்)

      வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போல, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

"வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."                   --- கந்தர் அலங்காரம்.

 

      பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

"எத்தனைபேர் கையில் முன்னம் இப்பொருள்தான்

    இருந்தது, அவர் எல்லாம் தத்தம்

அத்தம் என நம்பினார், அவர்களை விட்டு

    அகன்று, உன்கை அமர்ந்தது, இன்னும்

சத்தம் இன்றி உ(ன்)னை மோசம் செய்து, அனந்தம்

    பேர் கரத்தில் சாரும், சொன்னேன்;

சித்தமே! அதுசெல்லும் முன் நீ சற்

    பாத்திரத்தில் செலவி டாயே"    --- நீதிநூல்.

(அத்தம் - பொருள். சற்பாத்திரம் - நற்செயல்.)

          நெஞ்சமே! இப்பொழுது உன்னிடத்தில் உள்ள இப்பொருள் இதற்கு முன் எத்தனைபேர் கையில் இருந்தது? அத்தனை பேரும் இதனைத் தத்தம் பொருள் என்றே நம்பி இருந்தனர். அவர்களை விட்டு அகன்று, இப்போது உன் கையில் வந்திருக்கிறது. இது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்து விடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டு அகலும் முன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.

 

"என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, அதுவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே."     --- நீதிநூல்.

      என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அது உன்னைவிட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

 

 "ஒப்பரும் நற்குணத்தவர்க்கும் கொலை காமம்

    கள் களவை உபதேசிக்கும்

அப்பனாய், நட்பினர்க்குள் பகை விளைக்கும்;

    சத்துருவாய், அகிலத்து உற்ற

செப்பரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்,

    தீவினைக்கு ஓர் செவிலி ஆய

இப்பொருளை, நற்பொருள் என்று எப்படி நீ

    ஒப்புகின்றாய், ஏழை நெஞ்சே. "       --- நீதிநூல்.

      அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை உடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகள் அவர்கள் மனத்தில் அழுந்தப் போதிக்கும் தலைவனாகவும்,  நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாகவும்,  சொல்லமுடியாத உலகியல் துன்பங்களுக்கு எல்லாம் தாயாகவும், கொடுஞ் செயலுக்கு எல்லாம் வளர்ப்புத் தாயாகவும் இருக்கும் இப்பொருளை,  இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருள் என்று, நீ எந்த முறையில் மனம் ஒப்பிக் கூறுகின்றாய்.

 

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே. "      --- நீதிநூல்.

      எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், குற்றமற்றவாய் இருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவராய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும், இந்தத் தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

 

"நிறைசெல்வம் உடையாரை நோய்துன்பம்

    அணுகாவோ? நினைத்தது எல்லாம்

குறை இன்றிப் பெறுவரோ? புவிக்கு அரசு

    செலுத்துவரோ? குறித்த ஆயுள்

பிறை என்ன வளருமோ? இயமன் வர

    அஞ்சுவனோ? பேரின்பத்துக்கு

உறையுளோ? அவர்கிரகம், இவையெ(ல்)லாம்

    மனமே! நீ உன்னுவாயே. "              --- நீதிநூல்.

         நெஞ்சே! நிறைந்த செல்வம் உடையாரைப் பசிநோய்,  உடல்நோய், துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்தது எல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ?  வரையறுக்கப்பட்ட வாழ்நாளானது பிறைபோன்று வளர்ச்சி உறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு இருப்பிடமோ? இவை அனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.

 

      எல்லார்க்கும் நல்லது செய்யவே இறைவன் நம்மை செல்வர் ஆக்கி வைத்தான். எல்லோரிடமும் தாழ்மையாய் நடந்து வந்தால், வாழ்வு வளம் பெறும். நிலைமை இதனை உணராமல் செருக்குக் கொண்டு இருந்தால், விரைந்து அழிந்து போக நேரும்.

 

      செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 

      பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இறக்கும் போதும் கொண்டு செல்வது இல்லை. வாழ்நாளில், உடம்பு உள்ளபோதே அறம் செய்து, அருள் உடையராய் ஆக முயல வேண்டும். பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


பணிவுடைமை என்னும் செல்வம்



பணிவுடைமை என்னும் செல்வம்

-----

 திருக்குறளில் "அடக்கம் உடைமை" என்னும் ஓர் அதிகாரம். இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பெருமிதம் கொள்ளாமல் அடங்கி இருத்தல் எல்லோர்க்கும் நன்மையைத் தரும்; அவர் எல்லாருள்ளும் செல்வம் உடைவர்களுக்கு, அந்தப் பணிவானது, வேறு ஒரு செல்வமாகத் தோன்றும் சிறப்பினைத் தரும்" என்கின்றது.

அடக்கம் இன்மை, அகந்தை, செருக்கு என்னும் சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களைத் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று கூறுவார்கள். செருக்கு என்பது ஒரு ஆழ்குழி ஆகும். அதில் வீழ்ந்தவர்கள் அழிவது திண்ணம. செருக்கு என்னும் அடக்கம் இன்மை மனிதனிடத்தில் எட்டு விதமாகத் தோன்றும். 


1. அறிவுச் செருக்கு ---

தான் கல்வியில் சிறந்தவன் என்றும் தன்னைவிட எவரும் பெரிய அறிவாளி அல்ல என்று கருதுவதும் ஒருவகைச் செருக்கு. கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு. கற்றவர்களிடம் ஏற்படும் இந்தக் கல்விச் செருக்கைப் போக்குவதற்குத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் "நன்னெறி" என்னும் நூலில் பின்வரும் பாடல் வாயிலாக வழிகாட்டியுள்ளார்.

"கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்

அடல் ஏறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே

முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்

பனிக்கடலும் உண்ணப் படும்."

முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது. "கலைமகளே இன்னமும் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றாள். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.


2. குலச் செருக்கு ---

மற்றவர் குலத்தைவிடத் தனது குலம் உயர்ந்தது என்று எண்ணுதல் ஆகும். "குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதியார்.


3. சாதிச் செருக்கு

தன் சாதிதான் சிறந்தது என நினைப்பது. மகாபுருஷர்கள் என்று போற்றப்படும் பலரையும் எண்ணிப் பார்த்தால் எந்த சாதி உயர்ந்தது என்பது தெளிவாகும். "சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று சொல்லி, சாதி, குலத்தில் உயவர்வு தாழ்வு கற்பிக்கின்ற பாவத்தைச் செய்யவேண்டாம் என்பது இளம்பருவத்திலேயே விளங்கவேண்டும் என்பதாகச் சொல்லி வைத்தார் அமரகவி பாரதியார்.

"சாதி இரண்டு ஒழிய வேறுஇல்லை, சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி"

என்றார் ஔவையார். மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளுகின்ற சாதியை ஔவையார் குறிப்பிடவில்லை. பிறப்பால் எந்தக் குலத்தில் பிறந்தவர் ஆனாலும், ஒருவன் துன்பத்தில் உள்ளான் என்பதை அறிந்து, இல்லை என்று ஒருவன் கேட்கும் முன்பாகவே கொடுத்து உதவுபவர்களே பெரியோர்கள். பொருள் இருந்தும், உதவ வேண்டும் என்ற மனநிலை இல்லாவர்களே தாழ்ந்தவர்கள் என்றும் இவ்வாறு இரண்டு சாதிகளே உலகில் நீதிநெறிகளின்படி பார்த்தால் உண்டு என்றார் ஔவையார்.

“ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.”

என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார். 

சாதிப் பெருமை, குலப்பெருமை பேசுகின்ற ஈனத் தனத்தினால், உள்ளத்தில் ஊனமே உண்டாகும். அந்த ஈனத் தனத்திலே தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்கள் ஈடேற வழியே இல்லை. அவர்களுக்குப் பிறவி என்னும் தடுமாற்றமே உண்டாகும். வெள்ளச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதுபோல, சாதி குலம் பிறப்பு என்கின்ற சுழியிலே, அறியாமையால் தன்னைத் தானே அகப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பதைப் பின்வரும் மணிவாசகப் பாடல் உணர்த்தும்.

"சாதி, குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு,

பேதைகுணம் பிறருருவம் யான் எனது என் உரைமாய்த்துக்

கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லைக் கண்டேனே".             --- திருவாசகம்.

இதன் பொருள் ---

சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து,  என்னையும் அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும், நான், எனது என்று சொல்லும் சொல்லையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதம் ஆனவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.


4. செல்வச் செருக்கு ---

சிறிது செல்வம் சேர்ந்து விட்டாலே, தன்னை குபேந்திரனாக எண்ணி இறுமாப்பு அடைவது  உண்டு. கல்விச் செருக்கு எவ்வாறு மனிதனிடம் இருக்கக் கூடாதோ அதைப்போல, செல்வச் செருக்கும் ஒருவனிடம் இருக்கக் கூடாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.

"தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று

தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்

இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு

வரைக்கும்வந் தன்று வளைவு."

மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை,  இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது.  பொன்மலை என்று போற்றப்படுவது. இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட, சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார். எனவே, குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார்.


5. வீரச் செருக்கு ---

தான் மட்டுமே வீரன் என்று நினைப்பது வீரச் செருக்காகும். இறுமாப்பால் வீரம் அழியும். அகந்தையால் அழிந்தவர்கள் இராவணன், தக்கன், சூரபதுமன் முதலானோர். வரலாறும் இதனை எடுத்துக் காட்டும்.


6. வலிமைச் செருக்கு ---

தன்னுடைய பலத்திற்கும் வலிமைக்கும் முன் எவருமில்லை என்று ஆணவம் அடைவது. கோவர்த்தன மலையையே குடையாகப் பிடிக்கும் வலிமை படைத்தவர் திருமால். மேருமலையையே வில்லாக வளைக்கும் திறம் கொண்டவர் சிவபெருமான். நம் வலிமை பெரியதா என எண்ணிப்பார்க்க வேண்டும்.


7. வனப்புச் செருக்கு ---

உடல் அழகுடன் இருப்பவர்கள் தன்னை விட வனப்புடன் எவருமில்லை எனக் கருதுவது வனப்புச் செருக்காகும்.  மற்றவர்க்கு வேண்டுமானால் தனது உடல் அழகே பெரிதாகத் தோன்றலாம். அதனை மேலும் மெருகு ஏற்றிக் கொள்ளலாம். ஆனால், கற்றவர்க்கு, கல்வியால் உண்டான நலமே சிறந்த அணிகலம் ஆகும். அவருக்கு வேறு அணிகலன்கள் தேவையில்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.

"கற்றார்க்குக் கல்வி நலனே நலன், அல்லால்

மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; - முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா, யாரே

அழகுக்கு அழகுசெய் வார்".    --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

எக்காலத்திலும் முழுமையான மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு  அழகு செய்ய, வேறு ஆபரணங்கள் தேவை இல்லை. யாராவது அழகுக்கு அழகு செய்வார்களா? அது போல, நன்கு கற்றவர்க்கு, கல்வியால் உண்டாவதே அழகு. அவருக்கு அழகு செய்ய வேறு ஓர் அணிகலன் வேண்டுவது இல்லை.

பிற நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன.

"குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும், அழகு அல்ல; - நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு."   ---  நாலடியார்.

இதன் பொருள் ---

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட அழகிய கரையோடு கூடிய வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படுகின்ற மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராய் வாழுகின்ற நடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்துகின்ற கல்வியே சிறந்த அழகு ஊட்டும் அணிகலம் ஆகும்.

இப் பாடல் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எண்ணவேண்டாம். தலைமயிர் அழகு, உடை அழகு இரண்டும் இருபாலர்க்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுக. 

"மயிர்வனப்பும், கண்கவரும் மார்பின் வனப்பும்,

உகிர்வனப்பும், காதின் வனப்பும், --- செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும், வனப்புஅல்ல, நூற்குஇயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு". --- சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

தலைமயிரால் உண்டாகும் அழகும், கண்டவர் கண்களைக் கவர்தற்கு உரிய எடுப்பான மார்பினால் உண்டாகும் அழகும், நகத்தால் உண்டாகும் அழகும், காதினால் உண்டாகும் அழகும், குற்றம் நீங்கின (வெண்மையான) பல்லினால் உண்டாகும் அழகும், அழகு அல்ல. கற்ற நூல்களுக்குப் பொருந்திய சொல்லின் அழகே அழகு ஆகும்.

புற அழகு நாளாக நாளாகக் குன்றும். அக அழகு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்லாமையால் உண்டாகும் இழிவை எடுத்துக் காட்டவே இவ்வளவும் சொல்லப்பட்டது. புற அழகு கூடாது என்று சொல்லவில்லை. புற அழகோடு, கல்வி அறிவினால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் தேவை என்பதே சொல்லப்பட்டது.

"இடைவனப்பும் தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,

நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்

கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு". --- ஏலாதி.


இதன் பொருள் ---

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடக்கின்ற நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்களில் தசை கொழுவியுள்ள கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா. மக்களுக்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

தனக்கு ஒரு கேடு அல்லது தாழ்வு வந்தபோது, புற அழகு எவ்விதத்திலும் துணை செய்யாது. கல்வி அறிவு ஒன்றே துணை நிற்கும்.


8. தவச் செருக்கு ---

விரதங்களும் நோன்புகளும் பல இருந்துவிட்டுத் தம்மைவிடத் தவத்தில் சிறந்தவர் எவருமில்லை என்று நினைப்பது தவச் செருக்காகும். 

கல்வி, குடிப்பிறப்பு, செல்வம் ஆகியவற்றால் செருக்குக் கொள்ளாத ஒருவனுக்குப் பெருமை உண்டாகும். கல்வி உடையார், குடிப்பிறப்பு உடையார், செல்வம் உடையார் என்னும் மூவகையினருக்கும் அடக்கம் என்னும் குணம் பொதுவானது என்றாலும், பொருள் உடையார் இடத்தில் செருக்கு மிகுந்து இருக்கும். அவரிடத்திலும் அடக்கம் இருக்குமானால், அது கல்வி உடையாரின் அடக்கத்திலும், குடிப்பிறப்பு உடையாரின் அடக்கத்திலும் மேம்பட்டு விளங்கும். 

"எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."            --- திருக்குறள்.

இதன் பொருள் ---

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்;  அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆகும் சிறப்பினை உடைத்து.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல், 

"ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியைக்கண்டு,

ஏனை அரன் அன்பர் என்றால் என்படுமோ? --- மாநிலத்துள்

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."

அரசு - சேரமான் பெருமாள் நாயனார். போலியைக் கண்டு - முழுநீறு பூசிய சிவனடியாரைப் போல் தோன்றிய வண்ணானைக் கண்டு. இறைஞ்சும் - வணங்குவார். 

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு

சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திரு அஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார், நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுக்கும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து, இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.

    இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள், சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திரு அஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திரு அஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "சிவத்தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத்து இறைவனது திருவருளால், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும்  பெற்றார்.

    உலகுயிர்கள் கழறும் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால், உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச்சேரன், காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து, பெரியபுராணத்தில் வரும் குலச்சிறை நாயனாரின் வரலாற்றினை வைத்துப் பாடிய பாடல்...

"நலச்சிறைநீர் வேணியர் நல்லடியார் யார்க்கும்

குலச்சிறையார் தாம்பணிதல் குன்றார் - இலர்க்குஇகழார்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."

இதன் பொருள் ---

பாண்டிய நாட்டிலே மணமேற்குடியிலே குலச்சிறை நாயனார் என்பவர் அவதரித்தார். விபூதி உருத்திராக்கம் தரித்தவர்களும் திரு ஐந்தெழுத்தை இடையறாது ஓதுகின்றவர்களும் ஆகிய சிவனடியார்களை வணங்கித் துதித்து அவர்க்கு வேண்டும் உதவிகளை எல்லாம் செய்யும் பணி பூண்டவர். குணம் இலராயினும் அவரை இகழ்ச்சி செய்யாதவர். பாண்டிய அரசராகிய நின்றசீர்நெடுமாறனுக்கு முதல் மந்திரியாக இருந்து அரசு புரிவித்தார். பரசமய கோளரியாகிய ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தரை வணங்கிப் போற்றி, அவரால் தேவாரத் திருப்பதிகத்திலே வைத்துப் பாராட்டப் பெற்ற சிறப்பினையும் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையிலே "பெருநம்பி" என்று வியந்து உரைக்கப்பட்டார்.  

"நலம்இலர் ஆக நலம் அதுஉண் டாக

நாடவர் நாடுஅறி கின்ற

குலம்இலர் ஆகக் குலம் அதுஉண் டாகத்

தவம்பணி குலச்சிறை பரவும்

கலைமலி கரத்தன் மூஇலை வேலன்

கரிஉரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்

ஆலவாய் ஆவதும் இதுவே." --- திருஞானசம்பந்தர்.

பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவ் எல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாம் சிறப்பினை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதி இருந்தும்

    இல்லாரா, வளருங் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சியாரா

ஆக்கும் இந்தத் தனம் அதனை, ஆக்கம்என

    நினைத்தனை நீ அகக் குரங்கே." ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந்தும் முடவராய், உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீய பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தனை.

சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 






64. சகுனம் - 3

 


                       64. சகுனம் - 3

                              ---


"தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,

     தவசி, சந்நாசி, தட்டான்,

  தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

     தட்டைமுடி, மொட்டைத் தலை,


கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

     கதித்ததில தைலம், இவைகள்

  காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,

     கனி, புலால் உபய மறையோர்


நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை

     நாளும்வண் ணான்அ ழுக்கு

  நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்

     நாடியெதிர் வரநன் மையாம்;


அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

     அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் - அலையை உடைய கங்கையை அணிந்த திருச்சடையை உடையவனே!, பரசு அணியும் அண்ணலே - மழு ஏந்திய பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப் பிராமணன் தவசி சந்நாசி தட்டான் - தலைவிரி கோலமாக ஒருவர் எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், 

தனம் இலா வெறுமார்பி, மூக்கறை, புல் விறகுதலை, தட்டைமுடி, மொட்டைத் தலை - தனம் இல்லாத மார்பினளும், மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், 

கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான், கதித்த தில தைலம் - அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும், 

இவைகள் காண எதிர் வர ஒணா - இவை கண்காண எதிர் வருதல் தகாதன;

நீர்க்குடம், எருக் கூடை, கனி, புலால், உபய மறையோர் - நீர்க் குடமும், எருக் கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப் பார்ப்பனரும், 

நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை, நாளும் வண்ணான் அழுக்கு - நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், 

நசை பெருகு பால்கலசம், மணி, வளையல், மலர் - விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், 

இவைகள் நாடி எதிர் வர நன்மை ஆம் - இவை தேடி எதிரே வரின் நலம் ஆகும்.


50. காலத்தில் உதவாதவை

 


            50. காலத்தில் உதவாதவை

                              -----


"கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்

     கட்டிவைத் திடுகல்வியும்

காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்

     கையிற் கொடுத்தபொருளும்


இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதம்என்

     றிருக்கின்ற குடிவாழ்க்கையும்

ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்

     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்


சொல்லான தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்

     சொல்லும்வஞ் சகர்நேசமும்

சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண

     துரிதத்தில் உதவா துகாண்


வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற

     வள்ளிபங் காளநேயா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வல்ஆன் கொங்கை மடமாது தெய்வானை குறவள்ளி பங்காள நேயா - சூதாடு கருவிபோன்ற கொங்கைகளை உடைய இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும் பங்காளனான காதலனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கல்லாது புத்தகந்தனில் எழுதி வீட்டினில் கட்டி வைத்திடு வித்தையும் - கற்காமலே ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், 

காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அந்நியன் கையில் கொடுத்த பொருளும் - விரும்பியபோது பயனடைய வேண்டும் என்று அயலானிடம் கொடுத்த பணமும், 

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடிவாழ்க்கையும் - தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலை என்று நினைத்து வாழும் வாழ்க்கையும், 

ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் - மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும், 

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றும் ஆ சொல்லும் வஞ்சகர் நேசமும் - சொல்வது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர்களிடத்தில் கொண்ட நட்பும், 

சுகியமாய் உண்டு என்று இருப்பதெ எல்லாம் துரித தருணத்தில் உதவாது - நன்மையாகக் கிடைக்கும் என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கண் வந்த காலத்தில் விரைவாகப் பயன்படமாட்டா.

     (விளக்கவுரை) வல்-சூதாடு கருவி. பாரி-மனைவி. தேச - அந்தரம்: தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு. அந்தரம் - முடிவு. சுகியம் (வட) - நன்மை.


49. வீண் போகாமல் பயன் விளைப்பவை

49.  வீண் போகாமல் பயன் விளைப்பவை

                                    -----


"பருவத்தி லேபெற்ற சேயும், புரட்டாசி

     பாதிசம் பாநடுகையும்,

பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே

     பயிர்கொண்டு வருகரும்பும்,


கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்

     கடன்இட்டு வைத்த முதலும்,

காலம்அது நேரில் தனக்கு உறுதியாக முன்

     கற்று உணர்ந்திடு கல்வியும்,


விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும்,

     விவேகிகட்கு உபகாரமும்,

வீண் அல்ல, இவை எலாம் கைப்பலன் அதாக,அபி

     விர்த்தியாய் வரும் என்பர்காண்,


மரு உலாவிய நீப மாலையும் தண் தரள

     மாலையும் புனை மார்பனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மரு உலாவிய நீபமாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே --- மணம் பொருந்திய கடப்பமலர் மாலையையும் குளிர்ந்த முத்துமாலையையும் அணிந்த திருமார்பனே! 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

பருவத்திலே பெற்ற சேயும் --- நல்ல இளமைப் பருவத்திலே பெற்றுடுத்த குழந்தையும்,

புரட்டாசி பாதி சம்பா நடுகையும் --- புரட்டாசி மாத நடுவினில் நடவு செய்த சம்பா பயிரும், 

பலம் இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர் கொண்டுவரு கரும்பும் --- நன்மை தரும் ஆடி மாதத்தில் யானையின் வாலைப் போலக் குருத்துக் கொண்டு விரிந்து வரும் கரும்பும், 

கருணையொடு மிக்க நாணயம் உளோர் கையினில் கடன் இட்டு வைத்த முதலும் --- உள்ளத்தில் அருளும் மிகுந்த நல்லொழுக்கமும் உடைய நல்லோரிடம் கடனாகக் கொடுத்து வைத்த முதல் பொருளும், 

காலம் அது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் --- துன்பம் நேர்ந்த காலத்தில் இளமையிலேயே தனக்கு இறுதி வேண்டிக் கற்று உணர்ந்த கல்வியும், 

விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் --- சிறப்புகள் மிக்க அரசர்களைக் கண்டு அவரோடு பழகிய நட்பும், 

விவேகிகட்கு உபகாரமும் --- அறிவு உள்ளவர்களுக்குச் செய்த உதவியும், 

வீண் அல்ல --- வீணாகப் போவன அல்ல.

இவையெலாம் கைப்பலன் அது ஆக அபிவிர்த்தியாய் வரும் என்பர் --- இவைகள் எல்லாம் கைமேல் பலன் தருவனவாக வளர்ச்சி அடையும் என்பர் மேலோர்.

     (விளக்கம்) மரு - மணம். தரளம் - முத்து. புரட்டாசி பாதி - புரட்டாசி பதினைந்து நாட்களுக்குள். விருது - கொடி. குடை முதலிய அடையாளங்கள். 'அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் முன்னாளில் இட்ட பொருளும் பின்னாளிலே பயன்படும்' என்பது பழமொழி


பொது --- 1128. பொற்கோவைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பொற்கோ வைக்கே (பொது) முருகா!  சிற்றின்பத்துக்காகப் பொருளைத் தேடி அலையாமல்,  தேவரீரது அருளை நாடி வாழ அருள...