திருப்புத்தூர் --- 0987. வேலை தோற்க


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வேலை தோற்க (திருப்புத்தூர்)

 

முருகா! 

தீவினை தீர அருள்வாய்.

 

 

தான தாத்த தனத்தத் தானன

     தான தாத்த தனத்தத் தானன

     தான தாத்த தனத்தத் தானன ...... தனதான

 

 

வேலை தோற்க விழித்துக் காதினில்

     ஓலை காட்டி நகைத்துப் போதொரு

     வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி

 

மேனி காட்டி வளைத்துப் போர்முலை

     யானை காட்டி மறைத்தத் தோதக

     வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்

 

கால மேற்க வுழப்பிக் கூறிய

     காசு கேட்ட துகைப்பற் றாஇடை

     காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்

 

காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்

     மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்

     காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ

 

ஆல கோட்டு மிடற்றுச் சோதிக

     பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட

     மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி

 

ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக

     னோடை பூத்த தளக்கட் சானவி

     யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி

 

சீல மாப்ப திமத்தப் பாரிட

     சேனை போற்றி டுமப்பர்க் கோதிய

     சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே

 

சேல றாக்க யல்தத்தச் சூழ்வய

     லூர வேற்க ரவிப்ரர்க் காதர

     தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வேலை தோற்க விழித்து, காதினில்

     ஓலை காட்டி நகைத்து, போதுஒரு

     வீடு காட்டி, உடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி,

 

மேனி காட்டி வளைத்து, போர்முலை

     யானை காட்டி மறைத்து,அத் தோதக

     வீறு காட்டி எதிர்த்துப் போர்எதிர் ...... வருவார்மேல்,

 

காலம் ஏற்க உழப்பி, கூறிய

     காசு கேட்டு, அது கைப்பற்றா, இடை

     காதி ஓட்டி, வருத்தப்பாடு உடன் ...... வருவார்போல்,

 

காதல் போற்று மலர்ப்பொன் பாயலின்

     மீது, அணாப்பும் அசட்டுச் சூளைகள்,

     காம நோய்ப்படு சித்தத் தீவினை ...... ஒழியேனோ?

 

ஆல கோட்டு மிடற்றுச் சோதி, 

     கபாலி,பார்ப்பதி பட்த்தால் நடம்

     ஆடி, தாத்திரி பட்சித் தா என ...... உமிழ்வாளி,

 

ஆடல் கோத்த சிலைக் கைச் சேவகன்

     ஓடை பூத்த தளக்கண் சானவி

     ஆறு தேக்கிய கற்றைச் சேகர ...... சடதாரி,

 

சீலமாப் பதி,மத்தப் பாரிட

     சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய

     சேதன அர்த்த ப்ரசித்திக்கே வரு ...... முருகோனே!

 

சேல் அறாக் கயல் தத்தச் சூழ்வய-

     லூர! வேல் கர, விப்ரர்க்கு ஆதர!

     தீர! தீர்த்த! திருப்புத்தூர் உறை ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

     ஆல கோட்டு மிடற்றுச் சோதி--- ஆலாகல விடத்தைக் கண்டத்தில் உடைய சோதி வடிவானவரும்,

 

     கபாலி--- பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவரும்,

 

     பார்ப்பதி பட்சத்தால் நடம் ஆடி--- பார்வதி தேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டு திருநடனம் புரிபவரும்,

 

     தாத்திரி பட்சித்தா என உமிழ்--- பூமியை உண்டு உமிழ்ந்த திருமாலை,

 

     வாளி--- திரிபுர தகனத்தின்போது அம்பாகக் கொண்டு

 

     ஆடல் கோத்த சிலைக் கைச் சேவகன்--- போர் புரிந்த வில்லைக் கையில் உடைய வீரரும்,

 

     ஓடை பூத்த தளக் கண் சானவி--- ஓடையில் மலர்ந்த தாமரை மலரினை ஒத்த கண்களை உடைய கங்கை என்னும்

 

     ஆறு தேக்கிய கற்றைச் சேகர சடதாரி--- ஆற்றினைத் தேக்கி வைத்துள்ள திருச்சடையை உடையவரும்,

 

     சீல மாப் பதி--- தூசிறந்த கடவுளும்,

 

     மத்தப் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய சேதன அர்த்த(ம்) ப்ரசித்திக்கே வரு முருகோனே--- களிப்பு மிகுந்த பூதப் படைகள் போற்றிட விளங்கும் தந்தையும் ஆகிய சிவபெருமானுக்கு மெய்ப்பொருளை ஓதிய புகழ் படைத்த முருகப் பெருமானே!

 

     சேல் அறாக் கயல் தத்தச் சூழ் வயலூர--- சேல் மீன்களும்கயல் மீன்களும் தத்துகின்ற வயல்கள் சூழ்ந்துள்ள வயலூரில் விளங்குபவரே!

 

     வேல் கர--- வேலைத் திருக்கரத்தில் கொண்டவரே!

 

     விப்ரர்க்கு ஆதர--- அந்தணர்க்கு ஆதாரமானவரே!

 

     தீர--- தீரம் மிக்கவரே!

 

     தீர்த்த--- துயவரே!

 

     திருப்புத்தூர் உறை பெருமாளே --- திருப்புத்தூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

     வேலை தோற்க விழித்து--- வேலும் தோற்றுப் போகும்படியாகப் பார்த்து,

 

     காதினில் ஓலை காட்டி நகைத்து--- காதில் உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து,

 

     போத ஒரு வீடு காட்டி--- போகவேண்டிய ஒரு வீட்டையும் காட்டி,

 

     உடுத்தப் போர்வையை நெகிழ்வாகி--- (அங்கு சென்ற பின்) உடுத்துள்ள மேலாடையை நழுவ விட்டு,

 

      மேனி காட்டி வளைத்து--- மேனி அழகைக் காட்டிஆடவரின் உள்ளதைக் கவர்ந்து,

 

     போர் முலை யானை காட்டி மறைத்து--- போருக்கு எழுந்த யானையினது தந்தங்கள் போன்ற முலைகளைக் காட்டியும்மறைத்தும்,

 

     தோதக வீறு காட்டி--- தமது வஞ்சகத்தின் முழு ஆற்றலையும் காட்டி

 

     எதிர்த்துப் போர் எதிர் வருவார் மேல்--- காமப் போருக்குத் தன்னை எதிர்த்து வருபவரிடம்,

 

      காலம் ஏற்க உழப்பி--- காலத்துக்கு ஏற்றபடி மழுப்பல் வார்த்தைகளைப் பேசி

 

     கூறிய காசு கேட்டு அது கை பற்றா--- கூறிய பொருளைத் தந்தால் அதைக் கைப்பற்றியும்,

 

     இடை காதி ஓட்டி--- (அது தீர்ந்தால்) சண்டையிட்டு விரட்டியும்,

 

     வருத்தப் பாடுடன் வருவார் போல்--- (அப்படிச் சென்றவர்கள் திரும்ப வந்தால்) மனம் வருந்தி வரவேற்பவர்கள் போல் நடித்து,

 

      காதல் போற்று--- காதலை வெளிப்படுத்துகின்ற விதத்தில்

 

     மலர்ப் பொன் பாயலின் மீது அணாப்பும்--- அழகிய மலர்ப்படுக்கையில் இருந்து கொண்டு ஏமாற்றுகின்,

 

     அசட்டுச் சூளைகள்--- கீழ்த்தனமான விலைமாதர்கள்மீது,

 

     காம நோய்ப் படு சித்தத் தீ வினை ஒழியேனோ--- காம நோயின் வாய்ப் படுகின்,மனத்தால் உண்டான தீ வினையில் இருந்து விடுபடமாட்டேனா!

 

பொழிப்புரை

 

     ஆலாகல விடத்தைக் கண்டத்தில் உடைய சோதி வடிவானவரும்பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவரும்பார்வதி தேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டு திருநடனம் புரிபவரும்பூமியை உண்டு உமிழ்ந்த திருமாலைத் திரிபுர தகனத்தின்போது அம்பாகக் கொண்டுபோர் புரிந்த வில்லைக் கையில் உடைய வீரரும்ஓடையில் மலர்ந்த தாமரை மலரினை ஒத்த கண்களை உடைய கங்கை என்னும்ஆற்றினைத் தேக்கி வைத்துள்ள திருச்சடையை உடையவரும்தூசிறந்த கடவுளும்,களிப்பு மிகுந்த பூதப் படைகள் போற்றிட விளங்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு மெய்ப்பொருளை ஓதிய புகழ் படைத்த முருகப் பெருமானே!

 

     சேல் மீன்களும்கயல் மீன்களும் தத்துகின்ற வயல்கள் சூழ்ந்துள்ள வயலூரில் விளங்குபவரே!

 

     வேலைத் திருக்கரத்தில் கொண்டவரே!

 

     அந்தணர்க்கு ஆதாரமானவரே!

 

     தீரம் மிக்கவரே!

 

     துயவரே!

 

     திருப்புத்தூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            வேலும் தோற்றுப் போகும்படியான கண்களால் பார்த்து,காதில் உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து,போகவேண்டிய ஒரு வீட்டையும் காட்டிஅங்கு சென்ற பின்,உடுத்துள்ள மேலாடையை நழுவ விட்டுமேனி அழகைக் காட்டிஆடவரின் உள்ளதைக் கவர்ந்து,போருக்கு எழுந்த யானையினது தந்தங்கள் போன்ற முலைகளைக் காட்டியும்மறைத்தும்,தமது வஞ்சகத்தின் முழு ஆற்றலையும் காட்டிகாமப் போருக்குத் தன்னை எதிர்த்து வருபவரிடம்காலத்துக்கு ஏற்றபடி மழுப்பல் வார்த்தைகளைப் பேசிகூறிய பொருளைத் தந்தால் அதைக் கைப்பற்றியும்அது தீர்ந்தால் சண்டையிட்டு விரட்டியும்அப்படிச் சென்றவர்கள் பொருளோடு திரும்ப வந்தால் மனம் வருந்தி வரவேற்பவர்கள் போல் நடித்தும்காதலை வெளிப்படுத்துகின்ற விதத்தில்அழகிய மலர்ப்படுக்கையில் இருந்து கொண்டு ஏமாற்றுகின்கீழ்த்தனமான விலைமாதர்கள்மீது,காம நோயின் வாய்ப் படுகின்,மனத்தால் உண்டான தீ வினையில் இருந்து விடுபடமாட்டேனா!

 

விரிவுரை

 

வேலை தோற்க விழித்து--- 

 

வேலைப் போலும் கண்களை உடையவர்கள் பெண்கள். அவர்மீது வைத்த வாஞ்சையால்வேலும் தோற்றுப் போகும்படியான கண்கள் என்று புகழ்வர்.

 

மலர்ப் பொன் பாயலின் மீது அணாப்பும்---

 

அணாப்புதல் --- ஏய்த்தல்ஏமாற்றுதல்.

 

அசட்டுச் சூளைகள்--- 

 

அசடு --- கீழ்மை. சூளை --- விலைமாதர்.

 

பார்ப்பதி பட்சத்தால் நடம் ஆடி--- 

 

பட்சம் --- பக்கம்.

 

உமாதேவியைத் தனது திருமேனியின்ல ஒரு பக்கத்தில் வைத்துசிவபரம்பொருள் திருநடனம் புரிதல்.

 

"நாரியொர் பாகம் ஆக நடமாட வல்லநறையூரின் நம்பன் அவனே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

 

தாத்திரி பட்சித்தா என உமிழ் வாளி--- 

 

தாத்திரி - பூமி.

 

பட்சித்தல் --- உண்ணுதல்.

 

பூமியை உண்டு உமிழ்ந்தவர் திருமால். அவர் திரிபுர தகன காலத்தில் அம்பாக உருவெடுத்தார்.

 

மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்

     மாமேரு பூதரத் தனுப் பிடித்துரு

     மால் ஆய வாளியைத் தொடுத்துரக்கரில் ......ஒரு மூவர்

மாளாது,பாதகப் புர த்ரயத்தவர்

     தூளாகவேமுதல் சிரித்த வித்தகர்  வாழ்வே!                --- (ஆனாதஞான) திருப்புகழ்.

 

ஆடல் கோத்த சிலைக் கைச் சேவகன்--- 

 

சிலை --- வில். மலை என்றும் பொருள் உண்டு.  மேலு மலையை வில்லாக வளைத்தவர் சிவபரம்பொருள்.

 

சேவகன் -- வீரன்.

     

ஓடை பூத்த தளக் கண் சானவி ஆறு தேக்கிய கற்றைச் சேகர சடதாரி--- 

 

ஓடையில் மலர்ந்த தாமரை மலரினை ஒத்த கண்களை உடைய சானவி என்னும் கங்காதேவி.

 

"ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை" என்பது பெரியபுராணம்.

 

சகரர் தம் பொருட்டு அருந் தவம்பெரும் பகல் தள்ளி.

பகிரதன் கொணர்ந்திடுதலால். "பகிரதிஆகி.

மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்.

நிகர் இல் "சானவிஎனப் பெயர்படைத்தது. இந் நீத்தம். --- கம்பராமாயணம்.

                                 

கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் "பாகீரதி"  என்னும் பெயரைப் பெற்றதுபூவுலகிலே சன்னு முனிவரின் காது வழியாக வெளிப்பட்டதால்"சானவி"என்னும் பெயரை அடைந்தது,

 

கங்கை ஆற்றினைத் தனது திருச்சடையில் தேக்கி வைத்துள்ளவர்சிவபெருமான்.

 

பழைய கடதட முகத்துக் கோட்டு

     வழுவை உரி அணி,மறைச்சொல் கூட்டு

     பரமர்,பகிரதி சடைக்குள் சூட்டு ...... பரமேசர்

 

பணிய,அருள் சிவமயத்தைக் காட்டு

     குமர! குலமலை உயர்த்திக் காட்டு!

     பரிவொடு அணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.  --- (அழகுதவழ்) திருப்புகழ்.

                                

 

மத்தப் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய சேதன அர்த்த(ம்) ப்ரசித்திக்கே வரு முருகோனே--- 

 

மத்தம் --- களிப்பு.

 

பாரிடம் --- பூதகணங்கள்.

 

சேதனம் --- அறிவு. அர்த்தம் --- பொருள். 

 

பிரசித்தி --- புகழ்.

 

மெய்ப்பொருளை சிவபரம்பொருளுக்கு உபதேசித்து அருளிய பெருமைக்கு உரியவர் முருகவேள்.

 

விப்ரர்க்கு ஆதர--- 

 

விப்பிரர் --- அந்தணர்.  ஆதர --- ஆதாரமாக விளங்குபவர்.

 

"அந்தணர் வெறுக்கைஅறிந்தோர் சொல்மலை"என்பது திருமுருகாற்றுப்படை.

 

"வேதியர் வெறுக்கையும்அநாதி பர வஸ்துவும்" --- திருவேளைக்காரன் வகுப்பு.

                           

 

"விப்ரகுல யாகச் சபாபதியும்" --- வேடிச்சி காவலன் வகுப்பு.

 

தீர்த்த--- 

 

தீர்த்தம் --- தூய்மைநீர்.

 

தீயவற்றை நன்மையாகத் திருத்தம் செய்வதால்,புனிதநீரைத் தீர்த்தம் என்கின்றோம்.

 

திருத்துபவன் தீர்த்தன் ஆகின்றான்.

 

"தீர்த்தன் அன்னியூர் ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்மினே" --- திருஞானசம்பந்தர்.

 

"தீர்த்தனே நின்தன் பாதத் திறம் அல்லால் திறம் இலேனே" --- அப்பர்.

 

"பூந்துருத்திந் நகர் தீர்த்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே" --- அப்பர்.

 

"தீர்த்தன் காண்திருமால் ஓர் பங்கத்தான் காண்"  --- அப்பர்.

 

"தீர்த்தனே! நின்தன் திருவடி அடைந்தேன்" --- சுந்தரர்.

 

"தீர்த்தனே! திருவாவடுதுறையுள் அங்கணா" --- சுந்தரர்.

 

திருப்புத்தூர் உறை பெருமாளே ---

 

திருப்புத்தூர் பாண்டி நாட்டுத் திருத்தலம்.

                        

காரைக்குடியில் இருந்து சுமார் 20கி.மீ. தொலைவிலும்சிவகங்கையில் இருந்து சுமார் 35கி.மீ. தொலைவிலும்மதுரையில் இருந்து சுமார் 65கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரைகாரைக்குடிசிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள இரயில் நிலையம் காரைக்குடி.

 

இறைவர்: திருத்தளிநாதர்.

இறைவியார்  : சிவகாமி.

தல மரம்     : சரக்கொன்றை.

 

திருநாவுக்கரசு சுவாமிகளும்திருஞானசம்பந்தப் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

தல வரலாறு:எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்திருத் தலங்கள்தோறும் கோயில்கொண்டு எழுந்தருளிதம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயம். இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்துகௌரி தாண்டவம் ஆடிக் காட்டிய இடமே இத்திருத்தலமாகும். 

 

பைரவர் சந்நிதி:இத்தலத்திலுள்ள பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில்வலக்கரத்தில் பழம்இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும்நாய் வாகனத்துடனும்நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில்யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்.சஷ்டிஅஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனைஅபிஷேகம்வழிபாடுயாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டுவடைமாலை அணிவிக்கப் பெற்றுஅவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ அனைத்துத் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள்பரிசாரகர்நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர,யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்கிரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.

 

இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது. கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத் தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர்யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.

 

கருத்துரை

 

முருகா! தீவினை தீர அருள்வாய்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...