022. ஒப்புரவு அறிதல் - 04. ஒத்தது அறிவான்






திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "உலக நடையினை அறிந்து உதவி புரிகின்றவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான்; அவ் உலக நடையினை அறிந்து செய்யாதவன், உயிர் உடையவனேயானாலும், அவன் இறந்தவர்களுள் ஒருவனாகவே எண்ணப்படுவான்" என்கின்றது.

     உலகத்து உயிர்கள் படும் துன்பத்தை அறிந்துகொள்ளுகின்ற உயிர் அறிவும், அத் துன்பத்தைத் தீர்க்கவேண்டும் என்ற கடப்பாடும் இல்லாதவன், உயிரோடு இருந்தும், உயிர் அறிவும், செயலும் காணப்படாமையின் செத்தவனாகவே கருதப்படுவான்.

     உள்ளத்தில் அன்பு இருந்தால் அவனுக்கு உலக நடை பழக்கத்திற்கு வரும். பிணத்திற்கு அன்பும், அதற்குரிய செயல்பாடும் இல்லை. எனவே, செத்தாருள் வைக்கப்படும் என்றார்.

     சீவகாருண்ணியம், ஆன்மநேயம் என்னும் இரண்டையும் உலகிற்குப் போதிக்க வந்த வள்ளல்பெருமான், "செத்தாரை எழுப்புதல்" என்று பல இடங்களில் பாடி உள்ளார். உயிர்கள்பால் கருணையும், மக்கள்பால் அன்பும் இல்லாதவர்கள் செத்த பிணமாகவே கருதப்படுவார்கள். அன்பு இல்லாத உள்ளத்தை உடையவர்களை எல்லாம், அன்பு உள்ளம் கொண்டோராகச் செய்வதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கியக் குறிக்கோள். செத்தாரை எழுப்புவது என்பது, அன்பில்லாதவர்களை, அன்புருவம் ஆக்குவதே என்பதை அறிதல் வேண்டும்.

"புல்லொழுக்கம் எல்லாம் புணரி இடைப் போய் ஒழிக,
நல்லொழுக்கம் ஒன்றே நலம் பெறுக --- இல்லொழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து, மனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து"

என்று பெருமான் பாடியுள்ள திருவருட்பாப் பாடலை ஓதி உணர்ந்தால் இந்த உண்மை விளங்கும்.

     மேற்குறித்த திருவருட்பாவின் உரை விளக்கம் வருமாறு....

     புல்லிய தீயவருடைய தீயொழுக்கம் பலவும் கடலுள் புகுந்து மறைந்து ஒழிக; நல்லவர்களுடைய நல்லொழுக்கமே என்றும் நலமிகுந்து ஓங்குக; இல்வாழ்வில் இருந்து இறந்தவர்கள் எல்லாரும் உயிர் பெற்றெழுந்து எல்லாரோடும் மனம் இசைந்து மகிழ்வுடன் வாழ்வார்களாக.

     தீயொழுக்கத்தை மேற்கொள்பவர் புல்லியராதலின் அவரது ஒழுக்கத்தை, “புல்லொழுக்கம்என்றார். நல்லொழுக்கம் நலம் பயப்பது எனவே, “நல்லொழுக்கம் ஒன்றே நலம் பெறுகஎன்றார். நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்என்பது திருக்குறள். இல்லொழுக்கு --- இல்லின்கண் இருந்து செய்யும் நல்லறம். மனம் ஒத்தாராய் வாழ்வதாவது மனநினைவில் எல்லாரோடும் ஒப்ப நினைந்து ஒழுகுதல்.

     இல்லறத்தில் இருந்துகொண்டு, தன்னலம் ஒன்றே கருதி, உயிர் அறிவு இல்லாத செத்தபிணம் போல வாழ்ந்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து, மனம் ஒத்தவராய் அன்புள்ளம் கொண்டு வாழவேண்டும் என்பதே பெருமானின் அருள் உள்ளம் விரும்பியது. உலகமெல்லாம் அன்பு சிறக்கவேண்டும். சன்மார்க்கம் செழிக்கவேண்டும்.

     "அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இல்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு" என நாயனார் அருளி உள்ளதையும் இங்கு வைத்து எண்ணவேண்டும். எலும்பின் மீது தோலைப் போர்த்தி உள்ளது உயிர் அற்ற பிணம். அதில், உயிர்நிலையாகிய அன்பு இல்லை. எனவே, உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உயிர் அற்ற பிணத்துக்கு ஒப்பாவான். எனவே, செத்தாருள் வைக்கப்படும் என்று நாயனார் இங்குக் காட்டினார்.

     உலக நடை தவறியதால் உண்டான பழிக்கு, வேதநடைக்குக் கூறப்பட்டுள்ளது போல் பிராயச்சித்தம் (தீர் திறன்) இல்லை.

திருக்குறளைக் காண்போம்...

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் --- உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்,

     மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் --- அஃதறிந்து செய்யாதவன், உயிருடையானே ஆயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.

       (உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தாயைத் தடிகவென்ற தந்தைமொழி தவறாமல்
சேயைப்போல் உண்டோ? சிவசிவா! - ஆயுமிடத்து
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

     தடிதல் --- கொல்லுதல். சேய் --- பிள்ளை. சமதக்கினி மகன் பரசுராமன். தந்தை சொல்படி தாய் இரேணுகையைக் கொல்லல்.

பரசுராமர் வரலாறு

     பகவான் மகாவிஷ்ணு அன்பர்களைக் காக்க எடுத்த அவதாரங்களில் ஆறாது அவதாரம் பரசுராம அவதாரம். இராமாயண காலத்திலும், மகாபாரத காலத்திலும் இருந்த ஒரே அவதாரம் என்ற சிறப்பு பரசுராம அவதாரத்துக்கு உண்டு.
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற தசரதராமனின் அவதாரம் என்றால், தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் பரசுராம அவதாரம்.

     புரரூரவசுக்கும் தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி, அவனுடைய வம்சத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் சந்திரவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த காதிராஜனின் மகள் சத்தியவதி. அழகும் அறிவும் மிக்க அவளைத் திருமணம் செய்துகொள்ள பிருகுவின் பிள்ளையான ரிஷிகன் விரும்பினான். தன் விருப்பத்தை காதிராஜனிடம் தெரிவித்தான். ஆனால், அழகும் அறிவும் மிக்க தன் மகளை ரிஷிகனுக்கு திருமணம் செய்துகொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை. எனவே, காதுகளில் ஒன்று பச்சையாகவும் மற்ற அங்கங்கள் தூய வெண்மை நிறத்துடனும் இருக்கும் ஆயிரம் குதிரைகளை தட்சிணையாகத் தந்தால், சத்தியவதியை மணம் முடித்துத் தருவதாக நிபந்தனை விதித்தான்.

     ரிஷிகன் வருணதேவனை பிரார்த்தித்து அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், தான் சாத்தியம் இல்லாதது என்று நினைத்த காரியத்தை செய்து முடித்த ரிஷிகனுக்கு இனியும் தன் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கவில்லை என்றால் வார்த்தை தவறியதாகும் என்று நினைத்து, சத்தியவதியை ரிஷிகனுக்கு மணம் முடித்துத் தந்தான்.

     சிலகாலம் சென்றதும் சத்தியவதிக்கு உத்தமமான தவத்தில் ஆர்வம் மிக்க மகன் பிறக்கவேண்டும் என்று விரும்பினாள். அதேசமயம் சத்தியவதியின் தாய்க்கும் தனக்கு பராக்கிரமம் நிறைந்த பிள்ளை பிறக்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், ஒரு யாகம் செய்தான். உத்தமமான பிள்ளை பிறக்க மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்னப் பிரசாதம் எடுத்துக்கொண்டான். பிறகு பராக்கிரமமான பிள்ளை  பிறக்கவேண்டும் என்று மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்ன பிரசாதம் எடுத்துக் கொண்டான். உத்தமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மனைவிக்கும், பராக்கிரமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மாமியாருக்கும் கொடுத்தான்.

     தனக்கு ஒரு அந்தணனாக, ஞானியாக, பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க சத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான். ரிஷிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் இராமன் என்பவன் கடைசி பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு சத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் "பரசுராமன்" என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன்.

     ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்று போற்றி வணங்கும் கற்பரசி. தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும் என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவாள். அந்தத் தண்ணீரைத் தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

     கேகய தேசத்து மன்னனான கிருதவீர்யனின் மகன் கார்த்தவீர்யாஜுனன். இவன் இராவணனையே போரில் வென்று சிறைப் பிடித்தவன். அவன் ஒருநாள் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான். திரும்பும்போது ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்தார். காட்டில் வசிக்கும் முனிவருக்கு தெய்வப் பசுவான காமதேனுவின் உதவியால்தான் அனைத்தும் அவருக்குக் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன்தான் அதைக் கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணத்துக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

     அரசன் என்பவன் தெய்வத்துக்குச் சமம் என்பதால், கார்த்தவீரியன் செய்த தவற்றை மறந்து மன்னிக்காமல் கொன்ற பாவம் தீருவதற்காக திருத்தல யாத்திரை செல்லுமாறு கட்டளை இட்டார். பரசுராமரும் ஒரு வருடகாலம் தீர்த்த யாத்திரை சென்றார். அவர் பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்தார். பிள்ளை நல்லபடியாக தீர்த்த யாத்திரை செய்துவிட்டு வந்ததால் ஜமதக்னியும் ரேணுகா தேவியும் பரமதிருப்தி அடைந்தனர்.

     ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். அவ்வளவில் அவளுடைய கற்பு நெறி தவறியது. கையில் சேர்த்து பிசைந்த மண் குடமாக மாறவில்லை. நடந்ததை அறிந்த ஜமதக்னி முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார். ரேணுகா தேவியை கொல்லும்படி சொன்னார். மற்ற பிள்ளைகள் தயங்கிய நிலையில் பரசுராமர் தாயை கொன்றார். தாயின் தலையுடன் சகோதரர்களின் தலைகளும் பரசுவால் தாக்கப்பட்டு கீழே விழுந்தன.

     தன் சொல்லை மந்திர வாக்காகக் கொண்டு காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டுப் பார்த்து, '' ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்னைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். ஜமதக்னியும் அப்படியே அருளினார். இந்நிலையில் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்கள்.

     ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகாதேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். ஜமதக்னி முனிவரின் சிரசை வெட்டி வீழ்த்தினர். நடந்ததை அறிந்த பரசுராமர், ''கொடிய குணம் கொண்ட சத்திரிய வம்சத்தை அடியோடு அழிப்பேன்'' என்று சபதம் செய்தார். அப்படியே கார்த்தவீர்யாஜுனனின் பிள்ளைகள் அனைவரையும் கொன்றார். தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்து ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள சத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி  திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். இராமாவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். கசத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரிய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

     இராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், ராமரை ஆசிர்வதித்துவிட்டுச் செல்கிறார்.
    
     பரசுராமர் கர்ணனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம், சத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய தொடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே வேதனை. அவன் தொடையில் இரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த இரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். நடந்ததைப் பார்த்து, ''வண்டுக் கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு கசத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு'' என்று வார்த்தைகளில் சினம் பொங்கக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு சத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான்.


இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது,
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார், சிந்தை அறம்அறி யாரே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.

         குறிப்புரை : இதனால், இப்பிறப்பில் விளையும் நலந் தீங்குகட்குக் காரணம் அற மறங்கள் என்பதும், அறத்திற்குக் காரணம் அன்பு என்பதும் கூறப்பட்டன.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...