019. புறங்கூறாமை - 06. பிறன்பழி





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "பிறன் ஒருவனைக் காணாத இடத்து, அவனைப் பழித்துக் கூறுகின்றவன், தன்னிடத்திலும் அவ்விதமான குற்றங்கள் உள்ளதை ஆராய்ந்து பின்னர் அவனும் சொல்லுவான் என்பதை உணரவேண்டும்" என்கின்றது.

     தன்னைக் காணாத இடத்தில், பிறன் ஒருவன் தன்னைப் பழித்துக் கூறியதைக் கேட்டு, அவனும் தன் மீது பழியினைக் கூறுவான் என்பதை அறிதல் வேண்டும்.

திருக்குறளைக் காண்போம்...

பிறன் பழி கூறுவான், தன் பழி உள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பிறன் பழி கூறுவான் --- பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்;

     தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறம் உடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.

         ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக் கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

சங்கு அறுக்கும் சாதிசொலும் சங்கரனை, நக்கீரன்
அன்றுபழி சொன்னதுபோல் ஆர்சொல்வார், --- என்றும்
பிறன் பழி கூறுவான், தன் பழி உள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.

இதன் பொருள் ---

     சங்கு அறுக்கும் சாதி சொல்லும் சங்கரனை --- சங்கை அறுக்கின்ற இழிந்த சாதியில் பிறந்தவன் நக்கீரன் என்று பழித்துக் கூறும் சங்கரனை. அன்று --- தருமிக்காகச் சிவபெருமான் புலவராகி வந்த அந்நாளில். சிவனார் நக்கீரரைப் பழித்துக் கூறிய செய்யுளும், அதற்கு மாறாக நக்கீரர் பகர்ந்த பாட்டும் கீழ் வருவனவாகும்...

அங்கம் குலுங்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால் பரப்பிச் --- சங்குஅதனை
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுது என்பவன்.

சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ --- சங்கை
அரிந்து உண்டு வாழ்வோம்,  அரனாரைப் போல்
இரந்து உண்டு வாழ்வது இலை.

         வங்கியசூடாமணி என்னும் பாண்டியன், தன் மனத்தில் கொண்டுள்ள கருத்தை ஒரு செய்யுளில் சொல்லவல்லார் இதனைக் கொள்க என ஒரு பொற்கிழி அமைத்தனன். புலவரால் அவன் கருத்தை அறிய இயலாமல் போகவே, தருமி என்பான், சிவபிரான் பாடிக்கொடுத்த கொங்கு தேர் வாழ்க்கை என்ற செய்யுளை அரசன் முன் கொண்டு சென்று காட்டிக் கிழியை அறுக்கவரும் சமயம், நக்கீரர் அது குற்றமுடைய செய்யுள் என்று கூறிவிட்டார். ஆகவே, சிவபிரான் புலவராகி வந்து நக்கீரரோடு வாதிட்டு, அவரைப் பொற்றாமரையில் வீழ்த்தி, கிழியை தருமிக்கு வழங்கி மறைந்து அருளினார் என்பது திருவிளையாடல் புராண  வரலாறு. 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

குந்திமகார் பேறு உரைத்த கொற்றவனும் தன்வரவும்
சிந்தைசெயாது உற்றான், சிவசிவா! - நிந்தை
பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

இதன் பொருள் ---

     துரியோதனன் தனது பிறப்பியல்பினை எண்ணாது, குந்திதேவியின் மக்களான பாண்டவர்களின் பிறப்பு இயல்பை பழித்துக் கூறினான். பிறரைப் பழி கூறுவதற்கு முன்னர், தன்னிடத்து உள்ள பழியை ஒருவன் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கொற்றவன் --- துரியோதனன். தன்வரவு --- துரியோதனனுடைய பிறப்பியல்பு.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்திருத்தலைக் காணலாம்...

இழுக்கல் இயல்பிற்று இளமை, பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமை,இம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.        ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     இளமை இழுக்கல் இயல்பிற்று --- இளமைப் பருவம், வழுவுதலை இயல்பாக உடையது; பேதைமை பழித்தவை சொல்லுதல் வற்று ஆகும் --- அறியாமை அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளை; - சொல்லுதலில் வல்லதாம், சிறுமை யாண்டும் செறுவொடு நிற்கும் --- ஈனத்தன்மை எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் அறிவு உடையார் குறுகார் --- இம் மூவகையினையும், மேல் விளைவை அறிதலை உடையார் நெருங்கார்.

     இயல்பாக தவறுதல் செய்யும் இயல்பினை உடையது இளமைப் பருவம்;  அறிவு உடையோர் வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார்.

நம்மைப் பிறர்சொல்லும் சொல் இவை, நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே
களைகணது இல்லா தவர்.      ---  அறநெறிச்சாரம்.
     
 இதன் பதவுரை ---

     நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை --- நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை --- நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி --- என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில் --- தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொல் கூறுவராயின் அவரைப் போல், யாரே களைகணது இல்லாதவர் --- பற்றுக் கோடு அற்றவர் பிறர் யார்? ஒருவருமிலர்.


பொல்லாத சொல்லி மறைத்து ஒழுகும் பேதை,தன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும், - நல்லாய்!
மணல்உள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்.    ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     நல்லாய் --- நற்குணம் உடையாய்!, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் --- மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும், தன் வாயால் கெடும் --- தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்து ஒழியும், (அதுபோல) பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை --- தீயனவற்றைக் கூறி ஒளித்து நிற்கும் அறிவிலான், தன் சொல்லாலே தன்னைத் துயர் படுக்கும் --- தான் கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண் அகப்படுத்திக் கொள்வான்.

     புறங்கூறுதலால் தன் இயல்பைத் தானே வெளிப்படுத்திக் கொள்வதால், அது காரணமாக வரும் தீங்கு தன்னால் செய்து கொள்ளப்பட்டமையின், 'தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...