058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்தில் உள்ளது. அது இல்லாதவர் உயிர்வாழ்ந்து கொண்டு இருத்தல் நிலத்திற்குச் சுமை" என்கின்றார் நாயனார்.

உலகநடை என்பது, உயிர்களுக்கு உபகாரம் செய்தல், காப்பாற்றுதல், குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் முதலானவை. நடை என்பது ஒழுக்கம் ஆகும். உலகநடை என்பது உலக ஒழுக்கம். 

கண்ணோட்டம் இல்லாதவர் தனக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பது பற்றி, "நிலக்குப் பொறை" என்றார்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல், அஃது இலார்

உண்மை நிலக்குப் பொறை.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது --- உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; 

அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை --- ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.

(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..


“ஓவில்உழ வன்வேண்ட உக்கிரனார் இந்திரன்கொண்

மூவைவிடு வித்தார், முருகேசா! --- தாவல்இலா

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்

உண்மை நிலக்குப் பொறை.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, ஓவில் உழவன் வேண்ட - ஒழிதலில்லாத வேளாளன் வேண்டிக் கொள்ள, உக்கிரனார் - உக்கிர பாண்டியன், இந்திரன் கொண்மூவை விடுவித்தார் - இந்திரனுடைய மேகங்களைச் சிறையில் இருந்து விடுவித்தார்.  தாவல் இலா - அழிதல் இல்லாத, உலகியல் - உலக நடையானது, கண்ணோட்டத்து உள்ளது - அருளினிடத்திலே உள்ளதாம். அஃது இலார் - கண்ணோட்டமாகிய அருள் இல்லாதவர்கள், உண்மை - நிலவுலகில் இருத்தல், நிலக்குப் பொறை - நிலத்திற்குச் சுமையாகும்.

வேளாளன் வேண்டிக் கொள்ள உக்கிர பாண்டியன் இந்திரனுடைய முகில்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். உலகநடையானது அருளுடைமையோடு விளங்குதலில்தான் உள்ளது. அருளில்லாதவர்கள் உலகத்திலே இருப்பது நிலத்துக்குச் சுமையாகும் என்பதாம்.

                          உக்கிரபாண்டியன் கதை

ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள். சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான். இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான்போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான். பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு மேகங்கள் பொதிய மலைச் சாரலில் மேயக் கண்டு அவைகளைச் சிறையிலிட்டான். இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்புகூர்ந்து மேகங்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான். அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான்.  உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான். இதன் விரிவைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.


No comments:

058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்த...