திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முறைசெய்தலாகிய தமது தொழில் சிதையாமல் கண்ணோட்டம் செய்ய வல்லவர்க்கு, இந்த உலகம் உரிமை உடையதாகும்" என்கின்றார் நாயனார்.
நடுநிலையாக நின்று, நட்பினர், பகைவர், அயலார் என்று எண்ணாது, குற்றம் செய்தவர்களைத் தண்டித்தும், குணம் செய்தவர்களைக் காத்தும் வரவேண்டும். அவ்விதம் செய்யாது, கண்ணோட்டம் வைத்து ஒருவனுக்கு அளவு கடந்த நன்மைகளைச் செய்துவிட்டாலும், குற்றத்திற்காகத் தண்டிக்காவிட்டாலும், "இவன் நடுவுநிலைமை அற்றவன்" என்று, பிறர் அவனை விட்டு நீங்குவார். அவ்வாறு இல்லாமல், கருணை காட்டவேண்டிய இடத்துக் கருணை காட்டியும், தண்டிக்க வேண்டிய இடத்து தக்க வகையில் தண்டித்தும் ஒழுகுதல் வேண்டும்.
இதற்குத் திருக்குறள்...
கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,
உரிமை உடைத்து இவ் உலகு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு --- முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு;
உரிமை உடைத்து இவ்வுலகு --- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல், மேல் 'ஓர்ந்து கண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“வாணன் இருகரமும் வைத்துப் பணிகருதி
நாதன் அறுப்பித்தரும் நன்னயத்தைப் போலக்
கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,
உரிமை உடைத்து இவ் உலகு.”
இதன் பொருளி ---
மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வனாகிய வாணன் என்னும் வாணாசுரன் சிவபெருமானைப் பூசித்து மிகுந்த வலிமை பெற்று, அவரைத் தன் கோட்டைக்குக் காவலாக வைத்து, வலிமையில் தனக்கு ஒப்பார் எவருமில்லை என்று செருக்குற்று இருந்தான். ஒருசமயம் தன் மகள் உஷையின் காரணமாகக் கண்ணபிரானுடைய பேரன் அநிருத்தன் வாணன் ஊர்க்குக் கொண்டு வரப்பெற, அவன் வாணனால் சிறை வைக்கப்பட்டான். இதனை அறிந்த கண்ணபிரான், வாணன் ஊர் வந்து, சிவபிரானை வழிபட்டு உள்ளே நுழைந்து வாணனுடைய ஆயிரம் கைகளுள், சிவனைப் பூசித்துவரும் இரண்டினை வைத்து, எஞ்சியவற்றைக் களைந்து மீண்டார். பிறகு வாணன், திருக்கயிலையில் சிவபிரானுக்கு மத்தளம் கொட்டும் பணியைப் பூண்டான் என்பது வரலாறு.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“முப்புரத்தை நீறு ஆக்கி, மூவரையும் காத்தநலம்
செப்ப முடியாதே, சிவசிவா! --- ஒப்பில்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் உலகு.”
முப்புரம் - மூன்று கோட்டைகள், இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய வானத்து இயங்கும் கோட்டைகள். சிவபெருமான் அவற்றை நகைத்து எரித்தருளினர். முப்புரங்களையும் எரித்து அழிக்கும் கருமமானது, சிதையாமல்படிக்கு, அவற்றை அழித்து, அங்கே சிவபூசையைக் கைவிடாத மூவரையும் காத்தனர்.
No comments:
Post a Comment