058. கண்ணோட்டம் - 07. கண்ணோட்டம் இல்லவர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "கண்ணோட்டம் என்பது இல்லாவதர் கண் என்பதும் இல்லாதவர். கண் உடையவர் என்பவர் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடரே ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர், கண் உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; 

கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.

(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கண்இல் கயவர் கருத்து உணர்ந்து, கைமிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்

எண்ணி இடர்வரும் என்னார், புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.        --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கண்ணில் கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து, கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் - செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) எண்ணி இடர் வரும் என்னார் - துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, புலிமுகத்து உண்ணி பறித்துவிடல் - இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்து விடுதலோடு ஒக்கும்.


கண்ணோட்டம் இல்லாத தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக் கொள்ளுதலாக முடியும். புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றே தீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


No comments:

மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...