மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு,

ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான்

சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்,

நாவகமே நாடின் நகை.”          -- சிறுபஞ்சமூலம்


பழிப்புக்கு இடமாகிய செயல்களுக்கு நாணம் இல்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட நல்ல விரதமும், தனக்கே உண்பொருள் இல்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமை இல்லாதவனது வீரத் தொழிலும், செந்தமிழில் தன் மனதைத் தெளியச் செய்யாதவன் பாட்டுக்களைச் செய்தலும், ஆராய்ந்து பார்த்தால் சிரிப்புக்கு இடமாகும்.


சால்பு என்பது சான்றாண்மை ஆகும். அது நல்ல குணங்களைப் கடைப்பிடித்தல் ஆகும். பழிப்புக்கும் பாவத்துக்கும் இடம் தரும் செயல்களைச் செய்வதற்கு நாணப்படுதல் சிறந்த பண்பு ஆகும். அது ஞான்றோர்களுக்குச் சிறந்த அணிகலம் ஆகும். “அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல் பிணி அன்றோ பீடு நடை” எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க. 


நடை என்பது நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நல்லொழுக்கம் இல்லாத ஒருவன் விரதம் மேற்கொள்வது நகைப்புக்கு இடமாகவே முடியும். விரதம் மேற்கொண்டு இறையருளைப் பெற எண்ணுபவன், தன்னிடத்து உள்ள தீய குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.


சேவகம் என்னும் சொல்லுக்கு வீரம் என்றும் பொருள் உண்டு. ஏண் என்னும் சொல்லுக்கு, திண்மை, வலிமை என்று பொருள். உள்ளத் திண்மையும் உடல் வலிமையும் இல்லாதவன் சேவகம் செந்வது நகைப்புக்கு இடம் ஆகும் என்றார்.


No comments:

மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...