திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர்" என்கின்றார் நாயனார்.
தம்மோடு பழகியவர் தமக்கு விடத்தையே கலந்து உண்ணச் செய்தாலும், தாம் சாதற்கு அது இடமாகும் என்று அறிந்து இருந்தும், அவரிடத்தே உள்ள அன்பின் மிகுதியால், "நீர் நஞ்சு வைத்தீர்" என்று கூறாமலும், தாம் இறப்பதை எண்ணாமலும், அவர் கொடுத்த நஞ்சை உண்டு, பின்னும் அன்போடு பழகுவர். எல்லோராலும் விரும்பத்தக்க கண்ணோட்டம் என்னும் நற்பண்பினை உடையவர் இவர் ஆவர்.
இதற்குத் திருக்குறள்...
பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் --- பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்;
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் --- யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"செயத்தக்க பாவத்தினும் மேல்செய்தேனைத் திருவருள்கூர்ந்து
உயத் தக்கவாறு செய்யாய், பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனப் புகன்றார்
பயத்தக் கராசலங் காத்து அருள் புல்லைப் பதிக்கொண்டலே".
இதன் பொருள் ---
பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர் என்று திருவள்ளுவ நாயனார் சொன்னார். எனவே, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள முகில்வண்ணனே! ஆதிமூலமே என்ற யானைக்கு அபயம் தந்த காத்தவனே! செய்யக்கூடிய பாவத்தினை விடவும் மேலான பாவத்தைப் புரிந்து என் மீது திருவருள் வைத்து, பிழைக்க வைத்து அருள்வாய்
மேற்செய்தேனை - மிகுதியாகச் செய்த என்னை. திருவருள் கூர்ந்து - திருவருள் பொருந்தி. உயத் தக்கவாறு - பிழைக்கத் தக்கபடி. பயத்த - அச்சத்தை அடைந்த. கராசலம் - ஆதிமூலமே என்ற யானை. (கரம் – கை. இங்கே துதிக்கை குறித்தது. அசலம் – மலை. துதிக்கையினை உடைய மலை. அது நானை) புல்லைப் பதிக் கொண்டல் - திருப்புல்லாணியில் எழுந்தருளிய முகில்வண்ணன்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்,
அஞ்சில் ஓதி என் தோழி தோள்துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ
என்கண் ஓடி அளிமதி,
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே.” --- நற்றிணை.
இதன் பொருள் ---
நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டம் உடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீவிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்சு எனக் கண்டு வைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் --- நீ அத்தகைய நட்புடையனாய் இருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயே ஆயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்.
நாகரிகர் - கண்ணோட்டம் உடையவர்.
“செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார்
நயத்தகு நாகரிகம் என்ஆம்? - செயிர்த்து உரைப்பின்
நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்
எஞ்சாது எடுத்து உரைக்கல் பாற்று.” --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
செயக்கடவ அல்லனவும் செய்தும்மன் - செய்தற்கரிய செயல்களையும் மிகுதியும் செய்து முடிப்போம், என்பார் - (என்று செயலில் காட்டாது) சொல்லளவில் சொல்லி நிற்பாரின், நயத்தகு நாகரிகம் என்ஆம் - முகமனான கண்ணோட்டம் என்ன பயனைத் தரும்? (இச் செய்கை) செயிர்த்து உரைப்பின் - ஒருவரைக் கோபித்துச் சொன்னால், நெஞ்சு நோம் என்று - அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல் - அவர் தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - அது கூசாமல் கூறுந்தன்மையதாகும்.
தன்னை வந்து அடுத்துத் தன் உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவில் சொல்லிச் செயலில் அவ்வாறு செய்யாது ஒழிவது நாகரிகமாகாது.
No comments:
Post a Comment