018. வெஃகாமை - 09. அறனறிந்து





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகராத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "இதுவே அறம் என்ற அறிந்து, பிறர் பொருளைக் கவர விரும்பாத நல்லறிவு உடையவரை, திருமகள் தான் சேரும் வகையை அறிந்து, அவனிடம் சென்று அடைவாள்" என்கின்றது.

     சேரும் வகை என்றது இடம், காலம், தக்க சமயம் முதலாயினவற்றை.

     திருமகள் என்றது அவள் உடைய பெருஞ்செல்வத்தை.

திருக்குறளைக் காண்போம்...

அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்,
திறன் அறிந்து ஆங்கே திரு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் --- இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை;

     திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் --- திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.

       (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.     ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     சிறந்தார் பின் ஆயினும் --- தன்னை நேசிப்பவர்கள் இடத்தில் ஆயினும், நல்வினைப் பின் அல்லால் --- நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே அல்லாமல், நறும் தாமரையாளும் --- நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள் --- செல்லாள், நல்வினை --- அந் நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி --- கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல் --- எக்காலத்தும் நீங்குதல் இல்லை.


தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாள்ஊன்றி - எய்த்தும்
அறங்கடையில் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடையது ஆகும் பொருள்.   ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே --- தத்தமக்கு உரிய நிலைமையிலும் குலவொழுக்கத்திலும் வழுவாது, ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி --- இயைந்த முறையில் முயற்சி செய்து, எய்த்தும் அறம் கடையில் செல்லார் --- மறந்தும் பாவநெறியில் செல்லாமல், பிறன் பொருளும் வெஃகார் --- பிறனுடைய பொருளையும் விரும்பாதவருடைய, புறங்கடையது ஆகும் பொருள் --- தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து கைகூடும்.

     குலவொழுக்கம் குன்றாமலும், பிறன் பொருள்மேல் ஆசை வையாமலும், தம்முயற்சியால் பொருள் தேடுவார்க்கு அவர் அறநெறி கண்டு அகமகிழ்ச்சி கொள்ளும் அறக்கடவுள், அன்னார் புறங்கடையில் எளிதில் பொருள் குவிப்பார்.

நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தான்.   ---  நல்வழி.

இதன் பதவுரை ---

     சிவந்த தாமரையாள் --- செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு --- வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் --- நீர் வளத்தையும், நிழலும் --- நிழல் வளத்தையும், நிலம் பொதியும் நெல் கட்டும் --- நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் --- பேரையும், புகழும் --- கீர்த்தியையும், பெரு வாழ்வும் --- பெரிய வாழ்வையும், ஊரும் --- கிராமத்தையும், வரும் திருவும் --- வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும் --- நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் --- எந்நாளும் கொடுத்தருளுவள்.


நயவேன் பிறர்பொருளை, நள்ளேன் கீழோரொடு,
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் --- வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்,
வருமாறு என் நம்மேல் வினை.     ---  பொய்கை ஆழ்வார்.

இதன் பொழிப்புரை ---

பிறர் பொருளை விரும்பேன். கீழ்மக்களோடு சேர மாட்டேன். உயர்ந்தவர்கள் அல்லாதாரோடு பொருந்தி இரேன். திருமாலைத் தவிரப் பிறதெய்வங்களைத் தெய்வமாகக் கருதி வழிபடமாட்டேன். இவ்வாறா, எனக்கு மேல் வினை உண்டாவது எவ்வாறு. 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...