017. அழுக்காறாமை - 03. அறனாக்கம்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்
அதிகாரம் 17 - அழுக்காறாமை

     அழுக்காறு என்னும் சொல், அழுக்கு ஆறு (வழி) என இரண்டு சொற்களால் ஆனது என்றாலும், அதனை ஒரு சொல்லாகவே கொண்டு, அழுக்காறு என்றனர். அழுக்காறு என்பது சொல்லால், உடன்பாடாகத் தோன்றினும், பொருளால் எதிர்மறை ஆகி நின்று அழுக்கைத் தவிர்த்தலை உணர்த்தி நின்றது. அழுக்கு வழியில் செல்லாமல் இருத்தலை உணர்த்தியது. அழுக்காறு என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ளாத தீய குணம் ஆகும்.. அழுக்காறாமை என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தீய குணத்தை விடுதல் என்பது ஆகும். பொறாமைப் படாமை.  பொறுத்துலுக்கு மறுதலை ஆனது இது, என்பதால் பொறை உடைமையின் பின், பொறாமைப் படாமை வைக்கப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான், பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.                     

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் --- மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்;

     பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் --- பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.

       ('அழுக்கறுத்தல்'  எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்.,

மாங்கனி வாயில் கவ்வி
     மரத்திடை இருக்கும் மந்தி
பாங்கர் நீர் நிழலை வேறோர்
         பழம் உணும் குரங்கு என்று எண்ணித்
தாங்க அரும் அவாவில் தாவிச்
         சலத்திடை இறந்தது ஒப்ப,
நீங்க அரும் பொறாமை உள்ளோர்
         நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே.     --- நீதிநூல்.

 இதன் பொழிப்புரை --- 

     குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடடைவார்கள்.


தாரணியில் எவரேனும் துயர் உறில், ன்
          தலையின் முடி தரித்தது ஒப்பாம்,
சீரணியுஞ் செல்வம் அவர் படைத்திடில் தன்
          தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,
காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்
          தன்வலியால் கணத்துக்கு உள்ளே
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமை உளோன்
          அன்றி, வர் புவியின் கண்ணே.     ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

     பிறர் வாழ மனம் பொறுக்காத் தீயோருக்கு உலகில் யார் துன்புறினும் தம் தலையில் முடி சூடியது ஒப்பாம். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்த தொப்பாம். இப்படி ஒரு காரணமுமின்றி நொடிப்பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வன்மை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

ஆண்டு எலாம்பிறர் ஆக்கம் நோக்கியே
மீண்டு மீண்டு நெட்டுயிர்ப்பு வீங்கினும்
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கைமிசை
ஈண்டுச் சேருமோ? இதயமே! சொலாய்.   ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

     ஆண்டு முழுவதும் பிறர் வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டு வயிறு பொருமினாலும், அவ்வாழ்வு அவரை விட்டு விலகி, உனது கைக்கு வந்து சேராது; நெஞ்சமே இதைக் கருதிப்பார்.

         ஆக்கம் --- செல்வம்; வாழ்வு. நெட்டுயிர்ப்பு --- பெருமூச்சு. வீங்கினும் --- பொருமினாலும்.
        
        
மக்கள் பலர் உளார் மகி விசாலமாம்
பக்கம் அவர்தினம் படைப்பர் ஓர்நலம்
ஒக்க அதுபொறாது, ள்ளம் நைந்திடில்
துக்கம் ஓயுமோ? சொல் என் நெஞ்சமே.    ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

     உலகம் பெரும் பரப்பினை உடையது. அப்பரப்புக்கு ஏற்றவாறு மக்களும் பலர் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நலம் பெறுவர். அவற்றையெலாம் கண்டு மனம் பொறாது உள்ளம் இடிந்தால் அத்துன்பம் என்று முடியும்? நெஞ்சமே நீ சொல்.
        
         மகி --- உலகம். விசாலம் --- பரப்பு. நைந்திடில் --- இடிந்தால் ஓயும் --- என்று முடியும்?
        
        
நிறையும் நீர்க்கு அசைவு இல்லை, நீணிலத்து
அரையும் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறை உளார்க்கு அலால் கோதின் மண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை இல்லையே.        ---  நீதிநூல்.
        

 இதன் பொழிப்புரை ---

     கலம் நிறைய நீர் இருப்பின் அந்நீர் அசைந்து ஓசையிடாது. உலகத்துக் கல்வி யறிவினால் மேன்மையுற்றோர் பொறாமை கொள்ளார். அவற்றால் குறையுடையவரே பொறாமை கொள்வர்.

         அவ்வியம் --- பொறாமை.
        
அறம் உளார்கள்போல் அறிஞர் போல்புகழ்
பெற வருந்துதல் பெருமை ஆயினும்,
புறம்  உளார்கள்போல் பொருள் இலேம் என
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே. ---  நீதிநூல்.
        
 இதன் பொழிப்புரை ---

     நன்மை உள்ளவர்களையும் அறிவு உள்ளவர்களையும் போல் இசை உண்டாகப் பாடுபடுதல் மேன்மை. ஆனால் பிறரைப் போலப் பொருள் இல்லையே என்று பொறாமை கொண்டு வருந்தும் வருத்தம் பெருந் துன்பம் தரும்.

         புகழ் --- இசை. புறமுளார் --- பிறர். பொருள்-பணம். உறுகண் --- வருத்தம். உறுகண் --- பெருந்துன்பம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...