022. ஒப்புரவு அறிதல் - 03. புத்தேள் உலகத்தும்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "தேவர் உலகத்திலும், இந்த உலகத்திலும், உலக நடை அறிந்து  செய்யும் உபகாரம் போல் நல்ல செயல்களைக் காணல் அரிது" என்கின்றது.

     கொடுப்பாரும் கொள்வாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராய் இருக்கும் தேவலோகத்தில் ஒப்புரவு செய்தல் இல்லை. ஆதலால் ஒப்புரவைப் போன்றதொரு சிறந்த நல்லறத்தை அங்குக் காண முடியாது.

திருக்குறளைக் காண்போம்...

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே,
ஒப்புரவின் நல்ல பிற.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்,

     ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவு போல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.

       ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர்.)


நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்.
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்னிழல் பிறந்து நின்னிழல் வளர்ந்த
எம்மளவு எவனோ மற்றே, இன்னிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையில் கையறவு உடைத்து....    ---  புறநானூறு.

இதன் பதவுரை ---

     நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ --- நீ சினந்து நோக்கிய இடம் செந்நெருப்பில் எரியும்; நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப --- நீ விரும்பிப் பார்க்குமிடத்தில் மகிழ்ச்சி பொன் பல மலரும்; செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் --- செஞ்ஞாயிற்றின் கண்ணே சூடு தணிந்து குளிர்ந்த நிலவு ஒளொ உண்டாக வேண்டினும்; வெண் திங்களுள் வெயில் வேண்டினும் --- வெளிய திங்கள் சூடு பரந்து வெயில் உண்டாக வேண்டினும்; வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் --- நீ வேண்டிய வேண்டியவாறே பொருளை உண்டாக்கும் வலிமையை உடையவன் நீ ஆகலின்; நின் நிழல் பிறந்து --- நினது கொடை நிழலில் பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ --- உனது கொடை நிழலிலேயே வளர்ந்த நாம் உம்மை நினைவு கூர்வோம் என்பதைச் சொல்ல வேண்டுமோ; இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் --- இனிய நிலையை உடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும்; செய் வினை மருங்கின் எய்தல்  அல்லதை --- தாம் செய்த நல்வினையால் உள்ள இன்பத்தினைப் பொருந்துவது அல்லது; உடையோர் ஈதலும் --- செல்வம் உடையோர் வறியோர்க்கு வழங்குதலும்; இல்லோர் இரத்தலும் - வறியோர் செல்வம் உடையோர்பால் சென்று இரத்தலும்; கடவ தன்மையின் --- ஆண்டுச் செய்யக்கடவது அல்லாமையான்; கையற வுடைத்து --- அது செயலறவு உடைத்து....


ஒப்புரவு அறிதலில் தகுவரவு இல்லை.    ---  முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     ஒப்புவு அறிதலின் --- செய்யக்கடவனவற்றைச் செய்வது போல், தகுவரவு --- தக்க செய்கை, இல்லை --- வேறில்லை.

       ஒப்புரவு - உலகநடை, ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து செய்தல். உலகநடை தர்ம சாஸ்திரங்களில் கூறப்படுவதின்றி, அவரவர் தாமே அறிந்து செய்யும் தன்மையது. ஆதலால் ஒப்புரவு என்பது அவரவர் தவிர்க்கலாகாமல் செய்யக்கடவனவான செய்கைகள் என்கிற பொருள் பெற்றிருக்கிறது.

வெள்ளை மகன்போல் விலாஇற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்,
ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்து இருத்தல்
காண்தகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறஞ்செய் மாக்கள், புறங்காத்து ஓம்புநர்,
நல் தவம் செய்வோர், பற்று அற முயல்வோர்,
யாவரும் இல்லாத் தேவர்கள் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே!
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்
திருந்துமுகம் காட்டும் என் தெய்வக் கடிஞை,    
உண்டி கொல்லோ, உடுப்பன கொல்லோ,
பெண்டிர் கொல்லோ, பேணுநர் கொல்லோ,
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கேரன் என்றலும்...
                              --- மணிமேகலை, பாத்திர மரபு கூறிய காதை.

இதன் பதவுரை ---

     வெள்ளை மகன்போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்துரை செய்வோன் --- விரகு இல்லா மகனைப்போல விலா வெடிக்குமாறு சிரித்து இகழ்ச்சி உடையனாய்ப் போம் என்று எடுத்துக் கூறுகின்றவன், ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது --- காணத்தக்க அழகின் சிறப்பினை உடைய நும் கடவுளர் இவ் உலகிற்செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்திருத்தல் அல்லது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் --- அறம் புரியும் மக்களின் எளிய உயிர்களைப் பாதுகாப்போர், நற்றவம் செய்வோர் பற்று அற முயல்வோர் --- நல்ல தவங்களைச் செய்கின்றோர் பற்றுக்களை அறுத்தற்கு முயற்சி செய்வோர் ஆகியவருள், யாவரும் இல்லாத் தேவர் நன்னாட்டுக்கு - ஒருவரும் இல்லாத விண்ணவர் உலகிற்கு, இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே --- தலைவனாகிய பெருவலியுடைய தேவர்கோனே! வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை --- எனது கடவுட் கடிஞை (அட்சய பாத்திரம்) வருத்தத்துடன் வந்தோரது பொறுத்தற்கரிய பசியை நீக்கி அவர் இனிய முகத்தை யான் காணுமாறு காட்டும், உண்டிகொல்லோ உடுப்பன கொல்லோ --- உண்பனவோ உடுப்பனவோ, பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ --- மகளிரோ வேறு விரும்புவோரோ, யாவை ஈங்கு அளிப்பன தேவர் கோன் என்றலும் --- விண்ணவர் தலைவனே நீ இப்பொழுது எமக்கு அளிப்பன யாவை என்றுரைத்தலும்;

     தேவர் உலகத்தில் அறம் செய்தல் இல்லை.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...