019. புறங்கூறாமை - 10. ஏதிலார் குற்றம்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "புறங்கூறுவதை இயல்பாக உடையவன், அது செய்தற்கு, அயலாரது குற்றத்தைக் காண்பது போல, தனது குற்றத்தையும் காண வல்லவரானால், உலக உயிர்களுக்குத் தீது உண்டாகாது" என்கின்றது.

திருக்குளைக் காண்போம்....

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்,
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் --- ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்;

     மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
        
         [நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்.       ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தம் குற்றம் நீக்கிலர் ஆகி --- (அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி, பிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப் புகுதல் --- பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், வியன் உலகில் எங்கும் --- அகன்ற உலகின்கண் எவ்விடத்தும், வெள்ளாடு தன் வளி தீராது அயல் வளி தீர்த்துவிடல் --- வெள்ளாடு தனது வாதத்தால் உண்டான நோயைத் தீர்க்காது, பிற உயிர்களுக்கு வாதத்தால் வரும் நோயைத் தீர்த்து விடுதலோடு ஒக்கும்.

         ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களைய முற்படுதல் வேண்டும்.

         மழைக்காலங்களில் வீசும் சாரல் காற்றுக்கு ஆற்றாது, ஆடுகள் நோய்வாய்ப் புகுதலின், சாரல் காற்றால் உண்டாகும் நோய் தன் வளி எனப்பட்டது.

கணமலை நன்னாட! கண் இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால், குணன்அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     கண மலை நல் நாட ---கூ ட்டமான மலைகளை உடைய உயர்ந்த நாடனே!. கண் இன்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிது --- புறத்தில் ஒருவரது நல்லியல்பினையும் பேசுதற்கு அருமையாய் இருக்கும் என்ப;  குணன் அழுங்கக் குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா --- ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாத குற்றங்களை அவர் எதிரிலிருந்து செய்ததாகக் கூறும் மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால் உருவானதோ, அறிகிலேம்.

         புறத்திற் குறை கூறாது குணங்கூறுதல் தகும் என்றாலும், அதனையும் காரணம் இல்லாமல் கூறச் சான்றோர் கூசுவர்; அப்படி இருக்க, காரணமின்றியே அதுவும் குற்றத்தை, இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்து உரைத்துப் பழிப்பதாயின் அதனை என்னென்பது என்றபடி.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...