35. துறவிக்கு வேந்தன் துரும்பு


“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்

     பொன்னிவளம் செழித்த நாட்டில்,

குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்

     களும்பொருளாக் குறித்தி டாமல்,

மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்

     பிள்ளையும்சேர் மகிமை யாலே,

துறவறமே பெரிதாகும்! துறவிக்கு

     வேந்தன் ஒரு துரும்பு தானே.”


இதன் பொருள் —


சிறுபிறை  துன்னிய  சடையார்  தண்டலை  சூழ் பொன்னி  வளம் செழித்த நாட்டில் - சிறுபிறைச் சந்திரன் பொருந்திய திருச்சடையினை உடைய சிவபரம்பொருள் எழுந்தருளி இருக்கும்  திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த காவிரி  வளம் கொழிக்கும் நாட்டினில், குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும் மக்களும் பொருளாக்  குறித்திடாமல் - குறைவற்ற பெரிய வாழ்வும் மனைவியும்  மக்களும்  பொருளாக  நினையாமல்,  மறைபயில் பத்திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும் சேர் மகிமையாலே - வேதங்களைப் பயின் பத்திரகிரியாரும் பட்டினத்து அடிகளாரும் சேர்ந்த பெருமையினால், துறவறமே  பெரிது  ஆகும் - துறவறமே சிறப்புடையதாகும்! துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே - துறவிக்கு மன்னன் ஒரு துரும்பைப் போன்றவனே.

‘துறவிக்கு வேந்தன் துரும்பு' என்பது பழமொழி.

கொடைப்பண்பு பொருந்தி உள்ள ஒருவன் பொன்னைத் துரும்பாகவே மதிப்பான். இல்லை வந்தோர்க்கும், பிறர்க்கும் அதனை வரையாது வழங்குவதில் மகிழ்வான். தனக்கெனக் குவித்து வைக்க விரும்பமாட்டான். உயிர் பலருக்கும் பெரிதாகத் தோன்றும். வீரன் ஒருவனுக்கோ, தன் நாட்டுக்காகப் போர்க்களத்தில் மடிவது எளிதானதாகத் தோன்றும். அறநெறியில் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சேரக் கருதுபவர்கள், இறைவழிபாட்டிலேயே இன்பத்தை அடைவார்கள். அவர்களுக்கு உலக இன்பம் ஒரு பொருட்டல்ல. அழகிய பெண்களைக் கண்டால் அவர்கள் மதி மயக்கம் கொள்வதில்லை. புலன்களை ஒடுக்கித் தவநெறி பூண்ட துறவியர் வேந்தனையும் ஒரு துரும்பாகவே கருதுவர். அதிகார வர்க்கத்திடம் அவர்கட்கு அச்சம் இல்லை. காரணம் அவர்க்கு விருப்பும் வெறுப்பும் இல்லை. எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை. முற்றத் துறந்த துறவோர்கள் வேந்தனையும் துரும்பாகக் கருதுகிற மனபரிபக்குவ நிலையினை உடையவர்களாக இருக்கிறார்கள். இக் கருத்தில் அமைந்த ஔவையார் பாடல் ஒன்று உண்டு.

“போந்த உதாரனுக்குப் பொன்துரும்பு, சூரனுக்குச்


சேர்ந்த மரணம் சிறுதுரும்பு, - ஆய்ந்த


அறவோர்க்கு நாரியரும் துரும்பாம், இல்லத்


துறவோர்க்கு வேந்தன் துரும்பு.”

"ஈகைக் குணத்தோடு பிறந்தவனுக்குப் பொன்னும், மரணத்தைப் பொருட்படுத்தாத வீரனுக்கு மரணமும், ஆய்ந்து தெளிந்த அறவோர்களுக்குப் பெண் மயக்கமும், பற்றற்ற துறவியர்க்கு வேந்தனின் செல்வமும் செல்வாக்கும் துரும்பாகவே தோன்றும்" என்பது பொருள்.

“கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்;

ஒடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்;

கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி,

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.”

பெரியபுராணத்தில் அடியார்களின் பெருமை குறித்துத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி இருத்தலைக் காண்க. அப்பர் பெருமான் திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் உழவாரத் தொருத்தொண்டு செய்துகொண்டு இருந்த நாளில், உழவாரப் படை பட்ட இடத்தில் பொன்னும் மணியும் கிடைப்பதைக் கண்டார். அவற்ற் எல்லாம் உரள் பருக்கு எனக் கொண்டு வாரி வீசி எறிந்தார். “புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடு இல்லா நிலைமை  துணிந்திருந்த நல்லோர்” எனப் பெரியபுராணம் போற்றும்.


“பணத்திலே சிறிதும் ஆசைஒன்று இல்லை,நான்  படைத்தஅப் பணங்களைப் பலகால்

கிணற்றிலே எறிந்தேன், குளத்திலும் எறிந்தேன், கேணியில் எறிந்தனன், எந்தாய்!

குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன், கொடுக்கின்றேன் பிறர்க்கே,

கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன், இனிச்சொல்வ தென்னே.”


என்று வள்ளல்பெருமானார் பாடிய திருவருட்பாவையும் காண்க.

84. காரிய சாதனை

 



வேங்கைகள் பதுங்குதலும், மாமுகில் ஒதுங்குதலும்,

     விரிசிலை குனிந்திடுதலும்,

மேடம தகன்றிடலும், யானைகள் ஒடுங்குதலும்,

     வெள்விடைகள் துள்ளிவிழலும்,


மூங்கில்கள் வணங்குதலும், மேலவர் இணங்குதலும்,

     முனிவர்கள் நயந்துகொளலும்,

முதிர்படை ஒதுங்குதலும், வினையர்கள் அடங்குதலும்,

     முதலினர் பயந்திடுதலும்,


ஆங்கரவு சாய்குதலும், மகிழ்மலர் உலர்ந்திடலும்,

     ஆயர்குழல் சூடுபடலும்,

அம்புவியில் இவைகா ரியங்களுக் கல்லாமல்,

     அதனால் இளைப்புவருமோ?


மாங்கனிக் காவரனை வலமது புரிந்துவளர்

     மதகரிக் கிளையமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!”


இதன் பொருள் —-

மாங்கனிக்கா அரனை வலமது புரிந்து,வளர் மதகரிக்கு இளைய முருகா! - மாம்பழத்தை வேண்டிச் சிவபெருமானை வலம் வந்து வாழும் யானைமுகத்தவருக்குத் தம்பியான முருகப் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


வேங்கைகள் பதுங்குதலும் - புலிகள் பதுங்கி (ஒளிந்து) இருத்தலும், மாமுகில் ஒதுங்குதலும் - பெரிய மேகக்கூட்டங்கள் விலகுவதும், விரிசிலை குனிந்திடுதலும் - நீண்ட வில் வளைதலும், மேடமது அகன்றிடலும் - ஆட்டுக்கடாக்கள் பின்வாங்கிச் செல்லுதலும், யானைகள் ஒடுங்குதலும் - யானைகள் அடங்கலும், வெள்விடைகள் துள்ளிவிழலும் - வெண்மையான காளைகள் துள்ளுதலும், மூங்கில்கள் வணங்குதலும் - மூங்கில்கள் வளைதலும், மேலவர் இணங்குதலும் - பெரியோர்கள் ஒத்துப்போதலும், முனிவர்கள் நயந்துகொளலும் - முனிவர்கள் (வெறுப்புக் காட்டாமல்) அன்பு காட்டலும், முதிர்படை ஒதுங்குதலும் - வலிமையில் முற்றிய சேனை விலகிச் செல்லுதலும், வினையர்கள் அடங்குதலும் - இடையூறு செய்வோர் அமைதியாதலும், முதலினர் பயந்திடுதலும் - தலைவர்கள் அஞ்சுதலும், ஆங்கு அரவு சாய்குதலும் - பாம்பு அடங்குதலும், மகிழ்மலர் உலர்ந்திடலும் - மகிழம்பூ வாடுவதும், ஆயர் குழல் சூடுபடலும் - இடையரின் புல்லாங்குழல் சுடப்படுவதும், இவை காரியங்களுக்கு அல்லாமல் - இவைகளெல்லாம் (பிற்காலத்திற்) காரிய சாதனைக்கே அல்லாமல், அம்புவியில் அதனால் இளைப்பு வருமோ? - உலகில் இச்செயலால் தாழ்வு உண்டாகுமோ?

35. துறவிக்கு வேந்தன் துரும்பு

“சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்      பொன்னிவளம் செழித்த நாட்டில், குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்      களும்பொருளாக் குறித்தி டாமல்...