சி”றியவராம் முழுமூடர் துரைத்தனமாய்
உலகாளத் திறம்பெற் றாலும்,
அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்
உடையோர்கள் ஆக மாட்டார்;
மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா
ரே! சொன்னேன், வாரி வாரிக்
குறுணிமைதான் இட்டாலும் குறிவடிவம்
கண்ணாகிக் குணம்கொ டாதே!
இதன்பொருள் ---
மறிதரும் மான் மழு ஏந்தும் தண்டலையாரே - மறித்து நோக்கும் மானையும் மழுவையும் ஏந்தியவரே? திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளே!
வாரிவாரிக் குறுணி மைதான் இட்டாலும் குறிவடிவம் கண் ஆகிக் குணம் கொடாதே – குறுணி அளவு மையை வாரிவாரித் தடவினாலும் கண்போன்று எழுதிய ஓவியம், உண்மையில் கண் ஆகி நலம் தராது, (அதுபோல),சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய் உலகு ஆளத் திறம் பெற்றாலும் - அற்பராகிய முழுமூடர்கள் அரசியலில் கலந்து நாட்டை ஆளும் திறத்தை அடைந்தாலும், அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமும் உடையோர்கள் ஆகமாட்டார் - அறிவுடையவரைப் போல நற்பண்பு உடையவர்களாக மாட்டார்கள்.