அரிமந் திரம்புகுந்தால் ஆனை மருப்பும்
பெருகுஒளிசேர் முத்தும் பெறலாம், - நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்
தோலும்அல்லால் வேறும்உண்டோ சொல்.
சிங்கத்தின் குகையிலே புகுந்தால் அங்கே மற்ற மற்ற விரும்பப் படாத பொருள்கள் இருக்குமாயினும், அங்கே யானையின் தந்தமும், அதினின்றும் மிக்க ஒளி பொருந்திய முத்தும் கிடைக்கப் பெறலாம். நரியின் குழியிலோ, அறுந்த வால்களும், சிறிய மயிர்களும், உடைந்த எலும்பும், கழுதையின் தோலும் ஆகிய இவ்வகையான தாழ்ந்த பொருள்களை அல்லாமல், வேறு உயர்ந்த பொருள்கள் எவையேனும் கிடைக்குமா, சொல்வாயாக.
(அரி - சிங்கம். மந்திரம் - குகை. மருப்பு - கொம்பு. நுழை - குழி. கர்த்தபம் - கழுதை.)
உயர்வு பெற விரும்பினால் உயர்ந்தோரிடமே சேர வேண்டும் என்பது கருத்து.