54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

 



“கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;

    செங்கோலிற் கடல்சூழ் வையம்

புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,

    நரகமில்லை; பொய்யி தன்றால்;

உரப்பார்க்கு நலம்புரியும் தண்டலையா

    ரே! சொன்னேன்! ஒருமை யாக

இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ?

    ஒருக்காலும் இல்லை தானே!»


இதன் பொருள் ---

        உரப்பார்க்கு  நலம் புரியும்  தண்டலையாரே - மெய்யறிவாளிகட்கு நன்மை அருளும் திருத் தண்டலை இறைவரே! ஒருமையாக இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சம் உண்டோ - ஒருதலையாகப் பிச்சை எடுப்போர்க்கு வெறும் சோற்றுக்கும் பஞ்சமா?, ஒருக்காலும் இல்லை - எப்போதும் இராது, (அதுபோல), கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை – உள்ளத்திலே ஒன்றும் வெளியிலே ஒன்றுமாக வாழும் வஞ்சகர்க்கு நல்ல கதியானது கிடைப்பதில்லை. கடல்சூழ்  வையம்  செங்கோலின்  புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கம் அல்லால் நரகம்  இல்லை - கடலால்  சூழப்பட்ட உலகத்திலே செங்கோலு முறையால் ஆட்சி செய்வார்க்கு இறுதியிலே சுவர்க்கம் வாய்க்குமே அல்லாமல், நரகம் வாய்க்காது. இது பொய் அன்று - இது பொய் அல்ல.

      ‘இரப்பாள் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?' என்பது பழமொழி. பிச்சை எடுக்கப் புகுந்தவருக்கு வெண்சோறு நிச்சயமாகக் கிடைக்கும். அதுபோல, உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றுமாக வஞ்சகமாக வாழ்வோருக்கும், கொடுங்கோல் அரசு புரிவோருக்கும் நரகம் நிச்சயம் உண்டு என்பது சொல்லப்பட்டது.

     "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு" என்பது, ஆத்திசூடி என்னும் நூலில் மூன்றாவதாக ஔவைப் பிராட்டியார் கூறும் நல்லுரை, “இயல்வது கரவேல்” என்பது.  (கரத்தல் --- கொடுக்காது இருத்தல்,  ஒளித்தல்,  மறைவு,  வஞ்சனை,  களவு, பொய்.)

        பிறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் வளர்ச்சி உண்டு. உடம்பு நாளாக நாளாக வளருகின்றது. மனிதனுக்கும் அப்படித்தான். ஆனால், எந்த உயிரும் சிரிக்கவும், பேசவும் அறிந்து கொள்வது இல்லை. மனிதன் மட்டும்தான், குழந்தையாக உள்ளபோதே, பிறர் சொல்லும் சொற்களின் பொருள்களைக் குறிப்பால் உணர்ந்து தெரிந்து கொள்ளுகின்றான். கல்வி பயிலுவதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறுகின்றான். "யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது" என்பதை உணர்ந்து, "பூ மேல் மயல் போய் அற" வாழ்ந்து, மெய்ப்பொருளைப் புணர அறியாமல், பெற்ற அறிவைக் கொண்டு, பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை கொண்டு அலைகின்றான். "மூ ஏடணை என்று முடிந்திடுமோ?" என்று இரங்குகின்றார் அருணகிரிதாநப் பெருமான். மூவாசைகளுக்கும் பொருளே ஆதாரம் என்பதால், பொருளாசை கொண்டு மனிதன் அளக்கமுடியாத பாவங்களை எல்லாம் துணிந்து பயன்றுகொண்டே இருக்கின்றான். "பொருள் இருந்தால் எல்லாம் ஆகும்" என்ற அறிவு மயக்கத்தில் அலைகின்றான்.

      உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுவையான நீர் வேண்டும்; உடலின் அழுக்கு நீங்கி ஒளிபெற நீரும், நல்ல ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில், அவனது உயிர் வீணே அழிந்து போகின்றது. 

         இந்த இழிநிலையை, பின்வரும் திருப்புகழ்ப் பாடலின் மூலம் உணர்த்தி, முருகன் திருவருளைப் பெற்று உய்ய அருணகிரிதாப் பெருமான் வழிகாட்டி அருளுகின்றார்.

“உடுக்கத் துகில் வேணும், நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும், நல்

     ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய்..உறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்

     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்

     படுக்கத் தனிவீடு வேணும், இவ் ....வகையாவும்

கிடைத்துக் க்ருகவாசி ஆகிய

     மயக்கக் கடல்ஆடி, நீடிய

     கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ....அவமே போம்.

க்ருபைச் சித்தமும், ஞான போதமும்

     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ

     கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ....ஒருநாளே.”

 

      உள்ளத்தில் கரவு கொண்டுள்ளவர்க்கு எல்லாம் கடுமையான நரகங்கள் வாய்க்கும் என்கிறார் அப்பர் பெருமான்.

 

“இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்;

கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்;

பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்;

அரக்கனுக்கு அருளும் வைத்தார்; ஐயன் ஐயாறனாரே.”

இதன் பொருள் ---

      தலைவராகிய திருவையாற்று இறைவர், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளி உள்ளார். அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தமது அருளை வழங்கி உள்ளார். நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குவார்.  பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.

      "கடுநரகங்கள்" என்று சுவாமிகள் அருளிச் செய்ததனால், கரத்தல் கடுமையான பாவம் என்பதும், அப் பாவத்திற்கு, ஒரு நரகம் அல்ல, பலவிதமான நரகங்களில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.

“கெடுவாய் மனனே! கதிகேள், கரவாது

இடுவாய்: வடிவேல் இறைதாள் நினைவாய்:

சுடுவாய் நெடுவேதனை தூள்படவே:

விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.”

என்று கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதப் பெருமான், நாமெல்லாம் உய்தி பெறுவதற்கான நல்வழியைக் காட்டி அருளுகின்றார்.

      கெட்டுப் போகின்ற நிலையில் உள்ள எனது மனமே,  நீ அடைய வேண்டிய கதியைப் பெற உனக்கு நான் சொல்லுவதைக் கேட்பாயாக. மனதில் வஞ்சனை, அதாவது ஒளிவு மறைவு இல்லாமல் பிறருக்கு உதவி செய்வாயாக. கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடைய முருகப்பெருமானின் திருவடிகளை நினைப்பாயாக.  பெருந்துன்பத்தை விளைக்கும் வினைகளை ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக. வினையை விளைக்கின்ற செயல்களை விட்டு ஒழிப்பாயாக.

      தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தல் கூடாது என்னும் கரத்தல் ஆகிய காரியம், உள்ளத்தில் ஆசை இருப்பதன் காரணமாக உண்டாகின்றது. ஒருவன் தன்னிடத்தும், தனது பொருளினிடத்தும் உண்டான ஆசை காரணமாகவே, கரப்பு என்னும் எண்ணம் உண்டாகும்.

        கொடுக்க முடிந்ததைக் கரவாமல் கொடுத்தலும், கொடுக்க இயலாததை இல்லை என்று மறுப்பதும் செய்யலாம். கொடுக்க முடியாததைக் கொடுப்பதாகச் சொல்லுவதும், கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறுப்பதும், இல்லை ஒருவனுடைய புகழைக் கெடுப்பது மட்டும் அல்லாமல், இல்லை என்று வருவோர்க்குத் துன்பத்தை விளைப்பதும் ஆகும்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்என மறுத்தலும், இரண்டும்

ஆள்வினை மருங்கில் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே

 இரப்போர் வாட்டல்; அன்றியும் புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில்..." -- புறநானூறு.

இதன் பொருள் ---

        கொடுக்க முடிந்ததைக் கொடுக்கின்றேன் என்று தருவதும், கொடுக்க இயலாததைத் தருவதற்கு இல்லை என்று கூறித் தர மறுப்பதும் ஆகிய இரண்டுமே, நல்ல உயர்ந்த நட்புக்கான அடையாளங்கள். தர முடியாததைத் தருவதாகச் சொல்லுவதும், தரக் கூடியதைக் கூட இல்லை என மறுப்பதும் ஆகிய இரண்டுமே இல்லை என்று வருவோரை மிகவும் வருந்தச் செய்யும். மேலும், இவை தருவோர் பெறுகின்ற புகழை அடைக்கும் வாயில்களும் ஆகும்.

        தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

நாட்டை ஆள்பவர் நீதிமுறையுடன் அரசு புரிதல் வேண்டும். அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல் போல் நேராக இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது. அது "செங்கோன்மை" எனத் திருவள்ளுவ நாயனாரால் அடையாளம் இடப்பட்டது. "செங்கோன்மை" என்பது நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், "பொச்சாவாமை" என்னும் அதிகாரத்தின் பின்னர் வைக்கப்பட்டது. “கொடுங்கோன்மை” இதற்கு மாறானது.

        “நல்ல நீதி மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல் புவியாளும் வண்மை செய்த தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார், கொடுங்கோன்மை செலுத்தி நின்ற மூர்க்கமுள்ள அரசனும், தன் மந்திரியும் ஆழ்நரகில் மூழ்கு வாரே!" எனத் தண்டலையார் சதகம் பிறிதொரு பாடலில் கூறும்.


No comments:

Post a Comment

54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

  “கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;     செங்கோலிற் கடல்சூழ் வையம் புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,     நரகமில்லை; பொய்யி தன்றால்; உரப...