“பிரசம்உண்டு வரிபாடும் தண்டலையார்
வளநாட்டிnf பெண்க ளோடு
சரசம்உண்டு! போகம் உண்டு! சங்கீதம்
உண்டு! சுகம் தானே உண்டு இங்கு
உரைசிறந்த அடிமையுண்டோ? இடுக்கணுண்டோ?1
ஒன்றும்இல்லை! உலகுக் கெல்லாம்
அரிசியுண்டேல் வரிசைஉண்டாம்!அக்காளுண்
டாகில்மச்சான் அன்புண் டாமே!”
இதன் பொருள் –
வரி பிரசம் உண்டு பாடும் தண்டலையார் வள நாட்டில் - வண்டுகள் தேனைப் பருகி ரீங்காரம் செய்கின்ற திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்திய நாட்டிலே, பெண்களோடு சரசம் உண்டு – பெண்களாலே இனிய பண்பு உண்டாகும், போகம் உண்டு - பொருள் உண்டாகும், சங்கீதம் உண்டு - இசையின்பம் உண்டாகும், சுகம் தானே உண்டு - நலமும் கிடைக்கும், இங்கு உரை சிறந்த அடிமை உண்டோ? - இவ் வாழ்வில் பேச்சில் சிறந்த அடிமைத் தன்மை உண்டோ?, இடுக்கண் உண்டோ? - துன்பம் உண்டோ?, ஒன்றும் இல்லை - யாதும் இல்லை, உலகுக்கு எல்லாம் அரிசி உண்டேல் வரிசை உண்டாம் – உலகத்திற்கு எல்லாம் அரிசி இருந்தால் சிறப்பு உண்டு, அக்காள் உண்டாகில் மச்சான் அன்பு உண்டாம் - தமக்கை இருந்தால் (அவள் மூலம்) மைத்துனன் அன்பு கிடைக்கும்.
பிரசம் - தேன். வரி - வண்டு. போகம் : அனுபவப் பொருள்கள். இல்லாளே இல்லத்துக்கு வேண்டியவற்றை ஒழுங்கு செய்து வைப்பவள். ஆகையால் அவளிருந்தால் பொருள் உண்டு, போகம் உண்டு என்றார். “இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை” என்னும் ஔவையார் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக. “இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால்” என்னும் திருவள்ளுவ நாயனார் பொய்யாமொழியையும் இங்கு வைத்து எண்ணுக. அரிசி செல்வத்தைக் குறிக்கும். ‘அக்காள் இருந்தால் மச்சான் உறவு உண்டு' என்பது பழமொழி. ‘உரை சிறந்த அடிமை' என்பது வஞ்சப் புகழ்ச்சி (புகழ்வது போலப் பழித்தல்)