தண்ணமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள்
நெறியே! நின்தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையினும் மறுமையினும்
வேண்டியதுண் டிதையோ ராமல்,
மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்
தேதிரிபா வாணர் எல்லாம்
வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக்
கொண்டலையும் வீணர் தாமே.
இதன் பொருள் ---
தண் அமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள் நெறியே - குளிர்ச்சி பொருந்திய மலர்ச் சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! நின் தன்னைப் பாடில் – உம்மை வாயாரப் பாடித் துதித்தால், எண்ணம் மிக இம்மையிலும் மறுமையிலும் வேண்டியது உண்டு - மனநிறைவு பெற இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டியது கிடைக்கும்; இதை ஓராமல் - இதனைச் சிந்தியாமல், மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே திரி பாவாணர் எல்லாம் - இப் புவியில் மக்களைப் புகழ்ந்து பாடி அலைந்து திரியும் புலவர்கள் யாவரும், வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்கொண்டு அலையும் வீணர் தாமே - தமது கையில் வெண்ணெய் இருக்கும்போது (அதை உருக்கிப் பயன் கொள்ளாமல்) நெய் எங்கே உள்ளது என்று தேடித் திரியும் அறிவிலாரே ஆவார்.
‘'வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான் ஏன்?' என்பது பழமொழி. மக்களைப் புகழ்தலாவது அவர்கள் செய்யாததைச் செய்தார்களென்றும் அவர்களிடம் இல்லாத பண்பை இருப்பதாகவும் கூறிப் பாடுதல்.
“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.” --- இராமச்சந்திர கவிராயர்.
வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும்,
உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாகவும், கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.
இதனை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல்
விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“காணியேல் பெரிது உடையனே!
கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே விருந்து ஓம்புமே!” என்று
பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண்
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து
உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,
“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை வெள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனை,
பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று
பாடினும் கொடுப்பார் இலை;
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நலம் இலாதானை, “நல்லனே!” என்று,
நரைத்த மாந்தரை, “இளையனே!”,
குலம் இலாதானை, “குலவனே!” என்று,
கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
நோயனை, “தடந்தோளனே!” என்று,
நொய்ய மாந்தரை, “விழுமிய
தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,
“காமதேவனை ஒக்குமே”,
முற்றிலாதானை, “முற்றனே!”, என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,
“சால நல அழகு உடை ஐயனே!”
“கை உலாவிய வேலனே!” என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதி பாய்புக
லூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
அருட்புலவர்கள் மிகச் சிலரே உண்டு. “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும் வழங்குவார். "இம்மையே தரும் சோறும் கூறையும்" என்ற அருள் வாசகத்தை உன்னுக.
பொருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, பொருள் இன்மை வறுமை. அதனால் அவருக்கு நேருகின்ற துன்பம். அருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, அருள் இன்மை வறுமை. அதனால் அவர் படுகின்ற துன்பம். அருள் நூலாசிரியர் யாரும் பொருளைக் குறித்துப் பாடுவது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு அருள் நூல்களை ஓதினால் இந்த உண்மை தெற்றென விளங்கும்.
“இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர், பலர் நோலா தவர்.”
என்று திருவள்ளுவ நாயனார் பாடியள்ளதும், அதற்குப் பரிமேலழகர் வகுத்துள்ள உரையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. குறிப்பாக, இத் திருக்குறள், "தவம்" என்னும் அதிகாரத்தில் வருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்" என்பது பரிமேலழர் கண்ட வளமிக்க உரை. இதில் பரிமேலழகர் காட்டும் தெளிவு --- "செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன", என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.