8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்

நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு

பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக

அஞ்சுமவன் கேட்பது அறிந்து.”


சொல்லுங்கால், பிச்சை எடுப்பவன் நொய்தான ஒரு துரும்பை விடவும் நொய்தான பஞ்சைக் காட்டிலும் மிகவும் எளியவன் ஆவான்.  அவ்வாறு மிகவும் நொய்தானவனை, வீசும் காற்றானது அடித்துச் செல்லாதோ என்றால், அக்காற்றும் கூடப் பிச்சை எடுப்பவனைத் தெரிந்துகொண்டு, வீடு வீடாக இரக்கும் அவன், தன்னிடம் ஏதேனும் இரப்பானோ என அஞ்சி அவனிடம் நெருங்க அஞ்சும்.



68. வெண்ணெய் இருக்க, நெய் தேடி அலைதல்

தண்ணமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள்

     நெறியே! நின்தன்னைப் பாடில்

எண்ணமிக இம்மையினும் மறுமையினும்

     வேண்டியதுண் டிதையோ ராமல்,

மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்

     தேதிரிபா வாணர் எல்லாம்

வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக்

     கொண்டலையும் வீணர் தாமே.


இதன் பொருள் ---


    தண் அமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள் நெறியே - குளிர்ச்சி பொருந்திய மலர்ச் சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! நின் தன்னைப் பாடில் – உம்மை வாயாரப் பாடித் துதித்தால், எண்ணம் மிக இம்மையிலும் மறுமையிலும் வேண்டியது உண்டு - மனநிறைவு பெற இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டியது கிடைக்கும்; இதை ஓராமல் - இதனைச் சிந்தியாமல், மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே திரி பாவாணர் எல்லாம் - இப் புவியில் மக்களைப் புகழ்ந்து பாடி அலைந்து திரியும் புலவர்கள் யாவரும், வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்கொண்டு அலையும் வீணர் தாமே - தமது கையில் வெண்ணெய் இருக்கும்போது (அதை உருக்கிப் பயன் கொள்ளாமல்) நெய் எங்கே உள்ளது என்று தேடித் திரியும் அறிவிலாரே ஆவார்.


     ‘'வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான் ஏன்?' என்பது பழமொழி. மக்களைப் புகழ்தலாவது அவர்கள் செய்யாததைச் செய்தார்களென்றும் அவர்களிடம் இல்லாத பண்பை இருப்பதாகவும் கூறிப் பாடுதல். 

“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;

     காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;

     போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;

மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;

இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்

     யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.”      --- இராமச்சந்திர கவிராயர்.


    வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், 

    உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாகவும்,  கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.


இதனை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....


தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

     சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்;

     ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                                          

மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல்

     விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,

கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

பொடிக் கொள் மேனி எம் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


“காணியேல் பெரிது உடையனே!

     கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,

பேணியே விருந்து ஓம்புமே!” என்று

     பேசினும் கொடுப்பார் இலை;

பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண்

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து

     உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,

“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புரை வெள் ஏறு உடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

          

வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனை,

     பாவியை, வழக்கு இ(ல்)லியை,

பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று

     பாடினும் கொடுப்பார் இலை;

பொன் செய் செஞ்சடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நலம் இலாதானை, “நல்லனே!” என்று,

     நரைத்த மாந்தரை, “இளையனே!”,

குலம் இலாதானை, “குலவனே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

புலம் எலாம் வெறி கமழும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அலமரது அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நோயனை, “தடந்தோளனே!” என்று,

     நொய்ய மாந்தரை, “விழுமிய

தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,

     சாற்றினும் கொடுப்பார் இலை;

போய் உழன்று கண் குழியாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,

      ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,

“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புள் எலாம் சென்று சேரும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,

     “காமதேவனை ஒக்குமே”,

முற்றிலாதானை, “முற்றனே!”, என்று

     மொழியினும் கொடுப்பார் இலை;

பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,

      “சால நல அழகு உடை ஐயனே!”

“கை உலாவிய வேலனே!” என்று,

     கழறினும் கொடுப்பார் இலை;

பொய்கை ஆவியில் மேதி பாய்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                     

அருட்புலவர்கள் மிகச் சிலரே உண்டு. “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும் வழங்குவார்.  "இம்மையே தரும் சோறும் கூறையும்" என்ற அருள் வாசகத்தை உன்னுக.


    பொருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, பொருள் இன்மை வறுமை. அதனால் அவருக்கு நேருகின்ற துன்பம். அருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, அருள் இன்மை வறுமை. அதனால் அவர் படுகின்ற துன்பம். அருள் நூலாசிரியர் யாரும் பொருளைக் குறித்துப் பாடுவது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு அருள் நூல்களை ஓதினால் இந்த உண்மை தெற்றென விளங்கும்.


“இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்

சிலர், பலர் நோலா தவர்.”


என்று திருவள்ளுவ நாயனார் பாடியள்ளதும், அதற்குப் பரிமேலழகர் வகுத்துள்ள உரையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.  குறிப்பாக, இத் திருக்குறள், "தவம்" என்னும் அதிகாரத்தில் வருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்" என்பது பரிமேலழர் கண்ட வளமிக்க உரை. இதில் பரிமேலழகர் காட்டும் தெளிவு ---  "செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன",  என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.


ஈதல், இசைபட வாழ்தல்

ஈதல், இசைபட வாழ்தல்

-----


     சமுதாயம் சிறந்து வாழ ஈகை என்னும் அறத்தினை வற்புறுத்திய திருவள்ளுவ நாயனார், அறவழியில் நின்று ஒழுக மறுப்பவரை நோக்கி, ‘உனக்குப் புகழ் உண்டாகவாவது, நீ மறைந்த பின்னரும் உன்னைப் பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவாவது பிறருக்குக் கொடுத்து உதவு’ என்னும் குறிப்புத் தோன்ற ‘புகழ்’ என்னும் அதிகாரத்தினை அமைத்துள்ளார். 


     “ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று முதலிலேயே கொடுத்தலையும், அதன் வழியே புகழ் பெறுதலையும் சுட்டிக் காட்டி, புகழாகிய ஊதியம் பெறுதலே உயிர்க்கு உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவ நாயனார். உலகில் அனைவரும் தாம் செய்த பணிக்கு ஊதியம் எதிர்பார்க்கின்ற நிலை ஒருபுறம் இருக்க, எந்தப் பணியும் செய்யாமலேயே மிகுந்த ஊதியத்தை விரும்புகின்ற போக்கு நிறைந்த மக்களிடையில் வாழும் நமக்கு, நாயனார் காட்டும் ‘புகழ்’ என்னும் ஊதியம், புதிய ஒன்றுதான். தான் சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஊதியமாக எண்ணும் நிலையில், உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து அதனால் பெறும் புகழே ஊதியம் என்கிறார் நாயனார். உண்மையும் அதுதான்.


     உழைக்காமலே செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அப்படி ஈட்டிய செல்வத்தைக் கூட, பிறருக்குத் தந்து உதவவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்களின் செல்வமானது, “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” என்னும் நிலையில் நிச்சயம் ஒருநாள் இல்லாது போகும். தேனீக்கள் சுற்றிச் சுற்றி உழன்று, தேன் உள்ள மலர்களைத் தேடிச் சென்று, சிறுச்சிறிதாகத் தேனைக் கொண்டுவந்து, பெரிய பெரிய தேனடைகளை வைக்கும். அந்தத் தேனடைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தேனீக்கள் தேனை இழப்பதோடு தம் உயிரையே இழந்துவிடுகின்றன. உலோபத்தனம் மிகுந்தவரின் செல்வம் இப்படித் தான் கரையும். உலோபியரின் இயல்பு குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது.


"திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்

     தேடிப் புதைத்து வைப்பார்,

சீலை நலமாகவும் கட்டார்கள், நல்அமுது

     செய்து உணார், அறமும் செயார்,


புரவலர்செய் தண்டம் தனக்கும், வலுவாகப்

     புகும் திருடருக்கும் ஈவார்,

புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,

     புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,


விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்

     வெகுபணம் செலவாகலால்

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என

     மிகுசெட்டி சொன்னகதைபோல்,


வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்

     மற்றொருவருக்கு ஈவரோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


     பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.  நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.  நல்ல உணவு சமைத்து உண்ணமாட்டார். எந்த நல்ல அறவழியிலும் பொருளைச் செலவு செய்யமாட்டார். அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார். புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.  குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்,  மிக்க பொருள் செலவழிவதனாலே, கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல,  உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?


“பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்

உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்

இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.” -- நல்வழி. 


     பெரிய இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்த மக்கள், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர் எம்மை விரும்பி நேசித்தவர் என்று யாரையும் விரும்பாதவர்கள் உலோபிகள். அவர்கள் வந்து தம்மைச் சரண் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார். பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணை உண்டாக்கினால் அவருக்கு எல்லாம் கொடுப்பார்.


     நாம் தேடுகின்ற பொருளாகிய ஊதியம், நம்மை விட்டுச் ‘செல்வோம் செல்வோம்’ என்று சென்று கொண்டே இருக்க, புகழாகிய ஊதியமோ நாம் மறைந்த பின்பும் என்றும் நிலைத்து நம்மை வாழ வைக்கின்றது என்ற உண்மையை உய்த்து உணரவேண்டும். பிற அனைத்தும் உலகில் நில்லாது மறைய, புகழ் ஒன்றே மனிதனை எல்லோர் உள்ளத்திலும் என்றும் வாழவைப்பதாகும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்” என ஒரு திருக்குறள் வழியே காட்டுகிறார். ‘ஒன்றா’ என்னும் சொல்லுக்கு, ஒப்பில்லாத என்று பொருள்.


     இந்த நிலையில்லாத உலகத்தில் என்றும் நிலைத்திருப்பது, தனக்கு ஒப்பு இல்லாத புகழ் ஒன்றே என்பதை விளக்கி, எப்படியும் வாழ நினைக்கும் மனிதன், நல்லன செய்து, அல்லன கடிந்து, புகழ் ஓங்க வாழவேண்டுமே என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் ‘புகழ்’ என்னும் அதிகாரம். எனவே, நிலைபெற்ற புகழைப் பெற, நிலையற்ற மனிதன், நிலையற்ற வாழ்வில் தன் நிலையற்ற பொருள் முதலியவற்றால் சிறக்க, ‘ஈகை’ என்னும் அறத்தினைப் புரிந்து வாழ வேண்டும். ‘உயர்ந்த புகழ்', ‘நீள் புகழ்’  ‘இசை என்னும் எச்சம்’ என்று புகழ் விளக்கப் பெறுகின்றது. ஈகையைச் செய்தவர் இறந்து போவது நிச்சயம். ஆனால், அவரது பருவுடம்பு மறைந்த பின்னரும், அவரது ‘புகழுடம்பு” இறவாது நிலைத்து இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளல்கள் செய்த அறச் செயல்களை இன்றும் இந்த உலகமானது போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, முன்னோர் ஈட்டிய புகழை நாமும் பெறவேண்டும் என்று ஆற்றுப்படுத்துகின்றார் திருவள்ளுவ நாயனார். 


     உலகில் பிறக்கின்றோம் நாம். வளர்கின்றோம்; வாழ்கின்றோம். வாழ்நாள் கழிகின்றது. இறுதியில் இறக்கின்றோம். இது மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான நியதி. “பெருங்காரியம் போல் வரும் கேடு உடம்பால் பிரியம் கூர வந்து கருவூறிப் பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்” என்று அருணகிரிநாதர் பாடியளவிலேயே மனித வாழ்க்கை கழிதல் கூடாது. ஒரறிவுடைய மரம் தொடங்கி எல்லா உயிர்களும் பிறந்து, இருந்து, வாழ்ந்து மறைகின்றன. ஆனால், ஆறு அறிவுடைய மனிதன் பிறவற்றினும் மேம்பட்ட காரணத்தினால், தான் என்றும் நிலைக்க வழி காணவேண்டும். உலகில் பிறந்தவர் யாவரும் எப்படியும் மறையப் போகின்றனர். மறைந்த பின்னும் நினைத்துப் பார்க்கும்படியாக, ‘ஈகை’ என்னும் அறத்தினைச் செய்யவில்லையானால், அப்படிப்பட்டவன் பிறவாது இருந்தாலே நலமாக இருந்திருக்கும். புகழோடு வாழ்ந்து மடியாதவர், பிறத்தலை விடப் பிறவாமல் இருப்பதே நல்லது என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு. 


“தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று”    --- திருக்குறள்.


     மக்களாகப் பிறந்து, ஈகை’ என்னும் அறித்தைப் புரியாது, பயனின்றி வாழ்ந்தால் கூடப் பரவாயில்லை. மாறாகப் பல கொடுமைகளைச் செய்து இகழ்ச்சி அடைகின்றார்கள் பலர். தாமும் கெட்டு, தாம் வாழும் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் கொடுமையை எண்ணிய நாயனாரின் அருள் உள்ளம் வருந்தி, “தோன்றாமை நன்று” என்று கூற வைத்தது. இத்தகைய கொடுமனம் படைத்தவர்கள் பலர் தோன்றாது இருந்தால் - நல்லவை செய்து ‘நீள்புகழ்’ பெறுவோர் பலர் பிறந்திருந்தால், இன்று உலகில் காணப்படும் கொடுமைகள் இல்லாது இருக்கும். மக்களின் வாழ்வு மெத்த மகிழ்ச்சியாகவே அமையும்.  நல்லனவற்றைச் செய்து ‘நீள்புகழ்’ பெறாத மக்களைத் தாங்குகின்ற நிலத்தை எண்ணுகிறார் திருவள்ளுவ நாயனார். நிலத்துக்கு ‘நல்லாள்’ என்னும் அற்புதமான பெயரைச் சூட்டி மகிந்த திருவள்ளுவ நாயனார், அந்த நல்லாள் இசை ஒழிய வாழவேண்டி வந்ததே, அதனால், நிலமானது வளம் குன்றிப் போகுமே என்றும் வருந்துகிறார். 


வசைஇலா வண்பயன் குன்றும், இசையிலா 

யாக்கை பொறுத்த நிலம்” -- திருக்குறள். 


     புகழுடம்பினைப் பெறாத, வெற்றுடம்பினரை இந்த ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. நல்லன செய்யாது, அல்லனவே செய்பவர் வாழ்கின்ற நாடு, ‘நாடா வளத்தன’ என்ற நிலையிலிருந்து மாறி, தன் வண்பயனாகிய வளமெல்லாம் அழிய, மக்கள் பசியும் பிணியும் பகையும் பற்றி வாடுவார்கள் என்பதை, “வசை இல்லா வண்பயன்” என்னும் சொல்லால் திருவள்ளுவ நாயனார் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றார். இன்று நாம் கண்முன் காணுகின்ற காட்சிதான் இது. திருவள்ளுவர் அருள்வாக்குப் பொய்யாகிப் போகுமா? நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும், அவற்றை மக்கள் எல்லோரும் நிறைவாக அனுபவிக்கின்ற நிலை இல்லையே. உயிர் உணர்வற்ற மாக்களால் தானே இந்த அவலம் எல்லாம் நிகழ்கின்றது. உலகம் வாழ வேண்டுமாயின், இத்தகைய கொடுமையாளர்கள் இல்லாது ஒழியவேண்டும். இவர்களை ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்கக் கூடாது என்பதைப், புகழ் என்னும் அதிகாரத்தால் காட்டிய நாயனார், தனிமனிதன் புகழோடு வாழ்வதால் தரணியே சிறக்கும் என்று காட்டினார். தான் வாழ்வதோடு, சமுதாயமும் சிறக்க வாழவேண்டும் என்று அறத்தை ஆற்றிப் புகழ் பெறாத வசையாளர் வழியே வையமும் சமுதாயமும் எப்படி மாறும் என்பதையும் காட்டினார்.  என்றென்றும் புகழொடு வாழ விரும்பும் மக்களினம், திருவள்ளுவ நாயனார் காட்டிய கடமை உணர்வைக் கருத்தில் இருத்துதல் வேண்டும்.




8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...